அவ்வாறு என்னுடைய மேசையினில் அமர்ந்துக் கொண்டு, என்னுள் எழுந்த கேள்விகளை புதிய கோணத்தில் கண்டு, புதிதான சிந்தனைகளை நான் அன்று கண்டு கொண்டிருந்தது எனக்கு இன்றும் நினைவில் இருக்கின்றது. உதாரணமாக,

நான் ஒருவேளை நிலவிலோ அல்லது செவ்வாய் கிரகத்திலோ வசித்து வந்திருந்தவனாக இருந்து, அங்கே மிகவும் வெட்கப்படத்தக்க மனிதத்தன்மையற்ற கேவலமான செயலினை நான் செய்து, அச்செயலுக்காக அங்கே மிகவும் கேவலப்பட்டு மதிப்பிழந்து போய் இருந்திருக்கும் நிலையில், நான் இங்கே பூமிக்கு நிரந்தரமாக வந்து விட்டேன் என்றால், என்னுடைய அந்த கேவலமான செயலினைக் குறித்து நான் இங்கே, இப்பூமியில், வெட்கப்படுவேனா அல்லது மாட்டேனா? மீண்டும் நான் நிலவிற்கு செல்ல மாட்டேன் என்ற நிலையில், அங்கே நான் செய்த கேவலமான செயலானது என்னுடைய மனதினில் மறையாது நின்றிருக்கும் பொழுது, அச்சிந்தனையானது என்னுடைய வாழ்வினில் ஒரு பொருட்டாக இருக்குமா அல்லது இல்லையா?

என்பதனை போன்ற கேள்விகள் என்னுளே ஓடிக் கொண்டிருந்தன. எனக்கு முன்னே எனது துப்பாக்கியானது எனக்காகத் தயாராக காத்திருந்த பொழுது, இக்கேள்விகளானவைகள் பயனற்றதும் தேவையற்றதுமாகவுமே இருந்தன. இருந்தாலும் அக்கேள்விகள் என்னுள் ஏதோ ஒரு உணர்ச்சியினை தூண்டிக் கொண்டிருந்தன. அக்கேள்விகளால் நான் சீற்றமடைந்துக் கொண்டிருந்தேன். அக்கேள்விகளில் எவற்றேனுக்கும் விடையினைக் காணாது என்னால் மரணமடைய முடியாது என்கின்ற ஒரு நிலையே அப்பொழுது இருந்தது. சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால், அச்சிறுமியானவள் என்னுடைய வாழ்வினைக் காப்பாற்றி இருந்தாள். ஏனென்றால் அக்கேள்விகளின் விளைவாகவே நான் என்னை சுட்டுக் கொள்வதை தாமதித்து இருந்தேன். அதே நேரத்தில் அருகிருந்த அந்த கப்பல் தலைவனின் அறையிலும் அனைத்தும் அமைதியாகிக் கொண்டிருந்தது. அவர்கள் அவர்களுடைய சீட்டாட்டத்தினையும் சச்சரவுகளையும் ஒருவழியாக முடித்துக் கொண்டு உறங்குவதற்கு ஆயுத்தமாகிக் கொண்டிருந்தனர். அச்சமயத்தினில் தான் நான் எனது சாய்வு நாற்காலியில் அமர்ந்த வண்ணமே திடீரென்று தூங்க ஆரம்பித்தேன். அதனைப் போன்று அது வரை ஒருபோதும் நடந்ததே கிடையாது. என்னை அறியாமலேயே நான் தூங்கத் தொடங்கி இருந்தேன்.

அனைவரும் பொதுவாக அறிந்து இருப்பதனைப் போல, கனவுகள் முற்றிலும் வித்தியாசமானவை தான். சில விஷயங்கள், எவ்வாறு ஒரு நகை ஆசாரியானவன் தன்னுடைய நகையின் ஒவ்வொரு அங்குலத்தையும் நேர்த்தியாக செய்து இருப்பானோ அதனைப் போன்றே மிகவும் துல்லியமாக மிகுந்த நேர்த்தியுடன் கனவினில் படம்பிடிக்கப் பட்டு இருக்கும். அதே நேரம் மற்ற சில விஷயங்களோ, உதாரணமாக காலம் மற்றும் இடங்கள் ஆகிய விடயங்கள், அவற்றை நாம் கவனிக்காது செல்லும் வண்ணமே அமைந்திருக்கும். கனவுகள் ‘ஏன்’ என்று சிந்திக்க வைக்கும் ‘காரண அறிவில்’ இருந்து தோன்றுவதில்லை. அவைகள் ஆசைகளில்  இருந்தே தோன்றுகின்றன. மூளையில் இருந்தல்ல, இதயத்தில் இருந்தே கனவுகள் தோன்றுகின்றன. இருந்தும் சில நேரங்களில் என்னுடைய சிந்தனையானது என்னுடைய கனவுகளில் செய்திருக்கும் புத்திசாலித்தனமான செயல்கள் தான் எத்தனை!!! இருந்தும் சில நேரங்களில் சிறிதும் நினைத்துப் பார்க்க முடியாத சில விஷயங்களும் கனவுகளில் நிகழத்தான் செய்கின்றன.

உதாரணமாக, ஐந்து வருடங்களுக்கு முன்னர் என்னுடைய சகோதரன் இறந்து விட்டிருந்தான். சில நேரம் நான் அவனை என்னுடைய கனவினில் காணுகின்றேன். கனவினில் நான் செய்து கொண்டிருக்கும் விடயங்களில் அவனும் பங்கெடுத்துக் கொள்கின்றான். நாங்கள் இரண்டு பேருமே மிகுந்த ஆர்வத்துடன் அக்கனவில் இருக்கின்றோம். இருந்தும் அக்கனவு முழுமையும் நான், என்னுடைய சகோதரன் இறந்து விட்டான் என்பதையும் அவனை அடக்கம் செய்தாயிற்று என்பதனையும் தெளிவாக நினைவில் கொண்டு தான் இருக்கின்றேன். அவ்வாறு இருக்கையில் ஏன் நான் எவ்விதமான ஆச்சரியமும் அடையவில்லை? அவன் இறந்து போயிருந்தாலும், இதோ என்னருகில் என்னுடன் இருந்துக் கொண்டு என்னுடன் வேலையைச் செய்துக் கொண்டிருக்கின்றான். ஏன் என்னுடைய சிந்தனையானது இதனை முழுமையாக அனுமதிக்கின்றது? சரி…இத்துடன் இது போதும். நான் என்னுடைய கனவிற்கே நேரடியாக வருகின்றேன்.

ஆம்…நவம்பர் மாதம் மூன்றாம் தேதி அன்று நான் அந்த கனவினைக் கண்டேன். அது வெறும் கனவென்றே இன்று அவர்கள் என்னை நோக்கி கிண்டல் செய்கின்றனர். ஆனால் அக்கனவானது உண்மையை எனக்கு அறிவித்திருக்கும் பட்சத்தில், அது வெறும் கனவாக இருந்தால் என்ன அல்லது கனவாக இல்லாதிருந்தால் தான் என்ன? ஏனென்றால், நீங்கள் ஒருமுறை உண்மையினை அறிந்துக் கொண்டு அதனைக் கண்டு விட்டீர்களே என்றால், அதுவே தான் உண்மையானது என்றும் அதனைத் தவிர்த்து உண்மையென்று வேறொன்றும் கிடையாது/இருக்கவும் முடியாது என்பதனையும் நீங்கள் அறிந்துக் கொள்வீர்கள். நீங்கள் முழித்துக் கொண்டிருந்தீர்கள் என்றாலும் சரி அல்லது உறங்கிக் கொண்டிருந்தீர்கள் என்றாலும் சரி,உண்மையினை நீங்கள் கண்டு விட்டீர்களே என்றால் நீங்கள் அதனை நிச்சயமாக அறிந்துக் கொள்வீர்கள்.

எனவே நான் கண்டது ஒரு கனவாகவே இருந்துவிட்டு போகட்டும். ஆனால் எந்த வாழ்வினை நீங்கள் தூக்கி வைத்து கொண்டாடிக் கொண்டிருக்கின்றீர்களோ, அதனை தற்கொலையின் மூலமாக முடித்துக் கொள்ளவே நான் விரும்பினேன். ஆனால் எனது கனவோ, உயர்ந்ததும் புதியதுமானதான ஒரு வலிமையான வாழ்வினை என்முன்னே புதுப்பித்து  காட்டியது.

கவனியுங்கள்…!!!

என்னை அறியாமலேயே நான் உறங்கிப் போனேன் என்றே நான் கூறி இருந்தேன். திடீரென்று நான் அக்கனவினைக் காண ஆரம்பித்தேன். என்னுடைய நாற்காலியினில் அமர்ந்துக் கொண்டே நான் திடீரென்று எனக்கு முன்பிருந்த அத்துப்பாக்கியினை எடுத்து நேராக எனது இதயத்தினை நோக்கி குறி வைக்கின்றேன். என்னுடைய தலையில் அதுவும் குறிப்பாக வலது நெற்றியில் சுட்டுக் கொள்ள வேண்டும் என்றே நான் முன்னர் தீர்மானித்து இருந்தேன். ஆனால் என்னுடைய கனவிலோ நான் தலைக்கு மாறாக என்னுடைய இதயத்தை குறி வைத்துக் கொண்டிருந்தேன். இதயத்தினை குறி வைத்த மாதிரியே நான் இரு நொடிகள் காத்திருந்தேன். என் முன்னே இருந்தே மெழுகுவர்த்தி, மேசை மற்றும் சுவர் ஆகியவைகள் திடீரென்று நகரத் துவங்கின. நான் அவசரமாக என்னுடைய துப்பாக்கியை முழங்கினேன்.

தொடரும்…!!!

முந்தைய பகுதிகள்: 1 | 2 | 3 |


பி.கு:
‘The Dreams of a Ridiculous man’ என்ற பியோதர் தஸ்தோவஸ்கியின் நூலின் மொழிபெயர்ப்பு முயற்சியே இது ஆகும்.

0 கருத்துகள்:

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு