சமயங்கள் என்றால் என்ன?

அவை கூறுகின்ற முழுமுதற் கடவுளைப் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வினை ஏற்படுத்தி, அவ்விறைவனின் கருத்துக்களை மக்கள் அனைவரிடத்தும் கொண்டு சேர்த்து, அம்மக்களை நல்வழியில் நடத்தி இறுதியில் அவர்கள் அனைவரும் அந்த முழுமுதற் இறைவனை சென்று அடையும் வழியினைக் காட்டும் ஒரு வழி...ஒரு நெறி. அது தான் ஒரு சமயமாக இருக்க முடியும். அப்படி இருக்க அப்பேற்பட்ட சமயத்தின் கருத்துக்களை பரப்புவதற்காக இருக்கும் சமய மடங்களின் கடமை என்னவாக இருக்க வேண்டும்?
அவை அந்த சமயத்தின் கருத்துக்களை மக்களின் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும். அச்சமய நெறியினை பின்பற்றுவோர் அனைவருக்கும் பொதுவாக இருந்து உண்மையான பொருளினை அனைவரும் உணர்ந்துக் கொள்ளும் வண்ணம் விளக்க வேண்டும்.

அதாவது இறைவன் இலக்காக இருக்கின்றான்...சமயங்கள் அவனை அடையும் வழியாக இருக்கின்றன...அப்பேற்பட்ட வழியில் மக்கள் தடங்கலின்றி பயணிக்க அங்கே அங்கே வைக்கப்பட்டுள்ள வழிகாட்டிப் பலகைகளாக இந்த மடங்கள் இருக்கின்றன. எந்த ஒரு வழியும் சரி வழிகாட்டிப் பலகைகளும் சரி எவ்வாறு அனைவருக்கும் பொதுவான ஒன்றாக இருக்க வேண்டுமோ அதேப் போல் தானே இந்த சமயங்களும் சரி....சமய மடங்களும் சரி...மக்கள் அனைவருக்கும் பொதுவான ஒன்றாகத் தானே இருக்க வேண்டும்... அதனை விடுத்து ஒரு சிலர் மட்டுமே அச்சமயங்களுக்கும் சரி அந்த மடங்களுக்கும் சரி சொந்தம் கொண்டாடினால் என்ன அர்த்தம்?

இறைவன் அனைவருக்கும் பொதுவானவனாமாம்...ஆனால் அவனை அடையும் வழியினைக் கூறும் சமயங்களும் சரி சமயங்களைக் கட்டிக் காக்கும் மடங்களும் சரி ஒரு சிலருக்கு மட்டுமே சிறப்பாக உரியவனவாம்... அச்சிறப்பினை அவர்கள் பிறப்பிலேயே பெற்று விட்டார்களாம். எப்படி இருக்கின்றது கதை.

ஊரில் ஒரு கிணறு இருக்கின்றது. அதில் அனைவரும் தண்ணி எடுக்கலாம் என்று ஊர் பெரியவர் சட்டம் இயற்றி விட்டார்...ஆனால் ஒரு நிபந்தனை...அந்த கிணறில் அவருடைய வீட்டு வாளியை கொண்டு மட்டுமே தண்ணீரினை பிடிக்க வேண்டும்...அதுவும் அந்த வாளியினை அவருடைய வீட்டில் இருப்பவர் மட்டுமே பயன்படுத்த முடியும் என்ற விடயம் வேறு. இந்நிலையில் அக்கிணறு மக்கள் அனைவருக்கும் உரிய கிணறாக விளங்குமா அல்லது அந்தப் பெரியவரின் வீட்டுக் கிணறாக மட்டுமே விளங்குமா? அவருடைய வீட்டுக் கிணறாகத் தானே விளங்கும். அந்த நிலை தான் இந்து மடங்களிலும். அனைத்து மடங்களும் ஒரு குறிப்பிட்ட உயர் சாதியினரால் ஆக்கிரமிக்கப் பட்டு அந்த சாதியினரை மட்டும் சமயத்தின் பேரினைக் கூறிக் கொண்டு வளர்க்கும் பணியை செம்மையாகச் செய்துக் கொண்டு வருகின்றன.


உதாரணத்துக்கு, நித்யானந்தாவின் கதையையே எடுத்துக் கொள்வோமே. அட அதாங்க நம்ம நித்தியானந்தா மதுரை ஆதீனத்தில் இளைய ஆதீனமாக தேர்ந்து எடுக்கப்பட்ட கதை தான். வெகு நாட்களாக பத்திரிக்கைகளில் முக்கியமான இடத்தினைப் பிடித்து இருந்த இந்தச் செய்தியில் ஒரு விடயத்தினை நீங்கள் கவனித்து இருப்பீர்களா இல்லையா என்றுத் தெரியவில்லை இருந்தும் இங்கே அதனைக் கூற நான் விரும்புகின்றேன்.





அதாவது மதுரை ஆதீனத்தில் 'சைவ பிள்ளை, சைவ முதலியார், சைவ செட்டியார்' ஆகிய மூன்று சாதிகளில் இருந்து மட்டும் தான் அடுத்த ஆதீனம் வர வேண்டும் என்பதே அந்த ஆதீனங்களின் உள்ள விதி. அந்த சாதிகளைத் தவிர வேற சாதி மக்களால் அவர்கள் எவ்வளவு ஆன்மீகச் சிறப்பினைப் பெற்று இருப்பீனும் ஆதினமாக வர முடியாது. "தான் ஒரு சைவ வேளாளர் சமூகத்தினைச் சார்ந்தவன் தான்" என்று நித்தியானந்தா தனது இளைய ஆதீனமாக நியமிக்கப்பட்ட நிகழ்வை நியாயப்படுத்திய நிகழ்வும் இங்கே நடந்தும் இருக்கத் தான் செய்து இருக்கின்றது.

இந்நிலையில், அதாவது வேறு சமூகத்தினரால் உரிமைக் கொண்டாடப்பட முடியாத அந்த ஆதினங்களை எவ்வாறு அனைத்துச் சமூகத்தினருக்கும் பொதுவான சைவ வைணவ சமயங்களின் கொள்கைகளைக் கட்டிக் காக்கும் மடங்கள் என்று நாம் கூற முடியும்?... அவை சைவ பிள்ளை, முதலியார், செட்டியார் ஆகிய சாதிகளை கட்டிக் காத்துக் கொண்டு இருக்கின்றன..இந்நிலையில் அந்த மடங்களை அந்த சமூகத்தினரின் மடங்கள் என்றுத் தானே கூற முடியும் அதனைத் தவிர்த்து எவ்வாறு அவை சைவ வைணவ சமய மடங்கள் என்று நாம் கருத முடியும்? இந்த மடங்கள் அனைத்தும் அவை சார்ந்து நிற்கும் சாதியினருக்காக மட்டுமே இயங்கும் அரசியல் நிறுவனங்களாகவே திகழ்கின்றன. மற்றவாறு சைவ சமயத்தின் மீதோ அல்லது இறைவனின் மீதோ உண்மையான பக்தி என்பது வெறும் பேச்சளவில் இவர்களிடையே நின்று விடுகின்றது.


அதனால் தான், சைவ சமயத்தினைத் தாங்கிப் பிடித்துக் கொண்டு இருப்பதாக கூறிக் கொள்ளும் இந்த மடங்கள்

௧) இன்று ஆதீனத் தலைமைப் பதவி ஒன்றுக்காக மடாதிபதிகள் கூட்டம் போடும் இவர்களுக்கு, இலங்கையில் இராசப்பக்சே அரசால் இந்துக்களாகிய தமிழர்கள் பல்லாயிரக்கணக்கில் கொல்லப்பட்டப் போதும் சரி இந்துக் கோவில்கள் உடைக்கப்பட்ட போதும் சரி, சொந்த இனம் அழிகின்றதே என்றும் சரி சொந்தச் சமயக் கோவில்கள் அழிகின்றனவே என்றும் சரி இரத்தம் துடிக்கவில்லை!!!

௨) மலையகத் தமிழர்களாகிய இந்துக்கள் பல்லாயிரக்கணக்கானோர் இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு திருப்பி அனுப்பப்பட்ட போது அத்தமிழர்களுக்காக இவர்களுள் யாரும் குரல் கொடுக்கவில்லை!!!

௩) "அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம்" என்று சட்டம் போட்ட பிறகும் அனைத்து சாதியினரும் கோவில்களில் அருச்சகராக முடியாத நிலை இருக்கின்றது. அந்நிலையை நீக்க இப்படி ஒன்றுகூடி ஒரு தீர்மானம் கூட போடவில்லை"

௪) சாதிக்கலவரங்கள் ஏற்ப்படும் போது எல்லாம் பெரும்பாலும் இந்து மதத்தினைச் சார்ந்த ஏதோ ஒரு சாதிக்காரர் தாம் கொல்லப்பட்டு வருகிறார்கள். எனவே சாதிக் கலவரங்கள் ஏற்படாமல் இருக்க இவர்கள் களப்பணி ஆற்றி இருக்க வேண்டும். ஆனால் அப்படிப் பட்ட வரலாறே இவர்களிடம் இல்லை!!!

௫) அண்ணல் அம்பேத்கரின் காலம் முதல் இன்று வரை பெரும்பாலும் சாதி ஏற்றத் தாழ்வு என்னும் கொடிய மன நோயின் தாக்கத்தினால் தான் இந்து சமயத்தில் இருந்து பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், மலைவாழ் மக்கள் ஆகியோர் பிற மதங்களுக்கு மாறுகின்றனர். அந்த மனநோயினைத் தீர்க்க இந்த மடாதிபதிகள் எந்த ஒரு தீர்வினையும் எடுக்க வில்லை.

உண்மையிலேயே இந்து சமயம் மீதும் மக்களின் மீதும் மதிப்பும் அக்கறையும் இருந்து இருக்கும் என்றால் அந்த மடங்கள் மேலே உள்ள விடயங்களுக்காக நிச்சயம் பாடுபட்டு இருந்து இருக்கும். ஆனால் அவ்வாறு அவை நடந்துக் கொள்ளவில்லை. காரணம் எளிது.

இந்த மடங்களுக்கு இந்து சமயங்களின் மீதும் சரி மக்களின் மீதும் சரி, யாதொரு உண்மையான பக்தியும் மரியாதையும் கிடையாது. அவற்றிக்கு அவைகள் சார்ந்து நிற்கும் சாதிகளும் அச்சாதியினரின் மேன்மையுமே முக்கியம். அதற்காகவே சைவ வைணவ சமயங்களை கருவிகளாக பயன்படுத்திக் கொண்டு அதன் மூலம் கிட்டிய கணக்கில்லா செல்வத்தையும் அதிகாரத்தையும் வைத்துக் கொண்டு அந்த மடங்கள் செயல்பட்டுக் கொண்டு இருக்கின்றன.

அதன் விளைவாகத் தான் இன்று மக்கள் அனைவருக்கும் பொதுவான சைவ சமயமும் வைணவ சமயமும் இன்று சாதி ஏற்றத்தாழ்வுக் கொள்கையான 'இந்துத்துவா (வருணாசிரம கொள்கை)' வை தாங்கிக் பிடிக்கும் சைவ மடாதிபதிகள், வைணவ மடாதிபதிகள், காஞ்சி சங்கர மடம் ஆகியவற்றின் கையில் சிக்கி சீர் அழிந்துக் கொண்டு வருகின்றன. அந்த மடாதிபதிகளுக்கு அவரவர்களின் சாதிகளே முக்கியமே தவிர இந்து மதம் அல்ல. அதனால் தான் அந்த மடங்களில் வேற்று சாதியினர் மடாதிபதிகளாக வர முடியாத நிலை இருக்கின்றது. சாதிகளை மட்டுமே இவர்கள் பார்பதனால் தான் பெரும்பாலான பிற சாதி இந்துக்கள் இன்னலுறும் போது இவர்கள் குரல் தருவதில்லை. அவ்வாறே மெல்ல மெல்ல உண்மையான இந்துச் சமயத்தினை இவர்கள் அழித்துக் கொண்டு இருக்கின்றனர்.

எனவே இன்றைய நிலையில் சமய மடங்கள் அனைத்தும் உண்மையிலேயே சமயத்திற்காக இல்லாது குறிப்பிட்ட சாதியினருக்காகவே செயல் பெற்றுக் கொண்டு இருக்கின்றன. அவை ஆன்மீக மடங்கள் அல்ல... அரசியல் மடங்கள்!!!

இந்நிலையில் உண்மையிலேயே இறை பக்தியும் சமயத்தின் மீது அக்கறையும் உடைய இந்துக்கள் இத்தகைய சதியினை கண்டுக் கொண்டு அச்சதியில் இருந்து இந்து சமயத்தினை விடுவித்தால் மட்டுமே உண்மையிலேயே ஆன்மீக ஒளி நம்முடைய தேசத்தில் ஒளி வீசும். இனியாவது விழிப்போம்...சாதி ஏற்றத்தாழ்வினை நிலை நிறுத்தி இந்துக்களை அழிக்கும் மடாதிபதிகளை அடையாளம் காண்போம்...!!!சாதி வெறிக் கொண்ட மடாதிபதிகளிடம் இருந்து சைவ சமயத்தினை மீட்டு எடுப்போம். இந்துக்கள் விழிப்படையாதவரை இந்தியா விழிக்காது...இந்துக்கள் வளராத வரை இந்தியா வளராது.

சில கேள்விகள்: ('சங்கர மடம் - தெரிந்துக் கொள்ள வேண்டிய உண்மைகள்' - யாதுமாகி பதிப்பகம் என்னும் நூலில் இருந்து எடுக்கப்பட்டது)

௧) மற்ற மடங்களுக்கும் சங்கர மடங்களுக்கும் என்ன வித்தியாசம்?

இந்தியாவில் ஏராளமான மடங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு மடமும் ஏதோ ஒரு இறைத் தத்துவத்தை முன்னிறுத்துகின்ற மடங்கள். ஜீயர் மடங்கள் இருக்கின்றன. திருவாடுதுறை மடம் திருப்பனந்தாள் மடம் என்று சைவ வைணவ மடங்கள் பல இருக்கின்றன. எல்லா மடத்துக்கும் ஒரு இறைக் கொள்கை உண்டு. அதாவது, முன் முதலாக "இறைவன் ஒருவன் உண்டு" என்பது தான் எல்லா மடத்துக்கும் உடன்பட்ட செய்தி! சங்கரமடத்துக்கு அப்படி கிடையாது. சங்கர மடத்துக்கு வேதம் தான் தெய்வம். உருவ வழிபாடே இல்லாத ஒரு மதம் இந்த சுமார்த மதம். எனவே தான் இவர்கள் யாரும் இன்றைக்கும் எந்தக் கோயிலிலும் அர்ச்சகராக இருக்க முடியாது. சங்கராச்சாரியாருக்கும் காமாட்சியம்மன் கோவிலில் கும்பிடத்தான் உரிமையே தவிர மூலத் திருமேனியைத் தொடுவதற்கோ அர்ச்சனை செய்வதற்கோ எந்த உரிமையும் கிடையாது.

௨) மடங்கள் எல்லாம் சாதி சார்ந்தனவா?

ஆம். தத்துவம் என்று பெயருக்கு வெளியிலே சொன்னாலும் எல்லா மடங்களின் பொருளாதார வளங்களும் ஏதோ ஒரு சாதிக்குரிய சொத்து தான். ஜீயர் மடங்கள் எல்லாம் வைணவப் பிராமணர்களுக்கு உரிய சொத்து. திருவாடுதுறை மடமும், தருமபுர மடமும் சைவ வேளாளர்களின் சொத்து. இது போன்ற வேறு சில சாதியார்கள்- விஸ்வகர்மா போன்றோர் - ஒன்றிரண்டு இடங்களில் மடம் வைத்து இருக்கிறார்கள். எல்லா மக்களுக்கும் எல்லா சாதியினருக்கும் உள்ள மடம் என்று தமிழ்நாட்டிலே எதுவும் கிடையாது.




1 கருத்துகள்:

Good that you got the difference between Sankara madam and the rest.
One more point to note is that, no Sanyasi from any madam can touch the statues in temples - be it Saivam or Vainavam. So who can touch - only those who got Agama Deekshai. So a person born Sivachariar family or a Bhattar family will not get the rights to do pooja in temple, unless they get deekshai. However, anybody can help in other activities. In Saiva Agamas - the Sivachariar alone can go near the Lingam. The uninitiated Vedic brahmins (Vedam Odhubavar)can stand outside the first step. Those who sing Devaram, in the next (in the mandabam) and other even after that. This is the rule, of course I won't say it is followed strictly nowadays.

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு