ஞாயிறு, 2 செப்டம்பர், 2012

முருகனும் இயேசுவும் - 2

இயற்கை நெறிக் காலமும் அற நெறிக் காலமும்...!!!

என்னடா இது முருகனைப் பற்றி பார்ப்போம்னு நெனச்சா ஏதோ இயற்கை நெறிக் காலம், அற நெறிக் காலம் அப்படின்னு ஆரம்பமே திசை மாறுகின்றதே என்று எண்ணுவீர்கள் என்றே எண்ணுகின்றேன். ஆனால் இந்த திசை மாற்றத்திற்கு ஒரு காரணம் இருக்கின்றது. காரணம் என்னவென்றால் மேலே கூறியுள்ள அந்த கால மாற்றங்களில் தான் நம்முடைய வழிபாட்டு முறைகள் ஒரு மாபெரும் திசை மாற்றத்தினைக் கண்டு இருக்கின்றன. இப்பொழுது அந்த காலங்களைப் பற்றி சற்று கண்டு விடுவது தான் அனைவருக்கும் நலன் பயக்கும் என்றே எண்ணுகின்றேன்.

இயற்கை நெறிக் காலம் - பெயரில் இருந்தே இது எத்தகையக் காலம் என்று கணித்து விடலாம். மனிதர்கள் இயற்கையினை வழிப்பட்ட காலம் தான் இயற்கை நெறிக் காலம். கடவுளர் அனைவரும் இயற்கையினைச் சார்ந்தவர்களாகவே இருந்தனர். அனைத்துக் காலங்களைப் போலவே இக்காலத்தினையும் நூல்கள் வாயிலாகவே நாம் அறிந்துக் கொள்கின்றோம். இயற்கை நெறிக் கால நூல்கள் என்றால் நமது சங்க காலத்து நூல்களான பத்துப்பாட்டையும், எட்டுத்தொகையையும் எடுத்துக்காட்டாக எடுத்துக் கொள்ளலாம். இக்காலத்தில் மக்கள் வழிப்பட்ட கடவுளருக்கு பலி இருந்தது.

அறநெறிக் காலம் - இயற்கை நெறிக் காலத்தினைத் தொடர்ந்து தோன்றியக் காலத்தினைத் தான் அறநெறிக் காலம் என்பர். இயற்கை வழிப்பாட்டு முறை போய் மனிதனுக்கும் இறைவனுக்கும் உள்ள உறவுகள் மற்றும் மற்ற அற நெறிக் கருத்துக்களும் சரி நூல்களும் சரி நம் மண்ணில் எழுந்தக் காலத்தினைத் தான் அறநெறிக் காலம் என்பர். அற நெறிக்காலத்தில் இறைவனுக்கு பலி இடும் பழக்கம் முற்றுப் பெற்றது மாறாக பல புதியக் கருத்துக்கள் தோன்றப்பெற்றன. முழு முதற் கடவுள் என்ற கொள்கை மேல் எழும்ப ஆரம்பித்தக் காலம். இக்காலத்தின் சிறப்புமிக்க ஒரு நூல் தான் நமது திருக்குறள். நிற்க

தமிழ் இலக்கியங்களை ஆராயும் அறிஞர்களாகட்டும் அல்லது சமயங்களை ஆராயும் அறிஞர்களாகட்டும் அனைவரும் மேலே கூறியுள்ள கால மாற்றத்தினை அறிந்து தான் உள்ளனர். நூல்களையும் சரி பழக்க வழக்கங்களையும் சரி காணும் பொழுது சமுகத்தில் திடீர் என்று எழுந்துள்ள இந்த மாற்றம் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கத் தான் செய்கின்றது. கவனத்தை ஈர்ப்பதுடன் பல கேள்விகளையும் இந்த மாற்றம் எழுப்புகின்றது... ஏன் இந்த மாற்றம்? எதனால் இந்த மாற்றம்? என்றவாறு பல கேள்விகள் எழும்பினாலும் ஒரு விடயத்தில் மற்றும் ஆய்வாளர்கள் பலர் ஒன்றுப்படுகின்றனர். கிருத்துவுக்கு பிற்பட்ட காலம் என்றக் காலத்தில் தான் இந்த மாற்றங்கள் நிகழ்ந்து இருக்கின்றன. அக்காலத்தில் அதுவரை பலியிடப்பட்டு வந்த கடவுளருக்கு பலி தேவை இல்லாத ஒன்றாக மாறி இருக்கின்றது.

"தத்துவ உணர்ச்சி ஏற்பட்ட பிற்காலத்தில் முருகன் முதலிய கடவுளர்க்கு உயிர்பலி செய்தல் நின்று விட்டது" என்றே தமிழறிஞர் திரு கா.சு.பிள்ளை அவர்கள் அவர்களது 'தமிழர் சமயம்' என்ற நூலில் குறிப்பிடுகின்றார்.

இங்கே நாம் விரிவாகக் காணவேண்டியது 'தத்துவ உணர்ச்சி ஏற்பட்ட பிற்காலத்தில்' என்று கூறப்படும் காலத்தினைப் பற்றி தான். ஆனால் எவ்வளவு முக்கியமானதொன்றாக அக்காலம் இருந்தாலும் அதனைப் பற்றி நாம் பின்னரே காண போகின்றோம். காரணம் முருகனை நாம் ஏற்கனவே நீண்ட காலம் காக்க வைத்தாயிற்று எனவே இனியும் அவரைக் காக்க வைப்பது சரியாக இருக்காது. எனவே இப்பொழுது மீண்டும் முருகரைக் காணச் செல்லலாம்...

முருகன் - சிவ மைந்தன். தீய வடிவே உருவான சூரபதுமனை அழிக்க சிவனின் ஆற்றலால் உருவாக்கப்பட்டவன். சூரனுடன் நடந்தப் போரில் சூரனை வென்று நன்மையை நிலை நிறுத்துகின்றான். இதுவே முருகனின் படைப்பினைப் பற்றியக் கதை. அதாவது முருகனின் படைப்பு சூரனை அழித்து மக்களைக் காக்கவே அமைந்து உள்ளது. நிற்க.

இப்பொழுது இந்தக் கதையினைப் பற்றி நாம் விரிவாகக் காணும் முன் நாம் அறிந்துக் கொள்ள வேண்டியது என்னவென்றால் மேலே உள்ள கதைக்கு சான்றுகள் நமக்கு கிருத்துவுக்கு பிற்பட்ட காலத்திலேயே தான் கிடைக்கின்றன. அதாவது அறநெறிக் காலத்திலேயே கிடைக்கப் பெறுகின்றன. இயற்கை நெறி காலத்தில் காணப்படும் முருகன் பலி உடையவனாகவும் குறிஞ்சி நிலத் தலைவனாகவுமே அறியப்படுகின்றான்...மாறாக சிவ மைந்தனாக அவன் அக்காலத்தே அறியப்பட்டமைக்கு சான்றுகள் இல்லை. சரி இப்பொழுது மீண்டும் முருகனின் கதைக்கு வருவோம்.

முருகன் படைக்கப்பட்டமைக்கு முழு முதற் காரணம் தீமையின் வடிவே ஆன சூரபதுமனை வெல்லவே. அந்த காரணத்திற்காக அவனை சிவன் அவரது ஆற்றலின் வாயிலாக படைக்கின்றார். இங்கே நாம் கவனிக்க வேண்டியது எவ்வாறு பிள்ளையாரை சக்தியே உருவாக்குகின்றாரோ அதேப் போல் முருகனை சிவனே உருவாக்குகின்றார். பின்னர் முருகன் வளர்ந்தவுடன் சக்தியிடம் இருந்து வேலினைப் பெற்றுக் கொண்டு சூரனுடன் போராடுகின்றார். இறுதியில் சூரனை வெல்கின்றார். நன்மை வெல்கின்றது. தீமை தோற்கின்றது. இதுவே கதை. ஆனால் இங்கே கவனிக்க வேண்டிய மற்றொரு விடயம் என்னவென்றால் முருகன் சூரனை வெல்கின்றார் ஆனால் அழிக்கவில்லை. இதனைப் பற்றி நாம் மேலும் பார்ப்பதற்கு திரு. கா.சு. பிள்ளை அவர்களின் கூற்றையும் கண்டு விடுவது நல்லது என்றே நினைக்கின்றேன்.


'மேலும் சூரபதுமனை முருகன் ஆட்கொண்டு அவனின் ஒரு பகுதியாகிய மயிலை வாகனமாகமும் மற்றொரு பகுதியாகிய கோழியைக் கொடியாகவும் கொண்டனர் என்பதே புராண வரலாறுமாகும். அவனால் வந்த தீமையை ஒழித்தார் என்பதைப் பற்றியே முருகனுக்கு அத்திருவிழா கொண்டாடப்படுகின்றது. அத்திருவிழாவில் தெய்வத் தியானமும் பட்டினி நோன்பும் பொறியடக்கமும் நிகழ்வனவே அன்றி வயிறு நிரம்ப உண்டலும் கூத்தாடளும் இல்லை என்றறிக' என்று அவரது 'தமிழர் சமயம்' என்னும் நூலில் குறிப்பிடுகின்றார்.

மேலே உள்ள கூற்றுகள் மூலம் முருகன் சூரனின் மூலமாக வந்தத் தீமையை அளித்து அவனை அடக்கி அருளினார் என்றே நமக்கு புலனாகின்றது. இப்பொழுது இயேசுவின் உருவகமே முருகன் என்றுக் கூறுபவர்கள் என்ன கூறுகின்றார்கள் என்றுப் பார்ப்போம்.

அவர்களின் கூற்றுப் படி இயேசு மக்களுக்காக தீமையே வடிவான சாத்தானை வென்ற நிகழ்வையே சூரபதுமனை முருகன் வெல்லும் கதையின் மூலமாக அக்காலத்தில் அறிஞர்கள் வெளிப்படுத்தி உள்ளனர் என்றுக் கூறுகின்றனர்.

விவிலியக் கதையின் படி இயேசு பரிசுத்த ஆவியின் அருளினைப் பெற்றுக் கொண்டு தீமையே வடிவான சாத்தானை உயிர்தெழுவதன் மூலம் வென்று அடக்கி ஆள்கின்றார். சாத்தானும் தோற்கின்றான்...ஆனால் மடிய வில்லை.

சூர் - தீமை. சூரபதுமன் - தீமையே வடிவானவன். தீமையே வடிவான சாத்தானை சூரப்பதுமனாகவும் அவனை இயேசு மக்களுக்காக வென்றதை முருகன் சூரபதுமனை வென்ற நிகழ்ச்சியாகவும் அன்றைய தமிழர்கள் மக்கள் நடந்ததை எளிதாக அறிந்துக் கொள்ள பயன்படுமாறு உருவகப்படுத்தி உள்ளனர் என்றே அவர்கள் கூறுகின்றனர். அதாவது,

சாத்தான் - சூரபதுமன்
முருகன் - இயேசு
சாத்தானை தோற்கடிக்கும் ஆற்றலை இயேசு தூய ஆவியிடம் இருந்தே பெறுகின்றார்.
முருகன் சூரனை வெல்ல வேலினை சக்தியிடம் இருந்து பெறுகின்றார்.
இறுதியில் சாத்தான் தோற்கின்றான் ஆனால் மடியவில்லை.
சூரனும் தோற்கின்றான் ஆனால் மடியவில்லை.

மேலும் சூரனும் முருகனும் மோதிக் கொள்ளும் பகுதியில் சூரன் பல்வேறு வடிவங்கள் எடுத்து முருகனுடன் போரிடுவது போன்று வருகின்றது. அச் சண்டையின் இறுதியில் ஒரு மாமரமாக சூரன் மாறுகின்றான். அப்பொழுது முருகன் தனது வேலினைக் கொண்டு அம்மரத்தினைப் பிளக்க சூரன் தோற்பது போன்று கதை வருகின்றது. அதாவது தீமை இறுதியில் ஒரு மர வடிவில் வருகின்றது அதனை வென்று இறைவனின் மகன் தீமையினை வெல்லுகின்றார், இது இயேசு சிலுவையினை (மர கட்டையினை) இறுதியாக சுமந்து சென்று மரணமுற்று பின்னர் மீண்டும் உயிர்த்து எழுந்து சாத்தானை வென்றதை குறிப்பதாகவே இருக்கின்றது என்றும் அந்த ஆய்வாளர்கள் கூறுகின்றனர். நிற்க.

இரண்டு கதைகளிலும் ஒற்றுமைகள் சில இருந்தாலும் இவற்றை வைத்து மட்டுமே இயேசு தான் முருகன் என்றால் நம்மால் நம்பிவிட முடியாது.

ஆனால் ஏன் இந்த ஒற்றுமைகள் இருக்கின்றன என்றும் கி.முவில் காணப்படாத இந்தக் கதை பிற்காலத்தில் காணப்படுவதன் அர்த்தம் என்னவென்றும் நாம் சிந்திக்கத் தான் வேண்டி இருக்கின்றது. மேலும் நாம் முன்னர் கண்டவாறு முருகன் - சிவ மைந்தன் என்ற தகப்பன்-மைந்தன் உறவு முறை ஏன் கி.மு வில் காணப்படாது கி.பி யில் காணப்படுகின்றது என்றும், இயற்கை நெறி காலம் எதனால் அறநெறிக் காலமாக மாறிற்று என்றும் நாம் சிந்தித்துப் பார்க்கத் தான் வேண்டி இருக்கின்றது.

மேலும் முருகனுக்கு இரு மனைவியர் இருப்பது போன்று புராணக்கதைகளும் நம்மிடையே இருக்கின்றன. எனவே முருகனை இயேசு என்றுக் கூறினால் முருகனுக்கு ஏன் மனைவிகள் இருப்பது போன்று கதைகள் அமைய வேண்டும் என்றும் நாம் காண வேண்டி இருக்கின்றது. ஆனால் இவற்றைப் பற்றி நாம் காண்பதற்கு முன்னர் வேறு சில பதிவுகளை கண்டு விடுதல் ஏற்றதாக இருக்கும் என்று தோன்றுவதனால் மற்றச் சில பதிவுகளைக் கண்ட பின் அவற்றைப் பற்றி நாம் காணலாம். இப்பொழுது ஏன் முருகனை தமிழ் கடவுள் என்று அழைக்கின்றனர் என்று நான் அறிந்தவனவற்றைக் காணலாம்.

தொடரும்...

பி.கு:

நண்பர்களே இவை அனைத்தும் சில ஆராய்ச்சியாளர்களின் கூற்றுகளில் இருந்து நான் இது வரை அறிந்துக் கொண்டவையே. இன்னும் பல விடயங்களை அறியத் தேடிக் கொண்டும் அறிந்துக் கொண்டும் இருக்கின்றேன். இவற்றுக்கு தங்களின் கேள்விகளும் மிகுந்த உறுதுணையாக இருக்கின்றன. அதற்கு நன்றி. அதைப் போன்றே நான் ஏதாவது கூற்றினை தவறாக அறிந்தும் இருக்கலாம், அதனை தாங்கள் சுட்டிக் காட்டினீர்கள் என்றால் மிகவும் நன்றாக இருக்கும். ஏன் என்றால் உண்மைகள் வெளி வர வேண்டும் என்பதே எனது எண்ணம். நம்முடைய சமய உண்மைகள் தான் இன்று நம்முடைய உலகம் சந்தித்துக் கொண்டு இருக்கும் மாபெரும் பிரச்சனைகளுக்கு எல்லாம் ஒரே தீர்வு. அப்பேற்பட்ட ஒரு செல்வம் இன்று மறைந்துக் கிடக்கின்றது. அதுவும் நம்முடைய மண்ணில். அவ்வாறு இருக்க மண்ணின் மைந்தர்களான நாம் நம் மண்ணில் விளைந்த செல்வத்தை மீட்டு எடுத்து உலக நலனுக்காக பயன்படுத்த முயற்சி செய்வது நம்முடைய கடமை அல்லவா.

சனி, 25 ஆகஸ்ட், 2012

வேதங்கள் எனப்படுபவை யாதெனின் -1

வேதங்கள் என்றால் என்ன?

இந்தக் கேள்வியினை நீங்கள் இன்று மக்கள் மத்தியில் கேட்டீர்கள் என்றால் பொதுவாக "வேதங்கள் என்றால் அவை ஆன்மீகச் சிறப்புமிக்கவை. அவை எண்ணிக்கையில் நான்காகும்.

ரிக் வேதம்
யசுர் வேதம்
சாம வேதம்
அதர்வண வேதம்."

என்ற விடையே விரைவாக நமக்கு கிட்டும். காரணம் நமது சமுகத்தில் நாம் இப்படித் தான் கற்கின்றோம். வேதங்கள் நான்கு. அவை இறைவனின் வாக்குகளைக் கொண்டு இருக்கின்றன. சமயங்கள் அனைத்தும் அவற்றில் இருந்தே தோன்றின. இவ்வாறு தான் வேதங்களைப் பற்றியக் கருத்துக்களும் கற்பிக்கப்படுகின்றன. நிற்க.

ஆனால் இந்தக் கருத்துக்களை மறுப்பவர்களும் நம்முடைய சமுகத்தில் இருக்கத் தான் செய்கின்றனர். அதுவும் குறிப்பாக சைவ வைணவ மற்றும் தமிழ் பெரியோர்கள், வேதத்தில் இருந்து தான் சைவ வைணவ சமயங்கள் தோன்றின என்றக் கருத்துக்களை தொன்று தொட்டே மறுத்து வந்து உள்ளனர். அவர்களுள் சிலர் தேவநேயப் பாவாணர், மறைமலைஅடிகள், திரு. கா.சு.பிள்ளை போன்றவர்களாவர். இந்நிலையில், வேதத்திற்கும் சைவ வைணவ சமயங்களுக்கும் தொடர்பு இருக்கின்றதா என்றே நாம் காண வேண்டி இருக்கின்றது. அதற்கு நாம் முதலில் வேதங்களைப் பற்றிப் பார்க்க வேண்டி இருக்கின்றது. பார்க்கலாம்.

முதலில் வேதங்கள் என்றால் என்னவென்றே காண்போம். பொதுவாக வேதங்கள் நான்கு எனப்படினும், அவற்றுள் முக்கியமானதொன்றாக விளங்குவது ரிக் வேதம் தான். ஏனைய வேதங்கள் ரிக் வேதத்தின் மறு வடிவமைப்புகளாகவே திகழ்கின்றன என்றே ஆய்வாளர்கள் கூறுகின்றன. விரிவாக பார்க்க வேண்டும் என்றால்,

"நான்கு வேதங்களுள் முதன்மையானதும் பழமையானதுமாக இருப்பது இருக்கு வேதமே. யசுர், சாமம், அதர்வணம் எனும் மற்றைய மூன்று வேதங்களும் இருக்கு வேதத்தின் மறுவமைப்புகளே" என்றே திரு சே.டால்போயிஸ் வீலர்(J.Talboys wheeler) என்னும் ஆராய்ச்சியாளர் தனது 'India of the Vedic age with reference to Mahabharata-Vol.1 of the history of India' நூலில் கூறுகின்றார்.

இவரதுக் கூற்றுகளை உறுதிப் படுத்துவது போல " மற்றைய மூன்றையும் இருக்கு வேதத்தின் பிற சேர்க்கை என்றும், இருக்கு வேதத்தின் விளக்கம் என்றும் சாரம் அல்லது சுருக்கம் என்றும் கூறலாம். இம்மூன்றில் யசுர் வேதம் பெரும்பாலும் இருக்கு வேதத்தின் பாடல்களைக் கொண்டு இருப்பதுடன் பலி செய்வதற்குரிய முறைகளை விளக்கும் பாடல்களையும் கொண்டுள்ளது. இரண்டாவதாக சாம வேதம், சோம பானம் தொடர்பான பாடல்களைக் கொண்டு விளங்குவதுடன் இருக்கு வேதத்தின் ஒன்பதாவது மண்டலத்தின் பாடல்களையும் அதிகமாகக் கொண்டு உள்ளது. அதர்வண வேதம் இருக்கு வேதத்தின் பெரும்பாலான பாடல்களைக் கொண்டு இருந்தாலும் மந்திரம் மாயம் தொடர்பான பாடல்களையே அதிகமாகக் கொண்டுள்ளது" என்றே மற்றொரு ஆய்வாளரான கே.சு.மாக்டொனால்ட்ஸ் (K.S.Macdonalde) அவர்கள் அவரது 'The Vedic Religion' நூலில் குறிப்பிடுகின்றார்.

அதுவும் சாம வேதத்தில் இருக்கும் 1875 பாடல்களும் 75 பாடல்கள் மட்டுமே புதியவைகளாக இருக்கின்றன. ஆய்வாளர்கள் கருத்துப் படி இசையமைக்கப்பட்ட இருக்கு வேதப் பாடல்களே சாம வேதம் என்று வழங்கப்படுகின்றன.

அதாவது நான்கு வேதங்கள் என்று இவை தனித்தனியே இன்று வழங்கப்பட்டாலும் பொதுவாக பார்த்தால் அனைத்து வேதங்களும் இருக்கு வேதத்தை சார்ந்தே இருக்கின்றன. நிற்க.

இப்பொழுது நாம் வேதங்களில் காணப்படும் வழிபாட்டு முறைகளையும் தெய்வங்களையும் பற்றி சற்று கண்டு விடலாம்.

இருக்கு வேதத்தில் காணப்படும் தெய்வங்கள் பலர் இயற்கையின் உருவகங்களாகவே உள்ளனர். காற்று, மரம், ஆறு, மலை, வானம், கதிரவன் போன்றவை வழிப்படப்பட்டு உள்ளன. மேலும் "சோமபானம் என்னும் குடிவகையும் தெய்வமாக வழிப்படப்பட்டது. தெய்வங்களாக வழிப்படப்பட்டவற்றில் மருத், இந்திரன் போன்றோர் வீரர்களாகக் காட்டப்படுகின்றனர். சமயக் குருக்களாக அக்னி, பிரகசுபதி ஆகியோர் காட்டப்பட்டு உள்ளனர்" என்று மற்றொரு ஆராய்ச்சியாளரான எ.எ.மாக்டொனால்ஸ் (A.A.Macdonell) அவர்கள் அவரது 'India's Past' புத்தகத்தில் குறிப்பிட்டு உள்ளார்.

மேலும் வேதங்களில் பல பெண் தெய்வங்களைப் பற்றியும் கூறப்பட்டு உள்ளன. கூடுதலாக தமிழர்களிடம் இருந்தது போல் நினைவுத் தூண் வழிபாடும் வேதங்களில் குறிக்கப்பட்டு இருக்கின்றது. இன்னும் பலி வழிபாடும் சரி மர வழிபாடும் சரி வேதங்களில் இடம் பெற்று இருக்கின்றன.

மேலே நாம் கண்ட விடயங்களை வைத்துப் பார்க்கும் பொழுது இன்று நம்மிடையே இருக்கும் முழு முதற் கடவுளை வணங்கும் சைவ வைணவ சமயங்களுக்கும் சரி இயற்கை வழிபாடுகளை உடைய வேதங்களுக்கும் சரி தொடர்பு இருப்பது போன்றா தெரிகின்றது?

"அட...நில்லுங்கள். வேதங்களைப் பற்றிப் பேசினீர்கள். வேதாந்தங்களைப் பற்றி ஏன் கூறவில்லை. வேதங்களின் ஒரு பகுதி தான் அவை அல்லவா...அவை முழு முதற் கடவுளைப் பற்றிப் பேசுகின்றது அல்லவா" என்று எண்ணினீர்கள் என்றால் முதலில் ஒரு விடயம், வேதாந்தங்கள் என்பவை உண்மையில் உபநிடங்கள் என்றே வழங்கப்பட்டன. பின்னரே ஏதோ ஒரு காரணத்திற்காக பிராமணர்களால் அவை வேதங்களின் ஒரு பகுதியாக ஆக்கப் பட்டன. அதனைத் தவிர்த்து வேதங்களுக்கும் சரி வேதாதங்களுக்கும் சரி தொடர்பு இல்லை என்றே ஆய்வாளர்கள் கூறுகின்றனர். உதாரணத்துக்கு இதோ தேவநேயப் பாவாணரின் கூற்று,

"ஆரிய வேதம் பற்பல சிறுதெய்வ வழுத்துத் திரட்டேயாதலால் ஓரே, முழுமுதற் கடவுளை உணர்த்தும் உபநிடதத்திற்கும் அதற்கும் மண்ணிற்கும் விண்ணிற்கும் போன்று அடைக்கமுடியாத இடைவெளியுள்துஎன்று கூறுகிறார் (தமிழ் இலக்கிய வரலாறு   - தமிழ் மண் பதிப்பகம்).

இவரின் கூற்றினை மெய்ப்பிப்பதை போன்றே பல விடயங்கள் வேதங்களுக்கும் சரி உபநிடங்களுக்கும் சரி வேறுபட்டுத்தான் இருக்கின்றன.

வேதங்கள் 'இறைவனிடம் நாம் ஏதாவது பெற வேண்டும் என்றால் அவனுக்கு எதையாவது நாம் காணிக்கையாகத் தர வேண்டும். அதாவது பலி வேண்டும் என்கின்றது'
உபநிடங்களோ 'இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையில் உள்ள உறவைப் பற்றிப் பேசி மனிதனை இறைவன் அறிவான்...அவன் பலி எதுவும் வேண்டுவது இல்லை' என்றுக் கூறி பலியினை மறுக்கின்றது.
வேதங்கள் ஆன்மாவினைப் பற்றிப் பேசவே இல்லை. உபநிடங்களோ ஆன்மாவினை அடிப்படையாக கொண்டு இருக்கின்றன.
வேதங்கள் இயற்கை வழிபாட்டினை உடையதாக இருக்கின்றது. உபநிடங்களோ பக்தி வழிபாட்டினை உடையனவாக இருக்கின்றன. நிற்க.
இப்பொழுது நாம் இந்தத் தலைப்பினைப் பற்றி மேலும் காண வேண்டும் எனில் வேதங்களின் காலத்தையும் அவை யாரால் யாருக்காக எதுக்காக உருவாக்கப்பட்டன என்றும் நாம் காண வேண்டி இருக்கின்றது.

பொதுவாக வேதங்களின் காலம் என்றாலே அது ஏதோ ஒரு மிகப் பழமையான காலமாக இருக்க வேண்டும் என்ற எண்ணமே பலரின் எண்ணத்திற்கும் வரும். காரணமில்லாமல் இல்லை, ஏனெனில் அப்படிப்பட்ட கருத்துக்கள் தாம் நம்மிடையே பரப்பப்பட்டு இருக்கின்றன. வேதங்கள் என்பது காலகாலமாக வாய் வழியாகச் சொல்லப்பட்டு வந்த ஒன்று. அவற்றின் காலம் இன்னதென்று வரையறுத்துக் கூற இயலாத வண்ணம் பழையக் காலம் என்றே போதிக்கப்பட்டு இருக்கின்றன. மேலும் நீண்ட காலமாக வேதங்களைப் பொது மக்கள் படிக்க முடியாத வண்ணமே சூழ்நிலைகளும் இருந்தமையினால் அந்தக் கூற்றுக்களின் உண்மைத் தன்மையை மக்கள் ஆராய முடியாத நிலையே இருந்தது. ஆனால் இன்றோ அக்கருத்துக்களை மறுத்து அறிஞர்கள் சிலர் புதுக் கருத்துக்களை கூறுகின்றனர். அவர்கள் வேதங்களின் தொன்மையை மறுக்க ஒரு முக்கியமானக் காரணம் வேதங்களைப் பற்றிய சான்றுகள் எவையும் பழமையான காலத்தில் கிட்டப்பெறாமையே.

"வேதங்கள் மிகப் பழமையானவை என்றுக் கூறப்படினும், இக்கருத்தைக் கூறுவதற்கு அடிப்படையான தொல்பொருள் சான்றுகளோ, வரலாற்றுச் சான்றுகளோ, நினைவுச் சின்னங்களோ, நாணயங்களோ கிடைக்கப் பெறவில்லை என்பதும், கிடைத்துள்ள எழுத்துப் படிவங்களும் அண்மைக் காலதிற்குரியவனவாக உள்ளன" என்ற Bloomfield பதிப்பகத்தாரின் 'The religion of the Vedas' புத்தகத்தில் வழங்கப்பட்டு உள்ளது.
சரி அவர்களின் கருத்து இருக்கட்டும். இப்பொழுது நாம் வேறு சில விடயங்களைக் காண்போம்.

வேதங்களும் சரி...உபநிடங்களும் சரி சமசுகிருத மொழியிலேயே கிடைக்கப் பெறுகின்றன. நாம் முன்னரே கண்டு இருக்கின்றோம் சமசுகிருதம் என்ற மொழியின் சான்றுகள் நமக்கு கி.பி இரண்டாம் நூற்றாண்டிலேயே தான் கிட்டப்பெற ஆரம்பிக்கின்றன என்று. மேலும் சமசுகிருதம் என்றால் செம்மையாக செய்யப்பட்ட மொழி என்றும் பொருள் தருகின்றது. எனவே வேதங்களின் காலமும் சமசுகிருதத்தின் காலமாகத் தான் இருக்க முடியும். எனவே வேதங்களின் காலம் கி.பி இரண்டாம் நூற்றாண்டிற்கு பின்னரே என்று முன்னர் பதிவினில் கண்டு இருந்தோம். (பார்க்க: சமசுகிருதத்தின் காலம்)

பொதுவாக எவராலும் எளிதில் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு கருத்து தான். அதுவும் வேதங்களைப் பொறுத்த வரைக்கும் இக்கருத்தினை எவரும் ஏற்றுக் கொள்வது முதலில் அரிது தான். காரணம் வேதங்கள் வாய் வழியாகவே சொல்லப்பட்டு வந்துள்ளன என்றே நம்மிடம் கூறப் பெறுகின்றது, "அவ்வாறு இருக்கையில் எவ்வாறு அவை எழுத்துருவில் கிடைக்கப் பெரும் காலத்தையே வேதங்களின் காலம் என்றுக் கூற முடியும், ஏனெனில் கி.மு 12 ஆம் நூற்றாண்டில் நடைப் பெற்ற சில சரித்திர நிகழ்ச்சிகளில் வேதக் கடவுளர் பற்றியக் குறிப்புகள் காணப்படுகின்றனவே...அவ்வாறு இருக்கையில் அவற்றின் காலத்தை எவ்வாறு அவை எழுத்துரு பெற்றக் காலத்தினை வைத்துக் கூறுகின்றீர்கள்...அது சரியான ஒன்றாக அமையாதே" என்றக் கேள்வி எழுவது இயல்பே.

உண்மை தான். இக்கேள்விக்கு பதில் தேடும் முன் ஒரு கேள்வியினை இங்கே முன் வைக்க விரும்புகின்றேன். ஆயிரமாயிரம் காலமாக வாய் வழியாகவே கூறப்பட்டு வந்த ஒன்றை திடீர் என்று எழுத்து வடிவத்தில் கொண்டு வர வேண்டிய தேவை யாது வந்தது? நிற்க.

இப்பொழுது வேதத்தின் காலத்தினைப் பற்றிக் காணலாம். அதற்கு விவிலியத்தின் பழைய ஏற்பாட்டினைப் பற்றி நாம் காண வேண்டி இருக்கின்றது. "அட என்னங்க வேதம் அப்படின்னு சொல்லிட்டு விவிலியத்தினைப் பார்போம் என்கின்றீர்களே" என்கின்றீர்களா, சற்று பொறுங்கள் பொருள் இருக்கத் தான் செய்கின்றது.
பழைய ஏற்பாட்டின் காலம் என்ன? என்ற கேள்விக்கு
கி.பி ஒன்றாம் நூற்றாண்டு அல்லது இரண்டாம் நூற்றாண்டு என்ற விடைகளே கிட்டும். ஆனால் பழைய ஏற்பாட்டில் உலகம் தொடங்கிய செய்திகள் முதற்கொண்டு ஏனைய பல வரலாற்றுச் செய்திகள் இருக்கின்றன. அதனை எல்லாம் கணக்கில் கொண்டா பழைய ஏற்பாட்டின் காலத்தினைக் கணிக்க முடியும்? அவ்வாறு கணித்தால் உலகம் தோன்றிய பொழுதே பழைய ஏற்பாடும் தோன்றி இருக்க வேண்டும். மாறாக பல செய்திகள் ஒன்றாக தொகுக்கப்பட்டு ஒரு புத்தகமாக வந்ததே பழைய ஏற்பாடு. இது புது ஏற்பாட்டுக்கும் பொருந்தும். மற்ற தொகுக்கப்பட்ட நூல்களுக்கும் பொருந்தும். எனவே அந்த நூல்கள் என்று தொகுக்கப்பட்டனவோ அக்காலம் தான் அந்த நூல்களின் காலமாக கருதப்பட வேண்டும். அது தான் சரியான ஒன்றாகவும் இருக்கும்.

இந்த விதியே வேதங்களுக்கும் பொருந்தும். காரணம் வேதங்கள் என்பவை தொகுக்கப்பட்ட நூல்களே ஆகும் என்கின்றார் ஆய்வாளர் பேராசிரியர் தெய்வநாயகம் அவர்கள். அவரின் கூற்றின் படி, கி.பி காலத்தில் தமிழர்களால் உருவாக்கப்பட்ட ஒரு புது மொழியினில் அக்காலத்தில் இந்திய தேசத்தில் இருந்த மக்கள் பலருக்கும் ஒருக் கருத்தினைத் தெரிவிக்க தொகுக்கப்பட்டவை தான் வேதங்கள். தமிழர்களால் உருவாக்கப்பட்ட அந்தப் புதிய மொழி தான் சமசுகிருதம் என்றும் அவர் கூறுகின்றார். (வேதங்களைத் தொகுத்தவர் வியாசர் என்னும் திராவிடர் என்ற கருத்து நமக்கு ஏற்கனவே தெரியும்)

நம்புவதற்கு கடினமான விடயங்கள் தான். ஆனால் அவர் கூறும் கூற்றுகளை மெய்ப்பிக்கும் வண்ணம் சில சான்றுகளையும் அவர் தரும் பொழுது, அவற்றை முற்றிலும் நம்மால் புறக்கணிக்கவும் முடியவில்லை. அவ்வாறு அவர் தரும் சான்றுகள் என்ன...

காண்போம்...!!!


பின்குறிப்பு:ஆய்வாளர் தேவகலா அவர்களின் 'தமிழ் பக்தி இயக்கத்தின் தோற்றமும் வளர்ச்சியும் (விவிலிய ஒளியில்)' என்ற ஆராய்ச்சிக் கட்டுரையில் இருந்து நான் அறிந்தவனவற்றை எனக்கு புரிந்த வகையிலேயே இங்கே பதிவிட்டு உள்ளேன்.

சனி, 18 ஆகஸ்ட், 2012

காளிமார்க்-ஒரு சிறு முயற்சி

நீண்ட நாட்களுக்கு முன்னர் காளிமார்க் குளிர்பானத்தைப் பற்றி ஒரு பதிவினை எழுதி இருந்தேன். அதனில் எவ்வாறு இந்திய குளிர்பானங்களை அந்நிய நிறுவனங்கள் அழித்தன என்பதனை சுருக்கமாக கண்டு இருந்தோம்.


ஆனால் வெறும் பதிவுகள் எழுதுவதினால் மட்டும் எந்த மாற்றமும் வந்து விடாது தானே. மாற்றங்கள் வர வேண்டும் என்றால் செயல்கள் வேண்டும். எந்த மாற்றங்களை நாம் எதிர்பார்கின்றோமோ அந்த மாற்றங்களுக்கு ஏதாக முதலில் நாம் மாற வேண்டும். அப்படி மாறினோம் என்றால் தான் உண்மையான மாற்றங்கள் வரும். அம்முறையில் இந்த மாற்றத்தினை நடைமுறைப் படுத்த ஒரு மிகவும் எளிய முறை அந்நிய பானங்களை நாம் குடிக்காது இருப்பது. ஆனால் இது ஒவ்வொருடைய தனிப்பட்ட முடிவாகத் தான் இருக்க வேண்டும்...அவ்வாறு இருந்தால் தான் உண்மையான மாற்றம் வரும். மாறாக அனைவரும் இந்திய பானங்களை மட்டுமே தான் குடிக்க வேண்டும், அந்நிய பானங்களை அறவே புறக்கணிக்க வேண்டும் என்று நாம் யாரையும் கட்டாயப்படுத்தவோ கட்டளையிடவோ முடியாது. அவை சரியான செயலும் அல்ல...அவற்றால் பயனும் இல்லை. மக்களிடம் நம் கருத்துக்களைச் சொல்லத் தான் நமக்கு உரிமை இருக்கின்றது மாறாக அதனைத் திணிக்க உரிமை கிடையாது. அவ்வாறு திணித்தோம் என்றால் அவை எதிர்மறையான விளைவுகளையே நிச்சயம் விளைவிக்கும்.

நிலைமை இவ்வாறு இருக்க மற்றவர்களின் உரிமைகளும் பாதிக்க கூடாது ஆனால் அதே நேரம் மாற்றங்களும் நிகழ வேண்டும், இதற்கு என்ன செய்வது என்று சிந்தித்த பொழுது தான் ஒரு சிந்தனை உதித்தது. பொதுவாக அனைத்து அணிகளிலும் எதாவது ஒரு வகையில் ஏதாவது ஒரு வேளையில் கொண்டாட்டங்கள் இருக்கத் தான் செய்கின்றன. பிறந்த நாள் கொண்டாட்டங்களாக இருக்கட்டும், சாதனைகளைப் பாராட்டும் கொண்டாட்டங்களாக இருக்கட்டும்...இன்னும் வேறு வகை கொண்டாட்டங்களாகவும் இருக்கட்டும் இவை அனைத்து அணிகளுக்கும் பொதுவாகவே இருக்கின்றன.

உணவுகள் இல்லாத கொண்டாட்டங்கள் மென்பொருள் துறையினைப் பொறுத்த வரை கொண்டாட்டங்களே இல்லை தானே, எனவே அனைத்துக் கொண்டாட்டங்களுக்கும் உணவுகளும் சரி குளிர் பானங்களும் சரி பொதுவான ஒன்றாகத் தான் இருக்கின்றன. இங்கே நாம் பார்த்தோம் என்றால் அனைத்து கொண்டாட்டங்களிலும் உணவு பொருட்கள் மாறுகின்றன ஆனால் குளிர் பானங்களைப் பொறுத்த வரை ஒன்று பெப்சி அல்லது கோகோ கோலா நிறுவனங்களின் பானங்களே பொதுவான ஒன்றாக இருக்கின்றன. அவை மாறுவதில்லை. இந்நிலையில் தான் ஒரு எண்ணம் தோன்றிற்று, நம்முடைய குளிர் பானங்களையும் நமது கொண்டாட்டங்களில் சேர்த்தால் என்னவென்று.

நிச்சயம் நம்மில் அநேகர் தமது சிறு வயதில் அந்த பானங்களைக் குடித்து தான் வளர்ந்து இருப்பர். அந்தக் குளிர் பானங்களின் பெயர்கள் நிச்சயம் அவர்களின் நினைவுகளின் ஒரு ஓரத்தில் பதிந்து இருக்கும். ஆனால் காலத்தின் ஓட்டத்தில் பல விடயங்களை கேள்விகளே கேட்காது மறந்ததுப் போல் இந்த குளிர் பானங்களையும் மறந்து இருக்கலாம்.

"அவ்வாறு அவர்கள் தெரியாது மறந்ததை அவர்கள் முன் கொண்டு வந்தோம் என்றால் ஒரு வேளை அதனை அவர்கள் ஏற்றுக் கொள்ளலாம் அல்லவா...ஏனெனில் அவர்கள் வேண்டுமென்றே இந்திய குளிர் பானங்களை புறக்கணிக்க ஒருக் காரணம் இல்லை...அவர்கள் வளர்ந்த காலத்தில் அந்த பானங்கள் கிட்டி இருக்காது எனவே கிடைத்த பானங்களை அவர்கள் அருந்த ஆரம்பித்து இருக்கலாம். எனவே இப்பொழுது, நண்பர்களே நாம் சிறு வயதில் பருகிய பானங்கள் அழிந்து விட வில்லை, என்றுக் கூறி அவர்களின் முன் அந்த பானங்களை வைத்தால் அதனை அவர்கள் குடித்துப் பார்க்காமலா போய் விடுவர்" என்ற எண்ணத்தின் விளைவாக ஒரு சோதனை முயற்சியை மேற்கொண்டேன்.


எனது அணியில் நண்பர்கள் சிலரது பிறந்தநாள் விழாவிற்காக குளிர் பானங்களை வாங்கும் பொழுது பெப்சி மற்றும் கோகோ கோலா பானங்களுடன் காளிமார்கின் தயாரிப்பான போவொண்டோ என்ற பானத்தையும் வாங்கிக் கொண்டு வைத்தோம். அவ்வளவு தான் எதிர்ப்பார்த்தபடியே பல கருத்துக்கள் கொட்ட ஆரம்பித்தன. அவற்றுள் பல, காளிமார்கின் தயாரிப்புகள் இன்னும் வந்துக் கொண்டு இருக்கின்றனவா என்று ஆச்சர்யத்தையே வெளிப்படுத்திக் கொண்டு இருந்தன.

"என்னையா...காளிமார்க் ஐ வாங்கிட்டு வந்து இருக்கீங்க... இது எல்லாம் இன்னும் வருதா என்ன...."

"காளிமார்க் ஆ... அந்த காலத்துல டொரினோ, கோல்ட் சபாட் அப்படி எல்லாம் இருந்துச்சி...இன்னும் இதுங்க எல்லாம் இருக்க என்ன..."

"அட விலை கம்மியா இருக்கணும்னு பார்த்து இந்திய பானங்களை வாங்கிட்டீங்களா" என்றார் ஒருவர்...பின்னர் விலையைப் பார்த்த உடன் "என்னையா 1 1/2 லிட்டர் போவொண்டோ 2 1/4 லிட்டர் பெப்சிய விட விலை அதிகமா இருக்கு...நம்ம ஆளுங்க கொள்ளை அடிக்குறதுல பெரிய ஆளுங்க" என்றவாறு முடித்தார்.

"ஹே.. காளிமார்க் ஆ... சின்ன வயசுல குடிச்சது... எனக்கு ரொம்ப பிடிக்கும்... இது எல்லாம் இன்னும் வருதா என்ன?"

தமிழ் மக்கள் பலருக்கும் காளிமார்க் பரிச்சியமாகி இருந்தது. கேரள நண்பர்கள் தான் புதிதாய் ஒன்றை பார்ப்பதுப் போல் பார்த்துக் கொண்டு இருந்தனர். மொத்தம் ஆறு குளிர் பானங்கள் வாங்கி இருந்தோம். நான்கு கோகோ கோலா தயாரிப்புகள், இரண்டு காளிமார்க் தயாரிப்புகள். குடிப்பவர்கள் குடிக்கட்டும். அவர்களுக்கு புதிதாய் ஒரு வாய்ப்பினை இம்முறை நாம் உருவாக்கி விட்டாயிற்று என்றே நின்றுக் கொண்டு இருந்தேன்.

ஆச்சர்யமாக முதலில் காளியானவை காளிமார்க் தயாரிப்புகளே. ஒருவேளை புது நிறுவனம், சுவைத்துப் பார்க்கலாம் என்ற எண்ணத்தினாலும் அது நிகழ்ந்து இருக்கலாம். எவ்வாறாக இருப்பீனும் அன்று வாங்கிய இரு பானங்களுமே முதலில் காலியாகி விட்டன. அந்த நிகழ்வில் சுவையைப் பற்றியும் பல கருத்துகள் வெளி வந்தன...அவற்றுள் முக்கியமான ஒன்றாக "கசாயம் போல இருக்கு" என்றக் கருத்து திகழ்ந்துக் கொண்டு இருந்தது. பிழையில்லை சில சுவைகள் சிலருக்கு பிடிப்பதில்லை. முதலில் புதிதாய் இந்தியாவினுள் நுழைந்த பொழுது பெப்சியும் கோகோ கோலாவும் இன்று இருக்கும் நிலையிலா இருந்தன? சச்சினும் ஐஸ்வர்யா ராயும் குடித்ததினால் தானே குடித்தார்கள். பின்னர் நாக்கு அந்த சுவைக்கு பழகிக் கொண்டு விட்டது. அது போலத் தான் காளிமார்க்குக்கும் நிகழலாம். மறந்த போன அந்த சுவைகள் மீண்டும் வெளி வரலாம். அது முக்கியமில்லை. முக்கியமானது என்னவென்றால் அவை வெளி வருவதற்கு உரிய வாய்ப்புகளை உருவாக்கித் தருகின்றோமா என்பது தான். அந்நிலையில் ஒரு வாய்ப்பினை உருவாக்கித் தந்த நிம்மதி என்னுள் அன்று இருந்தது. நண்பர்கள் பலர் பழைய நினைவுகளோடு காளிமார்கினை பருகியதும், "அண்ணே...இனிமே எல்லா கொண்டாட்டங்களிலும் ஒரு காளிமார்க் வாங்கிடலாம்...குடிக்குறதுக்கு ஆள் இருக்கு...இத குடிக்குறவங்க குடிக்கட்டும்...பெப்சி கோகோ கோலா தான் வேணும்னு சொல்றவங்க அத குடிக்கட்டும்" என்று அணியில் ஒருவர் கூறியதும் அந்த சிறிய முயற்சிக்கு கிடைத்த வெற்றியாகவே கருதலாம் என்றே எண்ணுகின்றேன்.

இன்று இந்திய தயாரிப்புகள் என்று பெரிதாக எதுவும் இல்லாத நிலையிலும், இந்தியாவினை வெளி நாடுகளுக்கு விற்கும் மனப்பான்மை உடைய அரசுகள் இருக்கும் நிலையிலும் நமது வரலாற்றையும் பொருட்களையும் காப்பாற்ற இத்தகைய சிறு முயற்சிகள் காலத்தின் தேவைகள் என்றே நான் கருதுகின்றேன்.

ஒரு டாலர் இன்றளவு கிட்டத்தட்ட ஐம்பத்தியாறு உருபாய் மதிப்பு பொருந்தியதாக இருக்கின்றது.

இதே டாலர் நமது சுதந்திரத்தின் பொழுது வெறும் ஒரு உருபாய் மதிப்பு பொருந்தியதாகவே இருந்து இருக்கின்றது.


அதாவது சுதந்திரம் அடைந்து அறுபத்தியாறு ஆண்டுகளில் டாலருக்கு நிகரான இந்திய உருபாயின் மதிப்பு ஐம்பத்தியாறு மடங்கு சரிந்து இருக்கின்றது. அதுவும் இந்த சரிவு குறிப்பாக இந்தியா 'தனியார்மயமாக்கம்...உலகமயமாக்கம்..." என்ற புதுக் கொள்கையை 1991இல் கொண்டு வந்ததில் இருந்து மிக வேகமாக அதிகரித்து இருக்கின்றது.


இருந்தும் இந்தியா வல்லரசாகும் என்ற கனவு மட்டும் பரப்பப்பட்டு கொண்டு இருக்கின்றது. இந்நிலையில் இந்தியாவினை உண்மையாக நேசித்து அது உண்மையாக வளர வேண்டும் என்ற எண்ணம் நம்மிடையே இருந்தால், நம்முடைய கனவுகள் பலிக்க இத்தகைய சிறுமுயற்சிகள் இன்றியமையாத ஒன்றாகவே இருக்கும்.


பக்கத்துக்கு வீட்டு குழந்தைகள் திறமைசாலிகளாகவே இருக்கட்டும். நமக்கு அது கவலையில்லை. நமக்கு முக்கியம் நம்முடைய குழந்தைகள் தானே. நம் குழந்தைகளை நன்றாகவும் நல்லவர்களாகவும் வளர்க்க வேண்டியக் கடமை யார் கடமை?


சிந்திப்போம்...முயல்வோம்...வெல்வோம்...சிறு துளி பெரு வெள்ளம்!!!

முந்தையப் பதிவு: ஒரு குளிர்பானத்தின் கதை

முருகனும் இயேசுவும் - 1

ஆயிரம் கடவுள்களின் பெயர்கள் நம் நாட்டிலே வழங்கப்படினும் தமிழில் 'முருகன்' என்ற பெயருக்கு என்றுமே ஒரு தனி இடம் இருக்கத் தான் செய்கின்றது. எங்கெங்கெல்லாம் தமிழர்கள் இருக்கின்றனரோ அங்கெல்லாம் முருகன் இருப்பான். தமிழர்களுக்கேன்றே சிறப்பாய் இருக்கும் ஒருவன் அவன். அழகன் அவன்... தமிழ் கடவுளும் அவன். இன்னும் கூறிக் கொண்டே போகலாம். முருகனும் தமிழும் என்றுமே முடிவில்லாதவர்கள்...அவர்களைப் பற்றிப் பேசினால் பேசிக் கொண்டே போகலாம். இப்பொழுது நம்முடைய பயணத்தில் அவர்களைத் தான் காண வேண்டி இருக்கின்றது. காரணம் சில ஆராய்ச்சியாளர்கள் இயேசு தான் தம்பி தமிழகத்தில் முருகனாக விளங்கிக் கொண்டு இருக்கின்றார் என்று கூறுகின்றார்கள். எவராலும் எளிதில் நம்ப முடியாத கூற்று தான் அது. இருந்தும் சற்று நிதானமாய் சிந்தித்துப் பார்க்கையில் அவர்களின் அந்தக் கூற்றினை ஒதுக்கி விட இயலவில்லை.



"அட என்னங்க... அங்கே இயேசு சிலுவையின் ஒரு பகுதியினை மக்களுக்காக சுமந்து சென்றார் சரி. பிரச்சனை இல்லை. ஆனால் அந்த செயலை எண்ணித் தான் நம் நாட்டில் முருகப்பெருமானுக்கு காவடி எடுக்கிறார்கள் என்று நீங்கள் கூறுவது எப்படிங்க சரியாகும். அப்படினா உலகத்துல எந்த இடத்துல மரக்கட்டையை சுமந்து சென்றாலும் அது இயேசுவை எண்ணியே சுமந்து செல்லுகின்றார்கள் அப்படின்னு சொல்ல முடியுமா" என்ற எண்ணம் பலரின் மனதிலும் நிச்சயம் வந்து இருக்கும்.


நியாயமான கேள்வி தான். இக்கேள்விக்கு பதிலினைக் காண நாம் முதலில் காவடியினைக் பற்றியும் அதன் வரலாற்றினைப் பற்றியும் பார்க்க வேண்டி இருக்கின்றது.


காவடி என்பது முருகனுக்கே உரிய வழிப்பாட்டு முறைகளில் ஒன்று என்பதனை நாம் அனைவரும் அறிவோம். ஆனால் எதற்காக காவடி எடுக்கின்றார்கள்? காவடி ஆட்டத்தின் வரலாறு என்னவென்று பார்த்தோம் என்றால் ஒரு கதை நம் புராணங்களில் இருந்து நமக்கு விடையாய் கிடைக்கின்றது.

அதாவது அகத்திய முனிவர் வடக்கில் இருந்து தெற்கு நோக்கி வரும் பொழுது அங்கிருந்து இரு மலைகளை அவருடனேயே எடுத்து வர எண்ணுகின்றார். அதற்காக அவருடைய சீடனாகிய இடும்பன் என்ற அசுரனைப் பணிக்க, அவனும் அந்த மலைகளை சுமந்துக் கொண்டு தெற்கே வருகின்றான். இதே நேரத்தில் தான் பிள்ளையாருக்கும் முருகனுக்கும் இடையே பழப் பிரச்சனை உருவாக முருகனும் கோபத்தோடு தெற்கே வருகின்றார். இந்நிலையில் இடும்பன் தான் ஓய்வு எடுக்க எண்ணி மலைகளை கீழே இறக்கி வைத்து விட்டு சற்றே கண் அயருகின்றான். ஆனால் சிறிது நேர ஓய்வுக்கு பின்னர் மீண்டும் மலைகளை தூக்க அவன் முயற்சிக்கையில் ஆச்சர்யமே அவனுக்கு காத்து இருக்கின்றது. இப்பொழுது அவனால் அந்த மலைகளைத் தூக்க முடியவில்லை. ஏன் அந்த மலைகளைத் தூக்க முடியவில்லை என்று அவன் சிந்திக்கும் பொழுது மலையின் மேல் ஒரு சிறுவன் வீற்று இருப்பதை காணுகின்றான். அந்தச் சிறுவனால் தான் அந்த மலைகளை தன்னால் தூக்க இயலவில்லை என்று எண்ணிய இடும்பன் அந்த சிறுவனை மலையில் இருந்து இறங்குமாறு சொல்ல சிறுவன் மறுக்கின்றான். இடும்பன் ஆத்திரப்படுகின்றான். சிறுவனைத் தாக்கவும் செய்கின்றான். ஆனால் அப்பொழுது நிலவிய சண்டையில் சிறுவனே வெல்லுகின்றான். எவ்வாறு தான் ஒரு சிறுவனிடம் தோற்றோம் என்று இடும்பன் சிந்திக்கும் பொழுது தான் அந்த சிறுவன் அவனது விருப்ப தெய்வமான முருகன் என்று அவன் அறிகின்றான்...அறிந்து முருகனிடம் இரு வரங்களைக் கோருகின்றான். ஒன்று...இடும்பனைப் போல் யார் காவடி தூக்கிக் கொண்டு வந்தாலும் முருகன் அவர்களை வாழ்த்த வேண்டும். இரண்டு முருகனுடன் போரிட்ட அந்த மலைக்கு இடும்பன் காவலாளியாக என்றென்றும் திகழ வேண்டும். முருகனும் அந்த வரங்களை அருள்கின்றார். அன்று ஆரம்பித்தது தான் மக்கள் முருகனுக்காக காவடி எடுக்கும் வழக்கம். இது தான் நம் புராணங்களில் இருந்து நமக்கு கிடைக்கும் கதை. நிற்க.

இப்பொழுது நாம் ஆய்வாளர்களின் கூற்றுகளைப் பார்ப்போம். அதற்கு நாம் காவடி என்ற சொல்லைப் பார்க்க வேண்டி இருக்கின்றது.

'காவடி' என்பது ஒருத் தனிச் சொல்லே அல்ல. மாறாக இரு சொற்களின் சேர்க்கைத் தான் காவடி என்ற ஒரு சொல்லாக மாறி இருக்கின்றது. அதாவது,

'காவு+தடி' என்ற சொற்களே மருவி 'காவடி' என்று மாறி இருக்கின்றன.

காவடி = காவு+தடி

காவு என்றால் பலி அல்லது மரணம் என்றுப் பொருள்படும். இந்நிலையில் காவுத்தடி என்பது பலிகொடுக்கப்படும் தடி அல்லது உயிரினைப் பறிக்கும் தடி என்றே பொருள் தருகின்றது. ஆனால் நாம் நம்முடைய புராணக் கதையினைக் கண்டோம் என்றால் காவடி என்ற சொல்லின் அர்த்தத்திற்கு அக்கதை பொருந்துகின்றதா என்றால் இல்லை என்பதே பதிலாக வருகின்றது. இந்நிலையில் முருகனுக்கு காவடி எடுப்பதற்கு வேறு காரணங்கள் இருக்கின்றனவா என்றே நாம் காண வேண்டி இருக்கின்றது.


அதாவது 'இறைவனின் பிள்ளையை' வேண்டி மக்கள் உயிரினைப் பறிக்கும் தடியினை ஏந்திக் கொண்டு மலை ஏறுகின்றனர். இச்செயலுக்கு பொருத்தமான வேறு காரணங்கள் கிடைக்குமா என்று பார்த்தோம் என்றால் இயேசு உயிர் பறிக்கும் கட்டையினை சுமந்து கொண்டு மக்களுக்காக மலையினை ஏறி இருக்கின்றார் என்ற செய்தி நமக்கு கிடைக்கின்றது. இவ்விரண்டு விடயங்களும் ஒன்றினைப் போலவே இருக்கின்றன. ம்ம்ம்ம்...இந்நிலையில் ஏன் இவ்விரண்டு விடயங்களுக்கும் தொடர்பு இருக்க கூடாது என்ற எண்ணத்திலும் நாம் பார்க்க வேண்டி தான் இருக்கின்றது.


மக்களுக்காக இறைவனின் மகன் உயிர்பறிக்கும் கட்டையினை சுமந்துக் கொண்டு சென்று இருக்கின்றார். அவரின் அந்த தியாகத்தை நினைவுக் கூர மக்கள் அவர் சுமந்தவாறே ஒரு கட்டையினை அவரை நினைத்து சுமந்து கொண்டு இருக்கின்றனர். ம்ம்ம்... பொருந்தத் தான் செய்கின்றது. மேலும் நாம் முன்னர் கண்ட சில பதிவுகளின் படி,


௧) இன்று நம்மிடையே இருக்கும் முருகன் வழிப்பாட்டுக்கும் சங்க இலக்கியங்களில் காணப்படும் வழிப்பாட்டு முறைக்கும் மிகுந்த வித்தியாசங்கள் காணப்படுகின்றன. இன்றைக்கு முருகனுக்கு பலி இடும் பழக்கம் கிடையவே கிடையாது. ஆனால் சங்க இலக்கியத்தில் முருகனுக்கு பலி இருந்து இருக்கின்றது.

௨) மேலும் கடவுளின் பிள்ளை என்ற ஒரு கோட்பாடே சங்க இலக்கியத்திலும் சரி அதற்கு முந்தைய இலக்கியங்களிலும் சரி காணப்படவில்லை. முருகன் குறிஞ்சி நிலக் கடவுளாகவே அறியப்பட்டு உள்ளான்.

௩) மேலும் நாம் மேலே கண்ட புராணக் கதைகளை பற்றிய குறிப்புகளும் சரி காவடி ஆட்டமும் சரி கி.மு வில் மக்களிடையே இருந்ததிற்கான சான்றுகள் இதுவரை கிட்டவில்லை. இக்கதைகள் எல்லாம் பிற்காலத்திலேயே கிடைக்கப் பெறுகின்றன.


என்றே அறியப் பெறுகின்றோம்.

அதாவது கிருத்து காலத்திற்கு பின்னரே நம்மிடையே காவடி ஆட்டத்தினைப் பற்றியக் குறிப்புகள் கிடைக்கப் பெறுகின்றன. மேலும் முருகனுக்குரிய வழிப்பாட்டு முறைகளும் மாறி இருக்கின்றன. அதாவது குறிஞ்சி நிலத்திற்கு மட்டும் தலைவனாக சங்க இலக்கியங்களில் சித்தரிக்கப்பட்ட முருகன் இறைவனின் மகனாக அனைவருக்கும் பொதுக் கடவுளாக பிற்காலத்திலேயே அறியப்படுகின்றான். இந்த மாற்றமும் ஏன் என்று சிந்திக்கத்தக்க ஒன்றாக இருக்கின்றது.


எனவே இந்நிலையில் இயேசுவே தமிழகத்தில் முருகனாக சித்தரிக்கப்பட்டு இருக்கலாம் என்ற கருத்தினை நாம் முற்றிலுமாக மறுக்க போதுமான சான்றுகள் நம்மிடையே கிட்டப் பெறவில்லை. அதுவும் நம்முடைய பதிவுகளின் படி விவிலியத்தில் சிவலிங்க வழிப்பாடு காணப்படுவதாலும் சரி சிவனின் பிள்ளை தான் இயேசு என்றுக் கூறும் நிலையினாலும் சரி இயேசுவே முருகன் என்றக் கருத்து வலுப்பெறத் தான் செய்கின்றது.


ஆனால் வெறும் காவடியினை வைத்துக் கொண்டு இயேசு தான் முருகன் என்று நாம் கூற இயலாது. அது தகுந்த ஒன்றாகவும் இருக்காது. மேலும் முருகன் தமிழ் கடவுளாக தமிழர்களின் மத்தியில் மட்டுமே சிறப்பாக விளங்குகின்றார்.


இந்நிலையில் இயேசு தான் முருகன் என்று ஆய்வாளர்கள் கூறுவதற்கு வேறு காரணங்கள் இருக்கின்றனவா?. முருகன் ஏன் தமிழ் கடவுளாக அறியப்படுகின்றான்? என்றக் கேள்விகளுக்கு நாம் விடையினை தேடத் தான் வேண்டி இருக்கின்றது.


தேடுவோம்...!!!

முருகன் இருக்க பயமேன்!!!

புதன், 15 ஆகஸ்ட், 2012

இயேசு கிருத்து முழு சிலுவையைச் சுமந்தாரா?

இயேசு கிருத்து சிலுவையில் அறையப்பட்டார். இதில் மாற்றுக் கருத்து நமக்கு ஏதும் அல்ல. ஆனால் அவர் சிலுவையில் அறையப்படுவதற்கு முன்னர் என்ன நடந்தது என்பதைப் பற்றியக் கருத்துக்களைத் தான் நாம் இப்பொழுது காண வேண்டி இருக்கின்றது. அதுவும் குறிப்பாக ஒரு விடயத்தினை நாம் சற்று கூர்ந்து கவனிக்க வேண்டி இருக்கின்றது.

"இயேசு கிருத்து தான் சிலுவையில் அறையப்படும் முன் அந்த முழு சிலுவையையுமே சுமந்து சென்றாரா?" என்பதே அந்த விடயம். இதனை பற்றி நாம் விரிவாக பார்க்க வேண்டும் என்றால் அன்றைய காலத்தில் நிலவிய பழக்கவழக்கங்கள் மற்றும் சிலுவையினைப் பற்றியும் அறிந்துக் கொள்வது இன்றியமையாத ஒன்றாக அமைவதால் ஒரு எட்டு சென்று அவற்றைப் பார்த்துக் கொண்டு வந்து விடலாம்.

நாம் முந்தைய பதிவுகளில் கண்டவாறு கி.பி நான்காம் நூற்றாண்டு வரை சிலுவை என்பது ஒரு கொலைக்கருவியே ஆகும். அக்காலத்திற்கு பின்னர் தான் அது ரோமப் பேரரசன் கோன்சுடைன் என்பவரால் அரசியல் காரணங்களுக்காக சிறப்பிக்கப்பட்டு கிருத்துவர்களின் சின்னமாக மாறுகின்றது. அதற்கு முன்னர் வரை சிலுவை என்பது எதிரிகளை துன்புறுத்திக் கொலை செய்யும் ஒரு கொடிய கொலைக்கருவியாகவே ரோமர்களால் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. கிருத்துவுக்கு முன்னரும் சரி பின்னரும் சரி பலர் சிலுவையில் அறையப்பட்டு இருக்கின்றனர். ரோமர்களின் ஆட்சிக்காலத்தில் சிலுவையில் அறையப்பட்டு ஒருவன் இறப்பது என்பது மிகவும் சர்வ சாதாரணமான ஒரு விடயமாகத் தான் இருந்து இருக்கின்றது. பொதுமக்கள் அஞ்ச வேண்டும் என்ற ஒரு காரணத்திற்க்காக ஊருக்கு வெளியே அனைவரும் காணும் படி ஒரு மனிதனை சிலுவையில் அறைந்து அவனைக் கொல்வது என்பது ரோமர்கள் கையாண்ட ஒரு யுக்தி ஆகும். அவ்வாறு எதிரிகளை, குற்றவாளிகளை சிலுவையில் அறைவதற்காகவே ஊருக்கு வெளியே ஒரு இடத்தினை ரோமர்கள் எப்பொழுதும் தயாராக வைத்து இருந்தனர் என்பதும் ஆய்வாளர்கள் கருத்து.நிற்க.

இப்பொழுது நாம் சிலுவையினைப் பற்றி சற்றுக் கண்டு விடலாம்.

சிலுவைகள் என்பன தொடக்கக் காலம் முதல் அந்த வடிவிலேயே தான் இருந்தனவா என்றால் ஒரு தெளிவான விடை நமக்கு கிடைக்க மாட்டேன்கின்றது. சில குறிப்புகள் சிலுவை என்பது ஒரே மரக்கட்டை தான் என்கின்றன (அதாவது செங்குத்தாக நிற்கும் பகுதி மட்டுமே தான் சிலுவையாக பயன்படுத்தப்பட்டது என்றும் அதன் மேல் இன்றுக் காணப்படுவது போன்ற படுக்கைவசமான பகுதி அன்று இருக்கவில்லை என்கின்றன), வேறு சில குறிப்புகளோ சிலுவை என்பது இருக் கட்டைகளால் ஆனது என்றும் ஆனால் அதன் வடிவம் கூட்டல் குறிக்கு நிகராக இருந்தது என்றும் கூறுகின்றன. இருக்கட்டும். இந்த வேறுபாடுகள் இப்பொழுது நமக்கு முக்கியமில்லை. நாம் நம்முடைய கேள்விக்கு விடையினைக் காண இப்பொழுது வழக்கில் இருக்கும் சிலுவையின் வடிவினை கொண்டே தொடருவோம்.

இன்று பெரும்பாலான வடிவங்கள் சிலுவையினை இரு பகுதிகள் கொண்ட வடிவமாகவே காட்டுகின்றன.(படம் இடதுபுறம்)

ஒரு மரப்பகுதி செங்குத்தாக இருக்கின்றது. மற்றொன்று அதன் மேல் படுக்கைவசமாக இருக்கின்றது. இதுவே தான் சிலுவையின் அமைப்பாக இருக்கின்றது. ரோமர்களின் வழக்கப்படி அந்த செங்குத்தான பகுதி மண்ணில் ஊன்றப்பட்டு இருக்கும். பின்னர் படுக்கைவசமாக இருக்கும் பகுதியில் குற்றவாளியின் கைகள் இரண்டும் இணைக்கப்பட்டு (ஆணிகள் மூலமாகவோ அல்லது கயிறின் மூலமாகவோ), அந்தப் பகுதி செங்குத்தான பகுதியில் இணைக்கப்படும். இதுவே ரோமர்கள் ஒருவனை சிலுவையில் அறையும் முறை. மேலும் ஒருவன் சிலுவையில் அறையப்படுவதற்கு முன்னர், அவன் சிலுவையில் அறையப்படும் இடம் வரை அவனே அவனது சிலுவையை தூக்கிக் கொண்டு வருவதும் ரோமர்களின் பழக்கம் ஆகும். நிற்க.

இப்பொழுது நாம் கவனிக்க வேண்டியது இந்த அமைப்பின் எடையைத் தான். ஆய்வாளர்களின் கணிப்புப்படி ஒரு முழு சிலுவையின் எடை கிட்டத்தட்ட 130 கிலோவாகவும், படுக்கைவசமாக இருக்கும் பகுதியை மட்டும் தனியாக கணக்கிட்டால் 35 இருந்து 60 கிலோ வரை இருந்து இருக்க வேண்டும் என்றும் நாம் அறிய முடிகின்றது. இந்நிலையில் ஒரு மனிதன் முழு சிலுவையையும் அதாவது 130 கிலோ எடை உடைய அமைப்பினை சுமந்துக் கொண்டு செல்வது நடைமுறையில் சாத்தியமானதொன்றாக இருக்குமா என்பதே இப்பொழுது நம் முன் எழும் ஒரு கேள்வி. இக்கேள்விக்குரிய விடையினைத் தேடினோம் என்றால் நமக்கு விடையாய் கிட்டுவது "சிலுவையைச் சுமப்பது என்பது முழு சிலுவையையும் குறிக்காது. மாறாக சிலுவை அமைப்பில் ஒரு பகுதியான அந்த படுக்கைவசப் பகுதியை மட்டுமே சுமந்து செல்வது ஆகும்" என்ற விடையே ஆகும். இந்த விடையை சற்று விரிவாகப் பார்க்கலாம்.

சிலுவை என்பது ஒரு பொதுவான கொலைக்கருவி என்று நாம் கண்டுவிட்டோம். மக்களை சிலுவையில் அறைவதும் அன்று வெகு இயல்பாக ரோமர்களால் நிறைவேற்றப்பட்ட ஒரு செயல் தான். இந்நிலையில் மக்களை சிலுவையில் அறைவதற்கு என்றே ஒரு இடத்தினை ரோமர்கள் தனியாக வைத்து இருந்தனர் என்பதும் அங்கேத் தான் சிலுவையில் அறைய மக்கள் அனைவரும் கொண்டு செல்லப்பட்டனர் என்பதுமே பொதுவான கருத்துக்களாக நிலவுகின்றன. எனவே மக்களை சிலுவையில் அறையும் இடத்தில அவர்களை சிலுவையில் அறைவதற்கான கருவிகள் தயாரான நிலையிலேயே இருந்து இருக்க வேண்டும் என்பதும் ஆய்வாளர்கள் கருத்து. அதாவது சிலுவையின் ஒரு பகுதியான செங்குத்தான மரப்பகுதிகள் சிலுவைகள் அறையப்படும் இடத்திலேயே எப்பொழுதும் வீற்று இருந்து இருக்க வேண்டும் என்றும் அதில் அறையப்பட இருப்பவர்களை எடை குறைவான படுக்கைவசப் மரப்பகுதியினை மட்டுமே சுமந்து கொண்டு அவ்விடத்திற்கு வரவழைத்தனர் ரோமர்கள் என்றுமே ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

இதுவே ரோமர்களின் பழக்கமாக இருப்பின், இயேசுவும் அந்த படுக்கைவசமான மரப்பகுதியினையே சுமந்துக் கொண்டு சென்று இருக்க வேண்டும். மேலும் விவிலியக் குறிப்புகளின் படி இயேசுவை சிலுவையில் அறைவதற்கு முன் சவுக்கினால் அடித்தும் துன்புறுத்தி இருக்கின்றனர்.

"அப்பொழுது, அவன் பரபாசை அவர்களுக்கு விடுதலையாக்கி, இயேசுவையோ வாரினால் அடிப்பித்து, சிலுவையில் அறையும்படிக்கு ஒப்புக்கொடுத்தான்." - மத்தேயு (27-26)

இந்நிலையில் அவரால் முழு சிலுவையையும் சுமந்து சென்று இருக்க இயலுமா என்பதும் கேள்விக்குறியே. மேலும் இந்த வாதத்தை வலுப்படுதுமாறு விவிலியத்தில் மற்றொரு குறிப்பும் உள்ளது. அதாவது இயேசுவின் சிலுவையை சுமக்குமாறு சீமோன் என்ற மனிதனை காவலர்கள் பணித்தவாறு குறிப்பும் விவிலியத்தில் இருக்கின்றது.

"போகையில் சிரேனே ஊரானாகிய சீமோன் என்னப்பட்ட ஒரு மனுஷனை அவர்கள் கண்டு, அவருடைய சிலுவையைச் சுமக்கும்படி அவனைப் பலவந்தம்பண்ணினார்கள்." - மத்தேயு (27-32)

இதன் வாயிலாக இயேசு சிலுவையை சுமக்க முடியாத உடல் நிலையில் தான் இருந்தார் என்று நாம் எண்ண முடிகின்றது. இந்நிலையில் அவர் 130 கிலோ எடையுடைய முழு சிலுவையையும் சுமந்து சென்று இருக்க முடியும் என்பது சாத்தியமில்லாத ஒரு கூற்றாகத் தான் இருக்கின்றது.

இதன் அடிப்படையில் இயேசு மக்களின் மத்தியில் சிலுவையின் ஒரு பகுதியான படுக்கைவசமான கட்டையை சுமந்து சென்றார் என்றும் அதனை இடையில் சீமோன் என்ற மனிதன் ஏற்றுக் கொண்டான் என்றும் அவர்கள் அவ்வாறு கபாலஸ்தலம் என்ற இடத்தை அடைந்ததும் அங்கே ஏற்கனவே நிறுவப்பட்டு இருந்த சிலுவையின் செங்குத்தான பகுதியில் இயேசு அறையப்பட்டார் என்றும் நாம் அறிய முடிகின்றது.

எனவே இயேசு முழு சிலுவையை சுமந்து கொண்டு செல்லவில்லை மாறாக அவரின் தோளில் படுக்கைவசமான ஒரு மரப்பகுதியையே சுமந்து சென்று இருக்கின்றார் என்று நாம் அறிய முடிகின்றது. நிற்க.


இப்பொழுது நாம் இந்தத் தலைப்பினைக் கண்டதற்கு ஒரு முக்கியக் காரணம் இருக்கின்றது.

மேலே உள்ள பதிவின் படி 'இறைவனின் மைந்தர்' மக்களுக்காக படுக்கைவசமான ஒரு மரப்பகுதியை சுமந்துக் கொண்டு மலையின் மீது ஏறிச் சென்று இருக்கின்றார். சரி தானே.

இங்கே ஆச்சர்யப்பட வேண்டிய விடயம் என்னவென்றால் உலகின் மற்றொரு பகுதியில் இன்று 'இறைவனின் மைந்தனை' வேண்டிக் கொண்டு தோளில் படுக்கைவசமான மரப்பகுதியை ஏந்திக் கொண்டு மலை ஏறும் வழிப்பாட்டு பழக்கம் நடைமுறையில் இருந்து வருகின்றது.

என்ன கண்டுபிடிச்சிடிங்களா!!!

அட ரொம்ப யோசிக்காதீங்கங்க...

அந்த உலகின் மற்றொரு பகுதி - தமிழகம்தேன்
இறைவனின் மைந்தன் - நம்ம முருகப் பெருமான்தேன்

அந்த வழிப்பாட்டு முறை - நம்ம தமிழர்களின் காவடி ஆட்டம்தேன்.


ஏற்கனவே பிள்ளையாரப் பத்தி பார்த்தாச்சி (இணைப்பு). இப்போ அவருடைய தம்பி...நம்ம தமிழ் கடவுள பத்தி பார்க்கலாமா...!!!

வெற்றி வேல்... வீர வேல்....!!!

பயணம் தொடரும்...!!!

சனி, 28 ஜூலை, 2012

பண்டைய தமிழர்களின் திணைக் கடவுளர்

நண்பர் ஒருவர் அருமையான கேள்வி ஒன்றினை கேட்டு இருந்தார்.

தமிழர்களின் திணைப் பிரிவுகளில் முருகனின் பெயர் காணப்படுகின்றது…திருமால் என்ற பெயர் காணப்படுகின்றது…ஆனால் சிவன் என்ற பெயரோ அல்லது விநாயகர் என்ற பெயரோ காணப்படவில்லையே அது ஏன் என்று வினவி இருந்தார். சமயங்களைப் பற்றிய நமது பயணத்தில் இந்தக் கேள்வி ஒரு மிக முக்கியமானதொருக் கேள்வி. சரி இப்பொழுது இந்தக் கேள்விக்கான விடையினைக் காண்போம். அதற்கு தமிழர்களின் திணைப் பிரிவுகளைப் பற்றி நாம் காண வேண்டி இருக்கின்றது.

தமிழர்கள் நிலத்தினை ஐந்தாகப் பிரித்து இருந்தனர் என்பதனை நம்மில் பெரும்பாலானோர் அறிவோம். அவைகளைத் தான் ஐந்திணைகள் என்று நாம் வழங்குகின்றோம். அதாவது,

குறிஞ்சி – மலையும் மலை சார்ந்த இடமும்
முல்லை – காடும் காடு சார்ந்த இடமும்
மருதம் – வயலும் வயல் சார்ந்த இடமும்
நெய்தல் – கடலும் கடல் சார்ந்த இடமும்
பாலை – சுரமும் சுரம் சார்ந்த இடமும்

என்பனையே அந்த ஐந்துப் பிரிவுகள். தமிழ் பாட நூல்களுள் இவற்றைப் பற்றி நாம் நிச்சயம் பார்த்து இருப்போம். மேலும் இந்தப் பிரிவுகளுக்கு என்றே உரித்தான தனி கருப் பொருள்களையும் தமிழர்கள் வரையறை செய்து வைத்து இருந்தனர். அதாவது ஒவ்வொரு நிலத்திலும் வாழும் மக்கள், அங்கு காணப்படும் மிருகங்கள் மற்றும் பறவைகள், நீர் நிலைகள், வணங்கப்படும் கடவுளர், இசைக்கும் கருவிகள், பண், மரங்கள்… மற்றும் இன்ன பிற விடயங்களை ஒவ்வொரு நிலத்திற்கும், இவை இவை இந்த நிலத்திற்குரிய கருப்பொருள்கள் என்று தமிழர்கள் பிரித்து வைத்து இருந்தனர். நிற்க
இப்பொழுது நாம் காண வேண்டியது அந்தந்த நிலங்களில் வழிப்படப்பட்ட தெய்வங்களைப் பற்றியே. அதற்கு நமக்கு தொல்காப்பியரின் பாடல் உதவுகின்றது.

“மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்
சொல்லிய முறையான் சொல்லவும் படுமே”


இந்தப் பாடலில் தொல்காப்பியர் நிலங்களின் பிரிவையும் அவற்றிற்குரிய கடவுளரையும் குறிப்பிட்டு இருக்கின்றார்.

முல்லை நிலக் கடவுளாக ‘மாயோன்’ அறியப்படுகின்றான்.
குறிஞ்சி நிலக் கடவுளாக சேயோன் அறியப்படுகின்றான்.
மருத நிலக் கடவுளாக வேந்தன் அறியப்படுகின்றான்.
நெய்தல் நிலக் கடவுளாக வருணன் அறியப்படுகின்றான்.


பாலையைப் பற்றி தொல்காப்பியர் கூறாதது அந்தப் பிரிவானது அவர் காலத்திற்கு பின்னாலேயே தோன்றி இருக்கக் வேண்டும் என்று நாம் கருத வாய்ப்பளிக்கின்றது.

பாலை நிலக் கடவுளாக கொற்றவை அறியப்படுகின்றார். இவையே அந்த ஐந்திணைகளில் வழங்கப்படும் கடவுளரின் பெயர்கள் ஆகும்.

இங்கே நாம் இப்பொழுது காண வேண்டிய விடயம் என்னவென்றால் இங்கே குறிக்கப்பட்டு உள்ள கடவுளர்கள் அனைவரும் அந்தந்த நிலத்திற்குரிய கடவுளர்களே அன்றி முழுமுதற் கடவுளர் அல்லர். அதாவது,
மாயோன் முல்லை நிலத்துக்கான கடவுளாகவே அறியப்படுகின்றான். 

அதேப்போல் சேயோன் குறிஞ்சி நிலத்துக்குரிய கடவுளாகவே அறியப்படுகின்றான். மற்ற நிலங்களில் இவர்கள் வணங்கப்படவில்லை. ஒவ்வொரு திணைக்குரிய மக்களும் அவர்களுக்கென தனிக் கடவுளரை கொண்டு இருந்தனர். அதாவது இன்று நாம் முழுமுதற் கடவுளாக சிவனையோ அல்லது பெருமாளையோ வணங்குகின்றோம். இவர்களும் சரி இவர்கள் பிள்ளைகளாக கூறப்படும் முருகன், பிள்ளையார், பிரமன், ஐயப்பன் போன்றியவர்களும் குறிப்பிட்ட நிலத்துக்குரிய கடவுளராக இல்லாது அனைவருக்கும் உரியக் கடவுளராக விளங்குகின்றனர். ஆனால் இது போல் தொல்காப்பியத்தில் குறிக்கப்பட்டுள்ள கடவுளர் காணப்படவில்லை.

“அட என்னங்க அப்படினா அந்தக் காலத்துல அனைத்து திணை மக்களும் தனித்தனி கடவுளரை வழிப்பட்டனர் என்றால் பொதுக் கடவுள் என்று எவருமே அப்பொழுது இல்லையா?” என்ற ஒரு கேள்வி இப்பொழுது எழலாம். இந்தக் கேள்விக்கு பதில் ‘இல்லை…மக்கள் பொதுவானக் கடவுள் வழிப்பாட்டையும் கொண்டு தான் இருந்தனர். நினைவுக் கல் நாட்டி வழிபடும் பழக்கம் மக்கள் அனைவர் உள்ளும் ஒன்றைப் போலவே இருக்கத் தான் செய்தது. அந்த நினைவுக் கல்லுக்கு அக்காலத்தில் வழங்கப்பட்ட பெயர் கந்து’. (அந்தக் கந்து என்ற பெயர் தான் பிற்காலத்தில் சிவலிங்கம் என்ற பெயர் பெற்று இன்று நம்மிடையே தொடர்ந்து இருந்துக் கொண்டு வருகின்றது.) நிற்க.

சரி இதுவரை நாம் கண்ட விடயங்களை சற்று உன்னிப்பாக கவனித்தோம் என்றால் நம்மிடையே இன்று வழங்கிக் கொண்டு இருக்கும் கடவுளர்களின் பெயர்களான ‘பெருமாள், சிவன், பிள்ளையார், முருகன், சக்தி, பிரமன்’ போன்ற பெயர்கள் அக்காலத்திலே இல்லாது இருப்பதை நம்மால் காண முடியும். மேலும் அந்தக் காலத்தில் வணங்கப்பட்ட கடவுளருக்கும் இன்று நாம் வணங்கிக் கொண்டு இருக்கும் கடவுளருக்கும் பொருள் அளவிலும் வித்தியாசங்கள் இருப்பதையும் நாம் காணலாம்.

இன்று சிவனும் பெருமாளும் முழுமுதற் கடவுளாக அறியப்படுகின்றனர். ஆனால் அந்தக் காலத்தில் அப்படிப்பட்ட கடவுளைப் பற்றியக் குறிப்புகள் இல்லை.

முருகன், பிள்ளையார், பிரமன், ஐயப்பன் போன்றோர் முழுமுதற் கடவுளரின் பிள்ளைகளாக அறியப்படுகின்றனர் இன்று. ஆனால் அக்காலத்தில் அப்பேர்ப்பட்ட உறவுமுறைகள் இருந்ததாக சான்றுகள் இல்லை.

நில்லுங்கள் நில்லுங்கள்…அந்தக் காலக் கடவுளருக்கும் இன்றைய கடவுளருக்கும் தொடர்புகள் காணப்படவில்லை என்று கூறுகின்றீர்களே…ஆனால் மாயோன் தான் ‘திருமால்’ என்றும் சேயோன் தான் முருகன் என்றும் ஆய்வுகள் கூறுகின்றனவே அதற்கு என்ன கூறுகின்றீர் என்று சில நண்பர்கள் கேட்கலாம். இக்கேள்விக்கு பதிலினை காண நாம் அந்தக் கடவுளரைக் காண வேண்டி இருக்கின்றது.

மாயோன் என்ற பெயர் – கருமை நிறத்தினை உடையவன் என்ற பொருளினைத் தருவதாகவே அமைந்து உள்ளது. (மால் – கருமை). முல்லை நிலத்தின் கருப்பொருளான கார்காலத்தினில் தோன்றும் கரிய மேகங்களைப் போன்றவன் என்ற அர்த்தத்தினாலேயே அவன் அப்பெயரினைப் பெற்று இருக்கின்றான். இதைத் தவிர்த்து இன்று நாம் காணும் திருமாலுக்கும் முல்லை நிலக்கடவுளான மாயோனுக்கும் தொடர்புகள் இருப்பதாக சான்றுகள் இதுவரை இல்லை.

அதேப் போல் சேயோன் என்ற பெயர் - சிவந்தவன் என்ற பெயரினையே தருகின்றது. இவனை பொதுவாக மக்கள் முருகன் என்றே கருதுகின்றனர். ஆனால் சேயோன் என்றப் பெயர் சிவனையும் குறிக்கும் ஒன்றாக விளங்குகின்றது. (இங்கே நாம் கவனிக்க வேண்டிய விடயம் என்னவென்றால் சங்க இலக்கியங்களிலும் சரி சில சிற்பங்களிலும் சரி முருகனும் சிவனும் ஒரே மாதிரியாக சித்தரிக்கப்பட்டு இருக்கின்றனர். இது ஆராயத் தக்க ஒரு விடயமாகும்). ஆனால் மாயோனைப் போலவே சேயோனுக்கும் இன்றைய முருகன்/சிவன் ஆகியோருக்கும் ஒற்றுமைகள் சிறிதளவே இருக்கின்றன.

எடுத்துக்காட்டுக்கு – இன்றைய சிவனுக்கும் முருகனுக்கும் பலிகள் கிடையாது. ஆனால் சங்க இலக்கியத்தில் ‘கந்து’ வழிப்பாட்டுக்கும் சரி முருகன் வழிப்பாட்டுக்கும் சரி பலிகள் இருந்து இருக்கின்றன. அவர்களை மக்கள் பலியிட்டே வணங்கியும் இருக்கின்றனர்.

இந்தப் பலி வழிப்பாட்டு முறை எவ்வாறு பலி இல்லாத வழிப்பாட்டு முறையாக மாறியது என்றும் எவ்வாறு இந்தத் திணைக் கடவுளர் வழிப்பாட்டு முறை போய் இன்றைய வழிப்பாட்டு முறை நம்மிடையே வந்தது என்பதும் எண்ணிப்பார்க்க/ஆராயத் தக்கது. நிற்க.

எனவே இன்று நாம் காணும் திருமாலும், முருகனும் தொல்காப்பியக் காலத்தில் மக்களின் மத்தியில் வணங்கப்பட்ட கடவுளர் அல்ல என்பதும், அக்காலத்தில் இருந்த முறைகளில் இருந்து இன்று நாம் கொண்டு இருக்கும் வழிப்பாட்டு முறைகள் மாற்றங்கள் பல கொண்டு இருக்கின்றன என்பதும் நாம் மேலே கண்ட விடயங்கள் மூலம் அறிந்துக் கொள்ளலாம்.

சரிங்க… மாயோன், சேயோன் போன்றவர்களைப் பற்றி கூறி விட்டீர்கள். மருத நிலக் கடவுளைப் பற்றியும் நெய்தல் நிலக் கடவுளைப் பற்றியும் கூற வில்லையே என்கின்றீர்களா…

மருத நிலத்தின் கடவுள் வேந்தன் எனப்படுகின்றான். வேந்தன் என்றால் அரசன்/தலைவன் என்றுப் பொருள். எனவே மக்கள் அந்நிலத்தில் தங்களது தலைவனையே வழிப்பட்டனர் என்றும் நாம் கருத முடிகின்றது(இதனைக் குறித்து ஆராய்ச்சிகள் தேவை). தமிழில் இந்திரன் என்றால் தலைவன் என்றே பொருள் தரும்.

தேவேந்திரன் – தேவர்களின் தலைவன்.
கஜேந்திரன் – யானைகளின் தலைவன்.
நரேந்திரன் – மனிதர்களின் தலைவன்.

எனவே தலைவன் என்றப் பொருளிலே வேந்தன் என்றப் பெயர் மருத நிலக் கடவுளுக்கு வழங்கப்பட்டு இருக்கின்றது.

அதைப்போலவே கடல் சூழ்ந்த நெய்தல் நிலத்து கடவுளாக வருணன் அறியப்படுகின்றான்.

இப்பொழுது வேறு சில கேள்விகள் தோன்றலாம் ‘இந்திரன் மற்றும் வருணன் ஆகியோர் வேதங்களில் வருகின்றனரே…அவர்கள் ஆரியக் கடவுளர் என்றும் கூறுகின்றனரே. ஆனால் தமிழ் திணைக் கடவுளரிலும் அப்பெயர்கள் வருகின்றதே. இவ்விரண்டு கடவுளரும் ஒருவரே ஆவரா அல்லது இருவரும் வேறானவரா” என்றக் கேள்வி நிச்சயம் தோன்றும். இதற்கு விடையினை நாம் வரும் பதிவுகளில் காண முயற்சிக்கலாம்.

இப்போதைக்கு இதுவே பண்டைய காலங்களில் தமிழ் மக்கள் தம்மிடையே கொண்டு இருந்த வழிப்பாட்டு முறைகள் ஆகும்.

ஞாயிறு, 22 ஜூலை, 2012

ஏன் வரலாறு

ஏன் வரலாறு... அதுவும் அசுர வேகத்தில் அறிவியல் வளர்ந்து கொண்டு இருக்கும் இந்த காலத்தில் நாளை என்ன நடக்கும் என்பதை குறித்து ஆய்வு செய்யாமல் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால் என்ன நடந்தது, என்ன நடந்து இருக்கும் என்பதைக் குறித்த ஆய்வு ஏன்... இதனால் என்ன பயன்? போன்ற கேள்விகள் பொதுவாக 'வரலாறு' என்று கூறினாலே மக்களின் மனதில் எழுவது இயல்பே. இந்நிலையில் 'வரலாறு முக்கியம் அமைச்சரே' என்று கூறுவோர் மக்களின் இக்கேள்விகளுக்கு விடையினை கூற கடமைப்பட்டு உள்ளனர். அதன் விளைவாகவே இந்தப் பதிவு.

ஒரு மனிதன் இரவிலே ஒரு மின்விளக்கின் கீழ் எதையோ நீண்ட நேரம் தேடிக் கொண்டு இருந்தான். அதனை கண்டுக் கொண்டு இருந்த விவசாயி ஒருவர் 'ஐயோ பாவம் எதையோ தொலைத்து விட்டு தேடிக் கொண்டு இருக்கின்றார் போல் இருக்கின்றதே. நாமும் போய் சற்று உதவுவோம்' என்று எண்ணியவாறே தேடிக் கொண்டு இருக்கும் அந்த மனிதனின் அருகில் சென்றார். விசாரித்துப் பார்த்த பொழுது அந்த மனிதன் தான் வாங்கிய சம்பளத்தை தனது பையில் வைத்து இருந்ததாகவும் அதனை தற்போது காணவில்லை என்றும் எனவே வழியில் எங்காவது தவறவிட்டு இருக்கலாமோ என்றுத் தேடிக் கொண்டு இருப்பதாகக் கூறினான்.

அதனைக் கேட்ட விவசாயியோ "சரி ஐயா...ஆனால் நீண்ட நேரமாக ஒரே இடத்திலேயே தேடிக் கொண்டு இருக்கின்றீர்களே. இங்கே தான் தொலைத்தீர்கள் என்று நிச்சயமாக தெரியுமா?" என்றார்.

அதற்கு அந்த மனிதன் "இல்லை இல்லை... நான் இங்கே தொலைக்கவில்லை... அதோ அங்கே இருள் சூழ்ந்து இருக்கின்றதே அந்தப் பாதையில் தான் தொலைத்து இருக்க வேண்டும். ஆனால் இங்கே வெளிச்சம் இருப்பதால் இங்கேயே தேடிக் கொண்டு இருக்கின்றேன்" என்று பதில் கூற அந்த விவசாயியோ தனது தலையில் அடித்துக் கொண்டார். "ஐயோ அப்பனே..தொலைத்து ஒரு இடம்..தேடுவது மற்றொரு இடம்...பின் எவ்வாறு ஐயா உனது பொருள் உனக்குக் கிட்டும். ஒன்று இருளில் சென்று தேடு. அல்லது தொலைத்த பொருளை மீண்டும் ஈட்டிக் கொள். அதுவன்றி நீ இங்கேயே தேடிக் கொண்டு இருப்பது கால விரயமே அன்றி வேறில்லை" என்றுக் கூறிக் கொண்டு அவ்விடம் விட்டு அகன்றார். அந்த மனிதனும் சற்று சிந்தித்து சரி சென்ற பொருள் செல்லட்டும் நாம் மீண்டும் பொருள் ஈட்டிக் கொள்ளலாம் என்று எண்ணிக் கொண்டு நகர்கின்றான். சில நாட்கள் நகர்கின்றன.

மீண்டும் அதே விளக்கின் அடியில் அந்த மனிதன் எதையோ தேடிக் கொண்டு இருப்பதை விவசாயி காணுகின்றார். "அட என்னப்பா இது...இன்றும் இம்மனிதன் எதையோ தேடிக் கொண்டு இருக்கின்றானே" என்று அவன் அருகே சென்று விசாரிக்க மீண்டும் அவன் பணத்தினை தொலைத்து இருப்பது அவருக்கு தெரிய வருகின்றது. அட என்னடா இது... ஒவ்வொரு முறையும் இவன் தொலைத்துக் கொண்டு இருக்கின்றானே என்று சற்றே அந்த விவசாயி ஆராய, அம்மனிதனின் பையில் சிறு துளை ஒன்று இருப்பது அவருக்கு தெரிய வருகின்றது. அதன் மூலமாகவே அவன் ஈட்டிய பொருள் அனைத்தும் கீழே விழுந்து இருக்க வேண்டும் என்றும் அறிந்த அவர் முதலில் அவனை அவன் பையில் இருந்த துளையை சரி பார்க்க சொல்லிவிட்டு கிளம்ப அவனும் அவனிடம் இருந்த தவறினை திருத்திக் கொள்ள ஆரம்பிக்கின்றான். நிற்க.

சற்றே பிரபலமான கதைதான் அல்லவா. முல்லாவின் கதை என்றே எண்ணுகின்றேன். இதை நாம் இங்கே பார்த்ததற்கு ஒரு காரணம் இருக்கின்றது.

முதலில் அந்த மனிதன் அவனுடைய பொருளினை இழக்கின்றான். ஆனால் ஏன் அந்தப் பொருளினை அவன் இழந்தான் என்பதனைப் பற்றி அவன் சிந்திக்கவில்லை. அதன் விளைவாகவே அவன் மீண்டும் அவனுடைய பொருளினை இழக்க வேண்டிய நிலை வந்தது. ஒரு வேளை அவன் இரண்டாம் முறையும் அவனின் இழப்பிற்குரிய காரணத்தைப் பற்றி ஆராயவில்லை என்றால் மீண்டும் மீண்டும் அவனுடைய பொருளினை அவன் இழந்துக் கொண்டே இருப்பான். அவன் எவ்வளவு கடினமாக உழைத்தாலும் சரி, எவ்வளவு முயன்றாலும் சரி அவனுடைய இந்த நிலை மாறாது. வெறுமையே அவனிடம் சேர்ந்து இருக்கும். காரணம் அவனின் துயருக்குரிய காரணியை அவன் அறியவில்லை. அறிந்தால் தானே அதற்குரிய பதிலினை அவனால் தேட முடியும். இங்கு தான் வரலாற்றின் தேவை வருகின்றது. வரலாறு என்பவை நமக்கு முந்தைய காலத்தில் நடந்த சம்பவங்களே அன்றி வேறல்ல என்பதனை நாம் அனைவரும் அறிவோம். இப்பொழுது ஒரு செயல் நிகழ்ந்து இருக்கின்றது. அதனால் நமக்குத் தீங்கும் வந்து இருக்கின்றது. இந்நிலையில் ஏன் அந்த செயல் நிகழ்ந்தது அதனால் நமக்கு ஏன் தீங்கு வந்தது என்று ஆராய்ந்தால் தானே பிற்காலத்தில் மீண்டும் அதே துயர் நமக்கு வாராது நம்மை நாமே காத்துக் கொள்ள முடியும். அவ்வாறு அல்லாது 'சரி வந்தது வந்துடுச்சி...இனி நடப்பதைக் காண்போம்' என்றே நாம் இருந்து விட்டால் மீண்டும் அந்தத் துயர் நம்மிடம் வாராது போய்விடுமா என்ன? அவ்வாறு அத்துயர் மீண்டும் நம்மிடம் வந்தால் அதனை சமாளிக்க நமக்கு அவ்வேளையில் வழிகளும் தான் கிட்டிடுமா என்ன? இல்லை தானே.

ஒருவன் முதல் முறையாக சாலையில் உள்ள பள்ளத்தில் அறியாது விழுகின்றான். இது ஒரு செயல். சரி தெரியாது விழுந்து விட்டான். மன்னித்து விடலாம். ஆனால் மீண்டும் மீண்டும் அதே பாதையில் அதே பள்ளத்தில் அவன் விழுந்தான் என்றால் அச் செயலினை நாம் என்ன என்று சொல்வது. 'அந்த சாலையில் பள்ளம் இருக்கின்றது அதில் நாம் ஏற்கனவே விழுந்து இருக்கின்றோம் எனவே பார்த்துச் செல்ல வேண்டும் என்று அவனின் அனுபவத்தில் இருந்து அவன் அறிந்துக் கொள்ளாததை எவ்வாறு கூறுவதுஅவனின் அறியாமை என்றா...அல்லது மடத்தனம் என்றா?. வரலாற்றில் இருந்து அவன் கற்றுக் கொள்ளவில்லை என்றே நாம் கருத வேண்டி இருக்கின்றது.

இன்று நம் நிலையும் அவ்வாறு தான் இருக்கின்றது. முன்னர் வணிகத்துக்காக வந்தவர்கள் நம்மை அடிமையாக்கி ஆண்டார்கள். இன்றும் வணிகம் மூலமாக நம்மை மறைமுகமாக அடிமையாக்கி ஆண்டுக் கொண்டு இருக்கின்றனர். மேலும் என்றோ ஒரு காலத்தில் ஏதோ ஒரு காரணத்திற்காக நம்மில் பெரும்பான்மையினரான மக்களை தாழ்த்தப்பட்டோர் என்று சமயங்களைக் கொண்டு சிலர் அடக்க இன்றும் அந்த நிலை தொடருகின்றது. அந்த நிலையும் மாற வேண்டும் என்றால் அந்த நிலை எவ்வாறு தோன்றியது, ஏன் தோன்றியது என்பதையும் நாம் காண வேண்டும். அவற்றைக் காணாதுவிடின் பிற்காலத்தில் மீண்டும் அந்த நிலைகள் தலைத் தூக்கலாம். அந்த வேளையில் நமக்கு பிந்தைய சந்ததியினர் ஏன் அவர்கள் அந்தப் பிரச்சனைகளை சந்திக்கின்றனர் என்பதனை அறியாமலே மீண்டும் இன்னல் பட ஆரம்பிப்பர். அவற்றைத் தவிர்க்கத் தான் நாம் வரலாற்றினைப் பார்க்க வேண்டி இருக்கின்றது. வரலாற்றிடம் இருந்து கற்று அதனை கற்பிக்கவும் வேண்டி இருக்கின்றது.

"வரலாற்றில் இருந்து கற்றுக் கொள்ளாமல் அனைத்து பிரச்சனைகளுக்கும் மீண்டும் மீண்டும் புதிதாய் விடையினைத் தேடும் பயணத்தை நாம் மேற்கொள்ள நம்முடைய வாழ்நாளில் நேரம் இல்லை. நம்முடைய பிரச்சனைகள் பெரும்பாலானவை பழமையானவை. எனவே அவற்றுக்கான விடையினை வரலாற்றின் உதவியோடு தேடுவதே பலன் தரும் செயலாக அமையும்." எனவே வரலாறு என்பது நாம் அனைவரும் கண்டிப்பாக அறிந்துக் கொள்ள வேண்டிய ஒன்றாக உள்ளது.

ஈழத்தில் மைத்ரேய புத்தன்


ஈழம் அமைதியாக இருந்தது...!!!

 இரு மங்கிலும் மரங்கள் அணிவகுத்து நிற்க அவற்றைப் பிரித்துக் கொண்டே நீண்ட ஒரு சாலையும் பயணித்தது கண்ணுக்கு எட்டிய தூரம் வரை. அந்த சாலையில் தான் இன்று பயணித்துக் கொண்டு இருந்தான் மைத்ரேய புத்தன்.

"பாவம் பெருகினால் வருவான் மைத்ரேயன்" என்றே கூறுகின்றன புத்த சமய நூல்கள். உலகில் மக்கள் அனைவரும் தவறிழைக்கும் பொழுது அவர்களைத் திருத்த புத்தன் வருவான் என்றே புத்த சமயமும் கூறுகின்றது. அவற்றின் கூற்றுகள் பொய்யாகுமோ. வந்து தான் இருந்தான் மைத்ரேயன்....ஈழத்திற்கு.

புத்த உலகமே எதிர்பார்த்து காத்துக் கொண்டி இருந்த மைத்ரேயனை மௌனமே வரவேற்றது ஈழத்தில். அவன் திரும்பிய இடம் எங்கும் ஒரே அமைதி...மயான அமைதி.

மைத்ரேயன் "அமைதி நல்லது என்றேன்...மனிதன் அதை அவனுக்கு ஏற்றார்ப் போல் மொழி பெயர்த்து விட்டான்...இப்பொழுதும்" என்று தனக்குள்ளே எண்ணிக் கொண்டே அவனது பாதையில் தொடர்ந்து பயணித்தான்.

சிறிது தொலைவில் மரங்கள் எல்லாம் வழி கொடுக்க பரந்து விரிந்து இருந்த புல்வெளி ஒன்றை எட்டியதோடு முற்றுப் பெற்றது மைத்ரேயன் பயணித்த பாதை.

ஒரு காலத்தில் அது அழகிய சமமான ஒரு புல்வெளியாக இருந்து இருக்கக்கூடும். ஆனால் இன்று அது அவ்வாறு இருக்கவில்லை. புதிதாய் பல குழிகள் அதில் முளைத்து இருந்தன. மைத்ரேயன் அந்த புல்வெளியை சற்று உற்றுப் பார்த்தான். அந்த புல்வெளிகளின் நடுவே சில புத்த சிலைகள் நின்றுக் கொண்டு இருந்தன. அவற்றைத் தாண்டி சிறிது தூரத்தில் இராணுவ வீரன் ஒருவன் சில சடலங்களை ஒரு குழியில் தள்ளி மூடிக் கொண்டு இருந்தான்.
மைத்ரேயன் அந்த சிலைகளை நோக்கி நடக்க ஆரம்பித்தான். விரைவில் அந்த சிலைகளையும் வந்து அடைந்தான். கண்கள் மூடிய புத்த சிலைகள் அவனது வருகையை அறியாது கண்களை மூடியே இருந்தன. மைத்ரேயன் சிரித்தான்.


"புத்தர்களே விழியுங்கள்" என்றான் மைத்ரேயன்.

அதுவரை கண் மூடி இருந்த முதல் சிலை மெதுவாக "யார்...யார் என்னை அழைத்தது..." என்றுக் கூறியவாறே அதனது ஒரு கண்ணைத் திறந்துப் பார்த்தது.

"மைத்ரேயன்" என்றான் மைத்ரேயன்.

"மைத்ரேயனா... அதற்குள்ளா... காலம் அவ்வளவு கெட்டு விட்டதா" என்று கூறிக்கொண்டே ஆச்சர்யத்துடன் அதன் இரு கண்களையும் திறந்துக் கொண்டு மைத்ரேயனை நோக்கியது முதல் புத்த சிலை. அதற்குள்ளே "மைத்ரேயன்" என்ற வார்த்தை மற்ற புத்த சிலைகளின் காதுகளிலும் விழ அவைகளும் மைத்ரேயனை நோக்கி ஆர்வத்துடன் திரும்பின.

"ஆம்...மைத்ரேயன் தான்...!!! கண்கள் மூடிக் கொண்டு இருந்தால் காலங்கள் ஓடுவது தெரியாமலே தான் போய் விடும் புத்தர்களே...ஆனால் நாம் கண்கள் மூடி இருப்பதற்கு வரவில்லையே. அவ்வாறு இருக்க நீங்கள் கண்ணை மூடிக் கொண்டு இருக்கும் காரணம்?" என்றான் மைத்ரேயன்.

புத்த சிலைகள் ஒன்றை ஒன்று குற்ற உணர்ச்சியுடன் பார்த்துக் கொண்டன. பின்னர் அவற்றுள் ஒரு புத்த சிலை ஆரம்பித்தது.

"மனிதர்கள் மைத்ரேயா...மனிதர்கள்...!"

"மனிதர்களா..?" வினவினான் மைத்ரேயன்.

"ஆம்... மைத்ரேயா...!!! அவர்களுக்கு புத்தன் தேவை...ஆனால் அவனது கருத்துக்கள் தேவை இல்லை. பிறப்பிலே தோன்றி இறப்பிலே வாழ்க்கை முடிந்து விடுவதாகவே எண்ணிக் கொண்டே காலத்தை அவர்கள் கடத்துகின்றனர். இந்நிலையில் கண்களை மூடிக் கொண்டவர்கள் புத்தர்கள் ஆக்கப்படுகின்றனர். கண்களைத் திறந்து கொண்டவர்கள் பித்தர்கள் ஆக்கப்படுகின்றனர்.... எனவே"

"எனவே...???"

"எனவே... புத்தம் தான் இல்லை.... புத்தனாவது இருக்கட்டுமே என்று நாங்களும் கண்களை மூடிக் கொண்டோம். இதோ புத்தனாக நின்றுக் கொண்டு இருக்கின்றோம். கண்கள் மூடிய புத்தர்கள் தாம் இவர்களுக்குத் தேவை" என்றுக் கூறி முடித்தது ஒரு புத்த சிலை.

மைத்ரேயன் சிரித்தான்.

"புத்தமின்றி புத்தன் ஏது புத்தர்களே... அவ்வாறு அவன் நிலைத்து இருக்க வேண்டிய தேவையும் யாது? . மனிதன் மனம் கல்லாய் போனது... அதனால் புத்தனும் கல்லானோம் என்பது எங்கனம் பொருந்தும் புத்தர்களே. புத்தன் மனிதத்தில் இருக்கின்றான். மனிதம் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கின்றது. அவ்வாறு ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கும் புத்தனை அவனை அறியச் செய்து மனிதத்தை தழைக்கச் செய்ய வேண்டியது புத்தனின் கடமையா அல்லது அவனை அறியாமை இருளிலேயே வைத்து இருப்பது புத்தனின் கடமையா?... சிந்தியுங்கள் புத்தர்களே... உலகம் இன்று எங்கேயோ சென்றுக் கொண்டு இருக்கின்றது... ஆனால் உண்மையைக் கூற வேண்டும் என்றால், அதன் இயக்கத்தின்
அடிப்படையான அன்பினை மட்டும் செல்லும் வழியில் எங்கேயோ தொலைத்து விட்டு அது தடுமாறிக் கொண்டு இருக்கின்றது. அன்பிற்கே ஏங்குகின்றது மனித இனம். அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் புத்தர்களே... அன்பினைக் கொண்டு செல்லுங்கள்... அன்பினையே கொண்டு செல்லுங்கள். மக்களுள் இருக்கும் புத்தன் உங்களை அன்பின் மூலமாகவே அறிந்துக் கொண்டு விடுவான். உலகே அன்பின் மயமாகும். மனிதம் தழைக்கட்டும் புத்தர்களே. கல்லாய் இருப்பதற்கு நாம் வரவில்லை. நாம் வந்ததிற்கு ஒரு காரணம் இருக்கின்றது. அன்பாய் பரவுங்கள்... அன்பை பரப்புங்கள்...அன்பே புத்தம். அன்பே புத்தன்.!!!" என்று மைத்ரேயன் கூறி முடிக்க அதுவரை கல்லாய் இருந்த புத்தர்கள் அனைவரும் மைத்ரேயனின் கூற்றினை மதித்து ஒவ்வொரு திசையாக பரவுகின்றனர். அன்பினை ஏந்திக் கொண்டே.
 மைத்ரேயன் சற்று நேரம் அவர்களையே கண்டுக் கொண்டு நிற்கின்றான். அப்பொழுது அவன் பின்னே இருந்து ஒருக் குரல் அவனை நோக்கி ஒலிக்கின்றது.

"ஒய்... யாரது அங்கே"

மைத்ரேயன் திரும்பிப் பார்க்கின்றான். சிறிது தொலைவில் சடலங்களை ஒரு குழியில் தள்ளி புதைத்துக் கொண்டு இருந்தானே அந்த இராணுவ வீரன் மைத்ரேயனை நோக்கி வந்துக் கொண்டு இருந்தான். அவன் தான் அழைத்தும் இருக்க வேண்டும்.

"நீ யாரப்பா..." என்றார் மைத்ரேயன்.

"நான் என் நாட்டு இராணுவ வீரன்...உடையினைப் பார்த்து தெரியவில்லையா உமக்கு" என்றான் அவன்.

"இல்லையப்பா...தெரியவில்லை. சரி...சற்று தொலைவில் சிலரை புதைத்துக் கொண்டு இருந்தாயே அவர்கள் யார்?" தொடர்ந்தார் மைத்ரேயன்.

"ம்ம்ம்... எதிரிகள்..." என்றுக் கூறியவாறே அந்த இராணுவ வீரன் ஒரு ஏளனச் சிரிப்பினை உதிர்த்தான்.

"தவறு...அவர்களும் மனிதர்கள்" என்றார் மைத்ரேயன்.

"மனிதர்களா...!!!" சிரித்தான். "இப்பொழுது அவர்கள் சடலங்கள். இறந்து விட்டார்கள். இனி அவர்களைப் பற்றிப் பேசி என்ன பயன்"

"தவறு இளைஞனே. மரணம் முடிவுமல்ல... தீர்வும் அல்ல...!!! இதனை அறியாது உயிர்களைப் பறிப்பது சரியான செயல் அல்ல." என்றார் மைத்ரேயன் அமைதியாய்.

"உமக்குப் புரியவில்லை. இந்த உலகில் சரியான செயல் என்றும் தவறான செயல் என்றும் எதுவும் இல்லை... சரி தவறு என்பதெல்லாம் மாயை. நாங்கள் வென்று விட்டோம். அவ்வளவு தான்" என்றான் அந்த இராணுவ வீரன் சிறிது கோபத்துடன்.

"இளைஞனே... சரி என்றும் தவறென்றும் ஒன்றுமில்லை என்பது, உன் மனதினில் இருக்கும் மிருகத்தினை எந்தக் கட்டுப்பாடும் இன்றி நீ விடுவிக்கும் ஒரு செயலாகும். வெறி பிடித்த ஒரு மிருகம் அது காணும் அனைத்தையும் அழித்து விட்டு பின்னர் தன்னை ஏவியவனையே தாக்கி அழிக்க கூடும். அவ்வாறே தான் உன்னுடைய மனமும். அதன் போக்கிற்கு உன்னை என்று அது அலைக்கழிக்க ஆரம்பிக்கின்றதோ பின்னர் என்ன நிகழும் என்பது உன்னுடைய கையில் இல்லாது போய் விடும். மனம் அவ்வாறு செய்யும் வல்லமைப் பெற்றது தான். அதனிடம் சற்று சூதானமாக இரு. உன்னை மனிதன் ஆக்குவதும் மனம் தான். மிருகம் ஆக்குவதும் மனம் தான்" என்று மைத்ரேயன் கூறி முடிக்க அந்த இராணுவ வீரன் அவனது பொறுமையை இழக்கின்றான்.

"போதும் உங்கள் உபதேசங்கள்... எல்லாம் எங்களுக்குத் தெரியும். சொல்லுங்கள் நீங்கள் யார்"

"புத்தன்"

இராணுவ வீரன் சிரிக்கின்றான்.

"புத்தனா...!!! பின்னர் எதற்காக ஐயா வீழ்ந்த இம்மக்களுக்காக குரல் கொடுக்கின்றீர். இவர்கள் புத்த சமயத்தினர் அல்லவே"

"புத்தன் அனைத்து மக்களுக்கும் புத்தனே. அவர்களும் எம்மக்களே" என்றார் மைத்ரேயன் அமைதியாக.

"இல்லை....புத்தன் எங்களவன்..."

"உங்களவனாக மட்டும் இருப்பவன் புத்தன் அல்ல. புத்தனை சுருக்காதீர்கள்....!!!"

"போதும் நிறுத்தும். புத்தனை கேலி செய்யும் நீர் நிச்சயம் புத்தனில்லை. யார் நீ ... உண்மையைக் கூறும்" என்றான் அந்த இராணுவ வீரன் கோபத்துடன்.

"புத்தன்" என்றான் மைத்ரேய புத்தன் மீண்டும் அமைதியாய்.

"பொய்...!!!" என்று முழங்கினான் அந்த இராணுவ வீரன்.

புத்தன் மறுமொழி கூறவில்லை. அதற்கு முன்னர் முழங்கி இருந்தது அந்த இராணுவ வீரனின் துப்பாக்கி.

புத்தன் மௌனமாகி இருந்தான்.

கண் திறந்த புத்தர்கள் அவர்களுக்கு தேவை இல்லை தான்!!!

ஆனால்,
பனிக் காலத்தில் உலகம் முழுவதும் பனி நிறைந்து இருந்தாலும் வேர்கள் மண்ணுக்கு அடியில் வேரூன்றி இருக்கும். அவற்றுக்கென வசந்தமும் மலரும். அன்று பூக்கள் மீண்டும் பூக்கும். அதுப்போல புத்தன் அன்பாய் நாம் மனதில் புதைந்து இருப்பான். என்று நம் மனம் வசந்தத்தை உணருகின்றதோ அப்பொழுது அன்பாய் அவன் ஊற்றெடுப்பான்.

அன்பே புத்தன்!!!

சனி, 21 ஜூலை, 2012

இயேசுவின் இரண்டாம் வருகை

முன் குறிப்பு:


அனைத்து சமயங்களுக்குள்ளும் பல ஒற்றுமைகள் இருக்கின்றன என்று நாம் கண்டுக் கொண்டு இருக்கின்றோம். இப்பொழுது ஒரு குறிப்பிட்ட ஒற்றுமையைப் பற்றி நாம் காணலாம்.

இறைவனின் உலக வருகை… அதாவது சமயங்கள் சில, அவற்றின் இறைவன் உலகில் எப்பொழுது பாவங்கள் பெருகுகின்றதோ அப்பொழுது மக்களைக் காப்பாற்ற மீண்டும் உலகினில் தோன்றுவான் என்றே நம்புகின்றன.

புத்தம் – மைத்ரேய புத்தனுக்காக காத்துக் கொண்டு இருக்கின்றது.

இந்து – கல்கிக் காக காத்துக் கொண்டு இருக்கின்றது.

கிருத்துவம் – கிருத்துவின் இரண்டாம் வருகைக்காக காத்து இருக்கின்றது.

இந்தக் கடவுளரின் வருகை என்பது ஒரே கடவுளை குறிப்பதா அல்லது அத்தனைக் கடவுளும் ஒவ்வொரு முறையாக உலகின் மக்களின் பாவம் தீர்க்க தனித் தனியே வரப்போகின்றனரா என்பது எனக்குத் தெரியவில்லை. சிந்திப்போம். விடைக் கிட்டினாலும் கிட்டும்.

இருந்தும் அவர்கள் உலகிற்கு வருவதனைப் போலவும் அவர்கள் வந்தால் என்ன நடக்கலாம் என்றும் எண்ணியே இந்தக் கற்பனைப் பதிவுகள்.

இயேசுவின் இரண்டாம் வருகை:


ஊரெங்கும் ஒரே பேச்சு
”இன்று இயேசு வருகின்றாராம்!!!”
ஈராயிரம் ஆண்டுகள் காத்திருப்பு
முடிந்தது என்று தேவதூதன் சொன்னானாம்!!!
**********************************************
என்றோ மறந்த வசனங்களை
நினைவூட்டிக் கொண்டே
மந்தையோடு மந்தையானேன்…
மேய்ப்பவனை எதிர்பார்த்தே!!!
*********************************************
“அதோ வருகின்றார்…” என்றான் ஒருவன்.
உறைந்திருந்த நேரம் விரையத் தொடங்கியது…
திசைகள் எட்டும் ஒன்றாக அவரும் வந்தார்
பாவிகளை நாடி காவியில்…திருநீறோடு!!!
**************************************************
பாவீகளின் ரட்சகன் காவியிலா?
“யார் நீர்” என்றேன்
“இயேசு” என்றார்
“சிலுவை சுமக்காதவர் இயேசு அல்லர்” என்றேன்.
சிரித்தார்…”மீண்டுமா”
அருகில் இருந்த மலையில் புதிதாய் பூத்ததொரு சிலுவை.
இறைவன் மூன்றாம் வருகைக்கு ஆயுத்தமானார்.
**********************************************
நான் இரண்டிலே நின்றிருந்தேன்.
உயிர்த்தெழுந்தால்
மூன்றாக்கி கொள்ளலாம்.
************************************

பின்குறிப்பு:

என்ன இயேசு திருநீறோடு வந்தாரா? இயேசுவைக் அவமதிக்கின்றீர்களா என்று சில நண்பர்கள் எண்ணினீர்கள் என்றால் இந்தப் பதிவுகளை முதலில் படித்து விடுங்கள். படித்துவிட்டு தங்களது கருத்துக்களைத் தெரிவியுங்கள்.

கிருத்துவமும் திருநீறும்
என் கடவுள் உன் கடவுள் நம் கடவுள்

ஞாயிறு, 15 ஜூலை, 2012

பண்டைய கால நாகரீகங்களுள் வழிபாடுகள்

அனைத்து சமயங்களும் ஒன்றோடொன்று தொடர்புக் கொண்டவையாகவே இருக்கின்றன என்றும் அவை அனைத்தையும் இணைத்துக் கொண்டு சில விடயங்கள் பொதுவாக இருக்கத் தான் செய்கின்றன என்றும் நாம் கூறினோம் என்றால் அவற்றுக்கு தக்க சான்றுகளையும் நாம் காண்பிக்க வேண்டி இருக்கின்றது. அவ்வாறு ஒற்றுமைகளை நாம் காண்பிக்கத் தவறினோம் என்றால் நமது கூற்றுகள் வெறும் பெயரளவுக் கூற்றுக்களாகவே சென்று விடும். எனவே இப்பொழுது நமது பயணத்தில் மேலும் சில ஒற்றுமைகளை நாம் காண வேண்டி இருக்கின்றது.

ம்ம்ம்ம்... இம்முறை நாம் எங்கிருந்து பயணத்தை தொடங்கலாம்...? சரி... சிந்து சமவெளியில் இருந்தே தொடங்கலாம்... சென்ற முறை நாம் சிந்து சமவெளியை பற்றி கண்டப் பொழுது அந்த நாகரீகம் தமிழர்களின் நாகரீகம் என்றும் அங்கிருந்தே சென்ற மக்கள் மேசொபோடமியா மற்றும் சுமேரிய நாகரீகத்தினை உருவாக்கினர் என்றக் கருத்துக்களை மையமாக வைத்தே கண்டதால் அங்கே மக்கள் கொண்டு இருந்த வழிப்பாட்டு முறையைப் பற்றி நாம் காண முடியாது சென்று விட்டது. கவலை இல்லை...அவற்றை இப்பொழுது காண்போம்.

சிந்து சமவெளி பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சிகள் மூலமாக பல விடயங்கள் நம்முடைய பார்வைக்கு வந்து உள்ளன. முதலில் அந்த இடங்களில் அதிக அளவில் நினைவுக்கற்கள் கிடைக்கப்பட்டு உள்ளன. நாம் முன்னரே கண்டு இருக்கின்றோம் கல்லினை நட்டி வைத்து வழிபடுவது தமிழர்களின் வழக்கம் என்று. இதனையே ஆராய்ச்சியாளர் இரா. ஜெசிந்தர் எபினேசர் என்பவரும் அவரது 'நினைவுக்கல் வழிப்பாடும் விவிலியமும் என்ற நூலில் பின் வருமாறு கூறுகின்றார்

"அக்கற்கள் ஆனவை பொது நன்மையின் வடிவாக விளங்கும் இறைவனையும் பொது நன்மையின் பொருட்டு தன்னையே தியாகம் செய்த மனிதனையும் நினைத்துக் கல் கட்டி வழிபடுவது நினைவுக்கல் வழிப்பாடாகும்".

மேலும் இந்த நினைவுக் கல் வழிபாடே இசுலாமிய சமயத்திலும் காணப்படுகின்றது என்றே 'இசுரவேளர் சமயம்' என்ற தனது நூலில் ஞான ராபின்சன் அவர்கள் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.


"பழங்கால அரபுக் கோவில்களில் அப்புனிதக் கல், தொழுகைக்கு இன்றியமையாத ஒன்றாகக் கருதப்பட்டது. இக்கல் ஒரு குறிப்பிட்ட கடவுளைக் குறிப்பதாக இராமல் அனைத்துக் கடவுளையும் குறிப்பிட்டு நின்றது. கற்களின் மேல் இரத்தம் பூசப்பட்டது."


இந்த நினைவுக் கல் வழிபாட்டு முறை தான் சமணம் மற்றும் புத்த சமயங்களில் 'தூபி' என்று பெயர்பெற்றும் தமிழ் சங்க இலக்கியங்களில் 'கந்து' என்று பெயர் பெற்றும் விளங்கிக் கொண்டு இருக்கின்றது என்றும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

அட என்னய்யா இது நினைவுக் கல் அப்படின்னு கேட்குறீங்களா... அட அது வேற ஒண்ணும் இல்லைங்க இன்று நாம் சிவலிங்கம் என்ற பெயரில் வழிபடுகின்றோமே அதேக் கல் வழிப்பாட்டு முறை தான் அந்தக் காலத்தில் நினைவுக் கல் வழிபாடு என்ற பெயரில் இருந்து இருக்கின்றது.

மக்கள் அனைவருக்கும் பொதுவான இறைவனை கல்லினை நட்டி வைத்து வணங்கி வந்தனர். இந்தப் பழக்கம் அனைத்து நாகரீகங்களிலும் பொதுவாக இருந்தமையை நாம் முந்தையப் பதிவுகளில் ஏற்கனவே கண்டு இருக்கின்றோம். ஆனால் அக்காலத்தில் சிவலிங்கம் என்றப் பெயர் தோன்றி இருக்காத காரணத்தினால் நாம் அக்கல் வழிப்பாட்டு முறையினை நினைவுக் கல் வழிப்பாட்டு முறை என்றே நாம் இந்தப் பதிவில் அழைக்கின்றோம்.

சரி... நினைவுக் கல் வழிபாடு சிந்து சமவெளி மக்களிடம் இருந்தது... சுமேரிய மக்களிடமும் இருந்தது... அதனைப் பற்றிய குறிப்புகள் விவிலியத்திலும் காணப்படுகின்றது என்பதனையும் நாம் முந்தையப் பதிவுகளில் கண்டு இருக்கின்றோம். இப்பொழுது இன்னொரு ஒற்றுமைகளையும் நாம் கண்டு விடுவோம்...

சிந்து சமவெளியில் கண்டெடுக்கப்பட்ட படிமங்களில் பல பெண் தெய்வங்களின் வடிவங்கள் கிடைக்கப்பட்டு உள்ளன. அவற்றில் பல உருவங்கள் கொம்பினை உடைய உருவங்களாகவே காணப்படுகின்றன. கொம்புகள் அந்த உருவங்களின் தெய்வத்தன்மையை உருவகப்படுத்துவதாகவே அறிஞர்கள் கருதுகின்றனர். இதில் ஆச்சர்யம் என்னவென்றால் அத்தகைய கொம்பினை உடைய உருவங்கள் சுமேரிய நாகரீகத்திலும் சரி விவிலியத்திலும் சரி ஒன்று போலவே நமக்கு கிட்டப்பெருகின்றன. இதனை

"சிந்துவெளியில் கொம்புடன் காணப்படும் உருவங்களை ஒத்து, சுமேரியாவிலும் பாபிலோனியாவிலும் கொம்புடைய உருவங்கள் காணப்படுகின்றன. அங்கு இக் கொம்பு அரசனையோ, குருவையோ, கடவுளையோ குறிப்பதாக கொள்ளப்பட்டு இருக்கின்றது." என்று சான் மார்ஷல் அவர்கள் அவரது ;மோகஞ்சடாரோவும் சிந்து சமவெளி நாகரீகமும் என்ற புத்தகத்தில் கூறி உள்ளது மூலமும் நாம் அறிந்துக் கொள்ளலாம்.

மேலும் இன்றும் கூட இந்தியப் பழங்குடி மக்களுள் தலைவராக உள்ளவர்கள் அவர்களது தலைமைக்கு அடையாளமாக எருமைக் கொம்பைத் தலையில் அணிந்து இருப்பதும் நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டிய ஒன்றாகவே இருக்கின்றது என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். நிற்க


இன்றும் நம்முடைய சமுகத்தில் ஒரு சொற்தொடர் நிலவிக் கொண்டு இருக்கின்றது மேலே உள்ள வாக்கியத்தினை மெய்ப்பிப்பது போல.

"நீ என்ன பெரிய கொம்பனா டே...? "உனக்கு மட்டும் என்னவே ரெண்டு கொம்பா மொளச்சி இருக்கு" என்ற வாக்கியங்கள் தான் அவை. உற்றுப் பார்த்தோம் என்றால் அவற்றின் அர்த்தம் 'நீ என்ன பெரியவனா' என்றே வருகின்றது. அதாவது கொம்பினை வைத்து இருக்கின்றவன் பெரியவன் என்ற மறைமுகப் பொருளினையே அவை தருகின்றன. இந்தச் சொற்தொடர் என்றில் இருந்து நம்மிடையே இருக்கின்றன... தெரியவில்லை...இருந்தும் இவையும் சிந்தித்துப் பார்க்கத் தக்கவையே.



சரி... சிந்துசமவெளியில் கிடைக்கும் கொம்புகள் உடைய உருவங்கள் சுமேரிய நாகரீகத்திலும் பாபிலோனிய நாகரீகத்திலும் கிடைக்கின்றன...ஆனால் விவிலியத்திலும் இவற்றைப் பற்றியக் குறிப்புகள் உள்ளன என்றுக் கூறினீர்களே அது என்ன என்றுக் கேட்கின்றீர்களா... சரிதான் அதையும் கண்டு விடலாம். முந்தையப் பதிவுகளில் நாம் கண்டது போலவே மீண்டும் விவிலியத்தின் பழைய ஏற்பாட்டில் உள்ள சில பக்கங்களை நாம் இதற்காக திருப்ப வேண்டி இருக்கின்றது.

"யோசேப்பின் அலங்காரம் தலையீற்றுக் காளையினுடைய அலங்காரத்தைப் போலவும் அவன் கொம்புகள் காண்டாமிருகத்தின் கொம்புகள் போலவும் இருக்கும். அவைகளாலே சனங்களை ஏகமாய்த் தேசத்தின் கடையாந்தரங்கள்மட்டும் முட்டித் துரத்துவான்" - உபாமகம் (33:17)

"சீயோன் குமாரத்தியே, நீ எழுந்து போரடி; நான் உன் கொம்புகளை இரும்பும், உன் குளம்புகளை வெண்கலமுமாக்குவேன்; நீ அநேக ஜனங்களை நொறுக்கிப்போடுவாய்;" - மீகா (4:13)

"அவர் வெஞ்சினம் கொண்டு
இஸ்ரயேலின் கொம்பை முற்றிலும் வெட்டிவிட்டார்;" - புலம்பல் (2:3)


மேலே உள்ள இவ்வரிகள் மூலமாக கொம்புகள் ஆற்றலையும் அரசாட்சியையும் குறிப்பதாக இசுரவேலரின் சமயத்திலும் விளங்கியதை நாம் அறியலாம்.

சரி...பழைய நாகரீகங்களுள் நினைவுக் கல் வழிபாடும் ஒன்றுப் போலவே இருக்கின்றது... கொம்பு வைத்த உருவங்களும் சரி அவற்றிற்குரிய அர்த்தங்களும் சரி ஏறக்குறைய ஒன்றுப் போலவே இருக்கின்றது...இவற்றைப் போலவே இன்னும் பல பழக்கங்கள் அந்த பழைய நாகரீகங்களுக்குள்ளே பொதுவானதாக விளங்குகின்றன.

மர வழிபாடு, விலங்குகள் வழிபாடு , இயற்கை தெய்வங்கள் வழிபாடு, மலைகளில் இறைவன் இருப்பதாக நம்பிக்கை... மேலும் இன்ன பிற பழக்க வழக்கங்களும் இந்த நாகரீகங்களுள் ஏறக்குறைய ஒன்றைப் போலவே இருக்கின்றன. அட மறந்து விட்டேன்... உலகத் தோற்றக் கதையும் வெள்ளத்தால் உலகம் அழிந்தக் கதையும் கூட இவற்றில் ஒரே போலவே இருக்கின்றன.

இந்த ஒற்றுமைகள் தற்செயலானவையா அல்லது ஒரு இடத்தில தோன்றிய மக்கள் பல இடங்களுக்கு நகர்ந்தமையால் அவர்களுடனேயே இந்தப் பழக்கங்களும் நகர்ந்தமையால் காணப்படும் ஒற்றுமைகளா என்று ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்து பார்க்கத் தான் வேண்டி இருக்கின்றது. அது அவர்கள் கடமை... அதனை அவர்களிடமே விட்டுவிடுவோம்.

நாம் இப்பொழுது அறிந்துக் கொள்ள வேண்டியது பண்டைய காலத்தில் மக்களிடையே பல பழக்க வழக்கங்கள் ஒன்றுப் போலவே இருந்து இருக்கின்றன. அவற்றின் தொடர்ச்சிகளை இன்றும் நமது சமுகத்தில் நாம் கண்டுக் கொண்டு தான் இருக்கின்றோம் என்பதே!!!

பயணம் தொடரும்....!!!


பி.கு:

இந்தத் தகவல்கள் நான் தெ. தேவகலா என்பவரது 'தமிழ் பக்தி இயக்கத்தின் தோற்றமும் வளர்ச்சியும் (விவிலிய ஒளியில்)' என்னும் ஆராய்ச்சி நூலின் இருந்தே அறிந்து கொண்டவைகளாகும்.


இரு தேசங்களின் கதை : ஆரியவர்த்தமும் பிற தேசங்களும்...!!!

தேசியம்...வந்தேறிகள்...குடியுரிமை என்று இன்று பல குரல்கள் எழும்பிக் கொண்டிருக்கின்றன. "யார் வந்தேறிகள்? யார் பூர்வகுடி மக்கள்? எவ...