நீண்ட நாட்களுக்கு முன்னர் காளிமார்க் குளிர்பானத்தைப் பற்றி ஒரு பதிவினை எழுதி இருந்தேன். அதனில் எவ்வாறு இந்திய குளிர்பானங்களை அந்நிய நிறுவனங்கள் அழித்தன என்பதனை சுருக்கமாக கண்டு இருந்தோம்.


ஆனால் வெறும் பதிவுகள் எழுதுவதினால் மட்டும் எந்த மாற்றமும் வந்து விடாது தானே. மாற்றங்கள் வர வேண்டும் என்றால் செயல்கள் வேண்டும். எந்த மாற்றங்களை நாம் எதிர்பார்கின்றோமோ அந்த மாற்றங்களுக்கு ஏதாக முதலில் நாம் மாற வேண்டும். அப்படி மாறினோம் என்றால் தான் உண்மையான மாற்றங்கள் வரும். அம்முறையில் இந்த மாற்றத்தினை நடைமுறைப் படுத்த ஒரு மிகவும் எளிய முறை அந்நிய பானங்களை நாம் குடிக்காது இருப்பது. ஆனால் இது ஒவ்வொருடைய தனிப்பட்ட முடிவாகத் தான் இருக்க வேண்டும்...அவ்வாறு இருந்தால் தான் உண்மையான மாற்றம் வரும். மாறாக அனைவரும் இந்திய பானங்களை மட்டுமே தான் குடிக்க வேண்டும், அந்நிய பானங்களை அறவே புறக்கணிக்க வேண்டும் என்று நாம் யாரையும் கட்டாயப்படுத்தவோ கட்டளையிடவோ முடியாது. அவை சரியான செயலும் அல்ல...அவற்றால் பயனும் இல்லை. மக்களிடம் நம் கருத்துக்களைச் சொல்லத் தான் நமக்கு உரிமை இருக்கின்றது மாறாக அதனைத் திணிக்க உரிமை கிடையாது. அவ்வாறு திணித்தோம் என்றால் அவை எதிர்மறையான விளைவுகளையே நிச்சயம் விளைவிக்கும்.

நிலைமை இவ்வாறு இருக்க மற்றவர்களின் உரிமைகளும் பாதிக்க கூடாது ஆனால் அதே நேரம் மாற்றங்களும் நிகழ வேண்டும், இதற்கு என்ன செய்வது என்று சிந்தித்த பொழுது தான் ஒரு சிந்தனை உதித்தது. பொதுவாக அனைத்து அணிகளிலும் எதாவது ஒரு வகையில் ஏதாவது ஒரு வேளையில் கொண்டாட்டங்கள் இருக்கத் தான் செய்கின்றன. பிறந்த நாள் கொண்டாட்டங்களாக இருக்கட்டும், சாதனைகளைப் பாராட்டும் கொண்டாட்டங்களாக இருக்கட்டும்...இன்னும் வேறு வகை கொண்டாட்டங்களாகவும் இருக்கட்டும் இவை அனைத்து அணிகளுக்கும் பொதுவாகவே இருக்கின்றன.

உணவுகள் இல்லாத கொண்டாட்டங்கள் மென்பொருள் துறையினைப் பொறுத்த வரை கொண்டாட்டங்களே இல்லை தானே, எனவே அனைத்துக் கொண்டாட்டங்களுக்கும் உணவுகளும் சரி குளிர் பானங்களும் சரி பொதுவான ஒன்றாகத் தான் இருக்கின்றன. இங்கே நாம் பார்த்தோம் என்றால் அனைத்து கொண்டாட்டங்களிலும் உணவு பொருட்கள் மாறுகின்றன ஆனால் குளிர் பானங்களைப் பொறுத்த வரை ஒன்று பெப்சி அல்லது கோகோ கோலா நிறுவனங்களின் பானங்களே பொதுவான ஒன்றாக இருக்கின்றன. அவை மாறுவதில்லை. இந்நிலையில் தான் ஒரு எண்ணம் தோன்றிற்று, நம்முடைய குளிர் பானங்களையும் நமது கொண்டாட்டங்களில் சேர்த்தால் என்னவென்று.

நிச்சயம் நம்மில் அநேகர் தமது சிறு வயதில் அந்த பானங்களைக் குடித்து தான் வளர்ந்து இருப்பர். அந்தக் குளிர் பானங்களின் பெயர்கள் நிச்சயம் அவர்களின் நினைவுகளின் ஒரு ஓரத்தில் பதிந்து இருக்கும். ஆனால் காலத்தின் ஓட்டத்தில் பல விடயங்களை கேள்விகளே கேட்காது மறந்ததுப் போல் இந்த குளிர் பானங்களையும் மறந்து இருக்கலாம்.

"அவ்வாறு அவர்கள் தெரியாது மறந்ததை அவர்கள் முன் கொண்டு வந்தோம் என்றால் ஒரு வேளை அதனை அவர்கள் ஏற்றுக் கொள்ளலாம் அல்லவா...ஏனெனில் அவர்கள் வேண்டுமென்றே இந்திய குளிர் பானங்களை புறக்கணிக்க ஒருக் காரணம் இல்லை...அவர்கள் வளர்ந்த காலத்தில் அந்த பானங்கள் கிட்டி இருக்காது எனவே கிடைத்த பானங்களை அவர்கள் அருந்த ஆரம்பித்து இருக்கலாம். எனவே இப்பொழுது, நண்பர்களே நாம் சிறு வயதில் பருகிய பானங்கள் அழிந்து விட வில்லை, என்றுக் கூறி அவர்களின் முன் அந்த பானங்களை வைத்தால் அதனை அவர்கள் குடித்துப் பார்க்காமலா போய் விடுவர்" என்ற எண்ணத்தின் விளைவாக ஒரு சோதனை முயற்சியை மேற்கொண்டேன்.


எனது அணியில் நண்பர்கள் சிலரது பிறந்தநாள் விழாவிற்காக குளிர் பானங்களை வாங்கும் பொழுது பெப்சி மற்றும் கோகோ கோலா பானங்களுடன் காளிமார்கின் தயாரிப்பான போவொண்டோ என்ற பானத்தையும் வாங்கிக் கொண்டு வைத்தோம். அவ்வளவு தான் எதிர்ப்பார்த்தபடியே பல கருத்துக்கள் கொட்ட ஆரம்பித்தன. அவற்றுள் பல, காளிமார்கின் தயாரிப்புகள் இன்னும் வந்துக் கொண்டு இருக்கின்றனவா என்று ஆச்சர்யத்தையே வெளிப்படுத்திக் கொண்டு இருந்தன.

"என்னையா...காளிமார்க் ஐ வாங்கிட்டு வந்து இருக்கீங்க... இது எல்லாம் இன்னும் வருதா என்ன...."

"காளிமார்க் ஆ... அந்த காலத்துல டொரினோ, கோல்ட் சபாட் அப்படி எல்லாம் இருந்துச்சி...இன்னும் இதுங்க எல்லாம் இருக்க என்ன..."

"அட விலை கம்மியா இருக்கணும்னு பார்த்து இந்திய பானங்களை வாங்கிட்டீங்களா" என்றார் ஒருவர்...பின்னர் விலையைப் பார்த்த உடன் "என்னையா 1 1/2 லிட்டர் போவொண்டோ 2 1/4 லிட்டர் பெப்சிய விட விலை அதிகமா இருக்கு...நம்ம ஆளுங்க கொள்ளை அடிக்குறதுல பெரிய ஆளுங்க" என்றவாறு முடித்தார்.

"ஹே.. காளிமார்க் ஆ... சின்ன வயசுல குடிச்சது... எனக்கு ரொம்ப பிடிக்கும்... இது எல்லாம் இன்னும் வருதா என்ன?"

தமிழ் மக்கள் பலருக்கும் காளிமார்க் பரிச்சியமாகி இருந்தது. கேரள நண்பர்கள் தான் புதிதாய் ஒன்றை பார்ப்பதுப் போல் பார்த்துக் கொண்டு இருந்தனர். மொத்தம் ஆறு குளிர் பானங்கள் வாங்கி இருந்தோம். நான்கு கோகோ கோலா தயாரிப்புகள், இரண்டு காளிமார்க் தயாரிப்புகள். குடிப்பவர்கள் குடிக்கட்டும். அவர்களுக்கு புதிதாய் ஒரு வாய்ப்பினை இம்முறை நாம் உருவாக்கி விட்டாயிற்று என்றே நின்றுக் கொண்டு இருந்தேன்.

ஆச்சர்யமாக முதலில் காளியானவை காளிமார்க் தயாரிப்புகளே. ஒருவேளை புது நிறுவனம், சுவைத்துப் பார்க்கலாம் என்ற எண்ணத்தினாலும் அது நிகழ்ந்து இருக்கலாம். எவ்வாறாக இருப்பீனும் அன்று வாங்கிய இரு பானங்களுமே முதலில் காலியாகி விட்டன. அந்த நிகழ்வில் சுவையைப் பற்றியும் பல கருத்துகள் வெளி வந்தன...அவற்றுள் முக்கியமான ஒன்றாக "கசாயம் போல இருக்கு" என்றக் கருத்து திகழ்ந்துக் கொண்டு இருந்தது. பிழையில்லை சில சுவைகள் சிலருக்கு பிடிப்பதில்லை. முதலில் புதிதாய் இந்தியாவினுள் நுழைந்த பொழுது பெப்சியும் கோகோ கோலாவும் இன்று இருக்கும் நிலையிலா இருந்தன? சச்சினும் ஐஸ்வர்யா ராயும் குடித்ததினால் தானே குடித்தார்கள். பின்னர் நாக்கு அந்த சுவைக்கு பழகிக் கொண்டு விட்டது. அது போலத் தான் காளிமார்க்குக்கும் நிகழலாம். மறந்த போன அந்த சுவைகள் மீண்டும் வெளி வரலாம். அது முக்கியமில்லை. முக்கியமானது என்னவென்றால் அவை வெளி வருவதற்கு உரிய வாய்ப்புகளை உருவாக்கித் தருகின்றோமா என்பது தான். அந்நிலையில் ஒரு வாய்ப்பினை உருவாக்கித் தந்த நிம்மதி என்னுள் அன்று இருந்தது. நண்பர்கள் பலர் பழைய நினைவுகளோடு காளிமார்கினை பருகியதும், "அண்ணே...இனிமே எல்லா கொண்டாட்டங்களிலும் ஒரு காளிமார்க் வாங்கிடலாம்...குடிக்குறதுக்கு ஆள் இருக்கு...இத குடிக்குறவங்க குடிக்கட்டும்...பெப்சி கோகோ கோலா தான் வேணும்னு சொல்றவங்க அத குடிக்கட்டும்" என்று அணியில் ஒருவர் கூறியதும் அந்த சிறிய முயற்சிக்கு கிடைத்த வெற்றியாகவே கருதலாம் என்றே எண்ணுகின்றேன்.

இன்று இந்திய தயாரிப்புகள் என்று பெரிதாக எதுவும் இல்லாத நிலையிலும், இந்தியாவினை வெளி நாடுகளுக்கு விற்கும் மனப்பான்மை உடைய அரசுகள் இருக்கும் நிலையிலும் நமது வரலாற்றையும் பொருட்களையும் காப்பாற்ற இத்தகைய சிறு முயற்சிகள் காலத்தின் தேவைகள் என்றே நான் கருதுகின்றேன்.

ஒரு டாலர் இன்றளவு கிட்டத்தட்ட ஐம்பத்தியாறு உருபாய் மதிப்பு பொருந்தியதாக இருக்கின்றது.

இதே டாலர் நமது சுதந்திரத்தின் பொழுது வெறும் ஒரு உருபாய் மதிப்பு பொருந்தியதாகவே இருந்து இருக்கின்றது.


அதாவது சுதந்திரம் அடைந்து அறுபத்தியாறு ஆண்டுகளில் டாலருக்கு நிகரான இந்திய உருபாயின் மதிப்பு ஐம்பத்தியாறு மடங்கு சரிந்து இருக்கின்றது. அதுவும் இந்த சரிவு குறிப்பாக இந்தியா 'தனியார்மயமாக்கம்...உலகமயமாக்கம்..." என்ற புதுக் கொள்கையை 1991இல் கொண்டு வந்ததில் இருந்து மிக வேகமாக அதிகரித்து இருக்கின்றது.


இருந்தும் இந்தியா வல்லரசாகும் என்ற கனவு மட்டும் பரப்பப்பட்டு கொண்டு இருக்கின்றது. இந்நிலையில் இந்தியாவினை உண்மையாக நேசித்து அது உண்மையாக வளர வேண்டும் என்ற எண்ணம் நம்மிடையே இருந்தால், நம்முடைய கனவுகள் பலிக்க இத்தகைய சிறுமுயற்சிகள் இன்றியமையாத ஒன்றாகவே இருக்கும்.


பக்கத்துக்கு வீட்டு குழந்தைகள் திறமைசாலிகளாகவே இருக்கட்டும். நமக்கு அது கவலையில்லை. நமக்கு முக்கியம் நம்முடைய குழந்தைகள் தானே. நம் குழந்தைகளை நன்றாகவும் நல்லவர்களாகவும் வளர்க்க வேண்டியக் கடமை யார் கடமை?


சிந்திப்போம்...முயல்வோம்...வெல்வோம்...சிறு துளி பெரு வெள்ளம்!!!

முந்தையப் பதிவு: ஒரு குளிர்பானத்தின் கதை

1 கருத்துகள்:

முயற்சி திருவினையாக்கும் !

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு