கிருத்துவ சமயத்தின் நம்பிக்கைகளைக் குறித்தே நாம் இங்கே ஒவ்வொன்றாய் கண்டு வந்து கொண்டிருக்கின்றோம். அந்த வரிசையில் நாம் இப்பொழுது இயேசு கிருத்து பலியானதைப் பற்றியே  வேண்டியிருக்கின்றது.

மக்களின் பாவத்திற்காக இயேசு மனிதனாக வந்து பலியானார் என்பதே இன்றைக்கு கிருத்துவ சமயம் கொண்டிருக்கும் நம்பிக்கையாகும். மனிதர்களின் பாவத்திற்காக அவர் தனது இரத்தத்தைச் சிந்தினார் என்றே இன்று பெரிதும் போதிக்கப்பட்டு வந்து கொண்டிருக்கின்றது. அந்த நம்பிக்கையையும் போதனையையும் பற்றி நாம் பின்னர் மெதுவாய் காணலாம், ஆனால் இப்போதைக்கு நாம் முக்கியமாக காண வேண்டிய விடயம் என்னவென்றால் 'இயேசு தன்னைத்தானே பலியாகத் தருவதற்காகத் தான் மனிதனாக வந்தார் என்கின்ற அந்த விடயத்தை, இயேசு உயிரோடு வாழ்ந்த காலத்தில் யார் யார் அறிந்திருந்தார்கள்' என்பதே ஆகும்.

இயேசு பலியாவதற்காக வந்திருக்கின்றார் என்பதை இயேசுவின் சீடர்கள் அறிந்திருந்தார்களா?

இல்லை. இயேசு மரணிப்பார் என்பதை அவர்கள் சிறிதும் கூட எண்ணியிருக்கவில்லை. 'நான் எருசலேமில் சித்திரவதை செய்யப்பட்டு மரணிப்பேன்' என்று இயேசு அவர்களிடம் முன்கூட்டியே கூறிய பொழுது, அவரை தனியே அழைத்து 'அப்படி எல்லாம் நடக்காது ஆண்டவரே!' என்று பேதுரு கூறியது இதனை மெய்ப்பிக்கின்றது. இயேசு தங்களுடைய யூத இராஜ்யத்தை மீட்டுக் கொடுத்து அதற்கு அரசராவார் என்றும் தாங்கள் அவருடைய மந்திரிகளாக இருப்போம் என்பதே அவர்களின் நம்பிக்கையாக இருந்தது. எனவே இயேசு பலியாவதற்காக வந்திருக்கின்றார் என்பது அவருடைய சீடர்களுக்குத் தெரியாது.

இயேசுவின் சீடர்களுக்கே தெரியாது என்ற பொழுது இயேசு பலியாவதற்காகத் தான் வந்திருக்கின்றார் என்பது வேறு யாருக்குத் தெரிந்திருக்க கூடும்? எவருக்கும் தெரிந்திருக்காது.

இயேசு ஒருவருக்கு மட்டுமே தான் அவர் பலியாவதற்காக வந்திருக்கின்றார் என்பது, அதாவது தன்னை கொலை செய்வார்கள் என்பது தெரியும். இயேசுவின் மரணத்திற்கு பின்னர், பவுல் அவர்கள் எழுதிய நடபடிகளில் தான் இயேசு பலியானார் என்ற விடயம் பொதுவாக வெளி வருகின்றது. அதனைப் பற்றி நாம் விரிவாக வேறு பதிவுகளில் காணலாம். இப்பொழுது நாம் காண வேண்டியது இயேசு உயிருடன் இருந்த காலகட்டத்தில் நிகழ்ந்த நிகழ்வுகளைப் பற்றி மட்டுமே தான். எனவே, இயேசு உயிருடன் இருந்த காலத்தில் அவர் பலியாவதற்காக வந்திருக்கின்றார் என்பதனை அவரைத் தவிர வேறு எவரும் அறிந்திராத காரணத்தினால், 'இயேசு பலியானார்' என்று நாம் இன்று அறிந்திருக்கும் விடயத்தினை தூக்கி ஒரு ஓரமாக வைத்து விட்டு, அன்று மக்கள் அறிந்திருந்த விடயமான 'இயேசு கொலை செய்யப்பட்டார்' என்பதனையே நாம் கருத்தில் இப்பொழுது எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கின்றது. அவ்வாறு நாம் பார்க்கும் பொழுது நம் முன்னே ஒரு கேள்வியானது புறந்தள்ள முடியாத வண்ணம் முக்கியமானதொன்றாக நின்று கொண்டிருக்கின்றது. 'இயேசு எதற்காக கொலை செய்யப்பட்டார்?' என்ற கேள்விதான் அது.

'இயேசு எதற்காக கொலை செய்யப்பட்டார்?' என்கின்ற கேள்விக்கு வருகின்ற நேரடியான விடை என்னவென்றால், 'இயேசு தன்னைதானே இறைவனின் மகன் என்று கூறிக் கொண்டமையினால் கோபப்பட்ட யூத சமய மதகுருக்கள், இயேசு இறைவனை நிந்தித்து விட்டார் ஆகையால் தங்களுடைய சட்டத்தின்படி அவர் மரணமடைய வேண்டும் என்று கூறி அவரை சிலுவையில் அறைந்து கொல்லுமாறு ரோமர்களை நிர்பந்தித்தனர்' என்றே தான் வருகின்றதுவிடையினைத் தான் நாம் மேலும் கவனமாக காண வேண்டியிருக்கின்றது.

'இயேசு தன்னைத்தானே இறைவனின் மகன் என்று கூறியதாலா யூதர்கள் இயேசுவை கொல்ல எத்தனித்தனர்?' என்ற கேள்விக்கு இயேசுவின் வரலாற்றினை அறிந்த எவரும் கூறக்கூடிய பதில் 'இல்லை' என்பதாகத் தான் இருக்கும். ஆம்!!! இயேசுவிற்கு மரண தண்டனை விதிப்பதற்கு அவர்கள் 'இயேசு தன்னைத்தானே இறைவனின் மகன் என்று கூறி இறை நிந்தனை செய்து விட்டான்' என்றே காரணம் கூறினாலும், உண்மை அது கிடையாது. அது வெறும் ஒரு சாக்குப்போக்கு. அவ்வளவே. இதனை கிருத்துவர்கள் இயேசுவின் மீது நடந்த அந்த விசாரணையைப் பற்றிப் படித்தாலே அறிந்து கொள்வர்.

இயேசுவை கொலை செய்ய வேண்டும் என்பதற்காகவே அவர்கள் இயேசுவை கைது செய்கின்றனர். ஆனால் தவறேதும் செய்யாத அவருக்கு சட்டப்படி மரண தண்டனை வழங்க முடியாமல் அவர்கள் தடுமாறுகின்றார்கள். அவருக்கு மரண தண்டனை வழங்கக்கூடிய வண்ணம் இருக்கின்ற சாட்சிகளை அவர்கள் தேடுகின்றனர். அவ்வேளையில், 'தான் இறைவனின் மகன்' என்று இயேசு என்றோ கூறியிருந்தது அங்கே நினைவில் வர, அதனை அடிப்படையாக வைத்தே அவர்கள் அவருக்கு மரண தண்டனை வழங்குகின்றனர். அதாவது, இயேசு தன்னை இறைவனின் மகன் என்று கூறியதால் அவருக்கு மரண தண்டனை வழங்கப்படவில்லை...மாறாக, அவருக்கு மரண தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதற்காகவே தான் அந்த கூற்று பயன்படுத்தப் பட்டிருக்கின்றது. அந்த முழு விசாரணையுமே 'இயேசுவை எப்படியாவது கொன்று விட வேண்டும்' என்ற குறிக்கோளினை அடிப்படையாகக் கொண்டே அமைந்திருக்கின்றது. இதனை அநேகமாக அனைத்து கிருத்துவர்களும் அறிவர்.

ஏன் 'இயேசுவை கொல்ல வேண்டும்' என்று யூதர்கள் அவ்வளவு முயன்றார்கள்? அதுவும் யூத இனத்தின் மீட்பராக மக்கள் பலரும் அவரை எண்ணிக் கொண்டிருந்த பொழுது (இன்றும் கூட பல கிருத்துவர்கள் அவரை அவ்வாறு தான் எண்ணிக் கொண்டிருக்கின்றார்கள்) யூத மக்களே எதற்காக அவரைக் கொலை செய்ய முயற்சிக்க வேண்டும்?

இந்த கேள்விகளுக்கான விடையினை நாம் காண வேண்டும் என்றால் நாம் விவிலியத்தில் வருகின்ற இரு நிகழ்வுகளைக் காண வேண்டியிருக்கின்றது.

காண்போம்...!!!

0 கருத்துகள்:

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு