தமிழ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 20 ஜூலை, 2014

திருவள்ளுவர் கூறும் இறைவன் யார்? - 4

கடந்த பதிவுகளில் திருவள்ளுவர் கூறும் இறைவன் கிருத்துவம் மற்றும் சைவம் ஆகிய சமயங்கள் கூறுகின்ற இறைவனையே என்றும் அவர் பௌத்த சமயத்தையோ அல்லது சமண சமயத்தையோ சேர்ந்தவர் அல்லர் என்றுமே நாம் கண்டு இருக்கின்றோம்.

அவ்வாறு கண்டு வருகையில் இறைவனின் அருள் இன்றி இறைவனை அறிதல் அறிதல் இயலாது என்றும் அவன் அருள் இருந்தால் தான் ஆன்மீக அறிவினைப் பெற முடியும் என்றே சமயங்கள் கூறுகின்றன என்றே கண்டோம். இப்பொழுது இதனைப் பற்றித் தான் விரிவாகக் காண வேண்டி இருக்கின்றது.

"அவன் அருளாலே அவன் தாள் வணங்கி" என்று மாணிக்கவாசகர் கூறுகின்றார். இதனையே சைவ சித்தாந்த சாத்திரத்தின் மணிமுடியான சிவஞானபோதமும் தெளிவாக விளக்குகின்றது.

கிருத்துவும் என் மூலமாக அன்றி பிதாவினை வேறு ஒருவனும் அறியான் என்றே கூறி இருக்கின்றார்.

"அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்." யோவான் 14:6

இவற்றின் மூலமாக இறைவன் உணர்த்தாமல் இறைவனைப் பற்றி அறிந்துக் கொள்ளும் ஆன்மீகச் சிந்தனைகளை மனிதனால் அறிந்துக் கொள்ள முடியாது என்பதனை நாம் அறிந்துக் கொள்ள முடிகின்றது.

அதனால் தான் அதுவரை இறை நம்பிக்கை கொண்டு இருந்த மக்கள் அனைவரும் அவர்களது குலத்திற்கான வழிபாட்டுக் கடவுளரைக் கொண்டு அவற்றிக்கு பலிகளை இட்டுக் கொண்டு வந்தனர்...அவர்களுக்கு மக்கள் அனைவருக்கும் பொதுவாக இருக்கும் இறைவனைப் பற்றிய புரிதலோ அல்லது எண்ணமோ இருக்கவில்லை.

அதனால் தான் ஞானம் மிகுந்த இம்மண்ணில் எழுந்த சமயங்களான பௌத்தமும் சமணமும் இறைவனைப் பற்றி அறியாத சமயங்களாகவும் பலியினை எதிர்பதாகவும் இருக்கின்றன. நிற்க

இறைவன் உணர்த்தாமல் இறைவனை அறிய முடியாது சரி...அப்படி என்றால் இறைவன் எப்படி உணர்த்தினான் எவ்வாறு உணர்த்தினான் என்றக் கேள்வி இங்கே எழுக்கூடும்...இதற்கு விடையாய்

"சுத்த சிவன் குருவாய் வந்து தூய்மை செய்து" - திருமந்திரம்

"அகலமாய் யாரும் அறிவரி தப்பொருள்
சகலமாய் வந்ததென் றுந்தீபற
தானாகத் தந்ததென் றுந்தீபற" – திருஉந்தியார் 1

என்று இறைவன் மனிதனாக உலகிற்கு வந்து மனிதர்களுக்கு குருவாகி அவர்களை ஆட்கொண்டார் என்றே சைவம் கூறுகின்றது. இங்கே நாம் காண வேண்டியக் கேள்வி,

இறைவன் மனிதனாக வந்தான் சரி...ஆனால் எப்பொழுது வந்தான்? எங்கு வந்தான்? எப்படி வந்தான்? என்பதுதான்.

இறைவன் மனிதனாக வந்து மக்களைக் ஆட்கொண்டான் என்றக் கருத்து சைவ சமயத்தின் அடிப்படையாக இருந்தாலும் இறைவன் எப்பொழுது மனிதனாக வந்தான் என்றக் கேள்விக்கு விடைகள் கிடைப்பதில்லை. இந்நிலையில் இறைவன் மனிதனாக வந்தான் என்ற கருத்து வேறு எங்காவது இருக்கின்றதா என்றே நாம் கண்டோம் என்றால் அதே கருத்து கிருத்துவத்திலும் காணப்படுகின்றது.

அங்கே இறைவன் மனிதனாக எங்கே வந்தான், எப்பொழுது வந்தான், எப்படி வந்தான் என்ற கேள்விகளுக்கு விடைகள் கிடைக்கின்றன. இதைத் தான் நாம் இப்பொழுது சற்று உன்னிப்பாகக் காண வேண்டி இருக்கின்றது.

இறைவன் அருளில்லாமல் மனிதனால் இறைவனை அறியவோ உணரவோ முடியாது என்றே சைவமும் கிருத்துவமும் கூறுகின்றன (காரணம் மனிதன் மலத்தில்/பாவத்தில் உள்ளான்). அவனை மீட்டு எடுக்க இறைவன் மனிதனாக வருகின்றார். இக்கருத்தை, இக்காலத்தில் இந்த இடத்தில் இறைவன் மனிதனாக வந்தான் என்றே கிருத்துவம் கூறுகின்றது.

ஆச்சர்யவசமாக அக்காலத்திற்கு முன்பு வரை உலக மக்கள் அனைவருக்கும் பொதுவான இறைவன் என்ற ஆன்மீகச் சிந்தனையோ அல்லது மனிதன் மலத்தில் இருக்கின்றான் என்றச் சிந்தனையோ வேறு எங்கும் காணப்படவே இல்லை...(கி.மு (கிருத்து காலத்திற்கு முன்னர்) வில் சிவன்/பிள்ளையார்/சக்தி/ஈசன்/பெருமாள்/பிரமன் போன்ற பெயர்களோ அல்லது சைவ வைணவ சமயத் தத்துவங்களோ காணப்படாதது இங்கே குறிப்பிடத்தக்கது. முருகன் என்பவன் பலியினை ஏற்றுக் கொள்ளும் குறிஞ்சி நிலக் கடவுளாகவே அறியப்பெற்றான் என்பதும் குறிப்பிடத்தக்கது). நிற்க

எனவே இறைவன் மனிதனாக வந்த வரலாற்று நிகழ்வை கிருத்துவம் கூறிக் கொண்டு இருக்கும் பொழுது, இறைவன் மனிதனாக வந்து மனிதரை மீட்ட ஆன்மீகக் கருத்தினை ஆன்மீக ரீதியாக தெள்ளத் தெளிவாக தமிழரின் ஞானத்துடன் விளக்கிக் கொண்டு இருப்பது சைவ வைணவ சமயங்களாகும் என்றே நாம் அறியப் பெறுகின்றோம்.

இவை இரண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் தான் திருவள்ளுவர் நிற்கின்றார்...இறைவன் மனிதனாக உலகிற்கு வந்த வரலாற்று செய்திக்கும், அந்த வரலாற்று நிகழ்வு தமிழரின் ஞானத்துடன் ஆன்மீக ஞானமாக வளர்ந்த நிலைக்கும் இடைப்பட்ட காலத்தில் வள்ளுவர் நிற்கின்றார்.

இறைவன் மனிதனாக வந்து பலியான செய்தியை தமிழகத்திற்கு கொண்டு வந்தது ஈசனின் சீடரான தூய தோமா...இவர் கிருத்துவ சமயத்தைச் சார்ந்தவர் அல்லர்...இவரது காலத்தில் கிருத்துவ சமயம் தோற்றம் பெற்று இருக்கவே இல்லை. இவர் இறைத்தூதராக இறைவனின் கருத்தினைக் கொண்டு வந்தவர். எவ்வாறு திருநாவுக்கரசரும் மாணிக்கவாசகர் போன்றவர்களும் இறைத் தொண்டு ஆற்றினார்களோ அவ்வாறு இறைத் தொண்டாற்றிய ஒருவர்.

இவருடையக் கருத்தினைத் தமிழர்களின் ஞானம், இறை அருளால் தெளிவாக அறிந்துக் கொண்டு, அதனை மாபெரும் ஆன்மீகப் புதையலாக வளர்த்தது. அவ்வாறு வளர்த்ததில் முதல் இடத்தில் இருப்பவர் திருவள்ளுவர். இயற்கை நெறி காலத்தில் வாழ்ந்துக் கொண்டு வந்த மக்களை அறநெறிக் காலத்திற்கு இறைவனின் அருளால் கொண்டு வந்த நிகழ்வினை துவக்கி வைத்தது திருவள்ளுவர் தான்.


திருக்குறளின் அடிப்படையாகக் கொண்டு தான் அறநெறிக் காலம் இங்கே மலர்ந்தது. திருக்குறளின் அடிப்படைக் இறைக் கருத்தோ, உலக மக்கள் அனைவருக்கும் பொதுவான இறைவன் மக்களின் வினையினைப் போக்க மனிதனாக வந்து மக்களுக்காகப் பலியானான் என்பதே.

அந்த இறைவனைப் பற்றியே திருவள்ளுவர், கடவுள் வாழ்த்து, வான் சிறப்பு, நீத்தார் பெருமை ஆகிய அதிகாரங்களினால் விளக்குகின்றார்.

முற்றும்...!!!

பி.கு:

திருக்குறளினைப் பற்றிய முந்தையப் பதிவுகளைப் படிக்க
 

ஆய்வாளர்.தெய்வநாயகம் ஐயா என்பவரின் ஆய்வுகளில் இருந்து நான் அறிந்தவற்றையே இங்கே பதிவிட்டு இருக்கின்றேன்.

சமயங்களின் வரலாற்றைப் பற்றிய தொடரினைக் காண

சமயங்களின் வரலாறு
 
சிவஞானபோதத்தைப் பற்றி அறிந்துக் கொள்ள

திருவள்ளுவர் கூறும் இறைவன் யார்? - 3

கடந்த பதிவுகளில் எவ்வாறு வள்ளுவர் கடவுளாக சூரியனைக் கூறவில்லை என்றும் எவ்வாறு அவர் பௌத்த சமயத்தினையோ அல்லது சமணச் சமயத்தினையோ சார்ந்தவர் அல்லர் என்றும் கண்டு இருந்தோம். அப்படி என்றால் வள்ளுவர் கூறும் இறைவன் யார் என்ற கேள்வி இங்கே எழுகின்றது? இக்கேள்விக்கு விடையினை நாம் முன்னரே சில பதிவுகளில் கண்டு இருந்தாலும்


இங்கே மீண்டும் அவற்றை நாம் கண்டாகத் தான் வேண்டி இருக்கின்றது.

வள்ளுவர் கூறும் இறைவன் இரு வினைகளைத் தீர்பவராக இருக்கின்றார். பிறவிப் பெருங்கடலை அவர் அருள் இன்றி கடத்தல் இயலாது. மேலும் ஐம்புலன்களை அடக்கியவராகவும் அவர் குறிக்கப்பட்டு இருக்கின்றார். உலகம் முழுவதற்கும் பொதுவானவர். எனவே எந்தச் சமயம் இறைவனை இத்தன்மைகளோடு கூறுகின்றதோ அச்சமயத்தை சார்ந்தவராக வள்ளுவர் இருக்கலாம் என்றே நாம் கருதலாம் தானே. இதன் அடிப்படையில் நாம் கண்டோம் என்றால் நமக்கு விடையாய் இரண்டுச் சமயங்கள் கிட்டுகின்றன.

சைவம் (வைணவம் சைவத்தில் இருந்து பிரிந்த சமயம் என்பதனை கருத்தில் கொள்க)
கிருத்துவம்

இந்த இரண்டுச் சமயங்களிலும் இறைவன் வினைகளைத் தீர்பவராகவும்...அருளினால் மனித உயிர்களை பிறவிக் கடலில் இருந்து மீட்பவராகவும்...ஐம்புலன்களை உடைய மனிதனாக அவதாரம் எடுத்து உலகிற்கு வந்து மனிதர்களுக்கு வழியினைக் காட்டியவராகவும்...உலக மக்கள் அனைவருக்கும் உரியவராகவும் அறியப்படுகின்றார்.

இந்நிலையில் இந்த இரண்டு சமயங்கள் கூறும் இறைவனில் யாரை வள்ளுவர் கூறி உள்ளார் என்ற ஒரு கேள்வியும்...இரண்டு சமயங்களிலும் கூறப்பட்டு உள்ள இறைவனின் தன்மைஒன்றாகவே இருக்கின்றதே இந்நிலையில் இவ்விரண்டுச் சமயங்களும் ஒரே இறைவனைத் தான் கூறுகின்றனவா என்ற கேள்வியும் இங்கே எழ வாய்ப்பு இருக்கின்றது.

இதற்கு விடையாய் நமக்கு கிட்டுவது கிருத்துவமும் சைவமும் இரு வேறு சமயங்கள் அல்ல என்றும் உலகின் வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு காலக்கட்டத்தில் ஒரே கருத்தின் அடிப்படையில் எழுந்த இரு பிரிவுகள் என்பதே ஆகும். அதாவது கிருத்துவமும் சைவமும் இரு வேறு கருத்தினைக் கொண்ட இரண்டுச் சமயங்கள் அல்ல மாறாக, ஒரே கருத்தினைக் கொண்ட ஒரே சமயத்தின் இரண்டுப் பிரிவுகள்.

கிருத்துவத்தில் ஈசா
சைவத்தில் ஈசன்

கிருத்துவத்தில் தந்தை/பரிசுத்த ஆவி/மகன்
சைவத்தில் சிவன்/சக்தி/ குமரன்

இதையேத் தான் திருவள்ளுவர் தனது சிறப்பாயிரத்தில் (கடவுள் வாழ்த்து/ வான் சிறப்பு/ நீத்தார் பெருமை) என்றுக் கூறி உள்ளார்.

கிருத்துவத்தில் மகன் வினையினைத் தீர்பவராக அறியப்பெருகின்றார். இங்கே குமரன் 'வேலுண்டு வினையில்லை..' என்றும் 'விநாயகனே வினைத் தீர்பவனே' என்றும் வினையினைத் தீர்பவனாக அறியப்பெருகின்றார்.

கிருத்துவத்தில் மூஒருமைக் கோட்பாட்டில் ஒரே இறைவன் மூன்று நிலையில் இருக்கின்றார். சைவத்திலும் சிவன், சக்தி, குமரன் ஆகியோர் மூன்றாக கூறப்படினும் அடிப்படையில் அவர்கள் ஒன்றே என்ற மூஒருமைக் கோட்பாடு காணப்படுகின்றது. நிற்க

இந்தத் தலைப்பில் நாம் ஏற்கனவே பல பதிவுகளைக் கண்டாயிற்று...எனவே இதனை மேலும் விளக்காமல் திருவள்ளுவரைப் பற்றித் தொடருகின்றேன் (சமயங்களைப் பற்றி அறிவதற்கு இந்தச் சுட்டியினைச் சொடுக்கவும் - சமயங்கள்)

திருவள்ளுவர் சைவமும் கிருத்துவமும் கூறும் இறைவனைப் பற்றியே கூறி இருக்கின்றார் என்றே நாம் கண்டிருக்கின்றோம் ஆனால் திருவள்ளுவர் சைவரும் அல்லர்...கிருத்துவரும் அல்லர்...!!!

புதிரான கூற்றாக இருக்கின்றது தானே...ஆனால் உண்மையும் அதுதான். திருவள்ளுவர் சைவரும் அல்லர் கிருத்துவரும் அல்லர். காரணம் திருவள்ளுவர் காலத்தில் கிருத்துவம்/கிருத்துவர் என்றப் பெயரோ அல்லது சைவம்/ஈசன் என்றப் பெயரோ உருவாகி இருக்கவே இல்லை.

திருவள்ளுவரின் காலத்தில், கிருத்துவக் கருத்துக்கள் தோற்றம் பெற்ற மத்திய ஆசியாவில் கிருத்துவின் கருத்துக்களைக் கூறியவர்களை வேட்டையாடிக் கொண்டு இருந்தனர்...மேலும் கிருத்துவின் போதனைகளையும் கூற்றுகளையும் அவரது சீடரே முழுமையாக புரிந்துக் கொள்ள முடியாத நிலை தான் இருந்தது.

அவ்வாறே தமிழகத்தில் 'குறிஞ்சி/முல்லை/மருதம்/நெய்தல்/பாலை' ஆகிய நிலப்பிரிவுகளின் திணைக் கடவுளரான 'சேயோன்/மாயோன்/இந்திரன்/வருணன்/கொற்றவை' ஆகியோர் வழிபாடும் (இவைகள் சமயங்கள் அல்ல...இவைகள் பலி கொடுக்கும் வழிபாடே ஆகும்), அப்பலி கொடுக்கும் வழிபாடுகளை மறுக்கும் சமயங்களான சமணமும் பௌத்தமுமே பரவி இருந்தன.

அறிவிலும் பண்பிலும் சிறந்தவர்களாக தமிழர்கள் இருந்தனர். அவ்வாறே கிரேக்கர்களும் சரி ரோமர்களும் சரி அளப்பரிய முன்னேற்றங்களைக் கண்டு தான் இருந்தனர். இருந்தும் எவரிடத்தும் உலகம் முழுவதற்கும் உள்ள ஒரு இறைவன் என்றக் கருத்து பரவலாகக் காணப்படவில்லை.

ரோமர்களுக்கு அவர்களுக்கு உரிய கடவுளர் இருந்தனர், கிரேக்கர்களுக்கும் சரி எகிப்தியர்களும் சரி யூதர்களுக்கும் சரி அவர்களுடைய இனத்திற்குரிய கடவுளர் இருந்தனர். எவ்வாறு தமிழர்களுக்கு குறிஞ்சி நிலம், முல்லை நிலம் போன்ற நிலப்பிரிவுகளுக்கு என்று தனித் தனி வழிபாட்டுக் கடவுளர் இருந்தனரோ அதனைப் போன்று தான் உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கும் அவர்கள் இனத்திற்கென்று வழிப்பாட்டுக் கடவுளர் இருக்கத் தான் செய்கின்றனர்.

இவர்களது இனம், அவர்கள் எகிப்தியர்களாக இருக்கட்டும்...அல்லது கிரேக்கர்களாக இருக்கட்டும்...அல்லது ரோமர்களாக இருக்கட்டும்...பல்வேறு சாதனைகளையும் அறிவுச் செல்வங்களைப் பெற்று இருந்தாலும் ஆன்மீகச் சிந்தனை என்பது அவர்களுக்கு எட்டாத ஒன்றாகவே இருந்தது. இதே நிலை தான் உலகின் முதல் இனமும் ஞானத்தில் சிறந்த இனமுமான தமிழ் இனத்திலும் நிலவியது.

இந்த நிலை நிலவியதற்குக் காரணம் எளிது தான்...ஆன்மீகச் சிந்தனை என்பதனை இறைவன் அளிக்காமல் மனிதனால் தானாகத் தேடி அடைய முடியாது. இறைவனை உணர இறைவனின் அருள் வேண்டும்...அவன் அருள் இன்றி அவனை அறிதல் இயலாது...இதுவே தான் கிருத்துவமும் சரி சைவமும் சரி கூறும் அடிப்படைக் கருத்தாகும். இதைப் பற்றித் தான் நாம் இப்பொழுது காண வேண்டி இருக்கின்றது...!!!

தொடரும்...!!!

பி.கு:

திருக்குறளினைப் பற்றிய முந்தையப் பதிவுகளைப் படிக்க
 
ஆய்வாளர்.தெய்வநாயகம் ஐயா என்பவரின் ஆய்வுகளில் இருந்து நான் அறிந்தவற்றையே இங்கே பதிவிட்டு இருக்கின்றேன்.

சமயங்களின் வரலாற்றைப் பற்றிய தொடரினைக் காண

சமயங்களின் வரலாறு

திருவள்ளுவர் கூறும் இறைவன் யார்? - 2

சென்ற பதிவினில் வள்ளுவர் இறைவன் என்று கூறுவது சூரியனையே என்று சிலர் கருதுவதையும் அது எவ்வாறு பொருந்தாது என்பதையும் கண்டு இருக்கின்றோம். இப்பொழுது நாம் வள்ளுவர் பௌத்த சமயத்தை அல்லது சமண சமயத்தைச் சார்ந்தவராக இருக்கலாம் என்றக் கருத்தினைத் தான் காண வேண்டி இருக்கின்றது.

திருவள்ளுவர் பௌத்தம் அல்லது சமணச் சமயத்தைச் சார்ந்தவரா?

இப்பொழுது ஒரு கேள்வி, ஒருவர் ஒரு சமயத்தைச் சார்ந்தவர் என்றோ அச்சமயத்தைச் சார்ந்தவர் அல்லர் என்றோ கூற வேண்டும் என்றால் முதலில் என்ன தெரிந்து இருக்க வேண்டும்?

அந்த சமயத்தைப் பற்றித் தெரிந்து இருக்க வேண்டும் தானே. அதனைப் பற்றித் தெரிந்தால் தானே ஒருவர் அச்சமயத்தைச் சார்ந்தவர் என்றோ அல்லது சார்ந்தவர் அல்ல என்றுக் கூற முடியும். இந்நிலையில் வள்ளுவர் சமணம் அல்லது பௌத்தம் ஆகிய சமயங்களைச் சார்ந்தவர் என்றுக் கூற வேண்டும் என்றால் முதலில் அச்சமயங்களைப் பற்றி நாம் அறிந்து இருக்க வேண்டும் தானே. அது தானே சரியானதொன்றாக இருக்கும். எனவே நாம் முதலில் அந்த சமயங்களின் கருத்துக்களை சிறிது மேலோட்டமாகப் பார்த்து விடலாம்...!!!

பௌத்த சமயமாக இருக்கட்டும் அல்லது சமணச் சமயமாக இருக்கட்டும் இரண்டுமே இறை மறுப்புச் சமயங்கள்...அதாவது நாத்திக சமயங்கள்...அவைகளைப் பொறுத்த வரை இறைவன் என்ற ஒருவன் இல்லை. அச்சமயங்களுள் இறைக் கோட்பாடு கிடையாது. அதனால் பிறவிச் சுழற்சிக் கோட்பாடு உண்டு. அதாவது இந்த பிறவியில் நீ செய்த பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப அடுத்த பிறவி நிகழும்...உன்னுடைய ஒவ்வொரு பிறவியிலும் உன்னுடைய பழைய வினை உன்னை தொடர்ந்து வந்துக் கொண்டே இருக்கும்...அதை யாராலும் மாற்ற இயலாது.

இதையே தான் சிலப்பதிகாரத்தில் வரும் 'ஊழ் வினை உறுத்து வந்து ஊட்டும்' என்ற கூற்று வெளிப்படுத்துகிறது. இந்நூலினை இயற்றியவர் சமண சமயத்தைச் சார்ந்த இளங்கோவடிகள் என்பதை நாம் அறிவோம்...அதனால் சமணத் தத்துவமாகிய 'ஒருவனது வினை அவனை எப்பிறவி ஆயினும் அடைந்தேத் தீரும்' என்ற கருத்து அவரது படைப்பில் வெளிப்பட்டு உள்ளது.

பற்றுகளை அறுப்பதன் மூலமே உன்னால் அப்பிறவிச் சுழற்சியில் இருந்து விடுபட முடியும்...இதுவே அச்சமயங்களின் அடிப்படைக் கூற்றாகும்...உலகத் தோற்றம், உயிர், உடல், மாற்றம் என்பன போன்ற பல தத்துவங்கள் அவற்றுள் கூறப்பட்டு உள்ளனவாயினும் நம்முடைய தலைப்பிற்கு அவை தேவை இல்லாத காரணத்தினால் அவற்றை நாம் இங்கே காணப் போவதில்லை. நிற்க.

சுருக்கமாக, சமண பௌத்த சமயங்கள் இறைக் கொள்கை இல்லாத சமயங்கள்...பிறவிச் சுழற்சியில் நம்பிக்கை கொண்டுள்ள சமயங்கள்...ஒருவனது வினை அவனை எப்பிறவியிலும் அடைந்தேத் தீரும் என்ற நம்பிக்கைக் கொண்டுள்ள சமயங்கள்...அவ்வினைகளிடம் இருந்து அவனை யாராலும் காப்பாற்ற முடியாது...பற்றினை அறுத்து துறவு நிலைக்கு செல்வதன் மூலமாகவே அவனால் பிறவித் தளையில் இருந்து விடுப்பட்டு வீடுப் பேற்றினை அடைய முடியும் என்ற கொள்கையினை உடையச் சமயங்கள்.

இந்நிலையில் வள்ளுவர் சமண சமயத்தைச் சார்ந்தவராகவோ அல்லது பௌத்தச் சமயத்தைச் சார்ந்தவராகவோ இருந்து இருந்தால், அச்சமயக் கொள்கைகள் தான் அவருடைய குறள்களில் வெளிப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் வள்ளுவரின் குறள்களின் கருத்துக்கள் பௌத்த சமண கொள்கைகளுக்கு முற்றிலும் மாறாக இருக்கின்றன.

1. வள்ளுவர் இறை நம்பிக்கை உடையவர். இதனை சிறப்பாயிரத்தில் கடவுள் வாழ்த்துப் பகுதியினை வைத்துத் துவங்கி இருப்பதில் இருந்தே நாம் அறிய முடிகின்றது.

2.இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு - 5
 
இக்குறளில் வள்ளுவர் ஒருவனை இருளில் சேர்த்து விடும் இரு வினைகளும் அவன் இறைவனின் அடி சேர்ந்து விட்டால் அவனை ஒன்றும் செய்யாது என்றே கூறுகின்றார். இது பௌத்த சமண சமயங்களின் கொள்கைக்கு முற்றிலும் மாறுபட்ட கூற்றாகும்.

அச்சமயங்களின் கொள்கைகள் படிஒருவனது வினைகளைப் போக்கும் வல்லமை வேறு ஒருவனுக்கு கிடையாது...ஒருவனது வினை அவனைத் ஒவ்வொரு பிறவியாகத் தொடர்ந்துக் கொண்டே இருக்கும்...அதில் இருந்து விடுபட அவன் பற்றுகளை அறுத்து துறவியாக வேண்டும். பற்றுகளை எவ்வாறு ஒரு மனிதன் அறுக்க முடியும் என்பதற்கு சமண சமயமும் புத்த சமயமும் தனித்தனியே வழிகள் வைத்து இருக்கின்றன. அவைகளைப் பின்பற்றினால் ஒழிய ஒருவனால் அவனது வினைகளை விட்டு விலக முடியாது.

ஆனால் வள்ளுவர் அக்கருத்தினை முற்றிலுமாக இங்கே உடைத்து விடுகின்றார். இறைவனின் அடி சேர்ந்தவனுக்கு வினைகளால் யாதொரு ஊரும் நேராது என்றும் அவனை வினைகள் சேராது என்றுமே அவர் கூறிச் சென்று இருக்கின்றார். வள்ளுவரின் கூற்றின் மூலம் இறைவன் மனிதனின் வினையைத் தீர்க்கும் வல்லமைப் பெற்று இருக்கின்றான். மேலும்

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார். - 10
 
என்று இறைவனின் அடி சேர்ந்தவர்களால் மட்டுமே அவர்களது பிறவிக் கடலைக் கடக்க முடியும் சேராதவர்களால் முடியாது என்று வள்ளுவர் கூறுவதன் மூலம் பௌத்த சமண கொள்கையான 'ஒருவன் அவனது முயற்சியால் மட்டுமே பிறவிச் சுழற்சியில் இருந்து விடுபட முடியும்' என்ற கூற்றினை மறுக்கின்றார்.

வள்ளுவரின் கூற்றின் மூலம் ஒருவன் அவனாகவே அவனது வினையில் இருந்தோ அல்லது பிறப்பில் இருந்தோ தப்பி கரை சேர இயலாது...அதற்கு இறைவனின் துணை வேண்டும்.

இக்கருத்துக்கள் பௌத்தம் மற்றும் சமண சமயத்தின் அடிப்படைக் கோட்பாடுகளையே மறுப்பவை. இந்நிலையில் வள்ளுவர் பௌத்தம் அல்லது சமணச் சமயத்தைச் சார்ந்தவர் என்றுக் கூறுவது பொருந்தாது போய் விடுகின்றது. நிற்க

இதுவரை நாம் எவ்வாறு வள்ளுவர் பௌத்த சமயத்தையோ அல்லது சமண சமயத்தையோ சார்ந்தவர் அல்லர் என்பதையும், அவர் கூறிய இறைவன் சூரியன் அல்ல என்பதையும் கண்டு இருக்கின்றோம்.

இப்பொழுது வள்ளுவரின் கொள்கை யாது என்றும்...வள்ளுவர் கூறிய இறைவன் யார் என்றுமே நாம் காண வேண்டி இருக்கின்றது....!!!

காணலாம்...!!!

தொடரும்...!!!

பி.கு:

திருக்குறளினைப் பற்றிய முந்தையப் பதிவுகளைப் படிக்க

ஆய்வாளர்.தெய்வநாயகம் ஐயா என்பவரின் ஆய்வுகளில் இருந்து நான் அறிந்தவற்றையே இங்கே பதிவிட்டு இருக்கின்றேன்.

திருவள்ளுவர் கூறும் இறைவன் யார்? - 1

திருக்குறளினைப் பற்றி நாம் பல பதிவுகளை முன்னரே கண்டு இருக்கின்றோம்...இருந்தும் இன்னும் சில விடயங்களை நாம் கண்டாகத்தான் வேண்டி இருக்கின்றது. காரணம் இன்னும் தெளிவற்ற கருத்துக்கள் பல வெளியில் உலாவிக் கொண்டு தான் இருக்கின்றன.

உதாரணமாக திருவள்ளுவர் கூறும் கடவுள் யார் என்றக் கேள்விக்கும் திருவள்ளுவரின் சமயம் யாது என்ற கேள்விக்கும் பலவிதமான கருத்துக்கள் நம்முடைய சமூகத்தில் இருக்கத்தான் செய்கின்றன. சிலர் திருவள்ளுவரை பௌத்தர் என்றும் சமணர் என்றும் கூறுவர்...இன்னும் சிலர் அவர் கடவுள் என்றுக் கூறியது சூரியனைத் தான் என்றும் கூறுவர்...சிலர் அவர் சைவ வைணவ சமயத்தைச் சார்ந்தவர் என்றும் கூறுவர்.

ஆனால் இவை அனைத்துமே உண்மையாக இருக்க வாய்ப்பில்லை...இவைகளில் யாதேனும் ஒன்று தான் விடையாக இருக்க முடியும்...இல்லையேல் இவைகள் அல்லாத ஏதேனும் வேறு ஒன்று தான் விடையாக இருக்க முடியும். ஒரே நேரத்தில் திருவள்ளுவர் பௌத்த சமணத்தைச் சார்ந்தவராகவோ அதே நேரம் சமண சமயத்தைச் சார்ந்தவராகவும் இருத்தல் இயலாது. சரி இருக்கட்டும்...இப்பொழுது நமது கருத்தினைக் காண்போம்...!!!

திருவள்ளுவர் இறை நம்பிக்கை உடையவர். இதில் மாற்றுக் கருத்தே நமக்கு கிடையாது. அதனால் தான் அவர் அவரது நூலிற்கு எழுதிய சிறப்பாயிரத்தை கடவுள் வாழ்த்துப் பகுதியுடன் ஆரம்பித்து உள்ளார். ஆனால் அந்த கடவுள் வாழ்த்துப் பகுதியில் அவர் கடவுளாக கூறியுள்ளது யாரை என்றக் கேள்வி தான் பலரையும் பல கருத்துக்களைக் கொள்ள வைத்து உள்ளது. இப்பொழுது அக்கேள்விகளுக்கு விடையினைக் காண முயல்வோம்...

திருவள்ளுவர் கூறும் கடவுள் சூரியனா?

பண்டைய தமிழர்களாக இருக்கட்டும்...அல்லது இயற்கை வழிபாட்டினை உடைய பண்டைய நாகரீகங்களாக இருக்கட்டும் சூரிய வழிபாடு என்பது அவர்களது வாழ்வில் இருந்து உள்ளது. சூரியனுக்கு அவர்களது வாழ்வில் முக்கியத்துவம் தரும் தன்மையை நாம் காணுகின்றோம்.

மேலும் நமது வார நாட்களின் முதல் நாளான கிழமையை 'ஞாயிறு' என்றே அழைப்பதாலும் ஆங்கிலத்திலும் '' என்றே சூரியனைச் சிறப்பித்தே வழங்குவதாலும் சூரியனின் சிறப்பை நாம் உணருகின்றோம் என்றும் ...இந்தியிலும் கூட 'ஆதிவார்' என்றே முதல் கிழமை வழங்கப் பெறுவதாலும் வள்ளுவர்,

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு

என்ற தனது குறளின் மூலம் ஆதியான சூரியனையே கடவுளாக வழங்குகின்றார் என்றும் சிலர் கூறுகின்றனர்.

இவர்கள் 'ஆதி' என்ற ஒற்றை வார்த்தையை எடுத்துக் கொண்டே அவர்களது முடிவிற்கு வந்து விட்டது தான் வியப்பாக இருக்கின்றது. நாம் இந்தக் கூற்றினை மறுத்துத் தான் ஆக வேண்டி இருக்கின்றது.

காரணம் வள்ளுவர் அந்த ஒரு வார்த்தையினை மட்டுமே தனது குரளினில் பயன்படுத்தி இருக்கவில்லை (மேலும் ஆதி என்ற தமிழ்ச் சொல்லிற்கு தொடக்கம் என்ற பொருள் தான் பரவலாக அறியப்படும் பொருள்...வள்ளுவர் காலத்தில் தெலுங்கோ இந்தியோ அல்லது சமசுகிருதமோ தோற்றம் பெற்று இருக்கவில்லை). மேலும் ஒரே ஒரு குறளினை மட்டும் வள்ளுவர் கடவுள் வாழ்த்துப் பகுதியில் விட்டுச் செல்லவில்லை...வேறு ஒன்பது குறள்களையும் விட்டுச் சென்று இருக்கின்றார்.

எனவே ஒரே ஒரு குரளினில் வரும் ஒரே ஒரு வார்த்தையையும் அவ்வார்த்தைக்கு பொதுவாக யாரும் கொள்ளாத பொருளையும் வைத்துக் கொண்டு மட்டும் திருவள்ளுவர் கூறும் இறைவன் சூரியன் என்று கூறுவது சரியானதொன்றாக அமையாது. வள்ளுவர் சூரியனைத் தான் கடவுள் என்று கூறி இருந்தார் என்றால் மற்ற குறள்களிலும் அதற்குரிய சான்றுகளோ அல்லது குறிப்புகளோ நிச்சயம் காணப்பட வேண்டும்... அவ்வாறு காணப்படுகின்றதா என்பதனை நாம் இப்பொழுது காண்போம்...!!!

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு - 5

இக்குறளில் வள்ளுவர் ஒருவனை இருளில் சேர்த்து விடும் இரு வினைகளும் அவன் இறைவனின் அடி சேர்ந்து விட்டால் அவனை ஒன்றும் செய்யாது என்றே கூறுகின்றார். இங்கே வள்ளுவர் சூரியனைத் தான் கடவுளாக கூறினார் என்று கூறுபவர்கள், வள்ளுவர் கூறும் இரு வினைகள் யாது, அவை எவ்வாறு ஒரு மனிதனை இருளில் சேர்த்து விடுகின்றன என்பதையும் அவ்வினைகள் எவ்வாறு சூரியனின் அடியினை சேர்ந்தால் விலகி விடுகின்றன என்பதையும் கூறி ஆக வேண்டி இருக்கின்றது.

பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்நீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார். - 6

இங்கே வள்ளுவர் ஐந்தவித்தான் என்று இறைவனை ஐம்புலன்களை அடக்கியவன் என்றுக் கூறுகின்றார்...வள்ளுவர் சூரியனையே இறைவனாக கூறி இருந்தார் என்றால் சூரியன் ஐம்புலன்களை எப்பொழுது பெற்றது என்றும் ஐம்புலன்களை எப்பொழுது/எப்படி அது அடக்கியது என்றும் நமக்கு கூறித் தான் ஆக வேண்டி இருக்கின்றது.

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார். - 10

இங்கே வள்ளுவர் தெளிவாகக் கூறுகின்றார் இறைவனின் அடியினைச் சேராதவர்களால் பிறவிப் பெருங்கடலை கடக்கவே முடியாது என்று. இறைவனாக வள்ளுவர் சூரியனைக் கூறி இருந்தார் என்றுக் கூறுபவர்கள்  பிறவிப் பெருங்கடல் என்பது என்ன என்றும் அதனை மக்கள் சூரியனின் அடியினைச் சேர்வதன் மூலம் மட்டுமே கடக்க முடியும் என்று வள்ளுவர் கூறியிருப்பது எதனைக் குறிக்கும் என்பதனையும் நமக்குக் கூறி ஆகத் தான் வேண்டி இருக்கின்றது.

மேலும் வள்ளுவர் திருக்குறளின் சிறப்பாயிரத்தில் கடவுள் வாழ்த்துப் பகுதியினை மட்டும் வைக்கவில்லை...மாறாக வான் சிறப்பு, நீத்தார் பெருமை மற்றும் அறன் வலியுறுத்தல் என்று வேறு மூன்று அதிகாரங்களையும் வைத்துவிட்டுச் சென்று இருக்கின்றார்.

அவற்றில் வான் சிறப்பு என்பது மழையைக் குறிக்கின்றது என்று பலர் கூறினாலும் அக்கூற்றுகளில் இன்னும் விவாதங்கள் நிகழ்ந்துக் கொண்டு தான் இருக்கின்றன. மழையை சிறப்பித்து சிறப்பாயிரத்தில் வைப்பது என்பது தமிழ் இலக்கிய உலகம் காணாத ஒரு பழக்கம் ஆகும்.

மேலும்,

நீரின்றி அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வானின்று அமையாது ஒழுக்கு.

என்ற குறளில் வள்ளுவர் தெளிவாக நீரையும் 'வான்' என்று அவர் கூறுவதையும் வேறுபடுத்திக் கூறியுள்ளார். (வான் என்று கடவுளின் அருட் சக்தி வழங்கப்படுவதை நினைவிற் கொள்க)

அவ்வாறே நீத்தார் பெருமை என்ற அதிகாரத்தில், கடவுள் வாழ்த்தில் இறைவனை குறிக்க பயன்படுத்திய 'ஐந்தவித்தான்' என்றச் சொல்லை வள்ளுவர் மீண்டும் பயன்படுத்தி உள்ளார்.

ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலும் கரி.

கடவுள் வாழ்த்துப் பகுதி மட்டும் இருக்கும் சிறப்பாயிரத்தில் கடவுள் வாழ்த்துப் பகுதியுடன் வான் சிறப்பு, நீத்தார் பெருமை, அறன் வலியுறுத்தல் என்ற அதிகாரங்களையும் வைத்த வள்ளுவர், 'ஐந்தவித்தான்' என்ற சொல்லின் மூலம் கடவுளையும், நீத்தாரையும் இணைத்து உள்ளார்.

வள்ளுவர் சூரியனையே கடவுளாக கூறி இருந்தார் என்றால் ஏன் சூரியனை ஐந்தவித்தானாக கூற வேண்டும், ஏன் அவனை நீத்தாருடன் இணைக்க வேண்டும்...ஏன் கடவுள் வாழ்த்துப் பகுதியில் வான் சிறப்பு/நீத்தார் பெருமை/அறன் வலியுறுத்தல் போன்ற பகுதிகளைச் சேர்க்க வேண்டும்?

என்பன போன்ற கேள்விகளுக்கு வள்ளுவர் சூரியனைத் தான் இறைவனாக கூறினார் என்றுக் கூறுபவர்கள் விடையினைத் தந்தாகத் தான் வேண்டி இருக்கின்றது.

அவ்வாறு விடையினைத் தராமல் வெறும் யூகங்களின் அடிப்படையில் வள்ளுவர் கூறிய கடவுள் சூரியன் என்று ஒருவர் கூறினார் என்றால் ஒன்று அவர் அறியாமையில் கூறுகின்றார் என்றோ அல்லது கருத்தினை திரிக்க வேண்டும் என்ற உள்நோக்கத்தோடோ கூறுகின்றார் என்றே தான் நாம் கருத முடியும்...!!!

சரி இப்பொழுது வள்ளுவர் சமணம் அல்லது பௌத்த சமயத்தைச் சார்ந்தவரா என்றே காணலாம்...!!!

தொடரும்....!!!

பி.கு:

திருக்குறளினைப் பற்றிய முந்தையப் பதிவுகளைப் படிக்க

புதன், 18 டிசம்பர், 2013

திருக்குறளும் எண் ஏழும்…!!!

திருவள்ளுவர் திருக்குறளில் சிறந்தக் கருத்துக்களை மட்டும் விட்டுச் செல்லவில்லை. சிறந்தக் கருத்துக்களுடன் ஒரு சிறந்தக் கட்டமைப்பையும் திருக்குறளுக்கு விட்டுச் சென்று உள்ளார் அவர். அந்தக் கட்டமைப்புக்கு அவர் தேர்ந்து எடுத்து இருக்கும் எண் 7 ஆகும். அது என்ன கட்டமைப்பு? அது என்ன எண் 7? காண்போம்…

திருக்குறள் வெண்பா வகையைச் சார்ந்த ஒரு நூலாகும். அதுவும் குறிப்பாக குறள் வெண்பாக்களால் ஆன குறள்களைக் கொண்டு விளங்கும் ஒரு நூல். ‘குறள் வெண்பா’ என்பது இரு அடிகளையேக் கொண்ட ஒரு வகை வெண்பாவாகும்.

திருவள்ளுவர் அத்தகைய குறள் வெண்பாக்களைக் கொண்டு, ஒவ்வொரு வெண்பாவிலும் ஏழுச் சீர்கள் வந்து பொருள் தரும் வண்ணம் அமைத்தது தான் திருக்குறள் என்னும் நூலாகும். அதாவது ஒவ்வொருக் குரலிலும் அவர் ஏழுச் சொற்களைப் பயன்படுத்தி உள்ளார். அந்த ஏழுச் சொற்களிலேயே அவர் சொல்ல வந்தக் கருத்துக்களை வெளிப்படுத்தியும் உள்ளார்.

சரி இப்பொழுது திருக்குறளின் அமைப்பினைப் பார்ப்போம்.

திருக்குறள் அறம் பொருள் இன்பம் ஆகிய முப்பால்களைக் கொண்டு விளங்குகின்றது. இப்பொழுது அப்பிரிவுகள் ஒவ்வொன்றையும் பற்றித் தனித்தனியே காண்போம்.

முதலில் அறத்துப்பால்…!!!

இது இல்லறவியல், துறவறவியல் மற்றும் ஊழியல் ஆகியப் பிரிவுகளைக் கொண்டு விளங்குகின்றது.

இல்லறவியலில் மொத்தம் 20 அதிகாரங்கள்.

துறவறவியலில் மொத்தம் 13 அதிகாரங்கள்.

ஊழியலில் மொத்தம் ஒரு அதிகாரம்.

எனவே மொத்தமாக அறத்துப்பாலில் இருக்கும் அதிகாரங்களின் எண்ணிக்கை 34. அதன் கூட்டுத் தொகையாக வருவது 7.

20+13+1 = 34 = 3+4 = 7

மேலும் அதிகாரத்திற்கு 10 பாடல்கள் என அறத்துப்பாலில் மொத்தம் 340 குறள்கள் உள்ளன. அதன் கூட்டுத் தொகையும் 7 தான்.

சரி இப்பொழுது பொருட்பாலினைப் பார்ப்போம். பொருட்பாலில் மொத்தம் 70 அதிகாரங்கள் உள்ளன. இதன் கூட்டுத் தொகையாக வருவதும் 7 தான்.

7+0 = 7

மேலும் அதிகாரத்திற்கு 10 பாடல்கள் என அறத்துப்பாலில் மொத்தம் 700 குறள்கள் உள்ளன. அதன் கூட்டுத் தொகையும் 7 தான்.

இதனைப் போன்றே தான் இன்பத்துப்பாலிலும்…மொத்தம் 25 அதிகாரங்கள். அதிகாரத்துக்கு 10 பாடல்கள் என 250 குறள்கள் உள்ளன. இதன் கூட்டுத் தொகையும் 7 தான்.

2+5 = 7

எனவே…அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்றுப் பால்களில் உள்ள குறள்களின் எண்ணிக்கையும் சரி அவற்றின் அதிகாரங்களின் எண்ணிக்கையும் சரி கூட்டினால் 7 வருவதனைப் போன்றே வள்ளுவர் அமைத்து உள்ளார்.

சரி…இப்பொழுது அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்று பால்களின் அதிகாரங்களையும் கூட்டினால் 129 அதிகாரங்கள் வருகின்றன.

34+70+25 = 129

ஆனால் வள்ளுவர் இந்த அதிகாரங்களுடன் மட்டுமே நிறுத்தி விடவில்லை. பாயிரத்தில் கூடுதலாக 4 அதிகாரங்களையும் தந்துள்ளார்.

எனவே இப்பொழுது மொத்த அதிகாரங்களின் எண்ணிக்கை,

129+4 = 133.

அதன் கூட்டுத் தொகையும் 7 தான். மேலும் அதிகாரத்திற்கு 10 குறள்கள் என 1330 குறள்கள் 133 அதிகாரங்களில் இருக்கின்றன. அவைகளின் கூட்டுத் தொகையும் 7 தான்.

இது தான் வள்ளுவர் திருக்குறளை அமைத்து இருக்கும் கட்டுமான முறையாகும்.

ஒரு குறளுக்கு 7 சீர்கள்.

மொத்தம் 133 அதிகாரங்கள் (கூட்டுத் தொகை 7)

மொத்தம் 1330 குறள்கள் (கூட்டுத் தொகை 7)

அறத்துப்பால் – 34 அதிகாரங்கள் (கூட்டுத் தொகை 7)

பொருட்பால் – 70 அதிகாரங்கள் (கூட்டுத் தொகை 7)

இன்பத்துப்பால் – 25 அதிகாரங்கள் (கூட்டுத் தொகை 7)

இவ்வாறு 7 என்ற எண்ணினை வைத்து வள்ளுவர் தனது நூலினை பூட்டி உள்ளார். இதன் முக்கியத்துவம் என்னவென்றால் திருக்குறள் நூலில் யாராலும் எளிதில் இடைச்செருகல் செய்ய இயலாது என்பதே.

உதாரணத்திற்கு...யாராவது திருக்குறளின் இடையில் குறள்களை சேர்க்க வேண்டும் என்று முயல்கின்றனர் என்று வைத்துக் கொள்வோம்.

1) அவர்களால் பத்திற்கு குறைவான குறள்களை இடைச்செருகலாக சேர்க்க முடியாது. ஏனெனில் அதிகாரத்திற்கு பத்து குறள்கள் என்றே வள்ளுவர் அமைத்து உள்ளார். எனவே இடைச் செருகல் செய்ய முயல்வோர் பத்துப் பத்துக் குறள்களாக தான் சேர்க்க முடியும்.

2) அவ்வாறே அவர்கள் பத்து பத்துக் குறள்களாக சேர்க்க எண்ணினாலும் கூட்டுத் தொகையான எண் 7 ஐயும் கணக்கில் கொள்ள வேண்டும். அதாவது 50 குறள்களை சேர்க்க முயல்கின்றனர் என்றால் மொத்த குறள்களின் எண்ணிக்கை 1380 ஆகி விடும். இதன் கூட்டுத் தொகை எண் ஏழாக வாராது. எனவே இடைச் செருகல்கள் இருக்கின்றன என்பது புலனாகி விடும்.

எனவே கூட்டுத் தொகையை மீறி திருக்குறளில் இடைச்செருகல் செய்ய வேண்டும் என்றால் அவர் குறைந்தது 90 குரல்களை தயார் செய்ய வேண்டும். அப்படி என்றால் தான் 1330+90 = 1420 குறள்கள் = 1+4+2+0 = 7 என்று கூட்டுத் தொகை 7 ஆக வரும்.

3) மேலும் அவர் அப்படியே 90 குறள்களைத் தயார் செய்தாலும், அதனை எந்த அதிகாரங்களுடன் இணைப்பது என்ற கணக்கினையும் காண வேண்டும். ஏனெனில் ஒவ்வொரு அதிகாரமும் ஒவ்வொரு பாலின் கீழ் வகுக்கப்பட்டு உள்ளது. அப்பால்களும் கூட்டுத் தொகை 7 என்ற எண்ணினால் கட்டப்பட்டு உள்ளன.

எனவே இத் தடைகள் அனைத்தையும் கவனித்தப் பின்னரே ஒருவரால் திருக்குரளினுள் இடைச் செருகல் செய்ய இயலும். ஆனால் பொருள் வித்தியாசம் வாராது மாற்றுக் கருத்துக்களை திருக்குறளில் இடைச் செருகலாக இத்தனை தடைகளை மீறி சேர்ப்பது என்பது நடைமுறையில் சாத்தியப்படாத ஒன்று. அவ்வாறு செய்து இருந்தால் எளிதில் புலப்பட்டும் விடும்.

எனவே வள்ளுவரின் சாமர்த்தியம் அவரின் கருத்துக்களில் மட்டும் அல்ல அவர் அவரது நூலினை அமைத்த முறையிலும் உள்ளது என்பதனை நாம் அறிகின்றோம்.

தொடர்புடைய பதிவுகள்:

தொண்டை நாடு சான்றோர் உடைத்து…!!!
திருக்குறள் என்ற உலகப் பொதுமறை - ஐந்தவித்தான்

ஞாயிறு, 27 அக்டோபர், 2013

அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் உள்ளது - 2

உடலும் உயிரும் எவ்வாறு இயங்குகின்றன என்றே நாம் கண்டு வருகின்றோம்...!!!


உலகமும் இயங்கிக் கொண்டே தான் இருக்கின்றது. ஒரு பொழுதும் அது ஓய்வுக் கொண்டு இருப்பதில்லை. அதுவும் சிற்றுடலைப் போன்றே பல விதிகளின் படி செம்மையாக இயங்கிக் கொண்டே இருக்கின்றது. இன்றைய அறிவியல் இதனைப் பற்றித் தான் இயங்கவியல் என்றுக் கூறுகின்றது. உலகம் ஒரு சடப் பொருள் அல்ல...அது இயங்கிக் கொண்டே தான் இருக்கின்றது. அவ்வுடலுக்கென்று பல்வேறு பணிகள் இருக்கின்றன...அவைகள் செம்மையாக நடைப்பெற்றுக் கொண்டு இருக்கின்றன...எப்பொழுது அப்பணிகளில் பிரச்சனைகள் நிகழ்கின்றதோ அப்பொழுது அதற்கேற்ற பின்விளைவுகள் நிகழப் பெறுகின்றன. இருந்தும் உலகமும் தன்னிச்சையாக மீண்டும் அனைத்தையும் இயல்பு நிலைக்கு கொண்டு வர தன்னால் ஆன முயற்சிகளை மேற்கொள்ளத் தான் செய்கின்றது.

எவ்வாறு ஒரு உடல் தன்னைத் தானே காப்பாற்றிக் கொள்ள முயற்சிகள் மேற்கொள்கின்றதோ அதனைப் போன்றே உலகும் அதனை அதன் இயல்பு நிலைக்கு கொண்டு வர முயற்சிகளைச் செய்யும் வல்லமையைப் பெற்று இருக்கின்றது. இது தான் இயற்கை. இவை அனைத்தும் விதிகளின் படியே நிகழ்கின்றது. ஆனால் சிற்றுடலால் தானாக இயங்க முடியாது. உயிர் இருந்தால் தான் இயங்க முடியும். அதைப் போல் தான் பேருடலான உலகின் நிலையும்.

சிற்றுடலான மனித/உயிரினங்களின் உடல் எவ்வாறு பஞ்ச பூதங்களால் உருவாக்கப்பட்டு இருக்கின்றதோ அதனைப் போன்று தான் இந்த பிரபஞ்சமும் உருவாக்கப்பட்டு இருக்கின்றது.

எவ்வாறு உயிர் இன்றி சிற்றுடலால் இயங்க முடியாதோ அவ்வாறே உயிர் இன்றி பேருடலால் இயங்க முடியாது. சிற்றுடலை இயக்க சிற்றுயிர் இருப்பதனைப் போன்று பேருடலை இயக்க பேருயிர் இருக்கின்றது.

எவ்வாறு உயிர் பிரிந்தப் பின் சிற்றுடல் பேருடலுடன் கலக்கின்றதோ அதனைப் போன்றே சிற்றுயிர் பேருயிரிடம் கலக்கின்றது.

இந்த இயக்கம் முழுவதும் நெறிப்பட்ட விதிகளின் வழியே நடைப்பெறுகின்றன. உடலின் விதிகளை அறிவதை நாம் மருத்துவம் என்கின்றோம்...பேருடலின் விதிகளை அறிவதை அறிவியல் என்கின்றோம். இங்கே நாம் உடலையும் உயிரையும் பற்றி மட்டுமே கண்டு இருக்கின்றோம். ஆன்மாவைப் பற்றி நாம் காணவில்லை. பிரச்சனை இல்லை இப்பொழுது காணலாம்...!!!

உலகிற்கு என்று உடல் இருக்கின்றது அதனை இயக்கும் உயிரும் இருக்கின்றது என்று நாம் கண்டோம். அதனைப் போன்றே உயிரினங்களுக்கும் உடல் இருக்கின்றது அதனை இயக்கம் உயிரும் இருக்கின்றது என்றும் கண்டோம் சரி. ஆனால் உயிரினங்களில் மனிதனுக்கு மட்டும் சிறப்பாக ஆன்மா என்று ஒன்று இருக்கின்றது என்று கூறுகின்றோமே அது எப்படி என்றே நாம் இப்பொழுது காண வேண்டி இருக்கின்றது.

இந்த உலகத்தினை நாம் உற்றுக் கவனித்தோம் என்றால் அனைத்து உயிரினங்களையும் கட்டுப்படுத்தி ஆட்சிப் புரியும் வல்லமையை மனிதன் பெற்று இருக்கின்றான் என்பது புலனாகின்றது. அவனது உடல் இயங்கும் முறையினைப் பற்றியும் அவனால் அறிய முடிகின்றது...அவன் வசிக்கும் உலகம் இயங்கும் முறையைப் பற்றியும் அவனால் அறிய முடிகின்றது...அதனை மாற்றும் வல்லமையையும் அவன் பெற்று இருப்பதையும் அவனது செயல்களால் அறிய முடிகின்றது.

மற்ற உயிரினங்கள் ஆண்டாண்டுக் காலமாக எப்படி இருந்தனவோ அதனைப் போன்றே தொடர்ச்சியாக இருக்க மனிதன் தொடர்ந்து மாறிக் கொண்டே இருக்கின்றான்...அனைத்தையும் அறிந்துக் கொண்டு, ஆக்கிக் கொண்டு, அழித்துக் கொண்டு...!!!

இந்த வல்லமையை அவன் மட்டும் பெற்று இருப்பதற்கு காரணம் என்று இறை நம்பிக்கையாளர்கள் கூறுவது அவன் ஆன்மாவை பெற்று இருக்கின்றான். உலகையும் உயிர்களையும் படைத்த இறைவன் மனிதனுள் ஆன்மாவை வைத்து இருப்பதன் மூலம் அவனுக்கு இவ்வுலகத்தின் மேலும் உயிர்களின் மேலும் ஆதிக்கத்தை தந்து இருக்கின்றார் என்பதே அவர்களின் கூற்று.
 
//உங்கள் சரீரமானது நீங்கள் தேவனாலே பெற்றும் உங்களில் தங்கியும் இருக்கிற பரிசுத்த ஆவியினுடைய ஆலயமாயிருக்கிறதென்றும், நீங்கள் உங்களுடையவர்களல்லவென்றும் அறியீர்களா? – I கொரிந்தியர் 6 - இது சவுலின் கூற்று. (கிருத்துவம்)
 
உடம்பினை முன்னம் இழுக்கு என்று இருந்தேன்
உடம்பினுக்கு உள்ளே உறுபொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோயில்கொண்டான் என்று
உடம்பினை யான் இருந்து ஓம்புகின்றேனே. – திருமந்திரம் (சைவம்)

அதனால் இவ்வுலகத்தின் விதிகள் அனைத்தையும் தனது முயற்சியால் அறிந்துக் கொள்ளும் வல்லமை மனிதனுக்கு உண்டு...அவனால் அனைத்தையும் அறிந்துக் கொள்ள முடியும் இறைவனைத் தவிர. இறைவனை அவன் அறிய வேண்டும் என்றால் இறைவனாக அவனுக்கு உணர்த்த வேண்டும்...இறைவன் உணர்த்தாமல் மனிதனால் இறைவனை அறிய முடியாது(இங்கு தான் மாயை என்ற ஒன்று வருகின்றது...இதனைப் பற்றி இன்னொரு பதிவில் காணலாம்) . இறைவன் மனிதனுக்கு ஆன்மாவின் மூலமாகத் தான் உணர்த்த முடியும். எப்பொழுது இறைவன் உணர்த்துகின்றானோ அப்பொழுது மனிதன் இறைவனின் அடி நோக்கிச் செல்வான் என்பதே சமயங்களின் கருத்தாகும்.

அதனைப் போன்றே எவ்வாறு உயிர் பிரிந்தப் பின் சிற்றுடல் பேருடலுடன் கலக்கின்றதோ அதனைப் போன்றே இறைவனின் ஒரு பகுதியான ஆன்மாவும் இறைவனை சென்று அடையும். இது தான் சமயங்களின் கருத்தாகும்.

ஆனால் இக்கருத்துக்கள் வெளி வராத வண்ணம் அனைத்து சமயங்களும் அரசியலால் அடிமைப்படுத்தப் பட்டுக் கிடக்கின்றன. ஆகையால் பிரபஞ்சத்தில் வேறு எங்காவது உயிர்கள் இருக்கா என்று அறிவியல் தேடுமே ஒழிய பிரபஞ்சத்தின் உயிர் என்ன என்று அதனால் தேடல் இயலாது. தன்னுடைய ஐம்புலன்களுக்கு தென்படும் உடலினை ஆய்வு செய்யுமே தவிர அதனால் உயிரைப் பற்றியோ அல்லது ஆன்மாவைப் பற்றியோ அல்லது இறைவனைப் பற்றியோ அறிந்துக் கொள்ள முடியாது.

காரணம் மனிதனால் இறைவன் உணர்த்தினால் மட்டுமே தான் இறைவனை உணர முடியும். அந்நிலையில் இறைவனைப் பற்றி உணர்ந்தவர்கள் கூறியதை மனிதனுக்கு கூறி அவனை நல்வழிப் படுத்த வேண்டிய கடமை சமயங்களையும் இறை நம்பிக்கையாளர்களையும் சேருகின்றது. ஆனால் இன்றைக்கு அவைகள் அனைத்தும் அரசியலுக்கு பலியாகி இருப்பதனால் உண்மை மறைந்து தான் இருக்கின்றது.

அட சரிங்க...இறைவன் உணர்த்தினால் ஆன்மா உணர்ந்து விடும் அப்படின்னு சொல்றீங்க சரி...அப்படினா கடவுள் எல்லா மனுசனையும் உணர வச்சிரலாம்ல...ஏன் எப்படி வைக்காம மனுசன் துன்பப்படுறத பார்த்துகிட்டு இருக்காரு? என்ற கேள்வி இங்கே எழ வாய்ப்பு இருக்கின்றது... இங்கே தான் நாம் மாயையைப் பற்றியும் இன்னும் சில விடயங்களைப் பற்றியும் காண வேண்டி இருக்கின்றது...

காணலாம்...!!!

தொடரும்....

பி.கு:

1) ஆய்வாளர்.தெய்வநாயகம் என்பவரின் ஆய்வுகளில் இருந்து நான் அறிந்தவற்றையே இங்கே பதிவிட்டு இருக்கின்றேன்.

2) விவாதங்களும் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் உள்ளது - 1!!!

உடல் உயிர் மற்றும் ஆன்மாவினைப் பற்றியே இப்பதிவுகளில் நாம் கண்டு கொண்டு வருகின்றோம். உயிர் வேறு ஆன்மா வேறு என்றும், ஆன்மா மனிதர்களுக்கு மட்டுமே உரியது என்றும் நாம் கூறி இருக்கின்றோம். அதனை முன்னிட்டு நண்பர்கள் சில கேள்விகளையும் மாற்றுக் கருத்துகளையும் முன் வைத்து இருக்கின்றனர். இப்பொழுது நாம் அவற்றிற்குத் தான் விடையினைக் காண வேண்டி இருக்கின்றது.

அதற்கு முன் முந்தையப் பதிவுகளைப் படித்திராவிடில் படித்து விட்டு தொடர்வது நலமாக இருக்கும். முந்தையப் பதிவுகள்.

 
சரி...இப்பொழுது நண்பர் ஒருவரின் கருத்தினைத் தான் நாம் காண வேண்டி இருக்கின்றது.

//ஆதியில் தோன்றிய அனுவான பரம அனு முதல் பஞ்சபூதங்கள் வரை, அதன் கூட்டு உயிர் வரை அனைத்துமே பரிணாமத்தின் விளைவு தான். ஓரறிவு உயிரி, தன் சுயத் தேவையால் விளைந்திட்ட எண்ணத்தால், வேண்டுதலால் இரறிவாகி அதன் தொடர்ச்சியே 6 அறிவு உயிரியாக பரிணாமம் கொண்டுள்ளது. உயிர் தான் ஆன்மா. அதை எப்படி மறுக்க முடியும்?உயிரின் மீது போர்வைப் போல் போர்த்தி இருப்பது தான் பரிணாமத்தினால் ஏற்பட்ட இன்ப மயக்கம்/ துன்பப் பதிவுகள் தான் உயிரை சுற்றி மாயையாக இருந்து செயல்படுத்துகிறது.//

இது நண்பர் ஒருவரின் கருத்து. இவரின் கூற்றின் படி பரிணாமத்தின் விளைவின் படி தான் உயிர் தோன்றி பல்வேறு அறிவு நிலைகளை எட்டி இருக்கின்றது. அதாவது இன்றைக்கு ஐரோப்பிய அறிவியல் கூறும் கருத்தினை இவர் கூறி இருக்கின்றார். ஆனால் கூடுதலாக ஆன்மா, மாயை போன்ற கூற்றுகளையும் வேறு கூறி இருக்கின்றார். இங்கு தான் குழப்பமே எழுகின்றது.

அதாவது பரிணாம வளர்ச்சி என்பது இறைவன் உலகைப் படைத்தான் என்ற கருத்திற்கு முற்றிலுமாக மாற்றுக் கருத்தாகும். அது ஒரு நாத்திகக் கொள்கை. இன்னும் நிரூபிக்கப்படாத ஒரு கூற்று. அக்கூற்றினைத் தான் இன்றைக்கு ஐரோப்பிய அறிவியல் சுமந்துக் கொண்டு இருக்கின்றது.

ஆனால் ஆன்மா, மாயை என்பன எல்லாம் இறைவன் தொடர்புடைய விடயங்கள்...இவற்றை பரிணாம வளர்ச்சிக் கொள்கையினை உடையவர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அவர்களின் பார்வையில் ஆன்மா மாயை போன்றவைகள் எல்லாம் முட்டாள்தனம். வெறும் கற்பனை. அவ்வளவே.

அதாவது இறைவனை நம்புவர்கள் பரிணாமக் கொள்கையை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அவர்களைப் பொறுத்த வரை உலகமும் உயிர்களும் இறைவன் படைத்தது. இறைவனை நம்பாதவர்கள் ஆன்மாவையும் மாயை என்பதனையும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இந்நிலையில் பரிணாம வளர்ச்சியையும் ஆன்மா மாயை போன்ற விடயங்களையும் இணைத்து நண்பர் தமது கருத்தினை வெளி இட்டு இருப்பது தான் இங்கே கவனிக்கத்தக்கது.

இக்கூற்றினை இறைவனை நம்பும் சமயங்களும் ஏற்றுக் கொள்ளாது...அறிவியலும் ஏற்றுக் கொள்ளாது. இருந்தும் இத்தகைய கருத்துக்கள் சமூகத்தில் பரவலாக இருப்பதற்கு காரணம் ஒரு அரசியல்...அதனைப் பற்றி நாம் பின்னர் காண்போம். இப்பொழுது நாம் காண்பதற்கு முக்கியமான விடயங்கள் சில இருக்கின்றன.

"அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் உள்ளது" என்ற வாக்கியத்தையே நாம் இப்பொழுது காண வேண்டி இருக்கின்றது. இவ்வாக்கியத்தின் பொருள் உலகத்தில் ஏது இருக்கின்றதோ அது நமது உடலிலும் இருக்கின்றது என்பதே.

அண்டம் - உலகம்
பிண்டம் - உடல்
 
ஏன் அவ்வாறுக் கூறுகின்றார்கள்...அது சரியா? என்றே நாம் இப்பொழுது காண வேண்டி இருக்கின்றது. அதற்கு நாம் பஞ்ச பூதங்களைப் பற்றிக் காண வேண்டி இருக்கின்றது.

இறை நம்பிக்கையாளர்களின் கூற்றின் படி இறைவன் உலகை பஞ்ச பூதங்களைக் கொண்டு உருவாக்கினான். அறிவியலாளர்களின் கூற்றின் படி உலகம் பஞ்ச பூதங்களால் உருவாகி இருக்கின்றது.

உருவாக்கப்பட்டதா அல்லது உருவானதா என்ற விடயத்தில் இறை நம்பிக்கையாளர்களுக்கும் அறிவியலாளர்களுக்கும் கருத்து வேறுபாடுகள் இருப்பீனும் பஞ்ச பூதங்களைக் கொண்டு உலகம் இருக்கின்றது என்பதில் அவர்களுக்கு மாற்றுக் கருத்துக்கள் இல்லை. அப்பஞ்ச பூதங்கள் எனப்படுபவை,

நீர்
நெருப்பு
காற்று
நிலம்
ஆகாயம்

ஆகிய ஐந்தாகும். இவைகளைக் கொண்டு தான் இந்த உலகம் இயங்கிக் கொண்டு இருக்கின்றது என்பதனை யாரும் அறிவர். எனவே அண்டத்தில் உள்ளன யாவை என்றுக் கண்டால் இவைகள் ஐந்தும் விடையாய் வரும். இவைகளைக் கொண்டே அண்டம் இருக்கின்றது...இவைகளன்றி ஒன்றும் இல்லை. சரி இருக்கட்டும்.

இப்பொழுது அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் உள்ளது என்கின்றார்களே அது சரியா என்பதனை நாம் காண வேண்டி இருக்கின்றது.

நெருப்பு - நம்முடைய உடல் ஒரு குறிப்பிட்ட அளவு சூட்டுடனேயே இருக்க வேண்டி இருக்கின்றது. வெப்பம் கூடினாலோ குறைந்தாலோ (காய்ச்சல் அல்லது நோய்கள்) உடலுக்கு தீங்கு வந்து விடுகின்றது. வெப்பமே இல்லாத உடல் சடலமாக மாறி விடுகின்றது. எனவே உடல் இயங்க வெப்பம் தேவைப் படுகின்றது. அதாவது நெருப்பு. அது உடலில் இருக்கின்றது.

நீர் - திரவங்கள் நமது உடலில் இருக்கின்றன. அவைகள் இல்லாது போனால் உடலின் இயக்கம் நின்று விடும்.உடல் பழுதடைந்து அழிந்து விடும். எனவே நீரும் உடலின் இயக்கத்திற்கு இன்றியமையாது இருக்கின்றது.

காற்று - உடல் இயங்க காற்று மிக முக்கியமானதொன்றாகும். காற்று இல்லையெனில் சுவாசிக்க முடியாது. சுவாசிக்காது உடலால் இயங்க முடியாது.

ஆகாயம் - வெற்றிடம். உடலினுள் வெற்றிடங்கள் இருக்கின்றன...சுவாசப் பைகள் போன்றவைகள் உதாரணத்திற்கு. வெற்றிடங்களும் உடலின் இயக்கத்திற்கும் அமைப்பிற்கும் இன்றியமையாது இருக்கின்றன.

நிலம் - உலகம் நிலத்தால் அமைந்து இருப்பதனைப் போல மனித உடலும் நிலத்தைப் போலவே அமைந்து இருக்கின்றது. உயிர் இருக்கும் வரை இயங்கிக் கொண்டு இருக்கும் உடல், உயிர் பிரிந்தப் பின்னர் சில நாட்களுக்குள் மண்ணோடு மண்ணாகி விடுகின்றது. அதாவது நிலம் நிலத்தைச் சேர்ந்து விடுகின்றது. நிற்க

இதன் மூலம் உலகம் எதனைக் கொண்டு வடிவமைக்கப்பட்டு இருக்கின்றதோ அவற்றை வைத்தே தான் உடலும் வடிவமைக்கப்பட்டு இருக்கின்றது என்பது தெரிகின்றது.

அதாவது,
 
உலகம் - பேருடல் - பெரிய உடல்
மனித உடல் - சிற்றுடல் - சிறிய உடல்
 
என்றே நாம் கொள்ளலாம். (இங்கே நாம் உடலைப் பற்றி மட்டுமே கண்டுக் கொண்டு இருக்கின்றோம்...உயிர் மற்றும் ஆன்மாவைப் பற்றிக் காணவில்லை என்பதை நினைவிற் கொள்ளவும்)

உயிர் இருக்கும் வரை இயங்கிக் கொண்டு இருக்கும் மனித உடல் உயிர் எப்பொழுது பிரிகின்றதோ அப்பொழுது பேருடலான உலகத்துடன் கலந்து விடுகின்றது. இதனை அனைவரும் அறிவர். நிற்க

இங்கே தான் நாம் உயிரைப் பற்றிப் பார்க்க வேண்டி இருக்கின்றது. நாம் முன்னரே கண்டு இருக்கின்றோம் உடல் ஒரு மாபெரும் மகத்தான இயந்திரம் என்று. பல்வேறு செயல்களை செம்மையாக செய்யக் கூடிய கருவிகள் பல இருக்கின்றன உடலினுள். ஆனால் உயிர் இல்லை என்றால் அவைகள் இயங்குமா என்றால் இயங்காது என்பதே பதிலாக வரும்.

எனவே ஒரு உடல் இயங்க உயிர் இன்றியமையாதத் தேவையாக இருக்கின்றது. உயிர் இருந்தால் தான் உடல் இயங்கி உயிரினம் ஆகின்றது. இந்நிலையில் தான் நாம் உடலின் இயக்கத்தைப் பற்றிப் பார்க்க வேண்டி இருக்கின்றது.
 
நமது உடல் இயங்கிக் கொண்டே இருக்கின்றதா இல்லை எப்பொழுதாவது இயங்காது இருக்கின்றதா என்ற கேள்வி எழுந்தால் உயிர் உள்ள வரை நமது உடல் இயங்கிக் கொண்டே தான் இருக்கின்றது என்றே பதில் வரும். உண்மையும் அது தான். நாம் அசையாது ஒரு இடத்தில் நின்றாலும் நமது உடல் இயங்கிக் கொண்டு தான் இருக்கின்றது. நம்முடைய அனுமதியோ கட்டளையோ உடலிற்கு தேவை இல்லை. நாம் உறங்கும் பொழுதும் உடல் இயங்கிக் கொண்டே தான் இருக்கின்றது.

சரி இயங்குகின்றது...ஆனால் எவ்வாறு இயங்குகின்றது..தாறுமாறாக வரையறை அற்று இயங்குகின்றதா அல்லது ஒரு நெறிக்கு உட்பட்டு இயங்குகின்றதா என்றால் உடல் அதற்கென்று இருக்கும் நெறிப்படியே இயங்குகின்றது என்பது புலனாகும். உடலின் எந்தஒரு செயலும் காரணமின்றி அமைவதில்லை என்பதை நாம் கூர்ந்து பார்த்தால் அறிவோம். அதன் இயக்கத்திற்கு என்று ஒரு விதி இருக்கின்றது. அதன் படியே உடல் இயங்குகின்றது.

அவ்விதிக்கு மாறாக ஒரு விடயம் நேர்ந்தால் உடல் பாதிப்பிற்கு உள்ளாகின்றது. உதாரணத்திற்கு உடலிற்கு தகாத ஒரு பொருளை நாம் உண்டோம் என்றால் உடல் முதலில் அப்பொருளை வெளியேற்றப் பார்கின்றது அவ்வாறு இயலாத நிலையில் நோய் வாய்ப்படுகின்றது. நோய் வாய்ப்பட்ட நிலையிலும் தன்னைத் தானே சரி செய்துக் கொள்ள தன்னிடம் இருக்கும் கருவிகளை (வெள்ளை அணுக்கள்...இதர இதர) பயன்படுத்த முயற்சிச் செய்துக் கொண்டு தான் இருக்கின்றது. உயிர் அதனை இயக்கிக் கொண்டு இருக்கின்றது. இச்செயல்கள் அனைத்தும் தன்னிச்சையாக நிகழப் பெறுவன. ஆனால் இச்செயல்களை நம்மால் ஓரளவு கட்டுப்படுத்தவும் முடியும்.

எவ்வாறு தகாத பொருளை உட்கொண்டதன் மூலம் உடலின் செயலைப் பாதித்தோமோ அதைப் போன்றே அதனை சரி செய்யவும் நம்மால் சில செயல்களை செய்ய முடியும். அதற்கு உடல் எவ்வாறு இயங்குகின்றது என்ற அவ்விதியினை நாம் அறிந்து இருக்க வேண்டும். அவ்வாறு உடல் எவ்வாறு இயங்குகின்றது என்ற விதிகளை அறிவதன் பெயர் தான் மருத்துவம். நிற்க.

இப்பொழுது நாம் உடல் என்பது ஒரு அற்புத இயந்திரம் என்றும், உயிர் அதனை இயக்குகின்றது என்றும், அது விதிகளின் படி இயங்குகின்றது என்றும், அவ்விதிகளை நாம் அறிந்துக் கொள்ள முடியும் என்றும், அதன் இயக்கத்தை சீராக்கவும் அல்லது பழுது படுத்தவும் நம்மால் முடியும் என்றும் நாம் கண்டு இருக்கின்றோம்.

உயிர் இருக்கும் வரை சிற்றுடல் இயங்கிக் கொண்டே தான் இருக்கின்றது. இங்கே தான் நாம் பேருடல் என்று வழங்கப்படும் உலகினைப் பற்றி காண வேண்டி இருக்கின்றது.
 
காணலாம்...!!!

தொடரும்...

பி.கு:

1) ஆய்வாளர்.தெய்வநாயகம் என்பவரின் ஆய்வுகளில் இருந்து நான் அறிந்தவற்றையே இங்கே பதிவிட்டு இருக்கின்றேன்.

2) விவாதங்களும் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

உயிர் வேறு...ஆன்மா வேறு...!!!

நீண்ட இடைவெளிக்கு வருந்துகிறேன். வேறு சில வேலைப் பணிகளின் காரணமாக எழுத முடியாத ஒரு சூழல். சரி இப்பொழுது நாம் மீண்டும் தலைப்பிற்கு வர வேண்டி இருக்கின்றது.

உயிரும் ஆன்மாவும் ஒன்றல்ல...இரண்டும் வேறானவை என்றே நமது முந்தையப் பதிவுகளில் கண்டு இருந்தோம். ஆனால் அக்கூற்றினில் தான் நண்பர்கள் பல சந்தேகங்களையும் மாற்றுக் கருத்துக்களையும் கூறி இருந்தனர். இப்பொழுது அக்கருத்துக்களையும் அவற்றிற்குரிய விடைகளையும் தான் நாம் காண வேண்டி இருக்கின்றது.

அதற்கு முன்னர் முந்தையப் பதிவுகளை இதற்கு முன்னர் படித்து இருக்கவில்லை என்றால் படித்து விடுவது நலமாக இருக்கும்.


அப்பதிவுகளின் வாயிலாக உயிரினங்கள் அனைத்திற்கும் உயிர் இருக்கின்றது என்றும், அவற்றை புலன்களின் அடிப்படையில் ஓரறிவு முதல் ஆறறிவு வரை தமிழ் அறிவியல் பிரித்து வைத்து இருக்கின்றது என்றும், அதில் ஆறாவது அறிவு என்பது என்ன- அதற்கு உரிய புலன் என்ன என்பதில் குழப்பங்கள் பொதுவாக நிலவுகின்றன என்றும் நாம் கண்டு இருக்கின்றோம்.

சரி...இப்பொழுது ஒரு கேள்வி...!!!

உயிர் இருப்பதை யாராலும் மறுக்க முடியுமா?

இறை நம்பிக்கையாளராக இருந்தாலும் சரி இறை நம்பிக்கை இல்லாதவராக இருந்தாலும் சரி உயிர் இருப்பதை அவர்களால் மறுக்க முடியாது. உயிர் உள்ள உயிரினத்திற்கும் உயிர் அற்ற சடலத்திற்கும் உள்ள வேறுபாட்டினை அவர்கள் நிச்சயம் அறிவர். உயிர் இருக்கின்றது என்பதனை அறிவதற்கு இறைவனை அறிய வேண்டும் என்ற கோட்பாடுகள் எல்லாம் கிடையாது. உயிரை அனைவரும் அறிவர்.

அதனால் தான் இறை மறுப்புச் சமயமான சமணமும், இறைவனை அறியாத சமயமான பௌத்தமும் (நாத்திக சமயங்கள்), இறைவனைப் பற்றி எதுவும் அறியாத பொழுதும் உயிரினை அடிப்படையாகக் கொண்டு அனைத்து உயிரினங்களும் ஒன்றே என்று தங்களது கோட்பாடுகளைக் கொண்டு விளங்குகின்றன. அச்சமயங்கள் இறைவனை ஏற்றுக் கொள்ளாது...ஆனால் உயிரினை ஏற்றுக் கொள்ளும்.

அதனால் தான் அனைத்து உயிர்களும் ஒன்றே என்ற நிலையில் மனிதன் விலங்காகப் பிறக்கலாம், விலங்கும் மனிதனாகப் பிறக்கலாம் என்ற பிறவிச் சுழற்சிக் கொள்கையை அவைகள் கொண்டு விளங்குகின்றன. காரணம் விலங்குகளுக்கும் உயிர் இருக்கின்றது...மனிதனுக்கும் உயிர் இருக்கின்றது. எனவே மனிதனும் விலங்கும் அடிப்படையில் ஒன்றே என்று அவைகள் கூறுகின்றன.

அச்சமயங்கள் இறைவனை ஏற்றுக் கொள்வதில்லை...அவ்வாறே ஆறாவது அறிவையும் தான். இதைத் தான் நாம் சமண சமயத்தினைச் சார்ந்த பவணந்தி முனிவரின் கூற்றுகளில் முன்னரே கண்டு இருக்கின்றோம்.

"வானவர் மக்கள் நரகர் விலங்கு புள்
ஆதிசெவி அறிவோ டையறி வுயிரே" - நன்னூல் 449

உயிர் இருப்பதை ஏற்றுக் கொள்ளும் அவர் ஆறாவது அறிவை மறுக்கின்றார். மனிதனும் விலங்கும் ஒன்றே என்றும் கூறுகின்றார். தவறில்லை...அவரது சமயத்தின் கோட்பாடே அக்கருத்து தான். ஆனால் மனிதனும் விலங்கும் ஒன்றே என்றுக் கூறும் அவரே மனிதன் விலங்கினைக் காட்டிலும் சிறந்தவன் என்று தமிழின் திணை இலக்கணத்தை வகுக்கும் பொழுது கூறுகின்றார்.

"மக்கள் தேவர் நரகர் உயர்திணை
மற்றுயிர் உள்ளவும் இல்லவும் அஃறிணை" நன்னூல் 261

ஏன் இந்த வேறுபாடு என்பதை நாம் முந்தையப் பதிவுகளில் கண்டு இருக்கின்றோம். நிற்க

எனவே உயிரினை அறிவதற்கு இறைவனை அறிய வேண்டும், இறைவன் வழி காட்ட வேண்டும் என்றெல்லாம் கிடையாது. உயிர் இருப்பதை எவர் வேண்டும் என்றாலும் அறிந்துக் கொள்ள முடியும். உயிரை மறுக்க முடியாது.

இங்கே தான் நாம் ஆன்மாவைப் பற்றிப் பார்க்க வேண்டி இருக்கின்றது. உயிரை ஏற்றுக் கொள்வதனைப் போல் ஆன்மாவை அனைவரும் ஏற்றுக் கொள்வதில்லை. இறை நம்பிக்கையாளர்கள் மட்டுமே ஆன்மாவை நம்புகின்றனர்...ஏற்றுக் கொள்கின்றனர். இறை நம்பிக்கையை அடிப்படையாக வைத்து இருக்கும் சமயங்கள் மட்டுமே ஆன்மாவினைப் பற்றிக் கூறுகின்றன.

அதாவது உயிரினை அனைவரும் ஏற்றுக் கொள்வதனைப் போல் ஆன்மாவினை அனைவரும் ஏற்றுக் கொள்வது இல்லை. இதைத் தான் மெய்கண்டார்,

"உளது இலது என்றலின் எனது உடல் என்றலின்
....
மாயா இயந்திர தனுவினுள் ஆன்மா" - சிவஞானபோதம் 3

என்று கூறி இருக்கின்றார்.

"உளது இலது என்றலின்" - சிலர் ஆன்மா இருக்கின்றது என்கின்றனர்....சிலர் இல்லை என்கின்றனர் என்பதே இதன் பொருள் ஆகும் (விரிவான விளக்கம்)

அதாவது ஆன்மாவினை மறுக்கும் கருத்துக்களும் இருக்கின்றன என்பதனை நாம் மேலே உள்ள சூத்திரத்தின் வாயிலாக அறிந்துக் கொள்கின்றோம். அதாவது உயிரினை ஏற்றுக் கொள்ளும் அனைவரும் ஆன்மாவினை ஏற்றுக் கொள்வது இல்லை.

மேலும் தனது நூலான சிவஞானபோதத்தில்,

"மாயா இயந்திர தனுவினுள் ஆன்மா" - சிவஞானபோதம் 3
"சந்தித்தது ஆன்மா சகசமலத் துணராது" - சிவஞானபோதம் 4
"இருதிறன் அறிவுளது இரண்டலா வான்மா" - சிவஞானபோதம் 7

என்று ஆன்மாவை 'ஆன்மா' என்ற சொல்லின் மூலம் குறித்து இருக்கும் மெய்கண்டார்,

"விளம்பிய உள்ளத்து மெய் வாய் கண் மூக்கு" - சிவஞானபோதம் 5
"காணும் கண்ணுக்குக் காட்டும் உளம் போல்
காண உள்ளத்தைக் கண்டு காட்டலின்" - சிவஞானபோதம் 11

என்ற சூத்திரங்களில் ஆன்மாவைக் குறிக்க 'உளம்', 'உள்ளம்' என்றச் சொற்களை பயன்படுத்தி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

அதாவது ஆன்மா, உளம், உள்ளம் என்பன வெவ்வேறு பொருளைக் குறிக்கும் சொற்கள் அல்ல...ஒரே பொருளைக் குறிக்கும் வேறு சொற்கள்.

ஆன்மா = உள்ளம் என்ற பொருளிலேயே மெய்கண்டார் தனது சிவஞானபோத நூலினை அமைத்து உள்ளார்.

உயிரும் ஆன்மாவும் ஒன்றே என்ற கருத்தினைக் கொண்டவர்கள் கூட உயிரும் உள்ளமும் வேறு என்பதனை அறிந்து இருப்பர். இந்நிலையில் ஆன்மாவை குறிப்பிட உள்ளம் என்ற சொல்லினை மெய்கண்டார் பயன்படுத்தி இருப்பது உயிரும் ஆன்மாவும் வேறு என்பதை பறைச்சாட்டுகின்றது.

மேலும் நாம் முன்னரே கண்டு இருக்கின்றோம்,

"உளது இலது என்றலின் எனது உடல் என்றலின்
ஐம்புலன் ஒடுக்கம் அறிதலின்..." - சிவஞானபோதம் 3
"ஐம்புல வேடரின் அயர்ந்தனை வளர்ந்து எனத்" - சிவஞானபோதம் 8

என்ற சூத்திரங்களின் வாயிலாக ஆன்மாவானது ஐம்புலன்களோடு உடலினுள் இருக்கின்றது என்று.

அதாவது ஆன்மா உடலினுள் இருக்கின்றது என்றுக் கூறும் மெய்கண்டார் அது ஐம்புலன்களைக் கட்டுப்படுத்திக் கொண்டு அரசாண்டுக் கொண்டு இருக்கின்றது என்றே சேர்த்துக் கூறுகின்றார். இதன் வாயிலாக ஐம்புலன்கள் இல்லாத உயிரினங்களுக்கும் ஆன்மாவிற்கும் தொடர்பு இல்லை என்றே நாம் அறியப் பெறுகின்றோம். அதாவது அவ்வுயிரினங்களுக்கு உயிர் இருந்தும் அவற்றிற்கும் ஆன்மாவிற்கும் துளியும் தொடர்பில்லை.

இப்பொழுது எஞ்சி இருப்பது ஐம்புலன்களைக் கொண்ட விலங்குகளும் மனிதர்களும் தான். ஆனால் விலங்குகளுக்கு ஐம்புலன்களைத் தவிர்த்து வேறு சிறப்பு இருப்பதாக கூறப்படவில்லை. மேலும் அவைகளும் மற்ற உயிரினங்களைப் போல அஃறிணை யாகத் தான் தமிழ் இலக்கணத்தால் பிரிக்கப்பட்டு உள்ளன.

மேலும்,

"ஐம்புல வேடரின் அயர்ந்தனை வளர்ந்து எனத்
தம்முதல் குருவுமாய்த் தவத்தினில் உணர்த்தவிட்டு
அன்னியம் இன்மையின் அரன்கழல் செலுமே." - சிவஞானபோதம் 8

என்ற சூத்திரத்தின் வாயிலாக ஐம்புலன்களின் துணையுடன் செயல்பட்டுக் கொண்டு இருந்த ஆன்மாவிற்கு இறைவன் உணர்த்த, தன்னைப் பற்றி இருந்த மாயையை விட்டு இறைவனின் அடி நாடி ஆன்மா செல்லும் என்று மெய்கண்டார் கூறி இருக்கின்றார்.

நாம் வரலாற்றில் கண்டு இருக்கின்றோம், இறைவனை மறுத்த சிலர் தீவிர இறை அடியவர்களாக மாறி இறை சேவை செய்து இருப்பதை...நாயன்மார்கள், ஆழ்வார்கள், அபோசுதளர்கள், சித்தர்கள் ஆகியோர் இறைவனை எண்ணியே இறை சேவைகள் செய்து இருக்கின்றனர்.

"குதிரைகள் வாங்கச் சென்ற மாணிக்கவாசகர்இறைவனால் ஆட்கொள்ளப்பட்டு இறை சேவையை மேற்கொள்ள ஆரம்பித்தார். இயேசுவின் சீடர்களைத் தேடிக் கண்டு பிடித்து கொலை புரியும் பணியினை மேற்க் கொண்டு இருந்த பவுல், தூய பவுலாய் இறை பணியை அவரே மேற்கொண்டு இறுதியில் உயிரைத் துறந்தார்."

இத்தகைய வரலாறு மனிதர்களுக்கு மட்டுமே இருக்கின்றது. ஆயிரமாயிரம் காலங்கள் கடந்தாலும் விலங்குகளின் பழக்க வழக்கங்கள் மாறாது இருக்கின்றன. ஆனால் மனிதன் மாறிக் கொண்டே இருக்கின்றான். மேலும் இவ்வுலகம் முழுவதையும் அவன் ஆட்சி செய்யும் வல்லமையும் பெற்று இருக்கின்றான். அவனே இறைவனை மறுக்கவும் செய்கின்றான்...இறைவனுக்காக உயிரையும் கொடுக்கின்றான்.

இதையேத் தான் திருமந்திரத்தில் திருமூலரும்

"பெறுதற்கு அரிய பிறவியைப் பெற்றும்
பெறுதற்கு அரிய பிரான் அடி பேணார்
பெறுதற்கு அரிய பிராணிகள் எல்லாம்
பெறுதற்கு அரிய பேறு இழந்தாரே." - திருமந்திரம் 2090


என்று கூறுகின்றார். அதாவது இறைவனின் அடியினை அடையக் கூடிய மனிதராய் பிறந்து இருந்தும் இறைவனின் அடியினை நாடாது விலங்குகளைப் போல் திரிந்து இறைவனின் அருளினை இழக்கின்றனரே என்றே திருமூலர் மனிதர்களைப் பற்றிக் கூறுகின்றார்.

எனவே இந்நிலையில் இறைவன் உணர்த்தி ஆன்மா அவன் அடி நாடி சென்றது என்பதற்கு நாம் மனிதர்களிடம் இருந்து மட்டுமே சான்றுகளைப் பார்க்க முடியும். விலங்குகள் விலங்குகளாகவே இருக்கின்றன. மனிதனால் மட்டுமே இறைவனை உணர முடியும். அதுவும் இறைவன் உணர்த்தினால் மட்டுமே உணர முடியும். அவ்வாறு இறைவன் உணர்த்தி அவனை உணர உதவும் கருவியாய் இருப்பதே ஆன்மா. அதுவே தான் ஆறாவது அறிவிற்குரிய உறுப்பு. அது மனிதர்களுக்கு மட்டுமே இருக்கின்றது.

உயிர் அனைத்து உயிரினங்களுக்கும் இருக்கின்றது. ஆனால் ஆன்மா என்பது மனிதனுக்கு மட்டுமே சிறப்பாக இருக்கின்றது. எவ்வாறு உயிர் உடலில் எங்கு இருக்கின்றது என்று சுட்டிக் காட்ட முடியாதோ அவ்வாறே ஆன்மாவையும் உடலில் எங்கு இருக்கின்றது என்று சுட்டிக் காட்ட முடியாது.

எனவே உயிர் வேறு ஆன்மா வேறு என்றே நாம் அறிய முடிகின்றது தானே...!!!

சரி இப்பொழுது மேலும் சில நண்பர்கள் சில விடயங்களைக் குறித்து கேள்விகள் எழுப்பி இருந்தனர்...அவைகளைக் காண முயற்சிக்கலாம்...!!!

தொடரும்...!!!

பி.கு:

1) விவாதங்களும் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

2) சிவஞானபோதத்தின் கருத்துக்களை அறிந்துக் கொள்ள,

சனி, 10 ஆகஸ்ட், 2013

உடலும் உயிரும் ஆன்மாவும் அறிவியலும் - இறுதிப் பகுதி!!!

முந்தையப் பதிவு

சென்ற பதிவினில் ஆறாவது அறிவிற்கு காரணமாக ஆன்மா விளங்கலாம் என்றே கண்டு இருந்தோம். இப்பொழுது அக்கூற்று சரியான ஒன்றா என்றே நாம் காண வேண்டி இருக்கின்றது. அதற்கு ஆன்மா என்றால் என்ன என்றே நாம் காண வேண்டி இருக்கின்றது. அதற்கு நமக்கு துணையாய் மெய்கண்டாரின் சிவஞானபோதம் என்ற நூல் நிற்கின்றது. அதன் வழியே கண்டோம் என்றால்,

1) ஆன்மாவானது உடலினுள் இருக்கின்றது
  • "மாயா இயந்திர தனுவினுள் ஆன்மா"  - சிவஞானபோதம் 3
2) ஐம்புலன்களை கட்டுப்படுத்தி வைத்துக் கொண்டு இருக்கின்றது
  • "ஐம்புலன் ஒடுக்கம் அறிதலின்" - சிவஞானபோதம் 3
  • "ஐம்புல வேடரின் அயர்ந்தனை வளர்ந்து எனத்" - சிவஞானபோதம் 8
3) தன்னை அறியாத நிலையில் அது இருக்கின்றது
  •  "....ஆன்மா சகசமலத் துணராது" - சிவஞானபோதம் 4
4) இறைவன் உணர்த்தினால் இறைவனை உணரும் தன்மைக் கொண்டு இருக்கின்றது
  • "....உணர்த்த உணர்தலின்" -சிவஞானபோதம் 3
என்றே நாம் ஆன்மாவைப் பற்றி அறிய முடிகின்றது. இப்பொழுது இதை நாம் சிறிது விரிவாகப் பார்க்கலாம்.

ஆன்மா என்பது ஐம்புலன்களை கட்டுப்படுத்தும் வல்லமைப் பெற்றது என்றே நாம் அறியப்பெறுகின்றோம். ஐம்புலன்களைக் கட்டுப் படுத்த வேண்டும் என்றால் முதலில் ஐம்புலன்கள் இருக்க வேண்டும். சரி தானே. அப்படிப்பார்த்தால்,

ஓரறிவு முதல் நான்கறிவு படைத்த உயிரினங்கள் அனைத்தும் அடிப்பட்டு போய்விடுகின்றன. அவற்றிற்கு ஆன்மா கிடையாது. சரி இப்பொழுது மீதம் இருப்பது ஐந்தறிவு உயிரினங்களும் மனிதர்களும் தான். இவைகளுள் நாம் கண்டோம் என்றால் ஐந்தறிவினைக் கட்டுப்படுத்தும் தன்மை மனிதர்களுக்கு மட்டுமே இருக்கின்றது என்பது தெள்ளத்தெளிவான ஒரு விடயம். மேலும் மனிதன் விலங்குகளை விட சிறந்தவனாகவும், ஆறாவது அறிவினை உடையவனாகவும் அறியப்பட்டு இருக்கின்றான். அனைத்து உயிரினங்களையும் கண்டு அவற்றை ஆளும் வல்லமையையும் அவன் பெற்று இருக்கின்றான். அவன் மாறிக் கொண்டே இருக்கின்றான். ஆனால் வெறும் ஐந்தறிவுப் படைத்த மிருகங்களோ அவை தொடக்கத்தில் எவ்வாறு இருந்தனவோ அவ்வாறு தான் இன்றும் தொடர்ந்து இருந்துக் கொண்டு வந்து இருக்கின்றன.

இதனை நாம் காணும் பொழுது ஐந்தறிவினைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் மனிதன் ஒருவனுக்கே உள்ளது என்றே அறிந்துக் கொள்ளுகின்றோம். அதாவது ஆன்மா என்பது மனிதர்களுக்கு மட்டுமே இருக்கும் ஒரு விடயம். மற்ற உயிரினங்களுக்கு ஆன்மா கிடையாது.

அனைத்து உயிரினங்களுக்கும் உயிர் இருக்கின்றது...ஆனால் ஆன்மா மனிதனுக்கு மட்டுமே இருக்கின்றது என்றும் அதுவே மனிதனின் மேலாண்மைக்கு வழி வகுக்கின்றது என்றுமே நாம் அறிந்துக் கொள்கின்றோம்.

சரி ஆன்மா உடலினுள் இருக்கின்றது சரி...ஆனால் ஆன்மா செய்யும் செயல் என்ன என்றே நாம் இப்பொழுது காண வேண்டி இருக்கின்றது.

ஐம்புலன்களைப் பற்றி நாம் விவரிக்கத் தேவை இல்லை. ஒவ்வொருப் புலனும் ஒவ்வொரு வேலையைச் செய்கின்றது. கண் காட்ட உதவுகின்றது. மூக்கு நுகர உதவுகின்றது...இதனைப் போல ஒவ்வொரு புலன்களுக்கும் ஒவ்வொரு செயல்கள் இருக்கின்றன. அவ்வொவ்வொரு செயல்களும் ஒரு அறிவிற்கு காரணமாக இருக்கின்றன.

அவ்வாறு பார்த்தோம் என்றால் ஆறாம் அறிவு என்று ஒன்று இருந்தால் அந்த அறிவிற்கான உறுப்பும் நிச்சயமாக இருக்க வேண்டும் அல்லவா. அந்த உறுப்பினைத் தான் ஆன்மா என்கின்றனர் ஆன்மீகவாதிகள். சரி ஆறாவது அறிவிற்கான உறுப்பு ஆன்மா என்றே இருக்கட்டும், ஆனால் அந்த உறுப்பினால் பெறப்படும் ஆறாவது அறிவு என்பது என்ன என்ற கேள்விக்கு அவர்கள் விடையாய் தருவது,

ஆறாவது அறிவு என்பது இறைவனை உணரும் அறிவு என்பதே ஆகும். அவ்வாறு இறைவனை உணர உதவும் கருவியே ஆன்மா ஆகும் என்பதே அவர்களின் கூற்று.

அதாவது மனிதனின் ஆறாவது அறிவுக்கு காரணமான ஆன்மாவினால் மட்டுமே இறைவனை அறிந்துக் கொள்ளும் ஞானத்தை ஒருவன் பெற்றுக் கொள்ள முடியும்.

சரி...மனிதர்களுக்கு மட்டுமே ஆன்மா இருக்கின்றது, அதனால் தான் அவர்கள் உயர்திணை என்று தமிழால் உயர்த்தப்பட்டு இருக்கின்றனர் என்றும் ஆன்மாவின் வாயிலாக இறைவனை அறிந்துக் கொள்ளலாம் என்றுமே வைத்துக் கொள்வோம்...அப்படி இருக்கையில் மனிதர்களை ஐந்தறிவுப் படைத்த விலங்குகளோடும் தமிழ் அறிவியலில் வைத்து இருக்கின்றனரே...அது ஏன் என்றே கேள்வியை நாம் இப்பொழுது காண வேண்டி இருக்கின்றது.

ஒருவருக்கு கண் இருக்கின்றது. ஆனால் கண் செயல்படாமல் இருக்கின்றது. இந்நிலையில் அவர் ஐந்தாவது அறிவிற்கான உறுப்பினைப் பெற்று இருந்தும் அதன் வழியாகப் பெறக் கூடிய அறிவினைப் பெற இயலாத நிலையில் இருக்கின்றார்.

அதனைப் போன்று தான் மனிதர்களும் ஆன்மாவினைப் பெற்று இருந்தும் அதனை அறியாத நிலையில் ஆறாவது அறிவான இறைவனை உணரும் ஞானத்தை அடையாது விலங்குகளைப் போல் ஐந்தறிவினை வைத்துக் கொண்டு வாழ்ந்துக் கொண்டு இருக்கின்றனர். அதனால் தான் அம்மக்களை மாக்கள் என்று தமிழ் அறிவியல் அழைக்கின்றது.

அதாவது அம்மக்களுக்கு ஆறாம் அறிவுக்குரிய ஆன்மா இருக்கின்றது, இருந்தும் அந்த ஆன்மாவானது தன்னை அறிந்துக் கொள்ளாமல் ஐம்புலன்களின் வழியே செயல் ஆற்றிக் கொண்டே இருக்கின்றது. அதனால் இறைவனை அறிந்துக் கொள்ள இயலாத அந்நிலையில் அம்மக்களை மாக்கள் என்ற நிலையில் தமிழ் வைத்து இருக்கின்றது.

ஆறாவது அறிவான இறைவனை உணரும் ஞானத்தை பெற்றவர்களையே மக்கள் என்று தமிழ் வழங்குகின்றது.

கண் இருந்ததும் கண் தெரியவில்லை என்றால் அது ஏதாவது நோயாக இருக்கலாம்...இல்லை கண் குறைபாடு உடையதாக இருக்கலாம். ஆனால் ஆன்மா சரியாக வேலை செய்ய வில்லை அதனால் இறைவனை அறிய இயலவில்லை என்றுக் கூறுவது எங்கனம்? ஆன்மா குறை உடையதாக இருக்குமா என்ற கேள்வி இங்கே எழலாம்.

அதற்கு விடையாக ஆன்மீகவாதிகள் கூறுவது என்னவென்றால் ஆன்மாவானது மாயையினால் சூழப் பட்டு இருக்கின்றது (சகசமலம்), அதனாலேயே தான் அது தன்னையும் சரி இறைவனையும் சரி அறியாத நிலையில் இருக்கின்றது.

ஆனால் எப்பொழுது இறைவன் ஆன்மாவிற்கு தன்னை உணர்த்துகின்றானோ அப்பொழுது ஆன்மாவானது இறைவனை உணர்ந்து அவனின் அடிப்பற்றி செல்ல ஆரம்பிக்கும் என்பதே ஆகும். அந்நிலையில் ஆன்மா என்பது மனிதர்களுள் இறைவன் குடி கொண்டு இருக்கும் கோவிலாக மாறும் என்றுமே ஆன்மிகம் பேசுவோர் கூறி இருக்கின்றனர்.

//உங்கள் சரீரமானது நீங்கள் தேவனாலே பெற்றும் உங்களில் தங்கியும் இருக்கிற பரிசுத்த ஆவியினுடைய ஆலயமாயிருக்கிறதென்றும், நீங்கள் உங்களுடையவர்களல்லவென்றும் அறியீர்களா? – I கொரிந்தியர் 6:19- இது பவுலின் கூற்று.

உடம்பினை முன்னம் இழுக்கு என்று இருந்தேன்
உடம்பினுக்கு உள்ளே உறுபொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோயில்கொண்டான் என்று
உடம்பினை யான் இருந்து ஓம்புகின்றேனே. – திருமந்திரம் - இது திருமூலரின் கூற்று.


இதனைப் பற்றி விரிவாக காண நாம் சிவஞானபோதத்தைக் காண வேண்டி இருக்கின்றது. அதனைப் பின்னர் காணலாம்.

இப்பொழுது,

ஆன்மாவானது மனிதர்களிடம் மட்டுமே இருக்கின்றது என்றும் அதுவே அவர்களின் ஆளுமைக்கும் ஆறாம் அறிவிற்கும் காரணம் என்றும் ஆன்மாவின் வாயிலாகவே இறைவனை உணர முடியும் என்றுமே அறிந்து இருக்கின்றோம்.

ஆனால் ஆன்மாவானது தன்னையும் இறைவனையும் அறியாத நிலையில் இயல்பாகவே ஆன்மா இல்லை என்றும் இறைவன் இல்லை என்றும் கருத்துக்கள் உலகில் எழுந்துக் கொண்டு தான் இருக்கின்றன. ஆனால் எப்பொழுது ஆன்மாவினை சூழ்ந்து இருக்கும் மாயையினை இறைவன் அகற்றுகின்றாரோ அப்பொழுது ஆன்மாவானது இறைவனை உணர்ந்துக் கொண்டு மெய்யுணர்வுப் பெறும் என்பதே தமிழ் கூறும் ஆன்மவியலின் கருத்து.

இதையேத் தான் மெய்கண்டார்

"ஊனக்கண் பாசம் உணராப் பதியை
ஞானக் கண்ணினில் சிந்தை நாடி" - சிவஞானபோதம் 9


ஐம்புலன்களில் ஒன்றான கண்ணினைக் கொண்டு காண இயலாத இறைவனை ஞானக் கண் கொண்டு காணலாம் என்றும்,

திருவள்ளுவர்,

"ஐயுணர்வு எய்திய கண்ணும் பயமின்றே

மெய்யுணர்வு இல்லா தவர்க்கு" - குறள் 354

என்றும்

"இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி
மாசறு காட்சி யவர்க்கு" குறள் 352

கூறிச் சென்று உள்ளனர்.

மேலும் சிலர் உயிரும் ஆன்மாவும் ஒன்று என்று கருதிக் கொண்டு இருக்கின்றனர். ஆனால் அக்கூற்று தவறென்று தமிழ் அறிவியல் தெளிவாக விளக்கிக் கொண்டு இருக்கின்றது.

உயிர் என்பது வேறு ஆன்மா என்பது வேறு.

இந்த விடயத்தைத் தான் தமிழ் அறிவியல் மிகவும் தெளிவாகக் கூறிக் கொண்டு இருக்கின்றது. அதனை அறிந்துக் கொள்ளாது உயிரினையும் சரி உடலினையும் சரி ஆன்மாவினையும் சரி தெளிவாக நம்மால் அறிந்துக் கொள்ள இயலாது.

உயிர்கள் அனைத்து உயிரினங்களுக்கும் பொதுவாக இருக்கின்றது. ஆனால் ஆன்மா என்பது மனிதனுக்கு மட்டுமே உரிய ஒன்றாக இருக்கின்றது. ஆன்மா இருக்கும் காரணத்தினால் தான் மனிதனால் மற்ற உயிரினங்களை ஆட்சிப் புரிய முடிகின்றது. ஆன்மா இருப்பதினால் தான் அவனால் மாற்றங்களைப் புரிய முடிகின்றது. ஆன்மா அவனுக்கு சுயமாக முடிவு செய்யும் தன்மையை வழங்குகின்றது. ஆனால் ஆன்மாவையும் இறைவனையும் உணராத நிலையில் மனிதன் தவறுகளை செய்ய எத்தனிக்கின்றான்...எப்பொழுது இறைவன் அவனுக்கு உணர்த்துகின்றாரோ அப்பொழுது அவனது ஆன்மா விழிப்படைந்து அவன் ஞானம் பெறுகின்றான். இறைவனை அடைகின்றான்.

இது தான் தமிழக ஆன்மீகமும் அறிவியலும் கூறும் விடயமாகும்.

ஆனால் இதனை அறியாது வெறும் உடலினை வைத்து மட்டுமே ஆராய்ந்துக் கொண்டு இருக்கும் ஐரோப்பிய அறிவியல் மனிதன் ஒரு மிருகம் என்றும் அவன் மிருகத்தில் இருந்து பரிணாம மாற்றத்தால் உருவானான் என்றும் கூறிக் கொண்டு இருக்கின்றது.

உயிரையும் சரி ஆன்மாவையும் சரி ஐரோப்பிய அறிவியல் இன்னும் ஆராயத் துவங்கவே இல்லை. ஆனால் தமிழிலோ, உயிரைப் பற்றிய ஆராய்ச்சிகள் முற்றுப் பெற்று ஆன்மீகத்தைப் பற்றிய ஆராய்ச்சிகளும் வளர்ந்துக் கிடக்கின்றன. ஆனால் தமிழும் தமிழனும் அடிமைப்பட்டுக் கிடப்பதால் இந்த விடயங்கள் வெளிவராமலே இருக்கின்றன.

ஆன்மாவினைப் பற்றிய அறிவியலான ஆன்மவியல் தமிழிலே மட்டுமே வளர்ந்து இருக்கின்றது. இதனை அறியாது தான் ஐரோப்பிய அறிவியல் இன்னும் உடலினை வைத்துக் கொண்டு குரங்கில் இருந்து மனிதன் வந்தான் என்றுக் கூறிக் கொண்டு இருக்கின்றது.

தமிழ் அறிவியல் வெளிவரும் வரை அந்நிலையும் சரி அக்கூற்றும் சரி தொடர்ந்து இருந்துக் கொண்டே தான் இருக்கும்.

அதனை வெளிக்கொணர வேண்டியக் கடமை நமக்கு இருக்கின்றது. முயல்வோம்...!!!

இத்துடன் இத்தொடர் முடிவு பெறுகின்றது. தொடர்ந்து படித்தமைக்கு நன்றி நண்பர்களே...!!!உங்களின் கேள்விகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன.

முற்றும்.

பி.கு:

1) ஆய்வாளர்.தெய்வநாயகம் என்பவரின் ஆய்வுகளில் இருந்து நான் அறிந்தவற்றையே இங்கே பதிவிட்டு இருக்கின்றேன்.

2) விவாதங்களும் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

3) சிவஞானபோதத்தின் கருத்துக்களை அறிந்துக் கொள்ள,

உடலும் உயிரும் ஆன்மாவும் அறிவியலும் - 3 : ஆறாவது அறிவு!!!

முந்தையப் பகுதி

தமிழ் அறிவியலில் உயிரை புலன்களின் அடிப்படையில் பிரித்து வைத்து இருக்கின்றனர் சரி. தொடு உணர்வு மட்டுமே இருக்கும் உயிர்களை ஓரறிவு உயிர்கள் என்றும் ஐம்புலன்களும் இருக்கும் உயிர்களை ஐந்தறிவு உயிர்கள் என்றும் கூறி உள்ளனர் சரி. ஆனால் மனிதனை மட்டும் ஆறறிவு படைத்த உயிரினமாக கூறி இருக்கின்றனரே...அது ஏன்? அவன் ஆறாவது அறிவினை உடையவன் என்றால் அந்த அறிவிற்கு உரிய உறுப்பு ஏது? ஆறாவது அறிவு என்றால் என்ன?

இப்பொழுது இக்கேள்விகள் தான் நம் முன்னே நின்றுக் கொண்டு இருக்கின்றன.நியாயமான கேள்விகள் தான். புலன்களின் வழியாக உயிர்களைப் பிரித்து இருக்கின்றார்கள் என்று கூறும் பொழுது ஆறாவது அறிவு என்று ஒன்று உள்ளது என்று நாம் கூறினால் ஆறாவது அறிவிற்குரிய உறுப்பு எது என்றும் நாம் நிச்சயமாகக் கூறித் தானே ஆக வேண்டி இருக்கின்றது.

சரி இப்பொழுது அக்கேள்விக்கான விடையினைக்காண முயலலாம்.

ஐந்தறிவு படைத்த உயிரினங்கள் இருக்கின்றன. மனிதனும் ஐம்புலன்கள் கொண்டவனாக இருக்கின்றான். ஆனால் அவன் மற்ற உயிரினங்களில் இருந்து வேறுபட்டு நிற்கின்றான். மற்ற உயிரினங்கள் மாறாது இருக்கும் பொழுது இவன் மட்டும் மாறிக் கொண்டே இருக்கின்றான். இதற்கு என்ன காரணம் என்று கண்டால் மனிதனுக்கு பகுத்தறியும் தன்மை இருக்கின்றது என்பதே சிலர் கொடுக்கும் விடையாகும்.

அதாவது மனிதனால் நன்மை தீமை என்று பகுத்தறிய முடியும் ஆனால் மிருகங்களால் அவ்வாறு பகுத்தறிய முடியாது, எனவே தான் மனிதன் மிருகங்களில் இருந்து மாறுபட்டு இருக்கின்றான் என்றும் அந்த பகுத்தறியும் தன்மையே ஆறாவது அறிவு என்பதுமே இன்று பரவலாகப் பரவி இருக்கும் விடயமாகும்.

ஆனால் உண்மை என்னவென்றால் விலங்குகளாலும் பகுத்தறிய முடியும். ஒரு நாயின் முன்னே மெழுகினால் செய்த ரொட்டியினை நாம் வைத்தோம் என்றால் அது அதனுடைய புலன்களைப் பயன்படுத்தி (முதலில் முகர்ந்து பார்க்கும் பின்னர் நாவினால் சோதித்துப் பார்க்கும்) அந்த ரொட்டி சாப்பிட தகுந்தது அல்ல என்று அறிந்துக் கொண்டு அந்த ரொட்டியினை உண்ணாது நகர்ந்துச் சென்று விடும். அதாவது அதனுடைய புலன்களை பயன்படுத்தி ஒரு பொருளானது தனக்கு நல்லதா இல்லை கெட்டதா என்று பகுத்தறிந்துக் கொண்டு நாயானது சென்று விடுகின்றது.

எனவே பகுத்தறிவு என்பதுமனிதர்களுக்கு மட்டுமே சொந்தம் என்பதும் அதுவே தான் ஆறாவது அறிவு என்பதும் சரியான ஒரு விடயமாக அமையாது.

இந்நிலையிலேயே தான் உண்மையிலேயே ஆறாவது அறிவு என்ற ஒன்று இருக்கின்றதா என்ற கேள்வி எழுகின்றது. ஆறாவது அறிவு என்ற ஒன்று இல்லை என்றுக் கூறும் நாத்திக நண்பர்களும் இருக்கின்றனர். அவர்கள் இக்கால அறிவியலை வைத்துக் கொண்டு ஆறாவது அறிவு இல்லை என்று கூறுகின்றனர்.

மனிதனும் ஒரு விலங்கு தான். ஆறாவது அறிவு என்பது எல்லாம் வெறும் கதை என்பதே அவர்களின் வாதமாக இருக்கின்றது.

ஆனால் ஆச்சர்யவசமாக இதே கருத்தைத் தான் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்திருந்த பவணந்தி முனிவரும் கூறிச் சென்றுள்ளார்... அவரது தமிழ் நூலான நன்னூலில்!!!

"மெய்ந் நா மூக்கு நாட்டம் செவிகளின்
ஒன்று முதலாக் கீழ்க் கொண்டுமேல் உணர்தலின்
ஓர் அறிவாதியா உயிர் ஐந்தாம்" - நன்னூல் 444

என்று உயிர் ஐந்து வகைப் படும் என்று நன்னூலில் கூறி இருக்கும் அவர்,

"வானவர் மக்கள் நரகர் விலங்கு புள்
ஆதிசெவி அறிவோ டையறி வுயிரே" - நன்னூல் 449

என்று விலங்குகளும் மனிதர்களும் ஐந்தறிவுப் படைத்தவர்கள் என்றே கூறிச் சென்று உள்ளார். அதாவது இவர் ஆறாவது அறிவு என்ற ஒன்று இருப்பதை மறுத்து உள்ளார்.

ஆச்சர்யவசமாக இவரும் ஒரு நாத்திகரே!!! நாத்திக சமயமான சமண சமயத்தைச் சார்ந்தவர் இவர்.

சிந்திக்கத்தக்க விடயம் தானே இது.

"மக்கள் தாமே ஆறறிவுயிரே" (தொல்காப்பியம் - 1532)

என்று தொல்காப்பியரால்ஆறறிவு படைத்தவனாகக் கூறப் பெறும் மனிதனை, அவனது ஆறாவது அறிவு என்ற விடயத்தை மறுத்து அவனை ஐந்தறிவு விலங்குகளோடு பவணந்தி முனிவர் கூறி இருக்கின்றார்.

மேலும் தொல்காப்பியரும் "மாவும் மாக்களும் ஐயறிவினவே" என்பதன் வாயிலாக மக்கள் சிலரை விலங்குகளுடனே வைத்து ஒப்பிட்டு இருக்கின்றார்.

இந்நிலையில் நாம் எவருடையக் கூற்றினை ஏற்றுக் கொள்வது? தொல்காப்பியரின் கூற்றையா அல்லது பவணந்தி முனிவரின் கூற்றையா என்றே நாம் எண்ணிக் குழம்பிக் கொள்ள மனம் இல்லாத தமிழ் அக்கேள்விக்கும் விடையினை சுமந்துக் கொண்டே இருக்கின்றாள்.

ஆம்...தமிழ் உயிரினை புலன்களின் அடிப்படையில் மட்டுமே பிரித்து இருக்கவில்லை. மாறாக திணைகளின் அடிப்படையிலும் பிரித்து தான் வைத்து இருக்கின்றாள்.

தமிழர்களின் திணை இலக்கணம் உயிர்களை இரண்டாகப் பிரிக்கின்றது.

1) உயர்திணை (மனிதர்கள்)
2) அஃறிணை (மனிதர்கள் அல்லாத மற்ற உயிரினங்கள்)

இப்பிரிவுகள் தமிழில் மட்டுமே இருக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். தமிழர்களின் திணை இலக்கணம் மனிதர்களை மற்ற உயிரினங்களிடம் இருந்து சிறப்பாகப் பிரித்துக் கூறுகின்றது.

இந்நிலையில் தான் நாம் மீண்டும் பவணந்தி முனிவரைச் சந்திக்க வேண்டி இருக்கின்றது. காரணம் மனிதர்களை ஐந்து அறிவு உடையவர்கள் என்று கூறிய அவர் தமிழ் திணை இலக்கணத்தை விளக்க வேண்டிய தருணத்தில்

"மக்கள் தேவர் நரகர் உயர்திணை
மற்றுயிர் உள்ளவும் இல்லவும் அஃறிணை" நன்னூல் 261

என்று மக்களை மற்ற உயிரினங்களிடம் இருந்து வேறுபடுத்தி உயர்த்திக் கூறி இருக்கின்றார்.

அதாவது மனிதனுக்கு ஆறறிவு என்ற ஒன்றுக் கிடையாது என்று அவனை ஐந்தறிவு படைத்தவன் என்று விலங்குகளுடன் ஒப்பிட்டுக் கூறிய பவணந்தி முனிவர், தமிழின் திணை இலக்கணத்தைக் கூறும் பொழுது மனிதன் விலங்குகளிடம் இருந்து மேலானவன் என்றே கூறிச் சென்றுள்ளார். இந்நிலையில் தான் நாம் சில விடயங்களைக் காண வேண்டி இருக்கின்றது.

கடவுள் நம்பிக்கையுள்ள தொல்காப்பியர் ஆறாவது அறிவு இருக்கின்றது என்றும் அதனை உடையவர்கள் மனிதர்கள் என்றும் கூறிச் சென்று உள்ளார். மேலும் அவரும் சில மனிதர்களை ஐந்தறிவு படைத்த மிருகங்களோடு வைத்தே கூறி உள்ளார்.

நாத்திகரான பவணந்தி முனிவரோ ஆறாம் அறிவை மறுத்து மனிதனும் விலங்கும் ஐந்தறிவு உடையவரே என்றே கூறி இருப்பினும் தமிழர்களின் திணை இலக்கணத்தைக் கூற விழையும் பொழுது மனிதர்களை விலங்குகளிடம் இருந்து பிரித்து உயர்த்திக் கூறி உள்ளார்.

இந்நிலையில் சில விடயங்களை நாம் கவனிக்க வேண்டி இருக்கின்றது.

1) மனிதன் விலங்குகளை விட உயர்ந்தவன் என்பதனை இருவருமே ஏற்றுக் கொள்கின்றனர்.
2) தொல்காப்பியர் ஆறாம் அறிவைப் பற்றிக் கூறும் பொழுது அதனை பவணந்தி முனிவர் மறுக்கின்றார்.
3) தொல்காப்பியரும் அனைத்து மனிதர்களும் ஆறாம் அறிவை உடையவர்களாகக் கூறிச் செல்ல வில்லை.

இதனடிப்படையில் நாம் சிந்தித்தோம் என்றால் மனிதன் மற்ற உயிர்களை விட உயர்ந்தவன் என்ற எண்ணம் ஒன்றாக இருந்தாலும் ஆறாம் அறிவைக் குறித்த நிலையில் கருத்து வேறுபாடுகள் இருப்பது தெரிகின்றது. ஏன் இந்த வேறுபாடு என்று நாம் கண்டோம் என்றால் ஆறாவது அறிவினை அனைத்து மக்களும் அறிவதில்லை என்றே தொல்காப்பியர் கூறிச் சென்று உள்ளார்.

அதாவது ஆறாவது அறிவு என்ற ஒன்று இருக்கின்றது என்று கூறிய அவர் அனைத்து மக்களும் ஆறறிவோடு இருக்கின்றனர் என்றுக் கூறவில்லை. சிலரை ஐந்தறிவு நிலையில் தான் வைத்து உள்ளார்.

"அட என்னடா இது...ஆறாவது அறிவு இருக்கு அப்படினு சொல்றாங்க ஆனா எல்லாராலும் உணர முடியாது அப்படின்னு சொல்றாங்க...இவங்க என்னதான் சொல்ல வராங்க" என்று நாம் குழம்புவதை விரும்பாது விடையினை தந்து தான் சென்றுள்ளார் மெய்கண்டார் அவர்கள், அவரது நூலான சிவஞானபோதத்தில்.

"மாயா இயந்திர தனுவினுள் ஆன்மா" சிவஞானபோதம் 3 (விளக்கம்)

என்று உடலினுள் ஆன்மா இருக்கின்றது என்றுக் கூறும் அவர்,

"ஐம்புல வேடரின் அயர்ந்தனை வளர்ந்து எனத்" சிவஞானபோதம் 8 (விளக்கம்)

என்பதன் வாயிலாக ஆன்மா ஐம்புலன்களோடு வளர்ந்து இருக்கின்றது என்றும்,

"...ஆன்மா சகசமலத் துணராது" சிவஞானபோதம் 4 (விளக்கம்)
"...உணர்த்த உணர்தலின்" சிவஞானபோதம் 3 (விளக்கம்)

அந்த ஆன்மாவானது தன்னை அறியாது இருக்கின்றது என்றும் கூறுகின்றார்.

அதாவது உடலினுள் இருக்கும் ஆன்மாவானது, ஐம்புலன்களுடன் இணைந்து தன்னை அறியா நிலையில் இருக்கின்றது என்பதே அவர் கூறும் கருத்தாகும்.

ஐம்புலன்களுடன் இருக்கின்றது என்றால் நிச்சயம் அந்த உயிரினம் ஐந்தறிவு பெற்றதாக இருக்க வேண்டும். அவ்வாறுப் பார்த்தோம் என்றால் விலங்குகளும் மனிதர்களுமே தான் வருகின்றனர். ஆனால் விலங்குகள் வெறும் ஐந்தறிவுப் படைத்தவையாகவே அறியப்பட்டு இருக்கின்றன. ஆனால் மனிதனோ விலங்குகளை விட உயர்ந்தவனாகவும், ஆறாவது அறிவினை உடையவனாகவும் அறியப்பட்டு இருக்கின்றான்.

இந்நிலையில் மனிதனை மற்ற உயிரினங்களிடம் இருந்து பிரித்து அவனைச் சிறப்பிக்கும் ஆறாவது அறிவு என்பது ஆன்மா தான் என்றே நாம் கருத வாய்ப்பு இருக்கின்றது தானே.

அந்த வாய்ப்பைத் தான் நாம் சிறிது ஆராய வேண்டி இருக்கின்றது.

ஆறாவது அறிவு ஆன்மாவா?

காண்போம்....!!!

பி.கு:

1) ஆய்வாளர்.தெய்வநாயகம் என்பவரின் ஆய்வுகளில் இருந்து நான் அறிந்தவற்றையே இங்கே பதிவிட்டு இருக்கின்றேன்.

2) விவாதங்களும் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

இரு தேசங்களின் கதை : ஆரியவர்த்தமும் பிற தேசங்களும்...!!!

தேசியம்...வந்தேறிகள்...குடியுரிமை என்று இன்று பல குரல்கள் எழும்பிக் கொண்டிருக்கின்றன. "யார் வந்தேறிகள்? யார் பூர்வகுடி மக்கள்? எவ...