மைக்கேல் ஜாக்சன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மைக்கேல் ஜாக்சன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 22 மார்ச், 2011

ஜாக்சன் என்றொரு சகாப்தம்- 3

ஜாக்சன் 5!!!

மைக்கேலின் சகோதரர்கள் ஆரம்பித்த இந்த இசைக் குழுவில் மைக்கேல் பாட ஆரம்பித்த பொழுது அவனுக்கு 8 வயது. எட்டே வயது. அந்த வயதிலையே அவனது மூத்த அண்ணன் செர்மாயினுடன் சேர்ந்து பாடும் திறமையைப் பெற்று இருந்தான் மைக்கேல்.

இசை உலகில் கனவுகளோடு பறந்துகொண்டு இருந்த அவர்களுக்கு, அமெரிக்காவின் பரந்த வழிகள் திறந்தே கிடந்தன. அந்தக் கனவுகளுடன் தங்கள் இசைத் திறமையையும் சேர்த்து சுமந்து கொண்டு ஒவ்வொரு விடுதியாய் அலைந்தனர் அவர்கள்.

அவர்களுக்காக அவர்கள் செல்லும் எல்லா ஊர்களிலும் கருப்பு இன மக்கள் நடத்தும் விடுதிகள் திறந்தே இருந்தன.
"ஆகா... நம்ம பசங்க என்னமா பாடுறாங்க... பெரிய ஆளாய் வருவீர்கள் தம்பிகளா... அதுவும் அந்த பொடியன் மைக்கேல் நிச்சயம் ஏதோ சாதிப்பான் பாரேன்... இந்த வயசுலையே இப்படி பாடுறான்" என்று அந்த விடுதிகளுக்கு வருவோரும் அவர்களது திறமையை ஊக்குவிக்க, நம்பிக்கையோடும் புன்னகையோடும் அவர்கள் தங்கள் பயணத்தை தொடர்ந்தார்கள்.

அவர்களது அந்தப் பயணங்களில் அவர்கள் வெற்றிகளை எவ்வளவு சந்தித்தார்களோ அதே அளவு அவர்களின் கனவுகள் வார்த்தைகளால் தகர்க்கப்பட்ட சம்பவங்களையும் சந்தித்தார்கள். பெயரளவில் சுதந்திர இளைஞர்களாக இருந்த அவர்களுக்கு சில இடங்களுக்குள் செல்ல சுதந்திரம் அன்று இல்லாது இருந்தது.
ஆம், அவர்களின் கனவுகளுக்கு வெள்ளையர்களின் உலகத்திலும் விடுதிகளிலும் அன்று இடம் இருக்கவில்லை. அவற்றுக்கு மாறாக இனவெறிக்கும் ஆதிக்க மனோபாவத்திற்கும் இடம் இருந்தன.

"ஐயா ... வணக்கம்"
"ம்ம்ம்..."
"நாங்கள் இசைக் கலைஞர்கள்...!!!"
"ம்ம்ம்ம் ...."
"நன்றாக பாடுவோம்..."
"ம்ம்ம்..."
"உங்கள் விடுதியில் பாடுவதற்கு வாய்ப்பு கிடைக்குமா?"
"கருப்பு நாய்களா... நீங்கள் பாடும் அளவிற்கு எங்கள் விடுதியின் தரம் குறைந்து விட்டதாக எண்ணமோ... மரியாதையாக சென்று விடுங்கள் இல்லையேல் என்ன செய்வேன் என்று எனக்கே தெரியாது... ஓடி விடுங்கள்...!!!".

இவ்வாறு அவர்கள் எவ்வளவு முயன்றும் வெள்ளையர்களின் உலகம் அவர்களின் பயணத்திற்கு மூடியே இருந்தது ... வெள்ளையர்களின் காதுகளும் அவர்களின் இசைக்கு மூடியே கிடந்தன.
மூடியிருந்த அந்த காதுகளுடன் மைக்கேலின் சகோதரர்களின் பெரிய இசைக் குழுவாக வேண்டும் என்ற கனவுகளும் அடைப்பட்டுக் கிடந்தன.

"அண்ணா..." என்றான் மைக்கேல்.
நிமிர்ந்து பார்த்தான் செர்மாயின்.
"என்ன மைக்கேல்" என்றான்.
"தட்டுங்கள் திறக்கப்படும்... இந்த வாசகத்தை நம்புகின்றீர்களா?" தொடர்ந்தான் மைக்கேல்.
"ஆம்... ஏன் திடீர் என்று இதைக் கேட்கின்றாய் மைக்கேல்" என்றான் செர்மாயின்.
"பின் ஏன் அண்ணா கவலைப் பட்டுக் கொண்டு இருக்கின்றீர்கள்... சிலக் கதவுகள் நாம் சொன்னாலே திறந்து கொள்ளும், ஆனால் சிலக் கதவுகளோ நாம் கைகள் கொண்டு அவற்றை தட்டினால் தான் திறக்கும். இப்பொழுது மூடி இருக்கும் இந்த கதவுகளை நாம் இசையினால் தட்டுவோம் அண்ணா... நம்முடைய இசை...எழுத்து... குரல்... இவற்றால் தட்டுவோம் அண்ணா... அவற்றிக்கு எதிரே எந்த கதவுகள் தாழிட்டுக் கொண்டு தாக்குப் பிடிக்கின்றன என்பதினை நாம் பார்ப்போம்... கவலையை விடுங்கள் அண்ணா...!!!" என்று முடித்தான் மைக்கேல்.
புன்னகைத்தான் செர்மாயின்.
"நிச்சயம் நீ சராசரி மனிதன் இல்லை மைக்கேல்... எங்கள் அனைவரையும் விட நீ பெரிய ஆளாய் வருவாய்" என்று உள்ளுக்குள் நினைத்துக் கொண்டு மீண்டும் முழு மூச்சாய் பாடுவதில் ஈடு பட ஆரம்பித்தார் செர்மாயின்.

ஒரு வெற்றி... முதல் வெற்றி...!!!
1966 ஆம் ஆண்டு நடைபெற்ற சிறிய இசைத் திறமையை வெளிப்படுத்தும் போட்டியில் முதல் பரிசு...!!!
சிரித்தார்கள் சகோதரர்கள்.. சிறிய வெற்றி தான்...!!! இப்போதைக்கு இது போதும்... வானத்தை நோக்கி செல்லும் எங்களுக்கு இந்த சிறகும் ஒரு பலம் தான்!!!

அதைத் தொடர்ந்தே 1967 இல் 'சிடீல்டவுன்' (steel town) என்ற ஒரு இசை நிறுவனத்துடன் முதல் ஒப்பந்தம். சிறிய நிறுவனம் தான். ஆனால் அப்பொழுது அது அவர்களுக்கு போதுமானதாக இருந்தது.

அந்த நிறுவனத்துக்காக அவர்கள் பாடல்கள் இயற்றிக் கொண்டு இருந்த பொழுது தான் அவர்களுக்கு அந்த பெரிய வாய்ப்பு வந்தது. 'மோடவுன்" (Motown) என்ற நிறுவனம் அவர்களுக்கு ஒரு புதிய ஒப்பந்தத்தை தர 1968 இல் முன் வந்தது.

ஜாக்சன் சகோதரர்கள் புன்னகைத்தார்கள்!!! அவர்களின் இசை, பூட்டி இருந்த கதவுகளை திறக்க ஆரம்பித்து இருக்கின்றது!!!...

தொடரும்.... 


ஞாயிறு, 20 மார்ச், 2011

ஜாக்சன் என்றொரு சகாப்தம்- 2

அமைதி...!!!

இது வரை அந்த அரங்கம் காணாத அமைதி!!!

பொதுவாக 100 பேர் ஒன்று கூடி இருந்தாலே அதிரும் அந்த அரங்கம் அன்று 50,000 பேர் நிறைந்து இருந்தும் வழக்கத்துக்கு மாறாக அமைதியாக காத்துக் கொண்டு இருக்கின்றது.... ஒருவனுக்காக!!!

அவனுக்காக...!

அமைதி நல்லது தான்.

அவனைக் கண்ட உடன் அந்த அமைதியைக் கிழித்துக் கொண்டு எழும் சத்தத்தின் மதிப்பை உணர்த்த அந்த அமைதி நிச்சயம் வேண்டும்! 

அவன் புன்னகைக்கின்றான். அந்த நாள் நிச்சயம் வரலாற்றின் பக்கங்களில் எழுதப்படும். அதில் துளியும் அவனுக்கு சந்தேகம் இருக்கவில்லை.

அவர்கள் முன் அவன் தோன்றும் நேரம் நெருங்குகின்றது. மக்கள் அனைவரும் மேடையையே பார்த்துக் கொண்டு இருக்கும் போது யாரும் எதிர்பாரா வண்ணம் மேடையின் அடியில் இருந்து மேடையை பிளந்துக் கொண்டு வந்து மேடையின் மேல் நிற்கின்றான்.

என்ன நடந்தது என்பதை ஒரு கணம் உணர முடியாது அந்த கூட்டம் அதிர்ந்து நிற்கின்றது. மறு கணம், அவர்களின் சத்தத்தால் அந்த அரங்கம் அதிர்கின்றது.

இது வரை அந்த அரங்கம் கண்டிராத உற்சாகம், கேட்டிராத சத்தம் ... இப்பொழுது அங்கே கரை புரண்டோடிக் கொண்டு இருக்கின்றது... அவனுக்காக... அவன் குரலுக்காக.
அவன் பேசவில்லை.

ஏன், அவன் தலை முடி கூட இன்னும் அசையவில்லை.

இருந்தும் அவனைக் காணக் காண கூட்டத்தின் சத்தம் கூடுகின்றது.

புன்னகைக்கின்றான். இந்த கூட்டம் அவனுக்காகவே வந்த கூட்டம். அவன் குரலுக்காக வந்த கூட்டம்.

அவர்களின் ஆர்ப்பரிப்பு விண்ணைப் பிளக்கின்றது.

அவன் பாட ஆரம்பிக்கின்றான்.

இப்படி ஒரு கனவு அமெரிக்காவில் உள்ள சிகாகோ மாகாணத்தில் ஒரு சிறிய வீட்டில் தனது தந்தையிடம் தினம் திட்டும் அடியும் வாங்கிக் கொண்டு இருந்த அந்த சிறுவனின் மனதில் இருந்தது என்று சொன்னால் எவரும் எளிதில் நம்பி இருக்க மாட்டார்கள்.
அனால் மைக்கேல் அந்த கனவினைத் தான் கண்டுக் கொண்டு இருந்தான். அவன் வயதிற்கு மீறிய கனவு தான். இருந்தும் அவன் அந்தக் கனவை அலட்சியப்படுத்தவில்லை.

"இசை!!!... ஆகா எவ்வளவு அருமையாக இருக்கின்றது நிச்சயம் இதை நாம் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். அது போதும். மற்றதை அதுப் பார்த்துக் கொள்ளும்" என்று எண்ணியவாறே அவன் காலத்தை நகர்த்திக் கொண்டு இருந்தான்.

அவன் தந்தை ஒரு சிறிய இசை கலைஞர் ஆக இருந்ததோ இல்லை அவனின் சகோதரர்கள் அனைவரும் இசைப் பிரியர்களாக இருந்ததோ என்னவோ இசை மைக்கேலின் வாழ்வோடு எப்பொழுதும் கலந்திருந்தது.

அவன் இசையை அவனது உணர்ச்சிகளின் வடிகாலாகப் பார்த்தான். இசை அவனது மகிழ்ச்சியையும் துக்கத்தையும் அவனது மனதிற்கேற்ப வெளிப்படுத்துவதை உணர்ந்தான். செம்புலம் சேர்ந்த நீர்ப் போல விரைவில் அவனும் இசையோடு கலக்க ஆரம்பித்தான்.

அவனது அந்த இசை ஆர்வமும் திறமையும் தான் அந்த சிறு வயதிலையே அவன் அவனது சகோதரர்களுடன் மேடையேறி பாடப் போவதை அவனது வீட்டில் யாரும் தடுக்க விடாது செய்தது. அவனது சகோதரர்களும் அவனை ஆவலுடன் அவர்களுடன் சேர்த்துக் கொண்டனர்.

அந்த காலத்தில், அமெரிக்காவில் உள்ள சிறு நகரங்களில் உள்ள உணவு விடுதிகளில் உணவு உண்ண வருவோரைக் கவரச் சிறு சிறு இசைக் குழுவினரை அழைத்துப் பாட வைப்பது என்பது வழக்கத்தில் இருந்தது. இசை ஆர்வம் உள்ளோர் அந்த மேடைகளை பயன்படுத்திக் கொண்டு தங்கள் திறமைகளை வெளிக் காட்டிக் கொண்டு இருந்தனர்.

அப்படிப்பட்ட ஒரு விடுதியில், 1965 ஆம் ஆண்டு தனது சகோதரர்களின் குழுவின் சார்பாக மைக்கேல் பாடுவதற்கு தயார் ஆனான்.

இசை உலகம் அது வரை தான் கண்டிராத புரட்சிக்கு தயார் ஆனது...!!!

தொடரும்....



வெள்ளி, 19 நவம்பர், 2010

ஜாக்சன் என்றொரு சகாப்தம்-1

சூன் 25 2009
என்றும் போல் தான் அன்றும் விடிந்து இருந்தது. வழக்கம் போல் எழுந்து அலுவலகத்திற்கு செல்லத் தயாராகிக் கொண்டு இருந்தேன்.
"யோவ்.. மைக்கேல் ஜாக்சன் இறந்துட்டாராமே"
வேறொரு அறையில் இருந்து வந்த நண்பரின் குரல் என்னை திடுக்கிட வைத்தது.
"சும்மா விளையாடாதடா... உனக்கு இதே வேலையா போச்சி" என்றவாறே அவர் இருந்த அறையினுள் நுழைந்தேன்.
"நான் ஒண்ணும் விளையாடலையப்பா.. இந்தா செய்தியில காட்டிக்கிட்டு இருக்கானுங்க பாரு" என்றவாறே தொலைக்காட்சியை காட்டினார்.
ஒரு கணம் என் உலகம் நின்று போனது.
தொலைக்காட்சியில் மைக்கேல் மரணம் என்ற செய்தி தலைப்புச் செய்திகளாக ஓடிக் கொண்டு இருந்தது.
இல்லை... எங்கோ தவறு நடந்து இருக்க வேண்டும்.. மைக்கேலாவது இறப்பதாவது... வாய்ப்பே இல்லை.
ஆனால் நான் பயந்தது தான் நடந்து இருந்தது.
இறந்து தான் போயிருந்தார் மைக்கேல்.
அந்த நாள், உலக இணையமே செயல் புரிய முடியாமல் சில நிமிடங்கள் திணறி நின்றது என்றார்கள். உலகமே அதிர்ச்சியுடன் நின்றது என்றார்கள்.
ஏன்?.
ஏன் என்னுடைய உலகமும் ஒரு கணம் நின்று போனது?.
அவர் என்னுடைய ஊர் கிடையாது.
என் மொழி அவருக்கு தெரியாது. ஏன்.. என்னையும் தான்!!!
இருந்தும் ஏன் எனக்குள் ஒரு வருத்தம். உலகத்தில் ஏன் பலருக்கும் அதே வருத்தம்.
ஒரு மனிதனுக்கு இது சாத்தியப்படுமா? அதுவும் குழந்தைகளைக் கொடுமைப்படுத்தியவன், மனித முகத் தோற்றத்தையே அறுவைச் சிகிச்சைகளின் மூலம் இழந்தவன் என்று உலகத்தால் இகழப்பட்டு தனது சொத்துகளைக் கிட்டத்தட்ட முழுவதுமாய் இழந்து நின்ற ஒருவனால் இது சாத்தியப்படுமா?
சாத்தியப்பட்டு இருக்கின்றதே!!!
அப்படி எங்களை இணைத்தது எது?
இசையா...!!!
இசை மட்டுமா.........???
இல்லை....!!! நிச்சயம் இல்லை.
இசையை தாண்டியும் ஏதோ ஒன்று எங்களை இணைத்துக் கொண்டு இருந்தது... இருக்கின்றது.
அந்த ஏதோ ஒன்றை அறிந்துக் கொள்ள வேண்டும் என்றால் மைக்கேலைப் புரிந்துக் கொள்ள வேண்டும்.
யார் அந்த ஜாக்சன்?....
அறிவோம்... உலகம் இது வரை கண்டிராத, மொழிகளைக் கடந்து நின்ற ஒரு கலைஞனைப் பற்றி!!!!

பி.கு:
இந்த பதிவு மைக்கேல் ஜாக்சனின் வாழ்க்கையைப் பற்றிய சரிதையோ அல்லது, அவர் நல்லவரா அல்லது கெட்டவரா என்ற விவாதமோ கிடையாது. மைக்கேல் என்ற ஒரு கலைஞன் .. ஒரு மனிதன்... என்னுள் ஏற்படுத்திய தாக்கத்தை ...அவரைப் பற்றி நான் உணர்ந்தவைகளைப் பற்றியப் பதிவே ஆகும்.

************************************************************************************
"இசை... எனது உணர்ச்சிகளின் வடிகால். உலகம் முழுவதும் உள்ள இசைக் காதலர்களுக்கு எனது பரிசு. அதன் வழியே... எனது இசையின் வழியே... எனக்குத் தெரியும்... நான் என்றென்றும் வாழ்ந்திருப்பேன் " - மைக்கேல்

இரு தேசங்களின் கதை : ஆரியவர்த்தமும் பிற தேசங்களும்...!!!

தேசியம்...வந்தேறிகள்...குடியுரிமை என்று இன்று பல குரல்கள் எழும்பிக் கொண்டிருக்கின்றன. "யார் வந்தேறிகள்? யார் பூர்வகுடி மக்கள்? எவ...