விருதுநகர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விருதுநகர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 1 மே, 2010

அழாத குழந்தைகள்


எங்க ஊர் பங்குனி பொங்கல்னா கண்டிப்பா பல பேர் சட்டி எடுப்பாங்கணு தெரியும். 21 நாள் விரதம் இருந்து ஒரு நேர்த்திக்கடனுக்காக எடுப்பாங்கன்னும் தெரியும். ஆனால் எப்படி எடுக்கிறாங்கனு தெரியாது. நெருப்பை கையில் சுமந்து கொண்டு பல மணி நேரம் நடக்கிறார்களே அவர்களுக்கு கை சுடாதா என்ற கேள்விகளுக்கும் பதில் தெரியாது. கோவிலுக்கு சென்று பல பூச்சட்டிகளை வேடிக்கை மட்டும் பார்த்து இருக்கின்றேன். இந்த பொங்கலுக்கு முன்னால் வரை.


"டேய்! இந்த பொங்கலுக்கு எங்க அப்பாவும் அம்மாவும் சட்டி எடுக்குறாங்கடா. கண்டிப்பா நீங்களும் கூட வரீங்கடா " என்ற நண்பனின் அழைப்பை மறுக்க முடியவில்லை.
"நிச்சயமா வர்றோம்டா... எத்தனை மணிக்கு அங்க இருக்கணும்னு சொல்லு சரியா  வந்திர்றோம்" என்றேன்.
"விடியக்காலைல 1:30 மணிக்குடா" என்றான் நண்பன்.
"சரி விடு... சரியா அந்த நேரத்திற்கு அங்க இருப்போம்" என்று சொல்லி நாங்கள் கிளம்பினோம்.

சொல்லியவாறே அவனின் பெற்றோர் எடுத்த சட்டிக்கு துணையாக சென்றோம். அவன் வீடு கோவிலில் இருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும். அங்கே இருந்து கிளம்பி முதலில் மாரியம்மன் கோவிலை சுற்றி விட்டு பின் தெப்பம் வழியாக சென்று கருப்பசாமியை தரிசித்து விட்டு பின் மீண்டும் ஊரை சுற்றி மாரியம்மன் கோவிலை அடைந்து சட்டியை இறக்கி வைக்கும் வரை கிட்டத்தட்ட 6 கிலோமீட்டர் வெறுங்காலில் சுற்றியும் நாங்கள் உணரவில்லை  தளர்ச்சியை. நாங்கள் உணராதது பெரிதல்ல. அவனின் பெற்றோர்கள் தளர்ச்சியை சற்றும் உணராது நின்றிருந்தார்கள். ஆச்சர்யம் தான். 21 நாள் விரதம் இருந்ததிற்கு அப்புறம், இவ்வளவு தூரம் சட்டியை எடுத்து கொண்டு நடந்தும் இவர்கள் தளரவில்லையே...அதிலும் நண்பனின் அம்மாவை நினைத்து தான் இன்னும் ஆச்சர்யமாய் இருந்தது... தூரம் கூட கூட நண்பனின் தந்தையின் வேகம் சற்று குறைந்தது போல் இருந்தது. ஆனால் அவனின் தாயின் வேகமோ கோவிலை நெருங்க நெருங்க அதிகரித்து கொண்டே இருந்தது... பெண்களின் சக்தி ஆச்சர்யமானது தான்!!!.    

எல்லாம் முடிந்து கோவிலுக்கு வெளியே வரும் போது ஒரு நண்பன் கையை உதறி கொண்டே வந்தான்.
"டேய்!! என்னடா ஆச்சி" என்றேன்
"ஒண்ணும் இல்லடா... அவங்க அப்பா கைல இருந்து சட்டி கொஞ்சம் நழுவுற மாதிரி இருந்துச்சி அதான் பிடிக்கலாம்னு போன்னேன்...பொசிக்கிருச்சி" என்றான்
"ஏன்யா சட்டிய மேலயா பிடிப்ப... அதுக்கு பதில்லா நெருப்புக்குள்ள கைய விட்டுருக்க வேண்டியது தான" என்றவாறே எங்களுடன் வந்து சேர்ந்தார் விக்கி அண்ணா.
"ஏன்னா!! சட்டி சுடும் தான" என்றேன்
"சுடலைனா அத எதுக்கு எடுக்குறாங்க" என்றார் அவர். 
"அப்புறம் எப்படினா இவ்வளவு தூரம் அத தூக்கிட்டு இவங்களால வர முடியுது" என்றேன்.
"அதுக்குதான்யா இந்த விரதம் இருக்கிறது எல்லாம். அருள் பெறணும் என்று மனசை பக்குவப்படுத்திகிறாங்க. அதனால தான் அவங்களால சூட்ட தாங்கிக்க முடியுது" என்று முடித்தார். 


அப்பொழுது இன்னொரு சட்டி எங்களை கடந்து சென்றது. ஒரு தாய் தன் கைக்குழந்தையை கழுத்தில் கட்டிய தூழியில் சுமந்து கொண்டு கையில் சட்டியை ஏந்தி சென்று கொண்டிருந்தார். அவர்கள் செல்வதையே சிறிது நேரம் கண்டு விட்டு மீண்டும் விக்கி அண்ணாவை நோக்கி திரும்பினேன்.

"அண்ணா அந்த குழந்தை அழாது தான" என்றேன்
"ஆமாம்" என்றார்
"பொதுவா சின்ன கொழந்தைங்க தூங்கும் போது சின்ன சத்தம் கேட்டா கூட முழிச்சிக்கிட்டு அழ ஆரம்பிச்சிருங்க தான " தொடர்ந்தேன்.
"ஆமாம்!!!"
"அப்புறம் எப்படினா இந்த குழந்தைகள் மட்டும் இவ்வளோ சத்தத்திற்கு நடுவிலேயும் அழாம இருக்குங்க. அதுவும் பக்கத்துலேயே நெருப்பும் இருக்கு. அம்மாவும் கவனிக்க முடியாத நிலையில இருக்காங்க. எப்படினே அழாம இருக்குங்க" என்றேன்
"அதுங்க அழாதுங்கையா" என்றார்.
"அதான் எப்படினே" என்றேன்
அவர் திரும்பி கோவிலை பார்த்தார்.
"அந்த குழந்தைகளோட அம்மா தான் அதுங்கள பார்த்துகிட்டு இருக்காங்கல்ல அப்புறம் எதுக்கு அதுங்க அழ போகுதுங்க... அந்த குழந்தைகள் அழாதுங்க" என்று சொல்லி நடக்க ஆரம்பித்தார்.

நானும் திரும்பி கோவிலை பார்த்தேன். அந்த சட்டியை எடுத்த தாய் கோவிலுள் சென்று கொண்டு இருந்தார். கோவிலுள் மாரி அன்னை வீற்றிருந்தாள். ஆம் குழந்தைகள் ஏன் அழ வேண்டும்?. அவற்றை தான் அவர்களின் அன்னை பார்த்து கொண்டு இருக்கின்றாளே!!!

 நன்றி : புகைப்படங்கள் - சந்தோஷ் குமார்

திங்கள், 19 ஏப்ரல், 2010

ஒரு பொம்மை வாங்கிக்கோங்கக்கா!!!

"அக்கா ஒரு பொம்மை வாங்கிக்கோங்கக்கா". 

எங்க ஊர் பங்குனி பொங்கல் என்றால் ஞாபகத்திற்கு வரும் பல விசயங்களில் இந்த குரல்களும் முக்கியமானவை. பொங்கலை முன்னிட்டு கோவிலைச் சுற்றி புதிதாய் முளைத்திருக்கும் பல கடைகளுள் பொம்மை விற்பவர்கள் தான் பெருன்பான்மையாக இருப்பார்கள். பொம்மை என்றால் குழந்தைகள் விளையாடும் விளையாட்டு பொம்மைகள் அல்ல. அம்மனின் அருள் பெற நமக்கு வேண்டியவர்களுக்காக வேண்டி வைக்கப்படும் பொம்மைகள்.

கை குணமாக கை பொம்மை. காலுக்கு கால் பொம்மை. குழந்தைகளுக்கு சிறுவர் பொம்மை. பெரியவர்களுக்கு அவர்களுக்கு உரிய பொம்மை என்று பல வகையான பொம்மைகளை விற்று கொண்டு இருப்பர்.

"பையனுக்கு கொஞ்ச நாளா உடம்பு சரியில்ல. ஒரு பையன் பொம்மை தாங்கமா." என்றார் ஒரு சிறுவனின் அன்னை.
"என்ன ஆச்சிமா பிள்ளைக்கு?" பல வருடங்களாகவே அந்த அன்னையையும் சிறுவனையும் பொங்கல் அன்று கண்டு பழகி இருக்கும் அந்த கடைக்கார பாட்டி அக்கறையுடன் விசாரித்தார்.
"கொஞ்ச நாளா காய்ச்சல் தொடர்ந்து வந்துகிட்டே இருக்குமா. என்ன பண்றதுனே தெரியல" என்றார் அந்த அன்னை.
"கவலைப்படாதேமா! இந்தா... இந்த பக்கத்துக் கடையில கொஞ்சம் பூவை வாங்கி இந்த பொம்மையில சுத்தி அம்மன் கோவிலுக்குள்ள வச்சிரு... அப்புறம் எல்லாம் அந்த மாரித்தாய் பாத்துப்பா. நீ கவலைப்படாதே" என்று சொல்லி ஒரு பொம்மையை அந்த பாட்டி கொடுத்தார்.
"சரிமா!" என்று அந்த பொம்மையை வாங்கி தன் மகனிடம் கொடுத்தார் அந்த அன்னை.   
"அம்மா... அம்மா... எனக்கு கடிகாரம் வச்ச பொம்மை தான் வேண்ணும்" என்றான் அவன்.
"கடிகாரம் வச்ச பொம்மை தானே ராசா... இந்தா எடுத்துக்கோ " என்று அந்த பாட்டி அவனுக்கு பிடித்த பொம்மையை எடுத்துக் கொடுக்க அதை வாங்கிக் கொண்டு ஏதோ ஒரு மகிழ்ச்சியுடன் அவன் கோவிலை நோக்கிச் செல்ல ஆரம்பித்தான். பின்னால் அவன் அன்னை நம்பிக்கையுடன் நகர ஆரம்பித்தார்.

மேலே சொன்னது போல் பல கதைகளை அந்த பொம்மைகள் சுமந்து கொண்டு தான் அலைகின்றன இன்றும், அந்த பொம்மைகளை சுமப்பவர்களோ ஒரு புது நம்பிக்கையை சுமந்து கொண்டு தான் செல்கின்றனர்.

 "இந்த பொம்மையை வச்சா மட்டும் எல்லா பிரச்சனைகளும் தீர்ந்திடுமா? இது எல்லாம் மூட நம்பிக்கையா தெரியில" என்று கேட்டேன். அந்த பாட்டியிடம்.
என்னை அந்த பாட்டி சற்று உற்றுப் பார்த்தார். "நம்ம நல்லா இருப்போம்னு நம்புறது மூட நம்பிக்கையாப்பா?" என்றார்.
"இல்லை!!... ஆனா.."
"யாருக்கும் தீங்கு செய்யாம நமக்கு அந்த நம்பிக்கைய ஒண்ணு தருதுனா அது தப்பாப்பா" அந்த பாட்டி தொடர்ந்தார்.
"இல்லை!!"
"மனுசனுக்கு நம்பிக்கை தான்பா முக்கியம். அந்த நம்பிக்கைய இதுங்க தருதுங்க. இதை போயி மூடநம்பிக்கைனு சொல்லிகிட்டு...நம்ம நல்லா இருப்போம்னு யாருக்கும் எந்த தீங்கும் தராம நம்பிக்கை கொடுக்குற எந்த விஷயமும் மூட நம்பிக்கை இல்லை...!!! அப்புறம் பிரச்சனைகள் தீர்ந்திடுமான்னு கேட்டேல... தீரும் ... தீர்ந்திருக்கு!!!" என்று கூறி முடித்துவிட்டு தன் கடை வேலையை பார்க்க தொடங்கினார் அந்த பாட்டி.
நானும் அந்தக் கடையை விட்டு நகர்ந்தேன் ஒரு தெளிவுடன்...

விருதுநகர் பொங்கல்னா கண்டிப்பா பொம்மைகள் இருக்கும்... அவை இல்லாம பொங்கலா... வாய்ப்பே இல்ல... எனக்கு நம்பிக்கை இருக்கு!!! நம்புவோம்!!!

 நன்றி : புகைப்படங்கள் - சந்தோஷ் குமார்

வெள்ளி, 16 ஏப்ரல், 2010

பொங்கல்னா மழை வரும்டே!!!

"அண்ணே! நம்ம ஊரு பொங்கல்னா அன்னிக்கு கண்டிப்பா மழை வருமா அண்ணே" என்றான் அந்த சிறுவன்.
புன்னகைத்தேன். "கண்டிப்பா வரும்டா....!!!" என்றேன்.


மழை! எங்கள் ஊர் மிகவும் எதிர் பார்க்கும் ஒரு விருந்தாளி. வேலைக்கு வெளியூர் சென்ற மகன் எப்பொழுது ஊர் திரும்புவான் என்று காத்திருக்கும் அன்னையைப் போல், எங்கள் ஊரும் மழைக்காக காத்து இருக்கும். நாங்கள் சற்றும் எதிர் பார்க்காத பொழுது அவனும் வருவான், சில நேரங்களில் தன் உள்ளத்தில் மறைந்து இருக்கும் காதலை கயல்விழி அசைவில் வெளிப்படுத்தும் பெண்ணைப் போல் ஒரு கவிதையாய்- குற்றாலத்து  சாரலாய்!!! சில நேரங்களில் இன்று உலகத்தின் கடைசி நாள் என்று அறிந்தவுடன் இது வரை தன் நெஞ்சத்தில் சேர்த்து வைத்து இருந்த காதலை தன் காதலியிடம் சொல்லும் காதலனை போல் - பெரு மழையாய்!!! இருக்கும் வரை ஊரை நன்றாக மகிழ்விப்பான். பின் எவ்வாறு சொல்லாமல் வந்தானோ அவ்வாறே சொல்லாமல் சென்று விடுவான். நாங்களும் அவன் வருகைக்காக மீண்டும் காத்திருக்க ஆரம்பித்துவிடுவோம்.

உலகமெங்கும் சுற்றினாலும் வீட்டில் ஒரு விழா என்றால் எப்படியாவது வீட்டிற்கு வந்து தன் தாயின் மனத்தை குளிர்விக்கும் மகனை போல் எங்கள் ஊருக்கு தவறாமல் மழை வந்து செல்லும் ஒரு விழா உள்ளது. அது எங்கள் ஊர் மாரியம்மன் திருவிழா. பங்குனி மாதத்தில் மாரியம்மனை துதித்து நடத்தும் பொங்கலை அவன் இது வரை காணாமல் விட்டதில்லை. எதிர்பார்க்காத பொழுதே வந்து பழகியவனை நிச்சயமாய் வருவான் என்று நாங்கள் எதிர் பார்ப்பது அப்பொழுது தான். இது வரை அந்த எதிர்பார்ப்பு பொய்தததில்லை.

இன்றும் அப்படித்தான், மேகம் இல்லா வானில் கதிரவன் கொழுத்திக் கொண்டு இருந்தான். ஊரில் பொங்கல். அருகிலிருந்த சிறுவன் எதிர்பார்ப்போடு கேட்டான்,

"அண்ணே! நம்ம ஊரு பொங்கல்னா அன்னிக்கு கண்டிப்பா மழை வருமா அண்ணே" என்றான் அந்த சிறுவன்.
புன்னகைத்தேன். "கண்டிப்பா வரும்டா....!!!" என்றேன்.
"எப்படினே.. ஒரு மேகத்தை கூட காணோம்... அப்புறம் எப்படி வரும்?" என்றான்.
"வரும்டா!... பொறுமையா இரு... வராம எங்க போகும்..." என்று சொல்லி நகர்ந்தேன். அவனும் "ஆகோ.... அய்யாகோ" என்று கூறியவாரே கோவிலை நோக்கி செல்லத் தொடங்கினான். நானும் கோவிலுக்கு சென்று விட்டு நண்பர்களுடன் ஊர் சுற்ற ஆரம்பித்தேன்.

மதியம் உணவு அருந்துவதற்காக வீட்டினுள் இருந்த சமயம் வெளியே இருந்து மண் வாசனை வீச ஆரம்பித்தது. ஆவலுடன் வெளியே சென்று பார்த்தேன். எப்படியோ மேகங்கள் ஒன்று சேர்ந்து இருந்தன. மழை மண்ணை நனைத்துக் கொண்டு இருந்தது. மண்ணோ மணத்தை பரப்பிக் கொண்டு இருந்தது. மீண்டும் நிமிர்ந்து வானத்தை பார்த்தேன். ஒரு மழைத்துழி என் கண் சேர மனம் சிலிர்த்தது.
மழை அருமையானவன் தான்!!! இந்த வருடமும் பொங்கலுக்கு  தன் அன்னையை காண வந்து விட்டான்.
புன்னகைத்தேன்.
"எங்க ஊர்ல பொங்கல்னா மழை வரும்டே!!!!"

 நன்றி : புகைப்படங்கள் - சந்தோஷ் குமார்

சனி, 13 பிப்ரவரி, 2010

காணவில்லை : மண்பானைகள்!!! -2

"ஏலேய்! இன்னும் பந்த எடுக்காம என்னல பண்ணிகிட்டு இருக்க?"
" டேய் இருடா ! நல்லா முள்ளுக்குள்ள மாட்டிக்கிட்டு இருக்குடா. இங்க பாரு கைய வேற கிழிச்சி விட்டுறிச்சி"
"முள்ளுனா கிழிக்கதான் செய்யும். பார்த்து சீக்கிரம் எடுடா. விளையாட வேண்ணாமா"

இவ்வாறு, சுடுமணலும், முட்கள் குத்தி வரும் குருதியும் கூட எங்களின் ஆட்டத்தை நிறுத்தும் வலிமைப் பெற்றுத் திகழவில்லை. அல்லது அவையும் எங்களின் ஆட்டத்தை நிறுத்த விரும்பவில்லை. தொடர்ந்து கொண்டிருந்தது எங்களின் ஆட்டம். தாகம் வரும் வரை. அனைத்தையும் தந்த எங்கள் ஊர் தாகத்தை அடக்கும் வழியை தரவில்லை. இயற்கையால் முடியவில்லையா! சரி, அங்க ஒரு கடைய போடு என்று அங்கும் ஒரு அண்ணாச்சி கடையைப் போட்டு இருப்பார்.
தண்ணீர் விற்பனைக்கு வராத காலம் அது. வேண்டிய அளவிற்கு இலவசமாகவே கிடைக்கும். எங்கள் தாகம் தணிக்க தண்ணீர் போதும் தான், ஆனால் எங்களை நம்பி கடை வைத்திருக்கும் அந்த அண்ணாச்சியின் பாடு?...
"டேய்!! எம்புட்டு ரூபா வச்சிருக்கீங்க?"
"என்கிட்ட 2.00பா"
"நம்மகிட்ட வழக்கம் போல சுத்தம்"
"இங்க 5.00"
"சரி! என்கிட்ட 3.00 ரூபா இருக்கு! அண்ணாச்சி 5 ஜூஸ் பாக்கெட் எடுத்துக்கிறோம்."
பத்து பேர் விளையாட போனா, அஞ்சு பேர்க்கிட்ட காசு இருக்காது. 5 ஜூஸ் பாககெட்ட 10 பேர் சேர்ந்து காலிபண்ணுனத்துக்அப்புறமும் தாகம் தீர்ந்து இருக்காது.
"அண்ணாச்சி. கொஞ்சம் தண்ணி கிடைக்குமா?"
"எடுத்துக்கோங்கபா! இத போயி என்ன கேட்டுக்கிட்டு, அதோ அந்த பானைல இருக்குல." என்று கடையின் ஓரமாய் இருக்கும் பானையை காட்டியத்தோடு முடிந்துவிடும் அண்ணாச்சியின் வேலை. தாகம் தணியும் வரை தண்ணீய குடித்துவிட்டு மீண்டும் மைதானத்தை நோக்கி எங்கள் பயணம் தொடரும்.
சில சமயம் அண்ணாச்சி கடைக்கு விடுமுறை விட்டுவிட்டு  போயிருக்கும் நேரங்களில் தான் எங்கள் பாடு திண்டாட்டமாக இருக்கும். மிதிவண்டிய எடுத்துகொண்டு தண்ணீர் தேடி அலைய ஆரம்பிப்போம். வழிப்போக்கர்களை உபசரிக்க திண்ணைகளை உருவாக்கிய தமிழ் கலாசாரம் மண்ணின் மைந்தர்களையா தாகத்தோடு பரித்தவிக்க விடும்?... எங்கள் தாகம் தணிக்க பல வீட்டிற்கு வெளியே மண்பானைகள் காத்துக்கொண்டு இருந்தன, பாசமான ஆச்சிகளால்.
"கொளுத்துர வெயில்ல அப்படி என்ன ஆட்டம் வேண்டி கிடக்கு. பேசாம வெயில் தனிஞ்சதுக்அப்புறமா விளையாடலாம்ல" என்று அக்கறையோடு விசாரிக்கும் ஆச்சிகளும், எங்களுக்காக குளிர்ந்த தண்ணீரை சுமக்கும் மண்பானைகளும் அர்த்தத்தை கொடுத்துக் கொண்டு இருந்தார்கள் எங்களின் விளையாட்டுக்கும்...வாழ்க்கைக்கும்!!!

"அது ஒரு காலம்!!! கையில் காசின்றி இருந்தாலும் உண்மையான தாகத்தோடு இருந்த காலம். இன்றோ கையில் காசு இருக்கின்றது... ஆனால் உண்மையான தாகத்தை தான் எங்கேயோ தொலைத்து விட்டோம். அன்று விளையாடிய சில இடங்கள் இன்று பாதி முட்காடுகளாய், மீதி வீடுகளாய். அண்ணாச்சி இன்றும் கடை வைத்து இருக்கிறார், இன்றும் இலவசமாக தண்ணீர் கொடுக்கிறார், ஆனாலும் தண்ணீர் என்றவுடன் முதலில் Aquafina வா என்ற கேள்வி புதிதாக வருகின்றது.அன்று வியர்வையை மட்டும் கண்ட எங்கள் மைதானங்கள் இன்று புதிதாய் எங்கள் கண்ணீரை காண்கின்றது. காலத்தை துரத்தியததில் எதையோ எங்கேயோ தொலைத்து விட்டோமோ என்ற உள் உணர்வை மட்டும் அலட்சிய படுத்த முடியவில்லை. முன்னேறிக் கொண்டு இருக்கிறோம். சந்தேகமில்லை. ஆனால் மனதையும் வாழ்க்கையையும் பின்னாடி விட்டுவிட்டு எதற்காக முன்னேறிக் கொண்டு இருக்கிறோம் என்று தான் தெரியவில்லை. அன்று நண்பர்களின் வருகைக்காக மைதானத்தில் காத்திருக்கும் போது என்னுடன் காத்திருந்த காலம், இன்று எங்கோ விரைந்து கொண்டு இருக்கிறது என்னையும் அழைத்து கொண்டு. இது வாழ்வின் வளர்ச்சியா அல்லது தளர்ச்சியா? தெரியவில்லை. இருந்தும் அலைகிறேன்.
இதோ அன்று வீட்டிற்கு வெளியே இருந்த மண்பானைகளை இப்பொழுது காணவில்லை. அந்த ஆச்சிகளையும் தான்!!! "அந்த காலத்துல" என்று அவர்கள் அன்று கூறிய வார்த்தைகள் சற்று நினைவிற்கு வந்து போயின. அவற்றை அப்பொழுது கேலி செய்த நாங்கள் இன்று எங்களை அறியாமல் சொல்லுகின்றோம் "அந்த காலத்துல..."!!!
ஆம்! அந்த காலத்தில் நாங்கள் நாங்களாய் இருந்தோம். சற்று யாராவது தேடி தருகிறீர்களா! அந்த பானைகளையும் அதனுடன் தொலைந்த எங்களையும்!!!
                                     முற்றும்.     

வெள்ளி, 12 பிப்ரவரி, 2010

காணவில்லை : மண்பானைகள்!!! -1

வெயில்! எங்கள் ஊருக்கு மிகவும் நெருங்கிய ஒன்று . 'விருதுநகரா? சரியான  பொட்டக்காடாச்சேப்பா' என்று தான்  பலரும் கூறுவர். உண்மையும் அதுதான். கருவேலங்காட்டையும் வெயிலையும் தவிர இயற்கை எங்கள் ஊருக்கு வேறு எதையும் அருளவில்லை. தவறில்லை! எங்கள் ஊருக்கு அவை போதும். அப்படி என்றால் மற்றவை? "அதற்குத்தான் நாங்கள் இருக்கின்றோமே. நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்" என்று மார்தட்டிக் கிளம்பிய பறவைக்கூட்டத்தில் நானும் ஒருவன்.
பள்ளி தினங்களில் காலை 8:00 மணி ஆகியும் கலையாத உறக்கம், விடுமுறை தினங்களில் 6:00 மணிக்கே கலைந்துவிடும் அதிசயம் நிகழ்ந்து கொண்டிருந்த பருவம் அது. உணவு உண்பதற்கும் உறங்குவதற்குமே வீடு என்பது எழுதாத விதியாக இருந்த காலம். "டேய்! சாப்பிட்டு போடா" என்ற அன்னையாரின் குரல்களும் "அப்புறம் வந்து சாப்பிடுறேன்மா இப்பவே நேரமாயிடுச்சி"  என்ற எங்களின் பதில்களும் தினசரி வாழ்க்கையில் இன்றியமையாத ஒன்றாய் கலந்திருந்த காலம். இன்றை மட்டும் இன்று காண்போம், நாளையை நாளை பார்த்துக்கொள்ளலாம் என்ற வாழ்க்கைத் தத்துவத்தை வாழ்க்கையைப் புரியாமலையே புரிந்து கொண்டிருந்த பருவம்.
பரந்து விரிந்த செம்மண் தளங்களை மைதானங்களாய் எங்களுக்கு தந்த எங்கள் ஊர், வெயில் சற்று கோபமாக இருக்கும் சமயம் நிழலில் இளைப்பாற சில மரங்களையும், மைதானத்தின் எல்லைகளாய் முட்ச்செடிகளையும் சேர்த்தே தந்திருந்தது. "வெயிலோடு விளையாடி" என்றொரு பாடலை ஒரு பாடலாசிரியர் எங்கள் ஊரில் எடுத்த ஒரு படத்திற்காக எழுதி இருந்தார். உண்மைதான். வெயில் இன்றி எங்களின் அநேக விளையாட்டுகள் இல்லை.  வெயில் எங்களுக்கு இன்னொரு நண்பன். வெயில் இருக்கும் வரை நாங்கள் ஆடுவோம், நாங்கள் ஆடும் வரை அவனும் இருப்பான்,எங்களை பார்த்துக்கொண்டே!

இரு தேசங்களின் கதை : ஆரியவர்த்தமும் பிற தேசங்களும்...!!!

தேசியம்...வந்தேறிகள்...குடியுரிமை என்று இன்று பல குரல்கள் எழும்பிக் கொண்டிருக்கின்றன. "யார் வந்தேறிகள்? யார் பூர்வகுடி மக்கள்? எவ...