கல்வி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கல்வி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 11 மே, 2014

குடிகாரர்களும் கடன்காரர்களும்...!!!

 
"நாடா கொன்றோ ; காடா கொன்றோ;
 அவலா கொன்றோ ; மிசையா கொன்றோ;
 எவ்வழி நல்லவர் ஆடவர்,
அவ்வழி நல்லை ; வாழிய நிலனே!" - அவ்வையார்
 
 
"ஏ நிலமே...!!! சில இடங்களில் நீ காடாகவும் இருக்கின்றாய்...சில இடங்களில் நாடாகவும் இருக்கின்றாய்...சில இடங்களில் பள்ளமாகவோ அல்லது மேடாகவோ இருக்கின்றாய்...அப்பேற்பட்ட நீ நல்ல மக்கள் எங்கே இருக்கின்றனரோ அவ்விடத்தில் நல்ல நிலமாகவும் திகழ்கின்றாய்...வாழ்க நீ" என்றே அவ்வையார் பாடிச் சென்று இருக்கின்றார். எளிமையான பொருள் தானே...இப்பொழுது இதன் அடிப்படையில் தான் நமது சமூகத்தை நாம் பார்க்க வேண்டி இருக்கின்றது.
 
ஒரு இடத்தில் இருக்கும் மக்களின் தன்மையைப் பொறுத்தே நிலத்தின் தன்மை அமையப் பெறுகின்றது. நல்ல மக்கள் இருக்கும் இடம் நல்ல இடமாகவும்...தீய மக்கள் இருக்கும் இடம் தீய இடமாகவும் இருக்கின்றது. இதன் அடிப்படையில் கண்டோம் என்றால்,
 
அன்பு, பரிவு, நல்லொழுக்கம், விருந்தோம்பல், முதலிய நற்பண்புகளை உடைய மக்கள் வசிக்கும் இடமும் சரி நாடும் சரி நல்லவைகளாகவே திகழும்.
 
அதே நேரம் கோபம், பேராசை, பயம், பகை, பொறாமை முதலிய தீய குணங்களை உடைய மக்கள் அதிகம் வசிக்கும் இடமும் சரி நாடும் சரி தீயவனவாகவே திகழும்.
 
இதனை மறுத்தல் இயலாது. இதன் அடிப்படையிலேயே தான் நாம் நமது நாட்டினைக் காண வேண்டி இருக்கின்றது. அவ்வாறே கண்டோம் என்றால் நிச்சயம் நமது நாட்டினை நாம் நல்லதொரு நாடாக காண முடியாது. காரணம் பெருன்பான்மையான மக்கள் நல்ல குணம் மிக்கவர்களாக இன்று இல்லை. அதற்கான காரணத்தைத் தான் நாம் இப்பொழுதுக் காண வேண்டி இருக்கின்றது.
 
இன்று நாம் மன்னராட்சிக் காலத்தைக் கடந்து மக்களாட்சிக் காலத்தில் வாழ்ந்துக் கொண்டு இருக்கின்றோம். மன்னராட்சிக் காலம் என்பது வேறு...மக்களாட்சிக் காலம் என்பது வேறு.
 
மன்னராட்சிக் காலத்தில் மன்னரின் சொல் தான் அனைத்தும்..."மன்னன் எவ்வழி ..மக்கள் அவ்வழி..." என்றே அனைத்தும் மன்னனின் செயல்பாடுகளை நம்பியே இருந்தன. மக்களுக்கு பெரிதாக உரிமைகளோ அல்லது பொறுப்புகளோ இருக்காது. மன்னனுக்கு பின்னர் மன்னனின் மகன் அரசாள வருவான். இந்த நிலையில் மக்கள் அவர்களுக்கு பிடிக்காத ஆட்சியை அகற்ற வேண்டும் என்றால் புரட்சி தான் ஒரே வழியாக இருக்கும். ஆனால் அரசனை எதிர்த்து புரட்சி என்பது நிச்சயம் வன்முறையால் ஒடுக்கப்படும் என்பதால் பெரும்பாலும் புரட்சிகள் வெறும் எண்ணத்துடனே நின்றுப் போய் விடும். காரணம் பெருவாரியான மக்கள் அமைதியான வாழ்வையே விரும்புகின்றார்கள்...அச்சத்தின் காரணமாக "நமக்கேன் வம்பு" என்றே பிரச்சனைகளில் இருந்து ஒதுங்கி நின்று விடுகின்றார்கள். மன்னராட்சிக் காலத்தின் நிலை இது.

ஆனால் மக்களாட்சிக் காலத்தில் நிலை வேறு...இங்கு மக்கள் எவ்வழியோ...அரசாள்பவன் அவ்வழியாக இருக்க வேண்டி இருக்கின்றது. காரணம் தங்களை ஆளும் தகுதியை மக்களே ஒருவனுக்கு அவனைத் தேர்ந்து எடுப்பதன் மூலம் தருகின்றனர். அதனால் மக்களை நம்பியே ஆள்பவர்கள் இருக்கின்றார்கள். இங்கே ஆள்பவர்கள் சரி இல்லை என்றால் மக்கள் பெரிய புரட்சிகளெல்லாம் செய்ய வேண்டியதில்லை...மாறாக அவர்களின் மத்தியில் இருக்கும் மற்றொரு நல்ல நபரை தேர்ந்து எடுப்பதன் மூலம் ஆட்சி மாற்றத்தை அவர்களே கொண்டு வந்துவிடலாம். ஆட்சி மாற்றத்திற்கு தேவை எல்லாம் மக்கள் ஒன்றாக சேர்ந்து இருப்பதும் அவர்கள் சிந்திக்கும் திறமையைப் பெற்று இருப்பதுமே ஆகும். நிற்க.

இந்த நிலையில், அதாவது மக்களாட்சிக் காலம் உலகெங்கும் பரவி உள்ள நிலையில், எந்த ஒரு நாட்டின் மக்கள் ஒற்றுமையாகவும் நற்பண்புகள் மிக்கவர்களாகவும், சிந்திப்பவர்களாகவும் இருக்கின்றார்களோ அவர்கள் நல்லவர்களை அவர்களின் மத்தியில் இருந்து தேர்ந்து எடுத்து அவர்களை வழிநடத்த ஆட்சிப் பொறுப்பை அவர்களிடம் கொடுப்பர். அந்த நல்லாட்சியில் அந்த நாடும் நல்ல நாடாக இருக்கும். நல்ல நாட்டிற்கு நல்ல குடிமக்களே இன்றியமையாதத் தேவை என்பதை உணர்ந்த ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்களும் மக்களை சிந்திப்பவர்களாகவும் நற்பண்புகள் உடையவர்களாகவும் வைத்து இருப்பர். அது தான் நல்ல தலைவர்களின் அடையாளம்.

ஆனால் இங்கே தான் மற்றொரு விடயம் ஒளிந்து இருக்கின்றது. மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்டவன் நல்லவனாக இல்லை...ஆனால் அவனுக்கு ஆட்சியினை விட்டுச் செல்லவும் மனசில்லை என்று வைத்துக் கொள்வோம்...இந்நிலையில் அவனுக்கு அவனது ஆட்சியினை தக்க வைத்துக் கொள்ள இரண்டு வழிமுறைகள் இருக்கின்றன...

1) வன்முறையின் மூலம் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்வது (ஆனால் மக்களாட்சிக் காலத்தில் இது உதவாது)

2) மக்களே அவனது ஆட்சியை தொடர அவனையே மீண்டும் தேர்ந்து எடுக்க வேண்டும். ஆனால் மக்களாட்சிக் காலத்தில் தீயவன் ஒருவன் ஆள்வதை மக்கள் அனுமதிக்க வேண்டும் என்றால் ஒன்று மக்கள் சிந்திக்கத் தெரியாதவர்களாக இருக்க வேண்டும்..அல்லது தம்மைப் பற்றி மட்டுமே கவலைக் கொண்டு அச்சத்தால் ஒற்றுமை இன்றி இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் மட்டுமே மீண்டும் அவனால் ஆட்சிக்கு வர இயலும்.

இந்த விடயங்களைக் கொண்டே நாம் நமது நாட்டினை இன்றுக் காண வேண்டி இருக்கின்றது.

இன்று நமது ஆட்சியாளர்கள் நல்லவர்களாக இல்லை இருந்தும் அவர்கள் தான் தொடர்ந்து ஆட்சிப் புரிந்துக் கொண்டு இருக்கின்றார்கள். இந்த நிலை சிந்திக்கவும் ஒற்றுமையாகவும் இருக்கத் தெரிந்த மக்கள் இருக்கும் ஒரு நாட்டில் நிலை பெற்று இருக்க யாதொரு வாய்ப்பும் இல்லை. ஆனால் நமது சமூகத்தை நாம் உற்றுப் பார்த்தோம் என்றால் நமது மக்கள் சிந்திப்பவர்களாகவும் இல்லை அச்சமின்றி ஒற்றுமையாக இருப்பவர்களாகவும் இல்லை. மாறாக அவர்கள்,

1) சிந்திக்கத் தெரியாதவர்களாகவும்
2) கடன்காரர்களாகவும்
3) குடிகாரர்களாகவும்

இருக்கின்றனர். இவர்கள் இவ்வாறு இருப்பதற்கு காரணம் அந்த அரசியல்வாதிகள் வகுத்து இருக்கும் திட்டங்களே ஆகும்.

 
ஒருவன் சிந்திக்க வேண்டும் என்றால் அவன் கல்வியினைப் பெற்று இருக்க வேண்டும். ஒருவனது கல்வியறிவு தான் அவனை சிந்திக்க வைக்கின்றது. மக்களாட்சிக் காலத்தில் ஆள்பவர்களால் மக்களின் கல்வியை தடுக்க முடியாது. காரணம் கல்வி என்பது ஒவ்வொரு மனிதனின் பிறப்புரிமை. இந்நிலையில் எவன் ஒருவன் கல்வியை தடுக்க முயல்கின்றானோ அவன் சமூகத்தின் ஆதரவினை இழந்து விடுகின்றான். இந்நிலையில் ஆள்பவர்களால் கல்வியினைத் தடுக்க முடியாது. ஆனால் அவர்களால் கல்வி முறையினை கட்டுப்படுத்த முடியும். அதனை வைத்தே அவர்கள் சிந்திக்க வைக்காத எதற்கும் பயனற்ற கல்விமுறையைக் கொண்டு சிந்திக்கத் தெரியாத ஒரு சமூகத்தை உருவாக்கிக் கொண்டிருக்கின்றனர்...காரணம் மக்கள் சிந்திக்காத வரை தான் அவர்களுக்கு நல்லது. ஆகையால் சிந்திக்க வைக்காத கல்விமுறையையே அவர்கள் ஊட்டி வளர்த்துக் கொண்டு இருக்கின்றனர்.

ஆனால் கல்வி முறையை வைத்து மட்டும் ஒரு மனிதனின் சிந்தனையை கெடுக்க முடியாது என்பதை அவர்கள் நன்கு அறிந்து தான் இருக்கின்றனர்.இந்நிலையில் அவர்களுக்கு கை கொடுப்பது மது வகைகள் ஆகும். கற்றவனையும் சிந்திக்க வழியில்லாதவனாக செய்யும் மதுவினை சமூகத்தினுள் பரப்பி மக்களைக் குடிகாரர்களாக மாற்றுவதின் வாயிலாக சிந்திக்க இயலாத ஒரு சமூகத்தினைக் கட்டமைத்துக் கொண்டு அதில் அசைக்க முடியாத சக்தியாக அவர்கள் உலா வந்துக் கொண்டு இருக்கின்றனர்.

"கள்ளுண்ணாமை" யை வலியுறுத்தாத தமிழ் இலக்கியங்களே இல்லை என்றே கூறலாம்...அப்பேற்பட்ட ஒரு தேசத்திலே "தமிழ் வாழ்க" என்றுக் கூறிக் கொண்டு மதுவினைப் பரப்புவது என்பது எத்தகைய சதிச் செயல் என்பதனை சிந்திப்பவர்கள் அறிவார்கள்.

ஆனால் இன்னும் பிரச்சனை இருக்கத் தான் செய்கின்றது... அனைவரும் சிந்திக்காதவர்களாகவும் இருப்பதில்லை அனைவரும் மதுவையும் குடிப்பதில்லை...இந்நிலையில் அத்தகைய மக்கள் ஒற்றுமையுடன் ஒன்று சேர்ந்து கேள்விகளை எழுப்பினால் சிந்திக்காத மனிதனும் சிந்திக்க ஆரம்பித்து விடுவான்...பின்னர் ஆட்சி ஆட்டம் கண்டு விடும். இதையும் ஆட்சியாளர்கள் நன்றாக அறியத்தான் செய்வார்கள். இதற்கு தீர்வாக அவர்கள் கண்டு பிடித்த ஒரு விடயம் தான் "கடன்",

ஒருவன் சிந்திக்கின்றானா...நல்லது.
மது போன்றவைகளுக்கு அடிமையாகவில்லையா...நல்லது.
அவனை கடன்காரனாக்கி விடு...அவன் நமக்குத் தொல்லை தர மாட்டான்.

இது தான் ஆள்பவர்களின் தாரக மந்திரமாக இருக்கின்றது. "கடன்" வாங்குவது என்பது மிகவும் எளிதான ஒரு செயல்...தேவை இல்லாத பொருள்களை கடனில் வாங்க மக்களும் சிறிதளவு பேராசையையும் பொறாமையையும் கெளப்பி விட்டால் போதும்...

"அட இப்ப விலை கம்மியா கிடைக்குதே...கடன வாங்கி அத வாங்கிட்டோம்னா அப்புறம் மெதுவா அடைச்சிக்கலாம்...அதான் கடன் தர வங்கிங்க இருக்கே..." என்றவாறே கடன் வாங்க மக்கள் தயாராக இருக்கின்றனர். காரணம் மது குடிப்பது போன்று கடன் வாங்குவது என்பது தவறான ஒன்றாக இன்று நமது சமூகத்தில் பார்க்கப்படவில்லை.

கூடவே மக்களின் இன்றியமையாத தேவைகளையும் கடன் வாங்கித் தான் பெற முடியும் என்ற நிலைக்கு கொண்டு வந்து விட்டால், அதுவும் அந்த கடனை அரசாங்க வங்கிகளே தந்தன என்றால் நிச்சயம் மக்கள் கடன் வாங்கத் தான் தலைப்படுவர்.

 
கல்வி, தொழில், உறைவிடம் போன்ற முக்கியமான, மக்களின் இன்றியமையாத தேவைகளை கடன் பெற்றால் தான் பெற முடியும் என்ற நிலையைக் கொண்டு வந்து விட்டால் கடன் வாங்காது இருக்க மக்களால் முடியாது. இந்நிலையில் பெரும்பான்மையான மக்கள் கடன்காரர்களாகி விடுவர். இது தான் அரசாங்கத்திற்கு தேவை...காரணம் குடிக்காரர்களும் சரி கடன்காரர்களும் சரி...அரசாங்கத்திற்கு எதிராக..ஏன் எதற்கு எதிராகவும் குரலினை எழுப்ப மாட்டார்கள்.

குடிகாரர்கள் முழுக்க முழுக்க குடிக்கு அடிமையாகி விட்டு இருப்பர்...அவர்களுக்கு அவர்களது உலகம் குடியினைச் சுற்றியே இருக்கும்...பொழுதுபோக்கிலேயே காலத்தைக் கழிக்க விரும்புவர்...அரசாங்கத்தை எதிர்த்து அவர்களின் குரலினை அவர்கள் எக்காலமும் எழுப்ப மாட்டார்கள்.

கடன்காரர்களின் நிலைமையோ இன்னும் பரிதாபம்...அவர்களுக்கு நடப்பது தவறென்று தெரியும்...ஏதாவது செய்து மாற்றிட மாட்டோமா என்ற எண்ணமும் மனதினுள் இருக்கும்...ஆனால் அதனை எல்லாம் பயம் ஓரம்கட்டி விடும்..."ஏதாவது பிரச்சனையில் சிக்கி விட்டு பின்னர் கடனுக்குரிய வட்டியைக் கட்ட வழியின்றி சென்று விட்டால் கடன் ஏறிக் கொண்டே போகுமே...அதனை நாம் தானே கட்ட வேண்டி இருக்குமே...எதற்கு நமக்கு தேவை இல்லாத வம்பு...நமக்கு ஏற்கனவே நமது கடன் பிரச்சனை இருக்கின்றது...அதனைக் கவனிப்போம்...வேறு எவன் எக்கேடுக் கெட்டால் நமக்கு என்ன?" என்றே அவர்களின் வாழ்க்கையைப் பற்றிய பயம் அவர்களை மற்றவர்களிடம் இருந்து பிரித்து தனியாக்குவதுடன் அவர்களின் உணர்ச்சிகளையும் கட்டிப்போட்டு விடுகின்றது.

இது தான் அரசாங்கத்திற்கு வேண்டும்...மக்கள் ஒற்றுமையாகவும் இருக்கக் கூடாது...சிந்திக்கவும் கூடாது...அச்சமின்றியும் இருக்க கூடாது. அதற்காகத் தான் அது மதுவையும் கடனையும் வாரி வாரி வழங்குகின்றது. இதில் இருக்கும் அரசியலை உணராது இருக்க சிந்திக்க வைக்காத கல்வி முறையையும் ஊட்டி வளர்த்து பாதுகாக்கிறது.

அதாவது,

சிந்திக்க வைக்காத ஒரு கல்வி முறை..அந்த கல்வி முறையை கற்க கடன் வாங்கியாக வேண்டும்...கூடவே மதுவினைக் குடிக்க தூண்டும் ஒரு சமூக அமைப்பு..இதனைத் தான் இன்றைக்கு நமது நாடு வளரும் இளம் தலைமுறையினருக்கு தந்துக் கொண்டு இருக்கின்றது. தன்னைச் சுற்றி நடக்கும் அரசியலை அறிந்துக் கொள்ளும் முன்னரே ஒருவனை இந்த அரசு கையறு நிலைக்கு கொண்டு சென்று விடுகின்றது. அங்கே தான் அந்த அரசின் வெற்றி அடங்கி இருக்கின்றது.

காமராஜரின் காலத்தில் இலவசமாகவும் அரசாங்கத்தின் கையிலும் இருந்தக் கல்வி இன்று தனியார் வசமாகவும் காசிருந்தால் மட்டுமே கிடைக்கக் கூட ஒரு பொருளாகவும் இருக்கின்றது.

கிராமத்திற்கு கிராமம் நூலகம் இருக்கின்றதோ இல்லையோ...தெருவிற்கு தெரு மதுபானக் கடைகள் இருக்கின்றன...!!!

கல்வியினை முடித்து தனது கனவுகள் என்ன? தான் என்ன ஆக வேண்டும்...எனது திறமைகள் என்ன? என்பதை ஒருவன் அறியும் முன்னரே அவனைக் கடன்காரன் ஆக்கி..கடனை அடைத்து விட்டு என்னவேண்டும் என்றாலும் செய் என்று ஒரு முடிவில்லாத சக்கரத்தினுள் இந்த சமூகம் அவனை தள்ளி விட்டு விடுகின்றது.அவனும் அவனைப் பற்றி அறிந்துக் கொள்ளாமலே சுழல ஆரம்பித்து விடுகின்றான். பாவம் அவனது கல்வி முறை அவனுக்கு சிந்திக்கச் சொல்லித்தரவில்லை. இப்படிப்பட்ட ஒருவன் எவ்வாறு நாட்டில் புரட்சியையோ மாற்றத்தையோ கொண்டு வர முடியும்...அவனது இயலாமையை நொந்துக் கொண்டே காலத்தைக் கடத்த வேண்டும் என்றால் முடியும்...அவனுக்கு ஆறுதலாக மதுவையும் அரசே தருகின்றது. நிற்க

இது தான் நிலைமை...பெரிய சதி வலையினை மேலோட்டமாகத் தான் நாம் இங்கே கண்டுள்ளோம்...இருந்தும் இப்போதைக்கு இது போதும். உங்கள் அரசாங்கம் உங்களை ஒற்றுமை உள்ளவர்களாகவும் சிந்திப்பவர்களாகவும் இருப்பதை விரும்பவில்லை.

"மக்கள் கடன் வாங்கினால் தான் வங்கிகள் செயல்பட முடியும்...நாடும் இயங்க முடியும்" என்று அரசியல்வாதிகள் கூறுவது உண்மை தான். காரணம் நாம் கடனினை வாங்கினால் தான் அரசாங்கத்தை எதிர்க்க மாட்டோம்...அப்படி இருந்தால் தானே அவர்கள் அரசாள முடியும்...அதனால் தான் அவர்கள் கடன் வாங்க மக்களை தூண்டுகின்றனர்...மூளைச் சலவை செய்கின்றனர்...கூடவே கடனினை வாங்கியே ஆக வேண்டிய நிலைக்கு மக்களை வலுக்கட்டாயமாக கொண்டு வருகின்றனர்.

இன்றைய அரசுக்கு தேவை,

கடன்காரர்களும் குடிகாரர்களும் தான்...இருவராலும் எந்த ஒரு மாற்றமும் நிகழப் பெறாது.

வருந்தத்தக்க விடயமாக நமது நாட்டினில் மக்களுள் பெரும்பாலானோர் அந்த இரண்டு பிரிவுகளில் ஏதேனும் ஒரு பிரிவிலாவது வந்து விடுவர்...நீங்களே சிந்தியுங்கள்,

1) குடி பழக்கம் உள்ளவர்
2) கடனில் இருப்பவர்
3) மேலே உள்ள இரண்டுமே இருக்கின்றவர்
4) மேலே உள்ள இரண்டுமே இல்லாதவர்

இந்த நான்கு பிரிவுகளில் நமது மக்கள் அல்லது நாம் எந்த பிரிவில் வருவோம் என்றே எண்ணிக் பாருங்கள். நிச்சயமாய் 20 வருடங்களுக்கு முன்னர் நாலாவது பிரிவில் எண்ணிக்கை அதிகமாக இருந்து இருக்கும்...ஆனால் இன்றோ மூன்றாவது பிரிவின் எண்ணிக்கை தான் அதிகமாக இருக்கும். இதில் தான் நமது வீழ்ச்சியும் அரசியல்வாதிகளின் வெற்றியும் அடங்கி இருக்கின்றது. (இவை மட்டுமே காரணம் கிடையாது...இன்னும் பல இருக்கின்றன...ஆனால் இந்த பதிவில் நாம் அவற்றைப் பற்றிப் பார்க்க நேராததால் அவற்றைக் குறிக்கவில்லை)

 
சரி இருக்கட்டும்...பிரச்சனைகளின் தன்மையையும் காரணத்தையும் மேலோட்டமாக கண்டாயிற்று...இதற்கான தீர்வினைக் காணாது விட்டோமென்றால் நாம் இது வரை கண்டவை வெறும் எழுத்துக்களாய்ப் போய் விடும்...எனவே நம்மால் என்ன செய்ய இயலும்...என்ன செய்ய வேண்டும் என்றும் நாம் காண்பது தான் நலமாக இருக்கும்...

1) "போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து" என்ற பழைய தத்துவத்தின் வழி பேராசையை குறைத்து நமக்கு இன்றியமையாத தேவைகளில் மட்டுமே கவனத்தினை செலுத்த முயல்வது.

2) "இன்றியமையாத தேவை" என்ன என்பதில் ஒவ்வொருக்கும் கருத்து வேறுபாடுகள் நிச்சயம் இருக்கும் என்பதனால் தேவைகள் என்று கருதுபவைகளை கடனின்றி வாங்க முயல்வது. இன்றைய நிலையில் கல்வி போன்ற விடயங்களின் விலையினை மாற்ற அரசியல் மாற்றங்கள் தேவையாக இருக்கின்றன, எனவே அரசியல் மாற்றங்கள் நிகழும் வரை மாணவனை கடன் வாங்காதே என்றுக் கூறுவது அவனுடைய படிப்பினை மறைமுகமாக நிறுத்துவதாகவே அமையும்...எனவே இன்றைய நிலைக்கு ஆடம்பரம்/பேராசை காரணமாக வாங்கும் பொருட்களையாவது கடனின்றி வாங்க முயல்வது.

3) இயன்றவரை கடன் அட்டை முதலியவற்றை பயன்படுத்தாமல் இருப்பது.

4) நுகர்வுக் கலாச்சாரத்தில் சிக்கிக் கொள்ளாது பொருள் மோகத்தை விடுத்து சேமிக்க துவங்குவது.

5) குடிப்பது எனது தனி உரிமை அதில் குறை கூற யாருக்கும் உரிமை இல்லை என்று எண்ணாமல், நாம் குடிப்பது மற்றவரையும் (பள்ளிக் குழந்தைகள் முதற்கொண்டு) குடிக்க தூண்டுகிறது என்பதையும் அது ஒரு நிலையில்லாத சமூகத்தை உருவாக்குகின்றது என்பதையும் உணர்ந்து பொறுப்புணர்ச்சியுடன் குடியை நிறுத்த முயல்வது.

6) நண்பர்கள் குடித்தார்கள் என்றால் பொழுதுபோக்கிற்காக அவர்களுடன் சேர்ந்து குடிக்க பழகாமல், அவர்களின் மேலும் நமது சமூகத்தின் மீதும் உண்மையான அக்கறையுடன் அவர்களை குடியை நிறுத்துமாறு நட்புடனும் உரிமையுடனும் கூற முயல்வது

7) சிந்திக்கும் நண்பர்கள் சேர்ந்து சிந்தனைகளை ஒன்றிணைத்து மற்ற மக்களையும் எவ்வாறு சிந்திக்க வைப்பது என்று எண்ணத் துவங்குவது

8) அன்பால் ஒற்றுமையுடன் இருக்க முயல்வது

9) நற்பண்புகளையும், நல்ல குணங்களையும் சமூகத்தில் பரப்புவது

இவை மட்டுமே தீர்வுகள் கிடையாது...மேலும் சிந்திக்கச் சிந்திக்க தீர்வுகள் நிச்சயம் புலப்படத் தான் செய்யும்...அதற்கு நாம் சிந்திக்க வேண்டும்...!!!

செய்வோமா...நாம் செய்வோமா...!!!

வெள்ளி, 9 மே, 2014

அது ஒரு கல்விக் காலம்

தேர்வு முடிவுகள் வெளிவந்துவிட்டன...!!!
 
முதல் மதிப்பெண்கள் பெற்றோர், மாணவ மாணவியர்களின் தேர்ச்சி விகிதங்கள், மாவட்டவாரியான தேர்ச்சி விகிதங்கள் ஆகியவைகளைப் பற்றிய கருத்துக்களும் பாராட்டுக்களும் விவாதங்களும் எங்கும் நிச்சயம் நடைப்பெற்றுக் கொண்டே இருக்கக் கூடிய ஒரு தருணம் தான். கூடவே அன்றைய பள்ளி மாணவர்கள் தங்களது பள்ளிக்கூட நினைவுகளையும் தாங்கள் தங்களது மதிப்பெண்களைப் பெற்ற தருணங்களையும் சிறிதே அசைப் போட்டுக் கொள்ளும் தருணமும் தான்.

சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் இன்றைய பள்ளி ,மாணவர்கள் தங்களது எதிர்காலத்தை நோக்கி கனவுகளுடனும், அன்றைய பள்ளி மாணவர்கள் தங்களது கடந்த காலத்தை பெருமூச்சுடனான நினைவுகளுடனும் கண்டுக் கொண்டு இருக்கும் ஒரு தருணம். இதில் நாம் அந்த எதிர்காலத்திற்கான கனவுகளையும் சரி பெருமூச்சினை விட வைக்கும் நினைவுகளையும் சரி கண்டோம் என்றால் அவற்றில் ஆயிரம் ஆயிரம் விடயங்கள் பொதிந்து இருக்கும். நிச்சயம் அவைகள் முக்கியமானவைகள் தாம்...!!!

இத்தருணத்தில் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் சிலருடன் ஒரு பள்ளியில் நடைபெற்ற விழாவிற்கு சென்ற பொழுது நிகழ்ந்த நிகழ்வினை இங்கே கூற விரும்புகின்றேன்.

நான் காமராஜர் பிறந்த ஊரினைச் சேர்ந்தவன். வேறு எந்த பெருமையும் பெரிதாக இல்லாத நிலையில் "காமராஜர் எங்க ஊரு தெரியுமாடே.." என்றே பெருமைப் பேசித் திரிந்தவர்களும் ஒருவன். பெருமைப் பேசுவதைத் தவிர காமராஜருக்காக வேறு ஏதாவது செய்து இருப்போமா என்றால் சந்தேகமே.

ஆனால் ஒன்றை மட்டும் செய்துக் கொண்டு இருந்தோம்...தொடர்ந்து 25 வருடங்களாக அரசு பள்ளித் தேர்வுகளில் மாவட்டங்களின் தேர்ச்சி விகிதத்தில் மாநிலத்திலே முதல் இடத்தை தக்க வைத்துக் கொண்டு இருந்தோம்.

சொன்னாலும் சொல்லாவிட்டாலும் அந்த சாதனையைக் குறித்து மாவட்டத்தில் அனைவருக்கும் ஒருவித பெருமை இருக்கத் தான் செய்தது. "நம்ம உண்மையிலேயே அவ்வளவு நல்லா படிக்குறோமா?" என்றே சந்தேகம் மனதினில் இருந்தாலும் வருடங்கள்தோறும் வந்த தேர்வு முடிவுகள் சாதனைக்கான வருடத்தினைக் கூட்டிக் கொண்டே செல்ல வேறு முடிவிற்கு வர இயலவில்லை.

இந்நிலையில் தான் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் சிலருடன் ஒரு பள்ளியில் விழா ஒன்றிற்கு செல்லும் வாய்ப்பு கிட்டியது. பயண தூரம் அதிகமாக இருந்ததால் மெதுவாக அவர்களிடம் இத்தலைப்பினைப் பற்றி பேச ஆரம்பித்தேன்.

"ஐயா...நம்ம மாவட்டம் மட்டும் எல்லா வாட்டியும் தேர்ச்சி விகிதத்தில முதலா வருதே...அது எப்படிங்கையா" என்றே ஆரம்பித்தேன்.

"அது ஒண்ணும் இல்லடே...நம்ம ஊர்காரங்களுக்கு படிப்புதேன் எல்லாம்...வேற வழி கிடையாது...மற்ற மாவட்டத்துல எல்லாம் வயலு...விவசாயம் அப்படி இப்படின்னு பொழைக்க வழி இருந்துச்சி...ஆனா நம்ம ஊரு பக்கம் படிச்சாத்தான் பொழைக்க வழி...அதுனால நம்ம ஊரு பக்கம் பெரியவங்க எல்லாம் நெறைய பள்ளிக்கூடத்த கட்டினாங்க...படிக்க வரவனும் ஒழுங்கா படிச்சான்...வாத்தியார் அடிச்சாலும்..சரி அடி வாங்கியாவது படிக்கலாமே அப்படின்னு இருந்தான்...ஆனா மற்ற ஊர்ல வாத்தியார் அடிச்சாருனா...அவன் என்னை என்ன அடிக்குறது அப்படின்னு கோச்சிக்கிட்டு அவன் அவன் வயலுல போயி வேல பார்க்க ஆரம்பிச்சுடுவானுங்க...அதனால நம்ம மாவட்டம் மற்ற மாவட்டத்த விட நல்ல மதிப்பெண்களையும் தேர்ச்சி விகிதத்தையும் தந்துச்சி...அப்படியே தொடர்ந்து கொஞ்ச வருசமா அப்படியே முதல் இடத்துல இருந்ததால அதுவே ஒரு இலக்கா மாறிடுச்சி...புதுசா வர வாத்தியாரும் "முன்னாடி இருந்த வாத்தியார் காலத்துல இருந்த சாதனை நம்ம இருக்கும் போது போச்சினா நல்லா இருக்காது..அதுனால நல்லா சொல்லித் தரனும்" அப்படின்னு நெனச்சி உழைக்க தொடர்ந்து முதல் இடத்துல இருக்கோம்...அவ்வளவு தாம்டே...மற்றபடி வேற ஒண்ணும் கெடையாது...ஆனா இனியும் இருப்போமானு தெரியாதுடே..." என்றார்.


"ஏன்யா அப்படி சொல்றீங்க..?" என்றேன்.

 
"பின்ன என்னடே...இப்ப எல்லாம் எவன் படிப்பையும் வாத்தியாரையும் மதிக்குறான்...படிப்ப வியாபாரமா பாக்குறான்...சொல்லிக்கொடுக்குற வாத்தியார பசங்கள எப்படியாச்சும் கசக்கிப் பிழிஞ்சி நூத்துக்கு நூறு எடுக்க வைக்குற இயந்திரமா பாக்குறான்...முன்னாடி எல்லாம் படிக்காம இருந்து இருந்தாலும் படிப்போட மதிப்பு தெரிஞ்சி ஊரு முழுக்க பள்ளிக்கூடம் கட்டி விட்டாங்க...ஆனா இப்ப அந்த பள்ளிகூடத்துல எல்லாம் படிச்சவன் தான் மேல ஒக்காந்துக்கிட்டு படிப்ப வித்துகிட்டு இருக்கான்...படிக்காதவனுக்கு தெரிஞ்ச படிப்போட அருமை படிச்சவனுக்கு தெரியலையே...இப்ப கூட எங்களுக்கு சொல்லிக் கொடுத்த வாத்தியார பார்த்தோம்னா மரியாதையோட தான் பேசுவோம்...ஆனா இப்ப எப்படிடே நெலம இருக்கு...வாத்தியாரும் பையனுமே சேர்ந்து தண்ணி அடிக்குறான்...அப்புறம் எப்படிடே வாத்தியார பையன் மதிப்பான்...அவன் சொல்லிக் கொடுக்குறத அவன் கேப்பான்? எல்லாத்தையும் கெடுத்து குட்டிச் சுவராக்கிப் புட்டானுவ...பையனுங்களுக்கு சொல்லிக் கொடுக்கணும் அப்படின்னு எவன்டே இப்ப வாத்தியார் வேலைக்கு வரான்...எல்லாவனும் வேற வேல கெடைக்காம வாத்தியாரா வரான்...இவன் எப்படி ஒழுங்கா பாடத்த சொல்லிக் கொடுப்பான்...இவன் சொல்லிக் கொடுக்க நெனச்சாலும் மேல இருக்குறவன் எனக்கு நூத்துக்கு நூறு கொடு அப்படினுல கேக்குறான்...இதுல எங்க போயி பையன புரிஞ்சிகிட்டு சொல்லிகுடுக்குறது. போதாக்குறைக்கு இந்த சினிமா வேற...முன்னாடி எல்லாம் எல்லா வேலையையும் முடிஞ்சதுக்கு அப்புறமா சாயங்கால நேரத்துல என்னிக்காச்சும் தான் இந்த கூத்து கீத்துன்னு நடக்கும்...அதுவும் பொழுதுபோக்குன்னு தான்...ஆனா இப்ப பாரு...எல்லாமே இந்த சினிமாவும் சினிமாக்காரனுங்களும் தான்...இவன் படிக்குறதே நாலு காசு சம்பாதிச்சி சினிமா பார்க்கத்தான் போலல இருக்கு...அப்படில இப்பலாம் இருக்கானுங்க...காலங்காத்தாலையே சினிமா கொட்டாயிலல இவனுங்க போய் நிக்குரானுங்க...ஆள்றதும் சினிமாக்காரன்...பள்ளிக்கூடத்துல ஏதாவது நிகழ்ச்சினா அங்கேயும் சினிமாக்காரன்...அவனுக்கும் படிப்புக்கும் என்ன சம்பந்தம்...இல்லைனா இவனைப் பார்த்தா அந்த பையனுங்க என்ன கத்துப்பானுங்க அப்படின்னு எவனாவது கேட்டானா...எவனுக்கும் அக்கறை கிடையாது...அவன் அவனுக்கு அவன் பொழப்பு ஓடணும்...அப்புறம் எப்படி பையன் ஒழுங்கா இருப்பான்..இந்தா நம்ம ஊர்லையே வாத்தியார ஒரு ஒன்பதாப்பு படிக்குற பையன் கத்தியாலல குத்தி இருக்கான்...இன்னும் கொடுமை வகுப்புலயே கஞ்சா அடிச்சி மாட்டி இருக்கானுங்க...இது எல்லாம் நல்லதுக்கா...ஆனா இத பத்தி எல்லாம் கவலைப் படாம ஒரு மக்கம் அரசாங்கமே அவன குடிக்க சொல்லிக்கிட்டு இருக்கு...இன்னொரு பக்கம் வெறும் மதிப்பெண் மட்டும் எடுக்குற பிராய்லர் கோழியா அவன இந்த பள்ளிக்ககூடங்கள் மாத்திகிட்டு இருக்கு...பையன் சிந்திக்கவே கூடாது அப்படினே படிப்ப சொல்லிக் கொடுத்துகிட்டு இருக்கானுங்க...அதுலையும் குறிப்பா இந்த நாமக்கல் பக்கம் இருக்குற பள்ளிக்கூடத்தை பத்தி கேள்விப்பட்டு இருப்ப...இருக்குறதுலையே மோசமான அந்த பள்ளிக்கூடங்கள்ல தான் எல்லா பெற்றோரும் அவங்க பசங்கள வெறும் மதிப்பெண்ணுக்காக சேர்க்க நெனைக்கிறாங்க...பெத்தவங்களே அப்படி நினைக்கும் போது வியாபாரமா கல்விய விக்குறவனுக்கு என்ன கவலை...இந்த நெலமைல எல்லா ஊருமே அவனுங்கள போலத்தேன் மாறப் பாக்குதுங்க...அதனால தரமான கல்வியோ இல்ல ஆசிரியரோ இல்லாம தான் போகும்...அதனால...அந்த நிலைல...தொடர்ந்து இந்த சாதனை எல்லாம் நம்மகிட்ட இருக்கும்னு சொல்ல முடியாதுடே...ஒழுங்கான கல்வியே இருக்காதாம் அப்புறம் என்ன இதுக்கு சாதனை கழுத குதிரைன்னு கேக்குறேன்..." என்றவாறே அவரது ஆதங்கத்தை வெளிப்படுத்த அவருடைய கூற்றில் இருந்த விடயங்களைக் குறித்து சிந்தித்தவாறே என்ன செய்யலாம் என்றே யோசிக்க ஆரம்பித்தேன்.


ஒன்று மட்டும் தெளிவாக புரிந்தது...படிக்காதவங்களுக்கு தெரிஞ்சி இருந்த படிப்போட அருமை படிச்சவங்களுக்கு சுத்தமா தெரியல...அவங்களை பொருத்தவரை கல்வினா வியாபாரம்...அறிவுனா மதிப்பெண். அவ்வளவே...!!!


இந்நிலையில்...


"கற்க கசடற கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக"


என்பன போன்றவை வெறும் வார்த்தைகளின் சேர்க்கைகளாகவே இருக்குமே தவிர அவற்றில் யாதொரு அர்த்தமும் இருக்கப்போவதில்லை....இன்றைய இளைய சமூகம் ஆர்வமாய் பெற்று இருக்கும் மதிப்பெண்களைப் போன்றே...!!!


சிந்திக்க வைப்பதே கல்வி...!!!
நற்பண்புகளையும்...மனிதத்தையும் வளர்ப்பதே கல்வி...!!!
உதவும் மனப்பாங்கையும் சகோதரத்துவத்தையும்...நல்ல சமூகத்தை கட்டமைக்கும் கடமை உணர்ச்சியையும் வளர்ப்பதே கல்வி...!!!

இன்று நாம் கற்பது கல்வி அல்ல...வெறும் புத்தகங்கள்!!!

இரு தேசங்களின் கதை : ஆரியவர்த்தமும் பிற தேசங்களும்...!!!

தேசியம்...வந்தேறிகள்...குடியுரிமை என்று இன்று பல குரல்கள் எழும்பிக் கொண்டிருக்கின்றன. "யார் வந்தேறிகள்? யார் பூர்வகுடி மக்கள்? எவ...