நான் ஒரு பொருளாதார நிபுணன் அல்ல...இதனை முதலிலேயே நான் சொல்லியாக வேண்டியிருக்கிறது. ஏனெனில் இந்தப் பதிவில் நுணுக்கமான பொருளாதார கோட்பாடுகளையோ அல்லது அதன் விமர்சனங்களையோ நீங்கள் எதிர்பார்த்தீர்களே என்றால், நிச்சயம் நீங்கள் ஏமாற்றமடையக் கூடும். எனவே நான் ஒரு பொருளாதார நிபுணன் அல்ல என்ற ஒரு விடயத்தை உங்களிடம் முதலிலேயே சொல்லியாகத்தான் வேண்டியிருக்கிறது. எனவே, ஒரு சாமானிய மனிதனான எனது வாழ்வில் நான் கண்டறிந்த விடயங்களை அடிப்படையாக வைத்தே இந்தப் பதிவு அமையப்பட்டிருக்கும். சரி, இப்போது நாம் இரண்டு நிகழ்வுகளைப் பார்க்க வேண்டியிருக்கின்றது.

2001ஆம் ஆண்டு. நான் பத்தாவது படித்துக் கொண்டிருந்த காலம். முதலாம் உலகப் போர், இரண்டாம் உலகப் போர் என்று வரலாற்றுப் பாடத்தில் (மெட்ரிகுலேஷன் பாடத்திட்டம்) யுத்தங்களுக்கு மத்தியில் உலாவிக் கொண்டிருந்த ஒரு காலமது.

"ஹிட்லரின் ஆட்டம் அதிகமாக இருக்கிறதே, இரு இரு அமெரிக்கா மட்டும் போரினுள் இறங்கட்டும்...அப்புறம் பார் ஹிட்லரின் கதியை" என்று ஒரு கதாநாயகனின் வருகைக்காக காத்திருப்பது போல் யுத்தத்தில் 'அமெரிக்காவின்' வருகையை எதிர்பார்த்திருந்த ஒரு காலமது. யுத்தங்களில் வெற்றி பெற்றவர்கள் கதாநாயகர்களாவது இயல்பு தானே. அமெரிக்காவும் அவ்வாறுதான் எங்கள் முன் ஒரு கதாநாயனாக அப்பொழுது உருவாகி இருந்தது.

ஆனால் போர் எங்களுக்கு எளிதாகப் புரிந்தது போல், பொருளாதாரம் எங்களுக்குப் புரியவில்லை. 'என்னடா இவன், வரலாறு...போர் அப்படி இப்படின்னு ஆரம்பிச்சிட்டு திடீர்னு பொருளாதாரம் பற்றி பேசுகிறான்' என்ற எண்ணம் இங்கே வரலாம். ஏனென்றால் எங்களது பாடப் புத்தகத்தில் இரண்டு உலகப் போர்களுக்கு இடையில் 'அமெரிக்காவின் பெரும் பொருளாதார சரிவு (The Great American Depression)' என்று வந்த அந்தப் பகுதியைக் கண்டதும் எங்களுக்கும் அதே எண்ணம் தான் வந்தது.

முதலாம் உலகப் போரில் பெரிய வெற்றியினைப் பெற்று மாபெரும் இலாபங்களை அடைந்த அமெரிக்கா திடீரென்று ஒன்றுமில்லாதப் பஞ்ச பரதேசியாக மாறி விட்டது என்று அதில் கூறி இருந்தார்கள். கோடீஸ்வரர்களாக இருந்தவர்கள் எல்லாம் ஒரே நாளில் தெருவுக்கு வந்து விட்டார்கள் என்றார்கள். வேலையில்லாமல் அமெரிக்கர்கள் அனைவரும் வாடினார்கள் என்று கூறினார்கள். புதுப் பணக்காரனாக அமெரிக்கா அழிந்து விட்டது என்று இங்கிலாந்து மற்றும் ஏனைய உலக நாடுகள் கருதின என்று கூறினார்கள்.

எங்களுக்கு ஒன்றுமே புரியவில்லை.

எங்கும் தோற்கவில்லை, யுத்தத்தில் வென்றுதான் இருக்கிறார்கள், இயற்கை பேரழிவுகள் ஒன்றுமில்லை, அப்படி இருக்கும் போது எப்படி அந்த நாடு திடீரென்று ஒன்றுமில்லாத நாடாக மாற முடியும்? கோடிக்கணக்கான பணத்தினை வைத்திருக்கும் மனிதன், அவனிடம் இருந்து யாரும் கொள்ளையடிக்காமல் எவ்வாறு திடீரென ஒன்றுமில்லாதவனாக முடியும்?

என்னிடம் 1000 ரூபாய் இருக்கின்றது என்றால், அதனை நான் செலவழிக்காமல் இருக்கின்ற வரையோ அல்லது என்னிடமிருந்து அதனை யாரும் திருடாத வரையோ, அந்த ஆயிரம் ரூபாய் என்னிடம் தானே இருக்கக்கூடும். எதுவுமே நடக்காமல், அந்த 1000 ரூபாய் என்னிடம் இருக்கின்ற போதே நான் எவ்வாறு பிச்சைக்காரனாக முடியும்?

இது எனக்கு அன்று புரிந்திருக்கவில்லை. நீண்ட காலம் புரிந்துக் கொள்ள முடியவில்லை, ஏனென்றால் அதன் தேவையும் அப்பொழுது இருந்திருக்கவில்லை. சரி இருக்கட்டும்...இப்பொழுது நாம் 2008 ஆம் வருடத்திற்கு செல்ல வேண்டியிருக்கிறது.

 2008 ஆம் ஆண்டு...மென்பொருள் நிறுவனம் ஒன்றில் பொறியாளராக பணிப் புரிந்து கொண்டிருந்த காலம். 'அமெரிக்காவில் பூம்...பூம் (Boom - அதாவது அமெரிக்காவின் பொருளாதாரம் பிச்சுக் கொண்டு போகின்றது என்று அர்த்தம்)' என்று கூறி மென்பொருள் நிறுவனங்கள் போட்டிப் போட்டுக் கொண்டு ஆட்களை எடுத்துக் கொண்டிருந்த காலம்.  அந்த நிறுவனம் இந்த நிறுவனத்தை வாங்கியதாம், அவனுக்கு இவ்வளவு சம்பளமாம் என்று எங்கு திரும்பினாலும் அதே பேச்சு.

ஆனால் திடீரென்று ஒரு நாள், 'அமெரிக்காவின் பொருளாதாரம் மந்தமாகி வருகின்றது...புதிய வேலைகளை அமெரிக்க நிறுவனங்கள் எதுவும் எளிதாக வழங்க மறுக்கின்றன, என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்..அனைவருக்கும் வேலை போனாலும் போகலாம்' என்ற செய்தி பரவலாக வெளிவர ஆரம்பித்தது. சில நாட்களிலேயே அமெரிக்காவின் முன்னணி வங்கிகள் மண்ணைக் கவ்வுகின்றன...தினமும் 'அந்த வங்கி திவாலானது' 'இந்த வங்கி திவாலானது' என்ற செய்திகள் வெளி வந்த வண்ணம் இருக்கின்றன. அதற்கேற்றார்ப் போல், மென்பொருள் நிறுவனங்களிலும் வாராவாரம் ஆயிரக்கணக்கானோர் பணிநீக்கம் செய்யப்பட்டார்கள். வேலைக்காகத் தேர்வு செய்யப்பட்டு, பணியில் சேருவதற்காக காத்துக் கொண்டிருந்த பல்லாயிரக்கணக்கோர் தங்களது எதிர்காலம் எப்படி இருக்கும், 'வேலைக்கு கூப்பிடுவார்களா இல்லையா?' என்பதனை அறியாமலே தொடர்ந்து காத்துக் கொண்டிருந்தனர். ஏற்றுமதி முற்றுலுமாக படுத்துக் கொண்டது.

இம்முறையும் இந்த நிலை எதனால் வந்தது என்று புரியவில்லை. அமெரிக்காவின் பொருளாதாரம் அமோகமாக இருக்கின்றது என்று கூறிய ஒரு சில தினங்களிலேயே, அங்கே மாபெரும் பொருளாதார நெருக்கடி நேருகின்றது. இலட்சக்கணக்கானோர் வேலை இல்லாமல் இருக்கின்றனர், பெரிய பெரிய நிறுவனங்கள் இழுத்து மூடப்படுகின்றன...1930களில் நடந்ததை விட மோசமான ஒரு நிலையில் அமெரிக்கா தள்ளப்படுகின்றது. ஆனால் இம்முறை பாதிப்பு அமெரிக்காவில் மட்டுமல்ல, ஐரோப்பாவிலும் அதன் தாக்கம் இருக்கின்றது...ஆஸ்திரேலியாவிலும் இருக்கின்றது...உலக முழுவதும் இருக்கின்றது.

இந்தியாவிலும் எந்தெந்த துறையெல்லாம் அமெரிக்காவைச் சார்ந்து இருந்ததோ, அந்த துறையெல்லாம் பாதிக்கப்பட்டிருக்கிறது....அந்த துறைகள் மட்டுமே பாதிக்கப்பட்டிருந்தன. மற்ற ஏனைய துறைகள் வழக்கம் போல் இயங்கிக் கொண்டுதான் இருந்தன. 2008 ஆம் ஆண்டில் உலகை உலுக்கிய அந்த நெருக்கடி இந்தியாவில் பெரும் பாதிப்பினை ஏற்படுத்தவில்லை. ஏன் இந்த நிலைமை? எதனால் இவ்வாறு நிகழ்கின்றது? என்ற கேள்விகளுக்கு அப்பொழுதும் எனக்கு தெளிவான விடை கிட்டவில்லை. சரி இருக்கட்டும், இப்பொழுது, 'பணமதிப்பிழக்கமும் வங்கிகளும்' என்று தலைப்பை வைத்து விட்டு அவற்றைப் பற்றி ஒன்றுமே கூறாமல், ஏதேதோ சம்பந்தமில்லாமல் பேசிக் கொண்டுப் போகின்றானே என்றே நீங்கள் எண்ணலாம். ஆனால் நான் சம்பந்தமில்லாமல் பேசவில்லை...நான் கூறிய நிகழ்வுகளுக்கும் நமது நாட்டில் இன்று நிகழ்ந்து கொண்டிருக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு இருக்கின்றது. அந்தத் தொடர்பினைத் தான் நாம் இன்று காண வேண்டி இருக்கின்றது.

அதுவும் குறிப்பாக பணமதிப்பிழக்கம் என்ற ஒற்றை நடவடிக்கையின் மூலமாக மக்களது ஒட்டுமொத்த பணத்தையும் வங்கிகளுக்கு கொண்டு வந்து விட்ட இந்த காலத்தில் நாம் இதனைப் பற்றி கண்டாகத் தான் வேண்டி இருக்கின்றது.

முதலில், கருப்புப்பணத்தை ஒழிப்பதற்காக இந்த நடவடிக்கை என்றார்கள்...ஆனால் கருப்பு பணமே நாட்டில் இல்லை என்ற முடிவினைத் தான் இப்பொழுது அவர்களது புள்ளி விவரங்கள் தருகின்றன...ஒரு கருப்பு பணத்தையும் அவர்கள் பிடித்த பாடில்லை. பிடிக்கவும் மாட்டார்கள் என்பது வேற கதை.

ஆனால் வெற்றிகரமாக அவர்கள் என்ன செய்திருக்கிறார்கள் என்றால், மக்களது பணத்தை வங்கிகளுக்கு கொண்டு வந்து சேர்த்திருக்கிறார்கள்...மேலும் இனிமேல் பணம் சார்ந்த பரிவர்த்தனைகளும் வங்கிகளின் மூலமாகவே நடைபெறும் வண்ணம் இருக்கின்ற ஒரு அமைப்பினை நடைமுறைப்படுத்த அவர்கள் விரும்புகின்றனர்.

அவர்களின் இந்த நடவடிக்கைகளினாலேயே தான் நாம் மேலே உள்ள விடயங்களை காண வேண்டியதாயிற்று. ஏனென்றால் இரண்டுக்கும் தொடர்பு இருக்கின்றது. இப்பொழுது உங்களிடம் முதலில் கேட்ட கேள்வியையே மீண்டும் கேட்கிறேன்...

என்னிடம் 1000 ரூபாய் இருக்கின்றது என்றால், அதனை நான் செலவழிக்காமல் இருக்கின்ற வரையோ அல்லது என்னிடமிருந்து அதனை யாரும் திருடாத வரையோ, அந்த ஆயிரம் ரூபாய் என்னிடம் தானே இருக்கக்கூடும். எதுவுமே நடக்காமல், அந்த 1000 ரூபாய் என்னிடம் இருக்கின்ற போதே நான் எவ்வாறு பிச்சைக்காரனாக முடியும்?

முடியாது தானே. சரி, இப்பொழுது அந்த ஆயிரம் ரூபாயை நான் வங்கியில் போட்டு வைத்திருக்கின்றேன்...அந்த வங்கிக்காரன் வங்கியை இழுத்து சாத்திவிட்டு போய் விட்டான் என்றால், ஆயிரம் ரூபாய் என்னிடம் இருந்தும் கூட நான் பிச்சைக்காரனாகி விடுகின்றேன் தானே...!!!

அமெரிக்காவிலும் அதேதான் நடந்தது. ஒரே நாளில் இலட்சக்கணக்கானோர் அமெரிக்காவில் பிச்சைக்காரர்களானது இப்படித்தான். அமெரிக்காவில் இருப்பவை அனைத்தும் தனியார் வங்கிகள்...ஒரே நாளில் அவை கடையை சாத்த, அந்த வங்கியில் பணத்தினை வைத்திருந்த மக்கள் அனைவரும் வீதிக்கு வந்து விட்டார்கள். அரசாங்க வங்கி என்றால் அரசாங்கத்தைக் கேள்வி கேட்கலாம், தனியார் வங்கிகள் என்றால் யாரைக் கேள்வி கேட்பது...? சரி இருக்கட்டும்...இப்பொழுது இந்த விடயத்தினைப் பற்றித் தான் நாம் விரிவாக பார்க்க வேண்டி இருக்கின்றது.

காணலாம்...!!!

தொடர்புடைய இடுகைகள்:

வாழ்வும் கடனும்
முதலாளித்துவம் ஒரு காதல் கதை
ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்.

0 கருத்துகள்:

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு