இயேசு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இயேசு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 8 பிப்ரவரி, 2017

இன்றைய சமூகமும் இயேசுவின் உவமைகளும் : உக்கிராணி கதை -2

சென்ற பதிவினில் கிருத்துவ சமயத்தில் இயேசு கூறியதாய் வருகின்ற ஒரு கதையினையும் அதற்கான விளக்கத்தினையும் கண்டோம். 'தன்னைத்தானே காப்பாற்றிக் கொள்வதற்கு இந்த உலகப் பொருட்களை எவ்வாறு பயன்படுத்துவது என்பதனை ஒவ்வொரு மனிதனும் அறிந்து இருக்கின்றான். ஆனால் இறைவனின் விருப்பத்திற்கேற்ப அனைவரும் ஒற்றுமையாக வாழ்வது எவ்வாறு என்பதனைப் பற்றி மட்டும் அவன் அறிந்துக் கொள்ள விரும்புவதில்லை. செல்வத்தினை எவ்வாறு தன்னுடைய நன்மைக்கு மட்டும் பயன்படுத்திக் கொள்வது என்று அவன் எண்ணுகின்றானே ஒழிய அந்த செல்வத்தை வைத்து எவ்வாறு மக்கள் அனைவருக்கும் நன்மையினை செய்யலாம் என்று அவன் எண்ணுவதில்லை. அதன் விளைவாக அவன் இறைவனுக்கு சேவை செய்வதற்கு பதிலாக செல்வத்தை தன்னுடைய எசமானனாக ஏற்றுக் கொண்டு செல்வத்திற்காகவே அவன் வேலை செய்து கொண்டிருக்கின்றான்' என்பதே அந்த பகுதியின் அர்த்தமாகும். இப்பொழுது இன்றைய காலகட்டத்தில் அந்த கதையினை நாம் எவ்வாறு நம்முடைய சமூகத்தில் பொருத்திப் பார்க்கலாம் என்பதையே நாம் காண வேண்டி இருக்கின்றது.

இன்றைக்கு நம்முடைய சமூகத்தில் சுய சார்பு பொருளாதாரம் என்பது திட்டமிட்டு அழிக்கப்பட்டு கொண்டிருக்கின்றது. கல்வி, மருத்துவம், நல்ல உணவு என்பன போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலை மிகவும் அதிகமாகி இருக்கின்றது. கடன் வாங்கித் தான் தன்னுடைய அத்தியாவசியத் தேவைகளை ஒரு மனிதனால் பெற்றுக் கொள்ள முடியும் என்கின்ற நிலை நம்முடைய சமூகத்தில் உருவாக்கப்பட்டு இருக்கின்றது. பொருளாசை என்கின்ற ஒன்றினை அடிப்படையாகக் கொண்டு நுகர்வுக் கலாச்சாரமானது பேராசை மிகுந்த ஒரு சமூகத்தை கட்டமைத்துக் கொண்டிருக்கின்றது. எளிமையான வாழ்வினை வாழ விரும்பும் மனிதர்களுக்கு அத்தகைய வாழ்வானது வெறும் ஒரு கனவாகவே காட்சி அளிக்கக்கூடிய ஒரு நிலை தான் இன்று பெரும்பாலும் இருக்கின்றது. விவசாயிகள் தற்கொலை செய்துக்கொண்டு இருக்கின்றனர். சிறு தொழில் செய்வோரையும் இயற்கை வளங்களையும் கொள்ளை அடித்து நிர்மூலமாக்க பன்னாட்டு பகாசுர நிறுவனங்கள் ஓயாமல் முயன்று கொண்டிருக்கின்றன.

என்ன நடக்கின்றது எது நடக்கின்றது என்பதனை ஒருவன் அறிந்து கொள்ளும் முன்னரே அவனை அந்த அடிமைக் கல்வி முறையானது கடனாளியாக்கி அவனை ஒரு பன்னாட்டு நிறுவனத்திற்கு கூலி வேலைக்கு சேர்த்து விடுகின்றது. சரி, படிக்கும் பொழுது தான் சிந்திக்க நேரமில்லை, இப்பொழுதாவது அவன் சிந்திப்பான் என்று பார்த்தோமே என்றால், அப்பொழுதும் அவனை சிந்திக்க விடாதவாறு நுகர்வுக் கலாச்சாரமானது பொருளாசையால் அவனை தொடர்ந்து கடனாளியாகவே வைத்து இருக்கின்றது. அத்தகைய பொருளாசையையும் மீறி அவன் சிந்திக்க முற்பட்டான் என்றால், விண்ணளவு உயர்ந்திருக்கக் கூடிய அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அவனை அச்சம் கொள்ள செய்து விடுகின்றன. அந்த அச்சத்தினாலேயே அவன் தான் விரும்பிய வாழ்வினை வாழாது தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கின்றான். இது தான் இன்றைக்கு நமது சமூகத்தில் நாம் பரவலாக காணக்கூடிய நிலையாக இருக்கின்றது. இதனை நாம் சுருக்கமாக கண்டோம் என்றால்...ஒரு மனிதன் சுயமாக நிம்மதியாக வாழக்கூடிய வகையில் இருக்கக்கூடிய ஒரு சமூக அமைப்பானது திட்டமிட்டு அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. நிற்க. இப்பொழுது இந்த சூழலைத் தான் நாம் இயேசு கூறிய அந்த கதையோடு பொருத்திப் பார்க்க வேண்டி இருக்கின்றது.

அந்த கதையில் மக்கள் அனைவரும் அந்த பணக்கார எசமானனுக்கு கடன்பட்டு இருக்கின்றனர். அந்த எசமானனாக நமது அரசியல்வாதிகளையும்/பன்னாட்டு நிறுவனங்களையும் வைத்துக் கொள்ளலாம். கடன்பட்டு இருக்கும் மக்களாக நம்முடைய ஏழை எளிய மக்கள்/விவசாயிகள்/மீனவர்கள் போன்ற பொது ஜனங்களை வைத்துக் கொள்ளலாம்.

அந்த பணக்கார எசமானனிடம் பணி புரிகின்ற உக்கிராணியாக நம்மை (பன்னாட்டு நிறுவனங்களில் பணி புரிபவர்கள்/அரசாங்க ஊழியர்கள்) வைத்துக் கொள்ளலாம். நாம் நம்மைச் சுற்றி நடக்கும் அனைத்தையும் கவனித்துக் கொண்டிருக்கின்றோம்...எப்படி வால்மார்ட் நிறுவனம் வந்தால் உள்நாட்டு வியாபாரிகள் நசிந்து போவார்கள் என்று, எவ்வாறு விவசாய நிலங்கள் அழிக்கப்பட்டு விவசாயிகள் கடன்காரர்களாக தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர் என்று, எவ்வாறு நம்முடைய நீர் நிலை ஆதாரங்கள் மற்றும் இயற்கை வளங்கள் கொள்ளை அடிக்கப்பட்டு கொண்டிருக்கின்றன என்று நாம் அனைத்தையும் கவனித்துத் தான் கொண்டிருக்கின்றோம். மேலும் நம்முடைய எசமானன் நம்மை எப்பொழுது வேண்டும் என்றாலும் துரத்தி விட்டு விடுவான் என்பதனையும் நாம் அறிந்து தான் இருக்கின்றோம் (2008 அமெரிக்க பங்குச்சந்தை வீழ்ச்சியின் பொழுது வேலையில் இருந்து நீக்கப்பட்டவர்கள், இன்றைய அமெரிக்க அதிபர் டிரம்ப் அவர்களின் அறிக்கை, என்று நாம் கண்டு கொண்டு தான் இருக்கின்றோம்).

மேலும் அவர்கள் இப்பொழுது நம்மைத் துரத்தி விட்டார்களே என்றால், நம்மால் வேறு வேலை எதுவும் செய்ய முடியாது என்பதனையும் நாம் அறிந்து தான் இருக்கின்றோம். விவசாயம் கிடையாது...நீர் நிலைகள் கிடையாது...பொருள்களின் விலை மிகவும் அதிகம், ஆரோக்கியம் கிடையாது...என்று ஒரு மிகவும் வருத்தகரமான நிலைக்கே நாம் செல்ல வேண்டி இருக்கும் என்பதனையும் நாம் அறிந்தே தான் இருக்கின்றோம். மேலும் நம்மில் பலரும் கடனாளியாகவும் இருக்கின்றோம். எனவே அப்படி ஒரு இக்கட்டான நிலையில் நாம் சிக்கிக் கொண்டால் அந்நிலையிலிருந்து நம்மை நாமே காப்பாற்றிக் கொள்வதற்காக அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்கின்றோம் (சேமிப்புகள், தங்கம், வீடு, உப தொழில்கள்). நம்மையும் நம்முடைய குடும்பத்தையும் காப்பாற்றிக் கொள்வதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதனை நாம் அறிந்தே தான் இருக்கின்றோம். ஆனால் அந்த வழிமுறையானது வெறும் சிறிதளவே பயன் தருகின்றது. உதாரணமாக, குடிக்க நீர் இல்லாமல் போயிற்று என்றால் நாம் எவ்வளவு தான் பணம் வைத்திருந்தாலும் அதனால் பயன் ஒன்றும் வர போவதில்லை. மேலும் ஒவ்வொருவரும் தங்களது பாதுகாப்பினை மட்டும் முதன்மையாக உறுதிப்படுத்திக் கொள்ளும் ஒரு சமூகத்தினையே அந்த செயலானது கட்டமைக்கின்றது. எனவே இங்கே தான் நாம் மாற்றி சிந்திக்க ஆரம்பிக்க வேண்டி இருக்கின்றது.

உதாரணமாக நம்முடைய ஜல்லிக்கட்டு பிரச்சனையையே எடுத்துக் கொள்வோம். பன்னாட்டு நிறுவனங்கள் நம்முடைய காளை மாடுகளை வியாபார நோக்கினில் அழிக்கப் பார்க்கின்றன. அத்துடன், ஆரோக்கியமான உணவினையும் சுய சார்பு வாழ்வு முறையினையும் அவர்கள் அழிக்க முயல்கின்றனர். அவர்களை நேரடியாக நம்மால் எதிர்க்க முடியாது. இந்நிலையில், நம்மில் ஒவ்வொருவரும் நம்முடைய சொந்த ஊரினில் ஒன்றிணைந்து மாதம் சிறு தொகையினை ஒதுக்கி நாட்டு மாடுகளை வளர்க்கலாம்/வளர்ப்பதை ஊக்குவிக்கலாம். சிறு விவசாயிகளை அவ்வாறு நாம் ஆதரிப்பதன் வாயிலாக இந்த சமூகத்தில் நாமும் ஒரு அங்கத்தினர் தான் என்று நாம் பொறுப்புடன் ஒன்றிணைகின்றோம். அந்த விவசாயிகளும், அவர்கள் தனியாளாக இந்த உலகத்தில் இல்லை என்பதனை உணர்ந்து, சமூகத்திற்காக அவர்கள் செய்கின்ற பணியினை நாம் அனைவரும் அறிந்து அவர்களுடன் ஒன்றாக இருக்கின்றோம் என்ற தெளிவுடன் தொடர்ந்து தைரியமாக அவர்கள் பணியினை செய்கின்றனர். நமது அந்த செயலால் சமூகமானது ஒரு நல்ல சமூகமாக மாறுகின்றது. ஒருவேளை நம்மையும் அந்த எசமானர்கள் துரத்தி விட்டார்கள் என்றால் நம்மை அன்புடன் ஏற்றுக்கொள்ளும் சிந்தனையும் ஆற்றலும் அந்த சமூகத்திற்கு மிகுதியாகவே இருக்கத் தான் செய்யும்.

ஆனால் கூறுவது போல் அவ்வளவு எளிதான ஒரு காரியம் இது அல்ல என்பதையும் நாம் அறிந்து தான் இருக்கின்றோம். காரணம், ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு இயல்புடன் இன்று இருக்கின்றான். எனவே யாரை நம்புவது/அனைத்தும் ஒழுங்காகத் தான் நடைபெறுகின்றதா என்ற கேள்விகள் இயல்பாகவே எழத் தான் செய்யும். இங்கே தான் ஆன்மீகமானது வர வேண்டி இருக்கின்றது. மனிதர்கள் அனைவரும் இறைவனின் குழந்தைகள் என்றும் ஒற்றுமையாக அவர்கள் ஒன்றிணைந்து நம்பிக்கையுடன் நிம்மதியாக வாழ முயற்சிக்க வேண்டும் என்று கூறி மனிதர்களை ஒற்றுமையாக்க இங்கே தான் ஆன்மீகம் பேசும் நல்லோர்கள் வர வேண்டி இருக்கின்றது. மனிதர்களை அன்பினால் ஒன்றிணைப்பதைத் தவிர அவர்களுக்கு வேறு வேலை ஒன்றுமே கிடையாது (ஆனால் அந்த வேலையை அவர்கள் செய்வதே இல்லை என்பது வேறு கதை). நிற்க.

இதுவே தான் இயேசு கூறியஅந்த உவமைக் கதையின் அர்த்தமாகும். 'உலகியல் பொருட்களைக் கொடுத்து நண்பர்களைச் சம்பாதியுங்கள்' என்று அவர் கூறியதன் உண்மையான அர்த்தம் இது தான். மனித சமூகத்தின் நன்மைக்காக நீங்கள் உங்களுடைய பொருட்களை செலவிடுவதனை கண்டு உண்மையான அன்புடைய மக்கள் உங்களுடன் அன்பினால் ஒன்றிணைவார்கள். அவ்வாறே தான் நீங்கள் செய்ய வேண்டி இருக்கின்றது என்பதே இயேசு கூறிய கூற்றாகும்.

அதாவது மனிதர்கள் தாங்கள் கொண்டிருக்கும் உலகியல் செல்வங்களின் மூலமாக இந்த உலகினை நல்லதொரு உலகமாக மாற்ற முயல வேண்டி இருக்கின்றது. அவ்வாறு அவர்கள் முயற்சிக்கும் பொழுது 'பொறாமை,பொருளாசை,பேராசை,பயம்' போன்ற தீய எண்ணங்களால் நல்ல காரியங்கள் நிகழாமல் போய் விடுவதனை தடுத்து அன்பினால் மனிதர்கள் அனைவரையும் ஒன்றிணைப்பது ஆன்மீகவாதிகளின் கடமையாக இருக்கின்றது (அவர்களை அவ்வாறு முயற்சிக்க வைப்பதும் ஆன்மீகவாதிகளின் கடமையாகத் தான் இருக்கின்றது). ஆனால் அவர்கள் அவ்வாறு செய்வதில்லை என்பது தான் வருந்தத்தக்க ஒரு விடயமாக இருக்கின்றது. சரி இருக்கட்டும்....அதனைப் பற்றி நாம் மற்றொரு பதிவில் காணலாம்...!!!

உலக பொருட்களைக் கொண்டு மனிதர்களை தீமையானது பிரித்து வைத்து இருக்கின்றது. எனவே மனிதர்கள் உலக பொருட்களின் மீது உள்ள தங்களது பேராசையினை விட்டுவிட்டு, அந்த பொருட்களை மற்ற மக்கள் அனைவருக்கும் உதவும்படி பயன்படுத்தி ஒற்றுமையான ஒரு சமூகத்தை உண்டாக்க வேண்டும் என்பதே இறைவனின் விருப்பமாக இருக்கின்றது என்பது தான் இயேசு கூறிய உவமையின் பொருளாகும்.

பி.கு:

இந்த பதிவுக்கு எதுக்காக டால்ஸ்டாய் தோட்டம் 'TOLSTOY FARM' என்ற ஒரு புகைப்படத்தை பயன்படுத்தி இருக்கின்றேன் என்று சிலர் யோசிக்கலாம். மக்கள் அனைவரும் ஒற்றுமையாக ஒன்றிணைந்து வாழும் வண்ணம் காந்தி அவர்கள் உருவாக்கிய அந்த தோட்டத்திற்கும் நாம் இந்த பதிவில் கண்ட கருத்துக்கும் தொடர்பு இருப்பதால் தான் அந்த படத்தினை பயன்படுத்தி இருக்கின்றேன். டால்ஸ்டாய் தோட்டத்தினைப் பற்றி காந்தி அவர்கள் தன்னுடைய சுய சரிதையில் விலாவரியாக எழுதி இருக்கின்றார். விருப்பமுள்ளோர் அதனைப் படிக்கலாம். இன்றைய சூழலில், தோழர் செந்தமிழன் மணியரசன் அவர்கள் நடத்தும் செம்மை வனமும் கொள்கையில் இந்த முறையினை ஒத்துஇருப்பதனைப் போன்றே இருக்கின்றது.

ஞாயிறு, 5 பிப்ரவரி, 2017

இன்றைய சமூகமும் இயேசுவின் உவமைகளும் : உக்கிராணி கதை -1



இயேசு தன்னுடைய சீடர்களிடத்தும் சரி மற்ற மக்களிடத்தும் சரி சில உவமைகளின் மூலமாகவும் கதைகளின் மூலமாகவுமே தான் அவர் கூற வந்த கருத்தினைக் கூறிச் சென்று இருக்கின்றார். 2000 ஆண்டுகளுக்கு முன்பாக கூறப்பட்டு இருக்கின்ற அந்த உவமைகளையும் கதைகளையும் இன்றைய சமூக சூழலில் பொருத்திப் பார்ப்பதே இந்த பதிவுகளின் நோக்கமாகும். முதலில் இயேசு கூறிய உக்கிராணி கதையினைக் காண்போம்.

உக்கிராணியின் கதை:

ஒருமுறை செல்வந்தன் ஒருவனுக்கு உக்கிராணியாக ஒருவன் பணி செய்து வந்துக் கொண்டிருந்தான். வெகு விரைவில் அந்த எசமானனானவன் தன்னை பணியில் இருந்து துரத்தி விடுவான் என்பதனை அந்த உக்கிராணியானவன் அறிந்துக் கொண்டான். அவ்வாறு தான் துரத்தி விடப்பட்டால் உண்ண உணவும் இருக்க இடமும் இல்லாத நிலைக்கு தான் செல்ல வேண்டி இருக்கும் என்பதையும் அவன் அறிந்துக் கொண்டான். எனவே அவன் இருந்த நிலையினைக் குறித்து 'இதைத்தான் நான் செய்ய வேண்டும் : எசமானனின் கடையில் இருந்து பொருட்களை சிறிது சிறிதாக உள்ளூர் மக்களிடம் விநியோகம் செய்வேன். மேலும் அவர்கள் இந்த எசமானனுக்கு பட்டிருக்கும் கடன்களையும் நான் குறைப்பேன். பின்னர் என்னுடைய எசமானன் என்னைத் துரத்தி விட்டாலும் அந்த உள்ளூர் மக்கள் அவர்களுக்கு நான் காட்டிய என்னுடைய அன்பினை நினைவிற்கொண்டு என்னைக் கைவிடாது இருப்பர்' என்றே தனக்குள் எண்ணிக் கொண்டான்.

அவ்வாறே அவன் செய்யவும் செய்தான். அவனுடைய எசமானனுக்கு கடன்பட்டு இருந்த உள்ளூர் மக்களை அழைத்து அவர்களுக்குத் தள்ளுபடி இரசீதினை எழுதித் தந்தான். எவன் ஒருவன் நூறு பொன் கடன்பட்டு இருந்தானோ அவனுக்கு ஐம்பது பொன்னுக்கு இரசீதினை எழுதித் தந்தான். எவன் ஒருவன் அறுபது பொன் கடன்பட்டு இருந்தானோ அவனுக்கு இருபது பொன்னுக்கு இரசீதினை எழுதித் தந்தான். அவ்வாறே அவன் மற்றவர்களுக்கும் செய்தான். அவனது அந்த செயலைக் கண்ட எசமானன் 'என்ன இது. புத்திசாலித்தனமான காரியத்தை இவன் செய்து இருக்கின்றானே. இல்லாவிடில் இவன் இந்த உலகினை தனியே சந்தித்து இருக்க வேண்டி இருந்து இருக்கும். இப்பொழுதோ அவன் எனக்கு நஷ்டத்தை உருவாக்கி இருந்தாலும் அவனைக் கவனித்துக் கொள்ளும் வண்ணம் புத்திசாலித்தனமாக செயலாற்றி உள்ளான்' என்றே எண்ணிக் கொண்டான்.

கதையின் மூலம் இயேசு கூறிய செய்தி:

சராசரியானதாக இருக்கக்கூடிய இந்த நிரந்தரமற்ற மானுட வாழ்வினில் ஒரு கணக்கினை நமக்குச் சாதகமாக மாற்ற அதனை எவ்வாறு சரி செய்ய வேண்டும் என்பதனை நாம் அனைவரும் அறிந்து இருக்கின்றோம். அந்த உக்கிராணியானவன் எவ்வாறு தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காக உலகியல் செல்வங்களைப் பயன்படுத்திக் கொண்டானோ அதனைப் போன்றே தான் உலகியல் சிந்தனைகள் கொண்டிருக்கும் மக்கள் அனைவரும் இருக்கின்றனர். தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதனை அவர்கள் அறிந்தே தான் இருக்கின்றனர். அதற்கான வேலைகளையும் அவர்கள் திட்டமிட்டு செய்து கொள்கின்றனர். ஆனால் இறைவன் கூறியபடி வாழ்வினை வாழ்வது என்று வரும் பொழுது மட்டும், அந்த மக்கள் இறைவன் கூறிய கருத்தினையோ அல்லது அவர் கூறியபடி எவ்வாறு வாழ வேண்டும் என்பதனையோ அறிந்து கொள்ள விரும்புவதில்லை.

ஆகவே மனிதர்கள் தங்களை மட்டும் காப்பாற்றிக் கொள்ளும் வண்ணம் சுயநலத்துடன் பிரிந்து இருக்கின்றனர். அதனால் தான் இந்த உலகமானது பல்வேறு இன்னல்களைக் கண்டு கொண்டு இருக்கின்றது. தூய்மையற்றதும் போலியுமான செல்வத்தினைக் குறித்து நாமும் அந்த உக்கிராணியைப் போலவே நடந்துக் கொள்ள வேண்டி இருக்கின்றது. இறைவன் கூறியபடி வாழ்வதற்கும், பரலோக இராஜ்யமானது இந்த உலகினில் நிலைபெற்று இருக்கும் வண்ணம் செய்வதற்கும் நாம் அந்தச் செல்வத்தினைக் கொடுக்க வேண்டி இருக்கின்றது.

தன்னையும் தன்னுடைய குடும்பத்தையும் மட்டும் பாதுகாத்துக் கொள்வதற்கு என்று வைத்திருக்கும் செல்வத்தினைக் கொண்டு, மக்கள் அனைவரும் நலமாக ஒற்றுமையுடன் வாழ வழி செய்வதற்கே நாம் முயல வேண்டி இருக்கின்றது. அவ்வாறே அனைவரும் செய்தீர்கள் என்றால், இந்த உலகத்தில் 'நான்' 'நீ' என்கின்ற பிரிவினைகளும் பேராசைகளும் ஒழிந்து, அன்புடன் 'நாம்' என்று அனைவரும் ஒற்றுமையுடன் வாழும் ஒரு காலம் வரும். அப்பொழுது மக்கள் அனைவரும் தாங்கள் இறைவனின் குழந்தைகள் என்பதனையும் இறைவன் அனைத்தையும் அனைவருக்காகவும் பொதுவாகவே படைத்து இருக்கின்றான் என்பதனையும் உணருவர். அக்காலத்தில், மக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கக்கூடிய அந்த காலத்தில் இங்கே பரலோக இராஜ்யமானது வீற்று இருக்கும். 

மேலும் நாம் இறைவன் கூறியதனைப் போல் வாழ்வதற்காக அர்த்தமில்லாத இந்த உலக செல்வத்தினைத் துறக்க யோசிப்போமேயானால் நாம் இறைவனுடன் என்றுமே ஒன்று சேரப்போவதில்லை. நாம் நம்முடைய போலியான வாழ்வினைத் துறக்கவில்லை என்றால் நம்முடைய மெய்யான வாழ்வினை நாம் பெற்றுக் கொள்ள மாட்டோம்.

இறைவனின் சித்தத்தை நிறைவேற்றுவதே நல்வாழ்வினைத் தரும் என்பதனை அனைவரும் அறிவர், இருந்தும் அவர்கள் செல்வத்தின் மாயத்தோற்றத்தில் மயங்கி இறைவனின் விருப்பத்தின்படி நடக்காமல் இருக்கின்றனர். செல்வமானது போலியானதும் நிரந்தரமற்றதாகவும் இருக்கின்றது. எவரெல்லாம் அத்தகைய செல்வத்தினை தந்தையின் சித்தத்திற்கு உட்பட்ட மெய்யான வாழ்விற்காக விட்டுக் கொடுக்கின்றார்களோ அவர்கள் புத்திசாலியான அந்த உக்கிராணியானவன் செய்ததைப் போலவே செய்கின்றனர். இறைவனுடன் அவர்கள் ஒன்றிணைகின்றனர்.

இதுவே தான் இயேசு அந்த கதையினை அடிப்படையாக வைத்துக் கூறிய விடயமாகும். இப்பொழுது அந்த கதையானது நம்முடைய இன்றைய சமூகத்தில் எவ்வாறு பொருந்தும் என்றே நாம் காண வேண்டி இருக்கின்றது.

காண்போம்...!!!

புதன், 1 பிப்ரவரி, 2017

இராயனுக்கு உரியதை - 2!!!

சென்ற பதிவில் 'இராயனுக்கு உரியதை இராயனுக்குத் தாருங்கள்' என்று இயேசு ஏன் கூறினார் என்பதனைக் குறித்தே நாம் கண்டோம். இப்பொழுது அதனைக் குறித்தே தான் நாம் மேலும் சற்று காண வேண்டி இருக்கின்றது.

இறைவன் அனைத்தையும் அனைவருக்கும் பொதுவாக இருக்கும்படியே தான் படைத்து இருக்கின்றார். இயற்கை மனிதர்கள் அனைவருக்கும் பொதுவானதாகவே இருக்கின்றது. அனைத்தும் இலவசமாகவே மனிதர்களுக்குத் தரப்பட்டு இருக்கின்றது. மனிதர்களுக்குள் வேறுபாடுகளை இயற்கை காண்பதில்லை...இறைவனும் காண்பதில்லை. இதனை இயேசு கூறிய 'இறைவன் நல்லோர் மீதும் தீயோர் மீதும் ஒன்றினைப் போலவே தான் சூரியனை உதிக்கப் பண்ணுகிறார். அவர்களுள் வேறுபாடுகள் காணாமல் அனைவரின் மீதும் மழையினைப் பொழிய செய்கின்றார்' என்ற வசனங்களின் மூலமாக நம்மால் அறிந்து கொள்ள முடிகின்றது. இறைவன் மனிதர்களுள் வேறுபாடு காணாது அவர்களை ஒன்றாகவே காணுகின்றார். அதுவே அவரது விருப்பமாக இருக்கின்றது.

ஆனால் மனிதர்களோ ஒற்றுமையாக இருப்பதில்லை. அவர்கள் தங்களுக்குள்ளேயே பல்வேறு பிரிவுகளாக பிரிந்து இருக்கின்றனர். 'நான்' என்ற ஆணவத்தினால் வருகின்ற சுயநலமும், பணம் மற்றும் பொருட்களால் வருகின்ற பேராசையும் மனிதர்களை ஒற்றுமையாக இருக்க முடியாதபடிக்கு பிரித்து வைத்திருக்கின்றன. இந்த சுயநல சிந்தனைகளும் பேராசையும் இறைவனிடம் இருந்து வருவதில்லை, அவை சாத்தானிடம் இருந்து வருகின்றன. 'பணம்' இறைவன் படைத்த ஒன்றல்ல. அது மனிதன் படைத்த ஒன்று. 'இலவசமாக பெற்றீர்கள்...இலவசமாக கொடுங்கள்' என்ற இயேசுவின் கூற்றுக்கு முற்றிலும் எதிராக இருக்கின்ற ஒன்று அது. அதனை வைத்துத் தான் தீமையானது மக்களைப் பிரிக்கின்றது. இதனை இயேசு நன்றாக அறிவார்.
 
அதனால் தான் அவர் தெளிவாக செல்வத்திற்கும் இறைவனுக்கும் துளியளவு கூட தொடர்பில்லை என்று கூறி இருக்கின்றார். 'ஒன்று ஒருவன் பணத்திற்காக வேலை செய்து கொண்டிருக்க வேண்டும்...இல்லையேல் இறைவனுக்காக வேலை செய்து கொண்டிருக்க வேண்டும். ஒன்று அவன் பணத்தை தன்னுடைய எசமானனாக கொண்டிருக்க வேண்டும்...இல்லையேல் இறைவனை எசமானனாக கொண்டிருக்க வேண்டும். மாறாக ஒரே நேரத்தில் இரண்டு எசமானர்களுக்கு ஒருவனால் வேலை செய்து கொண்டிருக்க முடியாது.' என்பதே இயேசுவின் கூற்றாக இருக்கின்றது. இதன் அடிப்படையில் தான் நாம் 'இராயனுக்கு உரியதை இராயனுக்குத் தாருங்கள்' என்ற இயேசுவின் கூற்றினைக் காண வேண்டி இருக்கின்றது.

"ஒருவன் உன்னிடமிருந்து பணத்தையோ அல்லது பொருளையோ கேட்கின்றானா, அதனை அவனிடமே தந்து விடு. மனிதன் உருவாக்கிய அவற்றுக்காக நீ சண்டையிடாதே. எப்பொழுது நீ விட்டுக் கொடுக்கின்றாயோ அப்பொழுது நீ பேராசை/ஆசை என்கின்ற தீய குணத்தினை வென்றவன் ஆகின்றாய். இறைவனின் அருளும் உன்னுள் கூடுகின்றது. இறைவனின் மகன் நீ என்கின்ற ஒரு நிலைக்கு நீ உரித்தவனாகின்றாய். தீமை உன்னிடம் தோற்று விடுகின்றது. அதே சமயம், உன்னிடம் இருந்து பொருளை கேட்பவனுக்குள் இருக்கின்ற தீமையை மேலும் வளர விடாதவாறே நீ செய்தும் விடுகின்றாய். மனிதர்கள் அனைவரும் கடவுளின் பிள்ளைகளாகவே இருக்கின்றனர். எனவே, அவன் இப்பொழுது தீமையில் விழுந்து இருந்தாலும், உன்னுடைய அந்த தீமையற்ற தியாகச் செயலினால் அவனும் நிச்சயமாக இன்றில்லாவிடில் வேறு என்றாவது மாற கூடும். ஆனால் முக்கியமான விடயமாக நீ தீமையை வென்று விட்டாய்.

மாறாக நீயும் அவனுடன் அந்த பொருளுக்காக சண்டையிட்டுக் கொண்டாய் என்றால் தீமையானது உன்னுள் நுழைவதற்கு நீயும் வழி வகுத்தவனாகின்றாய். அவனுள்ளும் தீமை தொடர்ந்து வளரும்...உன்னுள்ளும் தொடர்ந்து வளரும். உங்களில் யார் வென்றாலும் சரி...இறுதியில் தீமையே வென்று இருக்கும். எனவே பொருள்/பணம் என்று மனிதன் படைத்த எதுவாக இருந்த போதிலும் அவற்றைப் பொருட்படுத்தாது தியாகம் செய்வதற்கு தயாராக இருங்கள். அரசன் உங்களிடம் இருந்து வரியினைக் கேட்கின்றானா...கொடுத்து விடுங்கள். பணத்திற்கும் இறைவனுக்கும் தொடர்பில்லை. ஆனால் நீங்களோ இறைவனின் குழந்தையாக இருக்கின்றீர்கள். எனவே இறைவனின் கட்டளைகளுக்கு மட்டும் நீங்கள் கட்டுப்பட்டு இருக்க வேண்டி இருக்கின்றது. இறைவனுக்கு சொந்தமான உங்களை, இறைவனின் விருப்பத்திற்கு எதிரான காரியத்தினை செய்வதற்காக யார் வற்புறுத்தினாலும் அதற்கு இணங்காதீர்கள். இறைவனுக்கு மட்டுமே நீங்கள் உரியவர்களாக இருக்கின்றீர்கள். எனவே இறைவன் கூறிய கட்டளைகளான,
 
  1. கோபம் கொள்ளாதீர்கள். அனைத்து மக்களிடமும் சமாதானத்துடனேயே இருங்கள்.

2. விபச்சாரத்தின் மூலம் உங்களை நீங்களே மகிழ்வித்துக் கொள்ளாதீர்கள்.

3. எவரிடத்தும் எக்காலத்திற்கும் எவ்விதமான உறுதிமொழியினையும் எடுத்துக் கொள்ளாதீர்கள்.

4. தீமையினை எதிர்க்காதீர்கள். எவரையும் நியாயந்தீர்க்காதீர்கள், மனித சட்டத்தினிடமும் செல்லாதீர்கள்.

5. வெவ்வேறு நாடுகளிடையே பிரிவுகளை உருவாக்காதீர்கள். உங்களுடைய நாட்டு மக்களை நேசிப்பதைப் போன்றே பிற நாட்டவர்களையும் நேசியுங்கள்.
 
இவற்றை நீங்கள் தவறாது கடை பிடிக்க வேண்டி இருக்கின்றது. இவற்றில் இருந்து உங்களை யாரும் விலக்க முடியாது. அவர்களுக்கு அந்த அதிகாரம் கிடையாது. நீங்கள் இறைவனின் பிள்ளைகள். எவருக்கும் அடிமைகளில்லை." என்பதே தான் அவர் கூறிய முழுமையான அர்த்தமாகும். நிற்க.
 
இது எல்லாம் நடைமுறை சாத்தியமாக முடியுமா என்கின்ற கேள்வி இயல்பாகவே பலருக்கும் வரும். நிச்சயமாக கடினம் தான்...ஆனால் முடியாதது இல்லை. அவற்றுக்காகத் தான் ஆன்மீகம் சார்ந்தோர் உழைக்க வேண்டும். அது மட்டுமே தான் அவர்களது வேலையாக இருக்கின்றது.
 
இன்று கிருத்துவர்களுக்கு மற்ற சமயத்தினருக்கும் வழிபாட்டு முறையினைத் தவிர வேறு பெரிய வித்தியாசங்கள் கிடையாது. வாழ்க்கை முறையானது கிட்டத்தட்ட ஒன்றாகவே தான் இருக்கின்றது. எனவே அவர்களுக்கு இயேசுவின் இந்த கூற்றுகள் நிச்சயமாக கடினமானதாகத் தான் தோன்றும்.

அதில் வியப்பில்லை..ஏனென்றால் கிருத்துவம் என்பது எளிமையான ஒரு கோட்பாடு அல்ல. சர்வ வல்லமை படைத்த இறைவன் மனிதனாக வந்து மரணிப்பது என்பது சொல்வது போல் அவ்வளவு எளிதான கோட்பாடு அல்ல தான். இதனைக் கூறாத அனைத்து திருச்சபைகளும் கிருத்துவ மக்களை ஏமாற்றிக் கொண்டு தான் இருக்கின்றன. இதனை கிருத்துவ மக்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

முற்றும்.

பி.கு:
 
இயேசு, கிருத்துவ நூலின் வசனங்கள் என்று கிட்டத்தட்ட ஒரு கிருத்துவ சமய கருத்துரையினைப் போன்றே இந்த கட்டுரையானது தோன்றினாலும் ( :) நிச்சயமாக அப்படித்தான் தோணும்.) இவற்றில் மனித சமூதாயத்திற்கான உண்மைகளும் இருக்கின்றன என்பதாலேயே தான் பதிவிடுகின்றேன் (நான் கிருத்துவ சமயத்தினைச் சார்ந்தவன் அல்ல என்பதையும் இங்கே கூறிக் கொள்ள விழைகிறேன்).

செவ்வாய், 24 ஜனவரி, 2017

இராயனுக்கு உரியதை - 1

'ஒரு கிருத்துவன் தேசங்களுக்கு இடையில் வேறுபாடுகள் காணலாமா?' என்ற கேள்வியை கிருத்துவ மக்களிடம் முன் வைத்த பொழுது அவர்களின் பதில் பெரும்பாலும் 'ஆம். தேசங்கள் மத்தியில் வேறுபாடுகள் இருக்கலாம். ஒரு மனிதன் தன்னுடைய அரசாங்கத்திற்கு கட்டுப்பட்டு சட்டத்திட்டங்களை ஒழுங்காகப் பின்பற்றிக் கொண்டிருக்க வேண்டும்' என்றே தான் இருந்தது. அவர்களது அக்கூற்றுக்கு அவர்கள் விவிலியத்தில் இருந்து சான்றாகத் தருவது 'இராயனுக்கு உரியதை இராயனுக்குத் தாருங்கள்...இறைவனுக்கு உரியதை இறைவனுக்குத் தாருங்கள்' என்ற வசனத்தையே தான். அதாவது அரசன் உங்களிடம் இருந்து எதனைக் கேட்கின்றானோ அதனை அரசனிடம் தாருங்கள், இறைவன் உங்களிடம் இருந்து எதனைக் கேட்கின்றானோ அதனை இறைவனிடம் தாருங்கள் என்பதே அதன் அர்த்தம் ஆகும். இந்த வசனத்தை வைத்துக் கொண்டு தான், 'பாருங்கள் இயேசுவே அரசுக்குத் தர வேண்டிய வரிகளைத் தாருங்கள்...அரசு உங்களிடம் இருந்து எதனைக் கேட்கின்றதோ அதனைத் தாருங்கள் என்று கூறி இருக்கின்றார். எனவே ஒரு கிருத்துவன் அரசுக்கு கட்டுப்பட்டு இருக்க வேண்டும். அது பிழையில்லை. அதனைப் போலவே பல்வேறு அரசுகள் இங்கே இருப்பதும் பிழையில்லை' என்றே அவர்கள் கூறுகின்றனர். இதனைத் தான் நாம் இப்பொழுது பார்க்க வேண்டி இருக்கின்றது. அதற்கு முதலில் இயேசு எப்பொழுது அவ்வாறு கூறினார் என்பதை நாம் காண வேண்டி இருக்கின்றது.

தன்னுடைய சீடர்களுக்கு போதித்துக் கொண்டிருந்த பொழுது தன்னுடைய சீடர்களிடம் அவ்வாறு கூறினாரா?
இல்லை...!!!

பொது மக்கள் அனைவருக்கும் பொதுவாக இறைவனைப் பற்றியும் அவர்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்பதனைப் பற்றியும் போதித்துக் கொண்டிருக்கும் பொழுது அவர் அவ்வாறு கூறினாரா?
இல்லை...!!!

பின்னே அவர் எப்பொழுது அவ்வாறு கூறினார்?
தன்னைச் சிக்கலில் சிக்க வைப்பதற்காக யூத மதத்தைச் சார்ந்த மதகுருக்கள் எப்பொழுது திட்டம் போட்டு தன்னிடம் வந்தார்களோ...அப்பொழுது அவர்களிடம் இயேசு அவ்வாறு கூறி இருக்கின்றார். இதனைப் பற்றி சற்று விரிவாக காண்பது நலமாக இருக்கும் என்றே நம்புகின்றேன்.

அன்றைய சூழலில் இயேசுவை ஒரு சாதாரண மனிதனாக, யோசேப்பின் மகனாக மட்டுமே மக்கள் அறிந்திருந்தனர். இயேசுவின் சீடர்களுக்கு கூட அவர் யார் என்பதைப் பற்றி முழுமையாகத் தெரிந்திருக்குமா என்றால், இல்லை என்றே நம்மால் கூற முடியும் (அவர் யார் என்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள் என்றால் அவரை எப்பொழுது வீரர்கள் கைது செய்தார்களோ அப்பொழுது அவர்கள் அவரை விட்டு ஓடி இருக்க மாட்டார்களே). அப்படிபட்ட ஒரு சாதாரண மனிதனான இயேசு அங்கிருந்த யூத சமய மதகுருக்களின் கொள்கையை எதிர்த்துக் கொண்டிருந்ததை, சமூகத்தில் புகழும் அதிகாரமும் பெற்று விளங்கிக் கொண்டிருந்த அந்த மதகுருக்கள் விரும்பி இருக்கவில்லை. தங்களது அதிகாரத்தையும் நம்பிக்கையையும் ஒரு சாதாரண மனிதன், ஒரு சில நூல்களைப் படித்துக் கொண்டு கேள்வி கேட்கின்றானே என்றே தான் அவர்கள் எண்ணினர். தங்களின் செல்வாக்கு மக்களின் மத்தியில் குறைவதை உணர்ந்த அவர்கள் இயேசுவை எப்படியாவது கைது செய்து விட வேண்டும் என்றே எண்ணினர்.

அக்காலத்தில் யூதர்கள் ரோமப் பேரரசுக்கு அடிமையாக இருந்தனர். ரோமர்களுக்கு வரியும் செலுத்தி வந்தனர். இந்நிலையில் ரோமர்களுக்கு வரியினைச் செலுத்த வேண்டாம் என்று எவனாவது கூறினான் என்றால் அவனை புரட்சியாளன் என்று கூறி ரோமப் பேரரசு கைது செய்து விடும். எனவே எப்படியாவது இயேசுவை கைது செய்து விட வேண்டும் என்பதற்காக அவர்கள் திட்டம் போட்டு பின்வரும் கேள்வியை இயேசுவைப் பார்த்து கேட்கின்றனர்.

"ரோமர்களுக்கு யூதர்கள் வரி செலுத்த வேண்டுமா கூடாதா? இறைவன் என்ன கூறுகின்றார் என்று கூறுங்கள்."

இக்கேள்விக்கு இயேசு 'வரி செலுத்துங்கள்' என்று விடை கூறி இருந்தார் என்றால் அவர்களால் அவர்  மீது "இவன் நம்மை மீட்க வந்தவன் இல்லை...இவன் நம்மை ரோமர்களுக்கு வரி கட்ட வேண்டும் என்று கூறுகின்றான். இவன் யூத இனத் துரோகி...இவனா நம்மை ரோமர்களிடம் இருந்து காப்பாற்ற போகின்றான் என்று நீங்கள் நம்புகின்றீர்கள்" என்று குற்றம் சுமத்தி, யூத மக்களை அவரிடம் இருந்து பிரித்திருக்க முடியும்.

ஒருவேளை இயேசு 'வரி செலுத்தாதீர்கள்' என்று கூறி இருந்தால் அவர்கள் நேராக ரோம அதிகாரிகளிடம் சென்று "இவன் வரி செலுத்த வேண்டாம் என்று கூறி மக்களை புரட்சிக்குத் தூண்டுகின்றான்" என்று கூறி அவரை கைது செய்ய வைத்திருப்பார்கள். இது தான் அவர்களது திட்டம். 'என்ன சொன்னாலும் மாட்டுவான்' என்றே தான் அவர்கள் அக்கேள்வியை இயேசுவின் முன்னே வைத்தனர்.

அவர்களின் நோக்கத்தை இயேசு நன்றாக அறிவார். எனவே அவர் அவர்களைப் பார்த்து "நீங்கள் வரியினை எதன் மூலமாக கட்டுவீர்கள்" என்றே வினவினார். அதற்கு அவர்கள் ரோம நாணயத்தை எடுத்துக் காட்டினார்கள். அதில் சீசரின் படம் பொறிக்கப்பட்டு இருந்தது. யூதர்கள் அன்று ரோமர்களுக்கு அடிமையாக இருந்தார்கள் என்று நாம் மேலே கண்டோம். எனவே அனைத்துப் பணப் புழக்கமும் ரோமர்களின் நாணயங்களின் வாயிலாகவே இருந்தன. ஏனென்றால் யூத தேசம் அப்பொழுது ரோம பேரரசின் ஒரு அங்கமாகவே தான் இருந்தது.

அந்த நாணயத்தைப் பார்த்த இயேசு "இது யாருடைய படம்?" என்றார்.

"சீசரின் படம்" என்றே அவர்கள் கூறினர்.

அதனைக் கேட்ட இயேசு "அப்படி என்றால் சீசருக்கு உரியதை சீசருக்குத் தாருங்கள்...இறைவனுக்கு உரியதை இறைவனுக்குத் தாருங்கள்" என்றே அவர்களுக்கு விடை பகின்றார்.

இந்த ஒரு வசனத்தை வைத்துக் கொண்டு தான் கிருத்துவ மக்கள், அரசுக்கு கட்டுப்பட்டு இருப்பதையும், பல்வேறு தேசங்களாகப் பிரிந்து இருப்பதையும் இன்றைய கிருத்துவ சமயமானது அனுமதித்துக் கொண்டிருக்கின்றது. சரி இருக்கட்டும், இப்பொழுது இயேசு கூறிய அந்த பதிலின் அர்த்தத்தை சற்று பார்த்தாகத் தான் வேண்டி இருக்கின்றது.

'ரோம நாணயம்' ரோமர்களால் உருவாக்கப்பட்டது. அதனை வைத்துக் கொண்டே வணிகம் முதலான தங்களுடைய வாழ்க்கைத் தேவைகளை யூதர்கள் அமைத்துக் கொண்டிருந்த சூழல் அன்றிருந்தது. எனவே "அவனுடைய பொருளை நீ பயன் படுத்திக் கொண்டிருக்கிறாய்...எனவே அவனது பொருளை அவன் கேட்டான் என்றால் அவனிடம் தந்து விடு. ஆனால் நீயோ இறைவன் படைத்த பொருளாக இருக்கின்றாய். எனவே இறைவன் உன்னிடம் என்ன கேட்கின்றானோ அதற்கே நீ உன்னைத் தர வேண்டி இருக்கின்றது. ரோமனின் நாணயத்தை அவனிடம் தந்து விடு. மாறாக உன்னை அவனிடம் தந்து விடாதே...ஏனென்றால் நீ இறைவனுக்கு உரியவன்...ரோமனுக்கு உரியவன் அல்ல" என்று பொருள் படுமாறு இயேசு அவர்களிடம் கூறினார்.

இந்த பதிலின் மேல் எந்த குற்றச்சாட்டையும் வைக்க முடியாமல் அந்த மதகுருக்கள் கிளம்புகின்றனர். இது தான் அந்த வசனத்தின் முழு அர்த்தம். மாறாக ஒரு கிருத்துவன் அரசுக்கு கட்டுப்பட்டு இருக்க வேண்டும் என்பதோ பல்வேறு அரசுகள் இருக்க வேண்டும் என்பதோ அல்ல. உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் ஒரு மனிதன் இறைவனுக்கு மட்டுமே கட்டுப்பட்டு இருக்க வேண்டும் என்பதே இதன் பொருளாக வருகின்றது. நிற்க!!!

இப்பொழுது இந்த பதிலினைப் பற்றியே தான் நாம் இன்னும் சிறிது நுணுக்கமாக காண வேண்டி இருக்கின்றது...காண்போம்!!!

இரு தேசங்களின் கதை : ஆரியவர்த்தமும் பிற தேசங்களும்...!!!

தேசியம்...வந்தேறிகள்...குடியுரிமை என்று இன்று பல குரல்கள் எழும்பிக் கொண்டிருக்கின்றன. "யார் வந்தேறிகள்? யார் பூர்வகுடி மக்கள்? எவ...