ஞாயிறு, 21 ஏப்ரல், 2013

சமயங்களும் கேள்விகளும் : கிருத்துவம் -மேலும் சில கேள்விகள்

லூக்காவின் ஓவியம்:

லூக்கா அவருடைய எழுத்துக்களில் மரியாளை கடவுளாக சித்தரித்து இருக்கவில்லை. ஏன் இயேசுவின் சீடர்கள் எவருமே மரியாளை கடவுளாக சித்தரித்து இருக்கவில்லை. ஒரே கடவுள் தந்தை, மகன், பரிசுத்த ஆவி என்ற மூன்று நிலையில் இருக்கின்றார் என்பதே அவர்களின் கருத்து. அவ்வாறு இருக்கையில் கி.பி 30இல் லூக்கா மரியாளை கடவுளாக சித்தரித்து ஓவியம் வரைந்தார் என்பது எவ்வாறு ஏற்புடையது?

மேலும் விவிலியத்தின் படி இயேசுவே தான் இறக்கும் தருவாயில் மரியாளிடம் 'இதோ உன் மகன்' என்று யோவானைக் காட்டி விட்டுத் தான் இறந்து இருக்கின்றார்.

"அப்பொழுது இயேசு தம்முடைய தாயையும் அருகே நின்ற தமக்கு அன்பாயிருந்த சீஷனையும் கண்டு, தம்முடைய தாயை நோக்கி: ஸ்திரீயே, அதோ, உன் மகன் என்றார்."

அவ்வாறு இருக்கையில் எவ்வாறு மரியாள் கடவுளாக ஆக்கப்பட்டார்? மரியாளை கடவுளாக சித்தரித்து லூக்கா வரைந்தார் என்று ஏன் கூற வேண்டும்?

பலி கேட்ட கடவுளும் பலியான கடவுளும்:

பழைய ஏற்பாட்டில் கூறப்பட்டுள்ள கடவுள் ஒரு இனத்தாருக்கு மட்டுமே உரியக் கடவுளாக, பலி கேட்கும் கடவுளாக அறியப்படுகின்றார்.

"நீ இஸ்ரவேல் புத்திரரிடத்தில் சொல்லவேண்டியது என்னவென்றால், உங்களில் ஒருவன் கர்த்தருக்குப் பலிசெலுத்த வந்தால், மாட்டுமந்தையிலாவது, ஆட்டுமந்தையிலாவது ஒரு மிருகத்தைத் தெரிந்தெடுத்து, பலிசெலுத்தவேண்டும்." - லேவியராகமம் 1

ஆனால் புதிய ஏற்பாட்டிலோ இறைவன் அன்பே உருவானவராக மக்களுக்காக மனிதனாக உலகில் வந்து பலியானவராக அறியப்படுகின்றார். புதிய ஏற்பாட்டுக் கடவுள் பலி கேட்கவில்லை...மேலும் 'ஒரே மந்தை ஒரே மேய்ப்பன்' என்றக் கருத்தினையும் கூறி இருப்பவராய் இருக்கின்றார்.

ஏன் இந்த முரண்பாடு...முரண்பாடுகள் உடையவர் கடவுளாக இருக்க முடியுமா? இல்லை தானே... அப்படி என்றால் பிழை எங்கே இருக்கின்றது கடவுளிலா அல்லது நூலிலா அல்லது நூலினைப் புரிந்துக் கொண்ட விதத்திலா?

தோமாவும் இந்தியாவும்:

தோமா இந்தியா வந்தார் அதுவும் குறிப்பாக தமிழகம் வந்தார்...அங்கேயே அவர் கொலையும் செய்யப்பட்டார் என்றக் கருத்து இங்கே இருக்கின்றது. சென்னையில் புனிதத் தோமா மலை, சாந்தோம் தேவாலயம் போன்றவைகள் தோமா இங்கே இருந்தார் என்று கூறிக் கொண்டு இருக்கின்றன.

ஆனால் போப்போ 'தோமா இந்தியா சென்றார் என்பது ஒரு கட்டுக்கதை' என்றுக் கூறுகின்றார். ஏன் இவ்வாறு போப் கூற வேண்டும்? இவ்விரண்டுக் கூற்றுகளில் எது உண்மை?

தோமா இந்தியா வந்தார் என்பதனை ஏற்றுக் கொண்டால் தோமாவின் கருத்துக்கள் இங்கே எந்தளவு பரவி இருக்கின்றன என்று ஆராய வேண்டி வரும், அவ்வாறு ஆராய்ந்தால் கிருத்துவத்தினை ரோமர்களும் போப்களும் எவ்வாறு அடிமைப்படுத்தி வைத்து இருக்கின்றனர் என்பது புலனாகி விடும் என்ற அச்சத்தினால் தோமாவின் வருகையை மறுக்கின்றாரா போப்?

இல்லை தோமா தமிழகம் வரவே இல்லை என்றால் எதற்காக முன்னர் கபாலீஸ்வரர் கோவில் இருந்த இடத்தினை இடித்து விட்டு அங்கே தோமாவின் கல்லறை இருக்கின்றது என்றுக் கூறி எதற்காக ஒரு தேவாலயம் கட்ட வேண்டும்?

ஒன்று போப்பின் கூற்று உண்மையாக இருக்க வேண்டும் இல்லை தோமா இந்தியா வந்தது உண்மையாக இருக்க வேண்டும், அதற்கு மாறாக வேறு ஒரு விடை இருக்க வாய்ப்பே இல்லை.

இந்நிலையில் ஒன்று போப் அவரின் கூற்றினைத் திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும் அல்லது தோமா தமிழகம் வந்தார் என்றுக் கூறும் கிருத்துவர்கள் அக்கூற்றினை மாற்றிக் கொண்டு சென்னையில் தோமாவின் அடையாளங்கள் என்று அவர்கள் கூறுவனவற்றை மாற்றிக் கொள்ள வேண்டும். மாறாக இருவருமே அவர்களதுக் கருத்துகளை மாற்றிக் கொள்ளாது இருப்பது அரசியலே ஆகுமே அன்றி ஆன்மீகமாகாது.

தொடர்புடைய இடுகைகள்: (இந்தியாவில் தோமா, கபாலீசுவரர் கோவில்,)

கிருத்துவமும் மனு தர்மமும்:

அனைத்து மனிதர்களும் சமம் என்றுக் கூறுவது கிருத்துவம். ஆனால் அதற்கு மாறாக மனிதர்களைப் பிறப்பிலேயே ஏற்றத் தாழ்வுடன் பிரிப்பது மனு தர்மம். அவ்வாறு இருக்கையில் இவ்விரண்டுக்கும் தொடர்பே இருக்க முடியாது. முற்றிலுமாக மாறுப்பட்ட இரு கருத்துக்களைக் கொண்டு விளங்குகின்றன இரண்டும்.

அவ்வாறு இருக்க...மனுதர்மத்தினை மொழிபெயர்த்து அதனை இந்தியாவில் உள்ள பெருவாரியான சைவ வைணவ சமயங்களைப் பின்பற்றிய மக்களுக்கு சட்ட நூலாக ஆக்கிய சர்.வில்லியம் ஜோன்ஸ் அவர்களுக்கு இங்கிலாந்து தேவாலயத்தில் சிலை எதற்கு....அதுவும் மனு தர்ம நூலினை கையில் ஏந்திக் கொண்டு இருப்பதனைப் போன்ற சிலை எதற்கு?

"கிருத்துவ சமயத்தினை அடிமைப்படுத்தி அதன் வாயிலாக உலகின் பல்வேறு மக்களை கட்டுக்குள் இன்று தேவாலயங்களும் போப்களும் வைத்து இருப்பதனைப் போன்று, சைவ வைணவ சமயங்களை அடிமைப்படுத்தி இந்திய மக்களை கட்டுக்குள் வைத்து இருக்கின்றனர் என்பதனால் பிராமணர்களுடன் ஏற்பட்ட கூட்டுக் காரணமாக, எக்காலத்திலும் உண்மை வெளிப்பட்டு நம்முடைய மேலாதிக்கம் குறைந்து விடக் கூடாது என்றே மனு தர்மத்தினை தேவாலயத்தில் வைத்து அழகுப் பார்கின்றனரா?"

நிறவெறியுடன் கூடிய இனவெறியினை கத்தோலிக்கத் திருச்சபை வளர்க்கின்றது...சாதி வெறியுடன் கூடிய இனவெறியினை இங்கே மனு தர்மம் வளர்க்கின்றது...அவ்வாறு ஏற்படும் கலவரங்கள் மூலமாக சிலர் தங்களது அரசியல் செல்வாக்கினை பலப்படுத்திக் கொள்கின்றனர். அதனால் தான் சமயங்களை அடிமைப்படுத்தியவர்கள் தங்களுக்குளே ஏற்படுத்திக் கொண்ட கூட்டின் வெளிப்பாடாக மனுதர்மம் கிருத்துவர்களின் கோவிலினுள் இருக்கின்றதோ?

போப்:

கான்சுடன்டைன் காலத்திற்கு பின்னர் ரோமர்கள் மட்டுமே போப் ஆக வர முடிகின்ற நிலை இருந்தது.

இயேசு கிருத்து ஆசிய நாட்டினைச் சார்ந்தவர்.
அவரின் சீடர்கள் அனைவரும் ஆசிய நாட்டினைச் சார்ந்தவர்கள்.
அவர் பேசிய மொழி ஆசிய மொழி.
விவிலியம் தொகுக்கப்பட்டது ஆசியாவில்.

அவ்வாறு இருக்கையில் ரோம நாட்டினைச் சார்ந்தவர்கள் மட்டுமே அச்சமயத்தின் தலைவர்களாக வர முடியும் என்பது அரசியலா ஆன்மீகமா? கிருத்துவச் சமயம் அடிமையாக்கப்பட்டதைத் தானே இது காட்டுகின்றது.

மாட்ரின் லூதர் என்பவரின் எழுச்சிக்கு பின்னர் தான் ரோமர்களைத் தவிர மற்ற ஐரோப்பியர்களும் போப் ஆக வரலாம் என்ற நிலை வருகின்றது. இப்பொழுதும் ஐரோப்பியர்களே போப் ஆக வர முடியும் என்றால் இது ஆன்மீக ரீதியிலான ஏற்பாடா இல்லை அரசியல் ரீதியான ஏற்பாடா?

இயேசுவின் சீடர்கள் அனைவரும் அவர்களின் கருத்துக்களுக்காக கொல்லப்பட்டனர் என்பதும் கான்சுடன்டைன் காலத்திற்கு பின்னரே கிருத்துவம் அரச சமயமாக வடிவு பெறுகின்றது என்று நாம் கண்டிருக்கின்றோம். அக்காலத்திலேயே அது ஆன்மீக பாதையில் இருந்து அரசியல் பாதைக்கு அடிமையாக்கி மாற்றப்பட்டு விட்டது என்று நாம் கருத முடிகின்றதா இல்லையா?

தொடர்புடைய இடுகைகள்: (கிருத்துவத்தின் வரலாறு)

தொடரும்...!!!

பின்குறிப்பு:

1) இத் தொடர் ஒரு தேடல் முயற்சியே...மாற்றுக் கருத்துகளும் விவாதங்களும் வரவேற்கப்படுகின்றன.
2) (இதற்கு முந்தைய பகுதிகளைக் காண இச் சுட்டியினை சொடுக்கவும் - சமயங்கள்-முகப்பு)

சனி, 20 ஏப்ரல், 2013

சமயங்களும் கேள்விகளும் : விவிலியம்

சைவ வைணவ சமயங்களைப் பற்றி சில கேள்விகளை சென்றப் பதிவினில் கண்டாயிற்று. இப்பொழுது கிருத்துவ சமயத்தினைப் பற்றியே நாம் காண வேண்டி இருக்கின்றது. (இதற்கு முந்தைய பகுதிகளைக் காண இச் சுட்டியினை சொடுக்கவும் - சமயங்கள்-முகப்பு)

இன்றைக்கு இறை நம்பிக்கை உள்ளவர்கள் அனைவரும் அவர்களின் சமயங்களில் வழங்கப்பெறும் நூல்களையே இறைவன் அளித்த நூல்கள் என்றும் அந்நூல்கள் இறவாத்தன்மை உடையன என்றுமே பெரும்பாலும் எண்ணிக் கொண்டு இருக்கின்றனர். இந்நிலையே இன்றைய கிருத்துவ சமயத்திலும் காணப்படுகின்றது. முரண்பாடுகள் எத்தனை இருந்தாலும் சரி அது இறை வாக்கு அதனை நாம் கேள்விக் கேட்க கூடாது என்ற எண்ணத்துடனே விவிலியத்தினை அவர்கள் காணுகின்றனர். ஆனால் நாம் அவ்வாறுக் கண்ணை மூடிக் கொண்டு செல்ல முடியாது…முரண்பாடுகள் இருக்கின்றன என்றால் அவை ஏன் இருக்கின்றன எதனால் இருக்கின்றன என்றே நாம் காண வேண்டி இருக்கின்றது…காண்போம்.

உலகத் தொடக்கம்:

1) பழைய ஏற்பாட்டின்படி முதல் மனிதன் ஆதாம் என்றும் முதல் பெண் ஏவாள் என்றும் அழைக்கப் படுகின்றனர்…மேலும் வெள்ளத்தில் பிழைத்த மனிதன் நோவா என பெயர் கொண்டவனாக இருக்கின்றான். ஆனால் இதே படைப்புக் கதை விவிலியம் தொகுக்கப் படுவதற்கு வெகு காலங்கள் முன்னரே சுமேரிய/பாபிலோனிய இலக்கியங்களில் காணப்படுகின்றதே… அதனில் முதல் மனிதனின் பெயர் ஆதப்பா என்றும் வெள்ளத்தில் இருந்து பிழைத்த மனிதனின் பெயர் ஊத் நா பிச்டிம் என்றும் இருக்கின்றதே அது ஏன்? விவிலியத்தில் இருப்பது அனைத்தும் உண்மை என்றால் ஏன் இந்தப் பெயர் வித்தியாசங்கள்?

2) ஆதியாகமத்தில் இறைவன் கிழக்கே ஏதேன் என்ற தோட்டத்தினை உருவாக்கி அங்கே முதல் மனிதனை வைத்தார் என்ற செய்தி வருகின்றது. நமது உலகமோ உருண்டை…மேலும் இறைவனுக்கு ஏது கிழக்கு மேற்கு? அவ்வாறு இருக்க அங்கே கிழக்கு என்று குறிப்பாக குறிக்கப்பட்டு இருப்பதற்கு காரணம் என்ன?

விவிலியம் தொகுக்கப்பட்டது மத்திய ஆசிய நிலப்பரப்பில்…எனவே அந்த இடத்திற்கு கிழக்கே இருந்த பகுதியில் இறைவன் மனிதனைப் படைத்தார் என்ற பொருள்பட ‘கிழக்கு’ என்றச் சொல் பயன் படுத்தப்பட்டு இருக்கின்றது என்று நாம் கருத முடியும் தானே?

பார்க்க: (உலகின் தோற்றம் , ஆதாம் என்ற தமிழன், நோவாவின் கதை)

3) //இரண்டாம் ஆற்றுக்குக் கீகோன் என்று பேர், அது எத்தியோப்பியா தேசம் முழுவதையும் சுற்றி ஓடும்.// – ஆதியாகமம் 2-13

எத்தியோப்பியா என்ற தேசம் உலகத் தொடக்கம் முதலேவா இருந்து வந்தது? அப்படி இருந்தால் அப்பிரதேசமோ சரி சுமேரிய/பாபிலோனிய இடப் பிரதேசங்களோ வெள்ளத்தால் அழிந்தமைக்கு சான்றுகள் இல்லையே…அவ்வாறு இருக்க அந்த இடம் தான் இறைவன் மனிதனைப் படைத்த இடம் என்றுக் கூறுவது எவ்வாறு?

மேலும் மத்திய ஆசிய நிலப்பரப்பில் காணப்படும் நாகரீகங்களின் காலங்களை விட மிகப் பழைய நாகரீகங்கள் தமிழகத்தில் காணப்படுவதன் காரணம் என்ன?

4) //பின்பு அவனுடைய சகோதரனாகிய ஆபேலைப் பெற்றாள்; ஆபேல் ஆடுகளை மேய்க்கிறவனானான், காயீன் நிலத்தைப் பயிரிடுகிறவனானான்//

//இன்று என்னை இந்தத் தேசத்திலிருந்து துரத்திவிடுகிறீர்; நான் உமது சமுகத்துக்கு விலகி மறைந்து, பூமியில் நிலையற்று அலைகிறவனாயிருப்பேன்; என்னைக் கண்டுபிடிக்கிறவன் எவனும் என்னைக் கொன்றுபோடுவானே என்றான்.//

உலகத் தொடக்கத்திலேயே மனிதன் ஆடுகளை மேய்க்கவும் விவசாயம் பண்ணவும் அறிந்துக் கொண்டானா? விவிலியத்தின் படி ஆதாமுக்கு இரு மகன்கள் பிறக்கின்றனர்…அதில் ஒருவன் மற்றொருவனைக் கொன்று விடுகின்றான். அவ்வாறு இருக்க காயின் உலகின் மற்ற மக்கள் என்னைக் கொன்றுப் போடுவார்கள் என்றுக் கூறுவது போல் வருகின்றதே அது ஏன்? மற்ற மக்கள் எங்கே இருந்து வந்தனர்? எப்பொழுது வந்தனர்?

5) //அந்நாட்களில் இராட்சதர் பூமியிலே இருந்தார்கள்; பின்பு தேவகுமாரர் மனுஷகுமாரத்திகளோடே கூடுகிறதினால், இவர்கள் அவர்களுக்குப் பிள்ளைகளைப் பெற்றபோது, இவர்களும் பூர்வத்தில் பேர்பெற்ற மனுஷராகிய பலவான்களானார்கள்.//

இராட்சசர்கள் பூமியில் இருந்தனர் என்றால் அவர்களைப் படைத்தது யார்? அவர்கள் என்னவானார்கள்?

ஆபிரகாமும் ஊரும்:


1) ஆபிரகாம் ஊர் என்ற இடத்தில் இருந்து கிளம்பினான் என்றச் செய்தி விவிலியத்தில் வருகின்றது…(ஆதியாகமம் – 11: 28:31).

நாம் முன்னரே கண்டு இருக்கின்றோம் ஊர் என்பது சுமேரியாவில் இருந்த ஒரு ஊரின் பெயர் என்று. மேலும் ‘ஊர்’ என்றச் சொல் எந்த மொழிச் சொல் என்றும் நமக்கு வேறு யாரும் சொல்ல வேண்டியதில்லை. மேலும் சுமேரியர்கள் தமிழர்களே என்றே இன்றைக்கு ஆராய்ச்சிகள் பலவும் கூறுகின்றன? இந்நிலையில் ஆபிரகாம் யார்? தமிழனா?


பார்க்க: (யாகோவா, எல் என்றொரு கடவுள், மேசொபோடமியர்கள் தமிழர்களா)

2) ஒருவனுக்கு ஒருத்தி என்பதே புதிய ஏற்பாட்டின் கருத்து…அதையே தான் இயேசுவும் கூறுகின்றார்… ஆனால் ஆபிரகாமிற்கு மூன்று மனைவிகள் கூறப்பட்டு உள்ளனரே… ஒருவர் சுமேரியாவைச் சார்ந்தவர், மற்றொருவர் எகிப்தினைச் சார்ந்தவர்…மற்றொருவர் கிழக்கில் இருந்து வந்தவர் என்று இருக்கின்றதே… மீண்டும் கிழக்கு வருகின்றது… கிழக்கு என்றால் என்ன? சிந்து சமவெளியா? மேலும் ஆபிரகாம் செய்ததற்கு மாறாக கிருத்து கூறுகின்றாரே… அது ஏன்?

மோசே:

1) இன்றைக்கு இராசபக்சே ஒரு இனவெறி பிடித்த கொலைகாரன் அவ்வளவே…அதில் மாற்றுக் கருத்துக்கள் மனசாட்சியுடன் இருப்பவர்களுக்கு நிச்சயம் இருக்காது. ஆனால் அவனையும் மிஞ்சிய செயலை செய்தவனாக அல்லவா மோசே இருக்கின்றான்…

//எண் 31:17,18- ஆகையால் குழந்தைகளில் எல்லா ஆண் பிள்ளைகளையும், திருமணமான எல்லா ஸ்திரீகளையும் கொன்று போடுங்கள். கல்யாணமாகாத கன்னிப்பெண்களை உங்களுக்காக உயிரோடு வையுங்கள்//

இதற்கு என்ன விளக்கம் கூற முடியும்? இறைவன் கூறினார் என்றா? இவ்வாறு மனசாட்சி இல்லாத இறைவனா அவரது மகனையே மக்களுக்காக பலியாக்க அனுப்புவார்?

2) “எனக்கு முன்னே வந்தவர்களெல்லாரும் கள்ளரும் கொள்ளைக்காரருமாயிருக்கிறார்கள்; ஆடுகள் அவர்களுக்குச் செவிகொடுக்கவில்லை” (யோவான் 10:8) என்று இயேசு கூறியது யாரை?

//அதற்கு அவர்: உங்கள் மனைவிகளைத் தள்ளிவிடலாமென்று உங்கள் இருதயக்கடினத்தினிமித்தம் மோசே உங்களுக்கு இடம் கொடுத்தார்; ஆதிமுதலாய் அப்படி இருக்கவில்லை// மத்தேயு 19:8

இதன்படி இறைக் கருத்துக்கு மாறாக மோசே செயல் பட்டு இருக்கின்றார் என்று நாம் அறிகின்றோம்? ஏன் அவ்வாறு அவர் செயல்பட்டார்? இப்படி இருக்க அவர் செய்ததை எல்லாம் எப்படி நாம் இறைவன் கூறியதாக ஏற்றுக் கொள்ள முடியும்?

புதிய ஏற்பாடு:

1) பழைய ஏற்பாடு யூதர்களின் நூல் என்றும் அது யூத இனத்தினைச் சார்ந்தவர்களின் கண்ணோட்டத்தில் அவர்களின் வரலாற்றையும் கருத்துக்களையும் கொண்டு உள்ளது என்றே நாம் கூறுகின்றோம். சிலர் மறுக்கின்றனர்…அதற்கு அவர்கள் காட்டும் வசனம்,

//நியாயப்பிரமாணத்தையானாலும் தீர்க்கதரிசனங்களையானாலும் அழிக்கிறதற்கு வந்தேன் என்று எண்ணிக்கொள்ளாதேயுங்கள்; அழிக்கிறதற்கு அல்ல, நிறைவேற்றுகிறதற்கே வந்தேன்.// மத்தேயு 5: 17

புதிய ஏற்பாட்டினில் இயேசு இவ்வாறு கூறுகின்றது போல் வருகின்றது, இதனை அடிப்படையாகக் கொண்டு பழைய ஏற்பாட்டிற்கு ஆதரவாக பேசும் மக்கள் ‘இதோ இயேசுவே பழைய ஏற்பாட்டுக் கருத்துக்களை அழிப்பதற்கு அல்ல நிறைவேற்றவே வந்தேன் என்றுக் கூறி இருக்கின்றாரே….பின்னர் எவ்வாறு பழைய ஏற்பாடு கிருத்துவர்களுக்கு தொடர்பில்லாத ஒன்றாகும்” என்றுக் கேட்கின்றனர். சரியான கேள்வி தான், ஆனால் இயேசுவின் பின் வரும் கருத்துக்களோ முற்றிலும் பழைய ஏற்பாட்டிற்கு மாறாக அல்லவா உள்ளன…

//தன் மனைவியைத் தள்ளிவிடுகிற எவனும் தள்ளுதற்சீட்டை அவளுக்கு கொடுக்கக்கடவன் என்று உரைக்கப்பட்டது.// (பழைய ஏற்பாட்டுக் கருத்து)

//32. நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; வேசித்தன முகாந்தரத்தினாலொழிய தன் மனைவியைத் தள்ளிவிடுகிறவன், அவளை விபசாரஞ்செய்யப்பண்ணுகிறவனாயிருப்பான்; அப்படித் தள்ளிவிடப்பட்டவளை விவாகம் பண்ணுகிறவனும் விபசாரஞ்செய்கிறவனாயிருப்பான்.// (இயேசுவின் கருத்து)

//கண்ணுக்குக் கண், பல்லுக்கு பல் என்று உரைக்கப்பட்டதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.// (பழைய ஏற்பாட்டுக் கருத்து)

//39. நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; தீமையோடு எதிர்த்து நிற்கவேண்டாம்; ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் கொடு.// (இயேசுவின் கருத்து)

//உனக்கடுத்தவனைச் சிநேகித்து, உன் சத்துருவைப் பகைப்பாயாக என்று சொல்லப்பட்டதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.// (பழைய ஏற்பாட்டுக் கருத்து)

//44. நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள்.//(இயேசுவின் கருத்து)

இந்த வசனங்களின் மூலம் பழைய ஏற்பாட்டுக் கருத்துக்கள் தவறென்றும் அதற்கு பதிலாக வேறு கருத்துக்களை இயேசு கருதி கூறி இருப்பது தெளிவாகின்றது. அது ஏன்? இறைவனின் கருத்துக்கள் மாறிக் கொண்டே இருக்குமா? இல்லை தானே… அப்படி இருக்க இயேசு பழைய ஏற்பாட்டில் கூறப்பட்டுள்ள கருத்துக்களை மறுத்ததன் காரணம் என்ன?

(மேலும் படிக்க - பழைய ஏற்பாடும் புதிய ஏற்பாடும்)

மரியாள் வணக்கம்:


விவிலியத்தின் படி இறைவன் மூன்று நிலைகளில் விளங்குகின்றான். அவனைத் தவிர வேறு இறைவன் கிடையாது. இந்நிலையில் எவ்வாறு மரியாள் வணக்கம் கிருத்துவத்தின் ஒரு பகுதியாயிற்று? எப்பொழுது அது ஒரு பகுதியாயிற்று?

கான்சுடன்டைன் காலத்திற்கு முன்னர் மரியாள் வணக்கம் கிருத்துவர்களின் மத்தியில் இருந்தமைக்கு சான்றுகள் ஏதேனும் இருக்கின்றனவா?

இயேசுவின் சீடர்கள் மரியாளை இறைவனாக குறிக்கும் வண்ணம் குறிப்புக்கள் ஏதேனும் எழுதிச் சென்று இருக்கின்றனரா? அவ்வாறு ஏதும் இல்லாத நிலையில் எவ்வாறு மரியாள் இறைவனாக்கப்பட்டார்? பெண் தெய்வங்களைக் கொண்ட நாகரீகங்களைக் கவர கான்சுடன்டைனால் பயன்படுத்தப்பட்ட ஒரு யுக்தியா இது?

தொடரும்...!!!

பின்குறிப்பு:

1) இத் தொடர் ஒரு தேடல் முயற்சியே...மாற்றுக் கருத்துகளும் விவாதங்களும் வரவேற்கப்படுகின்றன.

நான் ரசித்த திரைப்படங்கள் : எனது சுற்றத்தினன் டோடோரோ

எனது சுற்றத்தினன் டோடோரோ: (My Neighbour Totoro)

சில நேரங்களில் உங்களை அறியாமலேயே சில படங்களினுள் மூழ்கித் தொலைந்து போய் இருக்கின்றீர்களா? என்றோ நாம் வாழ்ந்துக் கடந்த நாட்களை நினைவுகளில் தேடிக் கொண்டு இருக்கும் பொழுது ஏதேனும் ஒரு படம் நாம் தொலைத்த அத்தருணங்களை, நாம் வாழ்ந்து மகிழ்ந்த அத்தருணங்களை மீண்டும் நம் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்துவதனை உணர்ந்து இருக்கின்றீர்களா? இல்லையா...பிரச்சனை இல்லை...இந்தப் படத்தினைப் பாருங்கள் ஒரு வேளை என்னைப் போல் நீங்களும் இப்படத்தினுள் தொலைந்துப் போகக் கூடும்...!!!

சட்சுகி மற்றும் மெய் ஆகிய இரு சிறுமிகள் தங்களின் தந்தையோடு ஒரு புதிய ஊருக்கு வருவதில் இருந்தே இக்கதை தொடங்குகின்றது. அச்சிறுமிகளின் தாயார் உடல்நலக் குறைவுக் காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருக்க, அவருக்கு அருகாமையிலேயே இருப்பதற்காக புதிய ஊருக்கு தனது மகள்களைக் அழைத்துக் கொண்டு வருகின்றார் பேராசிரியரான டாட்சுவோ குசக்காபே அவர்கள். புதிய வீடு, புதிய ஊர், புதிய மக்கள் என்று அனைத்தும் புதிதாக இருந்த போதும் சட்சுகிக்கும் அவளின் தங்கைக்கும் அவை அனைத்தும் விரைவில் பிடித்துப் போய் விடுகின்றன...பின்னே பரந்து விரிந்து இருக்கும் வயல்கள், அவற்றின் குறுக்கே ஓடும் நீரோடைகள், எங்கு காணிலும் இயற்கையின் எழில் ஓவியங்கள்...இவை போதாதென்று அவர்களை தங்களின் வீட்டினில் ஒருவராகவே எண்ணும் சுற்றத்தினர் என்று அனைத்தும் அருமையாக இருக்கும் பொழுது யாருக்குத் தான் அங்கே வாழப்பிடிக்காதுப் போய் விடும்.

புதிய வீட்டினை சுற்றிப் பார்ப்பதும், தங்களின் தந்தைக்கு உரிய உதவிகளைச் செய்வதம் ஒருவருடன் ஒருவர் விளையாடுவதும் என்றே பொழுதினை கழிக்கின்றனர் சட்சுகியும் மெய்யும். அவர்களின் தாயார் மருத்துவமனையில் இருப்பதினால் வீட்டினில் கூடுதல் பொறுப்பினை ஏற்றுக் கொண்டு கூடுதலாக 'அக்கா என்பவள் இன்னொரு அம்மாவுக்கு சமம்' என்பதனைப் போன்றே தனது தங்கையையும் மிக்க கவனத்துடன் கவனித்து வருகின்றாள் சட்சுகி.

இவ்வாறு நாட்கள் நகர சட்சுகியின பள்ளியும் ஆரம்பமாகின்றது. பள்ளிக்குச் செல்ல தொடங்குகின்றாள் சட்சுகி. மெய்க்கு வருத்தம் தான் ஆனாலும் பெரிய கவலையில்லை...மாலையில் அவளின் அக்கா திரும்பி வந்து விடுவாள்...அதுவரை பொழுதினைப் போக்க இருக்கவே இருக்கின்றது தோட்டம்...அதனில் விளையாடிக் கொண்டிருந்தால் நேரம் போவதனைக் கேட்கவா வேண்டும். தோட்டத்தினில் அவளாய் விளையாட ஆரம்பிக்கின்றாள் மெய். அப்பொழுது தான் அந்த வினோத மிருகங்களை அவள் காணுகின்றாள்.

இரு சிறிய மிருகங்கள் அவர்களின் தோட்டத்தின் வழியாக ஒரு மூட்டையினில் சில விதைகளை எடுத்துக் கொண்டு சென்றுக் கொண்டு இருக்கின்றன. வினோதமான மிருகங்களாக இருக்கின்றனவே என்று எண்ணியே அவைகளை மெய் துரத்த ஆரம்பிக்க, அந்த மிருகங்கள் அவளிடம் இருந்து தப்பிக்க ஒரு புதரினுள் நுழைக்கின்றன. அவைகளைத் தொடர்ந்து மெய்யும் அப்புதரினுள் நுழைகின்றாள். அப்புதரின் வழியே செல்லும் பாதை அவளை ஒரு பெரிய கற்பூர மரத்தின் அடியே கொண்டு சென்று விடுகின்றது. அம்மரத்தின் மீது அவ்விலங்குகள் ஏறி ஓட மெய்யும் தொடர்ந்து துரத்துகின்றாள்...அவ்வாறுத் துரத்துகையில் அம்மரத்தில் உள்ள ஒரு பொந்தினில் தவறி விழுந்தும் விடுகின்றாள்.

எழுந்துப் பார்க்கும் மெய்க்கு ஆச்சர்யம் காத்து இருக்கின்றது...அங்கே அவள் துரத்திச் சென்ற விலங்குகளைப் போன்ற ஒரு மிகப் பெரிய விலங்கு உறங்கிக் கொண்டு இருக்கின்றது. அதன் மேல் ஏறி அதனுடன் பேசி அதற்கு பெயரினை டோடோரோ என்றுச் சூட்டியப் பின் களைப்பில் அம்மிருகத்தின் வயிற்றின் மேலேயே உறங்கிப் போகின்றாள் மெய்.

அதே நேரம் பள்ளி முடிந்து வந்த சட்சுகி மெய்யினை காணாது வீடு முழுவதும் தேடுகின்றாள். பின்னர் மெய் நுழைந்த புதரின் வெளியே அவளின் தொப்பிக் கிடப்பதனைக் கண்டு சட்சுகியும் அப்புதரின் உள்ளே நுழைகின்றாள். அங்கே புதரின் வழியே செல்லும் பாதையில் சிறு தொலைவில் மெய் உறங்கிக் கொண்டு இருப்பதனைக் கண்டு அவளை எழுப்புகின்றாள் சட்சுகி. எழுந்த மெய் அவளின் அக்காவிடம் அவள் கண்ட மிருகம் டோடோரோவினைப் பற்றியும் அந்த மரத்தினைப் பற்றியும் ஆவலுடன் கூறுகின்றாள்...ஆனால் அதனை நம்புவது சட்சுகிக்கு கடினமாக இருக்கின்றது. காரணம் அந்த புதரின் வழியே எந்த ஒரு மரமும் அவள் பார்வைக்குக் காணப்படவில்லை மேலும் மெய்யாலும் மீண்டும் அந்தப்பாதையினை அடையாளம் காட்ட முடியவில்லை. அந்த புதரின் பாதை மீண்டும் மீண்டும் அவர்களின் தோட்டத்திலேயே சென்று முடிந்தது.

"நான் பொய் சொல்லவில்லை" என்று வருத்தத்துடன் மெய் சொல்ல அவளைப் புரிந்துக் கொண்ட அவளின் தந்தை "நானும் சட்சுகியும் உன்னை நம்புகின்றோம் மெய்....ஒருவேளை நீ வன தேவதைகளைப் பார்த்து இருக்கலாம்...அவைகளை அனைவரும் காண முடியாது...அவைகள் யாரைப் பார்க்க விரும்புகின்றனவோ அவர்கள் மட்டுமே அவைகளைக் காண முடியும்...நீ மிகவும் கொடுத்து வைத்தவள் மெய்...உனக்கு வன தேவதைகள் காட்சி அளித்து உள்ளன. வா நாம் அவைகளுக்கு நன்றி செலுத்துவோம்" என்றுக் கூறி தனது இரு மகள்களையும் அழைத்துக் கொண்டு அருகில் இருந்த வன தேவதைகள் ஆலயத்திற்கு அழைத்துச் செல்கின்றார். அங்கே மெய்யின் ஆச்சர்யத்திற்கு அவள் டோடோரோவை சந்தித்த கற்பூர மரம் அங்கே இருந்தது. அதனை மெய் சட்சுகியிடனும் அவர்களின் தந்தையிடனும் கூற சட்சுகி சிறிது வருத்தமடைகின்றாள்..."ஏன் வன தேவதைகள் அவளை வந்துக் காணவில்லை என்றே...". ஆனால் அவளும் நீண்டக் காலம் காத்திருக்க வேண்டி இருக்கவில்லை, ஒரு நாளில் வன தேவதைகள் அவளையும் வந்துப் பார்கின்றன. சட்சுகியும் மெய்யும் வனதேவதைகளின் உதவியோடு அவர்களின் தோட்டத்தினை நன்றாக வளர்க்கத் தொடங்குகின்றனர்.

இவ்வாறு நாட்கள் மகிழ்ச்சியாய் கழிய, சட்சுகியும் மெய்யும் அவர்களின் தாயார் முழுவதும் நலமாகி வீட்டிற்கு வரும் நாளை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டு இருக்கின்றனர்...அப்பொழுது தான் அந்தத் தந்தி அவர்களுக்குக் கிடைக்கின்றது. அவர்களின் அன்னைக்கு திடீர் என்று சிறிது உடல் நலம் குறைந்து விட்டதால் அவரால் வீட்டிற்கு வர இயலாது என்ற விடயம் சட்சுகிக்கு தெரிய வர 'இப்படித்தான் சென்ற முறையும் கூறினார்கள்...எங்களின் அன்னை வீட்டிற்கு வரப் போவதே கிடையாது..அவர்கள் எங்களிடம் பொய் கூறுகின்றார்கள்' என்றே மனம் உடைந்து அழத் துவங்குகின்றாள் சட்சுகி. அக்கா அழுவதனைப் பார்த்த மெய், தங்களது அம்மாவிற்கு ஏதோ நிகழ்ந்து விட்டு இருக்கின்றது என்று எண்ணிக் கொண்டே அவளின் அன்னை இருக்கும் மருத்துவமனையை நோக்கி யாரும் அறியாமலேயே ஓட ஆரம்பிக்கின்றாள்.

அச்சிறுமிகளின் தாயாருக்கு என்ன ஆயிற்று? தனியாக மருத்துவமனையை நோக்கிச் சென்ற மெய் என்னவானாள்? போன்ற கேள்விகளுக்கு உணர்வுகள் மிகுந்த ஒரு அற்புதமான பயணமாய் விடை அளிக்கின்றது இப்படம்.

குழந்தைகளுக்கான ஒரு படத்தினை...இல்லைஇல்லை...ஒரு உலகத்தினை உருவாக்க வேண்டும் என்ற இலக்கினைக் கொண்டே இப்படத்தினை எடுத்துள்ளார் இப்படத்தின் இயக்குனர் மியாசாகி. அப்படிப்பட்ட ஒரு குழந்தைகளின் உலகத்தினுள் அனைத்து வயதினரும் ஈர்க்கப்பட்டு விடுவதில் தான் அவரின் வெற்றி அடங்கி இருக்கின்றது. மந்திரமயமான நிமிடங்கள், நம் மனதினுள் ஒளிந்துக் கிடக்கும் சிறுவனை/சிறுமியை மெதுவாய் உயிர்ப்பித்து, நாம் என்றோ சிறுவர்களாய் கடந்து வந்திருந்த வாழ்விற்கே நம்மை மீண்டும் அழைத்துச் செல்கின்றன.

"சிறு வயதில் என் கண்களுக்கு வன தேவதைகள் தென்பட்டன...ஆனால் ஏனோ தெரியவில்லை நான் வளர்ந்ததிற்குப் பின்னர் அவைகள் என் கண்களுக்குப் புலனாகவில்லை" என்றே இப்படத்தினில் ஒரு கதாப்பாத்திரம் கூறுகின்றார். எண்ணிப்பார்த்தால் சரி தான்...சிறுவர்களாக இருப்பவர்களின் உலகம் மிகவும் விசித்திரமானது...ஆச்சர்யங்களும் அதிசயங்களும் நிறைந்தது. ஆனால் அவ்வுலகங்கள் ஏனோ ஒவ்வொரு சிறுவனும் வளர்ந்து விடும் பொழுது மெதுவாய் மறைந்துத் தான் போய் விடுகின்றன. அவ்வுலகங்களை உயிரோடு வைத்துக் கொண்டே வளர்கின்றவர்கள் சிலரே.

அப்படிப்பட்ட ஒரு உலகிற்குத் தான் இங்கே உயிர் தந்து இருக்கின்றனர்...'இது நாம் வாழ்ந்த உலகம்...அதுமட்டுமல்ல நாம் வாழ வேண்டிய உலகும் இது தான்' என்றே இப்படம் நம்மை உணரச் செய்கின்றது. குழந்தைகளின் உலகம் பெரியவர்களின் உலகினைப் போன்று விரைவாக ஓடுவதில்லை...மாறாக அது ஒவ்வொரு நொடியும் வாழ்வினை ரசித்துக் கொண்டே நகரும் ஒரு உலகம்...அதனைப் போன்றேத் தான் இப்படமும்....மெதுவாக வாழ்வின் பொன்னான நொடிகளை, அதன் அதிசயங்களை நம்முன்னே எடுத்து வைத்துக் கொண்டே நகர்கின்றது. அதனிலேயே நாமும் மூழ்கிப் போகின்றோம்....சிறுவர்களாக!!!

குழந்தைகளாக இருப்பது ஒரு வரம் தான்...!!!

பி.கு:

1) இப்படத்தில் உள்ள ஓவியங்கள் அனைத்துமே கைகளாலே வரையப்பட்டவைகள். (ஓவியத்தினில் ஆர்வம் உடையவர்களுக்கு நிச்சயமாய் இந்த ஓவியங்கள் ஆர்வமூட்டக் கூடும்).

பிற திரைப்பட விமர்சனங்கள்:

கத்திக் கை எட்வர்ட் (Edwards Scissor hands)
அன்புடன் ஆசிரியருக்கு (To Sir with love)
மைதானத்தில் தேவதைகள் : (Angels in the outfield )
கனவுலகத்தை தேடி: (Finding Neverland)
பெரிய மீன்: (Big Fish)
உணவு.Inc : (Food.Inc)

செவ்வாய், 16 ஏப்ரல், 2013

ஆவணப்படம் : உணவு.Inc

உணவு.Inc : (Food.Inc)

"கடந்த 10000 வருடங்களில் நம்முடைய உணவுப் பழக்கங்களில் நிகழ்ந்த மாற்றங்களை விட கடந்த 50 ஆண்டுகளில் மிகுந்த மாற்றங்கள் நிகழ்ந்து இருக்கின்றன. இன்று காலங்கள் பாராது அனைத்து வகைப் பழங்களும் சரி காய்கறிகளும் சரி உலகின் அனைத்துப் பகுதிகளிலும் கிடைக்கின்றன. எலும்பில்லாத இறைச்சி உங்களை எதிர்பார்த்து பல் பொருள் அங்காடிகளில் காத்துக் கொண்டு இருக்கின்றது.

பல்வேறு நிறுவனங்கள் அவற்றின் உணவுத் தயாரிப்பினை நீங்கள் வாங்குவதற்காக வரிசைப்படுத்தி வைத்திருக்கின்றன. அவைகளுக்கு நீங்கள் அப்பொருட்களை வாங்க வேண்டும்..தொடர்ந்து வாங்கிக் கொண்டே இருக்க வேண்டும். அவ்வளவே.

ஆனால் அந்த நிறுவனங்கள் நீங்கள் உண்ணும் உணவினைப் பற்றிய உண்மைகளை நீங்கள் அறிந்துக் கொள்வதை விரும்புவதில்லை...ஏனெனில் உண்மையினை நீங்கள் அறிந்தீர்கள் என்றால் அந்த உணவினை உண்பதற்கு நீங்கள் விரும்பாது போகலாம். அதனால் அவைகள் உங்களிடம் இருந்து உண்மையினை மறைப்பதை முக்கியமான ஒரு விடயமாகக் கொண்டே இயங்குகின்றன.

இந்தப் படம் அவ்வாறு மறைக்கப்பட்ட உண்மைகளைப் பற்றியே...பெரு நிறுவனங்கள் உங்களிடம் இருந்து மறைப்பவைகளைப் பற்றியே இந்தப் படம்" என்றுக் கூறியே தொடங்கும் இந்தப் படத்தில் கூறப்பட்டுள்ள விடயங்கள் அதிர்ச்சி அடையத் தான் வைக்கின்றன.

விதைகளில் இருந்துத் தொடங்கி பல்பொருள் அங்காடிகளில் விற்பனைக்காக வரும் நிலை வரை உணவினை சில பெரு நிறுவனங்கள் எவ்வாறு கட்டுப்படுத்துகின்றன, மக்களின் உரிமைகளை அவைகள் எவ்வாறு பறிக்கின்றன, அந்த நிறுவனங்களை கட்டுப்படுத்த வேண்டிய அரசாங்கங்கள் எவ்வாறு அந்த நிறுவனங்களுக்குச் சார்பாக செயல்படுகின்றன, விவசாயிகளை அந்த பெரு நிறுவனங்கள் எவ்வாறு எல்லாம் பாடு படுத்துகின்றன என்பதனைப் பற்றி எல்லாம் விரிவாகவும் தெளிவாகவும் எடுத்துக் கூறும் இந்தப் படம் உணவு அரசியலைப் பற்றிப் புரிந்துக் கொள்ள எண்ணுவோர் மற்றும் நம்முடைய உணவுப் பழக்க வழக்கங்கள் எங்கே சென்றுக் கொண்டு இருக்கின்றன என்பதனைப் பற்றி அறிந்துக் கொள்ள விரும்புவோர் ஆகியயோர் நிச்சயம் பார்க்க வேண்டிய ஒரு படம்.

இப்பொழுது இந்த படம் கூறும் சில முக்கியமான விடயங்களைப் பார்த்து விடுவோம்... (இந்தப் படம் அமெரிக்காவில் உள்ள நிலையினைப் பற்றி எடுக்கப்பட்டதால் நம்முடைய நாட்டில் நிகழும் முறைக்கு சற்று மாறாகத் தெரியும்....ஆனால் நம்முடைய முறைகளையும் அமெரிக்காவினைப் போல் மாற்ற துடித்துக் கொண்டு இருக்கும் அரசை வைத்துக் கொண்டு இருப்பதால் நாமும் இவற்றை அறியத்தான் வேண்டி இருக்கின்றது)

1 ) நாம் எண்ணுவதனைப் போல் நம்முடைய உணவு இன்றுத் தோட்டங்களில் இருந்தோ அல்லது வயல்களில் இருந்தோ பெறப்படுவதில்லை...மாறாக தொழிற்சாலைகளில் இருந்தே தயாரிக்கப்படுகின்றன.

2 ) இன்று பல் பொருள் அங்காடிகளில் வரிசை வரிசையாக அடுக்கப்பட்டு இருக்கும் உணவுப் பொருட்கள் பலவற்றிலும், ஒன்று சோளம் முக்கியமான கருப்பொருளாக இருக்கும் அல்லது சோயா பீன் முக்கியமான கருப்பொருளாக இருக்கும். பெரும்பாலும் அவை இரண்டுமே முக்கியமான கருப்பொருள்களாக இணைந்தே இருக்கும். காரணம் அந்த இரண்டுப் பொருட்களை எளிதாக வேதியல் மாற்றங்கள் மூலம் பல்வேறுப் பொருள்களாக மாற்றி விடலாம். அதனால் தான் கிட்டத்தட்ட அமெரிக்காவின் 30 சதவீத நிலப்பரப்பில் சோளம் பயரிடப்படுகின்றது. அரசாங்கமும் சோளத்திற்கு என்று மானியமும் அதிகமாக வழங்குகின்றது. அதனால் தான் சோளத்தின் விலை அதன் தயாரிப்பு விலையினை விட மிகவும் கம்மியாக இருக்கின்றது. அதனால் தான் சோளத்தினை முக்கிய கருப்பொருளாக கொண்ட பொருட்களின் விலைகள் கம்மியாக இருக்கின்றன. இந்த நடைமுறையால் கொள்ளை இலாபம் அடைவது சில தனியார் நிறுவனங்களே, அதனால் தான் அந்த நிறுவனங்களுக்கு சாதகமான அமெரிக்க அரசு சோளத்திற்கு மானியம் அதிகமாக வழங்கி வருகின்றது.

3) தனியார் நிறுவனங்களுக்கு அமெரிக்க அரசு சாதகமாக இருப்பதற்கு காரணம், அந்த நிறுவனங்களின் முக்கிய பொறுப்பில் இருந்தவர்களே பின்னர் அரசில் முக்கிய பொறுப்புகளுக்கு சென்று அமெரிக்க அரசினை கைப்பற்றியது தான். அதாவது நிறுவனங்களே மறைமுகமாக அரசினை கட்டுப்படுத்துகின்றன. (இதனைப் பற்றி மேலும் அறிந்துக் கொள்ள ஜான் பெர்கின்ஸ் அவர்கள் எழுதிய ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் என்றப் புத்தகத்தினைப் படிக்கவும்)

4 ) சோளத்தின் உற்பத்தி அதிகமாக இருப்பதும் அதற்கு அரசு மானியம் அளிப்பதும் சோளத்தினைக் பெருவாரியாக கொண்டு இருக்கும் பொருட்களின் விலையை குறைக்கின்றன. அதனால் தான் சோளத்தினைக் கொண்டுள்ள பர்கரின் விலையினை விட பழங்களின் விலை அதிகமாக இருக்கின்றது. 'எங்களிடம் ஒரு டாலர் இருக்கின்றது...அதற்கு இரு பர்கர்கள் கிடைக்கும் ஆனால் ஒரு பழம் கூட கிடைக்காது...இந்நிலையில் நாங்கள் விலைக் குறைந்த உணவினைத் தானே உண்ணுவோம்...அப்படி சாப்பிட்டால் தானே எங்கள் குடும்பம் முழுவதும் உண்ண முடியும்' என்றே கூறுகின்றனர் இத் திரைப்படத்தில் வரும் ஒரு குடும்பத்தினர்.

5 ) "நாங்கள் இங்கே கோழிகளை உருவாக்கவில்லை...கோழிகளைப் போன்ற உணவினைத் தான் நாங்கள் உருவாக்குகின்றோம்.." என்று ஒரு உணவுத் தொழிற்சாலையின் உறுப்பினர் கூறுகின்றார். மேலும் மக்கள் அனைவரும் கொழுத்த கோழிகளை விரும்புவதனால் கோழிகளுக்கும் சோளத்தினைப் போட்டே வளர்கின்றனர். சோளம் உயிர்களை கொழுக்க வைக்கின்றது.

6) அதே முறையினைத் தான் பசுக்களிலும் பயன்படுத்துகின்றனர். சோளத்தைச் சாப்பிடும் பசுக்கள் விரைவில் கொழுக்கின்றன...ஆனால் அதனுடன் மனிதர்களுக்கு தீங்கினை விளைவிக்கும் ஒரு புது பாக்டீரியாவையும் உருவாக்கத் தான் செய்கின்றன.

7 ) உணவின் மேல் தன்னுடைய செல்வாக்கினை நிறுவ முயன்றுக் கொண்டு இருக்கும் பெரும் நிறுவனங்கள் சாதாரண விவசாயிகள் மீது தொழில்நூட்பம் என்ற ஒன்றை திணித்து அவர்களைக் கடனாளியாக ஆக்கி எவ்வாறு உணவு உற்பத்தியின் மீது தன்னுடைய ஆதிக்கத்தினை நிலை நிறுத்திக் கொள்கின்றன என்பதனை பல்வேறு எடுத்துக்காட்டுக்களின் மூலம் இப்படம் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது.

இன்னும் பல பல மிக முக்கியமான விடயங்கள் இப்படம் முழுவதுமே கூறப்பட்டு உள்ளன. சமூக சிந்தனை உள்ள அனைவரும் நிச்சயம் காண வேண்டியதொரு படம் இது. காண மட்டும் அல்ல, கண்ட பின் மற்ற நண்பர்களுக்கு பகிர்வதற்கும் ஏற்றதொரு படம்.

சில நண்பர்களுக்கு இங்கே ஒரு கேள்வி எழலாம்..."சும்மா தொழில்நூட்பத்தை குறைகூறுவதே இவர்களுக்கு பொழப்பா போச்சி...வேகமாக வளர்ந்துக் கொண்டு இருக்கும் மக்கள் தொகைக்கு உணவு வேணும்னா உணவுல தரத்தை எதிர்பார்த்தா ஆகுமா?" என்றக் கேள்வித் தான் அது. இக்கேள்விக்கு விடையாய் ஒரு சிறு சம்பவத்தினை கூற விரும்புகின்றேன்.

நான் கைதராபாடில் இருந்தத் தருணம் நண்பர்களுடன் ஒரு இயற்கை விவசாயியினை காணச் சென்று இருந்தேன். எங்களுக்கு தெலுகு தெரியாது என்பதனை அறிந்த அவர் ஆச்சர்யமாய் தமிழிலேயே பேசத் தொடங்கினார். அவருடன் நீண்ட நேரம் உணவு, விவசாயம் போன்றத் தலைப்புகளில் பேசிக் கொண்டு இருக்கும் பொழுது இதே கேள்வியினை அவரிடம் கேட்டோம். அதற்கு அவர் கூறிய பதில்...

"பொதுவா ஒரு மூட்டை விதைய போட்டா இருவத்தஞ்சி இல்லைனா முப்பது மூட்டை அரிசி கிடைக்கும்...ஆனால் இயற்கை விவசாயத்தினை முறைப்படி செய்தால் 90 மூட்டை வரை எடுக்கலாம்...நான் எடுத்து இருக்கேன்...அதற்காக அரசிடம் இருந்து பட்டமும் வாங்கி இருக்கேன்...அமெரிக்க சனாதிபதி என்னுடைய தோட்டத்துக்கு வந்து பார்த்துட்டு பாராட்டிட்டு போயிருக்காரு. ஆனா இவ்வளவு நடந்தும் நம்முடைய அரசு இத மக்கள்கிட்ட கொண்டு போக மாட்டேங்குது...காரணம் இதக் கொண்டு போனா பூச்சிக் கொல்லி நிறுவனங்க, உர நிறுவனங்க எல்லாம் அடிப்பட்டுப் போகும்...வெளிநாட்டுக் காரனுக்கு காசு கிடைக்காது...அதனால இத மக்கள் கிட்ட கொண்டு போக மாட்டேங்கிறாங்க...நான் விவசாயிங்க என்னால விவசாயம் தான் பண்ண முடியும்...அதுல ஆராய்ச்சி பண்ண முடியும்...நீங்க தான கணினி, இணையம் அப்படி இப்படின்னு பல பேர்கிட்ட பேசுறீங்க...நீங்க இந்த செய்திய எல்லாம் மக்கள் கிட்ட பரப்பலாமே...செத்து போன மனுசனுக்குத் தான் உசுரக் கொடுக்க முடியாது...ஆனா செத்துப் போன மண்ணுக்கு உசுரக் கொடுக்க முடியும்...இளைஞர்கள் முன்னாடி வந்தா நிச்சயம் நம்ம மண்ணுக்கு உயிர் கொடுக்கலாம்."

அவர் பெயர் நாக இரத்தின நாயுடு...அவரின் தோட்டத்தினைப் பற்றி ஒரு இணையமே ஆரம்பித்து இருக்கின்றார் (http://www.srinaidu.com/). நம்மாழ்வாரின் நண்பர் என்றே நினைக்கின்றேன். சரி அது நமக்கு முக்கியமில்லை.

உலகம் இது வரைக் கண்டிராத அதிகாரம் படைத்த மனிதர்கள் நம்முடைய உணவினைக் கட்டுப்படுத்த முயல்கின்றனர்...அவர்களுக்கு நம்முடைய பதில் என்ன என்பதே முக்கியம்.

நம் உணவு நம் உரிமை!!!

ஞாயிறு, 14 ஏப்ரல், 2013

ஈழம்: ஒரு பார்வை-12 : பிரேமதாசா - புலிகள் - இந்தியா

1988...!!!

இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும் இந்திய அமைதிக் காக்கும் படைக்கும் இடையே யுத்தம் மிகவும் தீவிரமாக நடந்துக் கொண்டு வருகின்றது. அட என்னடா இது...பிரச்சனை சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் தானே...அப்படி இருக்கும் பொழுது அமைதியினை நிலைநாட்டச் சென்ற இந்தியப் படை எதற்காக தமிழர்களுக்கு எதிராக
சண்டையிட வேண்டும் என்றக் கேள்வி இங்கே பலருக்கும் இயல்பாக எழும் (வரலாற்றில் இப்படிப்பட்ட குழப்படிகள் தான் அதிகமாக இருக்கின்றன)...அக்கேள்விக்குரிய விடையினை கணித்துக் கொள்ள உதவுகின்ற சில விடயங்களை நாம் ஏற்கனவே சென்ற பதிவினில் கண்டு இருக்கின்றோம்.

சரி அது இருக்கட்டும்...இப்பொழுது நாம் 1989 ஆம் ஆண்டுக்குள் காலடி எடுத்து வைக்க வேண்டி இருக்கின்றது...அந்த ஆண்டில் தான் ஜெயவர்தனேவை ஓரம் கட்டி விட்டுவிட்டு பிரேமதாசா இலங்கையின் சனாதிபதியாக ஆட்சியில் அமர்கின்றார். ஒரு இக்கட்டான நிலையில் மாட்டிக் கொண்டிருந்த இலங்கை பிரேமதாசாவினைப் பார்கின்றது. பிரேமதாசா இலங்கையைப் பார்க்கின்றார்.

தெற்கே 'எதற்காக இந்திய வீரர்களை இலங்கையினுள் அனுமதித்தாய்...இலங்கையில் இந்தியாவிற்கு என்ன வேலை..திரும்பிப் போகச் சொல் அவர்களை' என்றவாறே சிங்கள போராளி அமைப்புக்கள் போராடிக் கொண்டு இருந்தன. வடக்கேயோ விடுதலைப்புலிகளுக்கும் இந்திய இராணுவத்திற்கும் இடையே பலத்த சண்டை ஓடிக் கொண்டிருக்கின்றது. இலங்கை முழுவதுமே ஒரு குழப்பமான நிலை நிலவிக் கொண்டிருந்தது. ஒரு சனாதிபதியாய் அவரிடம் இருந்து அந்நாடு நிறைய எதிர்பார்த்துக் கொண்டு காத்திருந்தது.

தொடக்கத்தில் இருந்தே இலங்கையில் இந்தியா தலையிடுவதினை அவர் விரும்பி இருக்கவில்லை...அதுவும் குறிப்பாக இந்திய இராணுவத்தினர் இலங்கையில் இருப்பதினை அவர் சிறிதும் விரும்பவில்லை...பின்னே யார் தான் மற்றொரு நாட்டின் இராணுவம் தமது நாட்டினில் இருப்பதனை விரும்புவார்?

சிந்தித்தார் பிரேமதாசா. 'தமிழர்களும் சரி சிங்களவர்களும் சரி இங்கேயே இருப்பவர்கள்...இங்கேயே தான் இருக்கவும் போகின்றோம்...சில பிரச்சனைகள் இருக்கின்றன, ஆனால் அவைகளை நாங்களே பார்த்துக் கொள்ள முடியும்...இந்நிலையில் எதற்காக தமிழர்களும் சிங்களவர்களுக்கும் இடையில் மற்றொரு நாட்டின் தலையீடு? இந்தியா இலங்கையில் இருப்பது சிங்களர்களுக்கும் சரி தமிழர்களுக்கும் சரி நன்மையான ஒரு விடயம் அல்ல...பின்னர் எதற்காக அவர்கள் இங்கே இருக்க வேண்டும்...அவர்கள் செய்த செயல்களுக்கெல்லாம் நன்றி என்று கூறி வழி அனுப்பி விடலாம் தானே' என்று எண்ணி அவ்வாறே செய்யவும் செய்தார்.

"அன்புள்ள இந்தியாவிற்கு... உங்களின் உதவிக்கு மிக்க நன்றிகள்...இங்கே அனைவரும் நலமாக இருக்கின்றோம்...அமைதி தழைத்தோங்கிக் கொண்டிருக்கின்றது. எனவே தங்களின் அமைதிக் காக்கும் படையினை சற்று திரும்பப் பெற்றுக் கொள்கின்றீர்களா...நன்றி...!!!' என்றுக் கூறி போர் நிறுத்தத்தினை அறிவிக்கின்றார்.

பிரேமதாசா அறிவித்த போர் நிறுத்தத்தினை முதலில் சந்தேகத்துடன் பார்த்து அதனை ஏற்காத புலிகளும் சில நாட்களில் போர் நிறுத்தத்தினை அறிவிக்கின்றனர். இலங்கை அதிகாரிகளுக்கும் விடுதலைப்புலிகளின் தலைவர்களுக்கும் இடையே பேச்சு வார்த்தைகளும் நிகழத் தொடங்குகின்றன.

பிரேமதாசாவின் அந்த அறிவிப்பினைக் கேட்ட இந்திய இராணுவம் அதிர்கின்றது...இந்தியாவும் தான்..."என்ன இராணுவம் திரும்ப வேண்டுமா...என்ன சொல்லுகின்றீர்...உங்களுக்கு புலிகளைப் பற்றித் தெரியவில்லை...அவர்கள் இன்னும் பலம் பொருந்தியவர்களாகத் தான் இருக்கின்றனர்...இந்நிலையில் நாங்கள் இல்லை என்றால் இலங்கைக்கு அது மாபெரும் ஆபத்தாக முடியும்" என்று இந்திய இராணுவம் இலங்கையிடம் கூற சிரித்துக் கொண்டே மறுக்கின்றார் பிரேமதாசா.

"இல்லை இருக்கட்டும்...புலிகளைப் பற்றி எங்களுக்கு நன்றாகத் தெரியும்...தெரியவில்லை என்றாலும் இதோ பேச்சுவார்த்தைகள் நிகழ்ந்துக் கொண்டு இருக்கின்றன, அதன் மூலம் தெரிந்துக் கொண்டு விட்டால் போயிற்று அவ்வளவு தானே...இதில் உங்களுக்கு என்ன கவலை...உங்களுக்கு இரு மாதங்கள் அவகாசம் தருகின்றேன்...29 யூலை 1989 க்குள் பத்திரமாக உங்களின் தேசத்திற்கு திரும்பி விடுங்கள்...நன்றி" என்றே ஒரு கெடு நாளினையும் விதிக்கின்றார். புலிகளும் இலங்கை அரசும் போர் நிறுத்தம் அறிவித்து பேச்சு வார்த்தைகளை மேற்கொள்கின்றன. நிற்க...!!!

இங்கே நாம் காண வேண்டிய மற்றொரு விடயமும் உள்ளது... அதே 1989 ஆம் ஆண்டிலேயே தான் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இந்தியாவின் மேற்பார்வையில் நடந்திருந்த தேர்தலில் வெற்றிப் பெற்று வரதராஜ பெருமாள் என்பவர் முதலமைச்சராக பதவி ஏற்று இருந்தார். அத்தேர்தலை பல அமைப்புகள் புறக்கணித்து இருந்தன...விடுதலைப் புலிகளும் தான். தேர்தலைப் புறக்கணித்த விடுதலைப் புலிகள் புதிய முதலமைச்சரையும் புறக்கணிக்கத் தான் செய்தனர்...காரணம் அவர்களின் பார்வையில் வரதராஜ பெருமாள் இந்தியாவின் ஒரு கை பொம்மை... அவ்வளவே. கிட்டத்தட்ட அதே கண்ணோட்டத்தினை பிரேமதாசாவும் கொண்டிருந்தார். அவர்கள் அப்பார்வையினைக் கொண்டமைக்கு காரணங்களும் இல்லாமல் இல்லை.

வரதராஜ பெருமாளினை மற்றொரு ஆயுதப் போராளி இயக்கமான ஈ.பி.ஆர்.எல்.எப் (E.P.R.L.F) அமைப்பு ஆதரித்துக் கொண்டிருந்தது...ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பிற்கு இந்திய அமைதிக் காக்கும் படை தனது ஆதரவினை வழங்கிக் கொண்டிருந்தது. கூடுதலாக அந்த அமைப்பு தமிழ் இளைஞர்களையும் சிறுவர்களையும் வலுக்கட்டாயமாக சேர்த்து ஒரு படையினை உருவாக்கும் முயற்சியிலும் ஈடுப்பட்டு இருந்தனர்...தமிழ் தேசிய இராணுவம் (Tamil National Army T.N.A) என்று அவர்களுக்கென்று ஒரு படையினையும் உருவாக்கிக் கொண்டிருந்தனர்.

இவை அனைத்தும் தான் விடுதலைப் புலிகளையும் சரி பிரேமதாசாவினையும் சரி இந்தியா அதன் நலன்களுக்காக வடக்கிழக்கில் ஒரு பொம்மை ஆட்சியினை உருவாக்கிக் கொண்டிருக்கின்றது...அது நமக்கு நல்லதல்ல என்ற முடிவிற்கு வர வைத்தது. இந்த அடிப்படையிலும் தான் விடுதலைப் புலிகளும் பிரேமதாசாவும் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு வருகின்றனர்...பிரேமதாசா இந்திய இராணுவம் இலங்கையில் இருந்து வெளியேற ஒரு கெடுவும் விதிக்கின்றார்.

சரி..தமிழர்களுக்கும் சிங்களர்களுக்கும் பிரச்சனை, அதை நாம் தீர்த்து வைப்போம் என்றே களம் இறங்கிய இந்தியா நியாயப்படிஇப்பொழுது இலங்கை விதித்துள்ள கெடுவினை மதித்து இலங்கையில் இருந்து கிளம்பி இருக்க வேண்டுமா கூடாதா... கிளம்பி இருக்க வேண்டும் தானே...ஆனால் அது தான் நடக்கவில்லை.

"உங்களுக்கு விவரம் போதவில்லை பிரேமதாசா அவர்களே...புலிகள் ஆபத்தானவர்கள்...எனவே நீங்கள் விரும்பினாலும் சரி விரும்பாவிட்டாலும் சரி உங்களைக் காக்க வேண்டியது எங்களது கடமை..." என்றுக் கூறியே இலங்கையில் தொடர்ந்து இருக்க ஆரம்பிக்கின்றது இந்தியா. அவர்களின் கூற்றினை மெய்ப்பிப்பதினைப் போலவே சில கொலைகள் மற்றும் சம்பவங்கள் இலங்கையில் நடக்கின்றன.

தமிழர் அய்க்கிய விடுதலை முன்னணி தலைவர்கள் அமிர்தலிங்கம் மற்றும் யோகேஸ்வரன், புளோட் இயக்கத் தலைவர் உமா மகேசுவரன் ஆகியோர் கொல்லப்படுகின்றனர். பின்னர் விடுதலைப் புலிகளின் தலைவரான பிரபாகரன் அவருக்கு அடுத்த நிலையில் இருந்த மாத்தையாவினால் கொல்லப்பட்டு விட்டார் என்ற செய்திகளும் வெளி வருகின்றன. அந்த அனைத்துக் கொலைகளுக்கும் விடுதலைப்புலிகளின் இயக்கமே காரணமாக கூறப்படுகின்றது. விடுதலைப்புலிகள் மறுக்கின்றனர்...'நாங்கள் இந்தக் கொலைகளை செய்யவில்லை. இதற்கும் எங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை' என்றே அவர்கள் கூறுகின்றனர்.

அதையே தான் சிங்கள அரசாங்கமும் கூறியது....“அமிர்தலிங்கம் கொலையை நடத்தியதே விடுதலைப் புலிகள்தான் என்று தவறாக, புலிகள் மீது பழிபோடும் முயற்சிகள் நடக்கின்றன. இத்தகைய முயற்சிகள் பற்றி, அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்” - இதுதான் இலங்கை அரசின் அதிகாரபூர்வ பத்திரிகையான டெய்லி நியூஸ் வெளியிட்ட செய்தி. அவர்கள் அவ்வாறு வெளியிட்டதற்கு காரணமும் இருக்கின்றது.

அந்த கொலைகள் நிகழ்ந்த காலம், இலங்கையும் விடுதலைப் புலிகளும் அமைதிப் பேச்சுவார்த்தைகளில் இருந்தக் காலம்...மேலும் முக்கியமாக இந்திய அமைதிப் படை இந்தியாவிற்கு திரும்பிச் செல்ல விதிக்கப்பட்டு இருந்த கெடுக் காலம். யூலை 29 1989 குள் இந்தியா இலங்கையினை விட்டு வெளியேறி விட வேண்டும் என்று பிரேமதாசா கூறி இருந்தார்...அதே நேரத்தில் ஆச்சர்யவசமாக அந்த அனைத்துக் கொலைகளும் யூலை மாதம் 1989 ஆம் ஆண்டிலேயே நிகழப் பெற்று இருந்தன.

இந்திய இராணுவம் வெளியேற வேண்டும் என்பதே முக்கியமான இலக்காக விடுதலைப் புலிகளுக்கும் சரி இலங்கைக்கும் சரி இருந்து வந்த காலத்தில் அதனை கெடுக்கும் வண்ணம் இந்தக் கொலைகளை அப்பொழுது விடுதலைப்புலிகள் செய்வார்களா...மேலும் அதனைச் செய்வதனால் அவர்களுக்கு எந்தொரு நலனும் இல்லையே என்பதனை பிரேமதாசா அறிந்து இருந்தார். அதனால் தான் புலிகள் மீது பிறர் வீண் பழியினைப் சுமத்துகின்றனர் என்று இலங்கை அறிவித்தது.

பிரேமதாசா அறிவித்த கெடுக் காலம் முடிவடைந்த போதும், இந்தியப் படைகள் திரும்பிச் செல்லவில்லை...வடக்கில் ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பு வன்முறைகளை ஏவிக் கொண்டிருந்தது. கூடுதலாக புதிதாக ஒரு படை வேறு அங்கே உருவாக்கப்பட்டுக் கொண்டு இருந்தது.

பிரேமதாசா பார்த்தார்...நிலைமை சரியில்லை. விடுதலைப்புலிகளை அழைத்தார்..."வடக்கே நிலைமை சரியில்லை...நமக்கு எதிராக அங்கே ஏதோ நடந்துக் கொண்டு இருக்கின்றது...அதை நாம் கட்டுக்குள் வைத்தே ஆக வேண்டும்...அதற்கு உங்களுக்கு என்ன வேண்டும்" என்றார்.

"ஆயுதங்கள்..." என்றனர் புலிகள்.

"சரி...!!!" என்றுக் கூறி புலிகளுக்கு ஆயுதங்களை அளித்தார் பிரேமதாசா. வடக்கே மீண்டும் மோதல் தீவிரமடைந்தது. இந்தியப் படைகளுடன் சேர்த்து மற்ற போராளி அமைப்புக்களையும் எதிர்க்க ஆரம்பித்ததனர் புலிகள். சிங்களர்களை நாங்கள் பின்னர் கண்டுக் கொள்கின்றோம்...ஆனால் அதற்கு முன்னர் துரோகிகளை களைய வேண்டி இருக்கின்றது என்றே மற்ற போராளிக் குழுவினரை தாக்க ஆரம்பிக்கின்றனர்.

யுத்தம் சூடு பிடிக்கத் தொடங்குகின்றது. அதே நேரத்தில் தான் இந்தியாவிலும் தேர்தல் களம் சூடாகின்றது. இராசீவ் காந்திக்கு பின்னர் இந்தியாவின் பிரதமராக பதவி ஏற்கின்றார் திரு.வி.பி.சிங்.(என்னைப் பொருத்தவரை இந்தியா இது வரை கண்ட பிரதம மந்திரிகளிலேயே மிகவும் சிறந்த பிரதம மந்திரி இவர் தான் - ஆனால் நல்லவர்கள் ஆண்டார்கள் என்றாலே நம் நாட்டிற்கு ஆகாதே...எண்ணி ஒரே வருடம் இவரின் பிரதமர் பதவிக்கு ஒரு முடிவு விழாவினை கொண்டாடி விட்டார்கள் நம் நாட்டிலே...சரி அது வேறு கதை இப்பொழுது இலங்கைக்கு வருவோம்.)

இந்தியாவின் ஏழாவது பிரதம மந்திரியாக பதவி ஏற்கின்றார் திரு வி.பி.சிங் அவர்கள். இலங்கையைக் காணுகின்றார்...அமைதியினை நிலை நிறுத்தச் சென்று இருந்த படை அங்கே சண்டையிட்டுக் கொண்டிருந்தது...மேலும் படையினை திரும்பப் பெற்றுக் கொள்ளச் சொல்லி இலங்கை அரசாங்கமும் கூறி இருந்தது...இந்தியாவிலும் அக்குரல்கள் கேட்கத் தொடங்கி இருந்தன. சிறிதும் யோசிக்கவில்லை சிங்...அவரின் முடிவில் அவர் தெளிவாக இருந்தார்.

"இந்தியப் படைகளை நாம் திரும்பிப் பெற்றுக் கொள்ளத் தான் வேண்டும்..." என்றார். சிலர் மறுத்தனர்..."அவ்வாறு நாம் செய்தோம் என்றால் அது நமக்கு பெரிய அவமானமாக போய் விடும்" என்றனர். முற்றிலுமாக அதனை மறுத்தார் சிங்.

"அடுத்த நாட்டிலே புகுந்து இவ்வாறு சண்டையிட்டுக் கொண்டிருப்பது தான் அவமானம்...எத்தனை உயிர்கள் பலியாகி இருக்கின்றன...வேறு பேச்சே இல்லை...இந்தியப் படைகள் இலங்கையில் இருந்து திரும்ப வேண்டும்...இது எனது உத்தரவு" என்றார்.

இந்தியப் படைகள் இலங்கையில் இருந்து கிளம்ப ஆரம்பித்தன. முதன் முதலில் அப்படைகள் இலங்கையில் கால் வைத்தப் பொழுது ஆரவாரத்தோடு அவர்களை தமிழ் மக்கள் வரவேற்று இருந்தனர். ஆனால் வழி அனுப்புவதற்கு ஒருவர் கூட இல்லாத நிலையில் இந்திய வீரர்கள் இந்தியா திரும்பினர்.

ஆதரிக்க இந்தியப்படைகள் இல்லாத நிலையில் மற்ற போராளி அமைப்புக்களால் விடுதலைப் புலிகளை சமாளிக்க முடியவில்லை. வரதராஜ பெருமாள் சிறிது தாக்குப் பிடிக்கப் பார்த்தார்...ஆனால் அவர்கள் உருவாக்கிய தமிழ் தேசிய இராணுவம் புலிகளின் முன்னால் நிற்க முடியாது வீழ, வரதராஜ பெருமாள் இந்தியாவினுள் அடைக்கலம் புகுந்தார்.

ஒரு வழியாக இந்தியப் படைகள் இலங்கையில் இருந்து வெளியேறி விட்டு இருந்தன...ஆனால் அரசியல் வெளி ஏறவில்லை...!!!

தொடரும்...!!!

பின் குறிப்பு:

1) தொடர்புடைய இடுகைகள்...

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=15623:-5&catid=1342:2011&Itemid=589
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=15961:1988-90-8&catid=1355:2011&Itemid=602
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=15505:-4&catid=1342:2011&Itemid=589
http://www.island.lk/index.php?page_cat=article-details&page=article-details&code_title=72476
http://expressindia.indianexpress.com/news/ie/daily/19980418/10850534.html
http://www.island.lk/index.php?page_cat=article-details&page=article-details&code_title=72857

ஞாயிறு, 31 மார்ச், 2013

ஈழம்: ஒரு பார்வை-11 : இந்திய அமைதிக் காக்கும் படை

சென்ற பதிவில் இந்தியா இலங்கையினுள் நுழைந்ததற்கு அதனுடைய அரசியல் நோக்கே காரணமாக இருக்கலாம் என்றுக் கண்டோம். அதற்காகத் தான் அதனுடைய படைப்பிரிவு ஒன்றினை இலங்கைக்கு அமைதியினைக் காக்கும் வண்ணம் அனுப்பியும் வைத்தது என்றும் கண்டோம்.

ஆனால் இது நம்புவதற்கு எளிதான ஒன்று அல்ல. ஒரு வேளை இந்தியா தமிழர்களின் நலன்களுக்காகவே தனது இராணுவத்தினை அனுப்பி இருக்கலாம். எனவே சான்றுகள் இன்றி இந்தியாவினைக் குறைக் கூறுவது சரியானதொரு செயலாக அமையாது. எனவே இந்நிலையில் என்ன நடந்தது என்பதனை சான்றுகளுடன் கண்டால் மட்டுமே நம்மால் எதையும் உறுதியாகக் கூறவோ அல்லது கருதவோ முடியும்.

சரி...இந்திய அரசு இட்டுக் கொண்ட ஒப்பந்தத்தின் படி தமிழ் ஆயுதப் போராளி இயக்கங்கள் தங்களது ஆயுதங்களை இந்திய இராணுவத்திடம் ஒப்படைக்க முடிவு செய்து விட்டன. அதன் முடிவின் படியே அந்த இயக்கங்களும் தங்களது ஆயுதங்களை ஒப்படைக்கவும் செய்கின்றன.

"சிறிது சிறிதாக ஆரம்பித்த ஆயுதங்களை ஒப்படைக்கும் பணி விரைவில் துரிதமாக நடைப்பெற ஆரம்பித்தது. மற்ற ஆயுத போராளி இயக்கத்தினைச் சார்ந்தவர்கள் தனித் தனியாக ஆயுதங்களை ஒப்படைத்துக் கொண்டு இருந்தப் பொழுது, விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் மிகுந்த கட்டுப்பாடுடன் ஒற்றுமையாக ஆயுதங்களை ஒப்படைத்துக் கொண்டு இருந்தனர். எங்களுக்கு இந்த இடத்தில் இந்த நேரத்தில் ஆயுதங்களைத் தாங்கிய வண்டி வந்துச் சேரும் என்றத் தகவல் வரும்...அதே நேரத்தில் ஆயுதங்களுடன் வண்டியும் வந்துச் சேரும், ஆயுதம் தாங்கிய விடுதலைப் புலி காவலர்களுடன். அவ்வாறு வந்த ஆயுதங்களைப் பார்க்கும் பொழுது சில புதிய ரக ஏவுகணை செலுத்திகளைப் பார்த்தேன். விடுதலைப் புலிகளே அவற்றைத் தயாரித்து இருந்தனர். அதன் செயலாற்றலைக் கண்ட பொழுது இந்தியா விரும்பினால் அவர்கள் இந்தியாவிற்கும் சேர்த்தே அதனை தயாரித்துக் கொடுத்து இருப்பர் என்று ஆயுதங்களை வழங்க வந்த போராளி என்னிடம் தெரிவித்தார்" என்று இந்திய அமைதிக் காக்கும் படையின் தலைமை அதிகாரியான தீபிந்தர் சிங் அவரது 'இலங்கையில் இந்திய அமைதிக் காக்கும் படை' என்ற நூலினில் கூறுகின்றார்.

இதன் மூலம் ஆயுதங்களை ஒப்படைக்கும் பணிகள் நல்ல விதமாக நடைப்பெற்றுக் கொண்டு இருந்தன என்றும், இருந்த ஆயுதம் தாங்கிய அமைப்புகளில் விடுதலைப் புலிகள் பலம் பொருந்தியதாகவும் கட்டுப்பாடுடன் கூடிய ஒரு இயக்கமாக இருந்தது என்பதும் தெரிய வருகின்றது.

இந்நிலையில் இந்தியாவின் நோக்கம் உண்மையிலேயே அமைதியினை நிலை நாட்டுவதாக இருந்திருந்தால் அது கொடுத்த வாக்கு உறுதிகள் அனைத்தினையும் நிச்சயம் நிறைவேற்றி இருக்கும். ஆனால் நடந்ததோ வேறுவிதமாக இருக்கின்றது.

“விடுதலைப் புலிகள் வாகனங்கள் அணிவகுத்து வந்து தங்களின் வெடிமருந்துகள், துப்பாக்கிகளை ஒப்படைத்தன. பிறகு, அவர்களே தொல்லைக்கு உள்ளானார்கள். காரணம், உளவு நிறுவனமான ‘ரா’, ‘ஈ.பி.ஆர். எல்.எப்.’ என்ற குழுவுக்கு ஆயுதங்களை வழங்குவதை நிறுத்தாமல் தொடர்ந்து கொண்டிருந்தது. இதைச் செய்தது இந்திய உளவு நிறுவனமான ‘ரா’. இந்திய வெளிநாட்டுத் துறை அமைச்சகத்துக்கும் இது தெரியும். தீட்சத்துக்கும் (இலங்கைக்கான இந்திய தூதர்) இது தெரியும். ஆனால் அவர்கள் அதைத் தடுத்து நிறுத்தவில்லை. இதன் காரணமாக ஆகஸ்ட் 21 ஆம் தேதியோடு ஆயுத ஒப்படைப்பு (புலிகளால்) நிறுத்தப்பட்டது. எல்லாம் மோசமான நிலைக்கு திரும்பியது. ‘அமைதிப்படைக்கு’ எதிராக அவர்கள் (புலிகள்) ஆர்ப்பாட்டங்களைத் தொடங்கினர்” என்று தனது புத்தகமான 'இலங்கையில் இந்தியத் தலையீடு' இல் எழுதுகிறார் ஹர்சிரத் சிங் - இவர் இந்திய அமைதிப் படைக்கு தலைமை தாங்கச் சென்ற தளபதி.

மேலும் "தீட்சத்தின் எண்ணத்தின் படி இந்திய அமைதிக் காக்கும் படையின் முக்கிய பணியே தமிழக மக்களின் பார்வையில் விடுதலைப் புலிகளை மட்டமானவர்களாக ஆக்க வேண்டும் என்பதே" என்றும் அவர் கூறி இருக்கின்றார்.

மேலும் இந்திய உளவுத்துறை மற்ற ஆயுதப் போராளி அமைப்புக்களுக்கு ஆயுதங்களை வழங்கி வருகின்றது என்று பிரபாகரன் தன்னிடம் கூறியிருப்பதாக ஹர்சிரத் சிங்கும் சரி...தீபிந்தர் சிங்கும் சரி அவர்களது நூல்களில் கூறி இருக்கின்றனர்.


மேலும் இன்னொரு அதிர்ச்சிகரமான தகவல் என்ன என்றால் போர் நிறுத்தக் காலத்தில் இந்தியப் படையினருடன் சமாதானமாக பேச வந்த பிரபாகரனை சுட்டுக் கொன்று விடுமாறு இராசீவ் காந்தி ஆணையிட்டதாக ஹர்சரத் சிங் கூறுகின்றார்.

“1987 ஆம் ஆண்டு 14/15ஆம் தேதி நள்ளிரவு எனக்கு தீட்சத்திடமிருந்து ஒரு தொலைபேசி வந்தது. பிரபாகரன் சந்திக்க வரும்போது அவரை கைது செய்யுங்கள் அல்லது சுட்டு விடுங்கள்” என்று கூறினார். மீண்டும் நான் தொடர்பு கொள்கிறேன் என்று அவரிடம் கூறிவிட்டு, தலைமை அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் தீபிந்தர் சிங்கிடம் இதைத் தெரிவித்தேன். அதற்கு அவர், “நமது ராணுவம் மரபுகளைக் கொண்டது. வெள்ளைக் கொடியின் கீழ் நம்மிடம் பேச வருவோரை, நாம் முதுகில் சுட முடியாது. இதை தீட்சத்திடம் தெரிவித்து விடுங்கள்” என்று என்னிடம் கூறினார். நான் தீட்சத்திடம் தொடர்பு கொண்டு உங்களது ஆணையை என்னால் நிறை வேற்ற முடியாது என்று கூறி விட்டேன். உடன் பாட்டை அமுல்படுத்துவது தொடர்பாக விவாதிக்கவே புலிகள் தலைவரை அழைத்துள்ளோம் என்று கூறினோம். அதற்கு தீட்சத், “எனக்கு ராஜீவ்காந்திதான் இந்த ஆணையைப் பிறப்பித்துள்ளார். ராணுவம் தனது கடமையிலிருந்து ஒதுங்கிக் கொள்ளக் கூடாது; படைத் தளபதி என்ற முறையில் நீங்கள் இந்தப் பொறுப்பை ஏற்க வேண்டும் என்றார்” - என்று ஹர்சிரத்சிங் தனது “Intenvention in Srilanka” நூலில் பக்.57 இல் குறிப்பிடுகிறார்.

ஏன் அவர்கள் அவ்வாறுக் கூற வேண்டும்? தமிழர்களின் நலனுக்காக போன இந்தியப்படைகள் எதற்காக விடுதலைப்புலிகளை குறிப்பாக எதிர்க்க வேண்டும்? ஏன் பிரபாகரனை குறி வைக்க வேண்டும்?

இந்தக் கேள்விகளின் பதிலில் தான் இந்திய உளவுத்துறை ஒளிந்திருக்கின்றது என்று பலர் கருதுகின்றனர்.

நாம் முன்னரே கண்டு இருக்கின்றோம்...ஈழத்தில் பல்வேறு தமிழ் அமைப்புக்கள் ஆயுதமேந்தி போராடிக் கொண்டு இருந்தன என்று. அவற்றுள் விடுதலைப் புலிகள் இயக்கம் சிறந்த ஒன்றாக மக்களின் மத்தியில் செல்வாக்குடன் இருந்து வந்தது. இந்நிலையில் தான் இந்தியா அவ்வமைப்புகளைப் பார்க்கின்றது. இந்தியாவிற்குத் தேவை இந்தியாவிற்கு கட்டுப்பட்ட ஒரு இயக்கம்...அவ்வாறு இருந்தால் தான் இந்தியாவின் கை அங்கே ஓங்கி இருக்கும்( அனைத்து வல்லரசு நாடுகளும் இதைத் தானே செய்கின்றன... தான் செல்லும் இடங்களில் அவைகளுக்கு வேண்டியது அவைகளின் சொல்லிற்கு தலை ஆட்டும் ஒரு பொம்மை அரசு அவ்வளவே). அதற்காகத் தான் இந்தியா அதன் காய்களை நகர்த்துகின்றது. ஆனால் அங்கே தான் ஒரு சிக்கல் இருக்கின்றது.

விடுதலைப் புலிகள் - பிரபாகரன். அவர்கள் முன்னின்றது மக்களின் உரிமைக்காக. இந்நிலையில் அவர்களை ஒன்றும் செய்யாமல் இந்தியாவினால் அதன் செல்வாக்கினை அப்பகுதிகளில் வளர்த்துக் கொள்ள முடியாது. அதனால் தான் விடுதலைப் புலிகளின் ஆயுத பலத்தை குறைத்த அதே சமயம் மற்ற இயக்கங்களுக்கு ஆயுதங்களை தாரளமாக வழங்கியது இந்தியா...அதனால் தான் மக்களின் மத்தியில் விடுதலைப் புலிகளின் செல்வாக்கினைக் குறைக்கவும் அதன் தலைவரான பிரபாகரனை கொல்வதற்கும் இந்தியா முயற்சிகளை மேற்கொண்டது. பல்வேறு அமைப்புகளுக்கு உள்ளே பிரச்சனைகளை கிளப்பி விட்டும், ஆட்களை தன் வசப்படுத்திக் கொண்டு பிரிவினைகளைத் தோற்றுவித்தும் இந்தியா அதன் செல்வாக்கினை அங்கே வளர்த்துக் கொள்ள முயன்றது.

ஆனால் விதி வேறு விதமாக செயல்பட்டது.

திலீபனின் மரணம் (இந்தியா தனது கோரிக்கைகளைக் கேட்க வேண்டும் என்று சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து இறந்தார்) மற்றும் போர் நிறுத்தம் அமுலில் இருந்தும் ஒப்பந்தத்திற்கு மாறாக விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் 17 பேர் இந்திய இராணுவத்தினரால் பிடிக்கப்பட்டு இலங்கை அரசிடம் ஒப்படைக்கப்பட்ட நிகழ்வு (அவர்கள் அனைவரும் பின்னர் சயனைட் அருந்தி உயிர் இழந்தனர்) போன்ற நிகழ்வுகள் விடுதலைப் புலிகளை மீண்டும் ஆயுதம் ஏந்தச் செய்தன.

இம்முறை எதிரிகளாக சிங்களர்களுடன் சேர்ந்துக் கொண்டது இந்திய இராணுவமும் தான். விடுதலைப் புலிகளுக்கும் இந்திய இராணுவத்திற்கும் சண்டை ஆரம்பமாயிற்று. இன்று சிங்கள இராணுவம் தமிழர்களுக்கு என்ன கொடுமைகளை எல்லாம் செய்து இருக்கின்றதோ அவை அனைத்தும் அன்றே இந்திய இராணுவம் செய்து இருந்தக் கொடுமைகளே.

1987 இல் ஆரம்பித்த அந்தச் சண்டை 1990 இல் ஒரு முடிவிற்கு வந்தது. அதற்கு காரணம் இந்தியாவிலும் சரி இலங்கையிலும் சரி... அப்பொழுது ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்டு இருந்தன.

தொடரும்...!!!

பின் குறிப்பு:

1) தொடர்புடைய இடுகைகள்...
http://www.keetru.com/periyarmuzhakkam/feb09/vidhuthalairajendran.php
http://www.keetru.com/history/tamilnadu/rajiv_gandhi.php
http://www.atimes.com/ind-pak/DD13Df02.html

2) இந்திய இராணுவத்தின் போர் குற்றங்கள்
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=16991:-2&catid=1380:2011&Itemid=629
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=17147:-3&catid=1380:2011&Itemid=629
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=16348&Itemid=139
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=17181&Itemid=139
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=17147:-3&catid=1380:2011&Itemid=629
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=17590&Itemid=139
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=17739&Itemid=139
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=17939&Itemid=139
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=16462:-11&catid=1367:2011&Itemid=615

3) இந்திய உளவுத் துறையின் செயல்பாடு
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=15961:1988-90-8&catid=1355:2011&Itemid=602
http://www.frontlineonnet.com/fl2418/stories/20070921505807900.htm

ஈழம்: ஒரு பார்வை-10 : இந்தியாவும் இலங்கையும்

"12 சதவீத தமிழ் மக்களுக்காக இந்தியா கவலை கொள்கிறது. ஆனால் இலங்கையில் உள்ள 75 சதவீத சிங்கள சமூகத்தினர் ஓடீசா மற்றும் வட இந்தியா மாநிலங்களை சேர்ந்தவர்கள் என்றும், அவர்களின் உரிமைகளை பாதுகாப்பதில் தான் இந்தியா கவலைப்பட வேண்டும்" - இலங்கை தூதர் பிரசாத் காரியவாசம்.

சரினே...இங்கிருந்து அங்க போனவங்க தான நீங்க...அப்புறம் எதுக்கு போன இடத்துல ஒழுங்கா அமைதியா வாழாம நீங்க தனி நாடு கேட்குறீங்க...அதுவும் அந்த நாட்டுல உங்க மொழியே ஆட்சி மொழியாவும் வேணுமாம்...ஏன் தேவை இல்லாம இப்படி அழிச்சாட்டியம் பண்றீங்க...பேசாம இந்தியாவுக்கே வந்துருங்க...நீங்க இருந்த வட நாட்டிலேயே நீங்க உங்க உரிமையோட வாழ நிச்சயம் மத்திய அரசு வழி செய்யும்...அத விட்டுபுட்டு அங்கே இருக்கிற பூர்வக் குடியான தமிழன அடிக்கிறது எந்த விதத்துல நியாயம்...!!!

இது முகநூலில் நான் ரசித்த ஒரு கருத்து. சரி இருக்கட்டும் இப்பொழுது நமது கதைக்கு வருவோம்.

இந்தியாவில் இந்திரா கொலை செய்யப்பட்டு இருக்கின்றார். அவருக்கு பின்னர் ராசீவ் காந்தி பிரதமராக பதவி ஏற்றுக் கொண்டு இருக்கின்றார். காலம் 1984 ஆம் ஆண்டு. ஈழத் தமிழர்களுக்கும் சிங்களர்களுக்கும் இடையே இருந்தப் போராட்டம் மிகவும் தீவிரமானதொன்றாக மாறத் தொடங்கி இருந்தக் காலக்கட்டம்.

இலங்கையின் பிரதம மந்திரியாக ஜெயவர்தனே இருக்கின்றார். தமிழ் ஆயுதப் போராளி இயக்கங்களுள் விடுதலைப் புலிகள் முக்கியமானதொரு அமைப்பாக உருவாகி இருக்கின்றனர்.

யாழ்ப்பாண நூலக எரிப்பு (கிட்டத்தட்ட 90000 விலைப் மதிக்கப் பட முடியாத தமிழ் நூல்கள், ஏடுகள், சுவடிகள் போன்றவைகள் ஒரே இரவில் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன), 1983 தமிழர்களுக்கு எதிரான இனக் கலவரம் (கருப்பு யூலை... கிட்டத்தட்ட 3000 தமிழர்கள் அவர்கள் தமிழர்கள் என்ற ஒரே காரணத்திற்காக கொல்லப்பட்டனர்) போன்றவைகள் சிங்களர்களால் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டு இருந்தன. பல்லுக்கு பல் இரத்தத்திற்கு இரத்தம் என்று அங்கங்கு தமிழர்களுக்கும் சிங்களர்களுக்கும் மோதல்கள் நிகழ்ந்த வண்ணமே இருந்துக் கொண்டு இருந்தன.

இக்காலத்தில் தான் இராசீவ் காந்தி இந்தியாவின் பிரதமராக வருகின்றார். இள வயது...இந்தியாவினை ஆசியாவில் வல்லரசான நாடாக மாற்ற வேண்டும் என்ற கனவு...வல்லரசென்றால் நம்மைச் சுற்றி இருக்கும் நாடுகள் அனைத்தும் நமது கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும்...நாம் அவை அனைத்திற்கும் 'பெரிய அண்ணனாக' இருக்க வேண்டும்...சரி தானே..அந்த கண்ணோட்டத்துடன் தான் இலங்கையை அவர் பார்கின்றார்.

ஒரு சிறியத் தீவான இலங்கையில் பிரச்சனைகள் நிகழ்ந்துக் கொண்டு இருக்கின்றன. இந்நிலையில் வல்லரசுக் கனவினைக் கொண்ட ஒரு பெரிய நாடு என்ன செய்ய வேண்டும்...சிறிய நாட்டின் பிரச்சனையினுள் தலையிட்டு அதனைத் தீர்த்து வைக்க வேண்டும்...அப்படிச் செய்தால் தானே அது வல்லரசான ஒரு நாடு என்றுப் பொருள் படும். அதையேத் தான் இராசீவும் செய்ய எண்ணுகின்றார்.

"என்னயா நடக்கின்றது அங்கே இலங்கையில்... தமிழர்கள் தனி நாடு கேட்கின்றார்களே...நாம் என்ன செய்வது" என்றவாறே அவர் சிந்திக்க அவரைச் சுற்றி இருந்தவர்கள் "சிங்களர்களை நம்ப முடியாது...ஆனால் அதே நேரம் தமிழர்களுக்கும் தனி நாடு கொடுக்கக் கூடாது...பின்னர் இந்தியாவிலும் அக்குரல்கள் எழும்பக் கூடும்....இரண்டுமே இந்திய நலன்களுக்கு மாறானவை...நாம் செய்ய வேண்டியது நிலைமையை பயன்படுத்திக் கொண்டு நமக்கு சாதகமான அரசினை, சூழலை இலங்கையில் இந்நேரத்தில் உருவாக்கிக் கொள்வதனை மட்டுமே..." என்றுக் கூற வல்லரசுக் கனவிலிருந்த இராசீவும் அவர்களின் கூற்றினை ஏற்றுக் கொண்டார். இலங்கையைக் குறித்த இந்தியாவின் நிலைப்பாடு மாற ஆரம்பித்தது....மறைமுகமாக. மறைமுகமாக என்றால் அங்கே இந்திய உளவுத் துறை இல்லாமலா?

இலங்கை அரசியலுள் தனது மூக்கினை நுழைக்க ஆரம்பித்தது இந்திய உளவு அமைப்பான 'ரா (RAW)'. இன்றைக்கு இலங்கையில் உள்ள பிரச்சனைகள் பலவற்றுக்கும் இதுவே அடிப்படைக் காரணமாக இருக்கலாம் என்பதனை வரலாறு நமக்கு காண்பிக்கின்றது.

சரி இருக்கட்டும்...இலங்கையின் மேல் இந்தியாவின் ஆதிக்கத்தை நிறுவுவதே இலக்கு என்று முடிவு செய்யப்பட்டதின் பின்னர் எவ்வாறு அதனை நடைமுறைப்படுத்துவது என்று பார்க்க வேண்டாமா...அதில் தான் இந்தியா முழு மூச்சாக ஈடுப்பட ஆரம்பித்தது.

'இரண்டுத் தரப்பினருக்குள்ளும் அமைதி ஒப்பந்தங்கள் ஏற்படுத்திக் கொள்ளச் செய்யலாம்...ஆனால் அமைதி என்பது வெளிப்புற அமைதியாகவே இருக்க வேண்டும்...அதே நேரம் இலங்கையில் உள்ள பல்வேறு ஆயுதப் போராளிக் குழுக்களில் நம்முடைய எண்ணத்திற்கு யார் சரிப்பட்டு வருவார்களோ அவர்களுக்கு மறைமுகமாக ஆயுத உதவி செய்து அவர்களை வலுப்படுத்திக்கொள்ளலாம்...பின்னர் என்றாவது தேவை என்றால் அவர்களை நாம் நம்முடைய வசதிக்காக பயன்படுத்திக் கொள்ளலாம்...இதன் மூலம் இலங்கையில் நம்முடைய பிடியை வலுவாகவே வைத்துக் கொள்ளலாம். மேலும் நம்முடைய இராணுவத்தின் ஒரு பகுதி இங்கே இருந்தால் நமக்கும் நலமாக இருக்கும். ஆம்...அவ்வாறே செய்யலாம்' என்று முடிவினை எடுத்துக் கொண்டு இலங்கையினை பேச்சு வார்த்தைக்கு அழைத்தது இந்தியா.

1987 ஆம் ஆண்டு இராசீவிற்கும் ஜெயவர்தனேவிற்கும் இடையிலான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. (அந்த ஒப்பந்தத்தினைப் பற்றிப் பார்க்க இந்த இணைப்பினை சொடுக்கவும்)

ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்களாக தமிழர்களுக்கு எதிரான சிங்கள இராணுவ நடவடிக்கைகள் நிறுத்தப்படும். தமிழ் ஆயுதப் போராளி இயக்கங்கள் தங்களது ஆயுதங்களை இந்திய இராணுவத்திடம் ஒப்படைக்க வேண்டும். தமிழர்களுக்கென்று வடக்கு கிழக்கு மாகாணங்கள் ஒன்றிணைக்கப்பட்டு அங்கே தேர்தலின் வாயிலாக ஒரு அரசு அமைக்கப்படும். மேலும் அனைத்தும் நன்றாக நடக்கின்றனவா என்பதனை சரி பார்க்க இந்தியாவில் இருந்து ஒரு அமைதிப்படை அங்கே அனுப்பி வைக்கப்படும்.

தமிழர்களின் உரிமைக்காகவென்று போடப்பட்ட ஒரு ஒப்பந்தத்தில் தமிழர்கள் சார்பாக யாருமே சேர்க்கப்படவில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்க ஒரு விடயமாகும்.

பிரபாகரன் இந்தியாவினை சந்தேகக் கண்ணோடு பார்த்தார். ஒப்பந்தத்தினை அவர் முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை. அதன் மூலம் தமிழர்களுக்கு நன்மை நேரும் என்ற நம்பிக்கை அவருக்கு வரவில்லை. இருந்தும் இராசீவ் காந்தி பிரபாகரனுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நம்பி, என்ன தான் நடக்கின்றது என்றுக் காண தயாரானார். அதனைப் பற்றி தமிழ் மக்கள் மத்தியில் யாழ்பாணத்தில் நிகழ்ந்த பொதுக் கூட்டத்தில் பிரபாகரன் பேசியதாவது...

"எமது மக்களின் பாதுகாப்புப் பிரச்சினை பற்றியும், அதற்கான உத்திரவாதங்கள் பற்றியும் அவரிடம் (ராஜீவ் காந்தியிடம்) பேசினேன். பாரதப் பிரதமர், எமக்கு சில வாக்குறுதிகளை அளித்தார். எமது மக்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளித்தார். பாரதப் பிரதமரின் நேர்மையில் எமக்கு நம்பிக்கை இருக்கிறது. சிங்கள இனவாத அரசு மீண்டும் தமிழர் இன அழிப்பு நடவடிக்கைகளில் இறங்க இந்தியா அனுமதிக்கக் கூடாது என நாம் நம்புகிறோம். இந்த நம்பிக்கையில் சமாதானப் படையிடம் (இந்திய ராணுவம்) ஆயுதங்களை ஒப்படைக்க முடிவு செய்தோம். நாம் இந்த ஆயுதங்களை ஒப்படைக்கும் கணத்திலிருந்து (நேரத்திலிருந்து) எமது மக்களுக்கான பாதுகாப்புப் பொறுப்பையும் இந்தியாவிடம் ஒப்படைக்கிறோம்” - என்று அறிவித்தார்.

விடுதலைப்புலிகள் ஆயுதங்களை ஒப்படைக்க தயார் ஆயினர்.

ஆனால் உண்மையில் இந்தியாவின் அந்த ஒப்பந்தத்தை பலர் அன்று சந்தேகக் கண்ணோடு தான் கண்டுக் கொண்டு இருந்தனர். பலருக்கு அது பிடிக்கவில்லை... தமிழர்களுக்கும் சரி...சிங்களர்களுக்கும் சரி. அதன் விளைவு தான் ராசீவ் இலங்கையில் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு முடித்த நாளான 30 யூலை 1987 ஆம் ஆண்டு தெரிந்தது.

இராசீவை வரவேற்ற இலங்கை இராணுவ வீரர்களில் ஒருவன் தனது துப்பாக்கியினால் இராசீவை தாக்க முயன்றான். மயிரிழையில் உயிர் தப்பினார் இராசீவ். நல்லவேளை அணிவகுப்பில் கலந்துக் கொண்ட வீரர்களின் துப்பாக்கியில் குண்டுகள் போட்டிருக்கப்படவில்லை. மாறி போடப்பட்டு இருந்தாலோ அன்றே இராசீவ் கொல்லப்பட்டு இருக்கக் கூடும்.

ஆனால் ஏனோ தெரியவில்லை அந்த நிகழ்வினைப் பற்றி இன்று எந்தக் காங்கிரசுக்காரர்களும் பேசுவதில்லை....சிங்களர்களை அவர்கள் பாராட்டிக் கொண்டு இருக்கின்றனர்.

சரி இருக்கட்டும்...இந்தியாவில் இருந்து அமைதியினை காக்க படை வீரர்கள் இலங்கையில் இறங்கத் துவங்கி விட்டனர்...தமிழ் ஆயுதப் போராளிகள் தங்களின் ஆயுதங்களை ஒப்படைக்க துவங்கி விட்டனர்... அடுத்து என்ன நடந்தது/நடந்து இருக்கலாம்...காணலாம்...!!!

தொடரும்....!!!

பி.கு:

1) இக்கருத்துக்களில் தங்களுக்கு மாற்றுக் கருத்துக்கள் ஏதேனும் இருப்பின் தயைக் கூர்ந்து தெரிவிக்கவும். அது எனது சிந்தனையை செம்மையாக்க உதவும். வழக்கம் போல் உங்களின் கேள்விகளும் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

2) தொடர்புடைய இடுகைகள்...
http://www.keetru.com/periyarmuzhakkam/feb09/vidhuthalairajendran.php
http://www.keetru.com/history/tamilnadu/rajiv_gandhi.php
http://en.wikipedia.org/wiki/Vijitha_Rohana

ஞாயிறு, 24 மார்ச், 2013

ஈழம்: ஒரு பார்வை-9 : இந்திராவும் இலங்கையும்

"வேண்டும் தனி நாடு...!!!"

1970 களில் பெருன்பான்மையான ஈழத் தமிழர்களின் மத்தியில் இருந்த சிந்தனை இது தான். சிங்களவர்களின் அடக்குமுறை, இளைஞர்களின் எழுச்சி, அமைதியானப் போராட்டங்களின் தோல்விகள் என்றுப் பல காரணிகள் அவர்களை அம்முடிவிற்கு வர வைத்து இருந்தாலும் அவர்களை மேலும் கனவுக் காணவும் தனி நாடுக் குறித்துப் போராடவும் வைத்த மற்றுமொரு நிகழ்வும் இருக்கத்தான் செய்தது.

அது தான் வங்க தேசப் பிரிவினை.

1971 இல் அன்றைக்கு மேற்கு பாகிஸ்தானுக்கும் (இன்றைய பாகிஸ்தான்) கிழக்கு பாகிஸ்தானுக்கும் (இன்றைய வங்காள தேசம்) இடையில் நிகழ்ந்த மோதலில் இந்திரா காந்தியின் தலைமையில் இந்தியா கிழக்கு பாகிஸ்தான் மக்களுக்கு ஆதரவு அளித்து அவர்களுக்கு வங்காள தேசம் என்ற தனி நாட்டினைப் பெற்றுத் தந்து இருந்தது.

அந்த நிகழ்வினைத் தான் ஈழத் தமிழர்கள் ஆர்வத்துடன் கண்டுக் கொண்டு இருந்தனர்...'கண்டீர்களா...இந்தியா வங்காளதேசத்திற்கு விடுதலைப் பெற்றுத் தந்து விட்டது. ஒரு வழியாக வங்காளத்து மக்கள் விடுதலை அடைந்து விட்டார்கள்... இன்று அவர்கள்... நாளை நாம்... ஏன் நடக்காது...நம்முடைய உறவுகள் இந்தியாவில் இருக்கின்றார்கள் தானே... நிச்சயம் நமக்காக அவர்கள் குரல் கொடுப்பார்கள்...இந்தியா நிச்சயம் நமக்கு உதவி செய்யும்...நாமும் வங்காள மக்கள் போல் விரைவில் சுதந்திரம் அடைந்து விடுவோம்...!!!" என்றே அவர்கள் நம்பிக்கையுடன் இந்தியாவினைக் கண்டுக் கொண்டு இருந்தனர்.

இந்தியாவும் அவர்களைக் கண்டுக் கொண்டு தான் இருந்தது. இந்த நிலையில் தான் நாம் அன்றைய உலக அரசியல் நிலவரத்தினை சற்றுக் கண்டு விட வேண்டி இருக்கின்றது.

இந்தியாவினை எடுத்துக் கொண்டோம் என்றால் அதன் வடக்கு எல்லையில் இருக்கும் நாடுகளுடன் நட்புறவுகள் என்று ஏதும் பெரிதாக இல்லை...காரணம் அனைத்து நாடுகளும் ஆசியாவிலே யார் வல்லரசு ஆவது என்ற போட்டியினிலே ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டு இருந்தன...அதன் காரணமாக வடக்குப் பகுதியில் யுத்தம் என்பது சர்வ சாதாரணமான ஒரு விடயமாக இருந்து வந்தது.

ஆனால் இந்தியாவின் தெற்குப் பகுதியிலோ அதற்கு முற்றிலும் மாறுப்பட்ட ஒரு சூழலே நிலவி வந்தது. காரணம் மூன்று புறமும் கடல் சூழ்ந்து உள்ள தென்னாட்டின் மீது எவரும் இலகுவில் படை எடுத்து வந்து விட முடியாது. அதன் காரணமாக வட இந்தியாவினை விட தெற்கு இந்தியா மிகவும் பாதுகாப்பானதொன்றாக இருக்கின்றது. தென் இந்தியாவின் மீது தாக்குதல் நிகழ்த்த வேண்டும் என்றால் ஒன்று மாபெரும் கடற்படையோடு வர வேண்டும்...இல்லையெனில் இந்தியாவின் காலின் கீழ் சிறு கண்ணீர்த் துளியினைப் போன்று இருக்கும் தீவான இலங்கையினை அவர்களின் கட்டுப்பாட்டுக்குள் வைத்து இருக்க வேண்டும்.

இது அமெரிக்காவிற்கு தெரியும்...சீனாவிற்கு தெரியும்...பாகிஸ்தானிற்கு தெரியும்...இந்தியாவிற்கும் தெரியும்...!!! அந்த ஒரு காரணத்தினாலேயே தான் அந்நாடுகளுக்கு இலங்கையின் மீது ஒரு கண் இருந்துக் கொண்டே தான் இருக்கின்றது. (இன்றும் கூட பல உலக நாடுகள் இலங்கைக்கு உதவிக் கொண்டு இருப்பதற்கு இது ஒன்று தான் முக்கியமானக் காரணம்)

மேலாக இந்தியா 1970 களிலும் சரி 1980 களிலும் சரி ஒரு தீவிர சோவியத் ஆதரவு நாடாகத் தான் இருந்தது...சோவியத் ஆதரவு என்றாலே அமெரிக்க எதிர்ப்பு என்பது அங்கே இயல்பாகவே வந்து விடும் தானே. இந்தியா அப்படி ஒரு நாடாகத் தான் இருந்தது அக்காலத்தில்.

அக்காலத்தில் தான் இந்திரா காந்தி இலங்கையினைக் கண்டுக் கொண்டு இருக்கின்றார்...தமிழர்கள் அங்கே தனி நாடுக் கேட்கத் தொடங்கி இருக்கின்றனர்...அவர்களுக்கு ஆதரவாக தமிழ் நாட்டிலும் குரல்கள் எழும்பத் தொடங்கி உள்ளன. மேலும் இலங்கை அமெரிக்காவிற்கு ஆதரவாக வேறு செயல்பட்டுக் கொண்டு இருக்கின்றது...அது போதாதென்று பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் வேறு நல்லுறவுகள் இருந்துக் கொண்டே தான் இருக்கின்றது.

இந்திரா காந்தி சிந்திக்கின்றார்..."எந்நேரம் வேண்டும் என்றாலும் இலங்கை இந்தியாவிற்கு எதிராகத் திரும்பும் வாய்ப்புகள் இருக்கின்றன... ஏற்கனவே அமெரிக்கர்களுடனும் பாகிஸ்தானியர்களுடனும் நட்புறவை இலங்கை வளர்த்துக் கொண்டு தான் இருக்கின்றது...இது இந்தியாவிற்கு ஆபத்து. இலங்கையினை நாம் கட்டுக்குள் வைத்து இருக்க வேண்டும். கட்டுக்குள் வைத்து இருக்க வேண்டும் என்றால் நாம் அங்கு இருக்கும் தமிழ் மக்களுக்கு உதவிப் புரிய வேண்டும்...இலங்கையில் தமிழர்கள் வலுவாக இருந்தனர் என்றால் அங்கே வேறு நாட்டவர்கள் அவர்களது செல்வாக்கினை எளிதில் நிலை நாட்ட முடியாது... மேலாக ஈழத் தமிழர்களும் சரி இந்தியத் தமிழர்களும் சரி ஒருவருக்கொருவர் துரோகம் செய்ய மாட்டார்கள்... அவ்வாறு இருக்க இந்தியாவின் தெற்குப் பகுதி பாதுகாப்பாக இருக்கும்...கூடுதலாக தமிழகத்தில் இருந்து வேறு ஈழத் தமிழர்களுக்கு உதவிப் புரியுங்கள் என்று கூறிக் கொண்டு இருக்கின்றனர்... இந்நிலையில் ஈழத் தமிழர்களுக்கு நாம் உதவிப் புரிந்தோம் என்றால் இந்தியாவிலும் சரி இலங்கையிலும் சரி தமிழர்கள் மத்தியில் நல்ல பெயரினை எடுத்து விடலாம்...கூடுதலாக சிங்களவர்களையும் கட்டுக்குள் வைத்துக் கொண்டு தெற்குப் பகுதியினை பாதுகாப்பானதாக பார்த்து கொள்ளலாம்...ஒரே கல்லில் இரண்டு மாங்காய்..நமக்கு நல்லது தானே!!!" என்று எண்ணிய வண்ணம் ஈழத் தமிழர்களுக்கு உதவ முன் வருகின்றார் இந்திரா காந்தி.

இந்தியா ஈழத் தமிழர்களுக்கு தன்னுடைய கதவுகளைத் திறந்து வைக்கின்றது..."சுதந்திரத்திற்காக போராடப் போகின்றீர்களா...நல்லது...இன்னின தேதிகளில் உங்களுக்கான பயிற்சி முகாம்கள் இருக்கின்றன...உங்களுக்கான பயணத் திட்டங்கள் இதோ...சரியாக உங்களின் அமைப்பின் உறுப்பினர்களை அழைத்துக் கொண்டு வந்து விடுங்கள்..." என்றே இந்தியா தமிழ் ஆயுதப் போராளி இயக்கங்களுக்கு அழைப்பினை விடுக்கின்றது.

உற்சாகமாக தமிழ் போராளி அமைப்புகள் இந்தியாவினுள் பயிற்சியை மேற்கொள்ள ஆரம்பிக்கின்றன (ஆயுதம் ஏந்திப் போராடிய தமிழ் அமைப்புகள் பல இருந்தன..விடுதலைப் புலிகள் அப்படிப்பட்ட அமைப்புகளில் இருந்த ஒரு அமைப்பே ஆகும்). இலங்கையோ இந்தியாவினை என்ன செய்வது என்றே எண்ணிக் கொண்டு இருந்தது.

இந்தியாவின் ஆதரவில் ஈழத் தமிழர்களின் போராட்டம் புத்துணர்வுடன்  தொடர்கின்றது....நிச்சயம் நமக்கென்று ஒரு தேசம் நாம் உரிமையுடன் வாழ கிடைத்து விடும் என்று எண்ணியே ஈழத்தில் மக்களும் கனவுகளைக் கண்டுக் கொண்டு இருந்தனர். "அதோ இந்திரா அம்மையார் இருக்கின்றாரே...நமக்கென கவலை...நிச்சயம் நமக்கு சுதந்திரம் கிட்டி விடும்..." என்றே மக்கள் எண்ணிக் கொண்டு இருந்தனர். இந்தியா அவர்களுக்கு உதவி செய்வது வெறும் அரசியல் நோக்கிற்காக மட்டுமே என்பதனை அறிந்திருந்த சில போராளி இயக்கங்களும் இந்திராவின் மேல் மரியாதையை வைத்து இருந்தன. ஆனால் முழுதாய் இந்தியாவினை அவர்கள் நம்பவில்லை.

"இந்தியாவிற்கு நம்முடைய உதவிகள் தேவை...அதனால் நமக்கு அவர்கள் உதவுகின்றனர்....மாறாக நாம் படும் இன்னல்களை எண்ணி அவர்கள் உதவுகின்றனர் என்று நாம் கருத முடியாது...இருப்பீனும் அவர்களுடைய உதவிக்கு நாம் நிச்சயம் நன்றிக் கடன் பட்டவர்களாகத்தான் இருப்போம்...நம்முடைய உரிமைகளுக்கு அவர்களால் பங்கம் வராத வரை" என்ற எண்ணம் அவ்வியக்கங்களுள் இருந்துக் கொண்டு தான் இருந்தது.

இந்நிலையில் தான் இந்திரா காந்தி கொலை செய்யப்படுகின்றார். சிங்களவர்கள் கொண்டாடுகின்றனர்... தமிழர்களோ 'ஐயகோ... ஈழத்தினைப் பெற்றுத் தருவார் என்று எண்ணிய அம்மையார் இறந்து விட்டார்களே...அடுத்து நம்முடைய நிலை என்னவாகும்...இந்தியாவின் நிலைப்பாடு என்னவாக இருக்கும்...' என்று கவலைக் கொள்ளத் தொடங்கினர்.

இந்தியாவில் இந்திராவினைத் தொடர்ந்து ராசீவ் காந்தி பிரதமராக பதவி ஏற்கின்றார்.

தொடரும்....!!!

தமிழர் - திராவிடர் - ஆரியர் - 1

இன்றைக்கு ஈழத்திற்காக மாபெரும் எழுச்சி தமிழர்களின் மத்தியில் எழுந்துள்ளது...'ஈழத்தில் உள்ள தமிழர்கள் காக்கப்பட வேண்டும்...அவர்கள் உரிமையோடும் சுதந்திரத்தோடும் மகிழ்ச்சியாய் வாழ வேண்டும்...அதற்கு அவர்களுக்கென்று தனி நாடு வேண்டும்...அதில் சிறிதளவும் மாற்றுக் கருத்துக்கள் எங்களிடம் இல்லை...கூடுதலாக தமிழர்களின் மேல் கொடூரமான இனப்படுகொலையினை ஏவி விட்ட அனைத்து நபர்களின் மேலும் நேர்மையான விசாரணையும் அதற்கேற்ற தண்டனையும் வழங்கப்பட வேண்டும்.' இதுவே தான் அனைத்து தமிழர்களின் குரலாக இன்று தமிழகமெங்கும் ஒலித்துக் கொண்டு இருக்கின்றது. இந்நிலையில் இக்குரல்களுக்கு எதிராக ஒலிக்கும் சில குரல்களையும் இந்நேரத்தில் நாம் இனம் காண வேண்டி இருக்கின்றது.

"இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களிக்காது. அங்கு நடந்தது இனப்படுகொலை அல்ல..." என்று காங்கிரஸ் தரப்புக் கூறுகின்றது.

"இலங்கையை போர் குற்றவாளியாக அறிவிக்க முடியாது..." இது பா.ஜ.க கட்சியினரின் கூற்று.

"இலங்கையில் உள்ள தமிழர்கள் சிங்களவர்களோடு இணைந்து வாழவே விரும்புகின்றனர்..." இது RSS இன் கூற்று.

போராடும் தமிழ் இளைஞர்களை 'தமிழ் பொறுக்கிகள்' என்று சு. சுவாமி வலைத்தளங்களில் குறிப்பிட்டு இருக்கின்றார்.


இப்பொழுது நாம் காண வேண்டியது அரசியல் அளவில் அவர்களுள் பலவிதமான வேறுபாடுகள் இருந்தாலும் தமிழர்கள் விடயத்தில் மட்டும் ஒன்றிணைந்து தமிழர்களுக்கு எதிராக அவர்கள் குரல் எழுப்புவது ஏன்?

இக்கட்சிகள் அனைத்தும் ஆயிரக்கணக்கான தமிழக மீனவர்கள் சிங்களப் படையினரால் தாக்கப்பட்ட பொழுதும் ஒற்றுமையாக மௌனம் காப்பது ஏன்?

ஏன் தமிழர்களின் மீது மட்டும் இத்தனை வன்மம்?

இந்தக் கேள்வியினை நண்பர் ஒருவருடன் விவாதித்தப் பொழுது அவர் கூறிய விடை,

'ஆமாம்...அந்தக் கட்சிகளினால் தமிழகத்துல ஒரு இடத்தைக் கூட பிடிக்க முடியாது...அதுனால தான் அவன் எக்கேடு கெட்டுப் போனாலும் போகட்டும் அப்படின்னு விட்டுட்டு அவன் எந்த இடத்துல ஜெயிக்க முடியுமோ அந்த இடத்தை மட்டும் பார்த்துக்கிறான்..."

ஆனால் இவ்விடையினை ஏனோ என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. காரணம்,

1) எந்த கட்சியானாலும் சரி மத்தியில் ஆட்சி அமைக்க வேண்டும் என்றால் அனைத்து மாநிலங்களிலும் இருந்து குறிப்பிட்ட அளவு தொகுதிகளை வென்று இருக்க வேண்டும். அந்நிலையில் தமிழகத்தில் அவர்களுக்கு செல்வாக்கு இல்லை என்றால் செல்வாக்கினைப் பெறவே கட்சிகள் முயற்சி செய்யுமே அன்றி, அவர்களே அவர்களின் செல்வாக்கினைக் குறைத்துக் கொள்ளும் வண்ணம் செயலாற்ற மாட்டார்கள்.அவ்வாறே அவர்கள் செயலாற்ற ஆரம்பித்தனர் என்றால் விரைவில் அவர்களின் கட்சி அழிந்து விடும்.

2) அந்நிலையில் தமிழகத்தில் மட்டும் அக்கட்சிகளுக்கு செல்வாக்கு இல்லாமல் போனதற்கும் அவர்கள் இழந்த செல்வாக்கினை மீண்டும் பெறுவதற்கு முடியாமல் இருப்பதற்கும் அடிப்படையானக் காரணம் ஏதேனும் நிச்சயம் இருக்க வேண்டும். எனவே மேலே உள்ள கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து தமிழர்களுக்கு எதிராக குரல் கொடுப்பதற்கு என்ன காரணம் என்று நாம் காண வேண்டும் என்றால் நாம் தமிழகத்திலே அக்கட்சிகள் கால் ஊன்றாதிருப்பதற்கு என்ன காரணம் என்றே காண வேண்டி இருக்கின்றது.

அப்படி அந்த காரணத்தினை நாம் தேடினோம் என்றால் அதற்கு விடையாய் கிடைப்பது திராவிடர் இயக்கங்கள். அந்த இயக்கங்கள் இங்கே எழுந்தக் காரணத்தினாலேயே காங்கிரஸ், பா.ஜ.க போன்ற கட்சிகளால் இங்கே வேரூன்ற முடியாத நிலை ஏற்பட்டு இருக்கின்றது.

அதாவது பிராமணர்களின் ஆதிக்கத்தினை எதிர்த்து தமிழகத்தில் எழுந்த இயக்கத்தின் காரணமாக பிராமணர்களின் கட்டுப்பாட்டினில் இருக்கும் கட்சிகள் தமிழகத்திலே வேரூன்ற முடியாத நிலை இருக்கின்றது. நிற்க.

இப்பொழுது நாம் கவனிக்க வேண்டிய மற்றுமொரு விடயம் திராவிடர் என்றச் சொல் 'தெலுங்கர்கள், கன்னடியர்கள், மலையாளிகள்' போன்றோரையும் தமிழரையும் குறிக்கும் ஒரு சொல் என்றே இன்றைக்கு திராவிடம் பேசுவோர் கூறுகின்றனர்.

ஆனால் அதனை தெலுங்கர்களோ, கன்னடியர்களோ அல்லது மலையாளிகளோ ஏற்றுக் கொள்ளவில்லை. அங்கே திராவிடர் என்றச் சொல்லோ அல்லது திராவிடர் இயக்கங்களோ பரவவும் இல்லை. இந்நிலையில் திராவிடர் என்றச் சொல் தமிழர்களை மட்டுமே குறிக்கக் கூடியச் சொல்லாக அமைந்து இருக்கின்றது. இதனை அம்பேத்கர் அவர்களும் பல்வேறு ஆராய்ச்சியாளர்களுமே கூறி இருக்கின்றனர்.

அப்படி இருக்க தமிழகத்தினில் தமிழர்களுக்கு மத்தியில் தோன்றிய தமிழர் இயக்கங்களின் வாயிலாக ஆரியர்கள்/பிராமணர்களின் இயக்கங்களும் கொள்கைகளும் தமிழகத்திலே பின்னடைவு அடைகின்றன. மீண்டும் அக்கொள்கைகளோ அந்த இயக்கங்களோ தமிழகத்திலே மலரப் போவதே இல்லை.

இந்த நிலை தமிழகத்தில் மட்டுமே நிலவுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தான் ஆரியர்கள் பயப்படுகின்றனர். ஒருவேளை இந்தத் தெளிவு மற்ற மாநிலங்களுக்கும் பரவி விட்டால், அங்கும் நமது செல்வாக்கு மலிந்து விட்டால்... நாம் என்ன செய்வோம்? நாம் எங்குப் போவோம்?

அவர்களின் பயத்திற்கும் காரணமின்றி இல்லை.

இந்திய சனத்தொகையினில் அவர்களின் எண்ணிக்கை வெறும் 10% மட்டுமே... அதிலும் பிராமணர்கள் எண்ணிக்கை வெறும் 3% மட்டுமே. அந்நிலையில் மற்ற மாநிலங்களிலும் அவர்களின் செல்வாக்கு சரிந்து விட்டால், அவர்களின் வேடம் கலைந்து விட்டால்...அவர்கள் என்ன ஆவார்கள்? அவர்களின் போக்கிடம் தான் என்ன?

அதனால் தான் பிரச்சனைக்குரிய மூலத்தினை அழித்துக்கட்ட அவர்கள் உறுதியாக முயல்கின்றனர்...அரசாட்சிக் காலத்தில் அரசனைக் கைக்குள் போட்டுவிட்டு எளிதாக மக்களை தாழ்த்தியதினைப் போன்ற வசதிகளை சனநாயகம் அவர்களுக்கு வழங்கவில்லை. அதனால் தான் அவர்கள் வெவ்வேறு வழிமுறைகளைக் கையாண்டுக் கொண்டு இருக்கின்றனர்.

ஆரியர் - திராவிடர் என்ற பிரிவுகள் புரட்டு என்று கதைகளைக் கட்டி விடுவது, தங்களால் இயன்ற அளவு வரலாற்றினை மறைக்க/திரிக்க முயல்வது, பெருன்பான்மையான திராவிட மக்கள் ஒற்றுமையாக இருக்காத வண்ணம் அவர்களின் நடுவே சாதி/ மதச் சண்டைகளை ஏற்படுத்திவிட்டு வேடிக்கைப் பார்ப்பது போன்ற இவை அனைத்தையும் தாங்கள் அடிமையாக்கி வைத்துள்ள சைவ வைணவ சமயங்கள் மூலமாகவும், சூழ்ச்சியினால் பிடித்த அரசியல் உரிமையினாலும் செம்மையாகச் செய்துக் கொண்டு தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ள முயன்றுக் கொண்டு இருக்கின்றனர்.


ஆனால் தமிழும் சரி தமிழர்களும் சரி அவர்களுக்கு மிகப் பெரிய இடையூறாகத் தான் இருக்கின்றனர். பிராமணர்கள், சைவ வைணவ சமயத்தினை அடிமைப்படுத்தி வைத்து இருக்கின்றனர் என்பதனை தமிழ் இலக்கியங்கள் பறைசாட்டிக் கொண்டு இருக்கின்றன. தமிழர்களோ தங்களின் மண்ணில் பிராமண செல்வாக்கு உள்ள இயக்கங்களை துரத்தி அடித்து விட்டு இருக்கின்றனர்.

இது தான் ஆரியர்களுக்கு கவலையையும் கோபத்தினையும் வர வைக்கின்றது. சைவ வைணவ சமயங்களை அவர்கள் அடிமையாக்கி வைத்து இருப்பது அனைத்து மக்களுக்கும் தெரிந்து விட்டால் அச் சமயங்களின் மீது அவர்களுக்கு இருக்கும் பிடி போய் விடும். பின்னர் எவ்வாறு அவர்கள் தாங்கள் பிறப்பால் உயர்ந்தவர்கள் என்றுக் கூறிக் கொண்டு வாழ்வை வாழ்வது?

மேலும் தமிழர்களைப் போன்றே அனைத்து மக்களும் ஆரியச் சதியினை அறிந்துக் கொண்டு தெளிவடைந்து விட்டனர் என்றால் ஆரியர்கள் எங்கே செல்வார்கள்? அவர்களுடைய செல்வாக்கு வேறு எங்கே செல்லுபடியாகும்? வேறு எங்கும் செல்லுபடியாகாதல்லவா....அதனால் தான் இங்கே தமிழ் மொழியும் தமிழர்கள் அழிவதையும் மகிழ்ச்சியாக ஆரியன் கண்டுக் கொண்டு நிற்கின்றான். பிரச்சனைக்குரியவர்கள் ஒழிந்துவிட்டால் பின்னர் அவன் நிம்மதியாக இருக்கலாம் அல்லவா...!!!

அதனால் தான் தனி ஈழம் அமைவதை அவன் தடுக்கின்றான். ஆயிரக்கணக்கான தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டும் ஒன்றும் செய்யாது நிற்கின்றான். தன்னை இந்து மதத்தின் தலைவன் என்றுக் (பொய்) கூறிக் கொண்டு ஆயிரக்கணக்கான இந்துக் கோவில்களையும் இந்துக்களான தமிழர்களையும் கொன்றுக் குவித்த இராசபக்சேவினை மகிழ்ச்சியாய் திருப்பதிக் கோவிலில் வரவேற்கின்றான் (சிங்களர்கள் தங்களை ஆரியர்கள் என்றுக் கூறிக் கொள்வதும் குறிப்பிடத்தக்கது). அவர்களுக்குத் தேவை தமிழ் அழிய வேண்டும்... தமிழர்கள் அழிய வேண்டும்...ஏன் என்றால் அவைகள் அழிந்தால் தான் அவன் நிம்மதியாக மக்களை ஏமாற்றி வாழ முடியும்....!!!

இதனால் தான் திருமூலர் அன்றே பாடிச் சென்று விட்டார்...

சத்தியம் இன்றித் தனிஞானம் தானின்றி
ஒத்த விடயம்விட் டோ டும் உணர்வின்றிப்
பத்தியும் இன்றிப் பரன் உண்மை யின்றிப்
பித்தேறும் மூடர் பிராமணர் தாமன்றே - திருமந்திரம்

இன்று ஈழத்தில் நிகழ்வதும்...இந்தியாவில் நிகழ்ந்துக் கொண்டு இருப்பதும் ஆரியத் திராவிடப் போரின் ஒருக் கட்டமே அன்றி வேறல்ல...!!!

இவை அனைத்தையும் விரிவாகக் காண முயற்சிப்போம்...!!!

தொடரும்...!!!

பி.கு:

இக்கருத்துக்களில் தங்களுக்கு மாற்றுக் கருத்துக்கள் ஏதேனும் இருப்பின் தயைக் கூர்ந்து தெரிவிக்கவும். அது எனது சிந்தனையை செம்மையாக்க உதவும். வழக்கம் போல் உங்களின் கேள்விகளும் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

வியாழன், 21 மார்ச், 2013

ஈழம்: அறிந்துக் கொள்ள சில விடயங்கள்

1) சிங்களவர்கள் இலங்கையின் பூர்வீகக் குடியினரா?

இல்லை. சிங்களவர்கள் என்பவர்கள் கி.மு நான்காம் நூற்றாண்டு அல்லது ஐந்தாம் நூற்றாண்டில் இந்தியாவில் இருந்த கலிங்கத்துப் பகுதியில் இருந்து துரத்தி அடிக்கப்பட்டு இலங்கைக்கு பிழைத்துப் போன இளவரசன் விஜய சிங்கனின் வம்சாவழியினரே ஆவர்.

அவர்கள் இலங்கைக்குப் போவதற்கு முன்னரே அங்கே தமிழர்கள் வாழ்ந்துக் கொண்டு தான் வந்திருக்கின்றனர். இதனை விளக்கும் வண்ணம் இலங்கை அரசாங்கமே ஒரு தபால் தலையினை வெளியிட்டு உள்ளது.















2) அப்படி என்றால் அங்கே தமிழர்களும் வசித்து வந்தார்கள் என்றுக் கூறுகின்றீர்களா?

ஆம். கி.பி 16 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பியர்கள் இலங்கை முழுவதையும் பிடிக்கும் வரை இலங்கையில் தமிழர்கள் தனியாக ஆண்டுக் கொண்டு இருந்தனர்...சிங்களவர்கள் தனியாக ஆண்டுக் கொண்டு இருந்தனர். இலங்கை என்றுமே ஒரே நாடாக இருந்தது கிடையாது. பல்வேறு நாடுகள் இலங்கையில் இருந்து வந்துக் கொண்டு தான் இருந்தன.



3) இலங்கை ஒரே நாடாக இருந்தது கிடையாது என்றுக் கூறுகின்றீர்களே...ஆனால் இன்று அது ஒரே நாடாகத் தானே இருக்கின்றது. இது எவ்வாறு எப்பொழுது நிகழ்ந்தது?

ஆங்கிலேயர்களின் ஆட்சிக் காலத்தில் தான் இலங்கை ஒரே நாடாக மாற்றப்படுகின்றது. இது நடக்கும் காலம் 1831 ஆம் ஆண்டு. தமிழர்கள் ஆண்ட பகுதியினையும், சிங்களவர்கள் ஆண்ட பகுதியினையும் ஒன்றாக இணைத்து ஒரே நாடாக மாற்றியவர்கள் ஆங்கிலேயர்களே.

4) தமிழர்கள் இலங்கையின் பூர்வீகக் குடியினர் என்றுக் கூறுகின்றீர்கள். ஆனால் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு பிழைக்கச் சென்றவர்கள் தான் தமிழர்கள் என்றும் அவ்வாறு பிழைக்கச் சென்றவர்கள் எவ்வாறு தனி நாடுக் கோரலாம் என்றும் கருத்துக்கள் நிலவுகின்றனவே...அது ஏன்?

இலங்கையில் இன்று இரு வகையான தமிழர்கள் இருக்கின்றனர். ஒரு வகையினர் ஈழத்தினையே பூர்வீகமாகக் கொண்டத் தமிழர்கள். மற்றொரு வகையினர் இந்தியாவில் இருந்து ஆங்கிலேயர்களால் இலங்கையின் மலைத் தோட்டங்களின் பணிப்புரிய அழைத்துச் செல்லப்பட்ட இந்தியத் தமிழர்கள். இவர்கள் இருவருக்கும் வேறுபாடுகள் உண்டு.

அந்த வேறுபாட்டினை அறியாது தான் இலங்கையில் இருக்கும் அனைத்து தமிழர்களும் இந்தியாவில் இருந்துச் சென்ற தமிழர்கள் என்ற தவறானக் கருத்து இங்கே நிலவிக் கொண்டு இருக்கின்றது.

மேலும் 1964 ஆம் ஆண்டு இந்தியாவுடன் செய்துக் கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் சுமார் 7 இலட்சம் மலையகத் தமிழர்கள் இந்தியாவிற்கு திரும்ப அனுப்பப்பட்டும் விட்டனர்.

5) சரிங்க...தமிழர்கள் இலங்கையின் பூர்வீகக் குடியாகவே இருக்கட்டும்...ஆனால் அனைவரும் ஒன்றாக இணைந்து வாழ வேண்டும் என்று கருதாமல் தனி நாடுக் கோருவது சரியா?

தனி நாடு என்றக் கோரிக்கை திடீரென்று எழுந்த ஒன்று அல்ல. மேலும் சுதந்திரத்திற்காக பாடுபட்ட தமிழர்கள் சிங்களவர்களோடு இணைந்து வாழவே எண்ணினர். ஆனால் காலங்கள் செல்ல செல்ல சிங்களவர்களின் செயல்களால் தமிழர்கள் தாங்கள் தங்களது உரிமைகளோடு வாழ்வதற்கு தனி நாடினைப் பெறுவதனைத் தவிர வேறு வழி இல்லை என்பதனை உணர்ந்தே 'தனி ஈழம்' என்றக் கோரிக்கையை முன் வைக்க ஆரம்பித்தனர்.

இலங்கை சுதந்திரம் பெற்றது 1948 ஆம் ஆண்டில். தமிழர்கள் தனி ஈழம் என்றக் கோரிக்கையினை முன் வைக்க ஆரம்பித்தது 1973 ஆம் ஆண்டில் இருந்து தான். அதாவது சுமார் 25 ஆண்டுகள் அமைதியாக ஒன்றாக வாழ முயற்சிகள் செய்து, அவைகள் அனைத்தும் பலன் தராது சென்ற பின்னர் தான் தனி நாடு வேண்டும் என்றக் கோரிக்கையை தமிழர்கள் அங்கே முன் வைக்கின்றனர்.

6) அதற்காக ஆயுதப் போராட்டத்தினை தான் முன்னெடுக்க வேண்டுமா?

ஈழத் தமிழர்கள் கிட்டத்தட்ட 30 வருடங்கள் அமைதியான காந்திய முறையில் தான் தங்களது கருத்துக்களையும் எதிர்ப்புக்களையும் தெரிவித்துக் கொண்டு வந்தனர். தந்தை செல்வா என்ற ஒரு காந்தியவாதியின் தலைமையில் தான் 30 ஆண்டுகளாக தமிழர்கள் போராடினார்கள்.

ஆனால் அவர்களின் கோரிக்கைகளை நிராகரித்தும், தமிழர்களின் மேல் வன்முறையினை பயன்படுத்தியும் சிங்கள அரச தொடர்ந்து தமிழர்களை ஒடுக்கியதைக் கண்ட இளைஞர்கள் சிலர் தான் பின்னர் ஆயுதப் போராட்டங்களில் இறங்கினர்.

எனவே தமிழர் போராட்டங்கள் என்பது ஆரம்பத்தினில் இருந்தே வன்முறையினை அடிப்படையாகக் கொண்டு இருந்த ஒரு போராட்டம் அல்ல...காந்திய வழியிலான போராட்டம் நீண்ட காலங்களுக்கு பின்னரே ஆயுதப் போராட்டமாக மாறி இருக்கின்றது.

காந்தி வாழ்ந்த மண்ணில் தான் பகத் சிங்கும் சுபாஷ் சந்திர போசும் செம்பகராமன் பிள்ளையும் தோன்றி இருக்கின்றார்கள்.

7) தனி ஈழம் தான் தீர்வு என்கின்றீர்களா?

ஒன்றரை இலட்சம் மக்கள் படுகொலை செய்யப்பட்டு இருக்கின்றனர். பிஞ்சுகள் என்றுக் கூட பார்க்காது பச்சிளம் குழந்தைகள் கொல்லப்பட்டு இருக்கின்றனர். சரணடைந்த மக்கள் கொல்லப்பட்டு இருக்கின்றனர். போர் முடிந்து நான்கு ஆண்டுகளுக்கு பின்னரும் சொந்த ஊருக்கு திரும்பிச் செல்ல வழி இல்லாமல் அகதிகளாக தமிழர்கள் அலைந்துக் கொண்டு இருக்கின்றனர். அவர்களின் இடங்களின் சிங்களர்கள் இடம் பெயர்ந்து நாட்கள் பல ஓடி விட்டன.

இன்றும் சிங்களப் படைகளில் பெரும்பான்மையானவை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலேயே நிலைப் பெற்று இருக்கின்றன. சுதந்திரம் இல்லாத அடிமைகளாகவே தமிழர்கள் அங்கே உலாவிக் கொண்டு இருக்கின்றனர்.

இத்தனை இழப்புகளுக்கு பின்னரும் சிங்களவர்களோடு சேர்ந்து தமிழர்கள் வாழ முடியுமா இல்லை வாழ்ந்தாகத் தான் வேண்டுமா?

ஆங்கிலேயர்களின் வருகைக்கு முன்பு சிங்களவர்களும் தமிழர்களும் தனித் தனி நாடுகளைக் கொண்டு ஆண்டு வந்தவர்கள் தானே. அப்படி இருக்க தமிழர்கள் ஆண்ட பகுதியை தமிழர்களே மீண்டும் பெறுவது என்பது நியாயமான கோரிக்கை தானே.

மாபெரும் இழப்புகள் இலங்கையில் நம் இனம் கண்டிருக்கின்றது. ஒரு இனப் படுகொலையே அங்கே நிகழ்த்தப்பட்டு இருக்கின்றது. இதில் இருந்து மீளவும் சுய மரியாதையுடன் சுதந்திரமாக தமிழர்கள் வாழவும் அவர்களுக்கு அவர்களின் உரிமை வேண்டும்.

அவர்களுக்கு உரிமை வேண்டும் என்றால் தனி ஈழம் மலர வேண்டும்.

அதற்கு நமது குரல்கள் வேண்டும்...!!!

தமிழர்களின் தாகம்... தனி ஈழத் தாயகம்...!!!

திங்கள், 18 மார்ச், 2013

ஈழம்: ஒரு பார்வை-8 : ஒப்பந்தங்கள்...பிரபாகரன்...தனி ஈழம்!!!

பண்டாரநாயகா இறந்து விட்டார்...அவருடன் இட்டுக் கொண்ட ஒப்பந்தமும் செயல்படுத்தப்படவில்லை... இந்நிலையில் தமிழர்களின் உரிமைகள் என்னவாகும் என்று தமிழர்கள் சிந்தித்துக் கொண்டு இருக்கும் பொழுது தான் அடுத்த தேர்தலில் வென்று இலங்கையின் முதல் பெண் பிரதம மந்திரி ஆகின்றார் பண்டாரநாயகாவின் மனைவியார் திருமதி. சீறிமாவோ பண்டாரநாயகா.

ஆனால் இவருடையக் கொள்கையிலும் பெரிய மாற்றங்கள் இல்லை... "சிங்களமே ஆட்சி மொழி...உத்தியோக மொழி...நீதி மன்ற மொழி...இதில் மாற்றமே இல்லை... சிங்களம் தெரியாத பணியாளர்கள் சிங்களம் கற்றுக் கொள்ள வேண்டும்...இல்லையேல் வேலை இழக்க நேரிடும்...அனைத்துப் பள்ளிகளிலும் சிங்களமே போதனை மொழியாக இருக்கும்...சிங்கள மொழியில் தேர்ச்சி பெறத் தவறினால் ஆசிரியர்களுக்கும் சரி மற்ற பணியாளர்களுக்கும் சரி வேலை இல்லாத நிலை உருவாகிவிடும்...நன்றி". இதுவே தான் அவரது கொள்கையாக இருந்தது.

சுருக்கமாகக் கூற வேண்டும் என்றால் இலங்கையில் தமிழுக்கு இடம் இல்லை... நீ இங்கே இருக்க வேண்டுமானால் சிங்களவனாக மாறி விடு...வேறு வழிகள் உனக்குக் கிடையாது. அவ்வளவே...!!!

"பார்த்தீர்களா ஐயா...நம்மை இரண்டாம் தர குடிமக்களாகவே அவர்கள் கருதுகின்றனர் என்பது தெளிவாகத் தெரிகின்றது...ஏற்கனவே 1958 இல் அவர்கள் அடித்தப் பொழுது பொறுத்துக் கொண்டோம்...ஆனால் அவர்கள் மாறியபடி தெரியவில்லை...இப்படியே போனால் நாம் என்ன ஆவது தந்தையே...நாம் இருவரும் தனி நாடுகளாக இருந்தவர்கள் தானே...தனியாகப் பிரிந்து விடலாமே...என்ன சொல்லுகின்றீர்?" என்று இளைஞர்களின் மத்தியில் புதிதாக எழுந்த சிந்தனையை தந்தை செல்வா பொறுமையாகப் பார்த்தார்.

"இல்லை இளைஞர்களே..உங்களின் உணர்ச்சிகள் எனக்குப் புரிகின்றன...ஆனால் நாம் தனி நாடு கோர வேண்டிய அளவிற்கு பிரச்சனைகள் மோசமாகவில்லை என்றே நான் எண்ணுகின்றேன்... பேசிப் பார்ப்போம்...நிச்சயம் உண்மை வெல்லும்..." என்றார்.

சிலருக்கு மாற்றுக் கருத்துக்கள் இருந்தாலும் 'தந்தை செல்வாவே கூறி விட்டார்... இன்னும் சில நாட்களுக்கு பொறுமையாகத் தான் இருப்போமே...நம்முடைய எதிர்ப்பினைத் தெரிவிக்க இருக்கவே இருக்கின்றது சத்தியாக்கிரகம், ஒத்துழையாமை போராட்டங்கள்' என்றே அகிம்சை வழியில் போராடத் தொடங்கினர்.

ஆனால் முடிவு தான் அவர்களுக்குக் கிட்டியப்பாடில்லை. அரசு வன்முறையால் அவர்களை அடைக்க முயலும்...வன்முறை கை கொடுக்கவில்லையென்றால் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளும்...வாக்குறுதிகளையும் அள்ளி வீசும். ஆனால் அந்த வாக்குறுதிகளோ வெறும் வார்த்தையாகவே நின்றுப் போகும்.

இந்த நிலை தான் யார் ஆட்சிக்கு வந்தாலும். சிங்களவர்கள் பெருவாரியாக இருக்கும் நாட்டினில் அவர்கள் தானே ஆட்சிக்கு வர முடியும்...அவர்கள் ஆட்சிக்கு வருவதற்கு சில நேரங்களில் தமிழர்களின் உதவி தேவைப்படும்...அப்பொழுது தமிழர்களுக்கான உரிமைகளை பெற்றுத் தருவோம் என்று வாக்கினைக் கொடுத்து விட்டு ஆட்சியினைப் பிடித்தப் பின்பு அவ்வாக்குறுதிகளை காற்றில் பறக்க விடுவது என்பது அனைத்து சிங்கள கட்சிகளும் செய்யும் ஒரு பொதுவான செயலாக மாறிற்று.

சில நபர்கள் உண்மையிலேயே தமிழர்களுக்கு உதவ வேண்டும் என்று எண்ணினாலும் அதற்கு சிங்கள மக்கள், பத்திரிக்கைகள், எதிர் கட்சியினர் ஆகியோரிடம் இருந்து பலத்த எதிர்ப்பு எழுந்தமையின் காரணமாக அவர்களின் எண்ணம் வெறும் எண்ணமாகவே போயிற்று.

இவ்வாறே ஆண்டுகள் பல கடந்தன...தமிழர்களுக்கான உரிமைகளை சிங்கள அரசு நிச்சயம் வழங்காது என்ற எண்ணங்கள் தமிழர்களின் மத்தியில் நன்றாக பதியத் தொடங்கி இருந்தன.

தோல்வி அடைந்த பேச்சுவார்த்தைகள்...கிழித்து எறியப்பட்ட ஒப்பந்தங்கள்...ஏமாற்றங்கள் இவைகளை மட்டும் தான் தமிழர்களின் போராட்டங்கள் பெற்றுத் தந்துக் கொண்டு இருந்தன... புதிதாக தமிழர்களின் மரணங்களும் அங்கங்கே ஏற்படலாயின. 1948 இல் ஆரம்பித்த போராட்டங்கள் 1971 வரை இவைகளை மட்டுமே தமிழர்களுக்குத் தந்து இருந்தன.

23 வருடங்கள் தமிழர்களின் பொறுமையினை சற்று சோதித்துத் தான் பார்த்து இருந்தன. அது போதாதென்று கல்வியினை சீர்திருத்தும் திட்டம் என்று தமிழ் மாணவர்களுக்கு எதிராக இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டத் தீர்மானமும் தமிழ் மாணவர்களை கொந்தளிக்கச் செய்து இருந்தது.

'தமிழ் மாணவர்களுக்கு தமிழ் ஆசிரியர்கள் நேர்மையாக மதிப்பெண்கள் வழங்குவது இல்லை...அவர்களுக்கு குறுக்கு வழியில் அதிகமான மதிப்பெண்களை வழங்குகின்றனர்...அதனால் இனிமேல் தமிழ் மாணவர்கள் எடுக்கும் மதிப்பெண்கள் மறுபரிசீலனைப் பண்ணப்படும்...கூடுதலாக நேர்மையாக தேர்வினை எழுதும் சிங்கள மாணவர்களுக்கு சலுகைகள் வழங்கப்படும்.' இது தான் சுருக்கமாக அந்தக் கல்விச் சீர்திருத்தத் திட்டம். இதன் மூலம் சிங்கள மாணவனை விட அதிக மதிப்பெண்கள் எடுத்தால் தான் தமிழ் மாணவன் தேர்ச்சி அடைய முடியும் என்ற நிலை உருவானது.

மாணவர்கள் கொதித்தார்கள்...போராட்டத்தில் இறங்கினார்கள்...அவர்களின் போராட்டங்கள் காவல் துறையினரால் ஒடுக்கப்பட்டன...பலர் கைது செய்யப்பட்டனர்...சிலர் காயங்களுடன் விடுவிக்கப்பட்டனர்...சிலர் என்ன ஆனார்கள் என்றே தெரியாது மறைந்தனர். சிங்கள அரசின் இந்த அனைத்து நடவடிக்கைகளும் தமிழ் இளைஞர்களை வேறு விதமான போராட்டத்திற்கு தயார் செய்துக் கொண்டு இருந்தன.

அந்தக் காலக்கட்டத்தில் தந்தை செல்வாவும் இனியும் பேச்சு வார்த்தைகள் பலன் தருமா? என்ற எண்ணத்தினில் இருந்துக் கொண்டு இருந்தார். அவரின் கட்சிக்குள்ளே 'தனி நாடு தான் தீர்வு தந்தையே...' என்ற குரல்கள் பலமாகக் கேட்கத் தொடங்கி இருந்தன. 'தனி நாடு கேட்பதற்கு காலம் கனியவில்லை என்று முன்னர் கூறியவர்களும் இப்பொழுது வேறு வழி இல்லாதவர்களாக தனி நாடு கோரலாமா என்ற எண்ணத்தில் இருந்தனர்.

தந்தை செல்வா அரசுக்கு கடிதம் எழுதினார்...'அரசே...தமிழர்களின் உரிமைகளும் அவர்களது மண்ணும் இங்கே பறிக்கப்பட்டுக் கொண்டு இருக்கின்றன...உங்களுடன் பேச்சு வார்த்தை நடத்த விரும்புகின்றோம்...நாம் சுதந்திரம் பெற்ற பொழுது எந்த கொள்கையுடன் இருந்தோமோ அதற்கு நீங்கள் மதிப்பளிப்பீர் என்றே கருதி உங்களின் பதிலினை ஆர்வத்துடன் எதிர் பார்கின்றேன்...நன்றிகள்'

பதில் வரவில்லை...ஏன் கடிதம் கிட்டியது என்ற செய்தியே வரவில்லை.

"தந்தை செல்வாவின் வழிமுறைகள் அருமையானவை தான்... ஆனால் சிங்களவர்களின் முன்னே அவை அர்த்தமற்று நிற்கின்றன...நாம் எந்த ஆயுதத்தினை எடுக்க வேண்டும் என்பதனை நம்முடைய எதிரியே தீர்மானிக்கின்றான்...கடிதத்திற்கு பதில் இல்லையா...சரி...துப்பாக்கிச் சத்தத்திற்கு பதில் வருகின்றதா என்று பார்ப்போம்" என்று சில இளைஞர்கள் கூட்டம் களம் இறங்கத் தொடங்கியதும் அப்பொழுது தான்.

அவ்வாறு களம் இறங்கியவர்களுள் ஒருவன் தான் மாவீரன் பிரபாகரன்.

நிற்க...!!!

ஈழத்தின் வரலாற்றினைப் பற்றி இவ்வளவு தூரம் கண்டாயிற்று...25 வருட அமைதியானப் போராட்டங்கள் எவ்வித தீர்வினையும் தமிழர்களுக்கு வழங்க வில்லை. இந்நிலையில் நீங்கள் அக்காலத்தில் இருந்தீர்கள் என்றால் உங்களின் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும்...?

ஒன்றுபட்ட இலங்கையில் இரண்டாம் தர குடிமக்களாக எந்நேரமும் பயத்துடன் வாழ்வீர்களா...அல்லது 'எங்கள் நாடு எங்களுக்கே' என்றுக் கோருவீர்களா?

உங்களின் நடவடிக்கை சிந்தனை எவ்வாறு இருக்கும்?

'எங்களின் நாடு எங்களுக்கே...உரிமைகளை இழந்து வாழ நாங்கள் அடிமைகள் அல்ல...எங்களின் உரிமைகளை நீ மறுக்கின்றாயா? நல்லது அதை நாங்களே எடுத்துக் கொள்கின்றோம்...!!!' என்பதே உங்களின் சிந்தனையாக இருக்கும் என்றால் உங்களின் சிந்தனை தான் அன்றைய ஈழத் தமிழ் இளைஞர்களின் சிந்தனை.

அதுவே தான் பிரபாகரனின் சிந்தனை!!!

தேவை தனி ஈழம்... இனியும் சிங்களவனிடம் இருந்து எந்தப் பிச்சையும் தேவை இல்லை.

மோதிப் பார்பதற்கு நாங்கள் தயார் என்றே தமிழ் இளைஞர்கள் களம் இறங்க ஆரம்பித்தனர்.

தொடரும்...!!!

சில குறிப்புகள்:

1) தனி ஈழம் என்றக் கோரிக்கைகள் எழும் என்று 'சிங்களம் மட்டுமே' என்றச்  சட்டத்தினை பண்டாரநாயகா என்று கூறினாரோ அன்றே பல சிங்களத் தலைவர்கள் கூறி இருந்தனர். சம சமாச கட்சித் தலைவரான டாக்டர். கொலவின் ஆர்.டி. சில்வா 'இரு மொழிகளென்றால் ஒரு தேசம் உருவாகும்...ஒரு மொழி என்றால் இரு தேசங்கள் உருவாகும்' என்றே முன்னர் கூறி இருந்தார்.

2) தந்தை செல்வா முதல் முறையாக தனி நாடுக் கோரிக்கையினை 1973 ஆம் ஆண்டில் தான் முன் வைக்கத் தொடங்குகின்றார்...25 ஆண்டுகள் ஒன்றுபட்ட இலங்கையில் வாழ முயற்சிகள் செய்த அவர் இறுதியில் சிங்களர்களிடம் தமக்கு எவ்வித நியாயமும் கிடைக்கப் போவதில்லை என்று அறிந்தப் பின்னரே தனி நாடுக் கோரிக்கையினை முன் வைக்கின்றார்.

3) சுதந்திர இலங்கையின் முதல் தேசியக் கொடி முழுக்க முழுக்க சிங்களர்களைக் குறிப்பதாக இருந்தது...பின்னர் 1951இல் தான் அதில் தமிழர்களைக் குறிக்க சிகப்புக் கோடும் இசுலாமியர்களைக் குறிக்க பச்சைக் கோடும் சேர்க்கப்பட்டன.





4) 1964 ஆம் ஆண்டு இந்தியாவுடன் செய்துக் கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் சுமார் 7 இலட்சம் மலையகத் தமிழர்கள் இந்தியாவிற்கு திரும்ப அனுப்பப்பட்டனர்.

ஒரு வேண்டுகோள்:

நண்பர்களே இப்பொழுது நீங்கள் ஈழத்தின் வரலாற்றையும் 'தனி ஈழம்' என்ற கோரிக்கை எழுந்த வரலாற்றினையும் அறிந்து இருப்பீர்.

தனி ஈழம் என்ற கோரிக்கை நியாயமானதான ஒன்றாக நீங்கள் உணருகின்றீர்களா?

அவ்வாறு உணர்ந்தீர்கள் என்றால் அதனைப் பற்றிய தகவல்களையும் உண்மையினையும் நம்மால் இயன்ற அளவுப் பரப்புங்கள்... போராடுபவர்களுக்கு இயன்ற வண்ணம் உதவியையும் ஆதரவினையும் வழங்குங்கள்...போராடுங்கள்....மடிந்துக் கொண்டிருக்கும் நம் மக்களுக்கு ஒரு வாழ்வளிக்க நம்மால் இயன்றதெல்லாம் செய்யலாம்...அல்லது அதனைப் பற்றிய விழிப்புணர்வினையாவது பரப்பலாம்.

யாராவது..."அவங்களோட நாட்டுக்கு வேல செய்றதுக்கு போயிட்டு எங்களுக்குன்னு தனி நாடு கொடு அப்படின்னு கேட்டா அவன் தந்துருவானோ...இல்ல அப்படி கேக்குறதும் சரியான ஒண்ணா...போனோமா வேலயப் பார்த்தோமா...வந்தோமான்னு இல்லாம தனி நாடு கேட்டா அவன் அடிக்கத் தான் செய்வான்"   என்றுக் கூறினால் அவரின் கூற்றில் உள்ளப் பிழை நமக்கு இன்று தெரியும் தானே...அவரின் அறியாமையை விலக்குவோம்.

இல்லை தனி ஈழக் கோரிக்கை சரியானதொன்று இல்லை என்று நீங்கள் கூறினால் ஏன் அவ்வாறுக் கூறுகின்றீர்கள் என்றும் கூறுங்கள்...உங்களின் கருத்துக்களை நாங்கள் அறிந்துக் கொள்ள அது மிக்க உதவியாக இருக்கும்.

நன்றி...!!!

இரு தேசங்களின் கதை : ஆரியவர்த்தமும் பிற தேசங்களும்...!!!

தேசியம்...வந்தேறிகள்...குடியுரிமை என்று இன்று பல குரல்கள் எழும்பிக் கொண்டிருக்கின்றன. "யார் வந்தேறிகள்? யார் பூர்வகுடி மக்கள்? எவ...