விவிலியத்தில் அழித்தல் - அரமேய மொழி

அரமேயத்தில் மட்டுமே பரலோக இராஜ்யம்

புதிய ஏற்பாட்டு நூல்களில் இயேசு கிருத்து பேசிய அரமேயத்தில் முதலில் எழுதப்பட்ட மத்தேயு நூலில் மட்டுமே பரலோக இராஜ்யம் என்னும் பெயர் குறிக்கப்படுகிறது.

அரமேயத்திலிருந்து கிரேக்க மொழிக்கு மாற்றப்பட்ட மத்தேயு நூலிலேயே கூட "பரலோக இராஜ்யம்" என்னும் பெயருக்கு பதிலாக "தேவனுடைய இராஜ்யம்" என்னும் பெயர் பயன்படுத்தப்பட்டுள்ளமை ரோம ஆட்சியாளர்களின் கைவரிசையையே காட்டுகிறது.

கிருத்தவத்தின் மூலமொழி ஆசியாவில் பிறந்த இயேசு கிருத்து பேசிய ஆசிய மொழியாகிய அரமேய மொழியாக இருத்தலே நியாயமானது.

அரமேய மொழியிலுள்ள நூல்களையெல்லாம் அழித்து விட்டு, ஐரோப்பிய மொழியாகிய கிரேக்க மொழியே கிருத்தவத்தின் மூல மொழி எனக் கூறுவது திட்டமிட்ட சதி ஆகும் என்பதில் ஐயம் இல்லை.

அரமேய மொழியில் எழுதப்பட்டு உள்ள நூல்கள் பழைய ஏற்பாட்டில் இருக்கின்றன. இந்தியாவில் அசோகருடைய கல்வெட்டு அரமேய மொழியில் இருக்கிறது. மத்தேயு நூலும் முதலில் அரமேயத்தில் எழுதப்பட்டது.

இப்படி இருக்க அரமேய மொழி பண்படாத மொழி எனக் கற்றுக் கொடுப்பது இயேசு கிருத்துவுக்கு எதிரான செயல் ஆகும்.

மேலும் இயேசு கிருத்து பேசிய அரமேய மொழியில் இயேசு கிருத்துவைப் பற்றிய நூல்கள் மறைக்கப்பட்டு இருக்கின்றனவா? என்னும் கேள்விகளுக்கு இப்பொழுது கிடைக்கும் பதில் அழிக்கப்பட்டு இருக்கின்றன என்பதேயாகும். இவ்வாறு அழிக்கப்பட்ட நூல்களில் பரலோக இராஜ்யம் பற்றிய விரிவான நூல்களும் அடங்கி இருக்க வாய்ப்பு உண்டு என்பதை எவரும் மறுத்தல் இயலாது. ஏனெனில் இயேசு கிருத்துவின் கன்னிப்பிறப்பு பரலோக இராஜ்யத்தைக் கற்றுக் கொடுக்க வந்த வருகை என்பதில் ஐயம் இல்லை.

விவிலியத்தில் மறைத்தல் - பலிக் கோட்பாடு

இயேசு கிருத்து உலக மீட்பர் என்பதை நிலைநாட்டுவது அவர் தம்மைப் பலியாக்கிய பலிக்கோட்பாடு. கடவுள் உலகில் மனிதனாகப் பிறந்து மனிதரை மீட்க தம்மைப் பலியாக ஒப்புக் கொடுத்தார் என்பதே கிருத்தவத்தின் ஆணிவேரான பலிக்கோட்பாடு.

இந்தப் பலிக் கோட்பாடு யூதர்கள் எதிர்பார்த்த யூத அரசனாகிய மேசியாவின் வருகைக் கோட்பாட்டுக்கு நேர் எதிரானது.

வருகைக் கோட்பாட்டில் இறந்தார், உயிர் பெற்றார், இரண்டாம் முறை வருவார் என்பன இன்றியமையாதவை.

இதனால், இயேசு கிருத்துவின் கன்னிப்பிறப்பை அறியாத பேதுரு, யோவான் போன்றவர்கள், இயேசு கிருத்து இறந்தார்; மீண்டும் உயிர் பெற்றார்; இதற்கு நாங்கள் சாட்சிகள் (அப். 2 :32) என்று பிரசங்கித்ததை நாம் பார்க்கின்றோம்.

இயேசு கிருத்துவின் கன்னிப்பிறப்பை விரிவாக லூக்கா எழுதிய பின்னர், வெகுகாலம் கழித்து ஐரோப்பியர் தலைமையில் உருவாக்கப்பட்ட, அபோஸ்தலர் விசுவாசப் பிரமாணம், அதநாசியஸ் விசுவாசப் பிரமாணம், நிசேயா விசுவாசப் பிரமாணம் முதலிய விசுவாசப் பிரமாணங்களில் இயேசு கிருத்துவின் பலிக் கோட்பாடு முழுவதுமாக மறைக்கப்பட்டு, யூதர்கள் எதிர்பார்த்த இரண்டாம் வருகைக் கோட்பாடான, இறந்தார், உயிர் பெற்றார், திரும்ப வருவார் என்னும் இரண்டாம் வருகைக் கோட்பாட்டை வற்புறுத்தல், இயேசு கிருத்துவின் உலக மீட்புக் கோட்பாட்டுக்கு எதிரான ஐரோப்பிய அரசியல் சதி ஆகும். இதனை எவரும் மறுத்தல் இயலாது.

திரித்தல்
வெட்டல்
ஒட்டல்
இணைத்தல்
மாற்றல்
ஏமாற்றல்
அழித்தல்
மறைத்தல்

ஆகிய எட்டு முறைகளின் வழி இன்றும் ஐரோப்பியர் கிருத்தவ மக்களையும், உலக மக்களையும், கடவுள் நிலைநாட்டிய ஆன்மீகப் பொது உடைமை வாழ்க்கை முறையிலிருந்து மாற்றி, சாத்தானின் கையிலுள்ள அரசியல் தனியுடைமை வாழ்க்கை முறையில் நடத்திக் கொண்டிருக்கின்றார்கள் என்பதை எவரும் மறுத்தல் இயலாது.

மன்னர் ஆட்சிக் காலமும் மக்கள் ஆட்சிக் காலமும்:

சாத்தானின் கையிலுள்ள அரசியல் தனியுடைமை வாழ்க்கை முறை மன்னர் ஆட்சிக்காலத்திற்கு உரியது. இப்பொழுது உலகில் நடைபெற்று வருவது மக்கள் ஆட்சிக்காலம். மன்னர் ஆட்சிக்காலம் படிப்படியாக மறைந்து வருகின்றது. மக்கள் ஆட்சிக்காலத்திற்கு உரியது இயேசு கிருத்து கற்றுக் கொடுத்த ஆன்மீகப் பொதுஉடைமை வாழ்க்கை முறையாகும்.

ஆன்மீகப் பொது உடைமையும் அரசியல் பொது உடைமையும்:

ஆன்மீகப் பொது உடைமை வாழ்க்கைமுறை வேறு; அரசியல் பொது உடைமை வாழ்க்கைமுறை வேறு.

அரசியல் பொதுஉடைமை அரசியலுக்கு உரிய வன்முறையாலும் அடக்குமுறையாலும் வருவது.

ஆன்மீகப் பொதுஉடைமை வாழ்க்கைமுறை மனமாற்றத்தால் வருவது. மனமாற்றம் பரலோக இராஜ்யக் கொள்கையால் வருவது. பரலோக இராஜ்யக் கொள்கையைப் புரிய வைத்து மனமாற்றத்தை உருவாக்கி ஆன்மீகப் பொது உடைமை வாழ்க்கைமுறைக்கு வழி நடத்துகிறவர் பரிசுத்த ஆவியானவர்; புதிய ஏற்பாட்டு ஆவியானவர்.

பழைய ஏற்பாட்டு ஆவி, வன்முறையை அடிப்படையாகக் கொண்ட தனியுடைமை வாழ்க்கை முறையையுடைய அரசியலுக்கு வழிநடத்துவது. ஆகவே பழைய ஏற்பாட்டு ஆவி வேறு; புதிய ஏற்பாட்டு ஆவி வேறு.

தொடரும்...!!!

பி.கு:

1) பொதுவாக ஒரு புத்தகத்தினை அப்படியே எனது வலைத்தளத்தில் பதிவிட்டது கிடையாது. ஆனால் 'இரண்டாம் வருகையும் பரலோக ராஜ்யமும் - புனித தோமா வழிப் பார்வை' என்ற தலைப்பில் ஆய்வாளர் முனைவர்.மு.தெய்வநாயகம் அவர்கள் எழுதிய நூலினை அப்படியே பதிவுகளாக இடுவது, அறிந்துக் கொள்ளவும் விவாதிக்கவும், நலமாக இருக்கும் என்ற எண்ணத்தினால் அப்புத்தகத்தை அப்படியே பதிவுகளாக இடுகின்றேன். நன்றி.

2) இப்புத்தகத்தை கீழ் கண்ட முகவரியில் வாங்கலாம்

மெய்ப்பொருள் அச்சகம்
278, கொன்னூர் நெடுஞ்சாலை
அயன்புரம், சென்னை - 600 023.
மின்னஞ்சல் - thamizharsamayam2010@gmail.com
தொலைபேசி - 044 - 26743842

0 கருத்துகள்:

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு