உடல் உயிர் மற்றும் ஆன்மாவினைப் பற்றியே இப்பதிவுகளில் நாம் கண்டு கொண்டு வருகின்றோம். உயிர் வேறு ஆன்மா வேறு என்றும், ஆன்மா மனிதர்களுக்கு மட்டுமே உரியது என்றும் நாம் கூறி இருக்கின்றோம். அதனை முன்னிட்டு நண்பர்கள் சில கேள்விகளையும் மாற்றுக் கருத்துகளையும் முன் வைத்து இருக்கின்றனர். இப்பொழுது நாம் அவற்றிற்குத் தான் விடையினைக் காண வேண்டி இருக்கின்றது.

அதற்கு முன் முந்தையப் பதிவுகளைப் படித்திராவிடில் படித்து விட்டு தொடர்வது நலமாக இருக்கும். முந்தையப் பதிவுகள்.

 
சரி...இப்பொழுது நண்பர் ஒருவரின் கருத்தினைத் தான் நாம் காண வேண்டி இருக்கின்றது.

//ஆதியில் தோன்றிய அனுவான பரம அனு முதல் பஞ்சபூதங்கள் வரை, அதன் கூட்டு உயிர் வரை அனைத்துமே பரிணாமத்தின் விளைவு தான். ஓரறிவு உயிரி, தன் சுயத் தேவையால் விளைந்திட்ட எண்ணத்தால், வேண்டுதலால் இரறிவாகி அதன் தொடர்ச்சியே 6 அறிவு உயிரியாக பரிணாமம் கொண்டுள்ளது. உயிர் தான் ஆன்மா. அதை எப்படி மறுக்க முடியும்?உயிரின் மீது போர்வைப் போல் போர்த்தி இருப்பது தான் பரிணாமத்தினால் ஏற்பட்ட இன்ப மயக்கம்/ துன்பப் பதிவுகள் தான் உயிரை சுற்றி மாயையாக இருந்து செயல்படுத்துகிறது.//

இது நண்பர் ஒருவரின் கருத்து. இவரின் கூற்றின் படி பரிணாமத்தின் விளைவின் படி தான் உயிர் தோன்றி பல்வேறு அறிவு நிலைகளை எட்டி இருக்கின்றது. அதாவது இன்றைக்கு ஐரோப்பிய அறிவியல் கூறும் கருத்தினை இவர் கூறி இருக்கின்றார். ஆனால் கூடுதலாக ஆன்மா, மாயை போன்ற கூற்றுகளையும் வேறு கூறி இருக்கின்றார். இங்கு தான் குழப்பமே எழுகின்றது.

அதாவது பரிணாம வளர்ச்சி என்பது இறைவன் உலகைப் படைத்தான் என்ற கருத்திற்கு முற்றிலுமாக மாற்றுக் கருத்தாகும். அது ஒரு நாத்திகக் கொள்கை. இன்னும் நிரூபிக்கப்படாத ஒரு கூற்று. அக்கூற்றினைத் தான் இன்றைக்கு ஐரோப்பிய அறிவியல் சுமந்துக் கொண்டு இருக்கின்றது.

ஆனால் ஆன்மா, மாயை என்பன எல்லாம் இறைவன் தொடர்புடைய விடயங்கள்...இவற்றை பரிணாம வளர்ச்சிக் கொள்கையினை உடையவர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அவர்களின் பார்வையில் ஆன்மா மாயை போன்றவைகள் எல்லாம் முட்டாள்தனம். வெறும் கற்பனை. அவ்வளவே.

அதாவது இறைவனை நம்புவர்கள் பரிணாமக் கொள்கையை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அவர்களைப் பொறுத்த வரை உலகமும் உயிர்களும் இறைவன் படைத்தது. இறைவனை நம்பாதவர்கள் ஆன்மாவையும் மாயை என்பதனையும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இந்நிலையில் பரிணாம வளர்ச்சியையும் ஆன்மா மாயை போன்ற விடயங்களையும் இணைத்து நண்பர் தமது கருத்தினை வெளி இட்டு இருப்பது தான் இங்கே கவனிக்கத்தக்கது.

இக்கூற்றினை இறைவனை நம்பும் சமயங்களும் ஏற்றுக் கொள்ளாது...அறிவியலும் ஏற்றுக் கொள்ளாது. இருந்தும் இத்தகைய கருத்துக்கள் சமூகத்தில் பரவலாக இருப்பதற்கு காரணம் ஒரு அரசியல்...அதனைப் பற்றி நாம் பின்னர் காண்போம். இப்பொழுது நாம் காண்பதற்கு முக்கியமான விடயங்கள் சில இருக்கின்றன.

"அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் உள்ளது" என்ற வாக்கியத்தையே நாம் இப்பொழுது காண வேண்டி இருக்கின்றது. இவ்வாக்கியத்தின் பொருள் உலகத்தில் ஏது இருக்கின்றதோ அது நமது உடலிலும் இருக்கின்றது என்பதே.

அண்டம் - உலகம்
பிண்டம் - உடல்
 
ஏன் அவ்வாறுக் கூறுகின்றார்கள்...அது சரியா? என்றே நாம் இப்பொழுது காண வேண்டி இருக்கின்றது. அதற்கு நாம் பஞ்ச பூதங்களைப் பற்றிக் காண வேண்டி இருக்கின்றது.

இறை நம்பிக்கையாளர்களின் கூற்றின் படி இறைவன் உலகை பஞ்ச பூதங்களைக் கொண்டு உருவாக்கினான். அறிவியலாளர்களின் கூற்றின் படி உலகம் பஞ்ச பூதங்களால் உருவாகி இருக்கின்றது.

உருவாக்கப்பட்டதா அல்லது உருவானதா என்ற விடயத்தில் இறை நம்பிக்கையாளர்களுக்கும் அறிவியலாளர்களுக்கும் கருத்து வேறுபாடுகள் இருப்பீனும் பஞ்ச பூதங்களைக் கொண்டு உலகம் இருக்கின்றது என்பதில் அவர்களுக்கு மாற்றுக் கருத்துக்கள் இல்லை. அப்பஞ்ச பூதங்கள் எனப்படுபவை,

நீர்
நெருப்பு
காற்று
நிலம்
ஆகாயம்

ஆகிய ஐந்தாகும். இவைகளைக் கொண்டு தான் இந்த உலகம் இயங்கிக் கொண்டு இருக்கின்றது என்பதனை யாரும் அறிவர். எனவே அண்டத்தில் உள்ளன யாவை என்றுக் கண்டால் இவைகள் ஐந்தும் விடையாய் வரும். இவைகளைக் கொண்டே அண்டம் இருக்கின்றது...இவைகளன்றி ஒன்றும் இல்லை. சரி இருக்கட்டும்.

இப்பொழுது அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் உள்ளது என்கின்றார்களே அது சரியா என்பதனை நாம் காண வேண்டி இருக்கின்றது.

நெருப்பு - நம்முடைய உடல் ஒரு குறிப்பிட்ட அளவு சூட்டுடனேயே இருக்க வேண்டி இருக்கின்றது. வெப்பம் கூடினாலோ குறைந்தாலோ (காய்ச்சல் அல்லது நோய்கள்) உடலுக்கு தீங்கு வந்து விடுகின்றது. வெப்பமே இல்லாத உடல் சடலமாக மாறி விடுகின்றது. எனவே உடல் இயங்க வெப்பம் தேவைப் படுகின்றது. அதாவது நெருப்பு. அது உடலில் இருக்கின்றது.

நீர் - திரவங்கள் நமது உடலில் இருக்கின்றன. அவைகள் இல்லாது போனால் உடலின் இயக்கம் நின்று விடும்.உடல் பழுதடைந்து அழிந்து விடும். எனவே நீரும் உடலின் இயக்கத்திற்கு இன்றியமையாது இருக்கின்றது.

காற்று - உடல் இயங்க காற்று மிக முக்கியமானதொன்றாகும். காற்று இல்லையெனில் சுவாசிக்க முடியாது. சுவாசிக்காது உடலால் இயங்க முடியாது.

ஆகாயம் - வெற்றிடம். உடலினுள் வெற்றிடங்கள் இருக்கின்றன...சுவாசப் பைகள் போன்றவைகள் உதாரணத்திற்கு. வெற்றிடங்களும் உடலின் இயக்கத்திற்கும் அமைப்பிற்கும் இன்றியமையாது இருக்கின்றன.

நிலம் - உலகம் நிலத்தால் அமைந்து இருப்பதனைப் போல மனித உடலும் நிலத்தைப் போலவே அமைந்து இருக்கின்றது. உயிர் இருக்கும் வரை இயங்கிக் கொண்டு இருக்கும் உடல், உயிர் பிரிந்தப் பின்னர் சில நாட்களுக்குள் மண்ணோடு மண்ணாகி விடுகின்றது. அதாவது நிலம் நிலத்தைச் சேர்ந்து விடுகின்றது. நிற்க

இதன் மூலம் உலகம் எதனைக் கொண்டு வடிவமைக்கப்பட்டு இருக்கின்றதோ அவற்றை வைத்தே தான் உடலும் வடிவமைக்கப்பட்டு இருக்கின்றது என்பது தெரிகின்றது.

அதாவது,
 
உலகம் - பேருடல் - பெரிய உடல்
மனித உடல் - சிற்றுடல் - சிறிய உடல்
 
என்றே நாம் கொள்ளலாம். (இங்கே நாம் உடலைப் பற்றி மட்டுமே கண்டுக் கொண்டு இருக்கின்றோம்...உயிர் மற்றும் ஆன்மாவைப் பற்றிக் காணவில்லை என்பதை நினைவிற் கொள்ளவும்)

உயிர் இருக்கும் வரை இயங்கிக் கொண்டு இருக்கும் மனித உடல் உயிர் எப்பொழுது பிரிகின்றதோ அப்பொழுது பேருடலான உலகத்துடன் கலந்து விடுகின்றது. இதனை அனைவரும் அறிவர். நிற்க

இங்கே தான் நாம் உயிரைப் பற்றிப் பார்க்க வேண்டி இருக்கின்றது. நாம் முன்னரே கண்டு இருக்கின்றோம் உடல் ஒரு மாபெரும் மகத்தான இயந்திரம் என்று. பல்வேறு செயல்களை செம்மையாக செய்யக் கூடிய கருவிகள் பல இருக்கின்றன உடலினுள். ஆனால் உயிர் இல்லை என்றால் அவைகள் இயங்குமா என்றால் இயங்காது என்பதே பதிலாக வரும்.

எனவே ஒரு உடல் இயங்க உயிர் இன்றியமையாதத் தேவையாக இருக்கின்றது. உயிர் இருந்தால் தான் உடல் இயங்கி உயிரினம் ஆகின்றது. இந்நிலையில் தான் நாம் உடலின் இயக்கத்தைப் பற்றிப் பார்க்க வேண்டி இருக்கின்றது.
 
நமது உடல் இயங்கிக் கொண்டே இருக்கின்றதா இல்லை எப்பொழுதாவது இயங்காது இருக்கின்றதா என்ற கேள்வி எழுந்தால் உயிர் உள்ள வரை நமது உடல் இயங்கிக் கொண்டே தான் இருக்கின்றது என்றே பதில் வரும். உண்மையும் அது தான். நாம் அசையாது ஒரு இடத்தில் நின்றாலும் நமது உடல் இயங்கிக் கொண்டு தான் இருக்கின்றது. நம்முடைய அனுமதியோ கட்டளையோ உடலிற்கு தேவை இல்லை. நாம் உறங்கும் பொழுதும் உடல் இயங்கிக் கொண்டே தான் இருக்கின்றது.

சரி இயங்குகின்றது...ஆனால் எவ்வாறு இயங்குகின்றது..தாறுமாறாக வரையறை அற்று இயங்குகின்றதா அல்லது ஒரு நெறிக்கு உட்பட்டு இயங்குகின்றதா என்றால் உடல் அதற்கென்று இருக்கும் நெறிப்படியே இயங்குகின்றது என்பது புலனாகும். உடலின் எந்தஒரு செயலும் காரணமின்றி அமைவதில்லை என்பதை நாம் கூர்ந்து பார்த்தால் அறிவோம். அதன் இயக்கத்திற்கு என்று ஒரு விதி இருக்கின்றது. அதன் படியே உடல் இயங்குகின்றது.

அவ்விதிக்கு மாறாக ஒரு விடயம் நேர்ந்தால் உடல் பாதிப்பிற்கு உள்ளாகின்றது. உதாரணத்திற்கு உடலிற்கு தகாத ஒரு பொருளை நாம் உண்டோம் என்றால் உடல் முதலில் அப்பொருளை வெளியேற்றப் பார்கின்றது அவ்வாறு இயலாத நிலையில் நோய் வாய்ப்படுகின்றது. நோய் வாய்ப்பட்ட நிலையிலும் தன்னைத் தானே சரி செய்துக் கொள்ள தன்னிடம் இருக்கும் கருவிகளை (வெள்ளை அணுக்கள்...இதர இதர) பயன்படுத்த முயற்சிச் செய்துக் கொண்டு தான் இருக்கின்றது. உயிர் அதனை இயக்கிக் கொண்டு இருக்கின்றது. இச்செயல்கள் அனைத்தும் தன்னிச்சையாக நிகழப் பெறுவன. ஆனால் இச்செயல்களை நம்மால் ஓரளவு கட்டுப்படுத்தவும் முடியும்.

எவ்வாறு தகாத பொருளை உட்கொண்டதன் மூலம் உடலின் செயலைப் பாதித்தோமோ அதைப் போன்றே அதனை சரி செய்யவும் நம்மால் சில செயல்களை செய்ய முடியும். அதற்கு உடல் எவ்வாறு இயங்குகின்றது என்ற அவ்விதியினை நாம் அறிந்து இருக்க வேண்டும். அவ்வாறு உடல் எவ்வாறு இயங்குகின்றது என்ற விதிகளை அறிவதன் பெயர் தான் மருத்துவம். நிற்க.

இப்பொழுது நாம் உடல் என்பது ஒரு அற்புத இயந்திரம் என்றும், உயிர் அதனை இயக்குகின்றது என்றும், அது விதிகளின் படி இயங்குகின்றது என்றும், அவ்விதிகளை நாம் அறிந்துக் கொள்ள முடியும் என்றும், அதன் இயக்கத்தை சீராக்கவும் அல்லது பழுது படுத்தவும் நம்மால் முடியும் என்றும் நாம் கண்டு இருக்கின்றோம்.

உயிர் இருக்கும் வரை சிற்றுடல் இயங்கிக் கொண்டே தான் இருக்கின்றது. இங்கே தான் நாம் பேருடல் என்று வழங்கப்படும் உலகினைப் பற்றி காண வேண்டி இருக்கின்றது.
 
காணலாம்...!!!

தொடரும்...

பி.கு:

1) ஆய்வாளர்.தெய்வநாயகம் என்பவரின் ஆய்வுகளில் இருந்து நான் அறிந்தவற்றையே இங்கே பதிவிட்டு இருக்கின்றேன்.

2) விவாதங்களும் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

0 கருத்துகள்:

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு