மழைத் தூறி விட்டு நின்றிருந்தது.
ஒரு வருடம் வெளிநாட்டில் படித்து முடித்து வரும் என்னை காண ஆவலுடன் இரு கண்கள் பேருந்து நிறுத்தத்தில் காத்துக்கிடக்கும் என்று எண்ணியே வந்தவனுக்கு காலியாய் வரவேற்பு அளித்தது எங்கள் ஊர் பயணியர் நிழற்க்கூடம்.
அவள் வரவில்லை.
மழை வந்து இருந்தது.
ஏமாற்றம் தான். நிச்சயம் வருவாள் என எதிர் பார்த்து இருந்தேன்.
ஒரு வேளைச் செய்தி போய் சேர்ந்து இருக்காதோ?... இல்லையே அன்று ஒரு நாள் வெளிநாட்டில் எனக்கு உடம்பு சரியில்லை என்ற செய்தியை அறிந்து கொண்டு என் அன்னையின் கடிதத்தோடு வேறு யாரும் அறியாமல் சில வரிகளையும் ஒரு முத்தத்தையும் சேர்த்து அனுப்பியவளுக்கு நான் ஊருக்கு வருவதா தெரியாது போய் இருக்கும் என்று குழம்பியவாறு எனது பெட்டியை எடுத்துக்கொண்டு வயல்களின் வழியாக எனது ஊரை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.
ஒரு ஆண்டுக்கு மேலாக நகரத்தின் இயந்திர வாழ்க்கையை வாழ்ந்து விட்டு, திடீரென்று சிறு வயது முதல் என்னை கண்டு வளர்த்த சூழலின் நடுவே நிற்பதை உணர்ந்த போது புரியாது ஒரு புன்னகை அதுவாக அரும்பியது.
இங்கு நான் அந்நியன் அல்ல. இது என் ஊர்.
"யாரு ... நம்ம கனி மகனா?"  என்றார் வழியில் ஒரு பாட்டி.
"ஆமாம் பாட்டி. நல்லா இருக்கீங்களா?" என்றேன் ஒரு புன்னகையுடன். டில்லிக்கே ராஜா ஆனாலும் எங்க ஊர்ல எல்லாருக்கும் நான் எங்க அம்மாவோட பையன் தான். 
 "எனக்கென்னபா நல்லா இருக்கேன். நீ சீமையிலே இருக்கிறதாவுலே சொன்னாங்க ... எப்ப வந்த" என்றார் அவர்.
"இன்னிக்கு தான் பாட்டி. இப்ப தான் ஊருக்குள்ள வறேன்" என்றேன்.
"சரி சரி... விரைவா வீட்டுக்கு போயி சேரு... ரொம்ப நாள் கழிச்சி உன்ன பார்க்க போற சந்தோசத்திலே உங்க அம்மா ஊரையே ரெண்டு பண்ணிக்கிட்டு இருக்கா" என்று கூறி அவர் அவர் வழியில் நடந்து செல்ல ஆரம்பித்தார்.
நானும் புன்னகையோடு தொடர்ந்து பயணிக்க ஆரம்பித்தேன்.
சிறிது தூரத்தில் அய்யனாரின் கோவில் கண்ணுக்கு புலப்பட்டது.
அய்யனார் - எங்க ஊர் காவல் தெய்வம். அந்த கோவில், அதை சுற்றியுள்ள இடங்கள் அவற்றை பார்க்கும் போது என்னை அறியாது ஒரு ஞாபகம் என்னை உரசிக் கொண்டு போனது.நம்ம வாழ்க்கைலே ஏதோ ஒரு குறிப்பிட்ட சம்பவத்தை நினைக்கும் போது ஏன்னு தெரியாமலையே ஒரு புன்னகை வரும் தெரியுமா, நம்மள அறியாமலையே யாரைப் பார்த்தாலும் புன்னகைக்கத் தோணும். சினிமா வசனம் மாதிரி சொல்லணும்னா ஒரு பட்டாம்பூச்சி மனசுக்குள்ள பறக்கிற மாதிரி இருக்கும். நானும் அப்படி தான் உணர்ந்தேன்.
ஆம், இரண்டு வருடங்களுக்கு முன் இங்கு தான் நான் அவளை முதன் முதலில் சந்தித்தேன்.
அது ஒரு திருவிழாக் காலம்.
நான் தேவதைகளில் நம்பிக்கைக் கொள்ள ஆரம்பித்து இருக்காத ஒரு காலம்.
எப்பொழுதும் போல் தான் அன்றும் விடிந்திருந்தது.
"திருவிழா அன்னிக்கும் இன்னும் எழுந்திரிக்காம தூங்கிக்கிட்டு இருக்கான் பாரு... இவன... டேய் சக்தி.."
அடுப்பாங்கடையில் இருந்து வந்த அம்மாவின் சத்தம் நன்றாக தூங்கிக் கொண்டு இருந்த என்னை எழுப்பி விட்டது.
எழுந்து மணியைப் பார்த்தேன்.
'6:50' என காட்டியது அறைக் கடிகாரம்.
"காலங்காத்தாலையே ஏன்மா..." என்று சலித்துக் கொண்டே கோவிலுக்கு போக தயாராக கிளம்பினேன்.என்றும் நண்பர்களோடு ஊர் சுற்றித் திரிய சுதந்திரம் இருந்த எனக்கு, திருவிழாக்கள் அன்று மட்டும் ஒரு செல்லத்தடை, குடும்பத்தோடு கோவிலுக்கு சென்று விட்டு அப்புறம் எங்கு வேண்டுமானாலும் போய்கொள் என்பதே அது. அதற்கு ஏற்றார்ப் போல் நண்பர்களின் அழைப்பை எல்லாம் தவிர்த்து குடும்பத்தோடு கோவிலுக்கு செல்ல கிளம்பினேன்.
ஊர்த் திருவிழா என்பதால் ஊரெங்கும் அலங்காரங்கள் களை கட்டிக் கொண்டு இருந்தன. என்றும் அமைதியாக இருக்கும் எங்கள் ஊர் தெருக்கள் அன்று வழக்கத்திற்கு மாறாக ஒலிப்பெருக்கிகளின் சத்தத்தால் அதிர்ந்து கொண்டு இருந்தன. மக்களும் தங்கள் குடும்பத்தோடு மகிழ்ச்சியாய் ஊரெங்கும் தேனீக்கள் போல சுறுசுறுப்பாய் சுற்றிக் கொண்டு இருந்தனர்.
ஊரே களைக் கட்டி இருக்கின்றது என்றால் கோவிலை பற்றி கேட்கவா வேண்டும். சுற்றியும் சந்தை, பொங்கல் வைப்பவர்கள், மின்விளக்குகள் என்று அந்த இடமே அமர்க்களமாய் இருந்தது.
"என்ன கனி. இந்த வட்டம் நீ பொங்கல் வைக்கலையா?".பொங்கல் வைக்கும் கூட்டத்தில் இருந்து அம்மாவிற்கு விசாரிப்பு வந்தது.
"இல்ல மாரி. இந்த தடவை வைக்கலை. அடுத்த வருசம் தான் இனி பாக்கணும்" என்று கூறிவிட்டு கோவிலின் உள் அம்மா நுழைந்தார். பின் தொடர்ந்தே நாங்களும் நுழைந்தோம்.

"நல்லா சாமி கும்புடுங்க கண்ணுகளா... எல்லோரும் நல்லா இருக்கணும்னு வேண்டிக்கோங்க" என்றவாறே அம்மா சாமி கும்பிட ஆரம்பித்தார்.
தங்கச்சி குறும்பை ஆரம்பித்தாள்.
"ஆமாம் ஆமாம்... இந்த தடவையாவது என்னை எல்லா தேர்வுலையும் தேர்ச்சி பண்ணி விடு சாமினு வேண்டிக்கோ. அப்படியாவது ரெண்டு வருசமா எழுதிக்கிட்டு இருக்கிற அந்த ஒரு பாடத்துல தேர்ச்சி ஆகிறியானு பார்ப்போம்" என்றாள் நக்கலாய்.
தங்கைகளிடம் இந்த ஒரு பிரச்சனை தான். எப்படி படிக்கிறாளுகனு தெரியாது. ஆனா எப்படியோ நம்மள விட நல்லா படிச்சி வீட்டில நம்ம மதிப்பிற்கு வேட்டு வச்சிடுவாளுக.
"ஹ்ம்ம்ம்... நீ எல்லாம் படிச்சி என்னத்த கிழிக்க போறியோ... அங்க பாரு உன்ன விட மூணு வயசு சின்ன கழுத எப்படி படிக்குதுனு. நீயும் தான் இருக்கியே" னு வீட்டில அப்பாவிடம் அப்பாவியாய் நல்ல பேர் எடுத்துவிட்டு நம்ம சோத்துக்கு வேட்டு வைப்பதில் இவளுகளுக்கு ஒரு தனி பட்டமே தரலாம்.
அவளைத் திரும்பி முறைத்தேன்.
"என்ன விட நல்லா படிக்கிறேனு ஆணவத்துல பேசாத. எங்க சுத்தினாலும் வீட்டுக்கு தான வந்து சேருவ. அங்க வச்சிக்கிறேன் உனக்கு." என்றேன்.

நக்கலாய் முகத்தை சுழித்து விட்டு பத்திரமாய் அப்பாவின் அருகே போய் நின்று கொண்டாள்.
"பயந்தான்கோளி.." என்று முணுமுணுத்துக்கொண்டே நானும் சாமி கும்பிடலாம் என்று திரும்பினேன்.
அங்கே அவள் நின்று கொண்டு இருந்தாள்.
இதுவரை அவளை என் ஊரில் பார்த்தது இல்லை. நிச்சயம் புதியவள் தான். இருக்கட்டும். அதில் எனக்கு சந்தேகம் இல்லை. ஆனால் இவ்வளவு அழகாகவும் யாராவது இருப்பார்களா?.
பார்த்த உடன் வரும் காதலில் அன்று வரை எனக்கு நம்பிக்கை இருந்தது இல்லை. ஏன்! தேவதைகளின் மீதும் தான்.
ஆனால், இவ்வளவு அருகில் ஒருத்தி நின்று கொண்டு இருக்கையில் நம்பாமல் இருக்க முடியவில்லை. எங்கோ ஒரு பட்டாம்பூச்சி சிறகை ஆட்ட எங்கோ ஒரு இடத்தில் பூகம்பம் நேருமாம். இங்கோ, மெதுவாய் அவள் இமைகள் துடித்துக் கொண்டு இருந்தன... என் உலகமோ நொறுங்கிக் கொண்டு இருந்தது.
அவளோ அவளின் இஷ்ட தெய்வத்தை வணங்கிக் கொண்டு இருந்தாள். நானோ இறைவன் புரிந்து கொள்வான் என்று என் இஷ்ட தேவதையை தரிசித்துக் கொண்டு இருந்தேன். இறைவனோ எங்கள் இருவரையும் கண்டு புன்னகைத்து கொண்டு இருந்தான்.

"சக்தி! சாமி கும்பிட்டது போதும். வா போகலாம்" என்று தொலைவில் எங்கோ தங்கையின் குரல் கேட்க திடுக்கிட்டு சுய நினைவிற்கு வந்தேன். விடுக்கென்று கோவிலில் இருந்த திருநீரை எடுத்து பூசி விட்டு நானும் கிளம்ப ஆரம்பித்தேன். அதே நேரம் அவளின் குடும்பமும் கிளம்புவதற்கு தயார் ஆகி கொண்டு இருந்தனர்.
ஹ்ம்ம்ம்... இனி மேல் இவள பத்தி விவரத்தை எப்படி சேகரிக்கிறதுனு யோசிச்சிக்கிட்டே கோவிலுக்கு வெளியே வரும் போது அவளின் தந்தை எங்களை கூர்ந்து கவனிப்பதை கவனித்தேன்.
இது என்னடா திடீர்னு நம்மள பார்க்கிறார்... என்ன விஷயம்னு நான் யோசிக்கிறதுக்கு முன்னாடியே புன்னகைத்தவாறே எங்களை நோக்கி வர தொடங்கினார்.
"டேய் சண்முகம்...!!!"
என் தந்தையின் பெயரைச் சொல்லி அழைத்து இருந்தார்.
என்னுடைய தந்தை நின்று ஓசை வந்த திசை நோக்கி திரும்பி பார்த்தார்.
சிறிது நேரம் அதே யோசனை. பின் அதே புன்னகை.
"முருகா... நீ எங்கடா இங்க.. பார்த்து எத்தன வருசம் ஆச்சி..உன் கல்யாணத்துல பார்த்தது" என்று கூறியவாறே அவரை நோக்கி நடக்க ஆரம்பித்தார்.
பழைய நண்பர்களாம்.
பிரச்னை இல்லை. என் வேலை கொஞ்சம் எளிதானது. உள்ளுக்குள் புன்னகைத்து கொண்டேன்.

"என்னை இந்த மாசம் தான்டா உன் ஊருக்கு மாற்றம் செஞ்சி இருக்கானுங்க.. நானே உன் வீட்டுக்கு வரணும்னு இருந்தேன்" என்று அவளின் தந்தை விளக்கம் சொல்லிக் கொண்டு இருக்கும்போதே இரண்டு குடும்பத்தினரும் அவர்களின் அருகிலே வந்து விட்டு இருந்தோம்.
என் குடும்பத்தில் உள்ள அனைவரையும் பார்த்து புன்னகைத்தவாறு அவள்.
வார்த்தைகளற்று நான். என்ன பேசலாம் என்று யோசித்து கொண்டு இருக்கும் போதே,
"இது யாரு உங்க பொண்ணா... என்ன பண்றா?" என்றார் என் அன்னை.
முற்றிலும் அன்னியமான சூழலில் உரையாடல்களை ஆரம்பித்து வைப்பதற்கு அன்னைகளை விட சிறந்தவர்கள் வேறு யாரும் இருக்க முடியாது. சந்தித்த 10 நிமிடங்களில் நெருங்கிய தோழிகளைப் போல உரையாட ஆரம்பித்து இருந்தனர் எங்கள் இருவர் அம்மாக்களும்.
"ஆமா.. இப்ப தான் +2 முடிச்சிட்டு முடிவுக்காக காத்துக்கிட்டு இருக்கா" என்றார் அவளின் அன்னை.
"உன் பேரு என்னமா?" என்றார் என் அன்னை அவளை நோக்கி.
புன்னகைத்தாள்.
"மலர்!" என்றாள்.
கோவிலைச் சுற்றி இருந்த மலர்கள் எல்லாம் மகிழ்ச்சியுடன் பெருமூச்சி விட்டன. 

"சரி உங்க பசங்களை பத்தி ஒண்ணுமே சொல்லலையே" என்றார் அவளின் அன்னை.
"பெரியவன் பேரு சக்தி... ரெண்டாம் ஆண்டு விவசாயம் படிச்சி முடிக்க போறான்.. சின்னவ ... பிரியா... இப்ப தான் 10ம் வகுப்பு முடிச்சி இருக்கா... இவளும் முடிவுக்காக தான் காத்துக்கிட்டு இருக்கா..." என்று முடித்தார் என் அன்னை.
"விவசாயமா?..." என்றாள் அவள் ஆச்சரியமாய்.
"ஆமாம் மா... ஏன் ஆச்சரியத்தோடு அப்படி கேட்குற?" 

"இல்லை ... இப்ப எல்லாம் எல்லாரும் பொறியியல் இல்லை மருத்துவம்னு தான் எடுத்துப் படிக்கிறாங்க... விவசாயம் என்கிறது கொஞ்சம் வித்தியாசமா இருந்திச்சி அதான்" என்றாள்.
"இவங்க அப்பாவும் அத தான் சொன்னாப்பில.. ஆனா இவன் தான் கேட்க மாட்டேன்னு சொல்லிட்டான்... இத்தனைக்கும் மதிப்பெண் எல்லாம் நெறைய தான் வச்சி இருந்தான்... ஆனா எனக்கு வயல்ல வேலை செய்றது தான் பிடிச்சி இருக்குனு சொல்லிட்டான்" என்றார்.
"சரிக்கா..." என்று கூறி மீண்டும் புன்னகையைச் சூடிக் கொண்டாள்.
விவசாயமானு கொஞ்சம் அதிர்ச்சியாக அவள் கேட்ட போது தப்பான முடிவு எடுத்து விட்டோமா என்று என் மனசு பதறியதை அவள் அறிந்து இருக்க வாய்ப்பில்லை தான். ஆமாம் இந்த காலத்தில் நான் படிக்கும் படிப்பிற்கு மதிப்பில்லை தான். ஆனால் என் கனவுகள் வேறு. ஒரு வேளை அவள் கனவுகள் வேறாக இருக்குமோ?... எனக்கு ஏற்றவளாக இவள் இருக்க மாட்டாளோ? என்ற எண்ணங்கள் என்னுள் மிக வேகமாக கிளம்ப ஆரம்பித்தன.
"சரி நீ என்னமா படிக்கலாம்னு இருக்க" தொடங்கினார் என் அன்னை.
"ஹ்ம்... இவளும் பொறியியல் இது எல்லாம் வேண்டாம்ணு சொல்லிட்டா... ஏதோ ஒரு படிப்பு சொன்னாளே... அது என்னடி"
"ஹோம் சைன்ஸ் மா" என்றாள்.
"ஆமாம்... அந்த படிப்பு தான் படிக்க போறாளாம்" என்று முடித்தார் அவளின் அன்னை.

தென்றல் கொஞ்சம் என்னை தீண்டி விட்டு போனது.
பெரியவர்கள் அனைவரும் ஒன்று கூடி பழங்கதைகள் பேசி கொள்ள ஆரம்பித்தனர்.
நானோ வார்த்தைகள் எல்லாம் தொலைத்து விட்டு புதுக்கதைகள் பேசுவதற்காக மொழிகளைத் தேடிக் கொண்டு இருந்தேன்.
அவளோ மௌனமாய் விழிகளில் புதுக்கவிதைகள் புனைந்துக் கொண்டு இருந்தாள்.
"நீ சரி இல்லையே" என் காது அருகே ஒரு குரல் எனக்கு மட்டும் கேட்கும் மாதிரி ஒலித்தது.
திரும்பினேன். என் தங்கை ஒரு புருவத்தை உயர்த்தியவாறு என்னைப் பார்த்துக் கொண்டு நின்று இருந்தாள்.
"என்ன...!!!"
"நானும் பார்த்துக்கிட்டே இருக்கேன்... அந்த பொண்ணயே பார்த்துக்கிட்டு இருக்கியே... அப்பாகிட்ட சொல்லட்டுமா" என்றாள் புன்னகைத்துக் கொண்டே.
அவர் அவர் அவரவர் வேலையைப் பார்த்துக் கொண்டு இருக்கும் போது, என்னை பார்க்கிறதையே வேலையா வச்சிக்கிட்டு அலையுறா என்று முணுமுணுத்துக்கொண்டே,
"என்ன வேண்டும்" என்றேன்.
"சந்தையில ஏதாவது வாங்கி கொடு" என்றாள்.
சலித்துக்கொண்டே "சரி வா.." என்று சொல்லி கிளம்ப தயாரானேன்.
"அம்மா... நாங்க சந்தைக்கு போய்ட்டு வந்திருறோம்" என்று எங்கள் அம்மாவிடம் சொல்லிவிட்டு சந்தோசத்துடன் கிளம்ப ஆரம்பித்தாள் பிரியா.
"இருடி.. இந்த அக்காவையும் கூட கூட்டிட்டு போ... நம்ம ஊர் சந்தைய இவங்க பார்த்து இருக்க மாட்டாங்க... என்னமா போயிட்டு வறியா?" என்றார் என் அம்மா.
அவள் திரும்பி அவளின் அம்மாவைப் பார்த்தாள். அவர் சம்மதம் தெரிவிக்கவே
"சரிக்கா" என்று கூறி அவளும் சந்தைக்கு வர கிளம்பினாள்.
என் மூளையில் மின்னல் வெட்டியது.
என்ன இன்னிக்கு எல்லாமே நல்லாதவே நடக்குதே என்று சந்தோசப்பட்டுக் கொண்டு இருக்கும் போதே ஒரு சின்னக்கல் பறந்து வந்து தலையில் அடித்தது.
நண்பர்கள்... 

சரியா எப்ப எவன் வரக் கூடாதுனு நினைப்போமோ அப்ப சரியா வந்து நிப்பானுங்க. அந்தக் கல்லைப் பொருட்படுத்தாது கிளம்ப ஆரம்பித்த போது சரியாக அடுத்த கல் அம்மாவின் மேல் வந்து விழுந்தது.
"என்னடா சக்தி... உன் கூட்டம் வந்திரிச்சி போல இருக்கு... நீ வேணும்னா கெளம்பு... ஏற்கனவே உன்ன ரொம்ப நேரம் இங்க இருக்க வச்சாச்சி.. நீ கெளம்பு..."
"அப்ப பிரியாவ சந்தைக்கு கூட்டிட்டு போறது?" என்று இழுத்தேன்.
"அது நான் போயிப்பேன் சக்தி... நீ காச மட்டும் குடு" என்றாள் நேரம் அறிந்து என் அருமை தங்கச்சி.
வேறு ஒன்றும் சொல்ல இயலாதவனாய் காசை கொடுத்து விட்டு அவள் புன்னகைத்துக் கொண்டே என் தங்கையுடன் சந்தைக்கு போவதை பார்த்துவிட்டு கடுப்புடன் கல் எறிந்தவனை தேடி கிளம்பினேன்.


டேய்... நான் என்ன பண்ணினேன்னு இப்ப என்ன அடிக்க வர என்று கத்திக்கொண்டே அவன் வயல் வரப்புகளில் எல்லாம் ஓடியதும் அவனை நான் துரத்தியதும் ஏதோ நேற்று நடந்தது போல இன்றும் ஞாபகம் இருக்கின்றது. அதற்குள் 2 வருடங்கள் ஓடிப் போய் விட்டது. வருடங்கள் ஓடி விட்டன. ஆனால் இன்னும் அந்த இடங்கள் எல்லாம் அப்படியே இருந்தன.

இடி இடிக்கும் சத்தம் கேட்கவே நிமிர்ந்து வானத்தைப் பார்த்தேன். மேகம் எல்லாம் மீண்டும் ஒன்று கூடிக் கொண்டு இருந்தன. மழை மீண்டும் வரும் போல் இருந்தது. அது வருவதற்குள் வீடு போய் சேர வேண்டும் என்று விரைவாக நடக்க ஆரம்பித்தேன் ஊரை நோக்கி.
 
   

5 கருத்துகள்:

//வாழ்க்கைலே ஏதோ ஒரு குறிப்பிட்ட சம்பவத்தை நினைக்கும் போது ஏன்னு தெரியாமலையே ஒரு புன்னகை வரும் தெரியுமா, நம்மள அறியாமலையே யாரைப் பார்த்தாலும் புன்னகைக்கத் தோணும். //

அருமை!உண்மை.

//"மலர்!" என்றாள்.
கோவிலைச் சுற்றி இருந்த மலர்கள் எல்லாம் மகிழ்ச்சியுடன் பெருமூச்சி விட்டன. //இடிக்கிறதே... பொறாமை அல்லவா பட்டிருக்க வேண்டும்..

அய்யோ... நம்மை விடவும் பேரழகாய் ஒருத்தி இருக்கின்றாளே இவள் யாராக இருப்பாள் என்று பொறாமையோடு மலர்கள் சிந்தித்துக் கொண்டு இருக்கும் போது தான் அவள் மலர் என்று தன் பெயர் சொல்லுகின்றாள்.
அதைக் கேட்டு "ஆகா... இவளும் நம் இனம் தான்... மலர்களே கவலை விடுங்கள்.. நம்மிடையும் உள்ளாள் வெண்மதியை மழுங்கடிக்கும் மலர் ஒருத்தி. இவள் நம்மில் ஒருவள்" என்று பொறாமை நீங்கி நிம்மதியாய் மகிழ்ச்சியுடன் பெருமூச்சி விட்டன மலர்கள்.

நல்ல கற்பனை, நல்ல கதை(உண்மையாகவும் இருக்கலாம்), தொடர்ந்து எழுதுங்கள் தோழர்!!!
ஆனால் ஒன்று உதைக்கிறது, உங்கள் வார்த்தை சொல்லாடல், வழக்கு மொழி என்று முடிவு செய்தால் கதை முழுவதும் வழக்கு மொழியிலே எழுதுங்கள்...

உண்மைக் கதை எல்லாம் ஒன்றும் இல்லை தோழரே... அனைத்தும் கற்பனையே... விருதுநகர்ல வயலா... நீங்களே யோசிச்சி பாருங்க பாஸ்!!!
வருகைக்கும் பதிவிற்க்கும் நன்றி... சொல்லாடலை முன்னேற்ற நிச்சயம் முயற்சிக்கிறேன் தோழரே!!!

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு