தேசியம்...வந்தேறிகள்...குடியுரிமை என்று இன்று பல குரல்கள் எழும்பிக் கொண்டிருக்கின்றன. "யார் வந்தேறிகள்? யார் பூர்வகுடி மக்கள்? எவ்வாறு அவர்களை இனம் பிரிக்கின்றீர்கள்? 300 400 வருடங்களாக வாழ்ந்து வருகின்ற மக்களை வந்தேறிகள் என்று கூறுவது எங்கனம் சரியாகும்?" என்ற கேள்விகளும் விவாதங்களும் நிகழ்ந்த வண்ணமேதான் இருக்கின்றன. தமிழகமாகட்டும் சரி, இந்தியமாகட்டும் சரி இதற்கு இன்று விதிவிலக்கல்ல...!!! இந்த நிலையைப் பற்றித்தான் நாம் இங்கே இத்தொடரில் பார்க்க வேண்டியிருக்கிறது. அதுவும் குறிப்பாக இந்தியாவின் வரலாற்றினைப் பற்றி நாம் காண வேண்டியிருக்கிறது.

'ஹிந்துராஷ்டிரம்' 'அகண்ட பாரதம்' 'இது இந்துக்களின் பூமி' என்று இன்று இந்தியாவை அழைப்பவர்களின் வாதம் சுருக்கமாக இதுதான் : "இங்கே நாங்கள் இந்துக்கள் வாழ்ந்து வந்து கொண்டிருந்தோம்...எங்கள் தேசத்தின் மீது இசுலாமியர்கள் படை எடுத்து வந்து எங்கள் வளங்களை கொள்ளை அடித்து விட்டீர்கள்...எங்கள் பெருமைகளை சிதைத்து விட்டீர்கள்...நீங்கள் வெளியேறுங்கள்". சுருக்கமாக இதுதான் அவர்களின் வாதம். அந்த வாதம் கிருத்துவ மதத்திற்கும் பொருந்தும்தான். இந்தியாவின் மீது படையெடுத்து வந்த அன்னியர்கள் பற்றிய அவர்களது வாதம் பெரும்பாலும் இஸ்லாமிய படையெடுப்பினையே ஆரம்பமாகக் கொண்டிருக்கும். அதற்கு முன்னர் நடந்த படையெடுப்புகளைப் பற்றி அவர்களுக்கு பெரிதும் அக்கறை இல்லை...அப்படிப்பட்ட படையெடுப்புகள் நடந்ததாகவே அவர்கள் காட்டிக் கொள்ளவும் மாட்டார்கள்.

"இஸ்லாமியர்கள் எங்கள் மீது படையெடுத்து வந்து எங்கள் தேசத்தைக் கொள்ளை அடித்து விட்டீர்கள்...!!!" - இதுதான் அவர்களது தாரக மந்திரம். இஸ்லாமியர்கள் படையெடுத்து வந்ததை நாம் மறுக்கவில்லை. அது ஒரு வரலாற்று நிகழ்வு. அதில் நாம் கேள்வி கேட்பதற்கோ அல்லது மறுப்பதற்கோ ஒன்றுமில்லை.

இசுலாமியர்கள் படையெடுத்து வந்தார்கள் - இது உண்மை. ஆனால் அவர்கள் மட்டும்தான் படையெடுத்து வந்தார்களா? அவர்கள் படையெடுத்து வந்த பொழுது இந்திய துணைக்கண்டம் ஒற்றை தேசமாக, ஒரு ஹிந்துராஷ்டிரமாகவா இருந்தது? அப்படி இருந்தால் ஏன் வடக்கே இன்று காணப்படும் இசுலாமியர் எதிர்ப்புத்தன்மை தெற்கே பெருவாரியாக தென்படவில்லை? ஒற்றை நாடாக ஹிந்துராஷ்டிரமாக இந்தத் துணைக்கண்டம் இருந்தது என்றால் - ஏன் தமிழர்கள் ஹிந்துக்களல்ல என்ற முழக்கங்கள் கேட்கின்றன தமிழகத்திலிருந்து?

இந்தக் கேள்விகளைப் பற்றி நாம் விரிவாகப் பார்க்க வேண்டுமென்றால்...நாம் முதலில் மனுதர்மத்தைப் பார்க்க வேண்டியிருக்கிறது.

மனுதர்மம் - இன்றைய இந்திய அரசியலமைப்புச் சட்டம் இதனை அடிப்படையாக வைத்தே உருவாக்கப்பட்டிருக்கிறது. மிகவும் உயர்ந்த நூல் என்று பிராமணர்களால் கொண்டாடப்படுவது. நூலின் காலத்தைப் பற்றி பல்வேறு கருத்துக்கள் நிலவினாலும், மிகவும் புராதன நூல் என்று பிராமணர்களால் கொண்டாடப்படுவது. எனவே இந்துராஷ்டிரம் அல்லது அகண்ட பாரதம் என்ற ஒற்றை தேசம் இருந்திருந்தது என்றால், அதனைப் பற்றிய குறிப்பு நிச்சயமாக இந்த நூலில் இருக்க வேண்டும். காரணம், பிராமணர்கள் கூறுவது போல இந்த நூல் மிகவும் பழமையான நூலாக இருக்கக்கூடிய பட்சத்தில், வேறு மதங்கள் எதுவும் உலகில் இருந்திருக்கவில்லை...மேலும் வேறு படையெடுப்புகளும் நிகழ்ந்திருக்க முடியாது. இந்து மதம் எவ்விதமுமான கலப்புமின்றி தூய்மையானதாக அக்காலத்தில் இருந்திருக்கும். இந்த அடிப்படையிலேயே நாம் மனுதர்மத்தை 'ஹிந்துராஷ்டிரம்' பற்றிய குறிப்புகளுக்காக காண வேண்டியிருக்கிறது.

ஆனால் ஆச்சர்யம் என்னவென்றால் மனுதர்மத்தில் 'ஹிந்துராஷ்டிரம்' என்கின்ற ஒரு ஒற்றை தேசத்தைக் குறிக்கக்கூடிய வண்ணம் எந்தொரு குறிப்புமே இல்லை என்பதுதான். இன்றைக்கு இந்தியாவில் இருக்கக்கூடிய ஒவ்வொருவரும் இந்தியாவின் எல்லையை நன்கு அறிந்து இருப்பர். காஷ்மீர் துவங்கி கன்னியாகுமரி வரை இருக்கின்ற நிலப்பரப்பு இந்தியா. இதில் மாற்றுக்கருத்து இல்லை. 'அகண்ட பாரதம்' என்ற கூற்றானது இந்தியாவுடன் பாகிஸ்தானின் நிலப்பரப்பையும் (பிரிவினைக்கு முன்பிருந்த இந்தியா) சேர்த்துப் பார்ப்பதாகும். இது அனைவருக்கும் தெரியும். ஆனால் மனுதர்மத்தில் அத்தகைய நிலப்பரப்பினைப் பற்றிய கூற்றே இல்லை என்பதுதான் ஆச்சர்யமாக இருக்கிறது.

"இந்தா வந்துட்டார்களே இந்து மத விரோதிகள்...தேசத் துரோகிகள்...இந்துராஷ்டிரம் பற்றிய குறிப்பு மனுதர்மத்திலே இல்லைனா என்ன இப்போ? அது தர்மங்களை போதிக்கின்ற நூல்...அதில் எல்லைகளைப் பற்றி குறிப்பு இருக்குமா? சும்மா பேச வேண்டியது!!!" என்ற கூற்றுகள் சில இங்கே எழும்பக்கூடும்.

ஆனால் உண்மை என்னவென்றால் மனுதர்மத்தில் எல்லைகளைப் பற்றிய குறிப்பு இருக்கத்தான் செய்கின்றது. அந்த எல்லைகள் இவர்கள் கூறுகின்ற 'இந்துராஷ்டிரத்தின்' எல்லைகள் அல்ல...மேலும் அவை இந்துராஷ்டிரம் என்ற ஒன்றை குறிக்கவுமில்லை. மாறாக பல்வேறு தேசங்களைப் பற்றியே அவை கூறிக் கொண்டிருக்கின்றன. அந்த தேசங்கள் என்னவென்றால்:

  1. பிரம்மாவர்த்த தேசம்
  2. மத்திய தேசம்
  3. குருஷேத்திரம்
  4. மச்ச தேசம்
  5. பாஞ்சாலம்
  6. வடமதுரை (வடக்கே இருக்கும் மதுரா - நம்ம மதுரை இல்லை)
  7. ஆரியவர்த்தம்

"சரஸ்வதி என்னும் திருஷத்துவதி என்னும் தேவநதிகளையுடைய மத்தியப்பிரதேசமானது தேவர்களால் ஏற்படுத்தப்பட்ட பிரம்மாவர்த்த தேசமென்று சொல்லப்படும்" - மனு அத்தியாயம் 2 - 17

"குருஷேத்திரம், மச்ச தேசம், பாஞ்சால தேசம், வடமதுரை இதுகள் பிரம்மரிஷிகள் வசிக்கின்ற தேசங்கள்...இவைகள் பிரம்மா வர்த்த தேசத்தின் சிறப்பிற்குக் கொஞ்சம் குறைந்திருக்கின்றன" - மனு அத்தியாயம் 2-19

"இம்மோர்ப் பர்வதத்திற்கும் விஞ்சைப் பர்வதத்திற்கும் (விந்திய மலை) நடுவாயும் சரஸ்வதி நதி மறைந்த விசனச தேசத்திற்குக் கிழக்காயும் பிரயாகைக்கு மேற்காவும் இருக்கின்ற இடமானது மத்திய தேசமென்று சொல்லப்படுகிறது." - மனு அத்தியாயம் 2-21

"கிழக்கு சமுத்திரம் தொடங்கி மேற்கு சமுத்திரம் வரையில் முன் சொன்ன மலைகளின் நடுப்பிரதேசமானது சாதுக்கள் வசிக்கின்ற ஆரியா வர்த்ததேசமென்று சொல்லப்படுகின்றது." - மனு அத்தியாயம் 2 - 22

"இப்படிப்பட்ட புண்ணிய தேசங்களை துவிஜர்கள் வேறு தேசத்தில் பிறந்தவராயினும் வந்தடைய வேண்டியது அல்லது சூத்திரன் ஊழியத் தொழிலை விட வேறு விர்த்தியை எந்தவிடத்தில் அடைய மாட்டானோ அந்த விடத்தில் வசிக்கத் தக்கது." - மனு அத்தியாயம் 2: 24

இன்றைய இந்திய கண்டத்தின் அமைப்பினை வைத்துப் பார்த்தோமே என்றால், அந்த எல்லைகள் இன்றைய பிஹார், குஜராத், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், பஞ்சாப், ஹரியானா போன்ற வட மாநிலங்களோடு நின்று விடுகிறது. அந்த தேசங்களைத்தான் மிகவும் புண்ணிய பிரதேசங்களாக மனு தர்மம் கூறுகின்றது. அந்த புண்ணிய தேசங்களின் இன்றைய நிலையை நாம் கண்டோமே என்றால், அவை புண்ணிய தேசங்களா அல்லது பாவப்பட்ட தேசங்களா என்ற குழப்பத்தில் நிச்சயமாக மாட்டிக் கொள்வோம்.

ஆரியவர்த்த நிலப்பரப்பு:
மாடுகளுக்காக மனிதர்களை கொல்லும் இந்தியாவின் மாட்டுப் படுகை மாநிலங்கள்:

பெண்களின் முன்னேற்றத்தில் பின்தங்கியுள்ள மாநிலங்கள்:


மனிதவள மேம்பாட்டில் பின்தங்கியுள்ள மாநிலங்கள் பட்டியல்:



வறுமை அதிகமாக உள்ள மாநிலங்கள் பட்டியல்:


புண்ணிய தேசமென்று மனுநூல் குறிப்பிட்டுள்ள இடங்கள் மிகவும் மோசமான தன்மையுடைய இடங்களாக இன்று இருந்து கொண்டிருக்கின்றன. ஏன் அவை அவ்வாறு இருக்கின்றன என்ற கேள்விக்கும் நாம் விடையினைத் தேடத்தான் வேண்டியிருக்கிறது.


அத்தோடு நில்லாமல் துவிஜர்கள் (பிராமணர்கள், சத்திரியர்கள், வைசியர்கள்) வேறு எந்த தேசத்தில் பிறந்தவர்களாக இருந்தாலும் மேற்சொன்ன அந்த புண்ணிய தேசங்களுக்கு வந்து விடுமாறும் அந்த நூல் கூறுகிறது. அதுவும் குறிப்பாக சூத்திரன் அடிமைத் தொழில் செய்யாத தேசங்களில் இருந்து வந்து விடுங்கள் என்று கூறுகிறது. 'இந்துராஷ்டிரம்' என்ற ஒற்றை தேசத்தைப் பற்றிய குறிப்பு இருக்கும் என்று எண்ணி இந்த நூலைப் படிக்க ஆரம்பித்த நமக்கு இந்தக் கூற்றும் மேலும் பல கேள்விகளுக்கு வழி வகுக்கிறது...

1) வேறு தேசங்கள் என்றால் அவை என்ன? அங்கு யார் இருந்தார்கள்?
2) சூத்திரர்கள் மனு தர்ம காலத்திலேயே ஊழியத்தொழில் செய்யாமல் இருந்தார்களா?
3) ஏன் விந்திய மலைக்கு கீழே இருக்கக்கூடிய இடங்களைப் பற்றி ஒன்றும் கூறப்படவில்லை?

இந்த கேள்விகளுக்குத்தான் நாம் இப்பொழுது விடை தேட வேண்டியிருக்கிறது...அதுவே காலத்தின் தேவையும் ஆகும்...

தேடுவோம்!!!

தொடரும்...!!!

நாடார்களின் வரலாறு சற்று விசித்திரமானது...!!!

கிட்டத்தட்ட 120 வருடங்களுக்கு முன்பாக கோவில்களுக்குள் நுழைய அனுமதியற்றவர்களாய், பார்க்கத்தகாதவர்களாய் கருதப்பட்டிருந்த அம்மக்கள், இன்று சமூகத்தில் ஒரு நல்ல இடத்தில் வீற்று இருக்கின்றனர். இன்றைக்கு எந்த கோவில்களுக்குள்ளும் நுழைவதற்கு அவர்களுக்குத் தடையேதும் இல்லை. மேலும் சொல்ல போனால், RSS, VHP, பிஜேபி என்று இருக்கக்கூடிய இந்துத்துவ அமைப்புகளுக்கு தமிழகத்தில் மிக்க ஆதரவளித்து கொண்டிருக்கக்கூடிய ஒரு சமூகமாக அவர்கள் இருக்கின்றனர்.

அதாவது எந்த கொள்கை அவர்களைப் 'பார்க்கத்தகாதவர்கள்' என்று முத்திரையிட்டு அவர்களை கோவில்களுக்குள் அனுமதிக்க மறுத்ததோ, அதே கொள்கையை கொண்டிருக்கக்கூடிய அமைப்புகளை அவர்கள் இன்று ஆதரித்துக் கொண்டிருக்கின்றனர். மேலும், எந்த கொள்கை அவர்களை ஒடுக்கியதோ, அதே கொள்கை இன்று அவர்களை கோவில்களுக்குள் அனுமதித்துக் கொண்டிருக்கின்றது.

விசித்திரமான நிகழ்வுதான் இல்லையா....!!!

அந்த நிகழ்வின் வரலாற்றைத்தான் ஒரு அருமையான நூலாக நூலாசிரியர் தொகுத்து இருக்கின்றார். இன்றைக்கு இருக்கின்ற நாடார் சமூதாய மக்கள் தாங்கள் ஒடுக்கப்பட்ட வரலாற்றினையே அறியாதவர்களாக இருக்கின்றார்கள். உண்மைதான், இன்றைக்கு ஆங்கிலேயர்கள் நம்மை அடக்கி ஆண்டார்கள் என்கின்ற வரலாற்றினை பாடப் புத்தகங்களில் இருந்து நாம் நீக்கி விட்டாமே என்றால், ஆங்கிலேயர்கள் நம்மை அடக்கி ஆண்ட வரலாறு இன்றைய இளைய தலைமுறையினருக்கு புலனாக வாய்ப்புகள் பெரிதாக இருக்காது. தாங்கள் ஒரு காலத்தில் அடிமைகளாக இருந்தோம் என்கின்ற உண்மை அவர்களுக்குத் தெரியாமலேயே போய் விடும். எனவேதான் வரலாற்று பாடங்களில் நம்முடைய சுதந்திரப் போராட்டங்களைப் பற்றிய வரலாற்றினை நாம் இன்றளவும் மாணவர்களுக்கு கற்பித்துக் கொண்டிருக்கின்றோம்.

அதனைப் போன்றே, நாடார்கள் ஒடுக்கப்பட்டிருந்த வரலாற்றினை இளம் தலைமுறையினரிடம் கொண்டு போய் சேர்க்கக் கூடிய ஒரு அருமையான நூலாகவே இந்த நூல் இருக்கின்றது. அதுவும் இன்றைய சூழலில் ஹிந்துத்துவக் கொள்கைக்கு நாடார் சமூகம் தன்னை மீண்டும் கொண்டு போய் அடகு வைத்துக் கொண்டிருக்கக்கூடிய காலத்தில் இத்தகைய வரலாற்று நூல்களுக்கு நாம் முக்கியத்துவம் தந்தாகத்தான் வேண்டியிருக்கிறது.

சில நேரங்களில் 'என்ன செய்ய முடியும்?' என்கின்ற கேள்வியானது தலையைப் பிக்க வைத்து விடுகிறது. எளிமையாக இருக்க வேண்டிய ஒரு வாழ்வினை, மிகுந்த சிக்கல் நிறைந்த ஒன்றாக நாமே திறம்பட அமைத்து வைத்துக் கொண்டு, பின்னர் சிக்கலான வாழ்வினை எவ்வாறு எளிமையாக மாற்றுவது என்று சிந்தித்துக் கொண்டிருக்கின்றோம். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையான பிரச்சனைகள் முளைத்துக் கொண்டேதான் இருக்கின்றன. ஒரு வகையான கோபம், ஒரு வகையான இயலாமை நம்மை மெதுவாக ஆட்கொள்ளத்தான் செய்கிறது.

'என்ன செய்ய முடியும்? ' என்கின்ற கேள்விக்கு விடையினை வேறு யாராவது தந்தார்கள் என்றால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்ற எண்ணம் வருவதனை அந்நிலையில் தவிர்க்க முடிவதில்லை. 'வாழ்க்கையானது உண்மையில் எளிமையானது' என்கின்ற உண்மையை மக்களுக்கு உணர்த்தக்கூடிய எளிய வழிமுறைகள் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்றே மனம் எண்ணவும் செய்கின்றது.

அப்படிப்பட்ட ஒரு எளிய வழிமுறையாகத்தான் நான் இந்த 'ஸ்மர்ப்ஸ் (Smurfs)' படக்கதையினைக் காணுகின்றேன். பள்ளி செல்லுகின்ற வயதிலே கார்ட்டூன் நெட்ஒர்க் சேனலில்தான் முதலில் ஸ்மர்ப்ஸ் கார்ட்டூனை நான் கண்டிருந்தேன். அப்பொழுது அவை என்னை பெரிதாக ஈர்த்து இருக்கவில்லை. ஆனால் சில காலங்களுக்கு முன்பாக அவற்றை புத்தக வடிவில் படிப்பதற்கு வாய்ப்பு கிட்டிய பொழுதுதான், அந்த கதாபாத்திரங்களின் அருமை எனக்கு விளங்கலாயிற்று. மிகவும் அருமையாக மனித வாழ்வினைப் பற்றியும், தற்சார்புப் பொருளாதாரத்தைப் பற்றியும் நகைச்சுவை உணர்வுடன் அந்த புத்தகங்கள் விளக்கிக் கொண்டிருக்கின்றன. எனவே 'என்ன செய்ய வேண்டும்?' என்ற ஒரு கேள்வி என்னுடைய மண்டையைக் குடைந்து கொண்டிருந்த பொழுது, 'இந்த கதாபாத்திரங்களை அறிமுகம் செய்வது ஒரு பயனுள்ள விடயமாக இருக்கும்' என்ற எண்ணம் தோன்றியதால் இப்பதிவு. இனி அந்த நீலப் பொடியர்களின் உலகத்திற்குள் செல்வோம்...!!!

ஸ்மர்ப்ஸ் (தமிழில் நீலப் பொடியர்கள்) ஒரு அழகிய உலகத்தினில், இயற்கையோடு ஒன்றிணைந்து வாழ்ந்து வந்து கொண்டிருக்கும் ஒரு இனத்தினர். அவர்களுக்குள் எந்தொரு பிரிவினையும் பிரச்சனையும் கிடையாது. ஒவ்வொரு ஸ்மர்ப்பும் மற்றவர்களுக்கு உதவிகரமாக இருக்கின்ற வண்ணம் ஒரு தொழிலை செய்து வருகின்றான். அவர்கள் அனைவருக்கும் தலைவராக 'சீனியர் ஸ்மர்ப்' என்ற புத்திக்கூர்மை மிக்க வயதானதொரு ஸ்மர்ப் இருக்கின்றார். அவர் சொல்லைத்தான் அவர்கள் அனைவரும் கேட்டுக் கொண்டு அமைதியாக ஆட்டம் பாட்டம் என்று ஒரு அருமையான வாழ்வினை வாழ்ந்து வந்து கொண்டிருக்கின்றார்கள். அவரும் அவர்களைத் திறம்பட வழிநடத்திக் கொண்டிருக்கின்றார்.

அணை கட்ட வேண்டுமா, அனைத்து ஸ்மர்ப்களும் வேலை செய்வார்கள்...பாலம் கட்ட வேண்டுமா...அனைவரும் வேலை செய்வார்கள்...அவர்கள் அனைவரும் அவர்கள் அனைவருக்கும் ஒற்றுமையுடன் இருப்பதால், 'என்னுடைய வேலைக்கு இவ்வளவு கூலி' என்ற கேள்விகளை அவர்கள் முன்வைப்பதில்லை...எனவே பணம் என்கின்ற ஒரு விடயமும் அவர்களின் உலகத்தினில் இல்லை. நாங்கள் சமூகமாக வாழ்கின்றோம், அந்த சமூகத்திற்கு எங்களால் என்ன செய்ய முடிகிறதோ அதை செய்கின்றோம்...என்றே அவர்கள் ஒற்றுமையாய் வாழ்ந்து வருகின்றார்கள். ஒற்றுமை என்று சொன்னவுடன், அவர்களுக்குள் பிரச்சனையே வராது என்றும் அவர்கள் சண்டையே போட மாட்டார்கள் என்றும் எண்ணி விடாதீர்கள். எந்த பிரச்சனை வந்தாலும் அவற்றை அவர்கள் மறந்து மீண்டும் வழக்கம் போல இயல்பாய் மாறி விடுவதில்தான் அவர்களின் வெற்றி இருக்கிறது.

எனவே, அனைவரும் ஒற்றுமையாக ஒருவருக்கு ஒருவர் உதவிக் கொண்டு தற்சார்பு வாழ்வினை வாழ்ந்து வந்து கொண்டிருக்கும் ஒரு சமூகம் தான் கதைக்களம்...இப்பொழுது இந்த சமூகத்தில் நம்முடைய மனித சமூகத்தினை சீரழித்து வைத்திருக்கும் சில விடயங்களை நாம் அறிமுகப்படுத்தினால் என்னவாகும் என்பதை மிகவும் அருமையாகவும் எளிமையாகவும் இந்த படக்கதைகள் விளக்கி இருக்கின்றன.

உதாரணத்திற்கு மனித உலகத்தில் பணம் என்கின்ற ஒன்று பயன்படுத்தப்படுவதைக் கண்ட ஒரு ஸ்மர்ப், 'ஆகா உழைப்பிற்கு பரிசா - நன்றாக இருக்கின்றதே' என்றெண்ணி பணம் என்கின்ற ஒரு கோட்பாட்டினை ஸ்மர்ப் உலகத்திற்கும் கொண்டு வருகின்றான். முதலில் அவனது இந்த கோட்பாட்டினை வெறும் ஒரு புதுமையான விளையாட்டாக எடுத்துக் கொண்ட மற்ற ஸ்மர்ப்ஸ், விரைவில் அந்த கோட்பாட்டிற்கு அடிமையாகின்றனர். சுயநலம், பேராசை, கடன், போன்ற விடயங்கள் மிக வேகமாய் அந்த சமூகத்தினில் பரவி, விரைவில் அவர்களது கிராமமே அழிவிற்கு வந்து விடுகிறது. இறுதியில் அவர்கள் அந்த பணம் என்கின்ற ஒன்றை துரத்திவிட்டு மீண்டும் தங்களது இயல்பான தற்சார்பு வாழ்வினையே மேற்கொள்ளத் துவங்குகின்றனர். அந்த கிராமமும் பிழைக்கிறது. உண்மையில், 'ஒரு சமூகத்தில் பணத்தின் தாக்கம்' என்கின்ற தலைப்பு மிகவும் சிக்கலானதொரு தலைப்பு. அதனை விளக்குவதற்கு நாம் மிகவும் முயற்சி செய்ய வேண்டி இருக்கும். ஆனால் அப்படிப்பட்ட ஒரு தலைப்பினை, நகைச்சுவை கலந்த ஒரு திரைக்கதை அமைப்பில், மிகவும் அருமையாக ஸ்மர்ப்ஸ் நமக்கு வழங்குகின்றார்கள்...இது ஒரு தனிக்கலைதான். ஆம், அந்த கதைகள் நம்மை சிரிக்க வைப்பதுடன் சிந்திக்கவும் வைக்கின்றன.

பெரும்பாலும் படக்கதைகள் என்பன சிறுவர்களுக்கானவை என்கின்ற ஒரு தவறான கருத்து நம்முடைய சமூகத்தில் பரவியிருக்கின்றது. அக்கருத்து தவறான ஒன்று. உண்மையில், இத்தகைய படக்கதைகள் மிகவும் சிக்கலான சமூக அவலங்களை, சமூக சூழ்நிலைகளை மிகவும் எளிமையாக விளக்குகின்ற வண்ணமே இருக்கின்றன. இவற்றை நாம் சிறுவர்களிடம் கொண்டு செல்வதும் எளிமையாக இருக்கும்...ஒரு நல்ல சமூகம் என்றால் எப்படி இருக்க வேண்டும், எப்படி இருக்கும், அதனில் பிரச்சனைகள் எவ்வாறு வரும்? என்கின்ற விஷயங்களை இக்கதைகள் மிகவும் எளிமையாக சிறுவர்களுக்கு விளங்க வைத்து விடுகின்றன. எனவே இக்கதைகளை நாம் அடுத்த தலைமுறையினருக்கு கொண்டு செல்லவும் வேண்டியிருக்கிறது!!!

கொண்டு செல்ல முயல்வோம்...!!!

பி.கு:

தமிழில் இந்த படக்கதைகள் லயன் காமிக்ஸ் நிறுவனத்தாரால் வெளியிடப்பட்டு வந்து கொண்டிருக்கிறது.
http://lion-muthucomics.blogspot.com/2016/08/blog-post_30.html

கடந்த பதிவுகளில் அமெரிக்கா சந்தித்த பொருளாதார நெருக்கடியின் காரணிகளைப் பற்றி பார்த்திருந்தோம். அதிலிருந்து நாம் அறிந்து கொண்டவை...

  • வங்கிகளும் ஏனைய நிதி நிறுவனங்களும் தான் அந்த வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக இருந்தன.
  • அவை அனைத்தும் தனியார் நிறுவனங்கள்.
  • தனி நபர்களின் பேராசையின் காரணமாகவே தான் அந்த நெருக்கடிக்கு காரணமாக இருந்தது.
  • அந்த நிறுவனங்கள் தங்களுக்கு ஏற்ப சட்டங்களை அமைத்துக் கொள்கின்றனர். அதற்கு ஏதாக ஆட்சியாளர்களை பயன்படுத்திக் கொள்கின்றனர்.
  • அந்த நிறுவனங்களின் செயல்பாடுகளை அமெரிக்க அரசானது கண்டு கொள்ளவே இல்லை. அனைத்து கட்டுப்பாடுகளையும் அது தளர்த்தி இருந்தது.
மிகவும் கட்டுக்கோப்பான சட்டங்களைக் கொண்ட நாடு...40 KM வேகத்தில் செல்ல வேண்டிய இடத்தில் 41 KM வேகத்தில் சென்றாலே அபராதம் கட்ட வேண்டி வரும், இலஞ்சம் கிஞ்சம் எல்லாம் வேலைக்கு ஆகாது என்று சராசரி மனிதனால் புகழப்படும் அமெரிக்காவிலேயே நிலைமை இப்படித்தான் இருக்கிறது. இந்நிலையில் தான் நாம் இந்தியாவை பார்க்க வேண்டியிருக்கிறது.

உலகையே உலுக்கிய அந்த பொருளாதார நெருக்கடி, இந்தியாவில் பெருமளவு பாதிப்பை ஏற்படுத்தவில்லை...எந்தெந்த துறைகள் அமெரிக்காவையும் ஐரோப்பியாவையும் சார்ந்து இருந்தனவோ (ஏற்றுமதி...மென்பொருள்) அந்த துறைகள் மட்டுமே தான் பாதிப்படைந்து இருந்தன. ஏனென்றால் இந்தியாவின் ஏனைய துறைகள் ஒன்று அரசாங்கத் துறைகளாக இருந்தன, அல்லது அரசாங்கத்தின் கட்டுப்பாடுகளுக்கு கட்டுப்பட்டவைகளாக இருந்தன. மக்களின் வாழ்க்கை முறை பெருமளவு வங்கிகளைச் சார்ந்து இருக்கவில்லை. இதனால் மற்றைய துறைகள் எவ்விதமான பாதிப்புகளுமின்றி இயல்பாகவே இயங்கிக் கொண்டிருந்தன என்றே கூறலாம். தனது கொள்கைகளை அரசாங்கம் மாற்ற முயன்ற பொழுதும் வலுவான எதிர்ப்புகள் அந்த நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்தின...உதாரணமாக,

பங்குச் சந்தையை ஊக்குவிக்க, மக்களின் PF பணத்தை பங்குச் சந்தையில் முதலீடு செய்யலாம் என்று மன்மோகன் சிங் அரசு முடிவெடுத்த பொழுது, அப்பொழுது எதிர்ந்த எதிர்ப்பால் அந்த நடவடிக்கையை அது கைவிட்டது.

இத்தகைய நடவடிக்கைகளால் எவனோ எங்கோ செய்த தவறினால்/திருட்டினால் ஒட்டு மொத்த நாட்டு மக்களுமே இன்னலுக்கு உள்ளாகும் அந்த நிலை தடுக்கப்பட்டது. சரி, இப்பொழுது நாம் இன்றைய சூழலைப் பார்ப்போம்...

  • கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக எடுத்த நடவடிக்கை என்று கூறப்பட்ட பணமதிப்பிழக்க நடவடிக்கையின் பலனாக எஞ்சியிருப்பது, மக்கள் அனைவரின் பணமும் வங்கிகளுக்கு வந்து விட்டது...அவ்வளவே!!!
  • அனைத்து துறைகளையும் தனியார் வசம் ஒப்படைக்கும் முயற்சி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
  • நிறுவனங்களின் மீதிருக்கும் கட்டுப்பாடுகள் தளர்த்தப் பட்டு கொண்டிருக்கின்றன (Deregulating the industry) (உதாரணமாக பெட்ரோல் டீசல் விலைகளை அரசு கட்டுப்படுத்தாமல், அதனை அந்த நிறுவனங்களிடமே விட்டு இருக்கின்றது தானே...)
  • PF மற்றும் பென்ஷன் தொகைகளை பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் முயற்சிகள் (இன்றைக்கு தமிழகத்தில் அரசு ஆசிரியர்கள் இதனை எதிர்த்து தான் போராட்டம் செய்கின்றனர்)
  • அனைத்து துறைகளிலும் அந்நிய முதலீடு அளவுக்கு அதிகமாக அனுமதிக்கப்படுகின்றது. அதாவது அமெரிக்காவின் பொருளாதார வீழ்ச்சிக்கு காரணமான பெரு நிறுவனங்கள் இந்தியாவிலும் முதலீடு செய்யலாம்.
  • காங்கிரஸ் பிஜேபி போன்ற கட்சிகளுக்கு பெருவாரியான நிதிகள் பெரு நிறுவனங்களிடமிருந்தே வருகின்றது.
ஒருவரின் சொற்களால் அல்ல மாறாக செயல்களிலாலேயே அவரது குணத்தினை நாம் அடையாளம் கண்டு கொள்ள முடியும்...அதன் அடிப்படையிலேயே தான் நாம் நமது அரசாங்கத்தையும் காண வேண்டியிருக்கின்றது. அவ்வாறு கண்டோமென்றால், நமக்கு புலனாவது, அமெரிக்காவைப் போன்றே, நமது அரசும் பெரு நிறுவனங்களின் கைப்பாவையாக செயல் பட்டுக் கொண்டிருக்கின்றது. மக்களின் நலனை அதனிடம் இருந்து எதிர் பார்க்க முடியாது.

அரசாங்கம் இப்பொழுது மேற்கொள்கின்ற நடவடிக்கைகள் எல்லாம்வெற்றி பெற்றது என்றால், அடுத்த முறை இப்படி ஒரு பொருளாதார வீழ்ச்சி அமெரிக்காவில் வரும் பொழுது இந்தியாவிலும் பாதிப்பு மிகவும் அதிகமாக இருக்கும். இது பொய் அல்ல...!!!

உதாரணமாக, ஐஸ்லேன்ட் நாட்டின் பொருளாதாரம் மிகவும் அருமையானதொரு பொருளாதாரமாக இருந்தது. ஆனால் 2000 ஆம் ஆண்டில், IMFயின் சிபாரிசின் பேரில், அது தன்னுடைய மூன்று மாபெரும் பொது வங்கிகளை தனியார் மயமாக்கியது. அதன் விளைவு, 2007 ஆம் ஆண்டு பொருளாதார வீழ்ச்சியில், அந்த நாடும் அதிகமாக அடிபட்டு, அங்கும் இலட்சக்கணக்கான மக்கள் வேலை இழந்தனர், உடைமைகளை இழந்தனர்...சேமிப்புகளை இழந்தனர்...!!! அதே நிலை தான் நாளை நமக்கும் வரலாம்...வரும்!!!

உலக முழுவதையும் தங்களின் கட்டுக்குள் கொண்டு வந்து, தங்களது வணிகத்தைப் பெருக்கிக் கொள்ள சில நிறுவனங்கள் விரும்புகின்றன...அதற்கு அவை 'கடன்', 'ஆசை' என்ற மாபெரும் ஆயுதங்களை பயன்படுத்துகின்றன...IMF, உலக வங்கி போன்ற நிறுவனங்களும் அந்த நிறுவனங்களின் கொள்கைகளும், அந்த மாபெரும் வணிக நிறுவனங்களுக்கு உதவும் வகையிலேயே அமைந்து இருக்கின்றன...

ஒரு சாதாரண மனிதன் விரும்புகின்ற ஒரு எளிமையான அமைதியான வாழ்வினை, தங்களது பேராசையால் அந்த நிறுவனங்கள் வெறும் பகற் கனவாக்கி விடுகின்றன...!!!

வாழ்க்கை உண்மையில் எளிமையானது தான்...அதனை நம்மிடமிருந்து அவர்கள் மறைத்து விடுகின்றார்கள்...முடியாத ஒரு வட்டத்தில் நம்மை அவர்கள் ஓட வைத்து விடுகின்றார்கள்...!!!

அந்த வட்டத்தில் இருந்து வெளிவரவே நாம் போராட வேண்டியிருக்கின்றது...ஒரு எளிமையான வாழ்விற்காகவே நாம் முயல வேண்டி இருக்கின்றது...!!!

அந்த எளிமையான வாழ்வினை நம்மிடம் இருந்து மறைக்கின்ற பொய்களை நாம் அடையாளம் காண வேண்டியிருக்கின்றது...அதற்காகவே நாம்அதிகமாய் அறிந்து கொள்ள வேண்டியிருக்கின்றது...அறிந்து கொண்டு பிறருக்கும் போதிக்க வேண்டியிருக்கின்றது...!!! தற்சார்பு பொருளாதார அமைப்பிற்கே நாம் முயல வேண்டியிருக்கின்றது...அதுவே தான் தீர்வு!

உண்மை நம்மை விடுவிக்கும்...!!!

ரியல் எஸ்டேட் வணிகம்...!!!

2008 ஆம் ஆண்டில் அமெரிக்கா சந்தித்த அந்த பொருளாதார நெருக்கடிக்கு மிக முக்கியமான காரணம் இந்த வணிகம் தான் என்றால் அது மிகையாகாது. எனவே இதனடிப்படையில் அந்த பொருளாதார நெருக்கடியினைப் பற்றிப் பார்ப்பதுதான் சரியாக இருக்கும் என்றே எண்ணுகின்றேன்.

"குறைந்த காலத்தில் அதிக இலாபம்" என்பதே அமெரிக்கா நிதி நிறுவனங்களின் இலக்காக இருந்தது. அதற்கு ரியல் எஸ்டேட் வணிகம் அவர்களுக்கு பெரிதும் உதவியது.

"வீடு என்பது இலாபகரமான முதலீடு, அதில் நீங்கள் தங்கவும் செய்து கொள்ளலாம்...வாடகைக்கும் விட்டு வருமானம் பார்க்கலாம், இல்லையேல் அதனை விற்கவும் செய்யலாம்...பாருங்கள், சென்ற வருடத்தினை விட வீட்டின் விலை இப்பொழுது எவ்வளவு அதிகரித்து இருக்கின்றது என்று. எனவே வீட்டில் முதலீடு செய்வது நிச்சயமாக இலாபகரமானது தான்" என்ற விளம்பரங்களின் வாயிலாக ரியல் எஸ்டேட் வணிகம் பெரிதும் வளர்க்கப்பட்டது.

வீட்டு மனைகளின் விலை உயர்வு


அனைவருக்கும் கடன் வாரி வாரி வழங்கப்பட்டது. அவர்களால் கடனினைத் திருப்பி அடைக்க முடியுமா இல்லையா என்பதெல்லாம் கணக்கில்லை, அவர்கள் கடன் வாங்க வேண்டும், அவ்வளவு தான் என்ற குறிக்கோளுடன் இயங்குவது போல் வங்கிகள் செயல்பட்டன. என்ன, வட்டியின் அளவு தான் சற்று மிக அதிகம். இதன் விளைவாக வீட்டு மனைகளின் விலைகளும் உயர்ந்தன...கடனாளிகளான அமெரிக்கர்களின் எண்ணிக்கையும் உயர்ந்தது.


அமெரிக்காவில் தனி மனிதனின் கடன் அளவு

ஆனால், இங்கு ஒரு கேள்வி எழலாம்...அவ்வளவு கடன் தருவதற்கு வங்கிகளிடம் பணம் எவ்வாறு வந்தது? இந்த கேள்விக்கு விடையில் தான் அரசியலே இருக்கின்றது. வங்கிகள் தாங்கள் கடன் வாங்கிய பணத்தினைக் கொண்டே தான் மற்ற மக்களுக்கு கடனினைத் தந்தன. அதாவது கடன் வாங்கி கடன் தந்தன. புரியவில்லை தானே...இங்கு தான் பங்குச்சந்தை வருகின்றது.

வங்கிகள் கொடுத்த வீட்டு மனைக் கடன்களுக்கு வட்டி விகிதம் அதிகம்...மிகஅதிகம்...எனவே அந்த வட்டிகள் எல்லாம் முறையாக வந்திருந்தன என்றால் அந்த வங்கிகள் கொள்ளை இலாபம் அடைந்திருக்கும். அதனைக் கருத்தில் கொண்டு பங்குச் சந்தை நிறுவனங்கள் என்ன செய்தன என்றால், அந்த கடன்களை எல்லாம் ஒரு பங்காகத் திரட்டி, அதனை முதலீட்டாளர்களிடம் 'அதிக வருமானம் பெற்றுத் தரக் கூடிய பங்குகள்' என்று கூறி விற்கத் துவங்கின. எனவே அந்த பங்குகளில் பெருமளவு முதலீடு செய்ய மக்கள் ஆரம்பித்தனர். அவ்வாறு முதலீடு செய்யப்பட்ட பணத்தைக் கொண்டு வங்கிகள் தொடர்ந்து கடன் தந்து கொண்டிருந்தனர்.

மேலும், இங்கே அந்த நிதி நிறுவனங்கள் காப்பீட்டுத் துறையையும் விட்டு வைக்கவில்லை...'நாங்கள் இந்த பங்குகளை விற்று இருக்கின்றோம்...' அவை வீழ்ச்சியடைந்தால் எங்களுக்கு இழப்பீடு தேவை என்று கூறி தங்களைத் தாங்களே அதிகத் தொகைக்கு காப்பீடும் செய்து கொண்டன (மேலும் தாங்கள் விற்ற அந்த பங்குகள் தோல்வியடையும் என்று அவர்கள் பங்குச் சூதாட்டத்திலும் ஈடுபட்டனர் என்பது வேறு கதை).

அதாவது, முதலீட்டாளர்களிடம் இருந்து வாங்கிய பணத்தை வைத்துக் கொண்டு வங்கிகள் கடன் தந்திருக்கின்றன. அந்த கடன் திரும்பி வருமா இல்லையா என்பதையெல்லாம் அவர்கள் கருத்தில் எடுத்துக் கொள்ளவில்லை, அவர்களது நோக்கம் குறுகிய கால இலாபம் மட்டுமே தான். அந்த இலாபத்தை அவர்கள் அடையவும் செய்தார்கள். அவ்வாறு இலாபமானது கூட கூட, அவர்கள் இந்த வணிகத்தை மேலும் மேலும் வளர்க்கலாயினர்.

Wall Street நிதி நிறுவங்களின் தலைமை அதிகாரிகள் பெற்ற போனஸ் தொகைகள்

"நீங்கள் அபாயகரமான முதலீடுகள் செய்கின்றீர்கள்..." என்ற கூற்றுகளையும், "இந்த நிதி நிறுவனங்களின் செயல்களை வரையறை செய்து கட்டுப்படுத்த வேண்டும் (regulate)" என்ற வாதங்களையும் அந்த நிறுவனங்கள் மதிக்காமல் சென்று கொண்டே இருந்தன...காரணம் - அவர்களின் பண பலம் அத்தகையது. தங்களது பண பலத்தினைக் கொண்டு அவர்கள் அரசை விலைக்கு வாங்கி இருந்தனர்.

ரகுராம் ராஜனின் எச்சரிக்கை அறிக்கை


அந்த நிதி நிறுவனங்களின் இந்த நடவடிக்கை மிகவும் அபாயகரமானது என்றும், அதனால் மாபெரும் பொருளாதார நெருக்கடி உலகமுழுவதும் வரலாம் என்று பலர் எச்சரிக்கை செய்தும் அவர்கள் அதனைப் பொருட்படுத்தவில்லை. உதாரணமாக நம்முடைய ரகுராம் ராஜனும் நிதி நிறுவங்களின் சந்திப்பில் இதனைப் பற்றி கூறி இருக்கின்றார். "நீங்கள் குறைந்தளவு ரிஸ்கில் அதிகளவு இலாபம் அடைகின்றோம் என்று கூறுகின்றீர்கள்...ஆனால் அதிகளவு ரிஸ்க் எடுத்து நீங்கள் அதிகளவு இலாபம் பார்க்கின்றீர்கள். இது ஒரு மாபெரும் பொருளாதார நெருக்கடிக்கு வழிவகுக்கும்" என்றே ரகுராம் ராஜன் அவர்கள் கூறி இருக்கின்றான். ஆனால் அதனை அந்த நிர்வாகிகள் பொருட்படுத்திக் கொள்ளவில்லை. அவர்களின் குறிக்கோள் முழுவதும் 'குறுகிய காலத்தில் கொள்ளை இலாபம்' என்பதாகவே இருந்தது.

அதன் விளைவு தான் அமெரிக்காவின் 2008ஆம் ஆண்டு பொருளாதார வீழ்ச்சி. கடன் வாங்கியவர்களால் கடனைத் திருப்பித் தர முடியாத பொழுது அந்த பிரச்சனைத் துவங்கியது. கடன் வாங்கியவர்களால் கடனைத் திருப்பித் தர முடியவில்லை என்ற பொழுது, ஒன்றிற்கும் ஆகாத வீட்டு மனைகளை வைத்துக் கொண்டு வங்கிகளால் ஒன்றும் செய்ய முடியவில்லை...மேலும் அதன் விளைவாக தாங்கள் வாங்கிய கடன்களையும் அந்த நிறுவனங்களால் திருப்பித் தர முடியவில்லை. அதன் விளைவாக வங்கிகள் மற்றும் அந்த பங்குச் சந்தை நிறுவனங்கள் வீழ்ச்சி அடைகின்றன.

மேலும், அந்த நிறுவனங்கள் தங்களது இந்த விளையாட்டில் காப்பீட்டு நிறுவனங்களையும் இழுத்து விட்டு வைத்திருப்பதால், அந்த காப்பீட்டு நிறுவனங்களும் வீழ்ச்சியடைகின்றன. பல்லாயிரக்கணக்கானோர் ஒற்றை நாளில் வேலை இழக்கின்றனர். மேலும் பொருளாதார நெருக்கடி அதிகரிக்கின்றது. வங்கிகளில் தங்களது பணத்தினைப் போட்டு வைத்திருந்த மக்களால் எவ்வாறு அந்த வங்கியானது மூடியதற்கு பின்பு அப்பணத்தை எடுக்க முடியும்? அவர்களின் பணமும் பறி போகிறது. அந்த நிறுவனங்கள் வீழ்ச்சியடைந்தாலும், அதன் தலைமை நிர்வாகிகள் தாங்கள் அடைந்த இலாபத்தை அப்படியே வைத்துக் கொண்டனர். அதாவது வங்கியில் பணத்தைப் போட்ட சாதாரண மனிதன் ஆண்டியாகி விட்டான்...ஆனால் அந்த வங்கி நிர்வாகியோ கோடீஸ்வரராகி விட்டார். எப்படி இருக்கிறது கதை?



இந்த சூழலால் ஒட்டு மொத்த அமெரிக்காவும் ஒரு பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகின்றது. ஆனால் இம்முறை அமெரிக்கா மட்டுமல்ல ஒட்டு மொத்த உலகமுமே இந்த நெருக்கடிக்கு ஆளாகின்றது. ஏனென்றால், அமெரிக்காவில் இருக்கின்ற நிறுவனங்கள் உலகமுழுதும் தங்களது செயல்பாடுகளை வைத்து இருக்கின்றன. அதனால் அவற்றின் தாக்கம் உலகமுழுவதும் இருக்கின்றது.

அதாவது ஒரு சில நிதி நிறுவன அதிகாரிகளின் பேராசையின் காரணமாக உலகமே ஒரு பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகி இருக்கின்றது...இலட்சக்கணக்கான மனிதர்கள் வேலை இழந்து இருக்கின்றார்கள்...இன்னும் அநேக பாதிப்புகள் இருக்கின்றன...சரி இருக்கட்டும்...'பணமதிப்பிழக்கமும் வங்கிகளும்' என்று தலைப்பிட்டு விட்டு அமெரிக்க பொருளாதார வீழ்ச்சியினைப் பற்றியே நாம் இது வரை அநேகமாக கண்டு வந்திருக்கின்றோம்...அதன் காரணம் என்னவென்றால், இன்றைய இந்திய அரசின் நடவடிக்கைகளை அறிந்து கொள்ள வேண்டுமென்றால் நாம் இந்த வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் நடவடிக்கைகளை முதலில் அறிந்து கொள்ள வேண்டும். அப்படி செய்தால் தான் நம்மால் முழுதாக இவற்றைப் பற்றி அறிந்து கொள்ள முடியும்.

சரி இப்பொழுது நாம் நம்முடைய நாட்டைப் பற்றிப் பார்க்கலாம்...!!!

(அடுத்த பதிவில் முடியும்)

பணமதிப்பிழக்கத்தின் மூலமாக அனைவரது பணத்தையும் வங்கிகளுக்கு கொண்டு வந்த நடவடிக்கையினைப் பற்றியே நாம் கண்டு கொண்டு இருக்கின்றோம். கருப்பு பணத்தை ஒழிப்பதற்கான நடவடிக்கை என்று கூறப்பட்ட பணமதிப்பிழக்கத்தின் முடிவுகள் வேறு விதமாக அமைந்திருக்கின்றன...எனவே தான் நாம் அதைப் பற்றி காண வேண்டியிருக்கின்றது. சரி இருக்கட்டும், இப்பொழுது நாம் சென்ற பதிவின் முடிவில் நாம் கண்ட விடயத்திலிருந்தே தொடரலாம்.

என்னிடம் இருக்கின்ற 1000 ரூபாயை வங்கியில் போடுகின்றேன்...அந்நிலையில் அந்த வங்கிக்காரன் கடையைச் சாத்தி விட்டு கிளம்பி விட்டான் என்றால் என்ன செய்வது என்ற கேள்வியினைத் தான் நாம் சென்ற பதிவில் கண்டிருந்தோம். இந்த கேள்வி சிலருக்கு அபத்தமாகத் தெரியலாம்...ஆனால் நம்மைச் சுற்றி நிகழ்கின்ற நிகழ்வுகளை வைத்து பார்க்கும் போது இந்தக் கேள்வியின் முக்கியத்துவம் தெரியும்.

உதாரணமாக விஜய் மல்லையாவின் கதையையே எடுத்துக் கொள்ளலாமே...9600 கோடி கடனினை மல்லையாவிற்கு தந்து விட்டு நமது ஊரிலேயே ஒரு வங்கி முழி பிதுங்கி நின்று கொண்டிருக்கிறதே. அந்த 9600 கோடி ரூபாய் யாருடைய பணம்? அந்த வங்கியில் சேமித்து வைத்தவர்களின் பணம் தானே...அதைத் தானே எடுத்து மல்லையாவிற்கு தந்திருக்கிறது அந்த வங்கி...இப்பொழுது அந்த பணம் திரும்பி வரவில்லை என்றால், அந்த வங்கியினால் எவ்வாறு அந்த பணத்தின் உரிமையாளர்களுக்கு மீண்டும் பணத்தினைத் தர இயலும்? முடியாது தானே. வங்கியில் பணத்தினை போட்டு வைப்பதுடன் எனது வேலை முடிந்து விடுகின்றது, அந்த பணத்தினை அவர்கள் எங்கே வைத்திருக்கின்றார்கள், அதற்கு வட்டியினை அவர்கள் எவ்வாறு தருகின்றார்கள், அந்த பணத்தினைக் கொண்டு அவர்கள் என்ன செய்கின்றார்கள், அதனை யாருக்குத் தருகின்றார்கள் என்பதெல்லாம் நமக்குத் தெரிவதில்லை...பணம் போட்டு இருக்கின்றோம், அது பத்திரமாக இருக்கும், கூடுதலாக அவர்கள் அதற்கு வட்டியும் தருகின்றார்கள் என்பதுடன் நாம் மன நிறைவடைந்து நின்று விடுகின்றோம்.

அட என்னங்க...எல்லாத்தையுமா நம்ம கவனிச்சிக்கிட்டு இருக்க முடியும், அதுக்குதான் வங்கி அதிகாரிகள் இருக்கின்றார்கள், அரசாங்கம் இருக்கிறது, அதன் சட்டங்கள் இருக்கின்றது...எல்லாம் முறைப்படி நடக்கிறதா என்று அவர்கள் கவனித்துக் கொள்ள மாட்டார்களா? ஒரு முறை தவறு நிகழ்ந்து விட்டது என்பதால் அதனையே பிடித்துக் கொண்டு குறை கூறுவது சரிதானா? என்ற ஒரு வாதம் இங்கே இயல்பாக எழக்கூடும். இந்தக் கேள்விக்காகத்தான் நாம் அமெரிக்காவின் பொருளாதார வீழ்ச்சியினைப் பார்க்க வேண்டியிருக்கின்றது.

நாம் சென்ற பதிவில் கண்டிருந்தோம், 1930களில் அமெரிக்கப் பொருளாதாரம் கிட்டத்தட்ட முற்றிலுமாக அழிந்து விட்டது என்று. அதன் காரணம் பங்குச் சந்தையும் வங்கிகளும் ஒன்றன்பின் ஒன்றாக தொடர்ந்து வீழ்ந்தது தான். அந்த வீழ்ச்சியினைப் பற்றி நாம் சிறிது மேலோட்டமாக கண்டு விடலாம்.

முதலாம் உலக யுத்தத்தில் மாபெரும் வெற்றியையும் அதன் விளைவாக மாபெரும் செல்வத்தையும் அடைந்த அமெரிக்காவின் பொருளாதாரம் தொடர்ந்து ஏறுமுகமாகத்தான் இருந்தது. போரில் அமெரிக்காவிற்கு இழப்பென்று பெரிதாய் ஒன்றும் கிடையாது, ஆனால் அனைத்து ஐரோப்பிய தேசங்களும் மாபெரும் இழப்பை அடைந்து இருந்தன, ஏனெனில் யுத்தம் நிகழ்ந்ததே ஐரோப்பிய நிலப்பரப்பில்தான்...ஆகவே அவர்கள் தங்களை மறு சீரமைப்பு செய்து கொள்ளவும், தங்களது தொழில்களை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வரவும் நீண்ட காலம் தேவைப்பட்டது. ஆனால் அமெரிக்காவிற்கு அத்தகைய தேவை என்று எதுவும் கிடையாது...அதன் தொழில்கள் முன்னைவிட சிறப்பாக இயங்கிக் கொண்டிருந்தன. ஐரோப்பாவிலும் ஆசியாவிலும் தேவைகள் இருந்தன, அமெரிக்காவில் தேவைக்கு மீறிய உற்பத்தி இருந்தது. போதாதா, புதிய நிறுவனங்கள் ஏற்றுமதி செய்கின்றோம், உற்பத்தி செய்கின்றோம் என்று தொடர்ந்து அமெரிக்காவில் தொடங்கிய வண்ணம் இருந்தன...இலாபம் கணக்கில்லாமல் வந்து கொண்டிருந்தது...பங்கு சந்தையும் கட்டுப்பாடின்றி வளர்ந்து கொண்டிருந்தது.

ஆனால், எப்பொழுது ஐரோப்பிய நாடுகள் மீண்டும் தமது உற்பத்தியை தொடங்கினவோ, அப்பொழுது அவற்றுக்கு பொருள்களை இறக்குமதி செய்ய வேண்டிய தேவை இல்லாது போய் விடும்தானே. அசுரத்தனமான இலாபங்களைக் கண்டு வந்து கொண்டிருந்த அமெரிக்க நிறுவனங்களின் இலாபம் குறைய ஆரம்பிக்கும்தானே...ஆனால், தங்களது இலாபங்கள் உண்மையிலேயே குறைந்தாலும், அவற்றை மறைத்து வைத்துவிட்டு, தொடர்ந்து தாங்கள் இலாபம் அதிகமாக கண்டு வந்து கொண்டிருக்கின்றோம்...எங்களது வணிகம் அருமையாகப் போய் கொண்டு இருக்கின்றது என்று அந்த அமெரிக்க நிறுவனங்கள் போலிக் கணக்குகளைக் காட்டி மக்களைத் தொடர்ந்து தங்களது பங்குகளில் முதலீடு செய்ய வைத்தால் என்னவாகும்?

மக்கள் தொடர்ந்து முதலீடு செய்து கொண்டே இருப்பார்கள்...அந்த பணத்தினைக் கொண்டு அந்த நிறுவனம் தனது வணிகத்தை வளர்த்துக் கொள்ள முயற்சி செய்யும், ஆனால் விழுந்து கொண்டிருக்கும் ஒரு கட்டிடத்தை எத்தனை காலம் தான் வண்ணம் பூசி மறைத்து வைக்க முடியும்? ஒருநாள் விழுந்துத் தானே ஆகும். அதுதான் அமெரிக்காவிலும் நிகழ்ந்தது...பெரிய நிறுவனங்கள் என்று கருதப்பட்ட நிறுவனங்களின் பெருந்தலைகள் கிடைத்த இலாபம் போதுமென்று மக்களின் பணத்தினை எடுத்துக் கொண்டு இராவோடு இராவாக நிறுவனத்தை இழுத்து மூடிக் கொண்டு ஓடினர். அவர்களைச் சார்ந்திருந்த ஏனைய நிறுவனங்கள் அவர்களைத் தொடர்ந்து கையை விரிக்க ஆரம்பித்தன. பங்குச் சந்தைகளில் பணம் போட்டிருந்த மக்கள் அதே இரவில் ஆண்டியாகிப் போயினர்.

சரி, பங்குச் சந்தையில் போட்ட பணத்தின் நிலைதான் இப்படி ஆயிற்று, நல்லவேளை வங்கிகளில் நமது பணம் பத்திரமாக இருக்கும் என்று எண்ணியவர்களின் நிலையும் அப்படியேத்தான் ஆயிற்று. வங்கிகளும் தங்கள் வசமிருந்த பணத்தினை பங்குச் சந்தையில் தான் போட்டு வைத்திருந்தன...எனவே அந்த வங்கிகளும் திவாலாகத் துவங்கின. இப்படித்தான் ஒரு மாபெரும் விஞ்ஞான ஊழல் ஆரம்பமாயிற்று...அதன் விளைவு, அமெரிக்காவின் பொருளாதார நெருக்கடி, இலட்சக்கணக்கான மக்கள் ஒன்றுமில்லாதவர்களாக மாறிப் போனது. அந்த நெருக்கடியிலிருந்து அமெரிக்கா வெளிவருவதற்கு நீண்ட காலம் ஆனது. அது வேற கதை...ஆனால் நாம் இங்கே அறிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், அந்த பொருளாதார வீழ்ச்சிக்கு காரணமாக இருந்தது கட்டுப்படுத்தப்படாத பங்குச் சந்தைதான் என்பதனை அமெரிக்கா அறிந்து கொண்டு, பங்குச் சந்தையையும் ஏனைய நிறுவனங்களையும் வலுவான சட்டதிட்டங்கள் மூலம் கட்டுப்படுத்த ஆரம்பித்தது. எவரும் ஏமாற்ற முடியாத வண்ணம் அந்த கட்டுப்பாடுகள் இருந்தன...வங்கிகள், தங்களது முதலீட்டார்களின் பணத்தினைக் கொண்டு ஊக வணிகம் செய்வதற்கோ அல்லது ஆபத்தான முதலீட்டினை செய்வதற்கோ அனுமதிக்கப்படவில்லை...பங்கு சந்தையிலும் அதிகாரம் பரவலாக இருக்கும்படியும், ஊக வணிகம் செய்யாமல் அந்த நிறுவனங்கள் இருக்கும்படியும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன் விளைவாக 1930 களுக்குப் பின் 1980கள் வரை அமெரிக்காவில் எந்த விதமான பொருளாதார நெருக்கடியும் எழவில்லை.

ஆனால் 1980களில் கதை மீண்டும் மாற ஆரம்பித்தது. அமெரிக்க நிதி நிறுவனங்களின் (Wall Street) பலம் அதிகரிக்கத் துவங்குகின்றது.

1980களில் இருந்து, அமெரிக்க நிதி நிறுவனங்களில் இருந்தவர்களுக்கும் மற்ற துறையில் இருந்தவர்களுக்கும் இடையில் இருக்கும் சம்பள வேறுபாட்டினைக் காட்டும் படம்.

பலம் பொருந்தியதாக இருக்கின்ற அமெரிக்க தனியார் நிதி நிறுவனங்கள், தங்களது கொள்கைகளுக்கு ஏற்பாக இருக்கும் ஒரு அதிபரை பதவிக்கு கொண்டு வருகின்றனர்...அவர் தான் ரொனால்டு ரீகன். இவரின் காலகட்டத்தில் தான் அமெரிக்க நிதி நிறுவனங்களின் மீதிருந்த கட்டுப்பாடுகள் நீக்கப்படுகின்றன (Deregulate). பொருளாதார வளர்ச்சிக்காக எந்த முதலீட்டை வேண்டுமென்றாலும் செய்யலாம், அது எவ்வளவு ஆபத்தான முதலீடாக இருந்தாலும் சரி, அரசாங்கம் இனி கட்டுப்பாடுகள் விதிக்காது என்று அந்த நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்படுகின்றது. மேலும் ஊக வணிகத்திற்கும் அனுமதி அளிக்கப்படுகின்றது. அதன் விளைவு தான் அடுத்த 30 ஆண்டுகளுக்குள் அமெரிக்கா 5 பொருளாதார நெருக்கடிகளைச் சந்தித்து விட்டது.

அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையின் காரணமாக பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாகிக் கொண்டே சென்றனர்.

அமெரிக்க மக்களின் மத்தியில் நிலவும் வருமான ஏற்றத்தாழ்வினை காட்டும் படம். 1 சதவீதம் இருக்கின்ற மக்கள் ஏனைய அனைத்து மனிதர்களைக் காட்டிலும் எந்தளவு அதிகம் சம்பாதிக்கின்றார்கள்.


அந்த பணத்தை வைத்துக் கொண்டு அவர்கள் தங்களுக்கு ஏற்ற சட்டங்களை நடைமுறைப் படுத்திக் கொண்டனர். நிதி நிறுவனங்களை அரசாங்கம் கட்டுப்படுத்தும் நிலை போய், நிதி நிறுவனங்கள் மறைமுகமாக அரசை கட்டுப்படுத்தும் நிலை ஆரம்பமாயிற்று. அந்த நிலைதான் 2008 ஆம் ஆண்டு அமெரிக்கா சந்தித்த மாபெரும் பொருளாதார நெருக்கடிக்கு காரணமாகும். இந்த நெருக்கடியைப் பற்றி நாம் இந்த பதிவில் முழுதாக காண வேண்டியத் தேவையில்லை, ஆயினும் மேலோட்டமாக நாம் அதனைப் பற்றி சிறிது கண்டாகத்தான் வேண்டி இருக்கின்றது.

காணலாம்...!!!


தொடர்புடைய இடுகைகள்:

வாழ்வும் கடனும்
முதலாளித்துவம் ஒரு காதல் கதை
ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்.

நான் ஒரு பொருளாதார நிபுணன் அல்ல...இதனை முதலிலேயே நான் சொல்லியாக வேண்டியிருக்கிறது. ஏனெனில் இந்தப் பதிவில் நுணுக்கமான பொருளாதார கோட்பாடுகளையோ அல்லது அதன் விமர்சனங்களையோ நீங்கள் எதிர்பார்த்தீர்களே என்றால், நிச்சயம் நீங்கள் ஏமாற்றமடையக் கூடும். எனவே நான் ஒரு பொருளாதார நிபுணன் அல்ல என்ற ஒரு விடயத்தை உங்களிடம் முதலிலேயே சொல்லியாகத்தான் வேண்டியிருக்கிறது. எனவே, ஒரு சாமானிய மனிதனான எனது வாழ்வில் நான் கண்டறிந்த விடயங்களை அடிப்படையாக வைத்தே இந்தப் பதிவு அமையப்பட்டிருக்கும். சரி, இப்போது நாம் இரண்டு நிகழ்வுகளைப் பார்க்க வேண்டியிருக்கின்றது.

2001ஆம் ஆண்டு. நான் பத்தாவது படித்துக் கொண்டிருந்த காலம். முதலாம் உலகப் போர், இரண்டாம் உலகப் போர் என்று வரலாற்றுப் பாடத்தில் (மெட்ரிகுலேஷன் பாடத்திட்டம்) யுத்தங்களுக்கு மத்தியில் உலாவிக் கொண்டிருந்த ஒரு காலமது.

"ஹிட்லரின் ஆட்டம் அதிகமாக இருக்கிறதே, இரு இரு அமெரிக்கா மட்டும் போரினுள் இறங்கட்டும்...அப்புறம் பார் ஹிட்லரின் கதியை" என்று ஒரு கதாநாயகனின் வருகைக்காக காத்திருப்பது போல் யுத்தத்தில் 'அமெரிக்காவின்' வருகையை எதிர்பார்த்திருந்த ஒரு காலமது. யுத்தங்களில் வெற்றி பெற்றவர்கள் கதாநாயகர்களாவது இயல்பு தானே. அமெரிக்காவும் அவ்வாறுதான் எங்கள் முன் ஒரு கதாநாயனாக அப்பொழுது உருவாகி இருந்தது.

ஆனால் போர் எங்களுக்கு எளிதாகப் புரிந்தது போல், பொருளாதாரம் எங்களுக்குப் புரியவில்லை. 'என்னடா இவன், வரலாறு...போர் அப்படி இப்படின்னு ஆரம்பிச்சிட்டு திடீர்னு பொருளாதாரம் பற்றி பேசுகிறான்' என்ற எண்ணம் இங்கே வரலாம். ஏனென்றால் எங்களது பாடப் புத்தகத்தில் இரண்டு உலகப் போர்களுக்கு இடையில் 'அமெரிக்காவின் பெரும் பொருளாதார சரிவு (The Great American Depression)' என்று வந்த அந்தப் பகுதியைக் கண்டதும் எங்களுக்கும் அதே எண்ணம் தான் வந்தது.

முதலாம் உலகப் போரில் பெரிய வெற்றியினைப் பெற்று மாபெரும் இலாபங்களை அடைந்த அமெரிக்கா திடீரென்று ஒன்றுமில்லாதப் பஞ்ச பரதேசியாக மாறி விட்டது என்று அதில் கூறி இருந்தார்கள். கோடீஸ்வரர்களாக இருந்தவர்கள் எல்லாம் ஒரே நாளில் தெருவுக்கு வந்து விட்டார்கள் என்றார்கள். வேலையில்லாமல் அமெரிக்கர்கள் அனைவரும் வாடினார்கள் என்று கூறினார்கள். புதுப் பணக்காரனாக அமெரிக்கா அழிந்து விட்டது என்று இங்கிலாந்து மற்றும் ஏனைய உலக நாடுகள் கருதின என்று கூறினார்கள்.

எங்களுக்கு ஒன்றுமே புரியவில்லை.

எங்கும் தோற்கவில்லை, யுத்தத்தில் வென்றுதான் இருக்கிறார்கள், இயற்கை பேரழிவுகள் ஒன்றுமில்லை, அப்படி இருக்கும் போது எப்படி அந்த நாடு திடீரென்று ஒன்றுமில்லாத நாடாக மாற முடியும்? கோடிக்கணக்கான பணத்தினை வைத்திருக்கும் மனிதன், அவனிடம் இருந்து யாரும் கொள்ளையடிக்காமல் எவ்வாறு திடீரென ஒன்றுமில்லாதவனாக முடியும்?

என்னிடம் 1000 ரூபாய் இருக்கின்றது என்றால், அதனை நான் செலவழிக்காமல் இருக்கின்ற வரையோ அல்லது என்னிடமிருந்து அதனை யாரும் திருடாத வரையோ, அந்த ஆயிரம் ரூபாய் என்னிடம் தானே இருக்கக்கூடும். எதுவுமே நடக்காமல், அந்த 1000 ரூபாய் என்னிடம் இருக்கின்ற போதே நான் எவ்வாறு பிச்சைக்காரனாக முடியும்?

இது எனக்கு அன்று புரிந்திருக்கவில்லை. நீண்ட காலம் புரிந்துக் கொள்ள முடியவில்லை, ஏனென்றால் அதன் தேவையும் அப்பொழுது இருந்திருக்கவில்லை. சரி இருக்கட்டும்...இப்பொழுது நாம் 2008 ஆம் வருடத்திற்கு செல்ல வேண்டியிருக்கிறது.

 2008 ஆம் ஆண்டு...மென்பொருள் நிறுவனம் ஒன்றில் பொறியாளராக பணிப் புரிந்து கொண்டிருந்த காலம். 'அமெரிக்காவில் பூம்...பூம் (Boom - அதாவது அமெரிக்காவின் பொருளாதாரம் பிச்சுக் கொண்டு போகின்றது என்று அர்த்தம்)' என்று கூறி மென்பொருள் நிறுவனங்கள் போட்டிப் போட்டுக் கொண்டு ஆட்களை எடுத்துக் கொண்டிருந்த காலம்.  அந்த நிறுவனம் இந்த நிறுவனத்தை வாங்கியதாம், அவனுக்கு இவ்வளவு சம்பளமாம் என்று எங்கு திரும்பினாலும் அதே பேச்சு.

ஆனால் திடீரென்று ஒரு நாள், 'அமெரிக்காவின் பொருளாதாரம் மந்தமாகி வருகின்றது...புதிய வேலைகளை அமெரிக்க நிறுவனங்கள் எதுவும் எளிதாக வழங்க மறுக்கின்றன, என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்..அனைவருக்கும் வேலை போனாலும் போகலாம்' என்ற செய்தி பரவலாக வெளிவர ஆரம்பித்தது. சில நாட்களிலேயே அமெரிக்காவின் முன்னணி வங்கிகள் மண்ணைக் கவ்வுகின்றன...தினமும் 'அந்த வங்கி திவாலானது' 'இந்த வங்கி திவாலானது' என்ற செய்திகள் வெளி வந்த வண்ணம் இருக்கின்றன. அதற்கேற்றார்ப் போல், மென்பொருள் நிறுவனங்களிலும் வாராவாரம் ஆயிரக்கணக்கானோர் பணிநீக்கம் செய்யப்பட்டார்கள். வேலைக்காகத் தேர்வு செய்யப்பட்டு, பணியில் சேருவதற்காக காத்துக் கொண்டிருந்த பல்லாயிரக்கணக்கோர் தங்களது எதிர்காலம் எப்படி இருக்கும், 'வேலைக்கு கூப்பிடுவார்களா இல்லையா?' என்பதனை அறியாமலே தொடர்ந்து காத்துக் கொண்டிருந்தனர். ஏற்றுமதி முற்றுலுமாக படுத்துக் கொண்டது.

இம்முறையும் இந்த நிலை எதனால் வந்தது என்று புரியவில்லை. அமெரிக்காவின் பொருளாதாரம் அமோகமாக இருக்கின்றது என்று கூறிய ஒரு சில தினங்களிலேயே, அங்கே மாபெரும் பொருளாதார நெருக்கடி நேருகின்றது. இலட்சக்கணக்கானோர் வேலை இல்லாமல் இருக்கின்றனர், பெரிய பெரிய நிறுவனங்கள் இழுத்து மூடப்படுகின்றன...1930களில் நடந்ததை விட மோசமான ஒரு நிலையில் அமெரிக்கா தள்ளப்படுகின்றது. ஆனால் இம்முறை பாதிப்பு அமெரிக்காவில் மட்டுமல்ல, ஐரோப்பாவிலும் அதன் தாக்கம் இருக்கின்றது...ஆஸ்திரேலியாவிலும் இருக்கின்றது...உலக முழுவதும் இருக்கின்றது.

இந்தியாவிலும் எந்தெந்த துறையெல்லாம் அமெரிக்காவைச் சார்ந்து இருந்ததோ, அந்த துறையெல்லாம் பாதிக்கப்பட்டிருக்கிறது....அந்த துறைகள் மட்டுமே பாதிக்கப்பட்டிருந்தன. மற்ற ஏனைய துறைகள் வழக்கம் போல் இயங்கிக் கொண்டுதான் இருந்தன. 2008 ஆம் ஆண்டில் உலகை உலுக்கிய அந்த நெருக்கடி இந்தியாவில் பெரும் பாதிப்பினை ஏற்படுத்தவில்லை. ஏன் இந்த நிலைமை? எதனால் இவ்வாறு நிகழ்கின்றது? என்ற கேள்விகளுக்கு அப்பொழுதும் எனக்கு தெளிவான விடை கிட்டவில்லை. சரி இருக்கட்டும், இப்பொழுது, 'பணமதிப்பிழக்கமும் வங்கிகளும்' என்று தலைப்பை வைத்து விட்டு அவற்றைப் பற்றி ஒன்றுமே கூறாமல், ஏதேதோ சம்பந்தமில்லாமல் பேசிக் கொண்டுப் போகின்றானே என்றே நீங்கள் எண்ணலாம். ஆனால் நான் சம்பந்தமில்லாமல் பேசவில்லை...நான் கூறிய நிகழ்வுகளுக்கும் நமது நாட்டில் இன்று நிகழ்ந்து கொண்டிருக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு இருக்கின்றது. அந்தத் தொடர்பினைத் தான் நாம் இன்று காண வேண்டி இருக்கின்றது.

அதுவும் குறிப்பாக பணமதிப்பிழக்கம் என்ற ஒற்றை நடவடிக்கையின் மூலமாக மக்களது ஒட்டுமொத்த பணத்தையும் வங்கிகளுக்கு கொண்டு வந்து விட்ட இந்த காலத்தில் நாம் இதனைப் பற்றி கண்டாகத் தான் வேண்டி இருக்கின்றது.

முதலில், கருப்புப்பணத்தை ஒழிப்பதற்காக இந்த நடவடிக்கை என்றார்கள்...ஆனால் கருப்பு பணமே நாட்டில் இல்லை என்ற முடிவினைத் தான் இப்பொழுது அவர்களது புள்ளி விவரங்கள் தருகின்றன...ஒரு கருப்பு பணத்தையும் அவர்கள் பிடித்த பாடில்லை. பிடிக்கவும் மாட்டார்கள் என்பது வேற கதை.

ஆனால் வெற்றிகரமாக அவர்கள் என்ன செய்திருக்கிறார்கள் என்றால், மக்களது பணத்தை வங்கிகளுக்கு கொண்டு வந்து சேர்த்திருக்கிறார்கள்...மேலும் இனிமேல் பணம் சார்ந்த பரிவர்த்தனைகளும் வங்கிகளின் மூலமாகவே நடைபெறும் வண்ணம் இருக்கின்ற ஒரு அமைப்பினை நடைமுறைப்படுத்த அவர்கள் விரும்புகின்றனர்.

அவர்களின் இந்த நடவடிக்கைகளினாலேயே தான் நாம் மேலே உள்ள விடயங்களை காண வேண்டியதாயிற்று. ஏனென்றால் இரண்டுக்கும் தொடர்பு இருக்கின்றது. இப்பொழுது உங்களிடம் முதலில் கேட்ட கேள்வியையே மீண்டும் கேட்கிறேன்...

என்னிடம் 1000 ரூபாய் இருக்கின்றது என்றால், அதனை நான் செலவழிக்காமல் இருக்கின்ற வரையோ அல்லது என்னிடமிருந்து அதனை யாரும் திருடாத வரையோ, அந்த ஆயிரம் ரூபாய் என்னிடம் தானே இருக்கக்கூடும். எதுவுமே நடக்காமல், அந்த 1000 ரூபாய் என்னிடம் இருக்கின்ற போதே நான் எவ்வாறு பிச்சைக்காரனாக முடியும்?

முடியாது தானே. சரி, இப்பொழுது அந்த ஆயிரம் ரூபாயை நான் வங்கியில் போட்டு வைத்திருக்கின்றேன்...அந்த வங்கிக்காரன் வங்கியை இழுத்து சாத்திவிட்டு போய் விட்டான் என்றால், ஆயிரம் ரூபாய் என்னிடம் இருந்தும் கூட நான் பிச்சைக்காரனாகி விடுகின்றேன் தானே...!!!

அமெரிக்காவிலும் அதேதான் நடந்தது. ஒரே நாளில் இலட்சக்கணக்கானோர் அமெரிக்காவில் பிச்சைக்காரர்களானது இப்படித்தான். அமெரிக்காவில் இருப்பவை அனைத்தும் தனியார் வங்கிகள்...ஒரே நாளில் அவை கடையை சாத்த, அந்த வங்கியில் பணத்தினை வைத்திருந்த மக்கள் அனைவரும் வீதிக்கு வந்து விட்டார்கள். அரசாங்க வங்கி என்றால் அரசாங்கத்தைக் கேள்வி கேட்கலாம், தனியார் வங்கிகள் என்றால் யாரைக் கேள்வி கேட்பது...? சரி இருக்கட்டும்...இப்பொழுது இந்த விடயத்தினைப் பற்றித் தான் நாம் விரிவாக பார்க்க வேண்டி இருக்கின்றது.

காணலாம்...!!!

தொடர்புடைய இடுகைகள்:

வாழ்வும் கடனும்
முதலாளித்துவம் ஒரு காதல் கதை
ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்.

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு