திருக்குறள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திருக்குறள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 11 ஏப்ரல், 2015

காந்திக்கு திருக்குறளை அறிமுகப்படுத்திய டால்ஸ்டாய்...!!!

நம்மில் சிலருக்கு டால்ஸ்டாயினைப் பற்றிச் சிறிது தெரியும். உலகப் புகழ் பெற்ற எழுத்தாளர்...ரஷ்ய நாட்டினைச் சார்ந்தவர்...'போரும் அமைதியும்' போன்ற உலகப் புகழ் பெற்ற நூல்களை எழுதி உலக சரித்திரத்தில் இறவாத ஒரு இடத்தினைப் பிடித்து இருப்பவர்...என்றே அவரைப் பற்றி அறிந்து இருப்போம். மேலும் அவரது பல சிறுகதைகளை பள்ளிப் பருவங்களில் நம்மில் பலர் படித்து இருக்கவும் வாய்ப்பு இருக்கின்றது. நிற்க

நம்மில் அனேகமாக அனைவருக்கும் காந்தியினைப் பற்றித் தெரிந்து இருக்கும். இந்தியாவின் விடுதலைப் போராட்டத்தை அறவழியில் கொண்டு செலுத்தி இந்தியாவின் விடுதலைக்கு பாடுபட்ட ஒருவர். மகாத்மா என்றும் தேசத் தந்தை என்றும் பரவலாக இந்திய தேசத்தில் அறியப்படுபவர். அவரைப் பற்றி பல விதமான கருத்துக்கள் நம்மிடையே நிலவினாலும் இந்திய வரலாற்றில்...ஏன் உலக வரலாற்றிலும் நிலைத்து நின்று விட்ட ஒரு மனிதர். அகிம்சை, ஒத்துழையாமை இயக்கங்கள் என்று வன்முறைக்கு மாற்றாக போராட்ட வழிமுறைகளை செயல்படுத்திக் காட்டிய ஒரு தலைவர். சரி இருக்கட்டும்.

மேற்கூறிய அனைத்து விடயங்களையும் நாம் அனைவரும் நிச்சயம் அறிந்து தான் இருப்போம். அனால் அறியாத சில விடயங்களே இங்கே முக்கியமானதாக இருக்கின்றன...அவை என்னவென்றால்...காந்தியின் அறவழிப் போராட்டங்களுக்கு தூண்டுதலாக...ஒரு வழிகாட்டியாக இருந்தது லியோ டால்ஸ்டாய் தான் என்பதே ஆகும்.

ஆம்...!!! காந்தியின் அகிம்சைக் கொள்கைகளாகட்டும் அறவழிப் போராட்டங்களாக இருக்கட்டும் அவற்றுக்கு அடிப்படையாக அமைந்து இருந்தது டால்ஸ்டாயின் படைப்புகளும் சிந்தனைகளுமே ஆகும். இதனைப் பற்றி நாம் மேலும் காண வேண்டும் என்றால் டால்ஸ்டாயினைப் பற்றியும் காந்தியினைப் பற்றியும் நாம் சிறிது கூடுதலாக அறிந்தாகத் தான் வேண்டி இருக்கின்றது.

டால்ஸ்டாய், வெறும் ஒரு எழுத்தாளராக மட்டும் இருந்து இருக்கவில்லை. தனது சிறு வயதில் நாத்திகராக இருந்த அவர் பிற்காலத்தில் வாழ்வின் அர்த்தத்தினைக் கண்டு கொண்டு ஒரு மாபெரும் ஆன்மீகப் போராளியாகத் திகழ்ந்தவர். அவருடைய ஆன்மீக நூல்களை ரஷ்யாவினில் வெளியிடத் தடை இருந்ததும் இங்கே குறிப்பிடத்தக்கது. இறைவன் அன்பாகவே இருக்கின்றார் என்பதையும் பிற மக்களுக்கு உதவி செய்வதிலேயுமே வாழ்வானது அடங்கி இருக்கின்றது என்பதையும் அறிந்துக் கொண்ட அவர் மற்ற சமயங்கள் கூறும் கருத்துக்கள் யாவை என்பதையும் அறிந்துக் கொள்ள அச்சமய நூல்களை ஆராய்ந்தவர்.

இறைவன் அன்பாகவே இருக்கின்றான் என்கின்ற பொழுது ஒரு மனிதன் மற்றொரு மனிதனுக்கு எக்காரணம் கொண்டும் தீங்கு விளைவிக்க கூடாது என்றும் இயேசு கூறிய 'ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு' என்பதனைப் போல் ஒரு மனிதன் தீமையை வன்முறையால் வெல்ல முயலாது அன்பினால் வெல்ல வேண்டும் என்றும் கூறி அதனைப் நடைமுறைப்படுத்தியவர்.

அப்படிப்பட்ட டால்ஸ்டாயின் நூல்களும் கருத்துக்களும் தான் காந்தியைக் கவர்ந்தன. டால்ஸ்டாய் எழுதிய 'பரலோக இராஜ்யம் உன்னுள் இருக்கின்றது' என்ற நூல் காந்தியின் உள்ளே ஒரு மாபெரும் தாக்கத்தினை உண்டாக்கியது. தென்னாப்பிரிக்காவினில் காந்தி தொடங்கிய ஒத்துழையாமை இயக்கம் முதற் கொண்ட அறப்போராட்டங்களுக்கு டால்ஸ்டாயின் சிந்தனைகள் அடிப்படையாக இருந்தன. அதனால் தான் காந்தி தென்னாப்பிரிக்காவினில் தொடங்கிய தனது முதல் ஆசிரமத்திற்கு 'டால்ஸ்டாய் பண்ணை' என்று பெயரிட்டார்.

மேலும் காந்தியும் டால்ஸ்டாயும் கடிதத் தொடர்பும் கொண்டிருந்தனர். அவ்வாறு அவர்கள் ஒருவருக்கொருவர் கடிதம் எழுதிக் கொள்ளும் பொழுது தான் காந்திக்கு டால்ஸ்டாய் திருக்குறளை அறிமுகம் செய்து வைக்கின்றார். உலகின் உள்ள அனைத்து சமயங்களைப் பற்றியும் ஆராய்ந்து கொண்டிருந்த டால்ஸ்டாய் ஆங்கிலேயர்களின் வழியாகவே இந்தியாவில் இருந்த சமயத்தினை அறிந்து இருந்தார். எனவே அவருக்கு இங்கே சைவம், வைணவம், வைதீகம் என்று மாறுபட்ட பல சமயங்கள் இருந்தது தெரியாது. அவருக்கு இந்தியா என்றால் ஒரு தேசம், அங்கே இருந்தது ஒரு மதம்...அது இந்து மதம் என்றே தான் தெரியும். அதனால் தான் காந்திக்கு அவர் கடிதம் எழுதுகையில் 'இந்துக்கு ஒரு கடிதம்' என்றே எழுதுகின்றார்.

அக்கடிதத்தில் மக்களைப் பற்றியும், உலக சமயங்களைப் பற்றியும், இந்தியாவைப் பற்றியும் அவர் காந்தியிடம் பேசுகின்றார். மேலும் குறிப்பாக அன்பினைப் பற்றியும் பேசுகின்றார். அவ்வாறு பேசும் பொழுது திருக்குறளில் இருந்து சில குறள்களை எடுத்துக்காட்டாக காட்டியே அவர் பேசுகின்றார். பிறருக்கு தீங்கு விளைவிக்க கூடாது என்பதனைப் பற்றி பேசும் பொழுது 'இன்னா செய்யாமை' என்ற அதிகாரத்தில் இருந்து சில குறள்களை அவர் மேற்கோள்களாக காட்டுகின்றார்.

இதன் மூலமாக திருக்குறள் என்ற நூலினைப் பற்றி காந்தி அவர்கள் அறிந்துக் கொள்வதற்கு டால்ஸ்டாய் உதவி இருக்கின்றார் என்பதனை நாம் அறிந்துக் கொள்கின்றோம். நிற்க

திருக்குறளினை அறிமுகம் செய்ய உதவியது என்பதற்காக மட்டுமே டால்ஸ்டாய்க்கும் காந்திக்கும் இடையில் இருந்தத் தொடர்பினைப் பற்றி நாம் இங்கே காணவில்லை. மாறாக நாம் கண்டு வந்துக் கொண்டிருக்கும் சமயங்களைப் பற்றிய கருத்துக்களுக்கும் சரி ஆன்மீகப் பொதுவுடைமையினைப் பற்றிய கருத்துக்களுக்கும் சரி இவர்கள் இருவரும் மிக முக்கியமானவர்களாக இருக்கின்றார்கள்.

அரசியல் பொதுவுடைமை என்றக் கோட்பாடு ரஷ்ய நாட்டினில் லெனின் ஸ்டாலின் போன்றவர்களால் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருந்த நேரத்தினில் ஆன்மீகப் பொதுவுடைமைக்கான விதை டால்ஸ்டாயின் மூலமாகவும் காந்தியின் மூலமாகவும் விதைக்கப்பட்டு கொண்டிருந்தது. இதனைப் பற்றி நாம் விரிவாகக் காண வேண்டும். எனவே வேறு பதிவுகளில் அவற்றைப் பற்றி காணலாம்.

பி.கு:

காந்திக்கு டால்ஸ்டாய் அவர்கள் எழுதிய கடிதத்தினை முன்னரே நாம் சில பதிவுகளில் கண்டு இருக்கின்றோம். அந்த பதிவுக்களுக்கான இணைப்புகள்:

ஞாயிறு, 5 ஏப்ரல், 2015

திருவள்ளுவர் கூறும் இல்வாழ்க்கைத் தன்மைகள்...!!!

மனிதனின் வாழ்விற்குத் தேவையான அற விடயங்களை வள்ளுவர் அறத்துப்பாலில் விளக்குகின்றார். ஒரு மனிதன் தன்னுடைய வாழ்வில் ஒன்று துறவறத்தை மேற்கொள்ளலாம். அல்லது இல்லறத்தை மேற்கொள்ளலாம். இவ்விரண்டு அறத்தினுள் இல்லறமே சிறந்தது என்று வள்ளுவர் கருதியதினால் தான் அதனை முதலில் வைத்து இருக்கின்றார். ஆணும் பெண்ணும் இணைந்து சமூகத்தில் நல்லறமாக இல்லற வாழ்வினை நடத்த வள்ளுவர் கூறும் வழிமுறைகள் என்னவென்றால்...

இல்வாழ்க்கை – அறவழியில் இல்லற வாழ்வினை நடத்துவதே மனிதனின் கடமையாகும்.

வாழ்க்கைத் துணைநலம் – மனைவியின் சிறப்பினைப் பொறுத்தே இல்லறத்தின் சிறப்பு விளங்கப் பெறுகின்றது

புதல்வரைப் பெறுதல் – நற்பண்புகளுடன் உடைய புதல்வரை உருவாக்குவதிலேயே ஒரு தம்பதியினரின் சிறப்பும் கடமையும் அடங்கி இருக்கின்றது. 

அன்புடைமை – அன்புடன் இருக்கும் தன்மையே மனிதன் உயிருடன் இருக்கும் தன்மைக்கு சான்றாகும். அன்பே ஒருவனை இறைவனுடன் இணைக்கின்றது. அன்பினை அடிப்படையாகக் கொண்டே இல்லத்தை மக்கள் அமைத்துக் கொள்ள வேண்டும்.

விருந்தோம்பல் – இல்லறமாக வாழ்வது என்பது மக்கள் ஒன்றிணைந்து மற்ற மக்களுக்கு உதவிகள் செய்வதற்காகவே. அனைவருக்கும் உதவும் சமூகத்தினை உருவாக்குவதே இல்லறம் பூண்டவர்களின் கடமையாகும்.

இனியவைக்கூறல் – அன்பினை அடிப்படையாகக் கொண்டு வஞ்சம் சிறிதும் அற்ற இனியச் சொற்களை உள்ளத்தில் இருந்து கூறுவோர் உலகில் தீமையை வென்று நன்மையைப் பரப்புகின்றனர். அதுவே மனிதர்களுக்கு அழகான ஒரு அணிகலனாக இருக்கின்றது. இனிமையான நல்ல சொற்களே இல்லத்திலும் சரி சமூகத்திலும் சரி நிறைந்து இருக்க வைப்பதே இல்லத்தாரின் கடமையாகும்.

செய்ந்நன்றி அறிதல் – எவ்வித பலனையும் கருதாது மற்றவர்களுக்கு உதவுவதே ஒருவனுக்கு கடமையாக இருக்கின்றது. அத்தகைய உதவியினை மறவாது அதனை நினைவிற் கொண்டு அதனைப் போல் தாமும் மற்றவருக்கு உதவ வேண்டும் என்று எண்ணுவதே உதவியினைப் பெற்றவர்களுக்குச் சிறந்த அறமாக இருக்கின்றது. 

நடுவு நிலைமை – மக்களுள் பாரபட்சம் பார்க்காமல் நன்மையின் பக்கம் நடுநிலையோடு நிற்பதே ஒருவனின் தலையாய கடமையாகும்.

அடக்கமுடைமை – ஒருவன் தன்னைத் தானே மற்றவர்களைக் காட்டிலும் உயர்ந்தவனாக கருதிக் கொள்ளாது எப்பொழுதும் அடக்கமாக பணிவுடன் இருக்க வேண்டும். ஏனென்றால் தன்னைத் தானே உயர்த்துகின்றவர்கள் தாழ்த்தப்படுவார்கள். தன்னைத் தானே தாழ்த்துகின்றவர்களோ உயர்த்தப்படுவார்கள்.
 
ஒழுக்கமுடைமை – ஒழுக்கம் உடையவர்களே மேன்மையான சமூகத்தினை உருவாக்குகின்றார்கள். எனவே இல்லறம் மேற்கொள்வோர் ஒழுக்கத்தினை உயிரினும் மேலாக கருதி அதன் அடிப்படையில் மேன்மையான குணங்களைக் கொண்ட சமூகத்தினை உருவாக்கிட வேண்டும்.

பிறனில் விழையாமை – ஒருவனுக்கு ஒருத்தி என்ற கொள்கைக்கு மாறாக நடக்கும் மக்கள் இழிவான ஒரு சமூகத்தினை உருவாக்குகின்றார்கள். கடவுளிடம் இருந்து விலகி தீமையின் கட்டுப்பாட்டுக்கு கீழ் செல்லும் அவர்கள் உயிரோடு இருந்தாலும் இறைவனின் முன்னர் இறந்தவர்களுக்கு சமமாவார்கள். நல்ல மக்கள் ஒருவனுக்கு ஒருத்தி என்று இறைவன் வகுத்த கொள்கையோடு இறைவனுடன் ஒன்றிணைந்து இருப்பர்.

பொறையுடைமை – தீயினைத் தீயினால் அணைக்க முடியாது. அதனைப் போன்றே தீமையை தீமையால் அழிக்க முடியாது. எனவே தனக்கு ஒருவர் தீமையினச் செய்து இருந்தால் அதனைப் பொறுமையாகப் பொறுத்து மன்னித்து அருள வேண்டும். அன்பினாலேயே தீமையை வெல்ல முடியும். எனவே இல்லறம் புரிவோர் எக்கணமும் பொறுமையுடன் அன்பாலேயே அனைத்துப் பிரச்சனைகளையும் அணுக வேண்டும்.

அழுக்காறாமை – பொறாமை என்பது ஒரு மனிதனுக்கு மிகப் பெரிய எதிரி ஆகும். ஆள் இல்லாத வீட்டினில் பாம்புகள் குடிக் கொள்வது போல அன்பில்லாத இதயத்தினில் பொறாமை போன்ற தீய குணங்கள் குடியேறிக் கொண்டு அந்த இதயத்தினை அழித்து விடுகின்றன. எனவே இல்லறம் புரிவோர் அத்தகைய தீய குணத்தினை தங்களது இல்லத்திலும் சரி தாங்கள் வாழும் சமூகத்திலும் சரி நுழைய விடாத வண்ணமே வாழ வேண்டும்.

வெஃகாமை – பிறரது பொருளினை கவர்ந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் சமூகத்தில் ஒருவர் ஒருவர் மீது நம்பிக்கை கொள்ளாது சந்தேகப்படும் நிலையினை உருவாக்கி விடுகின்றது. ஒற்றுமையாக இருக்கும் சமூகத்தினை உருவாக்காது ஒவ்வொருவரும் தன்னைப் பற்றி மட்டுமே எண்ணிக் கொள்ளும் ஒரு மிருக சமூகத்தினை உருவாக்குகின்றது. இல்லறம் மேற்கொள்வோர் அவ்வாறு பிறரின் பொருட்களின் மீது ஆசைக் கொள்ளாது ஒற்றுமையாக அன்புடன் இருக்கும் ஒரு சமூகத்தினையே உருவாக்கிட வேண்டும்.

புறங்கூறாமை – ஒருவரைப் பற்றி அவர் இல்லாத பொழுது புறங் கூறும் செயலானது அவர் நம் மீது கொண்டிருக்கும் நம்பிக்கையினை உடைக்கத் தக்கதாக இருக்கின்றது. அவ்வாறு ஒருவர் மீது ஒருவர் நம்பிக்கையற்று இருக்கும் நிலையினில் இருக்கும் சமூகத்திலேயே தான் தீய குணங்கள் செழித்து வளர்கின்றன. எனவே இல்லறம் மேற்கொள்வோர் புறங் கூறாது இருப்பது என்பது மிகவும் முக்கியமானதொன்று.

பயனில சொல்லாமை – பயனற்ற தீய விடயங்களைப் பற்றியே பேசிக் கொண்டிருப்பது தீமையையே பரப்புகின்து. மனிதனால் அவனுடைய வாழ்வினில் பல நன்மைகளை செய்ய முடியும் இருந்தும் அவ்வாறுச் செய்யாமல் பயனற்ற தீய சொற்களையே ஒருவன் பேசி வருவான் என்றால் அவன் தனது வாழ்வினை பயனற்ற ஒன்றாக ஆக்குவதுடன் அவன் வாழும் சமூகத்தினை தீய சமூகமாகவும் ஆக்குகின்றான். எனவே இல்லறம் மேற்கொள்வோர் பயனற்ற காரியங்களிலும் சொற்களிலும் நேரத்தை விரயமாக்காது இருக்க வேண்டும்.

தீவினையச்சம் – தீமையை பார்ப்பதால், கேட்பதால், பேசுவதால் தீமையானதே பரவுகின்றது. தீமையை தீமையால் அழிக்க முடியாது. தன்னைச் சுற்றி இருக்கும் சூழ்நிலைகளைப் பொறுத்தே ஒரு சராசரி மனிதன் தனது வாழ்வினை அமைத்துக் கொள்கின்றான். எனவே நம்முடைய செயல்கள் மற்றவர்களை பாதிக்கும் என்று கருதி தீமையானச் செயல்களைச் செய்வதற்கு இல்லறம் மேற்கொள்வோர் அச்சம் கொள்ள வேண்டும்.

ஒப்புரவறிதல் – இறைவன் அளித்த இந்த வாழ்வானது நாம் வாழும் காலத்தில் நம்முடன் வாழும் மக்களுடன் ஒன்றாக இணைந்திருந்து ஒவ்வொருவரும் பிறருக்கு உதவிக் கொண்டு சகோதரர்களாக வாழ்வதற்காகத் தான். பிறருக்கு உதவுவதிலேயே வாழ்வின் அர்த்தமானது அடங்கி இருக்கின்றது. எனவே இல்லறம் மேற்கொள்வோர் பிறருக்கு உதவும் குணத்தினை சமூகத்தினில் வளர்க்கும் வண்ணமே வாழ வேண்டும்.

ஈகை – பிறருக்கு தருவதனால் வரும் ஒருவன் அடையும் மகிழ்ச்சியே உண்மையான இன்பமாகும். அடுத்தவருக்கு உதவியாக இருக்கும் வண்ணம் வாழும் வாழ்வே மெய் வாழ்வாகும். எனவே இல்லறம் மேற்கொள்வோர் எப்பொழுதும் தங்களால் இயன்ற வண்ணம் ஈகை குணத்தினை சமூகத்தினில் வளர்க்க வேண்டும்.  

புகழ் – தான் மறைந்தப் பின்னரும் தன்னுடைய செயல்களால் இறவாத் தன்மையினை ஒருவன் அடைவதே அவன் வாழ்வினை நன்றாக வாழ்ந்ததற்கு அர்த்தமாகும். சுய நலமாக தன்னை மற்றும் பார்த்துக் கொண்டு வாழ்ந்த மனிதர்கள் உயிரோடு இருந்தும் மரித்தவர்களாக இருக்கின்றனர். தாங்கள் வாழும் காலத்தில் சமூகத்தில் மற்ற மக்களுக்காக அன்பால் உழைத்தவர்களே இறந்த பின்பும் புகழோடு வாழ்ந்துக் கொண்டிருக்கின்றார்கள். அத்தகைய புகழையே இல்லறம் மேற்கொள்வோர் நாட வேண்டும்.

ஞாயிறு, 20 ஜூலை, 2014

திருவள்ளுவர் கூறும் இறைவன் யார்? - 4

கடந்த பதிவுகளில் திருவள்ளுவர் கூறும் இறைவன் கிருத்துவம் மற்றும் சைவம் ஆகிய சமயங்கள் கூறுகின்ற இறைவனையே என்றும் அவர் பௌத்த சமயத்தையோ அல்லது சமண சமயத்தையோ சேர்ந்தவர் அல்லர் என்றுமே நாம் கண்டு இருக்கின்றோம்.

அவ்வாறு கண்டு வருகையில் இறைவனின் அருள் இன்றி இறைவனை அறிதல் அறிதல் இயலாது என்றும் அவன் அருள் இருந்தால் தான் ஆன்மீக அறிவினைப் பெற முடியும் என்றே சமயங்கள் கூறுகின்றன என்றே கண்டோம். இப்பொழுது இதனைப் பற்றித் தான் விரிவாகக் காண வேண்டி இருக்கின்றது.

"அவன் அருளாலே அவன் தாள் வணங்கி" என்று மாணிக்கவாசகர் கூறுகின்றார். இதனையே சைவ சித்தாந்த சாத்திரத்தின் மணிமுடியான சிவஞானபோதமும் தெளிவாக விளக்குகின்றது.

கிருத்துவும் என் மூலமாக அன்றி பிதாவினை வேறு ஒருவனும் அறியான் என்றே கூறி இருக்கின்றார்.

"அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்." யோவான் 14:6

இவற்றின் மூலமாக இறைவன் உணர்த்தாமல் இறைவனைப் பற்றி அறிந்துக் கொள்ளும் ஆன்மீகச் சிந்தனைகளை மனிதனால் அறிந்துக் கொள்ள முடியாது என்பதனை நாம் அறிந்துக் கொள்ள முடிகின்றது.

அதனால் தான் அதுவரை இறை நம்பிக்கை கொண்டு இருந்த மக்கள் அனைவரும் அவர்களது குலத்திற்கான வழிபாட்டுக் கடவுளரைக் கொண்டு அவற்றிக்கு பலிகளை இட்டுக் கொண்டு வந்தனர்...அவர்களுக்கு மக்கள் அனைவருக்கும் பொதுவாக இருக்கும் இறைவனைப் பற்றிய புரிதலோ அல்லது எண்ணமோ இருக்கவில்லை.

அதனால் தான் ஞானம் மிகுந்த இம்மண்ணில் எழுந்த சமயங்களான பௌத்தமும் சமணமும் இறைவனைப் பற்றி அறியாத சமயங்களாகவும் பலியினை எதிர்பதாகவும் இருக்கின்றன. நிற்க

இறைவன் உணர்த்தாமல் இறைவனை அறிய முடியாது சரி...அப்படி என்றால் இறைவன் எப்படி உணர்த்தினான் எவ்வாறு உணர்த்தினான் என்றக் கேள்வி இங்கே எழுக்கூடும்...இதற்கு விடையாய்

"சுத்த சிவன் குருவாய் வந்து தூய்மை செய்து" - திருமந்திரம்

"அகலமாய் யாரும் அறிவரி தப்பொருள்
சகலமாய் வந்ததென் றுந்தீபற
தானாகத் தந்ததென் றுந்தீபற" – திருஉந்தியார் 1

என்று இறைவன் மனிதனாக உலகிற்கு வந்து மனிதர்களுக்கு குருவாகி அவர்களை ஆட்கொண்டார் என்றே சைவம் கூறுகின்றது. இங்கே நாம் காண வேண்டியக் கேள்வி,

இறைவன் மனிதனாக வந்தான் சரி...ஆனால் எப்பொழுது வந்தான்? எங்கு வந்தான்? எப்படி வந்தான்? என்பதுதான்.

இறைவன் மனிதனாக வந்து மக்களைக் ஆட்கொண்டான் என்றக் கருத்து சைவ சமயத்தின் அடிப்படையாக இருந்தாலும் இறைவன் எப்பொழுது மனிதனாக வந்தான் என்றக் கேள்விக்கு விடைகள் கிடைப்பதில்லை. இந்நிலையில் இறைவன் மனிதனாக வந்தான் என்ற கருத்து வேறு எங்காவது இருக்கின்றதா என்றே நாம் கண்டோம் என்றால் அதே கருத்து கிருத்துவத்திலும் காணப்படுகின்றது.

அங்கே இறைவன் மனிதனாக எங்கே வந்தான், எப்பொழுது வந்தான், எப்படி வந்தான் என்ற கேள்விகளுக்கு விடைகள் கிடைக்கின்றன. இதைத் தான் நாம் இப்பொழுது சற்று உன்னிப்பாகக் காண வேண்டி இருக்கின்றது.

இறைவன் அருளில்லாமல் மனிதனால் இறைவனை அறியவோ உணரவோ முடியாது என்றே சைவமும் கிருத்துவமும் கூறுகின்றன (காரணம் மனிதன் மலத்தில்/பாவத்தில் உள்ளான்). அவனை மீட்டு எடுக்க இறைவன் மனிதனாக வருகின்றார். இக்கருத்தை, இக்காலத்தில் இந்த இடத்தில் இறைவன் மனிதனாக வந்தான் என்றே கிருத்துவம் கூறுகின்றது.

ஆச்சர்யவசமாக அக்காலத்திற்கு முன்பு வரை உலக மக்கள் அனைவருக்கும் பொதுவான இறைவன் என்ற ஆன்மீகச் சிந்தனையோ அல்லது மனிதன் மலத்தில் இருக்கின்றான் என்றச் சிந்தனையோ வேறு எங்கும் காணப்படவே இல்லை...(கி.மு (கிருத்து காலத்திற்கு முன்னர்) வில் சிவன்/பிள்ளையார்/சக்தி/ஈசன்/பெருமாள்/பிரமன் போன்ற பெயர்களோ அல்லது சைவ வைணவ சமயத் தத்துவங்களோ காணப்படாதது இங்கே குறிப்பிடத்தக்கது. முருகன் என்பவன் பலியினை ஏற்றுக் கொள்ளும் குறிஞ்சி நிலக் கடவுளாகவே அறியப்பெற்றான் என்பதும் குறிப்பிடத்தக்கது). நிற்க

எனவே இறைவன் மனிதனாக வந்த வரலாற்று நிகழ்வை கிருத்துவம் கூறிக் கொண்டு இருக்கும் பொழுது, இறைவன் மனிதனாக வந்து மனிதரை மீட்ட ஆன்மீகக் கருத்தினை ஆன்மீக ரீதியாக தெள்ளத் தெளிவாக தமிழரின் ஞானத்துடன் விளக்கிக் கொண்டு இருப்பது சைவ வைணவ சமயங்களாகும் என்றே நாம் அறியப் பெறுகின்றோம்.

இவை இரண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் தான் திருவள்ளுவர் நிற்கின்றார்...இறைவன் மனிதனாக உலகிற்கு வந்த வரலாற்று செய்திக்கும், அந்த வரலாற்று நிகழ்வு தமிழரின் ஞானத்துடன் ஆன்மீக ஞானமாக வளர்ந்த நிலைக்கும் இடைப்பட்ட காலத்தில் வள்ளுவர் நிற்கின்றார்.

இறைவன் மனிதனாக வந்து பலியான செய்தியை தமிழகத்திற்கு கொண்டு வந்தது ஈசனின் சீடரான தூய தோமா...இவர் கிருத்துவ சமயத்தைச் சார்ந்தவர் அல்லர்...இவரது காலத்தில் கிருத்துவ சமயம் தோற்றம் பெற்று இருக்கவே இல்லை. இவர் இறைத்தூதராக இறைவனின் கருத்தினைக் கொண்டு வந்தவர். எவ்வாறு திருநாவுக்கரசரும் மாணிக்கவாசகர் போன்றவர்களும் இறைத் தொண்டு ஆற்றினார்களோ அவ்வாறு இறைத் தொண்டாற்றிய ஒருவர்.

இவருடையக் கருத்தினைத் தமிழர்களின் ஞானம், இறை அருளால் தெளிவாக அறிந்துக் கொண்டு, அதனை மாபெரும் ஆன்மீகப் புதையலாக வளர்த்தது. அவ்வாறு வளர்த்ததில் முதல் இடத்தில் இருப்பவர் திருவள்ளுவர். இயற்கை நெறி காலத்தில் வாழ்ந்துக் கொண்டு வந்த மக்களை அறநெறிக் காலத்திற்கு இறைவனின் அருளால் கொண்டு வந்த நிகழ்வினை துவக்கி வைத்தது திருவள்ளுவர் தான்.


திருக்குறளின் அடிப்படையாகக் கொண்டு தான் அறநெறிக் காலம் இங்கே மலர்ந்தது. திருக்குறளின் அடிப்படைக் இறைக் கருத்தோ, உலக மக்கள் அனைவருக்கும் பொதுவான இறைவன் மக்களின் வினையினைப் போக்க மனிதனாக வந்து மக்களுக்காகப் பலியானான் என்பதே.

அந்த இறைவனைப் பற்றியே திருவள்ளுவர், கடவுள் வாழ்த்து, வான் சிறப்பு, நீத்தார் பெருமை ஆகிய அதிகாரங்களினால் விளக்குகின்றார்.

முற்றும்...!!!

பி.கு:

திருக்குறளினைப் பற்றிய முந்தையப் பதிவுகளைப் படிக்க
 

ஆய்வாளர்.தெய்வநாயகம் ஐயா என்பவரின் ஆய்வுகளில் இருந்து நான் அறிந்தவற்றையே இங்கே பதிவிட்டு இருக்கின்றேன்.

சமயங்களின் வரலாற்றைப் பற்றிய தொடரினைக் காண

சமயங்களின் வரலாறு
 
சிவஞானபோதத்தைப் பற்றி அறிந்துக் கொள்ள

திருவள்ளுவர் கூறும் இறைவன் யார்? - 3

கடந்த பதிவுகளில் எவ்வாறு வள்ளுவர் கடவுளாக சூரியனைக் கூறவில்லை என்றும் எவ்வாறு அவர் பௌத்த சமயத்தினையோ அல்லது சமணச் சமயத்தினையோ சார்ந்தவர் அல்லர் என்றும் கண்டு இருந்தோம். அப்படி என்றால் வள்ளுவர் கூறும் இறைவன் யார் என்ற கேள்வி இங்கே எழுகின்றது? இக்கேள்விக்கு விடையினை நாம் முன்னரே சில பதிவுகளில் கண்டு இருந்தாலும்


இங்கே மீண்டும் அவற்றை நாம் கண்டாகத் தான் வேண்டி இருக்கின்றது.

வள்ளுவர் கூறும் இறைவன் இரு வினைகளைத் தீர்பவராக இருக்கின்றார். பிறவிப் பெருங்கடலை அவர் அருள் இன்றி கடத்தல் இயலாது. மேலும் ஐம்புலன்களை அடக்கியவராகவும் அவர் குறிக்கப்பட்டு இருக்கின்றார். உலகம் முழுவதற்கும் பொதுவானவர். எனவே எந்தச் சமயம் இறைவனை இத்தன்மைகளோடு கூறுகின்றதோ அச்சமயத்தை சார்ந்தவராக வள்ளுவர் இருக்கலாம் என்றே நாம் கருதலாம் தானே. இதன் அடிப்படையில் நாம் கண்டோம் என்றால் நமக்கு விடையாய் இரண்டுச் சமயங்கள் கிட்டுகின்றன.

சைவம் (வைணவம் சைவத்தில் இருந்து பிரிந்த சமயம் என்பதனை கருத்தில் கொள்க)
கிருத்துவம்

இந்த இரண்டுச் சமயங்களிலும் இறைவன் வினைகளைத் தீர்பவராகவும்...அருளினால் மனித உயிர்களை பிறவிக் கடலில் இருந்து மீட்பவராகவும்...ஐம்புலன்களை உடைய மனிதனாக அவதாரம் எடுத்து உலகிற்கு வந்து மனிதர்களுக்கு வழியினைக் காட்டியவராகவும்...உலக மக்கள் அனைவருக்கும் உரியவராகவும் அறியப்படுகின்றார்.

இந்நிலையில் இந்த இரண்டு சமயங்கள் கூறும் இறைவனில் யாரை வள்ளுவர் கூறி உள்ளார் என்ற ஒரு கேள்வியும்...இரண்டு சமயங்களிலும் கூறப்பட்டு உள்ள இறைவனின் தன்மைஒன்றாகவே இருக்கின்றதே இந்நிலையில் இவ்விரண்டுச் சமயங்களும் ஒரே இறைவனைத் தான் கூறுகின்றனவா என்ற கேள்வியும் இங்கே எழ வாய்ப்பு இருக்கின்றது.

இதற்கு விடையாய் நமக்கு கிட்டுவது கிருத்துவமும் சைவமும் இரு வேறு சமயங்கள் அல்ல என்றும் உலகின் வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு காலக்கட்டத்தில் ஒரே கருத்தின் அடிப்படையில் எழுந்த இரு பிரிவுகள் என்பதே ஆகும். அதாவது கிருத்துவமும் சைவமும் இரு வேறு கருத்தினைக் கொண்ட இரண்டுச் சமயங்கள் அல்ல மாறாக, ஒரே கருத்தினைக் கொண்ட ஒரே சமயத்தின் இரண்டுப் பிரிவுகள்.

கிருத்துவத்தில் ஈசா
சைவத்தில் ஈசன்

கிருத்துவத்தில் தந்தை/பரிசுத்த ஆவி/மகன்
சைவத்தில் சிவன்/சக்தி/ குமரன்

இதையேத் தான் திருவள்ளுவர் தனது சிறப்பாயிரத்தில் (கடவுள் வாழ்த்து/ வான் சிறப்பு/ நீத்தார் பெருமை) என்றுக் கூறி உள்ளார்.

கிருத்துவத்தில் மகன் வினையினைத் தீர்பவராக அறியப்பெருகின்றார். இங்கே குமரன் 'வேலுண்டு வினையில்லை..' என்றும் 'விநாயகனே வினைத் தீர்பவனே' என்றும் வினையினைத் தீர்பவனாக அறியப்பெருகின்றார்.

கிருத்துவத்தில் மூஒருமைக் கோட்பாட்டில் ஒரே இறைவன் மூன்று நிலையில் இருக்கின்றார். சைவத்திலும் சிவன், சக்தி, குமரன் ஆகியோர் மூன்றாக கூறப்படினும் அடிப்படையில் அவர்கள் ஒன்றே என்ற மூஒருமைக் கோட்பாடு காணப்படுகின்றது. நிற்க

இந்தத் தலைப்பில் நாம் ஏற்கனவே பல பதிவுகளைக் கண்டாயிற்று...எனவே இதனை மேலும் விளக்காமல் திருவள்ளுவரைப் பற்றித் தொடருகின்றேன் (சமயங்களைப் பற்றி அறிவதற்கு இந்தச் சுட்டியினைச் சொடுக்கவும் - சமயங்கள்)

திருவள்ளுவர் சைவமும் கிருத்துவமும் கூறும் இறைவனைப் பற்றியே கூறி இருக்கின்றார் என்றே நாம் கண்டிருக்கின்றோம் ஆனால் திருவள்ளுவர் சைவரும் அல்லர்...கிருத்துவரும் அல்லர்...!!!

புதிரான கூற்றாக இருக்கின்றது தானே...ஆனால் உண்மையும் அதுதான். திருவள்ளுவர் சைவரும் அல்லர் கிருத்துவரும் அல்லர். காரணம் திருவள்ளுவர் காலத்தில் கிருத்துவம்/கிருத்துவர் என்றப் பெயரோ அல்லது சைவம்/ஈசன் என்றப் பெயரோ உருவாகி இருக்கவே இல்லை.

திருவள்ளுவரின் காலத்தில், கிருத்துவக் கருத்துக்கள் தோற்றம் பெற்ற மத்திய ஆசியாவில் கிருத்துவின் கருத்துக்களைக் கூறியவர்களை வேட்டையாடிக் கொண்டு இருந்தனர்...மேலும் கிருத்துவின் போதனைகளையும் கூற்றுகளையும் அவரது சீடரே முழுமையாக புரிந்துக் கொள்ள முடியாத நிலை தான் இருந்தது.

அவ்வாறே தமிழகத்தில் 'குறிஞ்சி/முல்லை/மருதம்/நெய்தல்/பாலை' ஆகிய நிலப்பிரிவுகளின் திணைக் கடவுளரான 'சேயோன்/மாயோன்/இந்திரன்/வருணன்/கொற்றவை' ஆகியோர் வழிபாடும் (இவைகள் சமயங்கள் அல்ல...இவைகள் பலி கொடுக்கும் வழிபாடே ஆகும்), அப்பலி கொடுக்கும் வழிபாடுகளை மறுக்கும் சமயங்களான சமணமும் பௌத்தமுமே பரவி இருந்தன.

அறிவிலும் பண்பிலும் சிறந்தவர்களாக தமிழர்கள் இருந்தனர். அவ்வாறே கிரேக்கர்களும் சரி ரோமர்களும் சரி அளப்பரிய முன்னேற்றங்களைக் கண்டு தான் இருந்தனர். இருந்தும் எவரிடத்தும் உலகம் முழுவதற்கும் உள்ள ஒரு இறைவன் என்றக் கருத்து பரவலாகக் காணப்படவில்லை.

ரோமர்களுக்கு அவர்களுக்கு உரிய கடவுளர் இருந்தனர், கிரேக்கர்களுக்கும் சரி எகிப்தியர்களும் சரி யூதர்களுக்கும் சரி அவர்களுடைய இனத்திற்குரிய கடவுளர் இருந்தனர். எவ்வாறு தமிழர்களுக்கு குறிஞ்சி நிலம், முல்லை நிலம் போன்ற நிலப்பிரிவுகளுக்கு என்று தனித் தனி வழிபாட்டுக் கடவுளர் இருந்தனரோ அதனைப் போன்று தான் உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கும் அவர்கள் இனத்திற்கென்று வழிப்பாட்டுக் கடவுளர் இருக்கத் தான் செய்கின்றனர்.

இவர்களது இனம், அவர்கள் எகிப்தியர்களாக இருக்கட்டும்...அல்லது கிரேக்கர்களாக இருக்கட்டும்...அல்லது ரோமர்களாக இருக்கட்டும்...பல்வேறு சாதனைகளையும் அறிவுச் செல்வங்களைப் பெற்று இருந்தாலும் ஆன்மீகச் சிந்தனை என்பது அவர்களுக்கு எட்டாத ஒன்றாகவே இருந்தது. இதே நிலை தான் உலகின் முதல் இனமும் ஞானத்தில் சிறந்த இனமுமான தமிழ் இனத்திலும் நிலவியது.

இந்த நிலை நிலவியதற்குக் காரணம் எளிது தான்...ஆன்மீகச் சிந்தனை என்பதனை இறைவன் அளிக்காமல் மனிதனால் தானாகத் தேடி அடைய முடியாது. இறைவனை உணர இறைவனின் அருள் வேண்டும்...அவன் அருள் இன்றி அவனை அறிதல் இயலாது...இதுவே தான் கிருத்துவமும் சரி சைவமும் சரி கூறும் அடிப்படைக் கருத்தாகும். இதைப் பற்றித் தான் நாம் இப்பொழுது காண வேண்டி இருக்கின்றது...!!!

தொடரும்...!!!

பி.கு:

திருக்குறளினைப் பற்றிய முந்தையப் பதிவுகளைப் படிக்க
 
ஆய்வாளர்.தெய்வநாயகம் ஐயா என்பவரின் ஆய்வுகளில் இருந்து நான் அறிந்தவற்றையே இங்கே பதிவிட்டு இருக்கின்றேன்.

சமயங்களின் வரலாற்றைப் பற்றிய தொடரினைக் காண

சமயங்களின் வரலாறு

திருவள்ளுவர் கூறும் இறைவன் யார்? - 2

சென்ற பதிவினில் வள்ளுவர் இறைவன் என்று கூறுவது சூரியனையே என்று சிலர் கருதுவதையும் அது எவ்வாறு பொருந்தாது என்பதையும் கண்டு இருக்கின்றோம். இப்பொழுது நாம் வள்ளுவர் பௌத்த சமயத்தை அல்லது சமண சமயத்தைச் சார்ந்தவராக இருக்கலாம் என்றக் கருத்தினைத் தான் காண வேண்டி இருக்கின்றது.

திருவள்ளுவர் பௌத்தம் அல்லது சமணச் சமயத்தைச் சார்ந்தவரா?

இப்பொழுது ஒரு கேள்வி, ஒருவர் ஒரு சமயத்தைச் சார்ந்தவர் என்றோ அச்சமயத்தைச் சார்ந்தவர் அல்லர் என்றோ கூற வேண்டும் என்றால் முதலில் என்ன தெரிந்து இருக்க வேண்டும்?

அந்த சமயத்தைப் பற்றித் தெரிந்து இருக்க வேண்டும் தானே. அதனைப் பற்றித் தெரிந்தால் தானே ஒருவர் அச்சமயத்தைச் சார்ந்தவர் என்றோ அல்லது சார்ந்தவர் அல்ல என்றுக் கூற முடியும். இந்நிலையில் வள்ளுவர் சமணம் அல்லது பௌத்தம் ஆகிய சமயங்களைச் சார்ந்தவர் என்றுக் கூற வேண்டும் என்றால் முதலில் அச்சமயங்களைப் பற்றி நாம் அறிந்து இருக்க வேண்டும் தானே. அது தானே சரியானதொன்றாக இருக்கும். எனவே நாம் முதலில் அந்த சமயங்களின் கருத்துக்களை சிறிது மேலோட்டமாகப் பார்த்து விடலாம்...!!!

பௌத்த சமயமாக இருக்கட்டும் அல்லது சமணச் சமயமாக இருக்கட்டும் இரண்டுமே இறை மறுப்புச் சமயங்கள்...அதாவது நாத்திக சமயங்கள்...அவைகளைப் பொறுத்த வரை இறைவன் என்ற ஒருவன் இல்லை. அச்சமயங்களுள் இறைக் கோட்பாடு கிடையாது. அதனால் பிறவிச் சுழற்சிக் கோட்பாடு உண்டு. அதாவது இந்த பிறவியில் நீ செய்த பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப அடுத்த பிறவி நிகழும்...உன்னுடைய ஒவ்வொரு பிறவியிலும் உன்னுடைய பழைய வினை உன்னை தொடர்ந்து வந்துக் கொண்டே இருக்கும்...அதை யாராலும் மாற்ற இயலாது.

இதையே தான் சிலப்பதிகாரத்தில் வரும் 'ஊழ் வினை உறுத்து வந்து ஊட்டும்' என்ற கூற்று வெளிப்படுத்துகிறது. இந்நூலினை இயற்றியவர் சமண சமயத்தைச் சார்ந்த இளங்கோவடிகள் என்பதை நாம் அறிவோம்...அதனால் சமணத் தத்துவமாகிய 'ஒருவனது வினை அவனை எப்பிறவி ஆயினும் அடைந்தேத் தீரும்' என்ற கருத்து அவரது படைப்பில் வெளிப்பட்டு உள்ளது.

பற்றுகளை அறுப்பதன் மூலமே உன்னால் அப்பிறவிச் சுழற்சியில் இருந்து விடுபட முடியும்...இதுவே அச்சமயங்களின் அடிப்படைக் கூற்றாகும்...உலகத் தோற்றம், உயிர், உடல், மாற்றம் என்பன போன்ற பல தத்துவங்கள் அவற்றுள் கூறப்பட்டு உள்ளனவாயினும் நம்முடைய தலைப்பிற்கு அவை தேவை இல்லாத காரணத்தினால் அவற்றை நாம் இங்கே காணப் போவதில்லை. நிற்க.

சுருக்கமாக, சமண பௌத்த சமயங்கள் இறைக் கொள்கை இல்லாத சமயங்கள்...பிறவிச் சுழற்சியில் நம்பிக்கை கொண்டுள்ள சமயங்கள்...ஒருவனது வினை அவனை எப்பிறவியிலும் அடைந்தேத் தீரும் என்ற நம்பிக்கைக் கொண்டுள்ள சமயங்கள்...அவ்வினைகளிடம் இருந்து அவனை யாராலும் காப்பாற்ற முடியாது...பற்றினை அறுத்து துறவு நிலைக்கு செல்வதன் மூலமாகவே அவனால் பிறவித் தளையில் இருந்து விடுப்பட்டு வீடுப் பேற்றினை அடைய முடியும் என்ற கொள்கையினை உடையச் சமயங்கள்.

இந்நிலையில் வள்ளுவர் சமண சமயத்தைச் சார்ந்தவராகவோ அல்லது பௌத்தச் சமயத்தைச் சார்ந்தவராகவோ இருந்து இருந்தால், அச்சமயக் கொள்கைகள் தான் அவருடைய குறள்களில் வெளிப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் வள்ளுவரின் குறள்களின் கருத்துக்கள் பௌத்த சமண கொள்கைகளுக்கு முற்றிலும் மாறாக இருக்கின்றன.

1. வள்ளுவர் இறை நம்பிக்கை உடையவர். இதனை சிறப்பாயிரத்தில் கடவுள் வாழ்த்துப் பகுதியினை வைத்துத் துவங்கி இருப்பதில் இருந்தே நாம் அறிய முடிகின்றது.

2.இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு - 5
 
இக்குறளில் வள்ளுவர் ஒருவனை இருளில் சேர்த்து விடும் இரு வினைகளும் அவன் இறைவனின் அடி சேர்ந்து விட்டால் அவனை ஒன்றும் செய்யாது என்றே கூறுகின்றார். இது பௌத்த சமண சமயங்களின் கொள்கைக்கு முற்றிலும் மாறுபட்ட கூற்றாகும்.

அச்சமயங்களின் கொள்கைகள் படிஒருவனது வினைகளைப் போக்கும் வல்லமை வேறு ஒருவனுக்கு கிடையாது...ஒருவனது வினை அவனைத் ஒவ்வொரு பிறவியாகத் தொடர்ந்துக் கொண்டே இருக்கும்...அதில் இருந்து விடுபட அவன் பற்றுகளை அறுத்து துறவியாக வேண்டும். பற்றுகளை எவ்வாறு ஒரு மனிதன் அறுக்க முடியும் என்பதற்கு சமண சமயமும் புத்த சமயமும் தனித்தனியே வழிகள் வைத்து இருக்கின்றன. அவைகளைப் பின்பற்றினால் ஒழிய ஒருவனால் அவனது வினைகளை விட்டு விலக முடியாது.

ஆனால் வள்ளுவர் அக்கருத்தினை முற்றிலுமாக இங்கே உடைத்து விடுகின்றார். இறைவனின் அடி சேர்ந்தவனுக்கு வினைகளால் யாதொரு ஊரும் நேராது என்றும் அவனை வினைகள் சேராது என்றுமே அவர் கூறிச் சென்று இருக்கின்றார். வள்ளுவரின் கூற்றின் மூலம் இறைவன் மனிதனின் வினையைத் தீர்க்கும் வல்லமைப் பெற்று இருக்கின்றான். மேலும்

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார். - 10
 
என்று இறைவனின் அடி சேர்ந்தவர்களால் மட்டுமே அவர்களது பிறவிக் கடலைக் கடக்க முடியும் சேராதவர்களால் முடியாது என்று வள்ளுவர் கூறுவதன் மூலம் பௌத்த சமண கொள்கையான 'ஒருவன் அவனது முயற்சியால் மட்டுமே பிறவிச் சுழற்சியில் இருந்து விடுபட முடியும்' என்ற கூற்றினை மறுக்கின்றார்.

வள்ளுவரின் கூற்றின் மூலம் ஒருவன் அவனாகவே அவனது வினையில் இருந்தோ அல்லது பிறப்பில் இருந்தோ தப்பி கரை சேர இயலாது...அதற்கு இறைவனின் துணை வேண்டும்.

இக்கருத்துக்கள் பௌத்தம் மற்றும் சமண சமயத்தின் அடிப்படைக் கோட்பாடுகளையே மறுப்பவை. இந்நிலையில் வள்ளுவர் பௌத்தம் அல்லது சமணச் சமயத்தைச் சார்ந்தவர் என்றுக் கூறுவது பொருந்தாது போய் விடுகின்றது. நிற்க

இதுவரை நாம் எவ்வாறு வள்ளுவர் பௌத்த சமயத்தையோ அல்லது சமண சமயத்தையோ சார்ந்தவர் அல்லர் என்பதையும், அவர் கூறிய இறைவன் சூரியன் அல்ல என்பதையும் கண்டு இருக்கின்றோம்.

இப்பொழுது வள்ளுவரின் கொள்கை யாது என்றும்...வள்ளுவர் கூறிய இறைவன் யார் என்றுமே நாம் காண வேண்டி இருக்கின்றது....!!!

காணலாம்...!!!

தொடரும்...!!!

பி.கு:

திருக்குறளினைப் பற்றிய முந்தையப் பதிவுகளைப் படிக்க

ஆய்வாளர்.தெய்வநாயகம் ஐயா என்பவரின் ஆய்வுகளில் இருந்து நான் அறிந்தவற்றையே இங்கே பதிவிட்டு இருக்கின்றேன்.

திருவள்ளுவர் கூறும் இறைவன் யார்? - 1

திருக்குறளினைப் பற்றி நாம் பல பதிவுகளை முன்னரே கண்டு இருக்கின்றோம்...இருந்தும் இன்னும் சில விடயங்களை நாம் கண்டாகத்தான் வேண்டி இருக்கின்றது. காரணம் இன்னும் தெளிவற்ற கருத்துக்கள் பல வெளியில் உலாவிக் கொண்டு தான் இருக்கின்றன.

உதாரணமாக திருவள்ளுவர் கூறும் கடவுள் யார் என்றக் கேள்விக்கும் திருவள்ளுவரின் சமயம் யாது என்ற கேள்விக்கும் பலவிதமான கருத்துக்கள் நம்முடைய சமூகத்தில் இருக்கத்தான் செய்கின்றன. சிலர் திருவள்ளுவரை பௌத்தர் என்றும் சமணர் என்றும் கூறுவர்...இன்னும் சிலர் அவர் கடவுள் என்றுக் கூறியது சூரியனைத் தான் என்றும் கூறுவர்...சிலர் அவர் சைவ வைணவ சமயத்தைச் சார்ந்தவர் என்றும் கூறுவர்.

ஆனால் இவை அனைத்துமே உண்மையாக இருக்க வாய்ப்பில்லை...இவைகளில் யாதேனும் ஒன்று தான் விடையாக இருக்க முடியும்...இல்லையேல் இவைகள் அல்லாத ஏதேனும் வேறு ஒன்று தான் விடையாக இருக்க முடியும். ஒரே நேரத்தில் திருவள்ளுவர் பௌத்த சமணத்தைச் சார்ந்தவராகவோ அதே நேரம் சமண சமயத்தைச் சார்ந்தவராகவும் இருத்தல் இயலாது. சரி இருக்கட்டும்...இப்பொழுது நமது கருத்தினைக் காண்போம்...!!!

திருவள்ளுவர் இறை நம்பிக்கை உடையவர். இதில் மாற்றுக் கருத்தே நமக்கு கிடையாது. அதனால் தான் அவர் அவரது நூலிற்கு எழுதிய சிறப்பாயிரத்தை கடவுள் வாழ்த்துப் பகுதியுடன் ஆரம்பித்து உள்ளார். ஆனால் அந்த கடவுள் வாழ்த்துப் பகுதியில் அவர் கடவுளாக கூறியுள்ளது யாரை என்றக் கேள்வி தான் பலரையும் பல கருத்துக்களைக் கொள்ள வைத்து உள்ளது. இப்பொழுது அக்கேள்விகளுக்கு விடையினைக் காண முயல்வோம்...

திருவள்ளுவர் கூறும் கடவுள் சூரியனா?

பண்டைய தமிழர்களாக இருக்கட்டும்...அல்லது இயற்கை வழிபாட்டினை உடைய பண்டைய நாகரீகங்களாக இருக்கட்டும் சூரிய வழிபாடு என்பது அவர்களது வாழ்வில் இருந்து உள்ளது. சூரியனுக்கு அவர்களது வாழ்வில் முக்கியத்துவம் தரும் தன்மையை நாம் காணுகின்றோம்.

மேலும் நமது வார நாட்களின் முதல் நாளான கிழமையை 'ஞாயிறு' என்றே அழைப்பதாலும் ஆங்கிலத்திலும் '' என்றே சூரியனைச் சிறப்பித்தே வழங்குவதாலும் சூரியனின் சிறப்பை நாம் உணருகின்றோம் என்றும் ...இந்தியிலும் கூட 'ஆதிவார்' என்றே முதல் கிழமை வழங்கப் பெறுவதாலும் வள்ளுவர்,

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு

என்ற தனது குறளின் மூலம் ஆதியான சூரியனையே கடவுளாக வழங்குகின்றார் என்றும் சிலர் கூறுகின்றனர்.

இவர்கள் 'ஆதி' என்ற ஒற்றை வார்த்தையை எடுத்துக் கொண்டே அவர்களது முடிவிற்கு வந்து விட்டது தான் வியப்பாக இருக்கின்றது. நாம் இந்தக் கூற்றினை மறுத்துத் தான் ஆக வேண்டி இருக்கின்றது.

காரணம் வள்ளுவர் அந்த ஒரு வார்த்தையினை மட்டுமே தனது குரளினில் பயன்படுத்தி இருக்கவில்லை (மேலும் ஆதி என்ற தமிழ்ச் சொல்லிற்கு தொடக்கம் என்ற பொருள் தான் பரவலாக அறியப்படும் பொருள்...வள்ளுவர் காலத்தில் தெலுங்கோ இந்தியோ அல்லது சமசுகிருதமோ தோற்றம் பெற்று இருக்கவில்லை). மேலும் ஒரே ஒரு குறளினை மட்டும் வள்ளுவர் கடவுள் வாழ்த்துப் பகுதியில் விட்டுச் செல்லவில்லை...வேறு ஒன்பது குறள்களையும் விட்டுச் சென்று இருக்கின்றார்.

எனவே ஒரே ஒரு குரளினில் வரும் ஒரே ஒரு வார்த்தையையும் அவ்வார்த்தைக்கு பொதுவாக யாரும் கொள்ளாத பொருளையும் வைத்துக் கொண்டு மட்டும் திருவள்ளுவர் கூறும் இறைவன் சூரியன் என்று கூறுவது சரியானதொன்றாக அமையாது. வள்ளுவர் சூரியனைத் தான் கடவுள் என்று கூறி இருந்தார் என்றால் மற்ற குறள்களிலும் அதற்குரிய சான்றுகளோ அல்லது குறிப்புகளோ நிச்சயம் காணப்பட வேண்டும்... அவ்வாறு காணப்படுகின்றதா என்பதனை நாம் இப்பொழுது காண்போம்...!!!

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு - 5

இக்குறளில் வள்ளுவர் ஒருவனை இருளில் சேர்த்து விடும் இரு வினைகளும் அவன் இறைவனின் அடி சேர்ந்து விட்டால் அவனை ஒன்றும் செய்யாது என்றே கூறுகின்றார். இங்கே வள்ளுவர் சூரியனைத் தான் கடவுளாக கூறினார் என்று கூறுபவர்கள், வள்ளுவர் கூறும் இரு வினைகள் யாது, அவை எவ்வாறு ஒரு மனிதனை இருளில் சேர்த்து விடுகின்றன என்பதையும் அவ்வினைகள் எவ்வாறு சூரியனின் அடியினை சேர்ந்தால் விலகி விடுகின்றன என்பதையும் கூறி ஆக வேண்டி இருக்கின்றது.

பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்நீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார். - 6

இங்கே வள்ளுவர் ஐந்தவித்தான் என்று இறைவனை ஐம்புலன்களை அடக்கியவன் என்றுக் கூறுகின்றார்...வள்ளுவர் சூரியனையே இறைவனாக கூறி இருந்தார் என்றால் சூரியன் ஐம்புலன்களை எப்பொழுது பெற்றது என்றும் ஐம்புலன்களை எப்பொழுது/எப்படி அது அடக்கியது என்றும் நமக்கு கூறித் தான் ஆக வேண்டி இருக்கின்றது.

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார். - 10

இங்கே வள்ளுவர் தெளிவாகக் கூறுகின்றார் இறைவனின் அடியினைச் சேராதவர்களால் பிறவிப் பெருங்கடலை கடக்கவே முடியாது என்று. இறைவனாக வள்ளுவர் சூரியனைக் கூறி இருந்தார் என்றுக் கூறுபவர்கள்  பிறவிப் பெருங்கடல் என்பது என்ன என்றும் அதனை மக்கள் சூரியனின் அடியினைச் சேர்வதன் மூலம் மட்டுமே கடக்க முடியும் என்று வள்ளுவர் கூறியிருப்பது எதனைக் குறிக்கும் என்பதனையும் நமக்குக் கூறி ஆகத் தான் வேண்டி இருக்கின்றது.

மேலும் வள்ளுவர் திருக்குறளின் சிறப்பாயிரத்தில் கடவுள் வாழ்த்துப் பகுதியினை மட்டும் வைக்கவில்லை...மாறாக வான் சிறப்பு, நீத்தார் பெருமை மற்றும் அறன் வலியுறுத்தல் என்று வேறு மூன்று அதிகாரங்களையும் வைத்துவிட்டுச் சென்று இருக்கின்றார்.

அவற்றில் வான் சிறப்பு என்பது மழையைக் குறிக்கின்றது என்று பலர் கூறினாலும் அக்கூற்றுகளில் இன்னும் விவாதங்கள் நிகழ்ந்துக் கொண்டு தான் இருக்கின்றன. மழையை சிறப்பித்து சிறப்பாயிரத்தில் வைப்பது என்பது தமிழ் இலக்கிய உலகம் காணாத ஒரு பழக்கம் ஆகும்.

மேலும்,

நீரின்றி அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வானின்று அமையாது ஒழுக்கு.

என்ற குறளில் வள்ளுவர் தெளிவாக நீரையும் 'வான்' என்று அவர் கூறுவதையும் வேறுபடுத்திக் கூறியுள்ளார். (வான் என்று கடவுளின் அருட் சக்தி வழங்கப்படுவதை நினைவிற் கொள்க)

அவ்வாறே நீத்தார் பெருமை என்ற அதிகாரத்தில், கடவுள் வாழ்த்தில் இறைவனை குறிக்க பயன்படுத்திய 'ஐந்தவித்தான்' என்றச் சொல்லை வள்ளுவர் மீண்டும் பயன்படுத்தி உள்ளார்.

ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலும் கரி.

கடவுள் வாழ்த்துப் பகுதி மட்டும் இருக்கும் சிறப்பாயிரத்தில் கடவுள் வாழ்த்துப் பகுதியுடன் வான் சிறப்பு, நீத்தார் பெருமை, அறன் வலியுறுத்தல் என்ற அதிகாரங்களையும் வைத்த வள்ளுவர், 'ஐந்தவித்தான்' என்ற சொல்லின் மூலம் கடவுளையும், நீத்தாரையும் இணைத்து உள்ளார்.

வள்ளுவர் சூரியனையே கடவுளாக கூறி இருந்தார் என்றால் ஏன் சூரியனை ஐந்தவித்தானாக கூற வேண்டும், ஏன் அவனை நீத்தாருடன் இணைக்க வேண்டும்...ஏன் கடவுள் வாழ்த்துப் பகுதியில் வான் சிறப்பு/நீத்தார் பெருமை/அறன் வலியுறுத்தல் போன்ற பகுதிகளைச் சேர்க்க வேண்டும்?

என்பன போன்ற கேள்விகளுக்கு வள்ளுவர் சூரியனைத் தான் இறைவனாக கூறினார் என்றுக் கூறுபவர்கள் விடையினைத் தந்தாகத் தான் வேண்டி இருக்கின்றது.

அவ்வாறு விடையினைத் தராமல் வெறும் யூகங்களின் அடிப்படையில் வள்ளுவர் கூறிய கடவுள் சூரியன் என்று ஒருவர் கூறினார் என்றால் ஒன்று அவர் அறியாமையில் கூறுகின்றார் என்றோ அல்லது கருத்தினை திரிக்க வேண்டும் என்ற உள்நோக்கத்தோடோ கூறுகின்றார் என்றே தான் நாம் கருத முடியும்...!!!

சரி இப்பொழுது வள்ளுவர் சமணம் அல்லது பௌத்த சமயத்தைச் சார்ந்தவரா என்றே காணலாம்...!!!

தொடரும்....!!!

பி.கு:

திருக்குறளினைப் பற்றிய முந்தையப் பதிவுகளைப் படிக்க

புதன், 18 டிசம்பர், 2013

திருக்குறளும் எண் ஏழும்…!!!

திருவள்ளுவர் திருக்குறளில் சிறந்தக் கருத்துக்களை மட்டும் விட்டுச் செல்லவில்லை. சிறந்தக் கருத்துக்களுடன் ஒரு சிறந்தக் கட்டமைப்பையும் திருக்குறளுக்கு விட்டுச் சென்று உள்ளார் அவர். அந்தக் கட்டமைப்புக்கு அவர் தேர்ந்து எடுத்து இருக்கும் எண் 7 ஆகும். அது என்ன கட்டமைப்பு? அது என்ன எண் 7? காண்போம்…

திருக்குறள் வெண்பா வகையைச் சார்ந்த ஒரு நூலாகும். அதுவும் குறிப்பாக குறள் வெண்பாக்களால் ஆன குறள்களைக் கொண்டு விளங்கும் ஒரு நூல். ‘குறள் வெண்பா’ என்பது இரு அடிகளையேக் கொண்ட ஒரு வகை வெண்பாவாகும்.

திருவள்ளுவர் அத்தகைய குறள் வெண்பாக்களைக் கொண்டு, ஒவ்வொரு வெண்பாவிலும் ஏழுச் சீர்கள் வந்து பொருள் தரும் வண்ணம் அமைத்தது தான் திருக்குறள் என்னும் நூலாகும். அதாவது ஒவ்வொருக் குரலிலும் அவர் ஏழுச் சொற்களைப் பயன்படுத்தி உள்ளார். அந்த ஏழுச் சொற்களிலேயே அவர் சொல்ல வந்தக் கருத்துக்களை வெளிப்படுத்தியும் உள்ளார்.

சரி இப்பொழுது திருக்குறளின் அமைப்பினைப் பார்ப்போம்.

திருக்குறள் அறம் பொருள் இன்பம் ஆகிய முப்பால்களைக் கொண்டு விளங்குகின்றது. இப்பொழுது அப்பிரிவுகள் ஒவ்வொன்றையும் பற்றித் தனித்தனியே காண்போம்.

முதலில் அறத்துப்பால்…!!!

இது இல்லறவியல், துறவறவியல் மற்றும் ஊழியல் ஆகியப் பிரிவுகளைக் கொண்டு விளங்குகின்றது.

இல்லறவியலில் மொத்தம் 20 அதிகாரங்கள்.

துறவறவியலில் மொத்தம் 13 அதிகாரங்கள்.

ஊழியலில் மொத்தம் ஒரு அதிகாரம்.

எனவே மொத்தமாக அறத்துப்பாலில் இருக்கும் அதிகாரங்களின் எண்ணிக்கை 34. அதன் கூட்டுத் தொகையாக வருவது 7.

20+13+1 = 34 = 3+4 = 7

மேலும் அதிகாரத்திற்கு 10 பாடல்கள் என அறத்துப்பாலில் மொத்தம் 340 குறள்கள் உள்ளன. அதன் கூட்டுத் தொகையும் 7 தான்.

சரி இப்பொழுது பொருட்பாலினைப் பார்ப்போம். பொருட்பாலில் மொத்தம் 70 அதிகாரங்கள் உள்ளன. இதன் கூட்டுத் தொகையாக வருவதும் 7 தான்.

7+0 = 7

மேலும் அதிகாரத்திற்கு 10 பாடல்கள் என அறத்துப்பாலில் மொத்தம் 700 குறள்கள் உள்ளன. அதன் கூட்டுத் தொகையும் 7 தான்.

இதனைப் போன்றே தான் இன்பத்துப்பாலிலும்…மொத்தம் 25 அதிகாரங்கள். அதிகாரத்துக்கு 10 பாடல்கள் என 250 குறள்கள் உள்ளன. இதன் கூட்டுத் தொகையும் 7 தான்.

2+5 = 7

எனவே…அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்றுப் பால்களில் உள்ள குறள்களின் எண்ணிக்கையும் சரி அவற்றின் அதிகாரங்களின் எண்ணிக்கையும் சரி கூட்டினால் 7 வருவதனைப் போன்றே வள்ளுவர் அமைத்து உள்ளார்.

சரி…இப்பொழுது அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்று பால்களின் அதிகாரங்களையும் கூட்டினால் 129 அதிகாரங்கள் வருகின்றன.

34+70+25 = 129

ஆனால் வள்ளுவர் இந்த அதிகாரங்களுடன் மட்டுமே நிறுத்தி விடவில்லை. பாயிரத்தில் கூடுதலாக 4 அதிகாரங்களையும் தந்துள்ளார்.

எனவே இப்பொழுது மொத்த அதிகாரங்களின் எண்ணிக்கை,

129+4 = 133.

அதன் கூட்டுத் தொகையும் 7 தான். மேலும் அதிகாரத்திற்கு 10 குறள்கள் என 1330 குறள்கள் 133 அதிகாரங்களில் இருக்கின்றன. அவைகளின் கூட்டுத் தொகையும் 7 தான்.

இது தான் வள்ளுவர் திருக்குறளை அமைத்து இருக்கும் கட்டுமான முறையாகும்.

ஒரு குறளுக்கு 7 சீர்கள்.

மொத்தம் 133 அதிகாரங்கள் (கூட்டுத் தொகை 7)

மொத்தம் 1330 குறள்கள் (கூட்டுத் தொகை 7)

அறத்துப்பால் – 34 அதிகாரங்கள் (கூட்டுத் தொகை 7)

பொருட்பால் – 70 அதிகாரங்கள் (கூட்டுத் தொகை 7)

இன்பத்துப்பால் – 25 அதிகாரங்கள் (கூட்டுத் தொகை 7)

இவ்வாறு 7 என்ற எண்ணினை வைத்து வள்ளுவர் தனது நூலினை பூட்டி உள்ளார். இதன் முக்கியத்துவம் என்னவென்றால் திருக்குறள் நூலில் யாராலும் எளிதில் இடைச்செருகல் செய்ய இயலாது என்பதே.

உதாரணத்திற்கு...யாராவது திருக்குறளின் இடையில் குறள்களை சேர்க்க வேண்டும் என்று முயல்கின்றனர் என்று வைத்துக் கொள்வோம்.

1) அவர்களால் பத்திற்கு குறைவான குறள்களை இடைச்செருகலாக சேர்க்க முடியாது. ஏனெனில் அதிகாரத்திற்கு பத்து குறள்கள் என்றே வள்ளுவர் அமைத்து உள்ளார். எனவே இடைச் செருகல் செய்ய முயல்வோர் பத்துப் பத்துக் குறள்களாக தான் சேர்க்க முடியும்.

2) அவ்வாறே அவர்கள் பத்து பத்துக் குறள்களாக சேர்க்க எண்ணினாலும் கூட்டுத் தொகையான எண் 7 ஐயும் கணக்கில் கொள்ள வேண்டும். அதாவது 50 குறள்களை சேர்க்க முயல்கின்றனர் என்றால் மொத்த குறள்களின் எண்ணிக்கை 1380 ஆகி விடும். இதன் கூட்டுத் தொகை எண் ஏழாக வாராது. எனவே இடைச் செருகல்கள் இருக்கின்றன என்பது புலனாகி விடும்.

எனவே கூட்டுத் தொகையை மீறி திருக்குறளில் இடைச்செருகல் செய்ய வேண்டும் என்றால் அவர் குறைந்தது 90 குரல்களை தயார் செய்ய வேண்டும். அப்படி என்றால் தான் 1330+90 = 1420 குறள்கள் = 1+4+2+0 = 7 என்று கூட்டுத் தொகை 7 ஆக வரும்.

3) மேலும் அவர் அப்படியே 90 குறள்களைத் தயார் செய்தாலும், அதனை எந்த அதிகாரங்களுடன் இணைப்பது என்ற கணக்கினையும் காண வேண்டும். ஏனெனில் ஒவ்வொரு அதிகாரமும் ஒவ்வொரு பாலின் கீழ் வகுக்கப்பட்டு உள்ளது. அப்பால்களும் கூட்டுத் தொகை 7 என்ற எண்ணினால் கட்டப்பட்டு உள்ளன.

எனவே இத் தடைகள் அனைத்தையும் கவனித்தப் பின்னரே ஒருவரால் திருக்குரளினுள் இடைச் செருகல் செய்ய இயலும். ஆனால் பொருள் வித்தியாசம் வாராது மாற்றுக் கருத்துக்களை திருக்குறளில் இடைச் செருகலாக இத்தனை தடைகளை மீறி சேர்ப்பது என்பது நடைமுறையில் சாத்தியப்படாத ஒன்று. அவ்வாறு செய்து இருந்தால் எளிதில் புலப்பட்டும் விடும்.

எனவே வள்ளுவரின் சாமர்த்தியம் அவரின் கருத்துக்களில் மட்டும் அல்ல அவர் அவரது நூலினை அமைத்த முறையிலும் உள்ளது என்பதனை நாம் அறிகின்றோம்.

தொடர்புடைய பதிவுகள்:

தொண்டை நாடு சான்றோர் உடைத்து…!!!
திருக்குறள் என்ற உலகப் பொதுமறை - ஐந்தவித்தான்

இரு தேசங்களின் கதை : ஆரியவர்த்தமும் பிற தேசங்களும்...!!!

தேசியம்...வந்தேறிகள்...குடியுரிமை என்று இன்று பல குரல்கள் எழும்பிக் கொண்டிருக்கின்றன. "யார் வந்தேறிகள்? யார் பூர்வகுடி மக்கள்? எவ...