நமது பூமியினை உருவாக்கி இருக்கும் சூரியனாய் அது இருக்க முடியாது என்பதனை நான் அறிந்து இருந்தேன். மேலும் நமது சூரியனிடம் இருந்து கணக்கிட முடியாத தொலைவில் நாங்கள் இருந்தோம் என்பதனையும் நான் அறிந்திருந்தேன். இருந்தும் ஏதோ ஒரு காரணத்தினால், அந்த சூரியனானது நம்முடைய சூரியனைப் போன்றே முற்றிலுமாக இருந்தது என்றும் நமது சூரியனின் மற்றுமொரு பிரதியாக, ஒரு நகலாக இருந்தது என்றுமே என்னால் உணர முடிந்தது. இனிமையான ஒரு உணர்வின் அழைப்பு என்னுடைய ஆன்மாவினில் மகிழ்ச்சியுடன் ஒலித்தது. எந்த ஒளியானது எனக்கு பிறப்பினைத் தந்திருந்ததோ, அந்த ஒளியின் இயல்பு சக்தியானது என்னுடைய இதயத்தினில் எதிரொலித்துக் கொண்டிருந்தது. அந்த ஒளியானது என்னுடைய இதயத்தினை மீண்டும் உயிர்ப்பிக்க செய்தது. நான் வாழ்வினை உணர்ந்தேன். மரணத்திற்கு பின்னர் முதல் முறையாக நான் என்னுடைய பழைய வாழ்வினை மீண்டும் உணர்ந்தேன்.

“இது சூரியனாக இருக்குமேயானால், இது நமது சூரியனைப் போன்றே முற்றிலுமாக இருக்கின்ற ஒரு சூரியனே என்றால்…பூமியானது எங்கே?” என்றே நான் வினவினேன். என்னுடன் இருந்தவர் தொலைவில் ஒரு மரகத கல்லினைப் போன்று மின்னிக் கொண்டிருந்த ஒரு சிறு நட்சத்திரத்தினை நோக்கி கை காட்டினார். நாங்கள் அவளை நோக்கித் தான் விரைந்துக் கொண்டிருந்தோம்.

“இப்படிப்பட்ட பிரதிகள் பிரபஞ்சத்தில் இருப்பது உண்மையிலேயே சாத்தியம் தானா? உண்மையிலேயே அது இயற்கையின் விதி தானா?…மேலும்…அங்கிருப்பது பூமியாக இருக்கும் பட்சத்தில், உண்மையிலேயே அது நமது பூமியினைப் போலவா முற்றிலும் இருக்கக் கூடும்…நமது பூமியினைப் போன்று துரதிர்ஷ்டசாலியாகவும் ஏழ்மை நிறைந்தவளாகவும், அதே நேரத்தில் தன்னுடைய மிகவும் இழிந்த நன்றியற்ற குழந்தையின் மனதிலும் அவளின் மீது அன்பினை பிறப்பிக்க செய்பவளாகவும், என்றென்றும் அன்பிற்குரியவளாகவுமா இந்த பூமியானது இருக்கக் கூடும்?” என்றே நான் கதறினேன். எந்த பூமியினை நான் கைவிட்டு இருந்தேனோ, அந்த பூமியின் மீதிருந்த அளவுக்கடந்த ஆனந்தமான அன்பினால் நான் தடுக்க முடியாமல் நடுங்கிக் கொண்டிருந்தேன். நான் காயப்படுத்தி இருந்த அந்த ஏழைச் சிறுமியின் உருவமானது என் முன்னே தோன்றி மறைந்துக் கொண்டிருந்தது.

“அனைத்தையும் நீயே காண்பாய்” என்றே என்னுடன் வந்தவர் பதிலளித்தார். அவருடைய வார்த்தைகளில் சிறிது சோகம் கலந்து இருந்தது. நாங்கள் விரைவாக அந்த பூமியினை நெருங்கிக் கொண்டிருந்தோம். அந்த கிரகமானது எனது கண்முன்னே வளர்ந்துக் கொண்டிருந்தது, ஏற்கனவே என்னால் பெருங்கடல்களையும், ஐரோப்பிய கண்டத்தின் எல்லைகளையும் வரையறை செய்ய முடிந்தது. ஆனால் அப்பொழுது திடீரென்று ஒருவிதமான பொறாமை ஒன்று எனது இதயத்தினில் கொழுந்துவிட்டு எரியத் துவங்கியது.

“பூமியினைப் போன்றே இருக்கும் இப்படிப்பட்ட ஒரு நகல் இருப்பது எப்படி சாத்தியமாகும்? எதற்காக இப்படி ஒன்று இருக்க வேண்டும்? நன்றியற்றவனாகிய என்னுடைய இரத்தத்தினை, என்னை நானே சுட்டுக் கொண்டு வாழ்வினை முடித்துக் கொண்ட பொழுது மண்ணில் சிந்திய இரத்தத்தினை, சுமந்து கொண்டிருக்கும் அந்த பூமியினைத் தான் நான் நேசிக்கின்றேன். அதனை மட்டுமே தான் என்னால் நேசிக்க முடியும். என்னுடைய வாழ்வினை நானே முடித்துக் கொண்டிருந்தாலும், அவளை நேசிப்பதை நான் நிறுத்தி இருக்கவில்லை. சரியாக கூற வேண்டுமேயானால், அன்றிரவு தான் நான் அவளை மிகவும் அதிகமாக நேசித்தேன். அது எனக்கு மிகவும் வேதனையாக இருந்தாலும் அவளை நான் அதிகமாக நேசித்தேன். இந்த புதிய பூமியில் துயரங்கள் இருக்கின்றனவா? நமது பூமியில் நம்மால் துயரங்களின் மூலமாகவே உண்மையாக நேசிக்க முடியும். நம்மால் வேறு எப்படியும் நேசிக்க முடியாது. துயரத்தின் மூலமாக வெளிப்படும் அன்பினைத் தவிர நாம் வேறொரு அன்பினை அறியோம். இந்த நொடியில், நான் கண்ணீர் சிந்தியவாறு நான் விட்டு வந்த அந்த பூமியின் மீது முத்தம் செய்ய விரும்புகின்றேன்…வேறு எந்த உலகிலும் எனக்கு எவ்விதமான வாழ்வும் வேண்டாம்…அதனை நான் ஏற்றுக் கொள்ளவும் மாட்டேன்.” என்றே நான் இதயத்தில் இருந்து கதறினேன்.

ஆனால் என்னுடன் வந்திருந்த அந்த நபர் என்னை விட்டுவிட்டு ஏற்கனவே சென்று இருந்தார். திடீரென்று நான் அந்த பூமியின் மீது, கிட்டத்தட்ட எப்படி அங்கே வந்தேன் என்றே எனக்கு புலப்படாமல் நின்றுக் கொண்டிருந்தேன். வெளிச்சம் மிகுந்த ஒரு பகற்பொழுதினில், சொர்க்கம் போல் அழகாய் இருந்த அந்த பூமியினில் நான் நின்றுக் கொண்டிருந்தேன்.

நமது பூமியிலுள்ள கிரேக்கத் தீவு கூட்டங்களைப் போன்றிருந்த தீவுக் கூட்டங்களில் ஒன்றினிலோ அல்லது அத்தீவுக் கூட்டங்களுக்கு அருகாமையில் இருந்த ஒரு நிலப்பகுதியின் கடற்கரை ஒன்றினிலோ நான் நின்றுக் கொண்டு இருந்தேன். அங்கிருந்த அனைத்தும் நமது பூமியினில் இருப்பவற்றைப் போன்றே தான் இருந்தன. இருந்தும் அவை அனைத்தும் ஒரு விதமான புனித உணர்வினை கோலாகலமாக தங்களிடமிருந்து பரப்பிக் கொண்டிருந்ததைப் போலவே தோன்றியது. இறுதியில் வெற்றியினை அடைந்து விட்ட ஒரு உயர்ந்த உணர்வினையே அவை பிரதிபலித்துக் கொண்டிருந்தன. மரகதக் கடலோ, தனது அலைகளை மெதுவாக கரையின் மீது பரப்பி அதனை அன்புடன் முத்தமிட்டுக் கொண்டிருந்தது. அக்கடலானது, தான் என்ன செய்கின்றோம் என்பதனை அறிந்தே செய்து கொண்டிருந்ததைப் போன்றே தோன்றியது. அழகிய உயர்ந்த மரங்கள் அங்கே பூக்களாலும் இலைகளாலும் நிரம்பப்பட்டு அங்கே நின்றுக் கொண்டிருந்தன. அன்பான வார்த்தைகளைக் கூறி ஒருவரை வரவேற்பதனைப் போன்றே அம்மரங்கள் என்னை அவர்களது மிருதுவான இனிய ஒலியினால் என்னை வரவேற்றன. அவைகள் என்னை அப்படி வரவேற்றன என்பதனை மறுக்க முடியாதபடி நான் நம்பினேன்.

வண்ணமயமான பூக்களால் புற்கள் மின்னிக் கொண்டிருந்தன. பறவைக் கூட்டங்கள், என் மீது துளியும் அச்சமின்றி, வானத்தில் பறந்து வந்தபடி என்னுடைய தோள்களிலும் கைகளிலும் வந்தமர்ந்தன. அவற்றின் அருமையான சிறகுகளை விசிறியவாறு அவைகள் என்னை வருடிக் கொடுத்துக் கொண்டிருந்தன. பின்னர் இறுதியாக, மகிழ்ச்சியானது நிறைந்து இருந்த அந்த பூமியின் மனிதர்களையும் நான் கண்டறிந்துக் கொண்டேன். அவர்களாகவே அவர்கள் என்னை நோக்கி வந்தார்கள். அவர்கள் என்னை சூழ்ந்துக் கொண்டு என்னை முத்தமிடவும் செய்தார்கள். சூரியனின் குழந்தைகள் அவர்கள்…அவர்களது சூரியனின் குழந்தைகள்…ஆ…அவர்கள் தான் எவ்வளவு அழகாக இருந்தார்கள். அத்தகைய அழகான ஒரு மனிதனை நான் நமது உலகினில் கண்டதே கிடையாது. ஒருவேளை நமது குழந்தைகளில், அவர்கள் சிறு குழந்தைகளாக இருக்கின்ற அந்த சில வருடங்களில் மட்டும், அத்தகைய அழகினை மங்கலாக சிறிதளவு நாம் கண்டிருக்கலாம். அம்மனிதர்களின் கண்கள் தெளிவான ஓர் பிரகாசத்தோடு மின்னிக் கொண்டிருந்தன. அவர்களது முகமானது தெளிவான விழிப்புணர்வினால் தோன்றும் அமைதியினையும் நேர்த்தியான சிந்தனையையும் ஒருசேர வெளிப்படுத்திக் கொண்டிருந்தது. இருந்தும் அவர்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருந்தனர். அவர்களது வார்த்தைகளிலும் குரல்களிலும் எப்பொழுதும் ஒரு குழந்தையினைப் போன்ற குதூகலம் இருந்துக் கொண்டே இருந்தது.

அவர்களது முகத்தினை பார்த்த முதல் நொடியிலேயே நான் அனைத்தையும் புரிந்துக் கொண்டேன்…ஆம்…அனைத்தையும் புரிந்துக் கொண்டேன். வீழ்ச்சிக்கு முன்பிருந்த பூமி தான் இது. இங்கிருந்த மக்கள் இன்னும் பாவம் செய்திருக்கவில்லை. நமது மூதாதையர்கள் சொர்க்கத்தில் வாழ்ந்து வந்தனர் என்று புராணக்கதைகளில் கூறப்பட்ட சொர்க்கத்தில் தான் இந்த மக்கள் வாழ்ந்து வந்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த மக்கள் மகிழ்ச்சியுடன் சிரித்தவாறே என்னைச் சுற்றிக் கொண்டு, என்னை நன்றாக கவனிக்கத் தொடங்கினர். அவர்கள் தங்களுடன் என்னையும் அழைத்துச் சென்றனர். அவர்களுள் ஒவ்வொருவரும் என்னை நிம்மதியாகவும் நலமாகவும் ஆக்குவதற்கு அவர்களால் இயன்ற எதையேனும் செய்வதற்கு தயாராக இருந்தனர். ஆ…அவர்கள் என்னைக் குறித்து ஒன்றையும் கேட்கவில்லை. ஆனால் அவர்கள் அனைத்தையும் அறிந்திருந்தனர் என்றே எனக்குத் தோணிற்று. என்னுடைய முகத்தில் இருந்த வலியினை விரைவில் களைய வேண்டும் என்றே அவர்கள் விரும்பினர்.

தொடரும்…!!!

முந்தைய பகுதிகள்: 1 | 2 | 3 | 4 | 5 |

பி.கு:
‘The Dreams of a Ridiculous man’ என்ற பியோதர் தஸ்தோவஸ்கியின் நூலின் மொழிபெயர்ப்பு முயற்சியே இது ஆகும்.

0 கருத்துகள்:

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு