ஜானி டெப் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஜானி டெப் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 30 ஏப்ரல், 2011

நான் ரசித்த திரைப்படங்கள் - 4

கனவுலகத்தை தேடி: (Finding Neverland)

சிறு வயதில் கனவுகள் கண்டு இருக்கின்றீர்களா?....

பூக்கள் சூழ்ந்தப் பாதைகள்...அவற்றில் கவலைகள் சிறிதும் இன்றி தொலை தூரப் பயணங்கள்... வழித்துணையாய் சிறு நீரோடை... கதைகள் பேசக் குருவிகள்... தூரத்தில் புல்வெளிகளின் மத்தியில் சிறிய வீடு...பாசமுள்ள அம்மா... நேசமுள்ள சகோதரர்கள்... புன்னகையுடன் அப்பா...!!! இப்படி அந்தக் கனவுகளில் உங்கள் உலகத்தை நீங்கள் செதுக்கிப் பார்த்து இருக்கின்றீர்களா?...

இல்லை என்று சொல்பவர்களை நிச்சயம் விரல் விட்டு எண்ணிவிடலாம். கண்டிப்பாக நாம் சிறுவர்களாக இருந்த பொழுது நம் ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு தனி உலகம் இருந்து இருக்கும். அது நம் உலகம். நம்முடைய ரகசிய உலகம்...!!!

ஆனால், காலங்கள் நகர நகர நாமும் அந்த உலகங்களில் இருந்து விலகி நகர்ந்து விடுகின்றோம். வெளிஉலகத்தில் நாம் சந்திக்கும் சோதனைகள் நம்முள் இருக்கும் நம்முடைய கற்பனை உலகத்தை சிறிது சிறிதாக மறக்கடித்து விடுகின்றன. ஒரு காலத்தில், நம்முடைய ஆழ்மனம் அந்த உலகத்தையே நாடினாலும் நாம் நம்முடைய கற்பனை உலகத்தை தெரிந்தே இழந்து விடுகின்றோம். அந்த உலகத்தோடு நம்முள் இருக்கும் சிறுவனையும்!!!

ஆனால் அனைவரும் அந்த உலகத்தை இழப்பதில்லை. ஒரு சிலர் அந்த உலகத்திலேயே வாழ்ந்து அங்கேயே அவர்களைத் தேடிக் கொள்கின்றனர். அந்தக் கற்பனை உலகத்தில் அவர்கள் கண்டெடுத்த செல்வங்கள் வாயிலாகவே அவர்கள் அவர்களை வெளி உலகத்திற்கு அறிமுகப்படுத்திக் கொள்கின்றனர்.

அவர்கள் எழுத்தாளர்கள்... படைப்பாளிகள்!!! அப்படிப்பட்ட ஒரு எழுத்தாளனை அடிப்படையாக வைத்தே இந்தக் கதை நகர்கின்றது.

தன்னுடைய கற்பனை உலகத்தினுள் தன்னையேத் தேடிக்கொண்டு இருக்கும்  ஒரு எழுத்தாளனும் தங்களது கற்பனை உலகத்தை முற்றிலுமாக தொலைத்த ஒருக் குடும்பமும் காலத்தின் ஒரு புள்ளியில் ஒன்றாகச் சந்திக்க நேருகின்றது. உண்மையின் ரணத்தையே கண்டு இருந்த அந்தக் குடும்பத்திற்கு மீண்டும் அவர்கள் தொலைத்த கற்பனை உலகத்திற்கு உரிய வழியினை காட்ட அவன் முயல்கிறான். அவனது முயற்சி என்ன ஆயிற்று?... உண்மையின் ரணத்தை  கற்பனை உலகம் மாற்றுமா? என்றக் கேள்விகளுக்கான பதிலே இந்தத் திரைப்படம்.

பரந்து விரிந்த தனது கற்பனை உலகத்தில் தன்னுடைய கனவுகளை அடைய ஒரு வழியினைத் தேடிக் கொண்டு இருக்கும் ஒரு எழுத்தாளன்.... தந்தையை இழந்த சோகத்தில் தங்களது கற்பனை உலகத்தை தொலைத்த மூன்று சிறுவர்கள்... சிறு வயதிலேயே தனது கணவனை இழந்து தனது குழந்தைகளுக்காகவே வாழும் அவர்களது அன்னை. இவர்கள் தான் இந்தக் கதையின் மாந்தர்கள்.

லண்டன் 1903...

தோல்விகள் பாரிக்கு (J.M.Barrie) புதிதல்ல. அவன் ஒரு படைப்பாளி. நிச்சயம் அவனது தவறுகளில் இருந்து கற்றுக் கொண்டு அடுத்த முறை இன்னும் சிறந்தப் படைப்பை அவனால் உருவாக்க முடியும். அதுவும் கூடுதலாக அவனது நாடகங்களை மேடையேற்ற எப்பொழுதும் தயாராகவே இருந்தது அவனது நண்பர் சார்லசுவின் (Charles) திரையரங்கம். இருந்தும் ஏதோ ஒன்று அவனை வாட்டிக் கொண்டு இருந்தது. அவனுக்கு தேவை ஒரு மாற்றம். அவனது உலகத்தினைப் புரிந்துக் கொள்ளாத மனைவியும், தங்களது இதயங்களுக்கு சமுக மதிப்பு என்றப் பெயரில் முகமூடிப் போட்டுக் கொண்டு அலையும் மனிதர்களும் சிறிது சிறிதாக சிதைத்துவிட்டிருந்த அவனது கற்பனை உலகத்தை அவன் மீட்டு எடுக்க அவனுக்கு நிச்சயம் ஒரு மாற்றம் தேவை. அந்த மாற்றத்தைத் தான் பாரி லண்டன் மாநகரில் தேடிக் கொண்டிருந்தான்.

அந்த சூழ்நிலையில் தான் ஒரு நாள் அவன் தற்செயலாக பூங்கா ஒன்றில் விளையாடிக் கொண்டு இருக்கும் 4 சிறுவர்களை சந்திக்க நேருகின்றது.  அருமையான சிறுவர்கள் தான்... பாரிக்கு அதில் எந்த சந்தேகமும் இருக்கவில்லை. ஆனால் ஒன்று தான் அவனுக்கு புரியவில்லை. ஏன் இந்த சிறுவர்களும் தங்களது இதயத்தினை முகமூடிப் போட்டு பூட்டி வைத்து இருக்கின்றனர்? ஏன் அவனது கற்பனைக் கதைகளை அவர்கள் நம்ப மறுக்கின்றனர்... எங்கே சென்றது அவர்களின் கற்பனை உலகம்?... இவ்வாறு அவன் வியந்துக் கொண்டு இருக்கும் பொழுது தான் அந்த சிறுவர்களின் தாயார் சில்வியாவின் (Sylvia) மூலம், அந்த சிறுவர்கள் அவர்களது தந்தையினை இழந்தக் காரணத்தினால் அவர்கள் எதையுமே நம்புவதில்லை என்ற உண்மையினை  அவன் அறிய வருகின்றான்.


தங்களது தந்தை எப்படியும் பிழைத்து விடுவார் என்ற நம்பிக்கையுடன் இருந்த அந்தச் சிறுவர்கள் அவர்களின் தந்தையின் மரணத்தினோடு எதையும் நம்புவதையே விட்டுவிட்டனர். அதோடு அவர்களின் கற்பனை உலகங்களையும். இதனை உணர்ந்த பாரி அவர்களுக்கு உதவி புரிய ஆரம்பிக்கின்றான். எல்லா நாட்களும் அவர்களுடன் பூங்காவினில் விளையாடுவதும், அவனது கற்பனை உலகத்தினைப் பற்றி அவர்களுக்கு கதையினை சொல்வதும் என்று அவன் தன்னுடைய காலத்தை போக்க ஆரம்பிக்கின்றான். அவனுடன் பழகும் தருணங்களில் தன்னுடைய குழந்தைகள் மீண்டும் மகிழ்ச்சியாய் இருப்பதை உணர்ந்த சில்வியா பாரியை எப்பொழுது வேண்டும் என்றாலும் அவர்களது இல்லத்திற்கு சென்று சந்திக்கலாம் என்றும் சொல்கின்றாள்.

சமூகத்தினால் வாடிக் கொண்டு இருந்த அவனது கற்பனை உலகத்தில் அந்த சிறுவர்களின் வருகையால் புதுப் பூக்கள் பூத்துக் குலுங்குவதை உணர்ந்த அவன் சில்வியாவின் வேண்டுக்கோளுக்கு சம்மதிக்கின்றான். கொஞ்சம் கொஞ்சமாக அந்த சிறுவர்களின்றி தனது வாழ்க்கைக்கு அர்த்தம் இல்லை என்றே அவன் எண்ணத் தொடங்குகின்றான். அந்தச் சிறுவர்களை அடிப்படையாக வைத்தே  ஒரு புதுக் கதையையும் அவன் எழுதத் தொடங்குகின்றான். அந்தச் சிறுவர்களும் பாரியுடன் சேர்ந்து தங்களது தொலைந்த கற்பனை உலகத்தை தேடத் தொடங்குகின்றனர்.

ஆனால் அனைத்தும் நன்றாகப் போய்க் கொண்டு இருக்கும் பொழுது பாரியும் சில்வியாவும் நட்பாய் பழகுவது பாரியின் மனைவிக்கும், சில்வியாவின் அன்னையான எம்மாவிற்கும் (Emma) பிடிக்காது போய் விடுகின்றது. ஒரு விதவை பெண்ணின் வீட்டிற்க்கு ஒரு ஆடவன் அடிக்கடி வந்து செல்வது சமுகத்தில் நல்ல செயலாக தெரியாது என்றுக் கூறி எம்மா பாரி சில்வியாவின் வீட்டிற்க்கு வருவதற்கு தடைப் போடுகிறார்.

ஆனால், அந்த சிறுவர்களின் மத்தியில் தனது புதிய உலகத்தை கண்ட பாரி அவர்களின் கூற்றை ஏற்றுக் கொள்ள மறுக்கவே, அவனது மனைவி அவனிடம் இருந்து பிரிந்து சென்று விடுகின்றாள். இருந்தும் அதைப் பொருட்படுத்தாது அவனது புதிய கதையையும், அந்த சிறுவர்களின் மகிழ்ச்சியையுமே தனது கருத்தில் கொண்டு பாரி அந்தச் சிறுவர்களுடன் பழகுவதைத் தொடருகின்றான். அவனது கதையும் ஒரு முற்றுப் பெற்று அதை  நாடகமாய்  மேடையில் அரங்கேற்றும் நேரமும் வருகின்றது.

இந்த நிலையில் தான் சில்வியாவிற்கு இனம் புரியாத ஒரு நோய் இருப்பது பாரிக்கும் அவளது குழந்தைகளுக்கும் தெரிய வருகின்றது. நாளுக்கு நாள் உடல் நலம் குன்றிக்கொண்டே இருக்கும் தங்களது தாயினைப் பார்த்து அந்த சிறுவர்கள் மீண்டும் நம்பிக்கையை இழக்க ஆரம்பிக்கின்றனர்.


சில்வியா பிழைத்தாளா?... அந்த குழந்தைகள் மீண்டும் அவர்களது கனவுலகத்தின் மேல் நம்பிக்கை கொள்ள ஆரம்பித்தனரா?.. பாரியின் நாடகம் வெற்றிப் பெற்றதா... அவர்கள் அனைவரின் வாழ்கையும் என்ன ஆனது? என்பதே மீதிக் கதை.

ஒரு புல்வெளியில் தனியாக அமர்ந்து இருக்கும் பொழுது, காற்றில் வரும் ஒரு புல்லாங்குழலின் இசை நம்மை எவ்வாறு ஒரு தனி உலகத்திற்கு அழைத்து செல்லுமோ அதேப் போல் இந்த படமும் நம்மை ஒரு தனி உலகத்திற்கு  ஆர்ப்பாட்டம் இல்லாது தனியே அழைத்துச் செல்கின்றது.

படத்திற்கு பெரும் பலம் நடிகர்களின் தேர்ந்த நடிப்பும் (சானி டெப் (Johnny Depp) கட்டே வின்சுலேடு (Kate Winslet) - நடிப்பைக் கேட்கவா வேண்டும், அதுவும் சில்வியாவின் கடைசிப் பையனாக நடித்து இருக்கும் சிறுவனின் நடிப்பு மிகவும் சிறப்பு) அவர்களுடனே வாழ்ந்து இருக்கும் இசையும் தான். (இசைக்கு ஆசுசார் விருது). இவை இரண்டுமே படத்தின் அனைத்துக் காட்சிகளையுமே தூக்கிப் பிடித்து நிறுத்தி இருக்கின்றன.

நம்முடைய மனதின் அடியாழத்தில் புதைந்து கிடக்கும் நம்முடைய கற்பனை உலகத்தை நாம் மீண்டும் உணர நிச்சயம் நாம் காண வேண்டிய ஒருப் படம் இது ... காண்போம்... கற்பனை உலகத்தின் மேல் நம்பிக்கையுடன்!!!   

பி.கு:

இது  ஒரு உண்மைக் கதை பேதுரு பேன் (Peter Pan) என்ற ஒரு புகழ்மிக்க கதாபாத்திரத்தை உருவாக்கிய எழுத்தாளர் பாரியின் கதையே இதுவாகும். அந்தக் கதாபாத்திரத்தை அவர் உருவாக்குவதற்கு ஏதாக அமைந்த நிகழ்வுகளையே படமாக்கி இருக்கின்றார்கள்.

வெள்ளி, 5 நவம்பர், 2010

நான் ரசித்த திரைப்படங்கள் - 1

கத்திக் கை எட்வர்ட் (Edwards Scissor hands) :

1990ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு வித்தியாசமான காதல் கதை.

ஒரு குன்றின் உச்சியில் ஒரு பாழடைந்த மாளிகை. அந்த மாளிகையினுள் அனாதையாய் கைகளுக்கு பதிலாய் கத்திகளையும் கத்திரிக்கோள்களையும் கொண்டவாறு வசிக்கும் ஒரு அப்பாவிச் செயற்கை மனிதன். அவன் மேல் பாவப்பட்டு அவனை ஊருக்குள் அழைத்து வந்து தங்கள் குடும்பத்தினுள் அவனையும் ஒருவனாகச் சேர்த்துக் கொள்ளும் ஒரு குடும்பம். அந்த குடும்பத்தில் உள்ள பெண்ணின் மேல் அவனுக்கு உண்டாகும் காதல். அந்த காதலுக்கு எதிர்ப்பாய் அந்த பெண்ணின் காதலன். இறுதியில் அந்த செயற்கை மனிதனின் காதல் கை கூடியதா என்பதே கதை.

சுருக்கமா சொல்ல வேண்டும் என்றால் இந்தப் படம் அதிரடி சண்டைகள், கிராபிக்ஸ் வித்தைகள் என்று எதுவும் இல்லாத அந்த கால எந்திரன் படம் என்றுக் கூட சொல்லலாம்.

ஆவான் என்றொரு இடத்தில உள்ள குன்றில் ஒரு மாளிகையில் ஒரு விஞ்ஞானி தனது படைப்புகளுக்கு எல்லாம் தலைமையான படைப்பாய், தனிமையாய் இருக்கும் அவருக்கு ஒரு மகனாய் ஒரு செயற்கை மனிதனை உருவாக்க முயன்றுக் கொண்டு இருகின்றார். அவரின் முயற்சியின் பயனாய் எட்வர்ட் என்னும் செயற்கை மனிதனும் உயிர் பெறுகின்றான். பார்ப்பதற்கு உண்மையான மனிதனைப் போலவே இருக்கும் எட்வர்டிடம் ஒரே ஒரு குறை. அவனுக்கு கைகள் கிடையாது. தனது மாளிகையின் தோட்டத்தில் உள்ள செடிகளை எல்லாம் அழகுப் படுத்தி சீர் அமைப்பதற்கு எட்வர்டிற்கு வசதியாக இருக்க வேண்டும் என்று அவனுக்கு கைகளுக்கு பதிலாய் கத்திகளையும் கத்திரிக்கோள்களையும் வைத்துப் படைத்தது இருந்தார் அந்த விஞ்ஞானி. எட்வர்ட் தோட்டக் கலைகளில் சிறந்தவனான உடனையே அவனுக்கு கத்திகளுக்கு பதிலாகஉண்மையானக் கைகளை மாற்றி விடுவோம் என்று காத்து இருந்த விஞ்ஞானி, அந்த நாள் வந்த பொழுது எட்வர்டிற்கு கைகளை மாட்டாமலேயே மாரடைப்பால் இறந்துப் போகிறார். அந்த பதட்டத்தில் எட்வர்ட் அவனுடைய கத்திக் கைகளால் அந்த உண்மையான கைகளை எடுக்க முயல, அந்த கைகள் கிழிந்துப் போகின்றன. எனவே தனது கத்திக் கைகளுடனேயே அந்த மாளிகையில் தோட்டத்தை பராமரித்துக் கொண்டே தனது காலத்தை கழிக்க ஆரம்பிகின்றான்.

பின் ஒரு நாள், பெக் என்னும் பொருட்களை விற்பனை செய்யும் பெண் ஒருத்தி, எட்வர்ட் தங்கி இருக்கும் மாளிகைக்கு பொருட்களை விற்பனை செய்ய போகும் போது தனியாய் இருக்கும் எட்வர்டின் மீது பாவம் கொண்டு அவனை அவளுடன் அவளின் வீட்டிற்க்கு வர அழைக்கின்றாள். எட்வர்டும் அவளுடன் அவளின் வீட்டிற்க்கு சென்று அவளின் குடும்பத்தில் ஒன்றாகி விடுகின்றான்.

பெக்கின் குடும்பத்தினர் அனைவருக்கும் பார்த்த முதலிலேயே எட்வர்டைப் பிடித்து விடுகின்றது. பெக்கின் மூத்த மகள் கிம்மைத் தவிர. கிம் முதலில் எட்வர்டை ஒரு மிருகமாகப் பார்க்க ஆரம்பிகின்றாள். பின் போகப் போகப் எட்வர்டின் உண்மையான குணம் அறிந்து அவளுக்கும் அவனைப் பிடிக்க ஆரம்பிக்கின்றது. அதற்குள் எட்வர்ட் பெக்கின் குடும்பம் வசிக்கும் ஆவான் பகுதியில் தனது தோட்டக் கலையின் மூலமாகவும் தனது சிகை அலங்காரத் திறமைகள் மூலமாகவும் நல்ல பெயர் பெற்று அந்த மக்களுள் இணைந்து விடுகின்றான். அவனின் கத்திக் கைகளும் கற்பனைத் திறனும் அவனுக்கு புகழை வாரிக் குவித்த வண்ணம் இருக்கின்றன. அனைத்தும் நன்றாகவே போய்க் கொண்டு இருக்கும் வேளையில் எட்வர்டிற்கு புதிதாய் பிரச்சனை ஜிம் என்றவனின் வடிவில் வருகின்றது. ஜிம் கிம்மின் காதலன். அவனுக்கு சுத்தமாகவே எட்வர்டை பிடிக்கவில்லை. ஒருநாள் தனது தந்தை தான் கார் வாங்குவதற்கு பணம் தரவில்லை என்றவுடன், தன் சொந்த வீட்டிலேயே திருடுவதற்கு திட்டமிட்டு அந்த திட்டத்தில் எட்வர்டையும் கிம்மின் உதவியால் சேர்த்துக் கொள்கின்றான் ஜிம். அந்த திருட்டு முயற்சி தோல்வி அடைய எட்வர்டைத் தவிர மற்ற அனைவரும் தப்பி விடுகின்றார்கள். எட்வர்டை போலீஸ் கைது செய்து கொண்டு போய் விடுகின்றது.

பின்னர் எட்வர்ட் தனிமையிலேயே வளர்ந்ததால் அவனுக்கு நல்லதுக் கெட்டது தெரியாது, அவனுக்கு அதை யாரவது சொல்லிக் கொடுக்க வேண்டும் அது வரை அவன் மேல் சட்டப்படி எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க முடியாது என்று நீதிபதி சொல்லி எட்வர்டை விடுதலை செய்கிறார். "இன்னொரு முறை இவனால் இந்த பகுதி மக்களுக்கு எதாவது பிரச்சனை வந்தது என்றால் இவனை நான் சிறையில் அடைக்க வேண்டி இருக்கும்" என்று ஒரு எச்சரிக்கை செய்துவிட்டு எட்வர்டை பெக்கின் குடும்பத்திடம் விட்டு விட்டு செல்கின்றார் எட்வர்டை கைது செய்த போலீஸ் அதிகாரி. அதன் படியே எட்வர்டிற்கு நல்லதையும் கெட்டதையும் சொல்லிக் கொடுக்க பெக்கின் குடும்பம் முயல்கிறது. அந்த சம்பவத்திற்கு பின் எட்வர்ட் என்ன தான் நல்லது செய்தாலும் அந்த பகுதி மக்கள் எட்வர்டை ஒரு திருடனாகப் பார்ப்பதை நிறுத்த மாட்டேன்கின்றார்கள். இந்த காலக் கட்டத்தில் கிம்மிற்கு ஜிம்மின் மேல் வெறுப்பும் எட்வர்டின் மேல் பற்றும் வர ஆரம்பிக்கின்றது. ஒரு நாள் இரவு ஜிம்மும் அவனது நண்பனும் குடித்துவிட்டு கிம்மின் வீட்டிற்க்கு வேகமாக காரில் வரும் பொழுது எதிர்பாராவிதமாக காருக்கு நடுவில் கிம்மின் தம்பி கெவின் வந்து விட, கெவினைக் காப்பற்றுகின்றான் எட்வர்ட். காப்பாற்றப்பட்ட கெவின் நலமாக இருக்கின்றானா என்று அறிய அவனின் முகத்தில் தன்னுடைய கத்திக் கையை வைத்துப் பார்க்கும் பொழுது எட்வர்டை அறியாமலேயே கெவினின் முகத்தில் கத்தி கீறி விட, சுற்றி இருந்தவர்கள் எட்வர்ட் தான் கெவினைத் தாக்குகின்றான் என்று தப்பாக புரிந்துக் கொண்டு அவனைத் துரத்துகின்றனர்.

எட்வர்ட் அவர்களிடம் இருந்து ஓடி மீண்டும் தனது மாளிகைக்கே செல்கின்றான். அவனைத் துரத்தியவாறே ஆவான் நகர மக்களும், அவனைக் கொள்வதற்காக ஜிம்மும், அவனைக் காப்பற்றுவதற்காக கிம்மும் அந்த மாளிகைக்குள் செல்கின்றனர்.

ஜிம் எட்வர்டைக் கொன்றானா?. எட்வர்டின் காதல் என்னவாயிற்று?. கிம் என்னவானாள்?. என்பது தான் படத்தின் கிளைமாக்ஸ்.

படம் முழுவதையும் தனது நடிப்பால் தூக்கி நிறுத்துகின்றார் ஜானி டெப்(johnny depp). அப்பாவியான செயற்கை மனிதனாய், வசனங்கள் அதிகம் இன்றி அவர் நடிப்புத் திறமையை வெளிப்படுத்த இந்த படத்தில் வாய்ப்புகள் அதிகம். அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொண்டு எட்வர்ட் என்ற அந்த கதாப்பாத்திரதிற்கு உயிர் கொடுத்து இருக்கின்றார். அவருடைய திரைப்பட வாழ்க்கை பயணத்தில் இந்த படம் ஒரு மிகப் பெரிய திருப்புமுனையாய் அமைந்தது என்றால் அது மிகையாகாது.

ஜானி டெப்பின் திறமைக்கு தீனி அளிக்கும் படி காட்சிகளை உருவாக்குவதில் இயக்குனர் டிம் பர்டன் (tim burton) வெற்றிப் பெற்று இருக்கின்றார் என்று தான் சொல்ல வேண்டும். ஆரம்பக் காட்சியில் இருந்தே தனது கற்பனை உலகைத் திரையில் அருமையாக விவரித்துக் காட்டி இருக்கின்றார்.

எளிமையான காதல் கதைகளையும், கற்பனைக் கதைகளையும் விரும்புபவர்கள் நிச்சயம் இந்த படத்தை ரசிப்பார்கள். அதுவும் குறிப்பாக ஜானி டெப்பின் ரசிகர்களுக்கு இந்த படம் நிச்சயமாக காண வேண்டிய ஒரு படம்.   

இரு தேசங்களின் கதை : ஆரியவர்த்தமும் பிற தேசங்களும்...!!!

தேசியம்...வந்தேறிகள்...குடியுரிமை என்று இன்று பல குரல்கள் எழும்பிக் கொண்டிருக்கின்றன. "யார் வந்தேறிகள்? யார் பூர்வகுடி மக்கள்? எவ...