வெளிநாடுகளில் மேற்ப்படிப்பினை மேற்கொள்ள அந்த நாடுகளின் மொழியினை நாம் அறிந்து கொள்வது எவ்வளவு முக்கியம் என்றும் நம்முடைய ஆங்கிலத் திறமையை அந்தப் பல்கலைக்கழகங்கள் அறிந்துக் கொள்ள நாம் எழுத வேண்டிய தேர்வுகளைப் பற்றியும் சென்றப் பதிவில் பார்த்தோம்.

சரி... மொழித் தேவையை நிறைவு செய்தாயிற்று. அடுத்ததாக அந்தப் பல்கலைக்கழகங்கள் நம்மிடம் என்ன எதிர்ப்பார்க்கின்றன என்பதினை அறிந்துக் கொள்ள ஒருக் கேள்வி.

நம்முடைய நாட்டுப் பல்கலைக்கழகங்கள் மாணவர் சேர்க்கைக்கு என்ன தகுதியினை எதிர்ப்பார்க்கின்றன?

மதிப்பெண்கள்...!!!
மேற்ப்படிப்புக்களுக்கு என தனியாக தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு (TANCET) ,பொதுத் திறமைத் தேர்வு (CAT) மற்றும் மேலாண்மைத் திறமைத் தேர்வு (MAT) போன்ற சில நுழைவுத் தேர்வுகளில் போதுமான மதிப்பெண்கள்...

அவ்வளவுத் தானே...!!! நம்முடைய பல்கலைக்கழகங்களில் இருந்து இந்த விசயத்தில் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களும் மாறுபடுவதில்லை.

உங்களுடைய பள்ளி மற்றும் கல்லூரி மதிப்பெண்களை அந்தப் பல்கலைக்கழகங்கள் மிகவும் கூர்மையாக கவனிக்கின்றன. மதிப்பெண்கள் அதிகமாக இல்லாவிடினும் பரவாயில்லை அந்தப் பல்கலைக்கழகங்கள் நிர்ணயித்து வைத்து இருக்கும் குறைந்தப்பட்ச மதிப்பெண் சதவீத அளவிற்கு உங்கள் மதிப்பெண்கள் இருந்தால் போதும். உங்களது விண்ணப்பங்களை அவர்கள் ஏற்றுக்கொள்வார்கள். அநேக பல்கலைக்கழகங்களில் அந்த குறைந்தப்பட்ச மதிப்பெண் அளவானது 65% முதல் 70% வரை இருக்கும் (இது ஒவ்வொரு பல்கலைக்கழகங்களுக்கும் ஏற்ப மாறுப்படும்).

ஆனால் நீங்கள் படிக்கும் காலத்தில் ஏதாவது பாடத்தில் தோற்று இருந்தாலோ அல்லது பின்னடைவு ஏற்பட்டு இருந்தாலோ (Arrears) உங்களுடைய விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் வாய்ப்புகள் மிகவும் அதிகம். அதுவும் குறிப்பாக 3 பாடங்களுக்கு மேல் தோற்று இருந்தால் அநேக பல்கலைக்கழகங்களில் உங்களுடைய விண்ணப்பங்களுக்கு முன்னுரிமை அளிக்க மாட்டார்கள்.

இப்பொழுது நாம் கவனிக்க வேண்டிய ஒரு முக்கியமான விசயம் என்னவென்றால், நம்முடைய மதிப்பெண்கள் அவர்கள் நம்முடைய விண்ணப்பத்தை தேர்வு செய்வதற்கு மட்டுமே உதவும். விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டால் மட்டுமே நமக்கு இடம் கிடைத்துவிட்டது என்றுப் பொருள் கிடையாது. வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் நம்முடைய மதிப்பெண்களுக்கு எவ்வளவு முக்கியத்துவம் தருகின்றார்களோ அதே அளவு நம்முடைய இதர செயல்களுக்கும், அதாவது விளையாட்டுச் சாதனைகள்... அறிவியல் சார்ந்த கருத்தரங்குகளில் பங்குப் பெற்றுக் கொள்வது... தலைமைப் பண்புகளை வெளிப்படுத்தும் செயல்கள் போன்றவற்றிற்கும் தருவார்கள். சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால், நாம் விண்ணப்பிக்கும் படிப்பிற்கு உரிய செயல்களில் நாம் நாமாகவே ஈடுபாடு காட்டி இருக்கின்றோமா என்றும் அவர்கள் பார்ப்பார்கள். அதன் அடிப்படையிலேயும் நமது விண்ணப்பத்திற்கு அவர்கள் முக்கியத்துவம் கொடுப்பார்கள்.

உதாரணத்திற்கு, ஒருப் பல்கலைக்கழகத்திற்கு இரண்டு மாணவர்கள் விண்ணப்பிக்கின்றார்கள் என்று வைத்துக் கொள்வோம்.

முதல் மாணவர் படிப்பில் கெட்டி. 80% மதிப்பெண் வைத்து இருக்கின்றார். ஆனால் வேறு இதர செயல்கள் என்று அவர் எதுவும் செய்யவில்லை.

இரண்டாம் மாணவரோ 70% மதிப்பெண்கள் வைத்து இருக்கின்றார். அதனுடன் பலச் செயல்களை முன்னின்று கல்லூரியில் நடத்தி இருக்கின்றார். பல கருத்தரங்குகளில் பங்குப் பெற்று வென்று இருக்கின்றார் என்று வைத்துக் கொள்வோம்.

இப்பொழுது, இவர்கள் இருவரின் விண்ணப்பங்களுமே ஏற்றுக் கொள்ளப் படும். ஆனால் அந்த இரண்டாம் மாணவருக்கு தான் முன்னுரிமை அளிக்கப் படும்.

அதேப் போல, ஒரு சில படிப்புகளுக்கு, குறிப்பாக பொறியியல் மற்றும் மேலாண்மைப் படிப்புக்களில் சேர ஒரு சிலத் தேர்வுக்களை மாணவர்கள் நிச்சயம் எழுத வேண்டி இருக்கின்றது. பட்டதாரிகளுக்கான மேலாண்மை நுழைவுத் தேர்வுகள் (GMAT) மற்றும் பட்டதாரிகளுக்கான சான்றுத் தேர்வுகள் (GRE) போன்றத் தேர்வுகளில் ஒரு மாணவர் எடுக்கும் மதிப்பெண்களை வைத்தே உலகில் உள்ள தலைச் சிறந்த பல்கலைக்கழகங்கள் அவரைத் தேர்வு செய்யலாமா அல்லது வேண்டாமா என்று முடிவு செய்கின்றன.

இந்தத் தேர்வுகள் முக்கியமான தேர்வுகள் தான், ஆனால் இந்தத் தேர்வுகள் எழுதாத மாணவர்களையும் தேர்வு செய்யும் நல்லப் பல்கலைக்கழகங்களும் இருக்கத் தான் செய்கின்றன. எனவே இந்தத் தேர்வுகளை எழுதினால் தான் வெளிநாட்டினில் படிக்க முடியும் என்ற நிர்ப்பந்தம் இல்லை. அதுவும் குறிப்பாக மாணவர்களைச் சேர்க்க இந்தத் தேர்வுகள் நிச்சயம் வேண்டுமா? என்றக் கேள்வி பலப் பல்கலைக்கழகங்களுக்கு எழுந்து உள்ளது. எனவே இந்தத் தேர்வுகளை நீங்கள் எழுத வேண்டுமா என்று முடிவு செய்வதற்கு நீங்கள் படிக்க விரும்பும் பாடத்திற்கான அடிப்படைத் தகுதிகளில் அந்தத் தேர்வுகள் குறியிடப்பட்டு உள்ளனவா என்று அந்தப் பல்கலைகழக இணையத்தளத்தில் சரிப் பார்த்துக் கொள்வது நல்லது.

ஆனால் இந்தத் தேர்வுகளில் பெரும் மதிப்பெண்களின் அடிப்படையில் நீங்கள் அந்தப் பல்கலைக்கழகங்களில் கல்விப் பயில உதவித் தொகையைப் பெற முடியும் என்பதினால் இந்தத் தேர்வுகளை எழுதுவது நல்லது.

இந்தத் தேர்வுகளுக்கும் நமது நாட்டின் தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு (TANCET) மற்றும் பொதுத் திறமைத் தேர்வு (CAT) ஆகியத் தேர்வுகளுக்கும் மிகப் பெரிய வித்தியாசம் கிடையாது. இந்தத் தேர்வுகளைப் பற்றி நாம் விரிவாக மற்றொரு பதிவில் பார்க்கலாம்.

சரி... வேண்டியத் தேர்வுகளை எல்லாம் அறிந்தாயிற்று, போதிய மதிப்பெண்களும் கைவசம் உள்ளது, இதற்கு மேலும் அந்தப் பல்கலைக்கழகங்களுக்கு விண்ணபிக்க நாம் வேறு ஏதாவது அறிந்துக் கொள்ள வேண்டி இருக்கின்றதா? என்றால் ... ஆம் என்பதே பதிலாகும்.

ஒரு சிலக் கடிதங்களை அந்தப் பல்கலைக்கழகங்கள் நம்மிடம் இருந்து விண்ணப்பிக்கும் பொழுது எதிர்ப்பார்கின்றன. அந்தக் கோப்புக்களைப் பற்றியும் விண்ணப்பிக்கும் முறையினைப் பற்றியும் நாம் அடுத்த பதிவினில் பார்ப்போம்.

தொடரும்...

0 கருத்துகள்:

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு