சனி, 25 செப்டம்பர், 2010

ஒரு காதல் கதை- இறுதிப் பகுதி

" ஒரு வருடம் என்று நான் கொடுத்த வாக்கின் படி நான் வந்து விட்டேன்.
காத்துஇருப்பேன் என்று சொன்ன என்னவள் எங்கே?...
வழி எங்கும் தேடியபடியே வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்."


வீடும் நெருங்கிக் கொண்டு இருந்தது. எதாவது ஒரு சந்தினில் அல்லது கடையினில் மறைந்து நின்று என்னை எதிர்பார்த்துக் கொண்டு இருப்பாள் என்ற எனது எண்ணமும் நான் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியுடனும் கரைந்துக் கொண்டு இருந்தது.

"அம்மா .... அண்ணன் வந்திரிச்சி...".

என்னை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டு இருந்த எனது தங்கை மகிழ்ச்சியுடன் என்னை நோக்கி வந்து கொண்டு இருந்தாள். அவளின் பின்னாடியே வீட்டினுள் இருந்து அம்மாவும் அப்பாவும் புன்னகையுடன் வந்தனர். கூடவே சில உறவினர்களும். அவர்களுள் அவள் இல்லை.

ஒரு வேளை வீட்டினில் அவள் இருக்க கூடும் என்ற எனது கடைசி நம்பிக்கையும் சிதைந்து போனது.

அவள் என்னை காண வரவில்லை.

சோகம் தான். இருந்தும் ஏனோ மனம் நிலை குழையவில்லை. எதிரினில் என்னை நோக்கி பாசத்துடன் வரும் தங்கையின் புன்னகை, ஒரு வருடம் பெற்ற பிள்ளையை காணாது இருந்து விட்டு பாசத்துடன் என்னை நோக்கி வந்து கொண்டு இருக்கும் எனது பெற்றோரின் புன்னகை... என்னை புன்னகைக்க தூண்டிக் கொண்டு இருந்தன. நானும் என்னை அறியாது புன்னகைத்துக் கொண்டு இருந்தேன். பாதி மனது ஒருத்தியை தேடிக் கொண்டு இருந்தது. மற்றோர் பாதியோ துள்ளிக் குதித்துக் கொண்டு இருந்தது. சிறிது இடைவெளிக்கு பின்னால் மீண்டும் என்னுடைய வாழ்க்கைக்கு திரும்பி இருக்கின்றேன்." இது என் உலகம். இங்கு எனக்கு தீங்கு எதுவும் நேராது." என்று எண்ணியவாறு வீட்டினுள் செல்லத் தொடங்கினேன். என் தோட்டத்து மலர்கள் மலர்ந்து புன்னகைத்துக் கொண்டு இருந்தன. உள்ளுக்குள் புன்னகைத்துக் கொண்டேன். அவள் நன்றாகத் தான் இருக்கின்றாள். என்னை விட்டு வேறு எங்கு சென்று விடுவாள். வரட்டும். அவளைப் பார்த்துக் கொள்கிறேன்!!!

ஊர்க்கதைகள் அனைத்தும் பேசி விட்டு உறவினர்கள் அனைவரும் சென்ற பின்னும் கூட அவளின் சுவடு தெரியவில்லை. சரி சிறிது நேரம் வீட்டில் ஓய்வு எடுத்துக் கொண்டு பின் அவள் வீட்டிற்க்கு நாமே போகலாம் என்று எண்ணிக் கொண்டு இருக்கையில்,

"என்ன சக்தி... யாரையோ தேடுற மாதிரி இருக்கு?... குமாரயா!!!" என்று ஆரம்பித்து வைத்தாள் பிரியா.

திரும்பி அவளை முறைத்தேன்.

"நான் யார தேடுறேன்னு உனக்குத் தெரியும்... நானே உன்கிட்ட கேட்கணும்னு நினைச்சேன்... எங்கடி அவ... நானும் வந்ததுல இருந்து பார்க்கிறேன்... அவளைக் காணோமே?" என்றேன்.

"எனக்கும் தெரியல சக்தி.. நேத்து வரைக்கும் இங்க தான் சுத்திக்கிட்டு இருந்தாங்க... ஒரு வேளை நீ ஊருக்கு வரது தெரிஞ்சி இருக்குமோ?... ஐயோ தொல்லை வருதேனு நெனச்சி தப்பிச்சி இருக்கலாம்... அவுங்க புத்திசாலினு நான் அப்பவே சொன்னேன்ல" என்றாள் நக்கலாய்.

"உன்னை... " என்று நான் அவளுக்கு பதில் கூறத் தொடங்கும் போது வாசலில் அவளின் தந்தையின் குரல் கேட்டது.

"சண்முகம்!!!".

விரைவாகச் சென்று சன்னலின் வழியாக எட்டிப் பார்த்தேன். அவள் அவளது பெற்றோர் உடன் நின்று கொண்டு இருந்தாள். கோவிலுக்கு சென்று வந்து இருந்தனர் போல் இருந்தது. ஒரு வருடத்திற்கு முன் எப்படி இருந்தாளோ அதை விட மேலும் அழகு கூடி இருந்தாள். அவளிடம் நான் கேட்க நினைத்த கேள்விகளுள் "நாளுக்கொரு தரம் அழகைக் கூட்டிக் கொண்டே போகின்றாயே... அதை எப்படி என்று சொல்கின்றாயா?" என்ற இந்த கேள்வியையும் சேர்த்துக் கொண்டேன்.

"ஏன்டா முருகா... நீ முன்னமே வருவேனு நெனச்சேன்... ஏண்டா இவ்வளவு நேரம்... சரி சரி உள்ள வா" என்று எனது தந்தை அவர்களை வீட்டினுள் அழைத்து வந்தார். ஓடிச் சென்று நானும் அவர்களை வரவேற்க வேண்டும் போல் இருந்தது, இருந்தும் "அவசரப்பட்டு காரியத்த கெடுத்துடாத சக்தி... பொறுமையா இரு.. கூப்பிடுவாங்க!!" என்ற எனது மனசாட்சியின் கூற்றுக்கு மரியாதை கொடுத்து எனது அறையின் உள்ளே இருந்தேன்.

"அது இல்லடா சண்முகம்... இன்னிக்குனு பார்த்து பக்கத்து ஊர்ல இருக்குற கோவிலுக்கு போயிட்டு வரணும்னு என் பொண்ணு ஒரே அடம்பிடிச்சிச்சி... அதான் போயிட்டு வர தாமதம் ஆயிடிச்சி.. சரி சக்தி வந்துட்டான்ல" என்றவாறே அவளின் தந்தை எனது வீட்டினுள் வந்தார். அவளும் தொடர்ந்து உள்ளே வந்தாள்.

"கேட்டியா சக்தி... கோவிலுக்கு போயிட்டு வந்து இருக்காங்களாம்... "ஆண்டவா என்னை காப்பாத்துனு வேண்டிட்டு வந்து இருப்பாங்க போல" என்றாள் பிரியா.

"அடி..." என்று நான் அவளை அடிக்க போகும் முன் வேகமாக ஓடி,
"வாங்கக்கா.." என்றவாறு அவளின் அருகே போய் நின்றுக் கொண்டாள்.

"டேய் சக்தி... இங்கவா.. உன்ன பார்க்க முருகன் அண்ணாச்சி வந்து இருக்காங்க" என்று அழைப்பு விடுத்தார் அம்மா. அந்த அழைப்புக்காகத்தான் காத்துக் கொண்டு இருந்தவன், இயல்பாய் அவர்களை பார்க்க வருவதைப் போல்

"வாங்க மாமா... வாங்க அத்தை... நல்லா இருக்கீங்களா?..." என்று கூறியவாறே அறைக்குள் நுழைந்தேன். வேண்டும் என்றே அவளைப் பார்க்காது கவனத்தை அவளின் பெற்றோர்களின் மீது வைப்பதை போன்று நடித்துக் கொண்டு நின்றேன்.

"நாங்க நல்லா இருக்கோம்பா... நீ எப்படி இருக்க... படிப்பெல்லாம் நல்லபடியா முடிஞ்சதா" என்றார் அவளின் தந்தை.

"எனக்கென்ன மாமா... நல்லா இருக்கேன்... எல்லாம் நல்ல படியா முடிந்தது!!!" என்றேன் ஒரு புன்னகையுடன். அவள் மௌனமாய் நின்று கொண்டு எங்களையே பார்த்துக் கொண்டு இருந்தாள்.

"நல்லதுப்பா... எப்படியோ கடைசில ஊர் பக்கம் வந்துட்ட... சரி.. எதாவது புதுசா சொல்லிக் குடுத்தானுங்களா அந்த ஊர்ல... விவசாய புரட்சி அது இதுனு எதாவது பண்ணிக்கிட்டு இருப்பானுங்களே... அப்படி ஏதாவது இருந்தா சொல்லு... நம்மளும் முயற்சி பண்ணிப் பார்ப்போம்..." என்றார்.

"புரட்சியா!!!" சிரித்தேன். "மாமா... அவன் விவரமாத்தான் இருக்கான். அவன் புரட்சினு, பூச்சிக் கொல்லி, உரம் அது இதுனு கண்டுபிடிச்சி நம்மளுக்கு கொடுத்துட்டு போயிட்டான். அங்க அவன் இத எல்லாம் அதிகமா பயன்படுத்துரதே இல்ல... நம்ம ஒரு காலத்துல பண்ணிக்கிட்டு இருந்த விவசாய முறையத் தான் அவன் புரட்சினு இப்போ பண்ணிக்கிட்டு இருக்கான்... நம்ம ஆளுங்க தான் வெளிநாட்டுக்காரன் எத சொன்னாலும் தலைய ஆட்டிருவோமே... அதான் இன்னும் அவன் தூக்கி போட்ட முறையையே இன்னும் பயன் படுத்திக்கிட்டு இருக்கோம்" என்றேன்.

"என்ன சக்தி சொல்ற" என்றார் ஆச்சர்யமாய்.

"ஆமாம் மாமா... இப்போ எல்லாம் அவன் நம்ம பண்ணிக்கிட்டு இருந்த இயற்கை விவசாய முறையைத் தான் அதிகமா பயன் படுத்த ஆரம்பிச்சி இருக்கான்... நாம தான் இன்னும் அவன் சொன்னதையே கேட்டுக் கிட்டு இருக்கோம்" என்றேன்.

"அப்படினா..." என்று அவளின் தந்தை தொடங்கும் போது இந்த உரையாடலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைப்பதை போல்,

"அண்ணே!!! இன்னிக்கு தான் புள்ள ஊரில இருந்து வந்துருக்கு... நீங்க இந்த கேள்வி எல்லாம் அப்புறம் கேட்டுக்கலாமே... கொஞ்சம் ஓய்வு எடுக்கட்டும் அவன்" என்றார் என் அம்மா.

"அதுவும் சரிதான்... நம்ம அப்புறம் பேசலாம் சக்தி.. நீ போயி ஓய்வு எடுத்துக்கோ... நாங்களும் கிளம்புறோம்... கோவில்ல இருந்து நேரா உங்க வீட்டுக்குத் தான் வந்தோம்... நாங்களும் போயிட்டு அப்புறமா வறோம்" என்று கூறியாவாறு அவளின் தந்தையும் கிளம்ப ஆரம்பித்தார்.

"சரிமா ... அப்படியே நானும் வெளியே போயிட்டு சீக்கிரமா வர பார்க்கிறேன்..." என்று கூறி விட்டு நானும் வேகமாக வெளியே கிளம்பத் தயார் ஆனேன்.

"டே... நீ எங்கடா போற?"

"போகும் போதே எங்க போறேன்னு கேக்குறீயேம்மா!!! வெளிநாட்டுல இருந்து நீங்க வந்தீங்களா...இல்ல நான் வந்தேனா... எல்லாத்தையும் மறந்துட்டிங்களே..." என்று விளையாட்டாய் அம்மாவை கிண்டல் அடித்து விட்டு " சும்மா ஊர சுத்திப் பார்த்துட்டு வந்துடுறேன்மா... ரொம்ப நாள் ஆச்சில... எவனாவது வந்து தேடுனானுங்கன்னா ஏரிக்கரை பக்கம் இருப்பேன்னு சொல்லுங்க.. சீக்கீரம் வந்துருவேன்" என்று சொல்லி வெளியே கிளம்பினேன். நான் சொன்னது நிச்சயம் அவளின் காதிலேயும் விழுந்து இருக்கும் என்று நம்பியவாறு ஏரியை நோக்கி நடக்கத் தொடங்கினேன்.

போலக் ... போலக் ... போலக்....

நான் எறிந்த கல் ஏரி நீரினில் மூன்று முறை குதித்து எழுந்து விட்டு நான்காவது முறை நீரினுள் மூழ்கியது. நான் எதிர்ப்பார்ததைப் போலவே ஏரிக்கரை யாரும் இன்றி அமைதியாய் இருந்தது. சூரியன் மறையும் நேரம். குளிர் தென்றல் என்னிடம் பல கதைகள் பேசிக் கொண்டு இருக்க, அவள் வருவாள் என நான் காத்து இருக்க தொடங்கி 20 நிமிடங்கள் கழிந்து இருந்தன.

தூரத்தில் எங்கோ கேட்ட கொலுசுச் சத்தம அவள் வருகையை எனக்கு முன் கூட்டியே அறிவிக்க நான் தயாரானேன்.

சில கேள்விகளுக்கு அவள் பதில் சொல்ல வேண்டி இருக்கின்றது.

சிறிது நேரத்தில் அவளும் ஏரிக்கரைக்கு வந்து சேர்ந்தாள். ஏனோ முகம் வாடி போய் இருந்தது.

சொல்லாமலே அவள் ஏதோ பிரச்சனையில் இருப்பதை உணர்ந்தேன்.

"ஏய் என்னாச்சி?" என்றேன்.

பதில் வரவில்லை.

"எதாவது பிரச்சனையா...?" தொடர்ந்தேன்.

"இல்லை..." என்றாள்.

பெண்கள் இல்லை என்றால் ஏதோ இருக்கின்றது என்று அர்த்தம். நிச்சயப் படுத்திக் கொண்டேன். அவள் ஏதோ பிரச்சனையில் தான் இருகின்றாள்.

" சரி... ஏன் என்னைப் பார்க்க முன்னாடியே வரல" என்றேன்.

மீண்டும் பதில் எதுவும் வரவில்லை.

"இங்க பாரு... நீ என்ன நினைகிறேன்னு எனக்கு தெரியல்ல.. ஆனா அது என்னனு சொன்னாத் தான் நான் எதாவது சொல்ல முடியும்...உனக்கு எப்போ சொல்லனும்னு தோணுதோ அப்போ சொல்லு... நான் கட்டாயப்படுத்தல... சரியா" என்று கூறி விட்டு மீண்டும் ஏரியைநோக்கித் திரும்பினேன்.

அவளின் மௌனத்தை கலைக்குமே என்று எண்ணி கையில் இருந்த கல்லை நீரில் எறியாது கையிலையே வைத்துக் கொண்டு ஏரியை கண்டு கொண்டு நின்றேன்.

"நீங்க என்ன இன்னும் காதலிக்கிறீங்களா?"

சிறிது நேர மௌனத்திற்கு பின் அவள் பேசி இருந்தாள். ஆச்சர்யத்தோடு திரும்பினேன்.

"இன்னும் காதலிக்கிறீங்களாவா?"... புரியவில்லை.

"என்ன கேக்குற" என்றேன்.

"சொல்லுங்க... என்ன இன்னும் காதலிக்கிறீங்களா?" என்றாள் மீண்டும்.

"இன்னுமாவா!!! நான் உன்னை காதலிப்பதை எப்ப நிறுத்தினேன் ... அதைத் தொடர்வதற்கு... என்ன ஆச்சி மலர்... ஏன் இந்த கேள்வி" என்றேன்.

 மௌனத்தை கலைத்தாள்.

"என்னோட தோழிங்க தான் சொன்னங்க...." ஆரம்பித்தாள்.

ஒ! பிரச்சனை அப்படி வருதா என்று நினைத்தவாறே,

"என்ன சொன்னார்கள்" என்றேன்.  

"நீங்க வெளிநாட்டுக்கு போனதுக்கு அப்புறம் எனக்கு ஒரு கடிதாசி கூட போடலைல.. உங்க வீட்டுக்கு எழுதுன கடிதத்துல கூட என்னை பத்தி கேக்கல... அத பத்தி என்னோட தோழிங்க கிட்ட பேசிக்கிட்டு இருக்கும் போது தான் அவளுக சொன்னாளுக... வெளிநாட்டுப் பொண்ணுங்க எல்லாம் அழகா இருப்பாங்கலாம். அந்த நாடுங்க எல்லாம் வளமான நாடுங்களாம். அங்க போன யாரும் திரும்பி இங்க வர மாட்டங்களாம். அங்கயே யாரையாவது கல்யாணம் பண்ணிக்குவாங்களாம்." என்றாள். 

"ஒ! அதுனால நானும் உன்ன மறந்துட்டு அங்கயே யாரையாவது காதலிச்சிருப்பேன்னு நினைச்சியாக்கும் !" என்றேன் புன்னகையை அடக்கிக் கொண்டு.

ஆம் என்பதைப் போல் தலையாட்டினாள்.

"அடி அப்பாவி!!! அப்படி யாரையாவது நான் கூட்டிகிட்டு வந்து நின்று இருந்தேன்னா எங்க அம்மாவே என்ன ஊர் முழுக்க துரத்தி துரத்தி அடிச்சி இருப்பாங்க என்கிறத மறந்துவிட்டியேடி" என்று உள்ளுக்குள் நினைத்துக் கொண்டு "உன் தோழிங்க சொன்னது உண்மை தான்" என்றேன்.

அதிர்ச்சியாய் என்னை நிமிர்ந்து பார்த்தாள்.

"என்ன..."

"ஆம்... அந்த நாட்டுப் பெண்கள் அழகாக இருப்பார்கள். உன் தோழிகள் சரியாகத்தான் அதை சொல்லி இருகின்றார்கள்." என்றேன்.

மௌனம். அவள் பேசவில்லை.

"ஆனால், உன்ன போல ஒரு பொண்ணு அங்க கிடையாதுன்னு அவங்களுக்கு தெரியாது. அவங்கள சொல்லி தப்பு இல்லை. அவங்க அந்த நாட்டுக்கு எல்லாம் போனது கிடையாது. நான் சொல்றேன், அங்க பொண்ணுங்க அழகா இருப்பாங்க. ஆனா நம்ம ஊரு பொண்ணுங்க அளவுக்கு அழகா இருக்க மாட்டாங்க. அதுவும் உன்ன போல ஒரு பொண்ண உலகத்துல வேறு எங்கயும் யாரும் பார்த்து இருக்க முடியாது. இத தெரிஞ்சிக்கோ " என்றேன். 

சிறிது புன்னகைத்தாள்.

"அப்புறம் வளமான நாடுன்னு சொன்னாங்களோ... வளம் நாட்டுக்கு நாடு வேறுபடும். அவனுங்க பொன்னையும் எண்ணையையும் வைச்சி வளமான நாடுன்னு சொல்லுவானுங்க. ஆனா என் கணக்கே வேற. நான் என்னையும் உன்னையும் வைச்சே வளமான நாட்டை முடிவு செய்றேன். உனக்கு ஒரு உண்மை தெரியுமா, இன்னிக்கு நான் பேருந்து நிறுத்தத்துல இருந்து எங்க வீடு வரைக்கும் உன்ன தான் தேடிக்கிட்டே வந்தேன். கூட வேற யாரும் வரல. ஆனாலும் நான் தனியா இல்லை. நம்மள சுத்தி முழுதும் இருந்தும், நமக்குள்ளேயும் இருந்தும், கண்ணுக்கு தெரியாத கடவுள போல தான் நீயும் இருந்த. எனக்குள்ளேயும், நான் வந்த பாதை முழுதும் நினைவுகளாவும். என் கண்ணுக்கு தான் நீ தெரியல. ஆனா நீ என் கூடத் தான் இருந்த. அப்படி பார்க்கும் போது எனக்கு சந்தோசத்த குடுக்குற இந்த ஊர் தான் என்னைப் பொறுத்த வரைக்கும் உலகத்திலேயே வளமான ஊர். புரிஞ்சதா!!" தொடர்ந்தேன்.

அவள் கண் கலங்கி இருந்தது. இருந்தும் முகத்தில் சிறு புன்னகை அரும்பிக் கொண்டு இருந்தது.

"ம்ம்ம்.... அப்புறம் ஏன் கடிதம் எதுவுமே போடல" என்றாள். 

சிரித்தேன்.

"எப்படி... எங்க வீட்டுக்கு எழுதுற கடிதத்துல, அப்புறம் அம்மா, உங்க மருமக எப்படி இருக்கானு கேக்க சொல்றியா... இல்ல உங்க வீட்டுக்கு தனியா ஒரு கடிதத்தை போட்டு, என்னடா இதுன்னு உங்க அப்பாவ யோசிக்க வைக்க சொல்றியா... நான் என்னவோ, சரி நம்ம ஆளு தான.. ஒரு வருஷம் தான ... புரிஞ்சிப்பானு நெனச்சேன்... எனக்கு மட்டும் உன் கூட பேசணும்னு ஆசை இல்லைன்னு நெனச்சியா?" என்று முடித்தேன்.

மீண்டும் மௌனம்.

அவளே ஆரம்பித்தாள்.

"மன்னிச்சிகோங்க... அவளுக சொன்னதை நான் கேட்டு குழம்பிட்டேன்" என்றாள்.

"அடி பைத்தியம்! உன்ன மன்னிக்கிறதுக்காக நான் இங்க வரல.. உன்ன காதலிக்கிறதுக்காகவே வந்து இருக்கேன்" என்று கூறி அவளின் கைப் பிடித்தேன்.

என் தோளில் மெதுவாய் சாய்ந்தாள்.

"நான் உங்களை காதலிக்கின்றேன். இறுதி வரைக்கும் என்னை இப்படியே காதலிக்க வேண்டும்" என்றாள் வெட்கத்துடன்.

"வேற வேல என்ன இருக்கு அத விட முக்கியமா" என்றேன் புன்னகைத்தவாறு.

"நல்லவேளை... நான் கணக்குல கொஞ்சம் சுமாரா இருந்தேன். இல்லைனா நீ எப்படி எனக்கு சொல்லிக்குடுக்க வந்து இருப்ப... நான் எப்படி உன்கிட்ட பேசி இருப்பேன். சில நேரம் இந்த நாள் வரைக்கும் கூட உன்கிட்ட பேசாம இருந்திருப்பேன்... நன்றி எங்க அம்மாவுக்குத் தான் சொல்லணும்... அவங்க மட்டும் உன்ன எனக்கு சொல்லிக் குடுக்க சொல்லலைனா..." என்று தொடர்ந்தேன்.

தோள் மீது சாய்ந்து இருந்தவள் திடீர் என்று நிமிர்ந்து என்னைப் பார்த்தாள்.

பின் புன்னகைத்தாள்.

"நீங்க யோசிச்சே பார்க்கலையா" என்றாள்.

எனக்கு புரியவில்லை.

"என்ன யோசிக்கணும்?" என்றேன்.

மீண்டும் புன்னகைத்தாள்.

"எனக்கு கணக்கு நல்லா வரும்னு உங்க அம்மாகிட்ட யார் சொல்லி இருப்பானு நீங்க யோசிச்சிக் கூட பார்க்கலையா... இல்ல நான் உங்களுக்கு சொல்லித் தந்தா நீங்க தேர்ச்சி ஆகலாம்னும் யார் சொல்லி இருப்பாங்கனும் யோசிச்சிப் பாக்கல சரியா" என்றாள்.

சிறிது யோசித்தேன். மெதுவாய் பொறி தட்டியது.

"நீயா!!"

சிரித்தாள். ஆம் என்பது போல் தலை ஆட்டினாள்.

"அடி பாவி... இத ஏன் மொதலையே சொல்லல" என்றேன்.

"ம்ம்ம் ... எனக்கு உங்கள பிடிக்கும். ஆனா உங்களுக்கு என்னைப் பிடிக்குமானுத் தெரியல... அதான் சொல்லல" என்றாள்.

"சரி... அப்புறம் ஏன் நான் உன்ன பிடிச்சி இருக்குனு சொன்னதுக்கு அப்புறமும் நீ என்ன பிடிச்சி இருக்குனு சொல்லல" தொடர்ந்தேன்.

சிரித்தாள்... " சும்மா தான்!!!" என்றுக் கூறி என் நெஞ்சத்தில் சாய்ந்து கொண்டாள்.

"சும்மாவா சொன்னார்கள் பெண்களை புரிந்து கொள்ள முடியாது என்று" என்று எண்ணிக் கொண்டே தொடங்கினேன் " சரி!! நான் உன்கிட்ட ஒரு கேள்வி கேக்கலாமா" என்றேன்.

"ம்ம்ம்!!!" என்றாள்.

"நிமிடத்திற்கு நிமிடம் நீ அழகாகிக் கொண்டே போகின்றாயே ... அது எப்படி" என்றேன்.

நாணத்துடன் நிமிர்ந்து பார்த்தாள். கூடுதலாய் ஒரு நிமிடம் கூட ஆகவில்லை ஆனால் அவள் அழகைக் கூட்டி இருந்தாள். "ஒ! என் கேள்வி தவறோ... வினாடிக்கு ஒரு முறை அல்லவா இவள் அழகை கூட்டிக் கொண்டே போகிறாள்" என்று எண்ணிக் கொண்டு இருக்கும் போதே

"அது ரகசியம்... சொல்ல முடியாது... சரி நான் உங்களை ஒரு கேள்வி கேட்கிறேன் பதில் சொல்லுங்கள்" என்றாள்.

"என்ன கேள்வி" என்றேன்.

"உண்மையிலேயே வெளிநாட்டிற்கு போய் என்ன கற்றுக்கொண்டீர்கள்?" என்றாள்.

புன்னகைத்தேன்.

"உன்னை எவ்வளவு காதலிக்கின்றேன் என்பதை கற்றுக் கொண்டேன்" என்றேன்.

மீண்டும் வெட்கம். பின் மீண்டும் பதில்.

"ஐயோ... இதுக்கு வெளிநாட்டுக்கு போயி தான் கத்துக்கணுமா ... நான் இங்கயே தான கத்துகிட்டேன், உங்கள எவ்வளவு காதலிக்கிறேன்னு" என்றாள்.

"சரி தான். ஆண்கள் எளிதானவர்கள் அவர்களை பற்றி இங்கேயே அறிந்து கொள்ளலாம். ஆனால் நீயோ புத்திசாலி உன்னைப் பற்றி அங்கே போயி தான கத்துக்க முடியும்" என்றேன்.

"நான் புத்திசாலி எல்லாம் இல்லை..." என்றாள்.

"ஆம் ... நீ புத்திசாலியான முட்டாள்" என்றேன்.

"அப்போ நீங்க?" என்றாள் குறும்பாய்.

"நானும் அதே தான். காதலில் அனைவரும் புத்திசாலியான முட்டாள்கள் தான்" என்றேன்.

மீண்டும் ஒரு புன்னகையோடு என் நெஞ்சினில் சாய்ந்தாள். அவளை பாதுகாப்பாய் அணைக்க கையில் இருந்த கல் தடையாய் இருந்ததால் கல்லை தண்ணீரில் எறிந்து விட்டு அவளை அணைத்தேன்.

அவளுக்கு என் இதயம் சொல்லிக் கொண்டு இருக்கும் சேதிக்கு தடங்கலாய் சத்தம போடக் கூடாது என்று சத்தம இடாது நீரினுள் சென்றது அநதக் கல்.

அவள் என் இதயம் அவள் பேர் சொல்வதை கேட்டுக் கொண்டு இருந்தாள்.

நானோ என் உலகத்துக்குள் மீண்டும் வந்ததை மகிழ்ச்சியுடன் எண்ணிக் கொண்டு இருந்தேன்.

தூரத்தில் கதிரவனோ மறைந்து கொண்டு இருந்தான்.

முற்றும்.         

புதன், 22 செப்டம்பர், 2010

ஒரு காதல் கதை-3

"அவள் வகுப்பு எடுக்கும் நேரங்களில் அவளிடம் பேசியதை தவிர வேறு எதையும் நான் கற்றுக் கொள்ளவில்லை.இருந்தும் அந்த தடவை எழுதிய தேர்வு முடிவுகள் வந்த பொழுது நான் கணக்கில் தேர்ச்சி பெற்று இருந்தேன்."

தங்கைக்கோ ஆச்சரியம். அம்மாவிற்கோ சந்தோசம். வீட்டில் அவளை தலையில் தூக்கி வைத்து ஆடாத ஒரு குறை தான். 
அவளுக்கோ பெருமிதம். 
என்னை கண்டுக்கொள்ளத் தான் யாருமில்லை. அது சரி, யாருக்குத் தெரியும், அவள் வகுப்பு எடுத்த நேரங்களில் பாடத்தை கவனிக்காது விட்டுவிட்டு, ஐயோ நாம் தேர்ச்சி ஆகவில்லை என்றால் ஒருவேளை நாம் ஒழுங்காக சொல்லிக் குடுக்கவில்லையோ என்று அவள் மனம் வருந்துவாளே என்றெண்ணி தேர்விற்கு முன்னால் இரு தினங்கள் தூங்காமல் கண் விழித்துப் படித்தது.  
தேர்வு முடிவுகள் வெளிவந்த அடுத்த நாள். வழக்கம் போல் கல்லூரி முடிந்து வீட்டிற்கு வந்து கொண்டு இருந்தேன். அவளும் அவள் தோழிகளோடு முன்னே சென்று கொண்டு இருந்தாள். திடீரென்று அவள் அவளது தோழிகளிடம் எதையோ சொல்லி விட்டு என்னை நோக்கி வர ஆரம்பித்தாள். என்ன என்று நான் யோசிக்க ஆரம்பிக்கும் முன்னால் என் அருகே வந்து இருந்தாள்.
"நன்றி...!" என்றாள்.
குழப்பம். நியாயப்படி நான் தான் அவளுக்கு நன்றி சொல்ல வேண்டும். ஆனால் அவள் சொல்லி இருந்தாள்.
"எதுக்கு நன்றி நீங்க சொல்றீங்க.... நான் தான சொல்லணும்?.." என்றேன்
"இல்ல... நீங்க நான் சொல்லிக் கொடுக்கும் போது என்ன படீச்சீங்கனு எனக்குத் தெரியும்... இருந்தும் நீங்க ரொம்ப கடினமா முயற்சிப் பண்ணி தேர்வுல தேர்ச்சியாகிட்டீங்க... உங்களால எனக்கு நல்ல பெயர்... அதான் நன்றி சொல்லலாம்னு பார்த்தேன்" என்றாள்.
எனக்கு தூக்கி வாரிப் போட்டது. "என்ன படீச்சீங்கனு எனக்குத் தெரியுமா" என்னை கவனித்துக் கொண்டா இருந்தாள் அவள்...
"ஐயோ அப்படி எல்லாம் ஒண்ணும் இல்லைங்க. நீங்க நல்லா சொல்லித் தந்தீங்க... அதான் காரணம்" என்றேன்.
புன்னகைத்தாள்.
"உண்மையிலையேங்க... நீங்க நல்லாத் தான் சொல்லித் தந்தீங்க" என்றேன்
"தெரியும்!! இருந்தும் நன்றி... சரி நான் கிளம்புறேன். எனக்கு நேரமாச்சி" என்று கூறி புன்னகைத்துவிட்டு அவளின் தோழிகளை நோக்கி நகர ஆரம்பித்தாள். 

எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. ஆனால் அது வரையில் என்னிடம் அதிகம் பேசாத அவள் அன்றில் இருந்து என்னிடம் இயல்பாய் பேசுவதற்கு ஆரம்பித்து இருந்தாள். 
மெதுவாய் நகர்ந்த காலங்களில் எங்களுக்குள் இருந்த இடைவெளி குறையத் தொடங்கியது. அவளின் நட்பு வட்டாரத்தில் நானும் இணைந்து இருந்தேன். பல தோழிகள் மத்தியில் ஒரே தோழனாய் நான்.  சிறிது சிறிதாய் அந்த வட்டாரமும் சுருங்கத் தொடங்கியது. அவளின் தோழிகள் நடக்கும் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் நானும் அவளும் மெதுவாய் தனிமையில் நடந்து செல்லும் காலங்களும் வந்தன. என்னைப் பற்றி அவளும் அவளைப் பற்றி நானும் நன்கு அறிந்து கொண்ட காலம். சில நேரங்களில் பயணிக்கும் தொலைவு முழுவதும் மௌனமாய் கடந்து இருப்போம். மௌனமாய் காதலைத் தான் பேசி இருப்போம். ஆனால் வார்த்தைகளில் அதை மொழி பெயர்க்க வார்த்தைகள் தான் சிக்கவில்லை... இருவருக்கும்.
எனக்கோ என்னுடைய கல்லூரி படிப்பு முடிவிற்கு வரும் தருணம் நெருங்கிக் கொண்டு இருந்தது. மேற்படிப்பிற்காக விண்ணப்பித்து இருந்த வெளிநாட்டு பல்கலைக்கழகத்தில் இருந்தும் சாதகமாக செய்தி வந்து இருந்தது. அநேகமாக படிப்பு முடிந்தவுடன் வெளிநாட்டிற்கு செல்வதைப் போல் நேரமும் அமைந்து இருந்தது. அனைத்தும் சரி. ஆனால் அவளிடம் என்னுடைய காதலை சொல்லாது செல்ல எனக்கு மனமில்லை. கடந்த நான்கு மாதங்களில்  என்னுள் ஒரு பகுதியாகவே மாறி விட்ட அவளிடம் என் காதலைச் சொல்ல வேண்டும் என்று முடிவு செய்தேன். அதற்கேற்ப ஒரு தருணமும் வந்தது.

அன்றும் அது ஒரு மழைக்காலம்!!!

இருவரும் வழக்கம் போல் கல்லூரி முடிந்து நடந்து வந்து கொண்டு இருக்கும் போது மழைத் தூற ஆரம்பித்தது. இன்னும் வீட்டிற்கு செல்ல தூரம் இருந்ததால் இருவரும் அங்கு ஒரு அரணாய் நின்று கொண்டு இருந்த ஆலமரத்தின் அடியில் ஒதுங்கினோம்.தனியாய் அவள். என் துணையாய் மழை. காதலை சொல்ல அருமையான சந்தர்ப்பம் தான். இருந்தும் வார்த்தைகள் பதுங்கின. இலையின் மேல் படர்ந்து இருக்கும் சிறிய நீர்த்துளியானது எப்படி மண் சேர இன்னும் தன்னுள் நீரை சேமித்து கொண்டு இருக்குமோ, அதே போல் நானும் என் காதலைச் சொல்ல என் தொண்டைக் குழியில் சிக்கிக் கொண்டு இருந்த வார்த்தைகளை சேர்த்துக் கொண்டு இருந்தேன். அவளோ என்னுடைய போராட்டங்களை சிறிதும் அறியாதவளாய் மழையை ரசித்துக் கொண்டு இருந்தாள்.
"மலர்..." தைரியத்தை சேமித்துக் கொண்டு அவளை அழைத்தேன்.
"ம்ம்ம்... என்ன" என்றாள் மழையைப் பார்த்துக் கொண்டே
"நான் உன்கிட்ட ஒண்ணு சொல்லணும்... "
"ம்ம்ம்"
"அது... எனக்கு உன்ன ரொம்ப பிடிச்சி இருக்கு... "
திரும்பி என்னை ஒரு கணம் பார்த்தாள். பின் மீண்டும் திரும்பிக் கொண்டாள்.
 
"உனக்கும் என்னைப் பிடிச்சி இருக்கா... பிடிக்கலைனா இப்பவே பிடிக்கலைனு சொல்லிடாத... உனக்கு எப்போ பிடிக்குதோ அப்ப வந்து பிடிச்சி இருக்குனு சொல்லு... அது போதும்... என்ன சொல்ற" என்று முடித்தேன் ஒரு வழியாய். 
சிரித்தாள்.
"நான் கொஞ்சம் யோசிக்கணும்... யோசிச்சிட்டு சொல்றேன்" என்றாள் சாதாரணமாய்.

"நான் கொஞ்ச நாள்ல வெளிநாடு போக வேண்டி இருக்கும்... அதுக்குள்ள சொல்லுவியா?" என்றேன்
"தெரியலை... ஆனா சொல்லுவேன்... சரி நான் கிளம்புறேன். மழை நிக்கப் போகுது" என்று கூறி அவளின் வீட்டை நோக்கி கிளம்பினாள்.

"கடமையைச் செய் பலனை எதிர்பாராதே"
என்பார்கள். நான் என் கடமையை செய்துவிட்டேன். ஆனாலும் பலனை எதிர்பார்த்தே நகர ஆரம்பித்தேன் என் வீட்டை நோக்கி.
அதற்கப்புறம் கழிந்த நாட்கள் எல்லாம் எப்பொழுதும் போலவே கழிந்தன. என்னுடைய கல்லூரி படிப்பு முடிந்து நான் வெளிநாட்டிற்க்கு செல்லும் அந்த நாளும் வந்தது. ஆனால் அவளுடைய பதில் மட்டும் இன்னும் என்னை காக்க வைத்துக் கொண்டு இருந்தது. ஒரு விதமான சோகத்தில் என்னுடைய பொருட்களை எல்லாம் எடுத்து வைத்து கொண்டு இருந்தேன்.
"ஏன்டா உன்ன நாங்களா வெளிநாட்டுக்கு படிக்க போனு சொன்னோம்... நீயா தான ஏதோ உதவித்தொகை கிடச்சி இருக்கு ... படிச்சா நல்லதுனு சொன்ன... அப்புறம் கிளம்புற நேரம் இப்படி முகத்தை தூக்கி வச்சி இருந்தா நல்லா வா இருக்கு" என்றவாறு என் பொருட்களை எடுத்து வைக்க உதவிக் கொண்டு இருந்தார் அம்மா.
 "பிரியா...!"
வாசலின் அவளின் குரல்.

"யாரு மலரா... பிரியா அவங்க அப்பாவோட இவனுக்கு வண்டி பிடிக்கிறததுக்கு போய் இருக்காமா... நீ உள்ள வா" என்று பதில் அளித்தார் அம்மா.
"ஓ அப்படியா அத்தை... சும்மா தான் வந்தேன்... வீட்டுல பலகாரம் பண்ணினோம்.. அதத் தான் குடுத்துட்டு போலாம்னு வந்தேன்..." என்றாள்
"
நல்ல நேரத்தில தான் வந்து இருக்க... இவன் இன்னிக்கு ஊருக்கு கிளம்புறான் ... சாப்பிடறதுக்கு அதிகமா எதையுமே கொடுத்து விடலையேனு நெனசிக்கிட்டு இருந்தேன்... ஆமாம்... வீட்ல எதாவது வீஷேசமா?"
"அப்படி எல்லாம் ஒண்ணும் இல்ல அத்தை. சும்மா பண்ணனும்னு தோணிச்சி அதான்
பண்ணேன்" என்றாள் ஒரு ஒரப்பார்வையை என் மீது படர விட்டவாரே.
"சரி அத்தை... அப்படினா நான் கிளம்புறேன். நீங்க வேலையா இருப்பீங்க.. நான் பிறகு வர்றேன்" என்றவாறு திரும்பிக் கிளம்ப ஆரம்பித்தாள்.
"கொஞ்சம் நில்லுமா ... இது என்ன தலைக்கு பூ வைக்காம வந்து இருக்க போல இருக்கு... ஒரே நிமிசம் இரு ... இதோ வந்துடறேன்" என்று கூறி அவளை நிறுத்தி விட்டு வீட்டினுள் சென்றார்.
இது வரை இந்த தருணத்திற்காக காத்து இருந்தவள் போல் என்னைப் பார்த்து புன்னகைத்தாள். இதுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை. ஆனால் காதலிக்கின்றாளா இல்லையா என்பதை மட்டும் சொல்ல மாட்டாள் என்று சலித்துக் கொண்டு என்னுடைய பொருட்களை சரி பார்க்க ஆரம்பிப்பது போல் நடிக்க ஆரம்பித்தேன்.
எப்பொழுதும் புன்னகைத்துக் கொண்டு இருக்கும் முகம் சற்று வாடி தான் போய் விட்டது.
சரி போதும் என முடிவு செய்து விட்டு, அவளுக்காக வெளியில் காத்து இருப்பதாக சைகை காட்டி விட்டு "அம்மா ... நான் என்னுடைய நண்பன் குமார பார்த்துட்டு வந்துடுறேன்.. சீக்கிரம் வந்துருவேன்" என்று கூறி வெளியில் கிளம்பினேன்.
வீட்டுக்கு வெளியில் யாரோ சூடிய பின் அவசரம் அவசரமாக கழட்டி எறிந்து இருந்த மல்லிகை பூக்கள் என் வீட்டு ரோஜா செடியை அலங்கரித்துக் கொண்டு இருந்தன.
ரோஜாவின் மேல் மல்லிகையா... நிச்சயம் அவளாகத்தான் இருக்கும்!
திரும்பி வீட்டினுள் பார்த்தேன். என் அன்னை அவளுக்கு பூவை சூடிக் கொண்டு இருந்தார்கள். அவளோ வெட்கத்துடன் என்னைப் பார்த்து புன்னகைத்துக் கொண்டு நின்றாள்.
சிறிது புன்னகையுடன் நான் அவளிடம் காதலை சொன்ன அந்த ஆல மரத்தின் அடியில் அவளுக்காக காத்து இருக்க சென்றேன். என்னை அதிக நேரம் காக்க வைக்கவில்லை. 5 நிமிடத்தில் வந்து சேர்ந்து இருந்தாள். ஒரு வேலை இவ்வளவு நாட்கள் காக்க வைத்ததே போதும் என எண்ணி விட்டாள் போல...
"நான் இன்னிக்கு வெளிநாட்டுக்கு கிளம்புறேன்..." தொடங்கினேன்.
"தெரியும்..."
"இன்னும் ஒரு வருசத்துக்கு வர மாட்டேன்.."
"ம்ம்ம்.."
"இப்பயாவது உன்னுடைய முடிவ நான் தெரிஞ்சிக்கலாமா...?" என்றேன்.
சிறிது நேரம் அவள் பதில் எதுவும் பேசவில்லை... அப்புறம் ஆரம்பித்தாள்
"வெளிநாடு ரொம்ப அழகா இருக்கும்னு கேள்வி பட்டு இருக்கேன்... நம்ம ஊரு மாதிரி எல்லாம் அங்க இருக்காதாம்..."
"நான் என்ன கேட்டேன்... நீ என்ன..." என்று நான் ஆரம்பித்து முடிப்பதற்குள் தொடர்ந்து பேச ஆரம்பித்தாள்.
"அத எல்லாம் பார்த்து அங்கேயே ரொம்ப நாள் இருந்துராதீங்க... இங்க நிறைய பேரு காத்துக்கிட்டு இருக்கோம்..." என்றாள்.
"இன்னும் நான்... " என்று நான் ஆரம்பிப்பதற்குள்... மெதுவாய் என் கிட்டே வந்து
"காத்துக்கிட்டு இருப்பேன் ... ஒரு வருசம் தான் சரியா... வந்துடனும்" என்று கூறி விட்டு அவளின் வீட்டை நோக்கி ஓடத் தொடங்கினாள்.
புன்னகைத்தேன்..
"கண்டிப்பா... வந்துடுவேன்..." என்று மனதுக்குள் கூறிவிட்டு நானும் என் வீட்டை நோக்கி நடக்க தொடங்கினேன். " ஏன்டா சிரிச்சிகிட்டே இருக்க" என்று வீட்டில் எல்லோரும் கேட்டும் கூட ஏனோ இதயம் சிரிப்பதை நிறுத்த மாட்டேன் என்றது.

அன்று தான் நான் அவளை கடைசியாக கண்டது. இதோ அதற்கு அப்புறம் இன்று தான் சொந்த ஊருக்கே திரும்ப வருகின்றேன். அன்று அவள் புன்னகையோடு ஓடி மறைந்தது என் கண்ணுக்குள் இன்றும் அப்படியே நிற்கின்றது. நாளுக்கு நாள் ஏதோ ஒரு மாற்றத்தால் மாறிக் கொண்டு இருக்கும் நகரத்திற்கு மாறாய் மாற்றம் ஏதும் இன்றி நான் செல்லும் போது எப்படி இருந்ததோ அப்படியே தான் இன்றும் இருந்தது என் ஊர். அந்த மரம். நான் கொடுத்த வாக்கு. எல்லாம் அப்படியே தான் இருந்தன.  
ஒரு வருடம் என்று நான் கொடுத்த வாக்கின் படி நான் வந்து விட்டேன்.
காத்துஇருப்பேன் என்று சொன்ன என்னவள் எங்கே?...
வழி எங்கும் தேடியபடியே வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.

ஒரு காதல் கதை-2

"இடி இடிக்கும் சத்தம் கேட்கவே நிமிர்ந்து வானத்தைப் பார்த்தேன். மேகம் எல்லாம் மீண்டும் ஒன்று கூடிக் கொண்டு இருந்தன. மழை மீண்டும் வரும் போல் இருந்தது. அது வருவதற்குள் வீடு போய் சேர வேண்டும் என்று விரைவாக நடக்க ஆரம்பித்தேன் ஊரை நோக்கி."

ஊரை நெருங்குவதற்குள் மழை மீண்டும் தூற ஆரம்பித்தது. மழையில் நனையாது இருக்க வழியில் இருந்த ஆலமரத்திற்கு அடியில் ஒதுங்கினேன். அது வரை ஒன்றாக வந்த சாலை இரண்டாக பிரியும் முக்கியமான இடத்தில் நின்று கொண்டு இருந்தது அந்த மரம். பிரிந்த வழிகளுள் ஒரு வழி அவளின் வீட்டை நோக்கியும், மற்றொன்று என் வீட்டை நோக்கியும் சென்று கொண்டு இருந்தன.  சிறு வயதில் மரத்தில் செதுக்கி விளையாடிய பெயர்களை வளர்ந்த பின் பார்க்கும் போது அந்த சிறு வயது ஞாபகங்கள் எல்லாம் சற்று நெஞ்சத்தில் எட்டிப் பார்த்து விட்டு போகும் அல்லவா... அது போல தான் என்னுள் அப்பொழுது சில பழைய ஞாபகங்கள் எட்டிப் பார்க்க ஆரம்பித்தன.
நானும் செதுக்கி இருந்தேன் அந்த ஆலமரத்தில்... பெயர்களை அல்ல... சில நிமிடங்களை!!! அவளிடம் நான் என் காதலை முதலில் சொன்ன நிமிடங்களை!!!


எப்படி கடந்தன என்று தெரியாது ஆனால் அவள் எனக்கு அறிமுகமாகி ஐந்து மாதங்கள் கடந்து இருந்தன. தங்கைக்கு தோழியாய் , அம்மாவிடம் சமத்து பெண்ணாய் , அப்பாவிற்கு விவரமான பெண்ணாய் என என் வீட்டில் உள்ள அனைவரிடமும் படிப்படியாய் நெருங்கி இருந்தாள், என்னைத் தவிர. வீட்டில் உள்ள அனைவரிடமும் வார்த்தைகளால் பேசிச் செல்கின்றவள் என்னிடம் மட்டும் இன்னும் புன்னகையால் பேசிக் கொண்டு இருந்தாள். நானோ மௌனத்தால்.
என் கல்லூரிக்கு சற்று முன்னால் இருக்கும் ஒரு மகளிர் கல்லூரியில் தான் அவள் அவளது பட்டப்படிப்பிற்கு சேர்ந்து இருந்தாள். கல்லூரி வழியாக எங்கள் ஊருக்கு செல்லும் பேருந்துகளின் எண்ணிக்கை மிகவும் குறைவு. அரை மணி நேரத்திற்கு ஒரு வண்டி என்ற விகிதம் தான் இருக்கும். எனவே கல்லூரி முடிந்து நானும் அவளும் அநேகமாக ஒரே பேருந்தில் தான் செல்வோம். வீட்டில் தான் பேச முடியவில்லை சரி எப்படியாவது பேருந்து நிறுத்தத்தில் இருந்து வீடு செல்லும் முன் அவளிடம் பேசி விடலாம் என்றால் என்னுடைய என்ணத்திற்கு மிகப் பெரிய முட்டுக்கட்டையாக இருந்தார்கள் அவளின் தோழிகள். நாம் காதலிக்கும் பெண்களிடம் இந்த ஒரு பிரச்சனை தான். தனியாக வெளியே தென்படவே மாட்டார்கள். சுற்றியும் எப்போதும் ஒரு கூட்டம் இருந்து கொண்டே இருக்கும். சில நண்பர்களின் கூற்றுப் படி "மச்சான்! அவகிட்ட காதல சொல்றது கூட பிரச்சனை இல்லடா... ஆனா அவளை தனியாக பேசணும்னு கூப்பிடும் போது சுத்தி இருக்கிறவங்க எல்லாம் சிரிக்கிறாங்க டா. அங்க தான்டா பிரச்சனையே. சிரிக்கிறாங்க ஆனா எதுக்கு சிரிக்கிறாங்கனு தெரியலடா"  காதலைச் சொல்வதை விட, அவளின் கூட்டத்தில் இருந்து தனியாக அவளை பேச அழைப்பது தான் சிரமமான காரியம் என்பது மட்டும் நன்றாக புரிந்து இருந்தது. எனவே அவள் எப்போது தனியாக இருப்பாள் என்று எதிர் பார்த்தே காலத்தை நகர்த்திக் கொண்டு இருந்தேன்.
என் நேரமும் ஒரு நாள் வந்தது. எப்பொழுதும் பேருந்தில் இருந்து இறங்கியவுடன் தோழிகளுடன் வீட்டை நோக்கி செல்ல ஆரம்பித்து விடுபவள் அன்று தோழிகளை முன்னே செல்லச் சொல்லி விட்டு தனியே ஊருக்குள் செல்லும் வழியின் அருகே நின்று கொண்டு இருந்தாள். ஒன்றும் புரியாமல் நானும் பேருந்தில் இருந்து இறங்கி ஊரை நோக்கி செல்ல ஆரம்பித்தேன். "பேசுடா முட்டாள்" என்று என்னுடைய நெஞ்சம் திட்டிக் கொண்டு இருந்த போதும் ஏனோ என்னுடைய கால்கள் அவளின் அருகே செல்லாது விலகிச் சென்று கொண்டு இருந்தன.
"ஒரு நிமிசம்..."
அழைத்து இருந்தாள். நெஞ்சம் துடிப்பதை ஒரு கணம் நிறுத்தியது. என்னைத் தான் அழைத்து இருக்கிறாள் என்பதை உறுதி செய்து கொள்ள சுற்றியும் பார்த்தேன். என்னை தவிர வேறு யாருமில்லை. என்னைத் தான் அழைத்து இருந்தாள்.
திரும்பினேன்.
"என்னையா கூப்பிட்டீங்க" என்றேன்.
"ஆமாம்... உங்ககிட்ட கொஞ்சம் தனியா பேசணும் .... பேசலாமா" என்றாள் சற்று தயக்கத்துடன். 

இதயம் பற்றி எரிந்துக் கொண்டு இருந்தது அதைப் பொருட்படுத்தாது
"சொல்லுங்க... என்ன விஷயம்!" என்றேன்
"தப்பா எடுத்துக்காதீங்க... உங்களுக்கு கணக்குப் பாடம் கொஞ்சம் நல்லா வராதாமே?" என்றாள்.
இதயம் மீண்டும் ஒரு முறை துடிப்பதை நிறுத்தியது. இம்முறை அதிர்ச்சியால். நிச்சயம் இந்த கேள்வியை நான் எதிர் பார்த்து இருக்கவில்லை.
"அப்படி எல்லாம் ஒண்ணும் இல்லையே... யார் சொன்னாங்க?" என்றேன்.
"உங்க அம்மா தான் சொன்னாங்க...."
இது வரையிலும் படிப்பை பொருத்தவரை என் மானத்தை அப்பா தான் வாங்குவார். இப்போ அம்மாவும் களம் இறங்கி விட்டார்களோ என்று எண்ணிக் கொண்டு இருக்கும் போதே தொடர்ந்தாள் 

"இல்லை ... எனக்கு கணக்கு கொஞ்சம் நல்லா வரும்... இது உங்களுக்கு கடைசி வருசமாம்... இந்த ஒரு பாடத்துல தான் நீங்க ரெண்டு வருசமா தேர்ச்சி ஆகாம இருக்கீங்களாம்... அதுனால என்னை உங்களுக்கு கொஞ்சம் சொல்லித் தர முடியுமானு உங்க அம்மா கேட்டுக்கிட்டாங்க... நானும் சரினு சொல்லிட்டேன்... ஆனா உங்களுக்கு பிரச்சனை இல்லைனா மட்டும் தான்... வேண்டாம்ணு நினைச்சீங்கனா வேண்டாம்" என்று கூறி முடித்தாள்.  
அவசரப்பட்டு அம்மாவை சந்தேகப்பட்டு விட்டாயேடா மடையா என்று உள்ளுக்குள் என்னைத் திட்டி விட்டு "சரி சொல்லு ... சரி சொல்லு" என்று உள்ளுக்குள் கூச்சல் இட்டுக் கொண்டு இருந்த இதயத்தை கட்டுப்படுத்திக் கொண்டு வெளியில் இயல்பாய்
"ஓ! அப்படியா... எனக்கு கணக்கு வராதுன்னு எல்லாம் ஒண்ணும் இல்லை... நல்லாத் தான் பண்ணுவேன். ஆனா எனக்கு எடுத்த வாத்தியார் சரி இல்லை.. அதான் இப்படி... கொஞ்ச கணக்குல மட்டும் சந்தேகங்கள் இருக்கு.. மற்றத எல்லாம் நான் கிட்டத்தட்டப் படிச்சிட்டேன்.." என்றேன்.
"ஓ!! அப்படினா நீங்களே படிச்சிடுவீங்கனு உங்க அம்மாக்கிட்ட சொல்லிடட்டுமா?" என்றாள்.
எனக்கு தூக்கி வாரிப் போட்டது. நம்ம முட்டாள்னு நெனச்சிடக் கூடாதுணு கொஞ்சம் படிச்சி இருக்கேன்னு சொன்னா இவ நம்மள அறிவாளினுல நெனச்சிட்டா என்று உள்ளுக்குள் பதறியவாறு
"இல்ல இல்ல... நான் அப்படி சொல்ல வரல... கொஞ்சம் சந்தேகம் இருக்குனு சொன்னேன்ல... உங்களுக்கு வேற வேலை இல்லைனா... கொஞ்சம் சொல்லித் தந்தீங்கன்னா நல்லா இருக்கும்" என்றேன்.
சிரித்தாள்.
"சரி அப்படி என்றாள் நாம் நாளையில் இருந்து படிப்பதை தொடங்குவோம். சாயங்காலம் 6:30 மணி உங்களுக்கு சரியா இருக்குமா" என்றாள். 

"எனக்கு பிரச்சனை இல்லை. எப்ப வைத்தாலும் எனக்கு சரி தான்" என்றேன்.
"அப்படினா சரி. நாளைக்கு சந்திப்போம். கவலைப்படாதீங்க.. இந்த தடவ நீங்க அந்த பாடத்துல தேர்ச்சி ஆயிடுவீங்க... அதுக்கு நான் பொறுப்பு" என்று புன்னகைத்தவாறே கிளம்ப ஆரம்பித்தாள்.
நானும் அவள் பின் அமைதியாய் நடக்க ஆரம்பித்தேன்.
ஏனோ இதயம் மட்டும் துள்ளிக் குதித்துக் கொண்டே அவளின் முன்னால் ஓடிக் கொண்டு இருந்தது.   

அடுத்த நாளில் இருந்து வகுப்புகள் ஆரம்பித்தன. அவளோ கண்ணும் கருத்துமாய் எனக்கு கற்பித்துக் கொண்டு இருந்தாள். நானோ "என்ன... அவ சொல்லிக் குடுத்து நீ படிக்கப் போறீயா?... அப்படினா இந்த வருசமும் கணக்கு போச்சா சக்தி" என்ற என்னுடைய தங்கையின் வாக்கை உண்மையாக்குவதைப் போல் கணக்கை அல்லாது அவளைக் கற்றுக் கொண்டு இருந்தேன். அவள் வகுப்பு எடுக்கும் நேரங்களில் அவளிடம் பேசியதை தவிர வேறு எதையும் நான் கற்றுக் கொள்ளவில்லை.இருந்தும் அந்த தடவை எழுதிய தேர்வு முடிவுகள் வந்த பொழுது நான் கணக்கில் தேர்ச்சி பெற்று இருந்தேன்.

வெள்ளி, 10 செப்டம்பர், 2010

ஒரு காதல் கதை-1

மழைத் தூறி விட்டு நின்றிருந்தது.
ஒரு வருடம் வெளிநாட்டில் படித்து முடித்து வரும் என்னை காண ஆவலுடன் இரு கண்கள் பேருந்து நிறுத்தத்தில் காத்துக்கிடக்கும் என்று எண்ணியே வந்தவனுக்கு காலியாய் வரவேற்பு அளித்தது எங்கள் ஊர் பயணியர் நிழற்க்கூடம்.
அவள் வரவில்லை.
மழை வந்து இருந்தது.
ஏமாற்றம் தான். நிச்சயம் வருவாள் என எதிர் பார்த்து இருந்தேன்.
ஒரு வேளைச் செய்தி போய் சேர்ந்து இருக்காதோ?... இல்லையே அன்று ஒரு நாள் வெளிநாட்டில் எனக்கு உடம்பு சரியில்லை என்ற செய்தியை அறிந்து கொண்டு என் அன்னையின் கடிதத்தோடு வேறு யாரும் அறியாமல் சில வரிகளையும் ஒரு முத்தத்தையும் சேர்த்து அனுப்பியவளுக்கு நான் ஊருக்கு வருவதா தெரியாது போய் இருக்கும் என்று குழம்பியவாறு எனது பெட்டியை எடுத்துக்கொண்டு வயல்களின் வழியாக எனது ஊரை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.
ஒரு ஆண்டுக்கு மேலாக நகரத்தின் இயந்திர வாழ்க்கையை வாழ்ந்து விட்டு, திடீரென்று சிறு வயது முதல் என்னை கண்டு வளர்த்த சூழலின் நடுவே நிற்பதை உணர்ந்த போது புரியாது ஒரு புன்னகை அதுவாக அரும்பியது.
இங்கு நான் அந்நியன் அல்ல. இது என் ஊர்.
"யாரு ... நம்ம கனி மகனா?"  என்றார் வழியில் ஒரு பாட்டி.
"ஆமாம் பாட்டி. நல்லா இருக்கீங்களா?" என்றேன் ஒரு புன்னகையுடன். டில்லிக்கே ராஜா ஆனாலும் எங்க ஊர்ல எல்லாருக்கும் நான் எங்க அம்மாவோட பையன் தான். 
 "எனக்கென்னபா நல்லா இருக்கேன். நீ சீமையிலே இருக்கிறதாவுலே சொன்னாங்க ... எப்ப வந்த" என்றார் அவர்.
"இன்னிக்கு தான் பாட்டி. இப்ப தான் ஊருக்குள்ள வறேன்" என்றேன்.
"சரி சரி... விரைவா வீட்டுக்கு போயி சேரு... ரொம்ப நாள் கழிச்சி உன்ன பார்க்க போற சந்தோசத்திலே உங்க அம்மா ஊரையே ரெண்டு பண்ணிக்கிட்டு இருக்கா" என்று கூறி அவர் அவர் வழியில் நடந்து செல்ல ஆரம்பித்தார்.
நானும் புன்னகையோடு தொடர்ந்து பயணிக்க ஆரம்பித்தேன்.
சிறிது தூரத்தில் அய்யனாரின் கோவில் கண்ணுக்கு புலப்பட்டது.
அய்யனார் - எங்க ஊர் காவல் தெய்வம். அந்த கோவில், அதை சுற்றியுள்ள இடங்கள் அவற்றை பார்க்கும் போது என்னை அறியாது ஒரு ஞாபகம் என்னை உரசிக் கொண்டு போனது.நம்ம வாழ்க்கைலே ஏதோ ஒரு குறிப்பிட்ட சம்பவத்தை நினைக்கும் போது ஏன்னு தெரியாமலையே ஒரு புன்னகை வரும் தெரியுமா, நம்மள அறியாமலையே யாரைப் பார்த்தாலும் புன்னகைக்கத் தோணும். சினிமா வசனம் மாதிரி சொல்லணும்னா ஒரு பட்டாம்பூச்சி மனசுக்குள்ள பறக்கிற மாதிரி இருக்கும். நானும் அப்படி தான் உணர்ந்தேன்.
ஆம், இரண்டு வருடங்களுக்கு முன் இங்கு தான் நான் அவளை முதன் முதலில் சந்தித்தேன்.
அது ஒரு திருவிழாக் காலம்.
நான் தேவதைகளில் நம்பிக்கைக் கொள்ள ஆரம்பித்து இருக்காத ஒரு காலம்.
எப்பொழுதும் போல் தான் அன்றும் விடிந்திருந்தது.
"திருவிழா அன்னிக்கும் இன்னும் எழுந்திரிக்காம தூங்கிக்கிட்டு இருக்கான் பாரு... இவன... டேய் சக்தி.."
அடுப்பாங்கடையில் இருந்து வந்த அம்மாவின் சத்தம் நன்றாக தூங்கிக் கொண்டு இருந்த என்னை எழுப்பி விட்டது.
எழுந்து மணியைப் பார்த்தேன்.
'6:50' என காட்டியது அறைக் கடிகாரம்.
"காலங்காத்தாலையே ஏன்மா..." என்று சலித்துக் கொண்டே கோவிலுக்கு போக தயாராக கிளம்பினேன்.என்றும் நண்பர்களோடு ஊர் சுற்றித் திரிய சுதந்திரம் இருந்த எனக்கு, திருவிழாக்கள் அன்று மட்டும் ஒரு செல்லத்தடை, குடும்பத்தோடு கோவிலுக்கு சென்று விட்டு அப்புறம் எங்கு வேண்டுமானாலும் போய்கொள் என்பதே அது. அதற்கு ஏற்றார்ப் போல் நண்பர்களின் அழைப்பை எல்லாம் தவிர்த்து குடும்பத்தோடு கோவிலுக்கு செல்ல கிளம்பினேன்.
ஊர்த் திருவிழா என்பதால் ஊரெங்கும் அலங்காரங்கள் களை கட்டிக் கொண்டு இருந்தன. என்றும் அமைதியாக இருக்கும் எங்கள் ஊர் தெருக்கள் அன்று வழக்கத்திற்கு மாறாக ஒலிப்பெருக்கிகளின் சத்தத்தால் அதிர்ந்து கொண்டு இருந்தன. மக்களும் தங்கள் குடும்பத்தோடு மகிழ்ச்சியாய் ஊரெங்கும் தேனீக்கள் போல சுறுசுறுப்பாய் சுற்றிக் கொண்டு இருந்தனர்.
ஊரே களைக் கட்டி இருக்கின்றது என்றால் கோவிலை பற்றி கேட்கவா வேண்டும். சுற்றியும் சந்தை, பொங்கல் வைப்பவர்கள், மின்விளக்குகள் என்று அந்த இடமே அமர்க்களமாய் இருந்தது.
"என்ன கனி. இந்த வட்டம் நீ பொங்கல் வைக்கலையா?".பொங்கல் வைக்கும் கூட்டத்தில் இருந்து அம்மாவிற்கு விசாரிப்பு வந்தது.
"இல்ல மாரி. இந்த தடவை வைக்கலை. அடுத்த வருசம் தான் இனி பாக்கணும்" என்று கூறிவிட்டு கோவிலின் உள் அம்மா நுழைந்தார். பின் தொடர்ந்தே நாங்களும் நுழைந்தோம்.

"நல்லா சாமி கும்புடுங்க கண்ணுகளா... எல்லோரும் நல்லா இருக்கணும்னு வேண்டிக்கோங்க" என்றவாறே அம்மா சாமி கும்பிட ஆரம்பித்தார்.
தங்கச்சி குறும்பை ஆரம்பித்தாள்.
"ஆமாம் ஆமாம்... இந்த தடவையாவது என்னை எல்லா தேர்வுலையும் தேர்ச்சி பண்ணி விடு சாமினு வேண்டிக்கோ. அப்படியாவது ரெண்டு வருசமா எழுதிக்கிட்டு இருக்கிற அந்த ஒரு பாடத்துல தேர்ச்சி ஆகிறியானு பார்ப்போம்" என்றாள் நக்கலாய்.
தங்கைகளிடம் இந்த ஒரு பிரச்சனை தான். எப்படி படிக்கிறாளுகனு தெரியாது. ஆனா எப்படியோ நம்மள விட நல்லா படிச்சி வீட்டில நம்ம மதிப்பிற்கு வேட்டு வச்சிடுவாளுக.
"ஹ்ம்ம்ம்... நீ எல்லாம் படிச்சி என்னத்த கிழிக்க போறியோ... அங்க பாரு உன்ன விட மூணு வயசு சின்ன கழுத எப்படி படிக்குதுனு. நீயும் தான் இருக்கியே" னு வீட்டில அப்பாவிடம் அப்பாவியாய் நல்ல பேர் எடுத்துவிட்டு நம்ம சோத்துக்கு வேட்டு வைப்பதில் இவளுகளுக்கு ஒரு தனி பட்டமே தரலாம்.
அவளைத் திரும்பி முறைத்தேன்.
"என்ன விட நல்லா படிக்கிறேனு ஆணவத்துல பேசாத. எங்க சுத்தினாலும் வீட்டுக்கு தான வந்து சேருவ. அங்க வச்சிக்கிறேன் உனக்கு." என்றேன்.

நக்கலாய் முகத்தை சுழித்து விட்டு பத்திரமாய் அப்பாவின் அருகே போய் நின்று கொண்டாள்.
"பயந்தான்கோளி.." என்று முணுமுணுத்துக்கொண்டே நானும் சாமி கும்பிடலாம் என்று திரும்பினேன்.
அங்கே அவள் நின்று கொண்டு இருந்தாள்.
இதுவரை அவளை என் ஊரில் பார்த்தது இல்லை. நிச்சயம் புதியவள் தான். இருக்கட்டும். அதில் எனக்கு சந்தேகம் இல்லை. ஆனால் இவ்வளவு அழகாகவும் யாராவது இருப்பார்களா?.
பார்த்த உடன் வரும் காதலில் அன்று வரை எனக்கு நம்பிக்கை இருந்தது இல்லை. ஏன்! தேவதைகளின் மீதும் தான்.
ஆனால், இவ்வளவு அருகில் ஒருத்தி நின்று கொண்டு இருக்கையில் நம்பாமல் இருக்க முடியவில்லை. எங்கோ ஒரு பட்டாம்பூச்சி சிறகை ஆட்ட எங்கோ ஒரு இடத்தில் பூகம்பம் நேருமாம். இங்கோ, மெதுவாய் அவள் இமைகள் துடித்துக் கொண்டு இருந்தன... என் உலகமோ நொறுங்கிக் கொண்டு இருந்தது.
அவளோ அவளின் இஷ்ட தெய்வத்தை வணங்கிக் கொண்டு இருந்தாள். நானோ இறைவன் புரிந்து கொள்வான் என்று என் இஷ்ட தேவதையை தரிசித்துக் கொண்டு இருந்தேன். இறைவனோ எங்கள் இருவரையும் கண்டு புன்னகைத்து கொண்டு இருந்தான்.

"சக்தி! சாமி கும்பிட்டது போதும். வா போகலாம்" என்று தொலைவில் எங்கோ தங்கையின் குரல் கேட்க திடுக்கிட்டு சுய நினைவிற்கு வந்தேன். விடுக்கென்று கோவிலில் இருந்த திருநீரை எடுத்து பூசி விட்டு நானும் கிளம்ப ஆரம்பித்தேன். அதே நேரம் அவளின் குடும்பமும் கிளம்புவதற்கு தயார் ஆகி கொண்டு இருந்தனர்.
ஹ்ம்ம்ம்... இனி மேல் இவள பத்தி விவரத்தை எப்படி சேகரிக்கிறதுனு யோசிச்சிக்கிட்டே கோவிலுக்கு வெளியே வரும் போது அவளின் தந்தை எங்களை கூர்ந்து கவனிப்பதை கவனித்தேன்.
இது என்னடா திடீர்னு நம்மள பார்க்கிறார்... என்ன விஷயம்னு நான் யோசிக்கிறதுக்கு முன்னாடியே புன்னகைத்தவாறே எங்களை நோக்கி வர தொடங்கினார்.
"டேய் சண்முகம்...!!!"
என் தந்தையின் பெயரைச் சொல்லி அழைத்து இருந்தார்.
என்னுடைய தந்தை நின்று ஓசை வந்த திசை நோக்கி திரும்பி பார்த்தார்.
சிறிது நேரம் அதே யோசனை. பின் அதே புன்னகை.
"முருகா... நீ எங்கடா இங்க.. பார்த்து எத்தன வருசம் ஆச்சி..உன் கல்யாணத்துல பார்த்தது" என்று கூறியவாறே அவரை நோக்கி நடக்க ஆரம்பித்தார்.
பழைய நண்பர்களாம்.
பிரச்னை இல்லை. என் வேலை கொஞ்சம் எளிதானது. உள்ளுக்குள் புன்னகைத்து கொண்டேன்.

"என்னை இந்த மாசம் தான்டா உன் ஊருக்கு மாற்றம் செஞ்சி இருக்கானுங்க.. நானே உன் வீட்டுக்கு வரணும்னு இருந்தேன்" என்று அவளின் தந்தை விளக்கம் சொல்லிக் கொண்டு இருக்கும்போதே இரண்டு குடும்பத்தினரும் அவர்களின் அருகிலே வந்து விட்டு இருந்தோம்.
என் குடும்பத்தில் உள்ள அனைவரையும் பார்த்து புன்னகைத்தவாறு அவள்.
வார்த்தைகளற்று நான். என்ன பேசலாம் என்று யோசித்து கொண்டு இருக்கும் போதே,
"இது யாரு உங்க பொண்ணா... என்ன பண்றா?" என்றார் என் அன்னை.
முற்றிலும் அன்னியமான சூழலில் உரையாடல்களை ஆரம்பித்து வைப்பதற்கு அன்னைகளை விட சிறந்தவர்கள் வேறு யாரும் இருக்க முடியாது. சந்தித்த 10 நிமிடங்களில் நெருங்கிய தோழிகளைப் போல உரையாட ஆரம்பித்து இருந்தனர் எங்கள் இருவர் அம்மாக்களும்.
"ஆமா.. இப்ப தான் +2 முடிச்சிட்டு முடிவுக்காக காத்துக்கிட்டு இருக்கா" என்றார் அவளின் அன்னை.
"உன் பேரு என்னமா?" என்றார் என் அன்னை அவளை நோக்கி.
புன்னகைத்தாள்.
"மலர்!" என்றாள்.
கோவிலைச் சுற்றி இருந்த மலர்கள் எல்லாம் மகிழ்ச்சியுடன் பெருமூச்சி விட்டன. 

"சரி உங்க பசங்களை பத்தி ஒண்ணுமே சொல்லலையே" என்றார் அவளின் அன்னை.
"பெரியவன் பேரு சக்தி... ரெண்டாம் ஆண்டு விவசாயம் படிச்சி முடிக்க போறான்.. சின்னவ ... பிரியா... இப்ப தான் 10ம் வகுப்பு முடிச்சி இருக்கா... இவளும் முடிவுக்காக தான் காத்துக்கிட்டு இருக்கா..." என்று முடித்தார் என் அன்னை.
"விவசாயமா?..." என்றாள் அவள் ஆச்சரியமாய்.
"ஆமாம் மா... ஏன் ஆச்சரியத்தோடு அப்படி கேட்குற?" 

"இல்லை ... இப்ப எல்லாம் எல்லாரும் பொறியியல் இல்லை மருத்துவம்னு தான் எடுத்துப் படிக்கிறாங்க... விவசாயம் என்கிறது கொஞ்சம் வித்தியாசமா இருந்திச்சி அதான்" என்றாள்.
"இவங்க அப்பாவும் அத தான் சொன்னாப்பில.. ஆனா இவன் தான் கேட்க மாட்டேன்னு சொல்லிட்டான்... இத்தனைக்கும் மதிப்பெண் எல்லாம் நெறைய தான் வச்சி இருந்தான்... ஆனா எனக்கு வயல்ல வேலை செய்றது தான் பிடிச்சி இருக்குனு சொல்லிட்டான்" என்றார்.
"சரிக்கா..." என்று கூறி மீண்டும் புன்னகையைச் சூடிக் கொண்டாள்.
விவசாயமானு கொஞ்சம் அதிர்ச்சியாக அவள் கேட்ட போது தப்பான முடிவு எடுத்து விட்டோமா என்று என் மனசு பதறியதை அவள் அறிந்து இருக்க வாய்ப்பில்லை தான். ஆமாம் இந்த காலத்தில் நான் படிக்கும் படிப்பிற்கு மதிப்பில்லை தான். ஆனால் என் கனவுகள் வேறு. ஒரு வேளை அவள் கனவுகள் வேறாக இருக்குமோ?... எனக்கு ஏற்றவளாக இவள் இருக்க மாட்டாளோ? என்ற எண்ணங்கள் என்னுள் மிக வேகமாக கிளம்ப ஆரம்பித்தன.
"சரி நீ என்னமா படிக்கலாம்னு இருக்க" தொடங்கினார் என் அன்னை.
"ஹ்ம்... இவளும் பொறியியல் இது எல்லாம் வேண்டாம்ணு சொல்லிட்டா... ஏதோ ஒரு படிப்பு சொன்னாளே... அது என்னடி"
"ஹோம் சைன்ஸ் மா" என்றாள்.
"ஆமாம்... அந்த படிப்பு தான் படிக்க போறாளாம்" என்று முடித்தார் அவளின் அன்னை.

தென்றல் கொஞ்சம் என்னை தீண்டி விட்டு போனது.
பெரியவர்கள் அனைவரும் ஒன்று கூடி பழங்கதைகள் பேசி கொள்ள ஆரம்பித்தனர்.
நானோ வார்த்தைகள் எல்லாம் தொலைத்து விட்டு புதுக்கதைகள் பேசுவதற்காக மொழிகளைத் தேடிக் கொண்டு இருந்தேன்.
அவளோ மௌனமாய் விழிகளில் புதுக்கவிதைகள் புனைந்துக் கொண்டு இருந்தாள்.
"நீ சரி இல்லையே" என் காது அருகே ஒரு குரல் எனக்கு மட்டும் கேட்கும் மாதிரி ஒலித்தது.
திரும்பினேன். என் தங்கை ஒரு புருவத்தை உயர்த்தியவாறு என்னைப் பார்த்துக் கொண்டு நின்று இருந்தாள்.
"என்ன...!!!"
"நானும் பார்த்துக்கிட்டே இருக்கேன்... அந்த பொண்ணயே பார்த்துக்கிட்டு இருக்கியே... அப்பாகிட்ட சொல்லட்டுமா" என்றாள் புன்னகைத்துக் கொண்டே.
அவர் அவர் அவரவர் வேலையைப் பார்த்துக் கொண்டு இருக்கும் போது, என்னை பார்க்கிறதையே வேலையா வச்சிக்கிட்டு அலையுறா என்று முணுமுணுத்துக்கொண்டே,
"என்ன வேண்டும்" என்றேன்.
"சந்தையில ஏதாவது வாங்கி கொடு" என்றாள்.
சலித்துக்கொண்டே "சரி வா.." என்று சொல்லி கிளம்ப தயாரானேன்.
"அம்மா... நாங்க சந்தைக்கு போய்ட்டு வந்திருறோம்" என்று எங்கள் அம்மாவிடம் சொல்லிவிட்டு சந்தோசத்துடன் கிளம்ப ஆரம்பித்தாள் பிரியா.
"இருடி.. இந்த அக்காவையும் கூட கூட்டிட்டு போ... நம்ம ஊர் சந்தைய இவங்க பார்த்து இருக்க மாட்டாங்க... என்னமா போயிட்டு வறியா?" என்றார் என் அம்மா.
அவள் திரும்பி அவளின் அம்மாவைப் பார்த்தாள். அவர் சம்மதம் தெரிவிக்கவே
"சரிக்கா" என்று கூறி அவளும் சந்தைக்கு வர கிளம்பினாள்.
என் மூளையில் மின்னல் வெட்டியது.
என்ன இன்னிக்கு எல்லாமே நல்லாதவே நடக்குதே என்று சந்தோசப்பட்டுக் கொண்டு இருக்கும் போதே ஒரு சின்னக்கல் பறந்து வந்து தலையில் அடித்தது.
நண்பர்கள்... 

சரியா எப்ப எவன் வரக் கூடாதுனு நினைப்போமோ அப்ப சரியா வந்து நிப்பானுங்க. அந்தக் கல்லைப் பொருட்படுத்தாது கிளம்ப ஆரம்பித்த போது சரியாக அடுத்த கல் அம்மாவின் மேல் வந்து விழுந்தது.
"என்னடா சக்தி... உன் கூட்டம் வந்திரிச்சி போல இருக்கு... நீ வேணும்னா கெளம்பு... ஏற்கனவே உன்ன ரொம்ப நேரம் இங்க இருக்க வச்சாச்சி.. நீ கெளம்பு..."
"அப்ப பிரியாவ சந்தைக்கு கூட்டிட்டு போறது?" என்று இழுத்தேன்.
"அது நான் போயிப்பேன் சக்தி... நீ காச மட்டும் குடு" என்றாள் நேரம் அறிந்து என் அருமை தங்கச்சி.
வேறு ஒன்றும் சொல்ல இயலாதவனாய் காசை கொடுத்து விட்டு அவள் புன்னகைத்துக் கொண்டே என் தங்கையுடன் சந்தைக்கு போவதை பார்த்துவிட்டு கடுப்புடன் கல் எறிந்தவனை தேடி கிளம்பினேன்.


டேய்... நான் என்ன பண்ணினேன்னு இப்ப என்ன அடிக்க வர என்று கத்திக்கொண்டே அவன் வயல் வரப்புகளில் எல்லாம் ஓடியதும் அவனை நான் துரத்தியதும் ஏதோ நேற்று நடந்தது போல இன்றும் ஞாபகம் இருக்கின்றது. அதற்குள் 2 வருடங்கள் ஓடிப் போய் விட்டது. வருடங்கள் ஓடி விட்டன. ஆனால் இன்னும் அந்த இடங்கள் எல்லாம் அப்படியே இருந்தன.

இடி இடிக்கும் சத்தம் கேட்கவே நிமிர்ந்து வானத்தைப் பார்த்தேன். மேகம் எல்லாம் மீண்டும் ஒன்று கூடிக் கொண்டு இருந்தன. மழை மீண்டும் வரும் போல் இருந்தது. அது வருவதற்குள் வீடு போய் சேர வேண்டும் என்று விரைவாக நடக்க ஆரம்பித்தேன் ஊரை நோக்கி.
 
   

புதன், 7 ஜூலை, 2010

இயற்கையைத் தேடி - 3

பைன் மரங்களின் வழியாக கதிரவன் நாங்கள் செல்லும் பாதையில் ஒளிப்பரப்பி கொண்டு இருந்தான். நாங்களும் மதி கெட்டான் சோலையை நோக்கி ஆர்வத்துடன் சென்று கொண்டு இருந்தோம்.
"இன்னும் சோலையை அடைய எவ்வளவு நேரம் ஆகும்?." என்றேன்.
"ஏன் கேட்கிறாய்" என்றார் பேராசிரியர் கந்தசாமி.
"இல்லை நாமும் வெகு நேரமாக நடந்து கொண்டு இருக்கின்றோம், ஆனால் இந்த பைன் மரக்காட்டைத்தவிர வேறு இடமே தெரியவில்லையே அதான் கேட்டேன்" என்றேன் தயக்கத்துடன்.
நின்றார் பேராசிரியர். அவரை தொடர்ந்து வந்த மாணவர் கூட்டமும் நின்றது. சில நொடிகளில் வனம் அமைதி ஆனது.
"தூரத்தில் தண்ணீர் ஓடும் சத்தம் கேட்கிறதா" என்றார்.
கூர்ந்து கவனித்ததில் சிறு தொலைவில் ஒரு நீரோடை ஓடுகின்ற சத்தம் கேட்டது.
"ஆம்" என்றோம்.
"அப்படி என்றால் சோலை நெருங்கி விட்டது என்று அர்த்தம். சோலை எங்கு இருக்கின்றதோ அங்கே நீரும் இருக்கும்." என்றார்.
பயணத்தின் இலக்கு நெருங்கி விட்டதை எண்ணி சற்று மகிழ்ச்சியோடு நடக்க ஆரம்பித்தோம்.
"நில்லுங்கள்! சோலைக்குள் செல்லும் முன் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் சில இருக்கின்றன. அமருங்கள்" என்று கூறி அவரும் ஒரு மரத்தடியில் அமர்ந்தார்.
நாங்களும் அவரைச் சுற்றி அமர்ந்தோம்.
"ஓங்கி வளர்ந்து இருக்கும் இந்த பைன் மரங்களை பார்த்தீர்களா? இவற்றை பார்க்கும் போது என்ன எண்ணம் வருகின்றது?" என்றார்.
"தமிழ் சினிமா படத்தில் சண்டை காட்சிகளிலும், பாடல் காட்சிகளிலும் வரும் காடுகள் போல இருக்கின்றன" என்றான் ஒருவன்.
"ஆம். இந்த காடுகளை நீங்கள் அடிக்கடி படங்களில் பார்த்து இருப்பீர்கள். காடுகளில் பல வகைகள் இருக்கும் போது என் இந்த காடுகளில் மட்டும் அதிகமாக படம் எடுக்கிறார்கள் என்று உங்களுக்கு தெரியுமா?"
"இவை அழகாய் இருக்கின்றன! அதனாலா?" என்றாள் ஒருத்தி.
"ஒவ்வொரு மரத்திற்கும் இடையில் இருக்கும் பெரிய இடைவெளிகள் அவர்கள் படம்பிடிக்க சிரமமாய் இருக்காது. அதனால் இருக்கும்" என்றான் இன்னொருவன்.
"ஆம்!! இந்த மரங்களுக்கு இடையில் இருக்கும் இந்த இடைவெளிகள் தான் காரணம். இந்த மரங்களை உற்று கவனியுங்கள். இந்த நிலப்பரப்பில் இந்த மரங்களை தவிர வேறு மரங்கள் எதையாவது நீங்கள் காணமுடிகின்றதா" என்றார் பேராசிரியர்.
"இல்லை!" என்றோம். அந்த நிலப்பரப்பு முழுவதும் பைன் மரங்கள் தவிர வேறு மரங்கள் தென்படவில்லை.
"இருக்கும் மரங்களும், தனித் தனியாக இருப்பதையும் பார்த்து கொள்ளுங்கள். இந்த இடத்தில், நீரோட்டம் இல்லை, அதிகமான மிருக நடமாட்டமும் இல்லை. இருப்பவை அனைத்தும் பைன் மரங்களும் அவை உதிர்த்த இலைகளுமே. இவற்றை ஞாபகம் வைத்து கொள்ளுங்கள். முக்கியமான உண்மையை அறிய இந்த விஷயங்கள் தேவையாக இருக்கும்" தொடர்ந்தார் பேராசிரியர்.
ஆம். அவர் கூறியதை போலவே அந்த பகுதியில் பைன் மரங்களையும் அதன் உதிர்ந்த இலைகளையும் தவிர வேற இயற்கையின் படைப்புகளை காண முடியவில்லை.

"சரி வாருங்கள்!!! இப்பொழுது சோலைக்குள் செல்லலாம்" என்று கூறி விட்டு எழுந்து தண்ணீரின் சத்தம் வந்த திசையை நோக்கி நடக்க ஆரம்பித்தார்.
நாங்களும் பின் தொடர்ந்தோம்.
இது வரையிலும் தனித் தனி மரமாக காட்சியளித்த வனம் இப்பொழுது சற்று இறுக்கமாய் காட்சியளிக்க ஆரம்பித்தது. மரங்கள் மிகவும் நெருக்கமாய் ஒன்றுடன் ஒன்று இணைந்து கொண்டு வெயில் உள்ளே வராதவாறு இருந்தன.
தண்ணீரின் சத்தம் சற்று பலமாக கேட்க ஆரம்பித்தது. கூடவே சில பறவைகளின் சங்கீத சத்தமும்தான்.
"இதோ....இது தான் மதி கெட்டான் சோலை. இனி அனைவரும் தங்கள் முன்னால் செல்பவரை பின் தொடர்ந்தே சீக்கிரம் வரப் பாருங்கள். ஏன் எனில், இந்த சோலையின் பெயருக்கு ஏற்ப ஒருவர் வழி தவறினால் அவரை கண்டு பிடிப்பதற்கு எவ்வளவு நாட்கள் ஆகும் என்று தெரியாது. எனவே இயற்கையை ரசியுங்கள் ஆனால் ஜாக்கிரதையாய் ரசியுங்கள். என்னை தொடர்ந்து பின் வாருங்கள்" என்று சொல்லி அந்த அடர்ந்த சோலைக்குள் பிரவேசித்தார்.

இது வரை நாங்கள் கடந்து வந்த அந்த பைன் மரக்காட்டை விடவும் மிகவும் வித்தியாசமான ஒரு சூழல் எங்களை எதிர் பார்த்து அங்கே காத்துக்கொண்டு இருந்தது. எங்கு பார்த்தாலும் பசுமை, வித விதமான மரங்கள்,நீரோடை, நீரோடும் வழியில் தடைகல்லாய் சில பாறைகள், வரையறுக்காத பாதை என முற்றிலும் மாறுபட்ட ஒரு இடமாய் காட்சியளித்தது அந்த சோலை.
பேராசிரியரின் எச்சரிக்கை எங்களுக்கு ஞாபகம் வந்தது. இங்கே தொலைந்தால் கண்டிப்பாய் திரும்பி சரியான வழி கண்டு பிடிப்பது என்பது எளிதான விஷயம் இல்லை என்பது மிகைப்படுத்தப்பட்ட ஒன்று அல்ல என்பது தெள்ளத்தெளிவாக புரிந்தது.
"இந்த சோலை முழுவதும் நீரோடைகள் ஓடிக் கொண்டே இருக்கும். சோலைகள் எங்கேயோ, அங்கே நீர் ஆதாரங்களும் இருக்கும் என்பது எழுதப்படாத விதி" என்றார் பேராசிரியர்.
"ஏன் அப்படி! இதுவும் ஒரு வகையான காடுதானே. ஏன் அந்த பைன் மரக்காட்டில் இல்லாத நீர் ஆதாரம் இந்த சோலைகளில் மட்டும் இருக்கின்றது." என்றேன்.
"அது தான் சோலைகள். விவரமாக சொல்கின்றேன் அமருங்கள்!" என்று கூறி ஒரு பாறையில் அமர்ந்தார். நாங்களும் கிடைத்த பாறைகளில் அமர்ந்து கேட்க ஆரம்பித்தோம்.
"அங்கு அந்த பைன் மரங்களை பார்த்தீர்கள் அல்லவா... அந்த இடத்திற்கும் இந்த இடத்திற்கும் ஏதாவது வித்தியாசத்தை உணருக்கின்றீர்களா?" என்றார்.
"ஆம். நிறைய வேறுபாடுகள் உள்ளன" என்றோம்.
"அந்த வேறுபாடுகள் என்ன என்னவென்று சொல்லுங்கள். நான் உங்கள் கேள்விக்கு பதில் சொல்லுகின்றேன்." என்றார்.
"ம்ம்ம்... இங்கே நிறைய மரங்கள் இருக்கின்றன. பெரிய மரங்கள், சின்ன செடிகள் ஆகியவையெல்லாம் ஒன்றாய் இருக்கின்றன. அங்கே அந்த பைன் மரங்கள் மட்டும் தனியாக இருந்தன." என்றான் ஒருவன்.
புன்னகைத்தார் பேராசிரியர். "சரியாக கவனித்து இருக்கின்றாயே. வாழ்த்துகள். ஆம்! இங்கே மரங்கள் ஒன்றாக இருக்கின்றன. ஒற்றுமையாய் இருக்கின்றன. அங்கே உள்ளது போல் ஒவ்வொரு மரமும் தனித் தனியாக இல்லை. அது தான் இந்த இடம் செழித்து இருப்பதற்கு காரணம்." என்றார்
"புரியவில்லையே" என்றேன்.
"இந்த மரங்கள் இங்கே ஒன்றை ஒன்று கவனித்து கொள்கின்றன. இந்த சிறிய செடிகள் அளவிற்கு அதிகமாய் வெயில் பட்டால் வளராது போய் விடும். எனவே இந்த பெரிய மரங்கள் அந்த செடிகளை வெயில் படாதவாறு காத்து தங்கள் பாதுகாப்பில் வளர செய்கின்றன. அதே போல் இந்த செடிகளும் மண்அரிப்பை தடுத்து மழைக்காலத்தில் நீரை சேமித்து, நிலத்தடி நீரை அதிகரிப்பதின் மூலம் பெரிய மரங்கள் செழித்து வளர உதவுகின்றன. இவ்வாறு ஒன்றுக்கொன்று உதவிக் கொள்வதின் மூலம் இந்த இடத்தை செழிப்பாக வைத்துக் கொள்கின்றன. இங்கே உதிர்ந்து விழும் இலை கூட உரம் ஆகுமே தவிர குப்பை ஆகாது. ஆனால் அந்த பைன் காட்டிலோ மரங்களுக்குள் இந்த ஒற்றுமை கிடையாது. எனவே அங்கே இந்த சோலைகளில் இருக்கும் உயிர் கிடையாது. சோலை இயற்கை.... அந்த பைன் காடுகள் செயற்கை!!!" என்று கூறி முடித்தார்.
"என்ன அந்த பைன் காடுகள் செயற்கையா?" என்றேன் ஆச்சரியத்துடன்.
"ஆம். அவை செயற்கை தான். நீங்கள் கொஞ்சம் எண்ணிப் பாருங்கள். சில அடிகளில் தண்ணீர் பாய்ந்து கொண்டு இருக்கின்றது. ஆனால் அந்த பைன் காடுகளில் நீர் இருந்த அறிகுறியையே காணோமே. இது இயற்கையா..... இல்லை.... மனிதன் பணம் வேண்டும் என்பதற்காக சோலைகளை அழித்து இந்த பைன் காடுகளை உருவாக்கி விட்டு சென்று விட்டான். சோலைகள் சேர்ந்து இருப்பது இந்த மண்ணிற்காக... இந்த பைன் மரங்கள் தனித்து நிற்பது பொன்னிற்காக. இது அவற்றின் பிழை அல்ல. மனிதனின் பேராசை. பணத்திற்கு ஆசைப்பட்டு இந்த மலைகளில் இருக்கும் சில முக்கியமான நீர் ஆதாரங்களை அவன் அழித்து விட்டான்" என்றார்.
"அந்த அழிந்து போன சோலைகளை நம்மால் திரும்பவும் கொண்டு வர முடியுமா?" என்றான் ஒருவன்
"ஏன் முடியாது. சோலைகள் நாம் மண்ணின் வனங்கள். அந்த பைன் மரக்காடுகளை அழித்து விட்டோம் என்றால்மீண்டும் சோலைகள் செழித்து வளரும். இது சோலைகளின் பூமி. ஆனால் அந்த பணி எளிதல்ல. அரசாங்கம் முயற்சியெடுக்க வேண்டும். இல்லை என்றால் இன்றைய சோலைகள் நாளைய பைன் மரக்காடுகளாவோ அல்லது தேயிலை தோட்டங்களாவோ மாறும் நாள் வெகு தொலைவில் இல்லை.சரி நான் இந்த சோலைகள் நம் மண்ணின் வனங்கள் என்று சொன்னேனே... அதற்கு ஒரு சான்று சொல்லமுடியுமா" என்றார்.
வழக்கம் போல் எங்கள் குழு மௌனம் சாதித்தது.
"என்ன தெரியவில்லையா?"
மீண்டும் மௌனம்.
"சரி. நானே சொல்கிறேன்." என்று கூறிவிட்டு அருகில் இருந்த ஒருவனை நோக்கி திரும்பினார்.
"உங்கள் வீட்டில் எத்தனை பேர்" என்றார்.
"மூன்று! நான், அப்பா அப்புறம் அம்மா" என்றான்.
"சரி. உங்களில் யாருடைய வீட்டில் கூட்டு குடும்பமாக வாழ்ந்து வருகின்றீர்கள்" என்றார் மீண்டும் கூட்டத்தை நோக்கி.
நான் எதிர்பார்த்தததை விட அதிக கைகள் மேலே எழூம்பின.
புன்னகைத்தார்.
"நன்று. எப்படி இந்த சோலைகள் நம்முடைய நாட்டினை கட்டி எழுப்பி இருக்கின்றனவோ அது போலவே தான் நம்முடைய கலாச்சாரம் கூட்டுக் குடும்பங்கள் வாயிலாகவே கட்டப்பட்டு உள்ளது." என்றார்.
அவர் எதை நோக்கி செல்கின்றார் என்பது எனக்கு புரிய ஆரம்பித்தது.
" இந்த சோலைகளில் மரங்கள் எவ்வாறு கூடி ஒற்றுமையாய் ஒன்றுக்கொன்று பயன் உள்ளதாய் உதவிக்கொண்டு இருக்கின்றனவோ அதே போல் தான் நம் நாட்டின் குடும்பங்களும் கூட்டு குடும்பமாய் ஒருத்தருக்கொருத்தர் உதவிக்கொண்டு வாழ்ந்து வந்தன. இந்த சோலைகளும் நம் குடும்பங்களும் ஒன்று தான். இரண்டும் நம் மண்ணின் அடையாளங்கள். வாழ்க்கை நெறியை உணர்த்துபவை. வாழ்வில் ஒற்றுமை இருக்கும் வரை வாழ்க்கை என்னும் நீரோடை மகிழ்ச்சியாய் அதன் வழியே ஓடிக்கொண்டே இருக்கும். ஆனால் இன்று இந்த சோலைகளை போலவே ஒற்றுமையான குடும்பங்களும் அழிந்து
கொண்டு இருக்கின்றன. சோலைகள் அழிந்து சில பைன் மரங்கள் பணம்  என்னும் காரணம் ஒன்றிர்க்காக புதிதாய் துளிர் விட்டு கொண்டு  இருக்கின்றன." என்றார்.
திடீர் என்று தொலைவில் இடி இடிக்கும் சத்தம் கேட்கவே நிமிர்ந்து வானத்தை உற்றுப் பார்த்து விட்டு மீண்டும் எங்களை நோக்கி திரும்பினார்.
 "அந்த தனி பைன் மரங்களால் இந்த மண்ணிற்கு எந்த பயனும் இல்லை. தீமை மட்டுமே உண்டு. இந்த பைன் மரங்களில் இருந்து மண்ணை காப்பாற்ற அரசாங்கத்தால் முடியாது. உங்களால் மட்டுமே முடியும். எப்படி இந்த சோலைகளை புதுப்பிக்க முடியுமோ அதே போல் குடும்பங்களையும் வளம் படுத்த முடியும். இரண்டுமே இயற்கை. நம் மண்ணின் சொத்துக்கள். நம் அடையாளங்கள். முயலுங்கள். இந்த மண் உங்களை நம்பியே. கிளம்புவோம் இன்னும் 5 நிமிடங்களில் மழை இங்கு வந்து விடும். அதற்குள் நாம் ஒரு  அருவியை கடக்க வேண்டும்" என்று கூறிக் கிளம்பினார்.
நாங்களும் புதிய சிந்தனையோடு நடக்க ஆரம்பித்தோம். 
பயணிப்போம்...

செவ்வாய், 29 ஜூன், 2010

ஊழ் செதுக்கும் உளி



வந்தாய்... சிறு சாரல் ஊற்றாய்
கரைந்தாய்... ஆடி மாதக் காற்றாய்
பெண்ணே நீ கானல் நீர் தானோ?...

என் நெஞ்சம்... அது துடிக்கவில்லை
மஞ்சம்... அதில் தூக்கமில்லை
பெண்ணே உன் காதல் சொல்வாயோ?...

செல்லும் பாதைகள் ... தெரியவில்லை
புது வலிகள் ... அவை புரியவில்லை
நான் இன்று நானாய் இங்கில்லை...
இதில் சத்தியமாய் எந்தன் பங்கில்லை!!!!





அடி ஊழ் சூழும் முன்னே
உன் விழி சூழ்ந்தது என்ன???...
புவியீர்ப்பு விசையாய்
என்னை உன் விழி ஈர்த்தது என்ன???...
நீ கடந்த நொடியில்
என் யுகங்கள் கண்டேனே....
உன் விழி...
 ஊழ் செதுக்கும் உளி என்பேனே!!!

புதன், 16 ஜூன், 2010

பட்டாம்பூச்சியே


பட்டாம்பூச்சியே,
பூக்கள் மத்தியில் வழி இருக்க
கூட்டில் ஏன் வலியோடு காத்துஇருக்க...
உன் கூட்டைத் தாண்டி வர வேண்டும்
அட வானம் பார்க்க எழ வேண்டும்
அடி சற்று சிரி
உன் சிறகை விரி...
உன் திறமை அறி
அடி துயரம் எறி...
தொலை வானம் மிகவும் தொலைவு இல்லை
நீ இன்றி எந்த மலரும் முழுமையில்லை!!!

ஞாயிறு, 13 ஜூன், 2010

புறப்படு கலைஞனே!!!

இதோ, காலத்தின் கட்டளையால் மேலும் சில பிரிவுகள். அப்பிரிவுகளை எண்ணியே இப்பதிவு.

காலம் உன்னை சில ஓவியங்கள் கொண்டு ஒரு ஓவியனாய் வரைந்து கொண்டு இருக்கின்றது. காலத்தின் ஓவியம் நீ... உந்தன் ஓவியங்கள் நீ கடந்த காலங்கள்...

உன்னுடைய பல ஓவியங்கள் கொண்டே நீ முழுமை பெறுகின்றாய். உன்னுடைய ஓவியங்கள் பிரிவில் முழுமை பெறுகின்றன. எனவே பிரிவை எண்ணி நீ வருந்தாதே... அவை உன்னை முழுமையாக்கும் என்பதை மறவாதே...சென்று வாருங்கள் தோழர்களே ... மீண்டும் சந்திப்போம்...






எங்கள் வாழ்வில் நீ பதித்து விட்டுச் சென்ற
வழித்தடங்கள்
சந்தேகம் இன்றி எங்களின் அக்காலத்து
உயிர்வளித் தடயங்கள்...

கேளும் தோழா,
பிரிவு ஒரு சித்திரம்...
ஓவியனே ஓவியமாகிப் போகும் ஒரு விசித்தரம்!!!

உயிர் கொண்டு வரைந்தாய்-
உயிர் தந்தாய்
காலம் பல கடந்து
கோலம் சில புனைந்தாய்...
நீ உழைத்தாய்
ஓவியம் தழைத்தது!!!

அந்தோ!!!
முற்றுப் பெறா ஓவியம் என்றும் ஓவியம் ஆவதில்லை...
இதோ,
ஓர் புள்ளியிலே தோன்றியது
ஓர் புள்ளியிலே முடிகின்றது
இடையில் முடியாது நீ நிற்கின்றாய் - ஓவியனாய்
நாங்களும் நிற்கின்றோம் - உன் ஓவியமாய்!!!

முகில் நீங்கா துளிகள்
பயனில்லை இம்மண்ணினிலே...
அதை போல்
ஓர் ஓவியத்திலே முடிவடையும் ஓவியன்
ஒளிர்வதில்லை பாரினிலே!!!

புறப்படு கலைஞனே,
இன்னும் பல ஓவியங்கள் காத்து இருக்கின்றன
உன் கரம் பட்டு தழைக்க... புன்னகைக்க...!!!

ஞாயிறு, 23 மே, 2010

அலையாய் பயணங்கள்- மௌனத்தை நாடி

பிறவிக் கரை-
நீயோ ஆழ்கடல் மௌனம்!
மௌனத்தில் பிறப்பெடுத்து
ஆர்ப்பரித்துக் கரைச் சேர்ந்து
மீண்டும் மௌனத்திற்கே திரும்பும் அலையாய் நான்!!!
ஆர்ப்பரிப்பாய் மனம்...
மௌனமாய் நீ...
ஆர்ப்பரிக்கும் வரை மௌனம் புலப்படுவதில்லை -
மௌனமோ என்றும் ஆர்ப்பரிப்பதில்லை!!!




எம்பிரானே!
மௌனத்தின் சிறப்பு மௌனத்தால் அறியப்படுவதில்லை
இதோ
இவ்ஆர்பரிப்புகளுக்கு நடுவேயே அதன்  அர்த்தம் புரியும்
என்றோ
காலத்தால் அலையாய் இப்பயணம்?

உன் எண்ணப்படியே பயணிக்கின்றோம்
வழிகள் நீ தந்தவை...
பயணமும் நீ வகுத்தவை...
பயணிப்பது மட்டுமே நாங்கள் செய்பவை!!!

வழித்துணையாய் நீ இருக்கையில்
கவலைகள் எதற்கு இவ்வாழ்க்கையில்!!!   

சனி, 22 மே, 2010

ரெய்கி என்றொரு ஆச்சர்யம்!!!-1

இந்த உலகத்தில் அதிசயங்கள் பல நிகழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன, ஒவ்வொருவர் வாழ்விலும். அதிசயங்களில் நம்புகிறவர்கள் அவற்றை அதிசயம் என அறிந்து கொள்கின்றனர். நம்பாதவர்களோ அவற்றை எதேச்சையாக நடந்தது என்று எண்ணிக்கொள்கின்றார்கள். நம்புகிறோமோ இல்லையோ நம் வாழ்வில் ஒரு சில விஷயங்களுக்கு நம்மால் விளக்கம் கூற முடியாது. அவ்வாறு என் வாழ்வில் நடந்த ஒரு சில விஷயங்களை பற்றியே இந்த பதிவு...

அது ஒரு வெள்ளிக்கிழமை.
நீண்ட நாட்களுக்கு பிறகு என்னுடைய ஊருக்கு விடுமுறைக்கு சென்று இருந்தேன். காதலியுடன் செலவழிக்கும் நேரம் எவ்வாறு விரைவில் கரைந்து விடுமோ அவ்வாறு என்னுடைய ஒரு வார விடுமுறை விரைவாக கரைந்து இறுதி இரு நாட்களாக சுருங்கி நின்றிருந்தது. வழக்கமாக இருக்கும் வீட்டை விட்டு போகும் சோகத்தோடு இப்பொழுது ஒரு புது சோகம் சேர்ந்து இருந்தது. இன்னும் சரி ஆகவில்லை என்னுடைய கால் வலி.

ஒரு நாள் அலுவலகத்திற்கு நடந்து செல்லும் போது திடீர் என்று வலிக்க ஆரம்பித்த இடது முட்டியை முதலில் பெரிதாய் எண்ணவில்லை. ஆனால் இரண்டு வாரங்கள் ஆகியும் வலி போகாது இருந்த போது அதை அலட்சியப்படுத்த முடியவில்லை. போதாக்குறைக்கு 'பார்த்துடா! எழும்புறிக்கி(Bone Cancer) நோயாய் இருக்க போகுது' என்ற உயிர் நண்பனின் பயமுறுத்தல் வேறு. ஊருக்கு போய் மருத்துவரிடம் காட்டிக் கொள்ளலாம் என்று இருந்த என்னுடைய லட்சியத்தை கொஞ்சம் தளர்த்தி விட்டு அருகில் இருந்த ஒரு மருத்துவரிடம் சென்றேன்.

"எத்தனை நாட்களாய் கால் வலிக்கின்றது" என்றார்.
"இரண்டு வாரங்களாய்!" என்றேன்.
சரி என்று சொல்லி அவர் சில சோதனைகள் செய்தார். அப்புறம்,
"அநேகமாக பயப்பட ஒண்ணும் இல்லை, ஆனால் சில சமயம் இது வேற நோயாக இருக்கலாம். முதலில் இந்த மருந்துகளை அருந்திப்பாருங்கள். அதற்கு அப்புறமும் வலி இருந்தது என்றால் இன்னும் சில சோதனைகள் செய்ய வேண்டி இருக்கும்" என்று புதிதாய் ஒரு வியாதியின் பெயரையும் சேர்த்து சில மாத்திரைகளை கொடுத்தார்.
சரி என்று சொல்லி அந்த மாத்திரைகளை வாங்கிக் கொண்டு கிளம்பினேன்.
ஆனால் அந்த மாத்திரைகளை சாப்பிட்டும் வலி தீர்ந்தப்பாடில்லை.
சரி, அடுத்த வாரம் தான் நம் ஊருக்கு போகிறோமே அங்கே போய் நம் மருத்துவரிடமே காட்டிக் கொள்ளலாம் என்று முடிவு செய்து கொண்டேன்.

அதே போல் ஊருக்கு சென்றதும் மருத்துவரை அணுகினேன். அவர் என்னை பரிசோதித்துவிட்டு பயப்பட ஒன்றும் இல்லை காலில் எழும்புகளுக்கிடையில் தசை மாட்டிக் கொண்டு உள்ளது. கொஞ்சம் உடற்பயிற்சி செய்யுங்கள் அப்படியே இந்த மாத்திரைகளையும் சாப்பிடுங்கள் என்று சில மாத்திரைகளையும் கொடுத்தார்.
பயம் சற்று தணிந்தது. அனால் வலி இன்னும் தொடர்ந்ததால் முற்றிலுமாக பயம் நீங்கவில்லை. ஊரை விட்டு கிளம்பும் நாளும் அருகில் வந்து கொண்டே இருந்தது. அப்பொழுது தான் அந்த நிகழ்ச்சி நடந்தது.
அது ஒரு வெள்ளிகிழமை.
ஊருக்கு கிளம்புறதுக்கு முன்னாடி அந்த ரெய்கி  தியான மையத்திற்கு சென்று வந்திருப்பா என்ற அம்மாவின் வார்த்தையை கேட்டு அந்த தியான மையத்திற்கு கிளம்பினேன்.இதற்கு முன்னாடியும் ரெய்கி தியான நிலையத்திற்கு சென்று இருக்கின்றேன். மனஅமைதியும்  சற்று நிம்மதியையும் அந்த தியான முறை தருவதை உணர்ந்து இருக்கின்றேன். அதை எதிர்பார்த்தே இம்முறையும் சென்றேன்.
"அம்மா நல்லா இருக்காங்களாப்பா"  என்று அன்புடன் விசாரித்தார் அந்த தியான மையத்தில் சிகிச்சை அளிக்கும் அக்கா.
"நல்லா இருக்கங்கக்கா" என்றேன்.
"சரி ரெய்கி வாங்கிறதுக்கா வந்துருக்க" என்றார்.
"ஆமாம் அக்கா" என்றேன்.
"சரி போய் அந்த மேஜையில் படுத்துக்கோ" என்றார்.
நானும் வழக்கம் போல் அந்த மேஜையில் படுத்துக் கொண்டு தியானம் செய்வதற்கு ஏற்ப கண்களை மூடி கொண்டு கைகளை கால்களின் அருகில் வைத்துக்கொண்டேன்.
ரெய்கி சகிச்சை முறை நம் உடலை சுற்றி இருக்கும் சக்தி வளையத்தை பிரபஞ்ச சக்தியை கொண்டு வலிமை படுத்தும் ஒரு முறை ஆகும் (இந்த முறையை பற்றி நாம் மற்றொரு பதிவில் பார்ப்போம்).

இரு வினாடிகள் அவர்கள் என் உடலை சுற்றி இருக்கும் சக்தி அலைகளை சரி செய்வதை உணர்தேன். அந்த உணர்ச்சியை என்னால் சரியாய் விளக்க முடியவில்லை. மனம் புத்துணர்ச்சி பெறுவதை உணர்தேன். சிகிச்சை இரண்டு நிமிடங்கள் கழித்து முடிந்த போது,
"அக்கா! ரெய்கியால் நோய்கள் தீருமாமே" என்றேன்.
சிரித்தார்.
"ஆம்!" 
 "அப்படினா என் கால்ல..." என்று தொடங்கினேன்.
"உன் இடது கால் முட்டி வலிச்சிகிட்டு இருந்துச்சி தான. அது ஒன்னும் இல்லை, ரெண்டு எலும்புகளுக்கு நடுவுல தசை மாட்டிகிட்டு இருந்துச்சி. சரி பண்ணிட்டேன். இனிமே வலிக்காது" என்றார்.
அதிர்ந்து போனேன்.
என் கால் வலி தெரிந்தால் அம்மா வருந்துவார்களே என்று அவர்களிடம் கூட என் கால் வலியைப் பற்றி நான் சொல்லி இருக்கவில்லை. என்னையும் அந்த மருத்துவரையும் தவிர என் ஊரில் அதைப் பற்றி யாருக்கும் தெரியாது. இருந்தும் இவர் சரியாக கூறுகிறாரே. அதுவும் என் காலை தொட்டு கூட பார்க்காமல்!!!
"அக்கா!!! என்ன சொல்றீங்க...!" என்றேன்.
"ஆமாம்பா! சரி பண்ணிட்டேன்.. இனிமே வலிக்காது" என்றார்
காலை வேகமாய் நீட்டிப் பார்த்தேன் 3 நிமிடங்களுக்கு முன்னால் இருந்த வலி இப்பொழுது மாயமாய் மறைந்து இருந்தது.
"எப்படி...!!!" என்றேன்.
"உலகம் எங்கும் கடவுளின் சக்தி நிறைந்து இருக்கின்றது. நமக்குள்ளேயும் தான். அந்த சக்தி நம் உடலில் குறையும் போது பிரச்சனைகள் வருகின்றது. ரெய்கியின் மூலம் பிரபஞ்ச சக்தியை நம் உடலுக்குள் செலுத்தி நம் உடலில் குறைந்த சக்தியை சரி செய்து நம் உடலை சீராக வைத்துக்கொள்கிறோம்" என்றார்.
"ஆனால் எப்படி என் காலில் வலி இருந்தது என்பதை நீங்கள் அறிந்தீர்கள்" என்றேன்.
"அந்த சக்தி உன் உடலின் வழியாக பயணிக்கும் பொழுது அதுவே பிரச்சனைகளை அறிந்து கொண்டு குணப்படுத்தும். அந்த சக்தியை அளிப்பவர்களுக்கு அது என்ன பிரச்னை என்பதை அது காட்டும்." என்றார்.
"எப்படி எந்த சக்தியை செலுத்துகிறீர்கள்?" என்றேன்.
"அன்பினால்!!!" என்றார்.
"அப்படினா யார் வேணும்னாலும் அந்த சக்தியை பயன்படுத்த முடியுமா?" தொடர்ந்தேன்.
"ஆம்! அதுக்கு கொஞ்சம் நம்மளை தயார் படுத்திக்கொள்ள வேண்டும். சில பயிற்சிகள் முறையாக எடுக்க வேண்டும். ஆனால் மிக முக்கியமான விஷயம் அன்பு தான். அது இருந்தால் தான் அந்த பிரபஞ்ச சக்தி நமக்குள் முதலில் புகும். அப்புறம் தான் அதை நாம் செலுத்த முடியும். அதே போல் இந்த சிகிச்சை பெறுபவர் மனதிலும் அன்பு நிறைந்து இருந்தால் இன்னும் எளிதாக குணமாகும். அன்பு தான் முக்கியம்!" என்று முடித்தார்.
"ரெய்கியால் எல்லா நோய்களையும் குணப்படுத்த முடியுமா?" என்றேன்.
"எல்லா நோய்களையும் குணப்படுத்த உதவும். ஆனால் மருத்துவத்திற்கு மாற்றாய் இதை கருத கூடாது. மருத்துவத்திற்கு இது பெரிதும் உதவும்." என்றார்
"அப்படினா இதை தனியாக பயன்படுத்த முடியாதா?"
புன்னகைத்தார்.
"பிரபஞ்ச சக்தியின் ஆற்றல் மிகவும் வலிமையானது. ஆனால் அதை நாம் பெற்றுக்கொள்வதும் செலுத்துவதும் நம்முடைய மனத் தூய்மையை பொறுத்தே இருக்கின்றது. எனவே அனைவராலும் இதை சரியாக செலுத்த முடியுமா என்பது அவர் அவர் மனதை பொருத்து அமைகின்றது. அந்த நிலையில் இதை மருத்துவத்திற்கு மாற்றாய் கருதுவது சரி ஆகாது!! அந்த நிலையில் பொதுவாக, அவர் அவர் மனதையும் நம்பிக்கையும் பொருத்து ரெய்கியை மருத்துவதுடனோ அல்லது மருத்துவத்தை ரெய்கி உடனோ பயன் படுத்தலாம் என்று சொல்வதே சரி என்று நினைக்கிறேன்" என்றார்.

நானும் சரி என்று கூறிக் கிளம்பினேன்.
இன்று வரை அந்த கால் வலி மீண்டும் வரவில்லை.

ஞாயிறு, 16 மே, 2010

கற்பனை உலகில் ... நான்! -1

காமிக்ஸ்... இது கற்பனைகளின் சாம்ராஜ்யம்.
சித்திரங்களையும் கற்பனைகளையும் ஒருங்கிணைத்து கட்டப்பட்ட ஒரு மாய உலகம். நல்லவர்களுக்கு முடிவில் நல்லதே நடக்கும் ஒரு அதிசய உலகம். எனவே இதன் பால் நான் இயல்பாக ஈர்க்கப்பட்டதில் பெரிய ஆச்சர்யம் ஒன்றும் இல்லை.

இதோ நான் காமிக்ஸ் படிக்க தொடங்கி கிட்டத்தட்ட 18 வருடங்கள் ஓடி விட்டன. ஆனால் இன்றும் நான் முதன் முதலில் காமிக்ஸ் படிக்கும் போது வந்த அதே வியப்பும் பரவசமும், புதிதாய் ஒரு காமிக்ஸ் வாங்கி படிக்கும் போதும் தொடர்கின்றது. நான் மாறவில்லையா இல்லை அந்த காமிக்ஸ்கள் மாறவில்லையா...தெரியவில்லை! ஆனால் மாறாமல் இருப்பது நன்று தான் என்று தோணுகின்றது. இதோ இது வரை நான் கடந்து வந்த பாதையை திரும்பிப் பார்க்கும் போது என் வாழ்வில் ஒரு பாதியாய் அந்த புத்தகங்கள் வீற்று இருப்பதை காண்கின்றேன். அந்த புத்தகங்கள் இல்லை என்றால் என் வாழ்வில் ஒரு பாதி இல்லை என்ணுமாறு அவை இன்றியமையாது இருக்கின்றன. இந்த பதிவு அந்த புத்தகங்களை பற்றியே...

பொதுவாக காமிக்ஸ் என்றாலே அது சிறுவர்களுக்கு தான் என்ற ஒரு தவறான கருத்து நம் நாட்டில் இருந்து கொண்டு வருகின்றது. இது வருத்தம் அளிக்கும் ஒரு விஷயமாகும்.  இந்த புத்தகங்கள் சிறுவர்களுக்கு உரியவை தான்... அதில் சந்தேகமில்லை. ஆனால் வெறும் சிறுவர்களுக்கு மட்டுமே உரியவை அல்ல அவை.... பெரியவர்களுக்குள் இருக்கும் சிறுவர்களுக்கும் அவை உரியவை. உண்மையை சொல்லுங்கள்! உங்களுக்குள் ஒரு சிறுவன் இல்லையா?... மழை பெய்யும் தருணங்களில் நனையும் பொழுதோ, நண்பர்களுடன் மனம் விட்டு சிரிக்கும் பொழுதோ இல்லை பழைய நினைவுகளை நினைக்கும் பொழுதோ உங்களுள் உள்ள அந்த சிறுவனை நீங்கள் உணரவில்லை என்று சொல்லுங்கள்.... என்ன உணர்ந்து இருக்கின்றீர்கள் தானே... இந்த புத்தகங்கள் அவனுக்காக... அவன் சிறுவனாய் இருப்பதற்காக!!! 

படிக்கிறதுக்கு எவ்வளவோ விஷயம் இருக்கிறப்போ இது எதுக்கு நேரத்தை வீணடிக்க என்று நீங்கள் சொல்லாம். வாழ்வில் வெல்ல இவை தேவை இல்லை எனலாம். ஆம்! இவற்றை கொண்டு நாம் வாழ்வை வெல்லப் போவது இல்லை. ஆனால் வாழ்வை வாழ முடியும். மனம் நிறைய சோகம் நிறைந்து இருக்கும் போது நாளை நல்லதாய் விடியும் என்ற நம்பிக்கையும் ஒரு புன்னகையும் தான் வாழ்க்கை என்றால், அந்த புன்னகைகளை கொடுக்கும் வல்லமை இந்த புத்தகங்களுக்கு உண்டு.

நிச்சயமாய் இந்த புத்தகங்கள் இல்லாமல் வாழ்வை வாழ முடியும். ஆனால் இந்த புத்தகங்கள் இருந்தால் வாழ்வை இன்னும் சிறப்பாக வாழ முடியும். அவ்வளவே!!!

தமிழகத்தில் தென் பகுதியில் விருதுநகர் என்னும் ஊரில் இருந்த எனக்கு தென் அமெரிக்காவின் வனங்களையும், மாயன் இனத்தினரை பற்றியும்... வட அமெரிக்காவின் வரலாற்றையும் செவ்விந்தியர்களை பற்றியும்... அறிவியல், மதங்கள், உலக யுத்தங்கள், உலக கலாச்சாரம்  மற்றும் வரலாற்றை பற்றியும் எனக்கு அறிமுகம் செய்து வைத்த இந்த புத்தகங்களுக்கு நான் இறுதி வரை நன்றிக்கடன் பட்டவனாகவே இருப்பேன். இன்று இருக்கும் என்னை செதுக்கிய உளிகளுள் அவையும் முக்கியமானவை.

நான் கண்ட உலகை நீங்களும் காண வேண்டும் என்ற எனது ஆசையின் விளைவாகவே இந்த பதிவு...

கனவு காண்போம்... 

இரு தேசங்களின் கதை : ஆரியவர்த்தமும் பிற தேசங்களும்...!!!

தேசியம்...வந்தேறிகள்...குடியுரிமை என்று இன்று பல குரல்கள் எழும்பிக் கொண்டிருக்கின்றன. "யார் வந்தேறிகள்? யார் பூர்வகுடி மக்கள்? எவ...