வேதங்கள் தொகுக்கப்பட்ட பாடல்கள் என்றும், அதனை தொகுத்தவர்கள் தமிழர்கள் என்றும், பல மொழிகள் பேசும் மக்கள் அனைவருக்கும் புரியும் வண்ணம் சில கருத்துக்களை கூற வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே அனைத்து மொழியினையும் சேர்த்து ஒரு புது மொழியாய் சமசுகிருதத்தினை தமிழர்கள் உருவாக்கினர் என்றும் இன்று நாம் கூறினால் எவரும் இலகுவில் நம்பிவிட மாட்டார்கள். நம்பி விடவும் முடியாது. இந்நிலையில் அத்தகைய கருத்துக்களை ஒருவர் கூறுகின்றார் என்றால் அதற்கு சான்றுகள் இருக்கின்றனவா என்றே நாம் காண வேண்டி இருக்கின்றது. அதற்கு முன்னர் நாம் விவிலியத்தினைப் பற்றி நாம் கண்டு விடுவது பயனுள்ளதாக இருக்கும்.

"அட என்னங்க எதை எடுத்தாலும் விவிலியம் விவிலியம் அப்படினே சொல்றீங்க, வேதத்தினைப் பற்றி அறிவதற்கு விவிலியத்தினைப் பற்றி எதுக்குங்க தெரிஞ்சிக்கணும்?" என்றக் கேள்வி இப்பொழுது சிலரின் மனதினில் நிச்சயமாக எழத்தான் செய்யும். ஆனால் இப்பொழுது நாம் விவிலியத்தினைப் பற்றி காண்பதற்கு ஒரு காரணம் இருக்கின்றது. அக்காரணம் என்னவெனில் சில அறிஞர்கள் வேதங்களுக்கும் விவிலியத்துக்கும் இடையில் ஒற்றுமைகள் பல இருப்பதாக சொல்லுகின்றனர். உதாரணமாக,

"வேத சமயமும் எபிரேய சமயமும் ஒரே காலத்ததாக இருக்கலாம். இரண்டன் தோற்றமும் ஒன்றாக இருக்கின்றது. வேத சமயத்தின் வேர், பல தெய்வக் கோட்பாடுடையதாக இயற்கை வழிப்பாட்டினைக் கொண்டதாய் இருக்கின்றது. எபிரேய சமயமும் பல தெய்வக் கோட்பாட்டில் இருந்து வளர்ச்சி பெற்றதாய் இருக்கின்றது." என்றே ஆய்வாளர் எச்.தி. கிரிசுவோல்த் (H.D.Griswold) அவர்கள் அவரது 'The religion of the Rig veda' என்னும் நூலில் கூறுகின்றார்.

இந்நிலையில் நாம் வேதங்களுக்கும் சரி விவிலியத்திற்கும் சரி இடையில் என்ன ஒற்றுமைகள் என்றும் ஏன் ஒற்றுமைகள் என்றும் காண வேண்டி இருக்கின்றது. அதற்கு நாம் இப்பொழுது விவிலியத்தினைப் பற்றி சற்றுக் காண வேண்டி இருக்கின்றது.

விவிலியம் என்பது கிருத்துவர்களின் வேத நூல் என்றே அறிவோம். அது பழைய ஏற்பாடு மற்றும் புதிய ஏற்பாடு என்று இரு பிரிவுகளைக் கொண்டு இருக்கின்றது. பழைய ஏற்பாடு உலகின் தொடக்கத்தில் இருந்து ஆரம்பித்து பின்னர் யூதர்களின் வரலாற்றினை கூறும் ஒரு நூலாக மலர்கின்றது. புதிய ஏற்பாடோ கிருத்துவின் பிறப்பையும் அவரின் வாழ்கை மற்றும் கொள்கைகளை விளக்கும் ஒரு நூலாக இருக்கின்றது. நிற்க.

இப்பொழுது இவை இரண்டுமே கிருத்துவ சமயத்தின் நூல்கள் என்றால் இரண்டுமே ஒரே கருத்துக்களை உடையவைகளாகத்தானே இருக்க வேண்டும்? ஆனால் மாறாக பழைய ஏற்பாட்டிற்கும் சரி புதிய ஏற்பாட்டிற்கும் சரி இடையில் பல கருத்து வேறுபாடுகள் நிறைந்து தான் இருக்கின்றன. உதாரணத்திற்கு,

பழைய ஏற்பாட்டினில்,

௧) பலி உண்டு. இறைவனிடம் நாம் ஏதாவது பெற வேண்டும் என்றால் அதற்கு பலி இன்றியமையாத தேவை என்ற எண்ணம் பழைய ஏற்பாட்டினில் காணப் படுகின்றது.

"அப்பொழுது நோவா கர்த்தருக்கு ஒரு பலிபீடம் கட்டி, சுத்தமான சகல மிருகங்களிலும், சுத்தமான சகல பறவைகளிலும் சிலவற்றைத் தெரிந்துகொண்டு, அவைகளைப் பலிபீடத்தின்மேல் தகனபலிகளாகப் பலியிட்டான்." - ஆதியாகமம் 8 (20:21)

௨) கண்ணுக்கு கண். பல்லுக்கு பல்.

"உன் கண் அவனுக்கு இரங்கவேண்டாம்; ஜீவனுக்கு ஜீவன், கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல், கைக்குக் கை, காலுக்குக் கால் கொடுக்கப்படவேண்டும்." - உபாமகம் 19:21

௩) யூதர், புறசாதி என்னும் ஏற்றத் தாழ்வு

"புளிப்பில்லா அப்பத்தை ஏழு நாளளவும் புசிக்கக்கடவீர்கள்; முதலாம் நாளில்தானே புளித்த மாவை உங்கள் வீடுகளிலிருந்து நீக்கவேண்டும்; முதலாம் நாள் தொடங்கி ஏழாம் நாள் வரைக்கும் புளித்தஅப்பம் புசிக்கிறவன் எவனோ அந்த ஆத்துமா இஸ்ரவேலரிலிருந்து அறுப்புண்டு போவான்." - யாத்திராகமம் 12:17

௪) அந்நிய தெய்வம் உண்டு. அந்நிய தெய்வத்தின் பெயரைக் கூட சொல்லக் கூடாது. அந்நிய தெய்வத்தின் கோவிலுக்குள் செல்லக் கூடாது.

"அந்நியதேவனை நாடிப் பின்பற்றுகிறவர்களுக்கு வேதனைகள் பெருகும்; அவர்கள் செலுத்துகிற இரத்த பானபலிகளை நான் செலுத்தமாட்டேன், அவர்கள் நாமங்களை என் உதடுகளினால் உச்சரிக்கவுமாட்டேன்." - சங்கீதம் 16:4

போன்ற கருத்துக்கள் காணப்படுகின்றன.

ஆனால் புதிய ஏற்பாட்டிலோ இக்கருத்துக்களுக்கு மாறான கருத்துக்களே காணப்படுகின்றன.

௧) பலி நிறைவேறி விட்டது. அதாவது இறைவன் மனிதனாகி வந்து பலியாகி விட்டார் என்றும் இறைவனுக்கு பலிகள் என்று எதுவுமே தேவைப்படுவது இல்லை என்றக் கருத்துகள் காணப்படுகின்றன.

"கிறிஸ்து நமக்காகத் தம்மை தேவனுக்குச் சுகந்த வாசனையான காணிக்கையாகவும் பலியாகவும் ஒப்புக்கொடுத்து நம்மில் அன்புகூர்ந்ததுபோல, நீங்களும் அன்பிலே நடந்துகொள்ளுங்கள்." - எபேசியர் 5:2

௨) வலது கன்னத்தில் அறைந்தால் இடதுக் கன்னத்தினைக் காட்ட வேண்டும்.

"நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; தீமையோடு எதிர்த்து நிற்கவேண்டாம்; ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் கொடு" - மத்தேயு 5:39

௩) அனைவரும் கிருத்துவுக்குள் ஒரே உடலின் அங்கங்கள். சாதிகள் என்பன இல்லை.

"அதென்னவெனில் புறஜாதிகள் சுவிசேஷத்தினாலே உடன் சுதந்தரருமாய், ஒரே சரீரத்திற்குள்ளானவர்களுமாய், கிறிஸ்துவுக்குள் அவர் பண்ணின வாக்குத்தத்தத்துக்கு உடன்பங்காளிகளுமாயிருக்கிறார்களென்கிற இந்த இரகசியத்தை அவர் எனக்கு வெளிப்படுத்தி அறிவித்தார்." - எபேசியர் 3:3

௪) அந்நிய தெய்வம் என்பதற்கே இடம் இல்லை. ஒரே கடவுள். ஒரே மந்தை. ஒரே மேய்ப்பன்.

"விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்டவைகளைப் புசிக்கிற விஷயத்தைப்பற்றி, உலகத்திலே விக்கிரகமானது ஒன்றுமில்லையென்றும் ஒருவரேயன்றி வேறொரு தேவன் இல்லையென்றும் அறிந்திருக்கிறோம்." - கொரிந்தியர் I 8:4

௫) அந்நியக் கோவில்களுக்குச் சென்று அவர்கள் வழிப்பாட்டு முறை, நம்பிக்கைகளை அறிந்து அவர்களுடைய நம்பிக்கை, தத்துவ அடிப்படையில் நற்செய்தி கூறுதல். யூதனுக்கு யூதன். கிரேக்கனுக்கு கிரேக்கன்.

"யூதரை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கு யூதருக்கு யூதனைப்போலவும், நியாயப்பிரமாணத்துக்குக் கீழ்ப்பட்டவர்களை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கு நியாயப்பிரமாணத்துக்குக் கீழ்ப்பட்டவனைப் போலவுமானேன்." - கொரிந்தியர் I 9 (20:21)


இதுவே புதிய ஏற்பாட்டினில் காணப்படும் கொள்கைகள். நிற்க.

மாபெரும் வித்தியாசங்கள் தான் அல்லவா... பழைய ஏற்பாடோ, பலி வேண்டும் என்கின்றது...அடித்தால் திருப்பி அடி என்கின்றது...அந்நிய தெய்வம் உண்டு என்றுக் கூறுகின்றது... ஆனால் புதிய ஏற்பாடோ இறைவனே வந்து மக்களுக்காக பலியாகி விட்டதினால் பலியினை தேவை இல்லை என்றுக் கூறுகின்றது... அடித்தால் அன்பினை திருப்பித் தான் என்கின்றது...ஒரே கடவுள் தான் உலகில் உள்ள மக்கள் அனைவருக்கும் என்றும் கூறுகின்றது. இப்பொழுது ஏன் இந்த மாற்றங்கள் என்றுப் பார்த்தோம் என்றால் பழைய ஏற்பாடு கிருத்துவர்களின் நூல் அல்ல என்ற ஒன்று நமக்கு விடையாய் கிடைக்கின்றது.

பழைய ஏற்பாடு என்பது எபிரேயச் சமயத்தின் நூல். அதாவது யூதர்களின் வழிப்பாட்டு முறைகளையும் வரலாற்றினையும் கூறக் கூடிய ஒரு நூலே அது அன்றி கிருத்துவின் கருத்துக்களைச் சுமந்துக் கொண்டு இருக்கும் ஒரு நூல் அல்ல. அதனால் தான் புதிய ஏற்பாட்டின் கருத்துக்களுக்கும் சரி பழைய ஏற்பாட்டின் கருத்துக்களுக்கும் சரி இவ்வளவு வித்தியாசங்கள் இருக்கின்றன. பழைய ஏற்பாட்டின் கருத்துக்களை கிருத்துவே மறுத்தும் உள்ளது போன்ற கருத்துக்களும் புதிய ஏற்பாட்டினில் காணப்படுகின்றது.

"இயேசுவிடம் சிலர் கேள்வி கேட்கின்றார்கள். தள்ளுதற் சீட்டினை எழுதிக் கொடுத்து ஒரு கணவனானவன் அவனது மனைவியை தள்ளி வைக்கலாம்(விவாகரத்து) என்று மோசே சொல்லி இருக்கின்றாரே என்று அவர்கள் இயேசுவிடம் கேட்க அதற்கு அவர் "உங்களின் இதயம் கடினமாக இருப்பதினால் அவர் அவ்வாறு எழுதிக் கொடுத்து இருக்கின்றார்...ஆணும் பெண்ணும் இறைவனால் படைக்கப்பட்டவர்கள். அவர்கள் ஓர் உடலாக இருப்பார்கள். எனவே கடவுள் இணைத்ததனை மனிதன் பிரிக்க கூடாது" என்று அவர் கூறுகின்றார்." மாற்கு 10 (2:9)

உலகத்தினில் இயேசு வந்ததாகக் குறிப்பிடப்படும் காலத்திற்கு முன்பு வரை கடவுள் வழிபாட்டினை உடைய மக்கள் அனைவரும் கடவுளுக்கு பலி செலுத்துபவர்களாகவே இருந்தனர். அது தமிழர்களாகட்டும் அல்லது யூதர்களாகட்டும் பலி என்பது இறை வழிபாட்டில் இன்றியமையாத ஒன்றாகவே இருந்தது. அப்பலியினை எதிர்த்து தோன்றிய சமயங்கள் தாம் சமணமும் புத்தமும் (அவை இந்தியாவிலேயே தோன்றி இருக்கின்றன).

அதேப் போல் பல கடவுளர் வழிபாடுகளும் சரி கடவுளர் மக்களை போரில் வழிநடத்துவர் என்ற நம்பிக்கைகளும் சரி மக்களின் மத்தியில் அக்காலத்தில் இருந்து தான் இருக்கின்றன.

பழைய ஏற்பாட்டில் 'யாவே' யூதர்களுக்காக மற்ற தெய்வங்கள் மத்தியில் நின்று போர் புரிவது போல குறிக்கப்பட்டுள்ளது. மேலும் பல கடவுளர் இருப்பது போலவும் பழைய ஏற்பாட்டினில் குறிக்கப்பட்டு உள்ளது.

"கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்; நீங்கள் சும்மாயிருப்பீர்கள் என்றான்." - யாத்திராகமம் 14:14

இவை அனைத்தும் யூத சிந்தனைகள். யூதர்களின் சமயமான எபிரேயச் சமயத்தின் கருத்துக்கள். மாறாக கிருத்துவின் கருத்துக்கள் கிடையாது. அவ்வாறு இருக்க ஏன் இந்த எபிரேயச் சமயத்தின் கருத்துக்களும் வரலாறும் தொகுக்கப்பட்டன என்ற கேள்விகள் இயல்பாகவே எழும். அதற்கு விடையாக என்ன கிடைக்கின்றது என்று பார்த்தோம் என்றால் பழைய ஏற்பாடு யூதர்களுக்காகவே தொகுக்கப்பட்டது. எனவே தான் அது யூதர்களின் மொழியாகிய எபிரேய மொழியினில் எழுதப்பட்டது.

யூதர்கள் தங்களின் வரலாற்றையும் அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட இறை மைந்தனுக்காக அவர்கள் காத்திருந்த விடயத்தினையும் அவர்கள் அறிந்துக் கொள்வதற்காகவே எழுதப்பட்டது தான் பழைய ஏற்பாடாகும். அவ்வளவே. அதில் கிருத்துவின் கருத்துக்கள் கிடையாது.

எனவே தான் பழைய ஏற்பாட்டிற்கும் புதிய ஏற்பாட்டிற்கும் சரி இவ்வளவு வேறுபாடுகள். பழைய ஏற்பாட்டினில் இருப்பது யூதர்களின் கொள்கைகள்...புதிய ஏற்பாட்டில் இருப்பது கிருத்துவின் கொள்கைகள். கிருத்துவின் கொள்கைகள் உலகில் உள்ள அனைவருக்கும் கொண்டு செல்ல வேண்டும் அவை யூதர்களுக்கு மட்டும் உரியவை அல்ல என்ற நோக்கிலே தான் அன்று உலகின் மத்தியப் பகுதியில் பெருமளவு பேசப்பட்டு வந்த கிரேக்க மொழியில் புதிய ஏற்பாட்டினை தொகுக்கின்றனர்.

பழைய ஏற்பாடு யூதர்களுக்கு உரியது - எபிரேயச் சமயத்தின் கொள்கைகளைக் கொண்டது - எபிரேய மொழியில் தொகுக்கப்படுகின்றது.

புதிய ஏற்பாடு உலக மக்கள் அனைவருக்கும் உரியதாக - கிருத்துவின் கொள்கைகளைக் கொண்டது - கிரேக்க மொழியில் தொகுக்கப்படுகின்றது.

சரி இருக்கட்டும்...இப்பொழுது விவிலியத்தினைப் பற்றியும் அதன் பிரிவுகளையும் பற்றி சற்று கண்டாயிற்று. இப்பொழுது நாம் வேதங்களுக்கும் சரி விவிலியத்திற்கும் சரி ஒற்றுமைகள் இருக்கின்றன என்று கூறி இருக்கின்றோம்... மேலும் எச்.தி. கிரிசுவோல்த் (H.D.Griswold) அவர்கள் குறிப்பாக வேதத்திற்கும் எபிரேயச் சமயத்திற்கும் சரி ஒற்றுமைகள் இருப்பதாக கூறி இருக்கின்றார். இந்நிலையில் அந்த ஒற்றுமைகள் யாதென்று நாம் காண வேண்டி இருக்கின்றது...

காண்போம்...!!!

பி.கு:

இக்கருத்துக்கள் நான் சில ஆய்வாளர்களின் ஆய்வுகளில் இருந்து நான் புரிந்துக் கொண்டவையே ஆகும்.

3 கருத்துகள்:

பழைய ஏற்பாட்டிலும் சரி புதிய ஏற்பாட்டிலும் சரி நீங்கள் கொடுத்துள்ள வசனத்திற்கு எதிர் வசனங்கள் அந்தந்த ஏற்பாட்டிற்கு தகுந்தபடி நிறைய இருக்கின்றன அதற்கு நீங்கள் என்ன சொல்கிறீர்கள் ...

அந்த வசனங்களை நீங்கள் கூறினால் நான் விளக்குவதற்கும் ஆராய்வதற்கும் மிக்க நலமாக இருக்கும்.

நிறைய வசனங்கள் இருக்கின்றன ஆனால் ஒரு குறிப்பிட்ட வசனத்திற்கு மட்டும் நான் சொல்கிறேன். கீழே உள்ள வசனம் மட்டும் தான் அது...

//"நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; தீமையோடு எதிர்த்து நிற்கவேண்டாம்; ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் கொடு" - மத்தேயு 5:39// இவ்வாறு மத்தேயு சொல்கிறார்.

ஆனால் இதோ யோவான் எதிர் வசனம் கூற இங்கே காத்துக்கொண்டிருக்கிறார்.

யோவான் 18:22 இப்படி அவர் சொன்னபொழுது, சமீபத்தில் நின்ற சேவகரில் ஒருவன்: பிரதான ஆசாரியனுக்கு இப்படியா உத்தரவு சொல்லுகிறது என்று, இயேசுவை ஒரு அறை அறைந்தான்.

யோவான் 18:23 இயேசு அவனை நோக்கி: நான் தகாதவிதமாய்ப் பேசினதுண்டானால், தகாததை ஒப்புவி; நான் தகுதியாய்ப் பேசினேனேயாகில், என்னை ஏன் அடிக்கிறாய் என்றார்.

இங்கே இயேசு மறு கன்னத்தை திருப்பிக் காட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


சரி அதை விடுங்கள் இங்கே லூக்காவும் எதிர் வசனம் கூற இங்கே காத்துக்கொண்டிருக்கிறார்.

லூக்கா 22:35 பின்னும் அவர் அவர்களை நோக்கி: நான் உங்களைப் பணப்பையும் சாமான்பையும் பாதரட்சைகளும் இல்லாமல் அனுப்பினபோது, ஏதாகிலும் உங்களுக்குக் குறைவாயிருந்ததா என்றார். அவர்கள், ஒன்றும் குறைவாயிருந்ததில்லை என்றார்கள்.

லூக்கா 22:36 அதற்கு அவர்: இப்பொழுதோ பணப்பையும் சாமான்பையும் உடையவன் அவைகளை எடுத்துக்கொள்ளக்கடவன்; பட்டயம் இல்லாதவன் தன் வஸ்திரத்தை விற்று ஒன்றைக் கொள்ளக்கடவன்.

லூக்கா 22:38 அதற்கு அவர்கள்: ஆண்டவரே, இதோ, இங்கே இரண்டு பட்டயம் இருக்கிறது என்றார்கள். அவர்: போதும் என்றார்.

இங்கே குறிப்பிடத்தக்க வசனம் என்னவென்றால் அன்பை போதிப்பவருக்கு பட்டயம் எதற்கு?


இதோ மறுபடியும் யோவான் உங்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறார்.

யோவான் 2:14 தேவாலயத்திலே ஆடுகள் மாடுகள் புறாக்களாகிய இவைகளை விற்கிறவர்களையும், காசுக்காரர் உட்கார்ந்திருக்கிறதையும் கண்டு,

யோவான் 2:15 கயிற்றினால் ஒரு சவுக்கையுண்டுபண்ணி, அவர்கள் யாவரையும் ஆடுமாடுகளையும் தேவாலயத்துக்குப் புறம்பே துரத்திவிட்டு, காசுக்காரருடைய காசுகளைக் கொட்டி, பலகைகளைக் கவிழ்த்துப்போட்டு,

யோவான் 2:16 புறா விற்கிறவர்களை நோக்கி: இவைகளை இவ்விடத்திலிருந்து எடுத்துக்கொண்டுபோங்கள்; என் பிதாவின் வீட்டை வியாபார வீடாக்காதிருங்கள் என்றார்.

இங்கே குறிப்பிடத்தக்க வசனம் என்னவென்றால் அன்பை போதிப்பவர் சவுக்கால் அடித்து துரத்துகிறார்.

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு