கிருத்துவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கிருத்துவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 1 பிப்ரவரி, 2017

இராயனுக்கு உரியதை - 2!!!

சென்ற பதிவில் 'இராயனுக்கு உரியதை இராயனுக்குத் தாருங்கள்' என்று இயேசு ஏன் கூறினார் என்பதனைக் குறித்தே நாம் கண்டோம். இப்பொழுது அதனைக் குறித்தே தான் நாம் மேலும் சற்று காண வேண்டி இருக்கின்றது.

இறைவன் அனைத்தையும் அனைவருக்கும் பொதுவாக இருக்கும்படியே தான் படைத்து இருக்கின்றார். இயற்கை மனிதர்கள் அனைவருக்கும் பொதுவானதாகவே இருக்கின்றது. அனைத்தும் இலவசமாகவே மனிதர்களுக்குத் தரப்பட்டு இருக்கின்றது. மனிதர்களுக்குள் வேறுபாடுகளை இயற்கை காண்பதில்லை...இறைவனும் காண்பதில்லை. இதனை இயேசு கூறிய 'இறைவன் நல்லோர் மீதும் தீயோர் மீதும் ஒன்றினைப் போலவே தான் சூரியனை உதிக்கப் பண்ணுகிறார். அவர்களுள் வேறுபாடுகள் காணாமல் அனைவரின் மீதும் மழையினைப் பொழிய செய்கின்றார்' என்ற வசனங்களின் மூலமாக நம்மால் அறிந்து கொள்ள முடிகின்றது. இறைவன் மனிதர்களுள் வேறுபாடு காணாது அவர்களை ஒன்றாகவே காணுகின்றார். அதுவே அவரது விருப்பமாக இருக்கின்றது.

ஆனால் மனிதர்களோ ஒற்றுமையாக இருப்பதில்லை. அவர்கள் தங்களுக்குள்ளேயே பல்வேறு பிரிவுகளாக பிரிந்து இருக்கின்றனர். 'நான்' என்ற ஆணவத்தினால் வருகின்ற சுயநலமும், பணம் மற்றும் பொருட்களால் வருகின்ற பேராசையும் மனிதர்களை ஒற்றுமையாக இருக்க முடியாதபடிக்கு பிரித்து வைத்திருக்கின்றன. இந்த சுயநல சிந்தனைகளும் பேராசையும் இறைவனிடம் இருந்து வருவதில்லை, அவை சாத்தானிடம் இருந்து வருகின்றன. 'பணம்' இறைவன் படைத்த ஒன்றல்ல. அது மனிதன் படைத்த ஒன்று. 'இலவசமாக பெற்றீர்கள்...இலவசமாக கொடுங்கள்' என்ற இயேசுவின் கூற்றுக்கு முற்றிலும் எதிராக இருக்கின்ற ஒன்று அது. அதனை வைத்துத் தான் தீமையானது மக்களைப் பிரிக்கின்றது. இதனை இயேசு நன்றாக அறிவார்.
 
அதனால் தான் அவர் தெளிவாக செல்வத்திற்கும் இறைவனுக்கும் துளியளவு கூட தொடர்பில்லை என்று கூறி இருக்கின்றார். 'ஒன்று ஒருவன் பணத்திற்காக வேலை செய்து கொண்டிருக்க வேண்டும்...இல்லையேல் இறைவனுக்காக வேலை செய்து கொண்டிருக்க வேண்டும். ஒன்று அவன் பணத்தை தன்னுடைய எசமானனாக கொண்டிருக்க வேண்டும்...இல்லையேல் இறைவனை எசமானனாக கொண்டிருக்க வேண்டும். மாறாக ஒரே நேரத்தில் இரண்டு எசமானர்களுக்கு ஒருவனால் வேலை செய்து கொண்டிருக்க முடியாது.' என்பதே இயேசுவின் கூற்றாக இருக்கின்றது. இதன் அடிப்படையில் தான் நாம் 'இராயனுக்கு உரியதை இராயனுக்குத் தாருங்கள்' என்ற இயேசுவின் கூற்றினைக் காண வேண்டி இருக்கின்றது.

"ஒருவன் உன்னிடமிருந்து பணத்தையோ அல்லது பொருளையோ கேட்கின்றானா, அதனை அவனிடமே தந்து விடு. மனிதன் உருவாக்கிய அவற்றுக்காக நீ சண்டையிடாதே. எப்பொழுது நீ விட்டுக் கொடுக்கின்றாயோ அப்பொழுது நீ பேராசை/ஆசை என்கின்ற தீய குணத்தினை வென்றவன் ஆகின்றாய். இறைவனின் அருளும் உன்னுள் கூடுகின்றது. இறைவனின் மகன் நீ என்கின்ற ஒரு நிலைக்கு நீ உரித்தவனாகின்றாய். தீமை உன்னிடம் தோற்று விடுகின்றது. அதே சமயம், உன்னிடம் இருந்து பொருளை கேட்பவனுக்குள் இருக்கின்ற தீமையை மேலும் வளர விடாதவாறே நீ செய்தும் விடுகின்றாய். மனிதர்கள் அனைவரும் கடவுளின் பிள்ளைகளாகவே இருக்கின்றனர். எனவே, அவன் இப்பொழுது தீமையில் விழுந்து இருந்தாலும், உன்னுடைய அந்த தீமையற்ற தியாகச் செயலினால் அவனும் நிச்சயமாக இன்றில்லாவிடில் வேறு என்றாவது மாற கூடும். ஆனால் முக்கியமான விடயமாக நீ தீமையை வென்று விட்டாய்.

மாறாக நீயும் அவனுடன் அந்த பொருளுக்காக சண்டையிட்டுக் கொண்டாய் என்றால் தீமையானது உன்னுள் நுழைவதற்கு நீயும் வழி வகுத்தவனாகின்றாய். அவனுள்ளும் தீமை தொடர்ந்து வளரும்...உன்னுள்ளும் தொடர்ந்து வளரும். உங்களில் யார் வென்றாலும் சரி...இறுதியில் தீமையே வென்று இருக்கும். எனவே பொருள்/பணம் என்று மனிதன் படைத்த எதுவாக இருந்த போதிலும் அவற்றைப் பொருட்படுத்தாது தியாகம் செய்வதற்கு தயாராக இருங்கள். அரசன் உங்களிடம் இருந்து வரியினைக் கேட்கின்றானா...கொடுத்து விடுங்கள். பணத்திற்கும் இறைவனுக்கும் தொடர்பில்லை. ஆனால் நீங்களோ இறைவனின் குழந்தையாக இருக்கின்றீர்கள். எனவே இறைவனின் கட்டளைகளுக்கு மட்டும் நீங்கள் கட்டுப்பட்டு இருக்க வேண்டி இருக்கின்றது. இறைவனுக்கு சொந்தமான உங்களை, இறைவனின் விருப்பத்திற்கு எதிரான காரியத்தினை செய்வதற்காக யார் வற்புறுத்தினாலும் அதற்கு இணங்காதீர்கள். இறைவனுக்கு மட்டுமே நீங்கள் உரியவர்களாக இருக்கின்றீர்கள். எனவே இறைவன் கூறிய கட்டளைகளான,
 
  1. கோபம் கொள்ளாதீர்கள். அனைத்து மக்களிடமும் சமாதானத்துடனேயே இருங்கள்.

2. விபச்சாரத்தின் மூலம் உங்களை நீங்களே மகிழ்வித்துக் கொள்ளாதீர்கள்.

3. எவரிடத்தும் எக்காலத்திற்கும் எவ்விதமான உறுதிமொழியினையும் எடுத்துக் கொள்ளாதீர்கள்.

4. தீமையினை எதிர்க்காதீர்கள். எவரையும் நியாயந்தீர்க்காதீர்கள், மனித சட்டத்தினிடமும் செல்லாதீர்கள்.

5. வெவ்வேறு நாடுகளிடையே பிரிவுகளை உருவாக்காதீர்கள். உங்களுடைய நாட்டு மக்களை நேசிப்பதைப் போன்றே பிற நாட்டவர்களையும் நேசியுங்கள்.
 
இவற்றை நீங்கள் தவறாது கடை பிடிக்க வேண்டி இருக்கின்றது. இவற்றில் இருந்து உங்களை யாரும் விலக்க முடியாது. அவர்களுக்கு அந்த அதிகாரம் கிடையாது. நீங்கள் இறைவனின் பிள்ளைகள். எவருக்கும் அடிமைகளில்லை." என்பதே தான் அவர் கூறிய முழுமையான அர்த்தமாகும். நிற்க.
 
இது எல்லாம் நடைமுறை சாத்தியமாக முடியுமா என்கின்ற கேள்வி இயல்பாகவே பலருக்கும் வரும். நிச்சயமாக கடினம் தான்...ஆனால் முடியாதது இல்லை. அவற்றுக்காகத் தான் ஆன்மீகம் சார்ந்தோர் உழைக்க வேண்டும். அது மட்டுமே தான் அவர்களது வேலையாக இருக்கின்றது.
 
இன்று கிருத்துவர்களுக்கு மற்ற சமயத்தினருக்கும் வழிபாட்டு முறையினைத் தவிர வேறு பெரிய வித்தியாசங்கள் கிடையாது. வாழ்க்கை முறையானது கிட்டத்தட்ட ஒன்றாகவே தான் இருக்கின்றது. எனவே அவர்களுக்கு இயேசுவின் இந்த கூற்றுகள் நிச்சயமாக கடினமானதாகத் தான் தோன்றும்.

அதில் வியப்பில்லை..ஏனென்றால் கிருத்துவம் என்பது எளிமையான ஒரு கோட்பாடு அல்ல. சர்வ வல்லமை படைத்த இறைவன் மனிதனாக வந்து மரணிப்பது என்பது சொல்வது போல் அவ்வளவு எளிதான கோட்பாடு அல்ல தான். இதனைக் கூறாத அனைத்து திருச்சபைகளும் கிருத்துவ மக்களை ஏமாற்றிக் கொண்டு தான் இருக்கின்றன. இதனை கிருத்துவ மக்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

முற்றும்.

பி.கு:
 
இயேசு, கிருத்துவ நூலின் வசனங்கள் என்று கிட்டத்தட்ட ஒரு கிருத்துவ சமய கருத்துரையினைப் போன்றே இந்த கட்டுரையானது தோன்றினாலும் ( :) நிச்சயமாக அப்படித்தான் தோணும்.) இவற்றில் மனித சமூதாயத்திற்கான உண்மைகளும் இருக்கின்றன என்பதாலேயே தான் பதிவிடுகின்றேன் (நான் கிருத்துவ சமயத்தினைச் சார்ந்தவன் அல்ல என்பதையும் இங்கே கூறிக் கொள்ள விழைகிறேன்).

செவ்வாய், 24 ஜனவரி, 2017

இராயனுக்கு உரியதை - 1

'ஒரு கிருத்துவன் தேசங்களுக்கு இடையில் வேறுபாடுகள் காணலாமா?' என்ற கேள்வியை கிருத்துவ மக்களிடம் முன் வைத்த பொழுது அவர்களின் பதில் பெரும்பாலும் 'ஆம். தேசங்கள் மத்தியில் வேறுபாடுகள் இருக்கலாம். ஒரு மனிதன் தன்னுடைய அரசாங்கத்திற்கு கட்டுப்பட்டு சட்டத்திட்டங்களை ஒழுங்காகப் பின்பற்றிக் கொண்டிருக்க வேண்டும்' என்றே தான் இருந்தது. அவர்களது அக்கூற்றுக்கு அவர்கள் விவிலியத்தில் இருந்து சான்றாகத் தருவது 'இராயனுக்கு உரியதை இராயனுக்குத் தாருங்கள்...இறைவனுக்கு உரியதை இறைவனுக்குத் தாருங்கள்' என்ற வசனத்தையே தான். அதாவது அரசன் உங்களிடம் இருந்து எதனைக் கேட்கின்றானோ அதனை அரசனிடம் தாருங்கள், இறைவன் உங்களிடம் இருந்து எதனைக் கேட்கின்றானோ அதனை இறைவனிடம் தாருங்கள் என்பதே அதன் அர்த்தம் ஆகும். இந்த வசனத்தை வைத்துக் கொண்டு தான், 'பாருங்கள் இயேசுவே அரசுக்குத் தர வேண்டிய வரிகளைத் தாருங்கள்...அரசு உங்களிடம் இருந்து எதனைக் கேட்கின்றதோ அதனைத் தாருங்கள் என்று கூறி இருக்கின்றார். எனவே ஒரு கிருத்துவன் அரசுக்கு கட்டுப்பட்டு இருக்க வேண்டும். அது பிழையில்லை. அதனைப் போலவே பல்வேறு அரசுகள் இங்கே இருப்பதும் பிழையில்லை' என்றே அவர்கள் கூறுகின்றனர். இதனைத் தான் நாம் இப்பொழுது பார்க்க வேண்டி இருக்கின்றது. அதற்கு முதலில் இயேசு எப்பொழுது அவ்வாறு கூறினார் என்பதை நாம் காண வேண்டி இருக்கின்றது.

தன்னுடைய சீடர்களுக்கு போதித்துக் கொண்டிருந்த பொழுது தன்னுடைய சீடர்களிடம் அவ்வாறு கூறினாரா?
இல்லை...!!!

பொது மக்கள் அனைவருக்கும் பொதுவாக இறைவனைப் பற்றியும் அவர்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்பதனைப் பற்றியும் போதித்துக் கொண்டிருக்கும் பொழுது அவர் அவ்வாறு கூறினாரா?
இல்லை...!!!

பின்னே அவர் எப்பொழுது அவ்வாறு கூறினார்?
தன்னைச் சிக்கலில் சிக்க வைப்பதற்காக யூத மதத்தைச் சார்ந்த மதகுருக்கள் எப்பொழுது திட்டம் போட்டு தன்னிடம் வந்தார்களோ...அப்பொழுது அவர்களிடம் இயேசு அவ்வாறு கூறி இருக்கின்றார். இதனைப் பற்றி சற்று விரிவாக காண்பது நலமாக இருக்கும் என்றே நம்புகின்றேன்.

அன்றைய சூழலில் இயேசுவை ஒரு சாதாரண மனிதனாக, யோசேப்பின் மகனாக மட்டுமே மக்கள் அறிந்திருந்தனர். இயேசுவின் சீடர்களுக்கு கூட அவர் யார் என்பதைப் பற்றி முழுமையாகத் தெரிந்திருக்குமா என்றால், இல்லை என்றே நம்மால் கூற முடியும் (அவர் யார் என்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள் என்றால் அவரை எப்பொழுது வீரர்கள் கைது செய்தார்களோ அப்பொழுது அவர்கள் அவரை விட்டு ஓடி இருக்க மாட்டார்களே). அப்படிபட்ட ஒரு சாதாரண மனிதனான இயேசு அங்கிருந்த யூத சமய மதகுருக்களின் கொள்கையை எதிர்த்துக் கொண்டிருந்ததை, சமூகத்தில் புகழும் அதிகாரமும் பெற்று விளங்கிக் கொண்டிருந்த அந்த மதகுருக்கள் விரும்பி இருக்கவில்லை. தங்களது அதிகாரத்தையும் நம்பிக்கையையும் ஒரு சாதாரண மனிதன், ஒரு சில நூல்களைப் படித்துக் கொண்டு கேள்வி கேட்கின்றானே என்றே தான் அவர்கள் எண்ணினர். தங்களின் செல்வாக்கு மக்களின் மத்தியில் குறைவதை உணர்ந்த அவர்கள் இயேசுவை எப்படியாவது கைது செய்து விட வேண்டும் என்றே எண்ணினர்.

அக்காலத்தில் யூதர்கள் ரோமப் பேரரசுக்கு அடிமையாக இருந்தனர். ரோமர்களுக்கு வரியும் செலுத்தி வந்தனர். இந்நிலையில் ரோமர்களுக்கு வரியினைச் செலுத்த வேண்டாம் என்று எவனாவது கூறினான் என்றால் அவனை புரட்சியாளன் என்று கூறி ரோமப் பேரரசு கைது செய்து விடும். எனவே எப்படியாவது இயேசுவை கைது செய்து விட வேண்டும் என்பதற்காக அவர்கள் திட்டம் போட்டு பின்வரும் கேள்வியை இயேசுவைப் பார்த்து கேட்கின்றனர்.

"ரோமர்களுக்கு யூதர்கள் வரி செலுத்த வேண்டுமா கூடாதா? இறைவன் என்ன கூறுகின்றார் என்று கூறுங்கள்."

இக்கேள்விக்கு இயேசு 'வரி செலுத்துங்கள்' என்று விடை கூறி இருந்தார் என்றால் அவர்களால் அவர்  மீது "இவன் நம்மை மீட்க வந்தவன் இல்லை...இவன் நம்மை ரோமர்களுக்கு வரி கட்ட வேண்டும் என்று கூறுகின்றான். இவன் யூத இனத் துரோகி...இவனா நம்மை ரோமர்களிடம் இருந்து காப்பாற்ற போகின்றான் என்று நீங்கள் நம்புகின்றீர்கள்" என்று குற்றம் சுமத்தி, யூத மக்களை அவரிடம் இருந்து பிரித்திருக்க முடியும்.

ஒருவேளை இயேசு 'வரி செலுத்தாதீர்கள்' என்று கூறி இருந்தால் அவர்கள் நேராக ரோம அதிகாரிகளிடம் சென்று "இவன் வரி செலுத்த வேண்டாம் என்று கூறி மக்களை புரட்சிக்குத் தூண்டுகின்றான்" என்று கூறி அவரை கைது செய்ய வைத்திருப்பார்கள். இது தான் அவர்களது திட்டம். 'என்ன சொன்னாலும் மாட்டுவான்' என்றே தான் அவர்கள் அக்கேள்வியை இயேசுவின் முன்னே வைத்தனர்.

அவர்களின் நோக்கத்தை இயேசு நன்றாக அறிவார். எனவே அவர் அவர்களைப் பார்த்து "நீங்கள் வரியினை எதன் மூலமாக கட்டுவீர்கள்" என்றே வினவினார். அதற்கு அவர்கள் ரோம நாணயத்தை எடுத்துக் காட்டினார்கள். அதில் சீசரின் படம் பொறிக்கப்பட்டு இருந்தது. யூதர்கள் அன்று ரோமர்களுக்கு அடிமையாக இருந்தார்கள் என்று நாம் மேலே கண்டோம். எனவே அனைத்துப் பணப் புழக்கமும் ரோமர்களின் நாணயங்களின் வாயிலாகவே இருந்தன. ஏனென்றால் யூத தேசம் அப்பொழுது ரோம பேரரசின் ஒரு அங்கமாகவே தான் இருந்தது.

அந்த நாணயத்தைப் பார்த்த இயேசு "இது யாருடைய படம்?" என்றார்.

"சீசரின் படம்" என்றே அவர்கள் கூறினர்.

அதனைக் கேட்ட இயேசு "அப்படி என்றால் சீசருக்கு உரியதை சீசருக்குத் தாருங்கள்...இறைவனுக்கு உரியதை இறைவனுக்குத் தாருங்கள்" என்றே அவர்களுக்கு விடை பகின்றார்.

இந்த ஒரு வசனத்தை வைத்துக் கொண்டு தான் கிருத்துவ மக்கள், அரசுக்கு கட்டுப்பட்டு இருப்பதையும், பல்வேறு தேசங்களாகப் பிரிந்து இருப்பதையும் இன்றைய கிருத்துவ சமயமானது அனுமதித்துக் கொண்டிருக்கின்றது. சரி இருக்கட்டும், இப்பொழுது இயேசு கூறிய அந்த பதிலின் அர்த்தத்தை சற்று பார்த்தாகத் தான் வேண்டி இருக்கின்றது.

'ரோம நாணயம்' ரோமர்களால் உருவாக்கப்பட்டது. அதனை வைத்துக் கொண்டே வணிகம் முதலான தங்களுடைய வாழ்க்கைத் தேவைகளை யூதர்கள் அமைத்துக் கொண்டிருந்த சூழல் அன்றிருந்தது. எனவே "அவனுடைய பொருளை நீ பயன் படுத்திக் கொண்டிருக்கிறாய்...எனவே அவனது பொருளை அவன் கேட்டான் என்றால் அவனிடம் தந்து விடு. ஆனால் நீயோ இறைவன் படைத்த பொருளாக இருக்கின்றாய். எனவே இறைவன் உன்னிடம் என்ன கேட்கின்றானோ அதற்கே நீ உன்னைத் தர வேண்டி இருக்கின்றது. ரோமனின் நாணயத்தை அவனிடம் தந்து விடு. மாறாக உன்னை அவனிடம் தந்து விடாதே...ஏனென்றால் நீ இறைவனுக்கு உரியவன்...ரோமனுக்கு உரியவன் அல்ல" என்று பொருள் படுமாறு இயேசு அவர்களிடம் கூறினார்.

இந்த பதிலின் மேல் எந்த குற்றச்சாட்டையும் வைக்க முடியாமல் அந்த மதகுருக்கள் கிளம்புகின்றனர். இது தான் அந்த வசனத்தின் முழு அர்த்தம். மாறாக ஒரு கிருத்துவன் அரசுக்கு கட்டுப்பட்டு இருக்க வேண்டும் என்பதோ பல்வேறு அரசுகள் இருக்க வேண்டும் என்பதோ அல்ல. உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் ஒரு மனிதன் இறைவனுக்கு மட்டுமே கட்டுப்பட்டு இருக்க வேண்டும் என்பதே இதன் பொருளாக வருகின்றது. நிற்க!!!

இப்பொழுது இந்த பதிலினைப் பற்றியே தான் நாம் இன்னும் சிறிது நுணுக்கமாக காண வேண்டி இருக்கின்றது...காண்போம்!!!

இரு தேசங்களின் கதை : ஆரியவர்த்தமும் பிற தேசங்களும்...!!!

தேசியம்...வந்தேறிகள்...குடியுரிமை என்று இன்று பல குரல்கள் எழும்பிக் கொண்டிருக்கின்றன. "யார் வந்தேறிகள்? யார் பூர்வகுடி மக்கள்? எவ...