தொடர் பதிவுகள் இட்டுக் கொண்டு இருக்கும் பொழுது அப்பதிவுகளை வெளியிடுவதில் ஒரு இடைவெளியை ஏனோ தவிர்க்க இயலவில்லை. நண்பர்கள் அவ்விடயத்தில் என்னை பொறுத்துக் கொள்ளுங்கள். சரி இப்பொழுது திருக்குறளினைப் பற்றிய நமது பார்வையைத் தொடர்வோம். அதற்கு முன்னர் முந்தையப் பதிவுகளையும் நீங்கள் படித்து இருந்தீர்கள் என்றால் நலமாக இருக்கும்.

தொண்டை நாடு சான்றோர் உடைத்து...!!!
திருக்குறள் என்ற உலகப் பொதுமறை- ஐந்தவித்தான்!!!

சரி...!!! திருவள்ளுவரின் கருத்துக்கள் கிருத்துவின் கருத்துக்களின் அடிப்படையில் அமைந்துள்ளவையா என்றே கண்டுக் கொண்டு வருகின்றோம். இப்பொழுது அதன் அடிப்படையில் தான் வள்ளுவரின் குறள் ஒன்றினை நாம் காண வேண்டி இருக்கின்றது.

"இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு" - திருக்குறள் 5

பொதுவாக இக்குறளுக்கு விளக்கம் அளிப்பவர்களின் கூற்று 'இறைவனின் அடி சேர்ந்தாருக்கு அறியாமையால் வரும் இரு வினைகளாகிய நல்வினையும் தீவினையும் சேருவதில்லை' என்பதே ஆகும். அதாவது இருவினை என்றால் அது நல்வினை மற்றும் தீவினை என்பதே அவர்களின் பார்வையாக இருக்கின்றது. நிற்க.

ஆனால் வள்ளுவர் வெறும் இருவினைகள் என்றுக் கூறிச் செல்லவில்லை....மாறாக இருள் சேர்க்கும் இரு வினைகள் என்றே கூறிச் சென்று உள்ளார். அதன்படி அவ்விரு வினையானவை ஒருவனை இருளில் சேர்த்து விடும் என்பதே பொருளாகும். இங்கே தான் நமக்கு கேள்விகள் வருகின்றன.

தீவினை இருள் சேர்க்கும் சரி....நல்வினையுமா இருள் சேர்க்கும்? இரு வினைகளுமே இருள் சேர்த்தால் பின்னர் அவ்விரண்டு வினைகளுக்கும் வேறுபாடுகள் யாது?

ஒருவன் நல்லது செய்தாலும் இருளில் தான் சேரப் போகின்றான்...தீமை செய்தாலும் இருளில் தான் சேரப் போகின்றான் என்றால் எதற்காக நன்மைகளை செய்ய வேண்டும்...மகிழ்ச்சியாக தீய காரியங்களையையே செய்துக் கொள்ளலாம் தானே. நற்செயல்கள் தீச்செயல்கள் ஆகியவற்றுக்கு வேறுபாடுகள் இல்லை என்றால் எதற்காக வள்ளுவர் அவரது பல்வேறுக் குறள்களில் அறத்தினை வலியுறுத்த வேண்டும்?

எதனை செய்தாலும் இருள் தான் என்றால் வள்ளுவனின் மற்றக் குரள்களே அக்கருத்திற்கு முரணாக அல்லவா போய் விடும். இந்நிலையில் முரணானக் கருத்தினையா வள்ளுவர் கூறிச் சென்று இருக்கின்றார் என்றே நாம் காண வேண்டி இருக்கின்றது. அதற்கு வள்ளுவர் கூறிச் சென்றுள்ள இரு வினைகளைப் பற்றி நாம் காண வேண்டி இருக்கின்றது. அதற்கு நாம் கிருத்துவத்தையும் சைவ சித்தாந்தத்தையும் காண வேண்டி இருக்கின்றது. காரணம் அங்கும் இரு வினைகளைப் பற்றிக் கூறப் பட்டு இருக்கின்றது.

சைவ சித்தாந்தத்தில் இறைவன் வினைகளைப் போக்குவோனாகவே பெரிதும் அறியப்படுகின்றான் (வினை தீர்க்கும் விநாயகன்...வேலுண்டு வினையில்லை...போன்ற வரிகள் இங்கே குறிப்பிடத்தக்கவை). அவ்வினைகள் இருவகைப்படும்.

ஒன்று ஒரு மனிதன் பிறக்கும் பொழுதே வரும் வினையாகிய ஜென்ம பாவம்...சைவத்தில் அதனை சகச மலம் என்று அழைப்பர். மற்றொன்று அவரவர் செய்கின்ற செயல்களால் வரும் பாவமாகிய கர்ம பாவமும் ஆகும். இவ்விரண்டு வினைகளும் தான் ஒரு மனிதனை இறைவனிடம் இருந்து பிரித்து வைத்து இருக்கின்றன என்பதே சைவ சித்தாந்தத்தின் கருத்து.

இருவினைகளைப் பற்றி ஆன்மீகம் பேசுவோர் கூறி இருக்கும் சில பாடல்கள் இதோ...

“பற்றி தொடரும் இரு வினை அன்றி வேறு ஒன்றும் இல்லை பராபரமே” – தாயுமான சுவாமிகள்.


"கருவினில் கருவதாய் எடுத்தஏழு தோற்றமும்
இருவினைப் பயத்தினால் பிறந்திறந்து உழன்றிடும்..." - சிவவாக்கியர்

நிற்க. இப்பொழுது இரு வினைகள் என்றால் ஒருவன் பிறக்கும் போதே தொடர்ந்து வரும் பாவமும்....அவன் அவனது பிறப்பில் செய்கின்ற பாவமுமே ஆகும் என்ற ஒரு பொருளினைக் கண்டு இருக்கின்றோம். ஆனால் இக்கூற்றிலேயும் கேள்விகள் எழத் தான் செய்யும்.

எவ்வாறு ஒருவன் பிறக்கும் போதே பாவத்துடன் பிறப்பான்...என்பது அக்கேள்விகளில் முக்கியமான ஒன்றாகும். இக்கேள்விக்கு விடையாய் கூறப்படும் பொதுக் கருத்துக்கள் யாதெனில், ஒருவன் சென்ற பிறப்புகளில் செய்த பாவமே அவனை இப்பிறப்பிலும் தொடர்ந்து வருகின்றது...அதனால் தான் அவன் பிறக்கும் பொழுதே பாவத்துடன் பிறக்கின்றான் என்பதே ஆகும். இக்கூற்று மறுபிறவிக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டது ஆகும்.

ஆனால் சைவ சித்தாந்தமோ மறுபிறவிக் கொள்கையைக் கொண்டது அல்ல. உதாரணத்திற்கு சிவவாக்கியாரின் பாடல் கூறும் செய்தியைக் காணுங்கள். இறந்தவர் மீண்டும் பிறப்பதில்லை என்றே அவர் கூறுகின்றார்.

கறந்த பால் முலைப் புகா, கடைந்த வெண்ணெய் மோர் புகா
உடைந்து போன சங்கின் ஓசை உயிர்களும் உடல் புகா,
விரிந்த பூ உதிர்ந்த காயும் மீண்டும் போய் மரம் புகா,
இறந்தவர் பிறப்பதில்லை இல்லை இல்லை இல்லையே - சிவவாக்கியர்


இறந்தவர் பிறப்பதில்லை என்றால் அதாவது பிறவி சுழற்சி இல்லை என்றால் ஒருவன் போன பிறவியில் செய்த பாவங்கள் அவனை இப்பிறவியில் தொடர்வதால் அவன் பிறக்கும் பொழுதே பாவத்துடன் பிறக்கின்றான் என்பது சரியான விளக்கமாக அமையாது.

எனவே இந்நிலையில் ஒருவன் பிறக்கும் பொழுதே பாவத்துடன் பிறக்கின்றான் என்றால் அது எவ்வாறு என்றே நாம் காண வேண்டி இருக்கின்றது. அதற்கு விடை கிருத்துவத்திலும் சரி சைவ சித்தாந்தத்திலும் சரி இருக்கத்தான் செய்கின்றது.

கிருத்துவத்தில் முதல் மனிதன் செய்த பாவம் அவன் தொடர்ச்சியாக அனைத்து மனிதர்களையும் பற்றியது என்ற கருத்து இருக்கின்றது.

"இப்படியாக ஒரே மனிதனாலே பாவமும்...பாவத்தினாலே மரணமும் உலகத்தில் நுழைந்தது போலவும் அனைத்து மனிதரும் பாவஞ் செய்தபடியால் மரணம் எல்லாருக்கும் வந்தது போலவும் இதுவுமாயிற்று - ரோமர் 5:12"

அக்கருத்தினை ஒத்த கருத்தே சைவ சித்தாந்தத்திலும் வருகின்றது...

முத்தி முதற்கொடிக்கே மோகக் கொடிபடர்ந்
அத்தி பழுத்த தருளென்னுங் – கத்தியினால்
மோகக் கொடியறுக்க முத்திப் பழம் பழுக்கும்
ஏகக் கொடி எழுங்காண் இன்று’ – திருக்களிற்றுப்படியார் – 93


உலகின் முதல் மனிதனுக்கே பாவம் படர்ந்து அவன் துன்பப்பட ஆரம்பித்தான் என்றும் அவ்வாறுப் படர்ந்த பாவத்தை அறுக்கும் ஒருவன் இன்று எழுந்து இருக்கான் என்றும் மேலே உள்ள வரிகள் கூறுகின்றன...!!! ஆனால் அவற்றைப் பற்றி விரிவாக நாம் இங்கே காண வேண்டியதில்லை. இங்கே நமக்கு வேண்டியதெல்லாம் முதல் மனிதனால் தீமை மற்ற மக்கள் அனைவருக்கும் பரவியது என்ற ஒரு கருத்து தான். நிற்க.


இதன் மூலம் வள்ளுவர் கூறும் இரு வினைகள் என்பன நல்வினை/தீவினை அல்ல என்றும் அவ்வினைகள் சைவ சித்தாந்தமும் கிருத்துவமும் கூறும் ஜென்ம பாவமும்/கர்ம பாவமுமே ஆகும் என்றே நாம் கருத முடிகின்றது.

மனிதர்களை சூழ்ந்து அவனை இருளில் தள்ளும் அவ்விரு வினைகள், அவன் இறைவனின் அடி சேர்ந்து விட்டால் அவனை பாதிக்காது என்பதே வள்ளுவரின்

"இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு" என்ற குறளுக்கு உரிய விளக்கமாகும்.

தொடரும்...!!!

பி.கு:

1) இங்கே நாம் திருக்குறளை விளக்க கிருத்துவம், சைவ சித்தாந்தம் ஆகியவைகளின் கருத்துக்களை மேற்கோளாக எடுத்துக் கொள்வதற்கு இம்மூன்றும் ஒன்றோடு ஒன்று தொடர்பு உடையவையாக இருப்பதே காரணம் ஆகும்.

இத்தொடர்பினை நாம் அறிந்துக் கொள்ளாது நம்மால் மெய்யான ஆன்மீகத்தையும் சமயங்களின் கருத்துக்களையும் அறிந்துக் கொள்ள முடியாது. எனவே அத்தொடர்பினை நாம் அறிந்துக் கொள்ள நாம் முயலத் தான் வேண்டி இருக்கின்றது.

அதற்கு நாம் சிவஞானபோதத்தைக் காண வேண்டி இருக்கின்றது.

2) ஆய்வாளர்.தெய்வநாயகம் என்பவரின் ஆய்வுகளில் இருந்து நான் அறிந்தவற்றையே இங்கே பதிவிட்டு இருக்கின்றேன்.

6 கருத்துகள்:

அற்புதம் ஆழம் மென்மை

நண்பர் தகவலின் பெயரில் உங்கள் தளம் அறிமுகம்... Followers ஆகி விட்டேன்... தொடர்கிறேன்... நல்லதொரு ஒப்பீடுடன் அலசல்...

தொடர வாழ்த்துக்கள்...

இது போன்ற கருத்துகள் சிலவற்றை படித்திருக்கிறேன். கிருஸ்துவத்தை பரப்புவதற்கென்றே உண்டாக்கப்பட்ட மொழி சமஸ்கிருதம் என்று கூட சிலர் கருதுகிறார்கள்.மிக நேர்மையான நேர்மையான எழுத்து. உங்கள் பதிவுகளை தொடர்ந்து படித்து வருகிறேன்.பாராட்டுக்கள்.

@திண்டுக்கல் தனபாலன்,
நன்றிகள் அண்ணா!!!

@காரிகன்,கிருஷ்ண மூர்த்தி
நன்றிகள் நண்பரே...!!!

உங்கள் பணி தொடரட்டும். வாழ்த்துக்கள். நன்றி

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு