இது வரை நாம் பல தகவல்களைக் கண்டு விட்டோம். அந்தத் தகவல்களுக்குத் உறுதுணையாக சில ஆதாரங்களையும் கண்டு இருக்கின்றோம். ஆனால் அந்த தகவல்களெல்லாம் ஒன்றாக கோர்க்கப் படாத முத்துக்களைப் போல் தனித்தனியே நின்றுக் கொண்டு இருக்கின்றன.

அந்த முத்துக்கள் அனைத்தையும் சிறிது கற்பனை என்னும் நூலினைக் கொண்டு ஒன்றாகச் சேர்த்து வழங்கும் முயற்சியே இந்தப் பதிவு.

உலகின் வரலாறு:

ஆதியில் ஆணும் பெண்ணும் குமரிக்கண்டத்தினில் படைக்கப்படுகின்றனர்.
அவர்கள் தமிழ் மொழியில் இறைவனிடம் பேசுகின்றனர். தமிழிலேயே உலகில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் பெயர் இடுகின்றனர். பூமியின் தட்பவெட்ப நிலைக்கு ஏதாக அவர்கள் கருப்பு நிறத்தில் இருக்கின்றனர்.

மனிதன் தொடர்ந்து குமரிக்கண்டதினில் வாழ்ந்து வருகின்றான். காலத்தில் மனிதன் எண்ணிக்கையில் பெருகுகின்றான். அச்சூழ்நிலையில் தான் குமரிக்கண்டம் கடற்கோள்களின் தாக்குதலுக்கு உள்ளாகின்றது. இந்தக் கடல்கோள்களுக்கு காரணம் பனிக்காலத்தின் முடிவுக்காலத்தில் ஏற்ப்பட்ட பனி உருகலும் அதனால் கூடிய கடல் அளவுமே என்று அறிவியல் கூறுகின்றது.

சிலர் கருதுவது போல குமரிக்கண்டம் ஒரே அடியாக மூழ்கிப் போய்விடவில்லை. இதனை தமிழ் சங்க இலக்கியங்கள் மூலமாக நாம் அறிந்துக் கொள்ளலாம்.

முதல் வெள்ளத்தில் தப்பிய மக்கள் குமரிக்கண்டத்தின் வடக்கே நோக்கி செல்கின்றனர். மீண்டும் சில வருடங்களுக்கு பின்னர் கடற்கோள் தாக்க மீண்டும் மனிதன் வடக்கே நகருகின்றான். நகர்ந்து இன்றைய தமிழகத்தில் குடி ஏறுகின்றான். இக்காலத்தில் தான் குமரிக்கண்டம் முழுமையாக அழிகின்றது.

இன்றைய ஆசுற்றேலியாவினையும் ஆபிரிகாவினையும் ஆசியாவோடு இணைத்துக் கொண்டு இருந்த ஒரு மாபெரும் நிலப்பரப்பு கடலினுள் போக சில புவி மாற்றங்கள் பூமியில் நடக்கின்றது. கடலினுள் இருந்த இமயமலை மேலே வருகின்றது. குமரிக் கண்டம் இருந்த இடத்தினில் தற்போதைய இந்திய மகாக்கடல் தோன்றுகின்றது.

பின் காலப்போக்கில் மனிதர்களின் எண்ணிக்கை கூடக் கூட அவர்கள் வேறு இடம் தேடிச் செல்ல ஆரம்பிக்கின்றனர். சிலர் தெற்கே சென்று எகிப்தில் குடியேறுகின்றனர். சிலர் கிழக்கே செல்லுகின்றனர். சிலர் வடக்கே நோக்கி செல்லுகின்றனர். இவ்வாறு மக்கள் குமரிக்கண்டத்தின் அழிவிற்கு பின்னால் இடம்பெயர்ந்ததையே நோவா கதையாக சமய நூல்கள் கூறுகின்றன.

ஆனால் அனைத்து மக்களும் இடம் பெயரவில்லை. பலர் தமிழகத்திலேயே தங்கி விடுகின்றனர். தமிழகத்திலே ஒரு மாபெரும் கலாசாரம் மலர்ந்து இருக்கின்றது. நகரங்கள் தோன்றி இருந்தன. கடல் போக்குவரத்து சிறந்து இருந்தது. அவர்கள் விரும்பிய அனைத்தும் அங்கே கிடைக்கப் பெற்றது. பாண்டியனின் தலைமையில் தமிழர்கள் அங்கே நிகரின்றி விளங்கிக்கொண்டு இருந்தனர்.

வடக்கே சென்ற தமிழர்கள் தாங்கள் தங்கிய இடங்களுக்கு எல்லாம் தமிழிலேயே பெயர் வைக்கின்றனர். எனவே தான் நாம் இன்றும் அங்கே ‘ஊர்’ என்று முடியும் பெயர்களைக் காண முடிகின்றது. உதா.. செயப்பூர், கான்ப்பூர்.

வடக்கே சென்ற தமிழர்கள் சிலர் கங்கை நதியின் கரையில் சில நகரங்களைக் அமைத்து அங்கேயே குடியேறுகின்றனர். மேலும் சிலர் இன்னும் வடக்கே சென்று பல நகரங்களைக் கண்டப்பின் சிந்து சமவெளியினை அடைகின்றனர்.

பரந்து விரிந்த அந்த செழிப்பான இடத்தினைக் கண்டதும் அவர்கள் அங்கே ஒரு நாகரீகத்தினை தொடங்குகின்றனர். ஆனால் சில காலம் கடந்ததும் மீண்டும் உலகினைக் காண வேண்டும் என்ற ஆவல் மேல்லோங்க சில தமிழர்கள் சிந்து சமவெளியில் இருந்து மேற்கே செல்லுகின்றனர். அங்கே அவர்கள் சுமேரிய நாகரீகம், மேசொபோடமியா நாகரீகம் மற்றும் பாபிலூனிய நாகரீகம் போன்ற நாகரீகங்களைத் தோற்றுவிக்கின்றனர். (இந்தக் கூற்றுகளுக்கு சான்றுகள் பல இருக்கின்றன... அவற்றினை நாம் பின் வரும் பதிவுகளில் காண்போம்)

மேலும் சில மக்கள் வடக்கே செல்லத் தொடங்கினர். மக்கள் தாங்கள் சென்ற இடம் எங்கிலும் தங்களது வழிப்பாட்டு முறையினையும் கொண்டுச் சென்றனர். மிருக பழி வழிப்பாடு கிட்டதட்ட அனைத்து நாகரீகங்களிலும் காணப்படுகின்றது. அதேப் போல் கல் வழிபாடும் காணப்படுகின்றது.

தமிழகத்தில் இருந்து கிழக்கே சென்ற மக்கள் சிலர் தென் அமெரிக்காவிற்கு சென்று அங்கே குடிகொள்கின்றார்கள். சிலர் வட அமெரிக்காவிற்கு சென்று அங்கே குடிக்கொள்கின்றார்கள். சிலர் சப்பானில்… சிலர் சீனாவில்… சிலர் ஆசுற்றலியாவில்…!!! இவ்வாறு உலகம் முழுவதும் தமிழர்கள் பரவுகின்றனர். (இந்தக் கூற்றினை அம்மக்களின் வரலாற்றினையும் மொழியினையும் வைத்துப் பார்த்து நாம் ஆராய்ந்தாலே அறிந்துக் கொள்ள முடியும்... அவற்றினையும் நாம் மற்ற பதிவுகளில் பார்ப்போம்.)

இந்தக் காலத்தில் தான் புவியின் வெட்ப நிலைக்கு ஏற்றார்ப் போல், குளிர் பிரதேசங்களான மேற்கு பகுதிக்கும் வடக்கு பகுதிக்கும் சென்ற தமிழர்களின் நிறம் வெண்மையாக மாறத் தொடங்குகின்றது. தலைமுறை தலைமுறையாக மேற்கிலேயே தங்கிய மக்கள் தாங்கள் எங்கிருந்து வந்தவர்கள் என்னும் உண்மையினை காலப்போக்கில் மறக்கத் தொடங்குகின்றனர். ஆனால் கிழக்கில் ஒரு வளமையான நாடு இருக்கின்றது என்ற செய்தி மட்டும் கதையாக அவர்களிடம் பதிந்து விடுகின்றது.

இந்தக் காலத்தில் தான் தமிழ் மொழி மருவ ஆரம்பிக்கின்றது. பிரிந்து சென்ற குழுக்களிடம் புது புது மொழிகளாய் அது உருமாறுகின்றது. இலத்தின், கிரேக்கம் போன்ற மொழிகள் உருபெருகின்றன.

அதேப்போல் மக்கள் இவ்வாறு இடப்பெயர்ச்சி செய்துக் கொண்டு இருந்த காலத்திலும், தமிழகத்தில் இருந்த மக்கள் அந்த அனைத்து நாகரீகங்களுடனும் வாணிக அளவிலான தொடர்பினை வைத்து இருந்தனர்.

எனவே உலகில் உள்ள அனைத்து மக்களும் தமிழகத்திற்கு வந்து செல்வதும், தமிழர்கள் அவர்களின் நாடுகளுக்குச் செல்வதும் காலத்தில் நடைப் பெற்றுக் கொண்டே இருந்தன. இன்றைய கேரளாவில் அதாவது அன்றைய சேர நாட்டில் கிரேக்கர்கள், அரபியர்கள் போன்றவர் வந்து வாழ்ந்து இருந்தனர் என்பது வரலாற்றில் இருந்து நமக்கு கிடைக்கும் செய்தி.

மேலும் பண்டைய ரோமர்களின் நாணயங்கள் தமிழகத்தில் அதிகமாக கிடைப்பதும் அத்தகைய வாணிகம் தமிழகத்தினில் நடைப்பெற்றது என்பதற்கு சான்றாக உள்ளது.

இவ்வாறே காலங்களும் ஓடிக் கொண்டு இருக்கின்றன. உலகில் பல நாகரீகங்கள் தோன்றி விட்டன. சில அழிந்தும் விட்டன.

ஒவ்வொரு நாகரீகங்களுக்கும் இடையே போர்களும் தோன்றிவிட்டன.

மனிதன் உலகின் பல்வேறு மூலைக்கும் சென்று பரவி விட்டான். இந்தக் காலத்தில் தான் மேற்கில் இருந்து சில நாடோடிகள் சிந்து சமவெளியின் மீது படை எடுத்து வருகின்றனர். அவர்களைத் தான் நாம் ஆரியர்கள் என்கின்றோம். அவர்கள் கிரேக்கம் மற்றும் மத்திய ஆசியாவில் இருந்து குதிரையின் மீது ஏறி வந்தவர்கள். யாகம் மற்றும் வேள்வி முறையில் நம்பிக்கை உடையவர்கள்.
அதாவது நெருப்பினை மூட்டி அதில் யாகம் செய்வது.

அந்த நெருப்பினில் உணவுப்பண்டங்களையும் மற்ற பொருட்களையும் போட்டால் அப்படிப் போடப்பட்ட பொருட்கள் கடவுளிடம் போய் சேரும் என்ற நம்பிக்கையினைக் கொண்டவர்கள்.

அதாவது இப்பொழுது ஒரு நெருப்பினை மூட்டி அதில் ஒரு பழத்தினைப் போட்டீர்கள் என்றால் அந்தப் பழம் இறைவனிடம் சென்று விடும். அப்படி சென்ற பழத்தினை இறைவன் உண்டு விடுவார். இது கிரேக்க வழிப்பாட்டு பழக்கம்.

இதே முறை இப்பொழுது நம் ஊரினில் ‘சுவாகா…சுவாகா…!!!’ என்றுக் கூறிக் கொண்டு நெருப்பினில் உணவினைக் கொட்டும் முறையாக இருப்பதை நாம் எல்லா யாகங்களிலும் காணலாம்.

சுவாகா - என்றால் சாப்பிடுங்கள் என்றுப் பொருள்.

அப்பேர்ப்பட்ட ஆரியர்கள் சிந்து சமவெளியினை அடைகின்றார்கள். நீண்ட நெடிய போருக்குப் பின் சிந்து சமவெளி மக்கள் பின் வாங்குகின்றார்கள். சிந்து சமவெளி நாகரீகம் மெதுவாக அழிகின்றது. ஆரியர்கள் வட நாட்டினுள் நுழைகின்றனர். ஆனால் சிந்து சமவெளியில் அவர்களுக்கு கிடைத்த வெற்றி இந்தியாவின் மற்ற இடங்களில் அவர்களுக்கு கிட்டவில்லை. அங்கு ஏற்கனவே சென்று தங்கி நகரங்களைக் கட்டி வாழ்ந்து வந்த தமிழர்கள் ஆரியர்களைக் காட்டிலும் பலம் பொருந்தியவர்களாக இருந்ததினால் ஆரியர்களின் போர் முயற்சிகள் அங்கே வெற்றிப் பெறவில்லை. மேலும் ஆரியர்களாக வந்தவர்களின் எண்ணிக்கை தமிழர்களை கணக்கிடும் பொழுது மிகவும் குறைவு.

எனவே ஆரியர்கள் மாற்று வழியினை யோசித்தார்கள்.
“வெள்ளையர்களான நம்மால் கறுப்பர்களான இந்த மக்களை பலத்தினால் வெல்ல முடியவில்லையா…. சரி… அப்படியானால் நாம் தந்திரத்தினால் வெல்வோம்…!!!” என்று முடிவு செய்துக் கொண்டு அந்த மக்களுடன் கலந்தனர்.

வந்தோரை வாழ வைக்கும் தமிழர்கள் அவர்களை ஏற்றுக் கொண்டனர்.

அவ்வாறு தமிழர்களுடன் கலந்த ஆரியர்கள் தமிழர்களின் வழிப்பாட்டு முறைகளுடன் தங்களது முறைகளை கலக்க ஆரம்பித்தனர்.

“என்ன ஐயா செய்கின்றீர்.. வெறுமனே பலி இட்டால் போதுமா…நெருப்பினை மூட்டி அதனில் சில மந்திரங்களை சொல்லிவாறே இந்தப் பலியினைக் காணிக்கை செய்தால் தானே ஐயா இப்பலி இறைவனை திருப்தி படுத்தும்…இது தெரியாமல் இருக்கின்றீர்களே…” என்றுக் கூறிக் கொண்டே அந்த மக்களின் மனதினை மாற்றுகின்றனர்.

வீரத்தினிடம் வீழாத தமிழர்கள் தந்திரத்தில் வீழுகின்றனர். மந்திரம் மற்றும் யாகம் ஆகியனவற்றை அறியாத சமுதாயத்தினுள் மெல்ல யாகம் அடி எடுத்து வைக்கின்றது. தமிழர்களின் இந்த வீழ்ச்சி ஆரியர்களுக்கு வசதியாக போய் விடுகின்றது. இதை அடிப்படையாக வைத்துக் கொண்டு தமிழர்களின் கடவுள்கள் பழக்கவழக்கங்கள் முதலியவற்றுள் அவர்களின் கருத்துக்களை திணிக்கின்றனர். கிரேக்க கதைகளை ஒட்டிய இதிகாசக் கதைகள் தமிழ் கடவுள்களுக்கு எழுதப்படுகின்றன. ஆரியர்கள் வட நாட்டினில் தங்களை நிலைப் பெற செய்துக் கொள்ளுகின்றனர். நிற்க.

"ஆரியர்கள் எண்ணிக்கையில் குறைவு என்று கண்டோம். பின்னர் எவ்வாறு அவர்கள் அவ்வளவு செல்வாக்கினைப் பெற்றார்கள். அவர்கள் இனம் தமிழர்களிடையே எவ்வாறு தழைத்தது" என்றுக் கேட்க்கின்றீர்களா... ஆரியர்கள் தமிழர்களை மணமுடித்துக் கொண்டனர். மணமுடித்துக் கொண்டு அவர்களுடன் கலந்தனர். ஆனால் தாங்கள் உயர்ந்தவர்கள் என்ற எண்ணத்தினை மட்டும் விடாது இருந்தனர்.

இவ்வாறே சென்றோம் என்றாம் சூழ்ச்சியால் மக்களை அடக்கி ஆண்டு விடலாம் என்று அவர்கள் என்னும் பொழுது தான் மகாவீரரும் புத்தரும் வருகின்றனர்.

ஆரியர்கள் திகைக்கின்றனர்….”யாகத்தினையும் பலியையும் வைத்து நாம் பிழைப்பினை ஒட்டிக் கொண்டு இருக்கும் பொழுது பலி கூடாது என்று இவர்கள் சொல்லுகின்றார்களே… என்ன செய்வது” என்று யோசிக்க ஆரம்பிக்கின்றனர்.

அந்தக் காலத்தில் தான் அசோகரும் வருகின்றார்….!!! பௌத்தமும் சமணமும் வட நாட்டில் நன்றாக பரவுகின்றது.

ஆரியர்கள் திகைத்தவாறே நிற்கின்றனர்.
வரலாறு தொடரும்….

முந்தையப் பதிவு : 1 | 2 | 3  | 4 | 5  | 6 | 7 | 8 | 9 | 10 | 11

6 கருத்துகள்:

வணக்கம்

எப்படி இத்தனை நாள் உங்கள் வலைபூவை படிக்காமல் விட்டேன் என தெரியவில்லை.

அத்தனையும் ரத்தினங்கள்.

தொடர்ந்து எழுதுங்கள்

தொடருகன்றேன்

நன்றி

வணக்கம் நண்பரே.

அறிமுகம் செய்த ராஜராஜனுக்கு நன்றி.

தங்களது கருத்துக்களுக்கு நன்றிகள் பல நண்பர்களே!!! :)

//
எப்படி இத்தனை நாள் உங்கள் வலைபூவை படிக்காமல் விட்டேன் என தெரியவில்லை.

அத்தனையும் ரத்தினங்கள்.

தொடர்ந்து எழுதுங்கள்
//

யானும் அவ்வண்ணமே கோரும்
அன்பு

தமிழர்கள் தான் எல்லா இடத்திற்கும் போனார்கள் என்றால் ஆரியர்களும் தமிழர்கள் தானே...

@அசோக்

//தமிழர்கள் தான் எல்லா இடத்திற்கும் போனார்கள் என்றால் ஆரியர்களும் தமிழர்கள் தானே...//

ஆம் நண்பரே...உண்மை அது தான்!!!

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு