வியாழன், 29 ஜனவரி, 2015

கடவுள் ஒருவரா மூவரா - மூஒருமைக் கோட்பாடு ஒரு சிறு பார்வை - 3

ஒரே கடவுள் மூவராக இருக்கின்றார் என்கின்ற கோட்பாட்டினைப் பற்றியே நாம் இந்தப் பதிவுகளில் கண்டு வந்துக் கொண்டு இருக்கின்றோம். முதலில் கிருத்துவ சமயத்தில் அந்தக் கோட்பாடானது எவ்வாறு இருக்கின்றது என்பதனையும் பின்னர் பௌத்த சமயத்தின் ஒரு பிரிவான மகாயான பௌத்தத்தில் ஒரே புத்தர் எவ்வாறு மூன்று நிலைகளில் அறியப்படுகின்றார் என்பதனையும் நாம் கண்டோம். அதன் தொடர்ச்சியாகத் தான் நாம் இப்பொழுது சைவ வைணவ சமயங்களைக் காண வேண்டி இருக்கின்றது. சைவ வைணவ சமயங்களில் ஒரே இறைவன் மூன்று நிலைகளில் இருப்பதனைப் போன்ற கோட்பாடு காணப்படுகின்றதா என்றே நாம் இப்பொழுது பார்க்க வேண்டி இருக்கின்றது.

சைவம் - சிவனை முழு முதற்கடவுளாக கொண்டது.

வைணவம் - பெருமாளை முழு முதற்கடவுளாக கொண்டது.

மேலோட்டமாக பார்த்தோம் என்றால் இரு வேறு கடவுள்களை முழு முதற்கடவுளாக கொண்டு விளங்கும் வெவ்வேறு சமயங்களாகவே சைவமும் வைணவமும் தோன்றும். ஆனால் உண்மையோ வேறாக இருக்கின்றது. இதோ திருமூலரின் பாடல் ஒன்று,

ஆதிப் பிரானும் அணிமணி வண்ணனும்
ஆதிக் கமலத்து அலர்மிசை யானும்
சோதிக்கில் மூன்றும் தொடர்ச்சியில் ஒன்றுஎனார்
பேதித்து உலகம் பிணங்குகின் றார்களே - திருமந்திரம் 104

சிவனும், பெருமாளும், பிரமனும் பார்க்க மூன்றாகத் தோன்றினாலும் அவர்கள் உண்மையில் ஒருவரே. இந்த உண்மையினை அறியாது உலக மக்கள் அவர்களுக்குள் வேறுபாடுகள் கற்பித்துக்கொண்டு இருக்கின்றார்களே என்றே திருமூலர் கூறுகின்றார்.

சைவ வைணவத்தில் மும்மூர்த்திகளாக அறியப்படுபவர்கள் சிவன், பெருமாள், பிரமன். இவர்கள் மூவரும் வெவ்வேறு கடவுளர் என்ற கருத்தே கிட்டத்தட்ட அனைத்து மக்களின் உள்ளும் பதிந்து இருக்கின்றது. காரணம் அவ்வாறு தான் அவர்களுக்கு கூறப்பட்டு உள்ளது. ஆனால் திருமூலரோ, சிவன், விஷ்ணு, பெருமாள் ஆகிய மூவரும் மூன்று வெவ்வேறு கடவுளர் கிடையாது மாறாக அவர்கள் ஒருவரே என்றே கூறுகின்றார். அதாவது ஒரே கடவுள் மூன்று நிலைகளில் இருக்கின்றார் என்பதே திருமூலரின் கருத்தாகும்.

இதேக் கருத்தினை சைவ வைணவ சமயத்தினைச் சார்ந்த மற்றப் பெரியோர்களும் கூறியே தான் சென்றுள்ளனர்.

மூவராகிய மூர்த்தியை முதல் மூவர்க்கும் முதல்வன் தன்னை
சாவம் உள்ளன நீக்குவானைத் தடம் கடல் கிடந்தான் தன்னை
தேவ தேவனைத் தென் இலங்கை எரி எழ செற்ற வில்லியை
பாவ நாசனை பங்கயத் தடம் கண்ணனைப் பரவுமினோ - நம்மாழ்வார் - திருவாய்மொழி (3-6-2)

மூவராகிய ஒருவனை மூவுல குண்டு உமிழ்ந் தளந்தானை
தேவர் தானவர் சென்று சென்றிறைஞ்சத் தண் திருவயிந்திர புரத்து
மேவு சோதியை வேல் வலவன் கலிகன்றி விரித்துரைத்த பாவு
தண் டமிழ்ப் பத்திவை பாடிட பாவங்கள் பயிலாவே. - திருமங்கை ஆழ்வார் (3-1-10).

மேலும் 'அரியும் சிவனும் ஒன்று' என்பது சித்தர் பெருமக்களின் கூற்றுமாகும். அதாவது சிவனும் பெருமாளும் இரு வேறு கடவுளர் அல்லர். இருவரும் ஒருவரே என்றே சித்தர்கள் கூறி இருக்கின்றனர். இந்த உண்மையையே ஹரிஹரன் என்ற உருவமும் புலப்படுத்துகின்றது. மேலும் முதல் ஆழ்வார்களும் சரி நாயன்மார்களும் சரி சிவனையும் பெருமாளையும் ஒருவராகவே உருவகப்படுத்தி உள்ளனர்.

மேலும், பெருமாளுக்கும் பிரமனுக்கும் இடையே தொப்புள் கொடி உறவும் காட்டப்பட்டு உள்ளது. அதாவது தாயிற்கும் மகனுக்கும் இடையில் இருக்கும் உறவு முறையே பெருமாளுக்கும் பிரமனுக்கும் இடையில் காட்டப்பட்டு உள்ளது. மேலும் திருநாவுக்கரசரும் அவருடைய பாடலில்

ஆவியாய் அவியுமாகி அருக்கமாய் பெருக்கமாய்ப் பாவியர் பாவம் தீர்க்கும் பரமனாய்ப் பிரமனாகி' - திருநாவுக்கரசர் தேவாரம் 320

சிவன் பாவிகளின் பாவம் தீர்க்கும் பிரமன் ஆகின்றான் என்றே கூறுகின்றார். இவ்வாறு சிவன், பெருமாள், பிரமன் ஆகிய மூவரும் பொதுவாக வெவ்வேறு கடவுளர் என்றே அறியப்பட்டாலும் உண்மையான சமயக் கருத்துக்கள் அவர்கள் மூவரும் வெவ்வேறு கடவுளர் அல்ல மாறாக ஒரே கடவுள் தான் என்றே கூறுகின்றன. இதே உண்மை தான் சிவலிங்கத்திலும் வெளிப்படுகின்றது.

பொதுவாக சிவலிங்கத்தினைப் பற்றிய கதைகள் பல்வேறு விதமாக வெளியில் உலாவிக் கொண்டிருக்கின்றன. சிவலிங்கம் என்பது இனப்பெருக்க கல் என்று சிலரால் கருதப்படுகின்றது. அதற்கு காரணம் ஆன்மீகத்திற்கு தொடர்பில்லாத நபர்கள் சைவ வைணவ சமயத்தினைக் கைப்பற்றிக் கொண்டு அவர்கள் அறிவிற்கேற்ப பரப்பிவிட்ட ஆபாசக் கதைகளே ஆகும். உண்மையில் சில இனக்குழுக்கள் இனப்பெருக்க கல் வழிப்பாட்டினைக் கொண்டிருந்தாலும் சிவலிங்கம் என்பது அத்தகைய வழிப்பாட்டில் இருந்து முற்றிலும் வேறுபட்டது. உண்மையில் சிவலிங்கம் என்பது இரு வேறு தத்துவங்களைக் அடிப்படையாக விளக்கிக் கொண்டு இருப்பது.

ஒன்று - சிவலிங்கம் மூன்று பகுதிகளைக் கொண்டது. அதன் தலைப்பகுதி சிவனைக் குறிப்பது. இடைப் பகுதி பெருமாளைக் குறிப்பது. அடிப்பகுதி பிரமனைக் குறிப்பது. அதாவது ஒரே வடிவம் சிவனையும் பெருமாளையும் பிரமனையும் ஒரு சேரக் குறிக்கின்றது.

இரண்டு - சிவலிங்கம் இறைவனின் அருவுருவமாக கருதப்படுகின்றது. சைவக் கருத்துக்களின்படி ஒரே இறைவன் மூன்று நிலையில் இருக்கின்றான். அருவமாகவும் இருக்கின்றான், அருஉருவமாகவும் இருக்கின்றான், உருவமாகவும் இருக்கின்றான். இதனையே பின்வரும் பாடல் விளக்குகின்றது

அருவமோ உருவா ரூப மானதோ அன்றி நின்ற
உருவமோ உரைக்கும் கர்த்தா வடிவெனக் குணர்த்திங் கென்னின்
அருவமும் உருவா ரூபம் ஆனது மன்றி நின்ற
உருவமும் மூன்றுஞ் சொன்ன ஒருவனுக் குள்ள வாமே. - சிவஞானசித்தியார்(1:38)

அதாவது உண்மையில் இறைவன் உருவமற்றவன். இதனை மாணிக்கவாசகர்,

ஒரு நாமம், ஓர் உருவம், ஒன்றும் இல்லாற்கு, ஆயிரம்
திருநாமம் பாடி, நாம் தெள்ளேணம் கொட்டாமோ! - திருவாசகம் (திருத்தெள்ளேணம்)

என்றே கூறுகின்றார்.

அத்தகைய இறைவன் உருவமாகவும் வந்தான். இதனைத் திருமூலர்,

விண்ணின்று இழிந்து வினைக்கீடாய் மெய்க்கொண்டு
தண்ணின்ற தாளைத் தலைக்காவல் முன்வைத்து
உண்ணின்று உருக்கியோர் ஒப்பிலா ஆனந்தக்
கண்ணின்று காட்டிக் களிம்பறுத் தானே - திருமந்திரம் 113

ன்ற பாடலின் மூலம் தெளிவாக விளக்குகின்றார். அதாவது விண்ணில் இருந்து இறைவன் மக்களின் பாவத்தினை அழிக்க வினைகளை உடைய உடம்பினைக் கொண்டு உலகிற்கு வந்தான் என்றே அவர் கூறுகின்றார். எனவே உருவமில்லாத இறைவன் மக்களுக்காக உருவமானவராக ஆகின்றார்.

அதேநேரம் இறைவன் அருவமாகவோ அல்லது உருவமாகவோ மட்டும் தான் இருக்கின்றான் என்றால் அதற்கு இல்லை என்றே பதில் வருகின்றது. இறைவன் அருஉருவமாகவும் இருக்கின்றான் என்றே சைவம் கூறுகின்றது. அருஉருவம் என்றால் என்னதென்று உறுதியாகக் கூற இயலாத வடிவம். உதாரணத்திற்கு தண்ணீருக்கு உருவம் இல்லை. ஆனால் அதனை எந்த வடிவ குடுவையில் ஊற்றி வைக்கின்றோமோ அந்தக் குடுவையின் வடிவையே தண்ணீரானது எடுத்துக் கொள்கின்றது. எனவே தண்ணீருக்கு உருவம் இருக்கின்றது என்றோ அல்லது உருவம் இல்லை என்றோ கூற இயலாது. இதனைப் போன்றே இறைவன் அருஉருவமாக திகழ்கின்றான் என்றே சைவம் கூறுகின்றது. இதனையே சிவலிங்கம் விளக்குகின்றது.

இறைவன் அருவம் - உருவம் - அருஉருவம் ஆகிய மூன்று நிலைகளில் இருக்கின்றான் என்பதே சிதம்பர இரகசியமுமாகும். சிதம்பரத்தில் கருவறையில் வெற்றிடம் மட்டுமே இருக்கும். அது இறைவன் அருவமாக இருக்கும் நிலையைக் குறிக்கின்றது. சிவலிங்கம் இறைவன் அருஉருவமாக இருப்பதனைக் குறிக்கின்றது. நடராசர் சிற்பமோ இறைவன் உருவமாக இருப்பதனைக் குறிக்கின்றது.

எனவே ஒரு இறைவன் மூன்று நிலைகளில் இருப்பதே சைவ வைணவத்தின் அடிப்படைக் கோட்பாடு ஆகும்.

இங்கே சில கேள்விகள் எழலாம், சைவ வைணவ சமயங்கள் என்றுக் கூறி விட்டு அம்மன், முருகன், பிள்ளையார் போன்ற கடவுளரைப் பற்றி ஒன்றுமே கூறாது அது ஏன் என்ற கேள்வி நிச்சயமாக அவற்றுள் முக்கியமான கேள்வியாக இருக்கும். அக்கேள்விகளுக்கு விடைகளை நாம் ஏற்கனவே பல பதிவுகளில் கண்டாகி விட்டதனால் தான் நாம் அவர்களைப் பற்றி நாம் இங்கே காணவில்லை. இருந்தும் சுருக்கமாக காண வேண்டும் என்றால்

1) அம்மன் என்பது தனியான கடவுள் அல்ல. சிவன் என்ற முழுமுதற் கடவுளின் ஆற்றலே சக்தி என்று பெண் கடவுளாக உருவகப்படுத்தப்பட்டு இருக்கின்றார். இறைவனின் சக்தியே அம்மன்.

2) பிரமன், முருகன், பிள்ளையார், ஐயப்பன் ஆகியோர் அனைவரும் சிவனின் பிள்ளைகளே ஆவர். இறைவனின் மகன் என்பதனை கூற வெவ்வேறு காலத்தில் தோன்றிய வெவ்வேறு உருவகங்களே அவர்கள் அனைவரும்.

3. இவர்கள் அனைவரையும் சேர்த்து சமயங்கள் ஆறு வகைப்படும்

சைவம்சிவன்அம்மைமகன்
சாக்தம்சிவன்சக்திமகன்
கௌமாரம்சிவன்சக்திகுமரன்
காணாபத்தியம்சிவன்சக்திகணபதி

விஷ்ணு முழுமுதற் கடவுளாக இருக்கும் சமயங்கள்.
வைணவம்சிவன்விஷ்ணுபிரமன்
சௌரம்சிவன்விஷ்ணுஐயப்பன்.

மேலும் சைவ சமயக் கோட்பாட்டின்படி இறைவனின் ஆற்றல் ஆகிய சக்தியே குருவாக வந்து தன்னை உணர்ந்த ஒவ்வொரு மனிதருக்கும் அவர்கள் வினையினை விட்டு அகல வழிகாட்டுகின்றார். இதனையே திருமூலர்

இருவினை நேரொப்பில் இன்னருட் சத்தி
குருவென வந்து குணம்பல நீக்கித்
தருமெனு ஞானத்தால் தன்செய லற்றால்
திரிமலந் தீர்ந்து சிவனவ னாமே - திருமந்திரம் - 1527

என்றுக் கூறுகின்றார். இதுவும் நாம் முன்னர் கிருத்துவத்தில் கண்ட பரிசுத்த ஆவி மக்களை வழிநடத்துகின்றார் என்ற கோட்பாட்டினைப் போன்றும் மகாயான பௌத்தத்தில் சம்போக காயா வடிவில் புத்தர் போதிசத்துவர்களுக்கு வழிகாட்டுகின்றார் என்ற கோட்பாட்டினைப் போன்றும் இருக்கின்றது. இதுவும் சிந்திக்கத்தக்கது.

னவே மேலே நாம் கண்டுள்ள விடயங்களின் மூலம் ஒரே இறைவன் மூன்று நிலைகளில் இருக்கும் கோட்பாடானது சைவ வைணவ சமயங்களிலும் இருக்கின்றது என்பது புலனாகின்றது. அதாவது கிருத்துவத்திலும் சரி, பௌத்தத்தின் ஒரு பிரிவான மகாயான பௌத்தத்திலும் சரி சைவ வைணவ சமயங்களிலும் சரி ஒரு இறைவன் மூன்று நிலைகளில் இருக்கின்றார் என்ற கோட்பாடு வருகின்றது. இவை தற்செயலான ஒற்றுமைகளா அல்லது இவைகள் ஒரே இறைவனைக் கூறுவதனால் ஒரே கோட்பாடு இச்சமயங்களுக்குள் காணப்படுகின்றதா என்றே நாம் ஆராய வேண்டி இருக்கின்றது. ஆராய்ச்சிகள் நிச்சயமாக இந்த தலைப்பில் மக்கள் செய்தாகத் தான் வேண்டி இருக்கின்றது.

முற்றும்.

தொடர்புடைய இடுகைகள்:

திங்கள், 26 ஜனவரி, 2015

சாதிகளும் நான்கு வருணங்களும் - 2!!!

சென்ற பதிவினில் இரண்டு இனக்குழுக்கள் போரினால் ஒன்றிணையும் பொழுது, தோற்ற இனக்குழுவானது முற்றிலுமாக அடிமைகளாகவும் எதிரிகளாகவும் மாறி விடுகின்றது என்றே நாம் கண்டோம். கூடவே நான்கு வருணம் எனப்படும் பிரிவுகளில் முதல் மூன்று வர்ணங்கள் ஆரியர்களையும் இறுதி இரண்டு வர்ணங்கள் அடிமைகளையும் எதிரிகளையும் குறிக்கின்றன என்பதனையும் கண்டோம்.

பிராமணர் - வேத வேள்வி செய்வோர் (ஆரியர்)
க்ஷத்ரியர் - அரசாள்வோர் (ஆரியர்)
வைசியர் - வணிகம் செய்வோர் (ஆரியர்)
சூத்திரர் - அடிமைகள் (திராவிடர்)
பஞ்சமர் - எதிரிகள் (திராவிடர்)

இதைத் தான் நாம் இப்பொழுது சற்று விரிவாகக் காண வேண்டி இருக்கின்றது. அதற்கு நாம் முதலில் ஒரு நிகழ்வினை இப்பொழுது காண வேண்டி இருக்கின்றது. பெரிய நிகழ்வு தான்...மராட்டிய மன்னன் சிவாஜியின் பட்டமேற்பு விழாவென்றால் சும்மாவா என்ன? ஆனால் கி.பி பதினேழாம் நூற்றாண்டில் நடந்துக் கொண்டிருக்கும் அந்த விழாவினில் ஒரு சிறு பிரச்சனை இருந்துக் கொண்டு தான் இருக்கின்றது. பெரிய பிரச்சனை ஒன்றும் இல்லை...அன்றிருந்த பழக்க வழக்கங்களின்படி சமய பெரியோர்களாக அங்கே கருதப்பட்ட பிராமணர்கள், சிவாஜிக்கு முடிசூட்ட மறுக்கின்றனர். அவ்வளவே. அதற்கு அவர்கள் காரணமாய் கூறிய விடயம் 'சிவாஜி க்ஷத்ரியன் அல்ல...ஆகவே அவனுக்கு முடி சூட்டும் சடங்கினை நாங்கள் செய்ய மாட்டோம்' என்பதே ஆகும். இக்கட்டான அந்தச் சூழலில் சிவாஜியின் நண்பரான அவாஜி என்பவர் சிவாஜியின் வம்சாவழி வரலாற்றினை சிறிது மாற்றி சிவாஜி என்பவர் மேவாரில் இருக்கும் இராஜ்புட் வம்சத்தினரின் வழியில் வந்தவர் என்றே கூறுகின்றார். அவ்வாறு அவர் கூறுவதற்கு காரணம் இராஜ்புட் வம்சத்தினை சத்திரியர்கள் என்றே பிராமணர்கள் ஏற்றுக் கொண்டு இருந்தனர். எனவே சிவாஜியும் இராஜ்புட் வம்சம் என்று கூறி விட்டால் அவரை சத்திரியர் என்றே பிராமணர்கள் ஏற்றுக் கொள்வார்கள் தானே. எனவே தான் அவர் அவ்வாறு கூறுகின்றார். அதனை பிராமணர்கள் தீவிர சிந்தனைக்குப் பின்னர் ஏற்றுக் கொண்டு சிவாஜிக்கு உரிய சடங்குகளைச் செய்கின்றனர். ('சூத்திரர்கள் யார்' என்ற அம்பேத்கரின் நூலில் இருக்கும் தகவல்)

சிவாஜி தனியான பல இராஜ்யங்களை தன் வசம் வைத்து இருந்தாலும் அவரை சத்திரியன் என்று பிராமணர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. மாறாக அவரை எப்பொழுது இராஜ்புட் வம்சாவழியைச் சார்ந்தவர் என்ற கருத்து எழுகின்றதோ அப்பொழுது அவரை அவர்கள் சத்திரியர் என்று ஏற்றுக் கொள்ளுகின்றனர். அதாவது பிராமணர்களின் பார்வையில் இராஜ்புட் வம்சத்தினைச் சார்ந்தவர்கள் சத்திரியர்களாக அறியப்படுகின்றனர். நிற்க

இங்கே நாம் காண வேண்டிய விடயம் என்னவென்றால் பிராமணர்களால் சத்திரியர்கள் என்று அறியப்படும் இராஜ்புட்டுகள் - இந்தியர்கள் அல்ல என்பதே ஆகும். அவர்கள் இந்திய தேசத்தின் மேல் பல்வேறு காலங்களில் படையெடுத்து வந்த ஹுன்னேர்கள், சகர்கள், குஷானர்கள் போன்ற பல்வேறு அந்நிய இனக்குழுக்களைச் சார்ந்தவர்கள். அவர்கள் யாரும் இந்திய தேசத்தினைச் சார்ந்தவர்கள் அல்ல. ஆனால் கி.பி ஏழாம் நூற்றாண்டிற்கு பின்னர் அவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து வட இந்தியாவினைக் கைப்பற்றினர் என்பது நம்முடைய பாட புத்தகத்தினில் காணப்படாத ஒரு வரலாறு. அவ்வாறு அவர்கள் ஒன்றிணைந்த பொழுது அவர்களுக்கு அவர்கள் இட்டுக் கொண்ட பெயர் தான் இராஜ்புட். கி.பி. ஏழாம் நூற்றாண்டுக்கு முன்னர் இராஜ்புட் என்ற பெயர் இருந்தமைக்கான சான்றுகள் எதுவும் இல்லை. அப்படிப்பட்ட இராஜ்புட்களைத் தான் சத்திரியர்கள் என்று பிராமணர்கள் கூறி இருக்கின்றனர்.

இந்திய தேசத்தினைச் சார்ந்த அரசரான சிவாஜியை சூத்திரன் என்று கூறிய பிராமணர்கள், அந்நிய நாட்டினில் இருந்து வந்த ராஜ்புட்களை சத்திரியர்கள் என்று கூறி இருக்கின்றனர். ஏன் அவர்கள் அவ்வாறு கூற வேண்டும் என்றே நாம் கண்டோம் என்றால் மீண்டும் நான்கு வருணத்தில் வந்து நாம் நிற்க வேண்டி இருக்கின்றது.

சகர்கள், ஹுன்னேர்கள், குஷானர்கள், சுங்கர்கள் போன்ற அந்நிய நாட்டினைச் சார்ந்தவர்கள் ஆரியர்கள் என்ற பொதுப் பெயரில் ஒன்றிணைந்து வட இந்தியாவின் ஆட்சியைப் பிடிக்கின்றனர். அவர்கள் அனைவரும் ஆரியர்கள். எனவே அவர்களில் அரசாள்பவர்கள் க்ஷத்ரியர்களாக அறியப்படுகின்றனர். ஆரியப் பிரோகிதர்களான பிராமணர்களும் அவர்களின் சக ஆரியர்களான இராஜ்புட்களை அறிந்துக் கொண்டு அவர்களை சத்திரியர்கள் என்று உரிமைப் பாராட்டுகின்றனர். அதே சமயம் அவர்கள் ஆட்சியினை திராவிடர்களிடம் (இந்திய மக்களிடம்) இருந்து வட இந்தியாவினில் பறித்து இருக்கின்றனர். எனவே அந்த மக்கள் அனைவரையும் சூத்திரர் என்றே அவர்கள் கருதவும் செய்து இருக்கின்றனர். அதாவது வட இந்தியாவினைப் பிடித்த அந்நியர்களின் கூட்டம் தாங்கள் கைப்பற்றிய இடத்தை ஆரியவர்த்தம் என்று அழைத்துக் கொண்டு தங்களிடையே மூன்று பிரிவுகளை வகுத்துக் கொள்கின்றது.

பிரோகிதர் (பின்னாளில் பிராமணர்) - சமய வழிபாடுகளைச் செய்பவர்
க்ஷத்ரியர் - ஆள்பவர்
வைசியர் - வணிக வேலைகளைச் செய்பவர்.

இந்தப் பிரிவுகள் அனைத்தும் ஆரியர்களையே குறிக்கும். ஆரியர்கள் கைப்பற்றிய இடத்தில் இருந்த இந்திய மக்கள் அனைவரும் சூத்திரர்கள் என்றே அழைக்கப்பட்டனர். அதாவது ஆரியர்களின் ஆட்சிக்கு உட்படுத்தப்பட்ட இந்திய மக்கள் அனைவரும் சூத்திரர்கள் ஆயினர். எனவே தான் அடிமைகள் என்று குறிக்கப்படும் சொல்லான சூத்திரர்கள் என்பது அம்மக்களுக்கு வழங்கப்பட்டது.

இந்தப் பிரிவுகள் முழுக்க முழுக்க ஆரியர்களால் உருவாக்கப்பட்ட பிரிவுகளே ஆகும். அவர்கள் எந்த இடங்களில் ஆட்சி செய்கின்றனரோ அந்த இடங்களில் மட்டுமே இந்தப் பிரிவுகள் இருக்கும். மாறாக மற்ற இடங்களில் அப்பிரிவுகளுக்கு எந்தொரு அர்த்தமும் இருக்காது. உதாரணமாக வட இந்தியாவினை கைப்பற்றிய ஆரியர்களின் மத்தியில் மட்டுமே பிரோகிதர், சத்திரியர், வைசியர், சூத்திரர் ஆகிய பிரிவுகள் இருக்க முடியும். மாறாக அவர்களின் ஆட்சிகளுக்கு உட்படாத ஏனைய அரசுகளில், உதாரணமாக தமிழக அரசுகளையே எடுத்துக் கொள்ளலாம், அப்பிரிவுக்கு எந்த ஒரு செல்வாக்கும் இருக்காது. எனவே தான் அவர்களை ஆரியர்கள் பஞ்சமர்கள் அல்லது எதிரிகள் என்றே குறித்து வைக்கின்றனர். காரணம் ஆரியர்களின் பிரிவுகளும் அவர்களது தேசத்து சட்ட நூலான மனு தர்மமும் ஏனைய அரசுகளில் துளி கூட செல்வாக்குப் பெறாது. இந்தியாவில் அப்பொழுது இருந்த மற்ற அரசுகள் ஆரியர்களின் அந்த அரசுக்கு எதிரியாக இருந்தமையினால் அவர்களை பஞ்சமர் என்றே ஆரியர்கள் குறித்து வைக்கின்றனர்.

எனவே ஆரியர்களின் பார்வையில், பிராமணர் சத்திரியர் வைசியர் என்பன அவர்களின் மத்தியில் இருந்த தொழிற் பிரிவுகள் (இவற்றில் பிற்காலத்தில் அரசியல் பலத்தோடு சமயங்களின் செல்வாக்கையும் சூழ்ச்சிகளால் பெற்றமையினால் பிராமணர்கள் மிகவும் உயர்ந்தவர்களாக மாறி விட்டனர். அது பெரிய கதை. அதனை நாம் மற்ற பதிவுகளில் கண்டு வருகின்றோம்).

சூத்திரர் - ஆரியர்களின் ஆட்சிக்கு உட்பட்ட இந்திய மக்கள். இவர்கள் ஆரியர்களின் மனுதர்ம சட்டத்திற்கு உட்பட்டவர்கள். எனவே தான் இவர்களை அடிமைகள் என்று ஆரியர்கள் அழைக்கின்றனர்.
பஞ்சமர் - ஆரியர்களின் ஆட்சிக்கு உட்படாத மற்ற இந்திய ஆட்சியைச் சார்ந்தவர்கள். இவர்களிடம் மனு தர்மமும் செல்லாது ஆரியர்களின் வர்ணாஸ்ரம தர்மமும் செல்லாது. எனவே தான் இவர்களை பஞ்சமர்கள் என்று ஆரியர்கள் அழைக்கின்றனர். மேலும் இவர்கள் கடவுளிடம் இருந்து தோன்றவில்லை என்றும் அவர்கள் கூறிச் சென்று உள்ளனர்.

இதனால் தான் கிட்டத்தட்ட இந்திய மக்கள் தொகையில் 90% பேர் சூத்திரர்களாகவும் பஞ்சமர்களாகவும் இருக்கின்றனர். 10% பேர் மட்டும் பிராமணர்களாகவும், சத்திரியர்களாகவும் வைசியர்களாகவும் இருக்கின்றனர்.

அதனால் தான் சிவாஜி அரசனாக இருந்தாலுமே அவன் இந்திய மண்ணைச் சார்ந்தவனாக இருந்ததினால் அவனை சூத்திரன் என்றே அவர்கள் அழைத்தனர். மேலும் இன்று தமிழகத்தில் உயர் சாதியாக அறியப்படும் சைவ வெள்ளாளர், பிள்ளைமார் போன்ற சாதிகளும் ஆரிய நான்கு வர்ணம் என்று வரும் பொழுது 'சற் சூத்திரர் - சிறந்த அடிமை' என்றே அழைக்கப்படுகின்றனர்.

அதாவது தமிழ் நாட்டில் சைவ வெள்ளாளர்கள் உயர்ந்த சாதி. ஆனால் ஆரியர்களின் பார்வையில் அவர்கள் சிறந்த அடிமைகள். காரணம் என்ன? ஒரு இந்தியன் மனு தர்மத்தின்படி அல்லது நான்கு வர்ணத்தின் படி என்றுமே ஒரு சூத்திரனாகவோ அல்லது பஞ்சமனாகவோ தான் இருக்க முடியுமே அன்றி அவனால் ஒரு பிராமணனாகவோ அல்லது சத்திரியனாகவோ ஆக முடியாது. இதைத் தமிழ் தேசியம் பேசுவோர் அறிந்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு அறியாமல் தமிழர்களிடம் இருந்த தொழிற்பிரிவுகள் தான் நான்கு வர்ணமாக மாறி இருக்கின்றது என்றே கூறிக் கொண்டு இருந்தீர்கள் என்றால் நிச்சயமாய் தமிழர்களின் வரலாறு மீண்டு வர வாய்ப்பே இருக்காது.

அவர்கள் ஏற்கனவே அனைத்தையும் அவர்களின் வசதிக்கு ஏற்றாப்போல் மாற்றி வைத்துக் கொண்டு ஊரை ஏமாற்றிக் கொண்டு இருக்கின்றார்கள். இதில் நீங்களாய் போய் நாங்களும் ஏமாறத் தயார் என்றே கூறினீர்கள் என்றால் நிலைமை மோசமாகத் தான் போகும்.

எனவே தொழில் அடிப்படையில் அமைந்த சாதிப் பிரிவுகள் என்பது வேறு.

பள்ளர், பறையர், நாடார், வெள்ளாளர், தேவர், கவுண்டர், நாயுடு, ரெட்டியார், நாயக்கர் - போன்றவைகள் சாதிய பிரிவுகள். (இவற்றுக்கு இடையே எப்பொழுது எவ்வாறு ஏற்றத்தாழ்வுகள் கற்பிக்கப்பட்டன என்பது வேறு வரலாறு. அதனையும் நாம் பின்னர் காணலாம்)

பிராமணர், சத்திரியர், வைசியர் - என்பன ஆரியர்களின் பிரிவுகள். அவர்களின் பார்வையில் நாம் மேலே கண்டுள்ள அனைத்து சாதிகளும், அது தமிழர்களின் சாதியப் பிரிவுகளாக இருக்கட்டும் அல்லது தெலுங்கு மக்களின் சாதிப் பிரிவுகளாக இருக்கட்டும், ஒன்று அடிமைகள் என்று அர்த்தம் பொதிந்த சூத்திரப் பிரிவினைச் சார்ந்ததாக இருக்கும் அல்லது எதிரி என்று முத்திரைக் குத்தப்பட்ட பஞ்சமர் பிரிவினைச் சார்ந்ததாக இருக்கும். அவ்வளவே.

எனவே சாதிப் பிரிவுகளும் நான்கு வர்ணமும் ஒன்று என்று கூறுவது ஒன்று அறியாமையில் கூறும் ஒன்றாக இருக்கும். அல்லது மீண்டும் திராவிட இனத்தினை அடிமைப்படுத்தும் சூழ்ச்சியின் குரலாகவே இருக்கும்.

சாதிப் பிரிவுகளும் வர்ணப் பிரிவுகளும் ஒன்றல்ல!!!!

அவ்வளவே!!!

தொடர்புடைய இடுகைகள்:

தமிழ்நாட்டைத் தமிழரே ஆள வேண்டும்...!!!
தமிழர்களும் சாதி ஏற்றத்தாழ்வும் - ஒரு ஆய்வு முயற்சி 1
தமிழர்களும் சாதி ஏற்றத்தாழ்வும் - ஒரு ஆய்வு முயற்சி 2
தமிழர்களும் சாதி ஏற்றத்தாழ்வும் - ஒரு ஆய்வு முயற்சி 3
தமிழர்களும் சாதி ஏற்றத்தாழ்வும் - ஒரு ஆய்வு முயற்சி 4
தமிழர்களும் சாதி ஏற்றத்தாழ்வும் - ஒரு ஆய்வு முயற்சி 5
தமிழர்களும் சாதி ஏற்றத்தாழ்வும் - ஒரு ஆய்வு முயற்சி 6
தமிழர்களும் சாதி ஏற்றத்தாழ்வும் - ஒரு ஆய்வு முயற்சி 7
தமிழர்களும் சாதி ஏற்றத்தாழ்வும் - ஒரு ஆய்வு முயற்சி 8
தமிழர்களும் சாதி ஏற்றத்தாழ்வும் - ஒரு ஆய்வு முயற்சி 9
தமிழர்களும் சாதி ஏற்றத்தாழ்வும் - ஒரு ஆய்வு முயற்சி 10
தமிழர்களும் சாதி ஏற்றத்தாழ்வும் - ஒரு ஆய்வு முயற்சி 11
தமிழர்களும் சாதி ஏற்றத்தாழ்வும் - ஒரு ஆய்வு முயற்சி 12

 

ஞாயிறு, 25 ஜனவரி, 2015

சாதிகளும் நான்கு வருணங்களும் - 1!!!

இன்று தமிழகத்தில் 'திராவிடம்' என்ற சொல்லுக்கு எதிராகவும் திராவிட இயக்கத்திற்கு எதிராகவும் குரல்கள் வலுவாக தமிழ்த் தேசியம் பேசும் நண்பர்களிடம் இருந்து எழுந்து கொண்டே இருக்கின்றது. அவர்கள் முன் வைக்கும் கூற்றுகளில் நியாயம் இல்லாமலும் இல்லை.

"தமிழர், தெலுங்கர், கன்னடர், மலையாளி இப்படி எல்லாருமே திராவிடர் அப்படின்னு சொல்றீங்க...ஆனா தமிழ் நாட்டைத் தவிர வேற எங்கேயும் இத சொல்றது கிடையாது...தெலுங்கர் தன்னை தெலுங்கு அப்படின்னு தான் சொல்றாப்ல...கன்னடரும் தன்னை கன்னடம் அப்படின்னு தான் சொல்றாப்ல...ஆனா தமிழன் மட்டும் தான் தன்னை திராவிடன்னு சொல்லிக்கிட்டு இருக்கணும்...அப்படி அவன் சொல்லிக்கிட்டு இருந்தாத் தான் அவன தொடர்ந்து தெலுங்கு மக்கள் ஆட்சி பண்ணிகிட்டே இருக்க முடியும்..என்ன?" என்று அவர்கள் கேட்கும் கேள்வியில் நிச்சயம் உண்மை இருக்கத்தான் செய்கின்றது.

மேலும் "தெலுங்கு மன்னர்களான நாயக்கர் ஆட்சியில தான்யா தமிழன் தாழ்ந்தான்...தெலுங்குகாரனுங்க அவனுங்க ஆட்சியில தான் கிட்டத்தட்ட எல்லா கோவிலையும் பிராமணன்கிட்ட கொடுத்தானுங்க...மதுரை மீனாட்சி அம்மன் கோவிலாக இருக்கட்டும்...பழனி முருகன் கோவிலாக இருக்கட்டும்...பிராமணன் அங்கே உள்ள போனதுக்கு நாயக்க மன்னர்கள் தானப்பா காரணம்...அப்ப அடிமையாகப் போன தமிழர்கள் இன்னிக்கு வரைக்கும் அடிமையாகத் தானயா இருக்காங்க...அதனால தமிழனுக்கு எதிரி பிராமணன் மட்டும் கிடையாது ஆனா திராவிடன் அப்படின்னு சொல்லியே முதுகுல குத்துன தெலுங்கு மக்களும் தான்" என்றும் அவர்கள் கூறும் வாதங்களில் வரலாற்று உண்மைகளும் இன்னும் ஆழமாக ஆராயக்கூடிய பல்வேறு விடயங்களும் ஒளிந்துக் கொண்டு தான் இருக்கின்றன.

மாபெரும் வரலாற்றினையும் பழம்பெருமையையும் கொண்டிருந்த ஒரு சமூகம் தன்னுடைய அடிமை நிலையில் இருந்து விடுதலைப் பெற்று மீண்டும் தன்னுடைய வரலாற்றினை அறிய முற்படுகையில் நிச்சயமாய் ஒரு எழுச்சி இருக்கத்தான் செய்யும். அதுவும் தமிழ் சமூகம் கிட்டத்தட்ட 500 ஆண்டுகளாக கல்வியறிவு மறுக்கப்பட்டு மூட நம்பிக்கைகளில் ஒடுக்கப்பட்டு இருந்த ஒரு சமூகமாகவே இருக்கின்றது. அத்தகைய ஒரு சமூகம் இன்று மீண்டும் கல்வியறிவினைப் பெற பெற தன்னுடைய இனத்தின் வரலாற்றையும் பெருமையையும் அறிந்துக் கொள்ள ஆரம்பித்து இருக்கின்றது. எனவே இயல்பாகவே மேற்கூறிய கேள்விகள் அவர்களின் முன்னே எழத் தான் செய்யும். மேலும் அக்கேள்விகளுக்கு விடையினைத் தேடுவதும் இங்கே முக்கியமானதொன்றாகத் தான் இருக்கின்றது.

ஆனால் அத்தகைய தேடுதல்களின் பொழுது அனைத்து விடயங்களையும் நன்றாக கவனித்தே ஒரு முடிவிற்கு யாராக இருந்தாலும் வர வேண்டும். அநேக விடயங்களை தமிழ் தேசியம் பேசுவோர் சரியாக முன் வைத்தாலும் அவர்களும் பல இடங்களில் தவறுகள் செய்யத்தான் செய்கின்றனர். அதில் முக்கியமான ஒரு தவறு சாதியையும் வருணத்தையும் பிரித்து அறிவதில் வருகின்றது. அதைத் தான் நாம் இங்கே காண வேண்டி இருக்கின்றது.

அவர்களின் கூற்று இது தான். தமிழர்கள் தான் உலகின் முதல் மக்கள். அவர்கள் தமிழகத்தில் இருந்து கிளம்பிச் சென்று உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் செல்லுகின்றனர். தமிழர்கள் தங்களைத் தாங்களே செய்யும் தொழில்களின் அடிப்படையில் நான்காக வகுத்துக் கொள்கின்றனர். தங்களின் இனக் குழுவின் செயல்பாட்டினை முன்னேற்றுவதற்காகவே அவர்கள் அத்தகைய பிரிவினை உருவாக்கிக் கொள்கின்றனர். அந்த பிரிவுகளானது,

அந்தணர் - வழிபாடுகளைச் செய்பவர்/அறிஞர்
அரசர் - மக்களை ஆள்பவன்
வணிகர் - வணிகம் செய்பவர்
வேளாளர் - விவசாயம் செய்பவர்.

இவ்வாறு தமிழர்கள் செய்துக் கொண்ட பிரிவுகளே அவர்கள் பல்வேறு இடங்களுக்குச் சென்றடைந்து உருவாக்கிய நாகரீகங்களிலும் காணப்படுகின்றன என்றே அவர்கள் கூறுகின்றனர். அதற்கு அவர்கள் எடுத்துக்காட்டாய் எகிப்து, இசுபானியா (Spain), சப்பான் போன்ற நாகரீகங்களைக் காட்டுகின்றனர். அவ்வாறு எடுத்துக்காட்டுவதன் மூலமாக அவர்கள் கூற வருவது இது தான். சாதிகளை ஆரியர்கள் கண்டுப்பிடித்தார்கள் என்பது வடிகட்டின பொய். சாதிகள் என்பது தமிழர்கள் தொன்றுதொட்ட காலத்தில் உருவாக்கியது. அதன் அடிப்படையிலேயே தான் பின்னர் நான்கு வருணங்கள் உருவாகி உள்ளன. எனவே நான்கு வருணங்களை உருவாக்கியது தமிழர்கள் தாம் என்பது தான் அவர்களின் வாதமாக இருக்கின்றது.

அவர்களின் கூற்றுப்படி தமிழர்களின் மத்தியில் நான்கு பிரிவுகள் இருக்கின்றன. நான்கு வருணத்திலும் நான்கு பிரிவுகள் இருக்கின்றன. எனவே இரண்டும் ஒன்று தான். அவ்வளவே. அதாவது,

அந்தணர் = பிராமணர் = வழிபாடுகளைச் செய்பவர்
அரசர் = சத்திரியர் = அரசாள்பவர்
வணிகர் = வைசியர் = வணிகம் செய்பவர்
வேளாளர் = சூத்திரர் = விவசாயம் மற்றும் இதர வேலைகளைச் செய்பவர்கள்.

'ஆகா...எவ்வளவு அருமையாகப் பொருந்துகின்றது. இந்த எளிமையான பொருத்தத்தைக் கூட காண முடியாது 'நான்கு வருணத்தை' ஆரியர்கள் கொண்டு வந்தார்கள் என்று கூறிக் கொண்டு இருக்கின்றார்களே இந்த திராவிடம் பேசுவோர். நான்கு வருணம் என்பது தமிழர்கள் கொண்டிருந்த நான்கு பிரிவுகளின் மற்றொரு வடிவமே அன்றி வேறல்ல.' என்பதே அவர்களின் கூற்றாக இருக்கின்றது. இங்கே தான் பிரச்சனை இருக்கின்றது. ஆகையால் நாம் இதனை மறுத்தாக வேண்டி இருக்கின்றது. அதற்கு நாம் அந்த தொழிற் பிரிவுகளைப் பற்றியும் நான்கு வருண அமைப்பினைப் பற்றியும் காண வேண்டி இருக்கின்றது.

முதலில் தொழிற்பிரிவுகளைப் பற்றிக் காண்போம். அந்தணர், அரசர், வணிகர்,வேளாளர் ஆகிய நான்கு பிரிவுகளும் தமிழர்கள் மத்தியில் இருந்த பிரிவுகளைக் குறிக்கின்றன. இவைகள் செய்யும் தொழிலின் அடிப்படையில் உருவாக்கப்பட்டவை. பிறப்பின் அடிப்படையில் உருவாக்கப்பட்டவை அல்ல. எனவே,

ஒரு அந்தணன் அரசனாகலாம். ஒரு அரசன் வணிகனாகலாம். ஒரு வேளாளன் அந்தணன் ஆகலாம். இதில் யாதொரு பிரச்சனையும் எழப் போவதில்லை. செய்யும் தொழிற்கு ஏற்றார்ப் போல் மக்கள் பிரிந்துக் கொள்கின்றனர். அவ்வளவே. இதில் பிறப்பின் அடிப்படையில் ஏற்றத்தாழ்வுகள் வருவதற்கு வாய்ப்புகள் இல்லை. நிற்க.

இங்கே மற்றுமொரு முக்கியமான விடயத்தினைத் தான் நாம் இங்கே கண்டாக வேண்டி இருக்கின்றது. மேற்கூறிய பிரிவுகள் ஒவ்வொரு இனத்திற்கும் தனித்தனியாக இருக்குமே அன்றி பல்வேறு இனங்களுக்கு ஒரே பிரிவு இருக்க முடியாது. அதாவது,

அந்தணன், அரசன், வணிகன், வேளாளர் - ஆகிய பிரிவுகள் தமிழர்களிடையே இருந்தது என்றால் அது அந்தந்த தமிழ் இனக் குழுக்களுக்கு மட்டுமே உரியதாக இருக்கும்.

அதைப் போன்றே பாரோ (Pharoah - அரசன்), ப்ரீஸ்ட் (Priest - வழிபாட்டு குரு), வணிகர் (Artisans) , விவசாயிகள் - என்ற பிரிவுகள் எகிப்து நகர மக்களிடையே காணப்படுமானால் அந்த பிரிவுகள் எகிப்து இன மக்களுக்கு மட்டுமே உரியனவாக இருக்கும். ஒரு தமிழ் வணிகன் எகிப்தில் சென்று வணிகம் செய்தாலும் அவனை அவர்கள் அவர்களது வணிக பிரிவினில் ஒருவனாக வைத்துக் காண மாட்டார்கள். அந்நிய நாட்டினைச் சார்ந்தவனாகத் தான் பார்ப்பார்கள். செய்யும் தொழில் ஒன்றாக இருந்தாலும் அவர்கள் இருவரும் வெவ்வேறு இனக் குழுவினைச் சார்ந்தவர்கள்.

இந்நிலையில் எகிப்து நகர மக்கள் தமிழகத்தின் மீது படை எடுத்து வந்து வென்று விட்டார்கள் என்றால் நிலைமை எவ்வாறு இருக்கும்? எகிப்து மக்கள் தாங்கள் கொண்டிருந்த அதே நான்கு பிரிவுகளைக் கொண்டு இருப்பார்கள். கூடுதலாக அடிமைகள்/எதிரிகள் என்ற ஒரு பிரிவில் தமிழ் இனக்குழுவைச் சார்ந்த அனைவரும் சேர்க்கப்பட்டு இருப்பார்கள் (அவர்கள் அந்தணர்களாக இருக்கலாம் அல்லது அரசர்களாக இருக்கலாம், அல்லது வணிகர்களாக இருக்கலாம் - அவர்கள் யாராக இருந்தாலும் ஒன்று அடிமையாக இருப்பர் அல்லது எதிரியாக கருதப்பட்டு அழிக்கப்பட்டு இருப்பர்). இது தான் இயல்பு.

எனவே இரண்டு இனக்குழுக்கள் போரினால் ஒன்றிணையும் பொழுது, தோற்ற இனக்குழுவானது முற்றிலுமாக அடிமைகளாகவும் எதிரிகளாகவும் மாறி விடுகின்றது. அதாவது தமிழர்கள் தங்களைத் தாங்களே அந்தணர், அரசர், வணிகர் , வேளாளர் என்று கருதிக் கொண்டாலும் எகிப்தியர்கள் அவர்கள் அனைவரையும் அடிமைகள் அல்லது எதிரிகள் என்று தான் கருதுவர். நிற்க

இந்த அடிப்படையில் தான் நாம் நான்கு வர்ணப் பிரிவினைக் கண்டாக வேண்டி இருக்கின்றது (உண்மையில் அது நான்கு அல்ல ஐந்து பிரிவுகள்).

பிராமணர் - வேத வேள்வி செய்வோர் (ஆரியர்)
க்ஷத்ரியர் - அரசாள்வோர் (ஆரியர்)
வைசியர் - வணிகம் செய்வோர் (ஆரியர்)
சூத்திரர் - அடிமைகள் (திராவிடர்)
பஞ்சமர் - எதிரிகள் (திராவிடர்)

இந்தப் பிரிவுகளில் முதல் மூன்று பிரிவுகளைச் சார்ந்தவர்கள் ஆரியர்களாக கருத்தப்படுவதையும் ஏனைய இரு பிரிவுகளைச் சார்ந்தவர்கள் திராவிடர்களாக கருதப்படுவதையும் நான்கு வர்ணத்தைப் பற்றி நன்கு அறிந்து இருக்கும் மக்கள் அறிந்தே தான் இருக்கின்றனர். இதைத் தான் தமிழ் தேசியம் பேசும் மக்கள் சற்று கவனிக்க வேண்டி இருக்கின்றது. இனக்குழுக்களுள் வழங்கப்படும் நான்கு தொழிற்பிரிவுகளும் நான்கு வருண அமைப்பும் ஒன்று என்றால் ஏன் ஒரு இனம் மட்டும் அடிமையாகவும் எதிரிகளாகவும் கருதப்பட்டு இருக்கின்றது?

இந்த கேள்விக்குத் தான் நாம் விடையினைக் காண வேண்டி இருக்கின்றது.காண்போம்...!!!

தொடரும்...!!!


தொடர்புடைய இடுகைகள்:

தமிழ்நாட்டைத் தமிழரே ஆள வேண்டும்...!!!
தமிழர்களும் சாதி ஏற்றத்தாழ்வும் - ஒரு ஆய்வு முயற்சி 1
தமிழர்களும் சாதி ஏற்றத்தாழ்வும் - ஒரு ஆய்வு முயற்சி 2
தமிழர்களும் சாதி ஏற்றத்தாழ்வும் - ஒரு ஆய்வு முயற்சி 3
தமிழர்களும் சாதி ஏற்றத்தாழ்வும் - ஒரு ஆய்வு முயற்சி 4
தமிழர்களும் சாதி ஏற்றத்தாழ்வும் - ஒரு ஆய்வு முயற்சி 5
தமிழர்களும் சாதி ஏற்றத்தாழ்வும் - ஒரு ஆய்வு முயற்சி 6
தமிழர்களும் சாதி ஏற்றத்தாழ்வும் - ஒரு ஆய்வு முயற்சி 7
தமிழர்களும் சாதி ஏற்றத்தாழ்வும் - ஒரு ஆய்வு முயற்சி 8
தமிழர்களும் சாதி ஏற்றத்தாழ்வும் - ஒரு ஆய்வு முயற்சி 9
தமிழர்களும் சாதி ஏற்றத்தாழ்வும் - ஒரு ஆய்வு முயற்சி 10
தமிழர்களும் சாதி ஏற்றத்தாழ்வும் - ஒரு ஆய்வு முயற்சி 11
தமிழர்களும் சாதி ஏற்றத்தாழ்வும் - ஒரு ஆய்வு முயற்சி 12

கடவுள் ஒருவரா மூவரா - மூஒருமைக் கோட்பாடு ஒரு சிறு பார்வை - 2

சென்ற பதிவினில் ஒரே இறைவன் தான் மூன்று நிலைகளில் இருக்கின்றான் என்பதனைக் குறிக்கும் மூஒருமைக் கோட்பாட்டினைப் பற்றிச் சிறிதுக் கண்டோம். மேலும் உலகில் உள்ள சமயங்களில் ஒரே ஒரு சமயத்தினில் மட்டுமே இக்கருத்து காணப்படும் என்றால் இக்கருத்தினை நாம் ஏற்றுக் கொள்வது என்பது இயலாத ஒரு செயலாகி விடும். ஏனென்றால் இறைவன் ஒருவனே என்றால் அவனைப் பற்றிய கருத்துக்களும் ஒன்றாகத் தான் இருக்க வேண்டும். அவ்வாறு இல்லை என்றால் அது இறைவன் என்ற ஒருவனின் இருப்பையே கேள்விக்குறியாக்கி விடும். இந்நிலையில் தான் ஒரே இறைவன் மூன்று நிலையில் இருக்கின்றான் எனப்படும் மூஒருமைக் கோட்பாட்டினைப் பற்றி நாம் இப்பொழுது காண வேண்டி இருக்கின்றது. கிருத்துவ சமயத்தில் காணப்படும் இந்தக் கோட்பாட்டினை நாம் சென்ற பதிவினில் கண்டு இருக்கின்றோம். இப்பொழுது இதே கோட்பாடு வேறு சமயங்களில் இருக்கின்றதா என்றே நாம் காண வேண்டி இருக்கின்றது. அதற்கு நாம் சைவ வைணவ சமயங்களையும் மகாயான பௌத்தத்தையும் காண வேண்டி இருக்கின்றது. முதலில் பௌத்தத்தில் இருந்தே தொடங்குவோம்.

பௌத்த சமயம் புத்தரின் கொள்கைகளால் தோற்றுவிக்கப்பட்டது என்றே நாம் அறிவோம். இதன் தோற்றக் காலம் கி.மு ஆறாம் நூற்றாண்டு என்றே கணிக்கப்பட்டு உள்ளது. இதனை இன்று நம்மில் பலரும் அறிவோம். ஆனால் நம்மில் பெரும்பான்மையான மக்கள் அறியாத கருத்து என்னவென்றால் பௌத்த சமயத்தில் இரு பெரும் பிரிவுகள் இருக்கின்றது என்பதே ஆகும். அவை,

ஹீனயான (தேரவாத) பௌத்தம் - புத்த சமயத்தின் முதல் பிரிவு.
மகாயான பௌத்தம் - புத்த சமயத்தின் இரண்டாம் பிரிவு. காலம் கி.பி முதல் நூற்றாண்டில் இருந்து இன்று வரை.

இவ்விரண்டு பிரிவுகளைப் பற்றியும் நாம் முன்னரே சில பதிவுகளில் கண்டுவிட்டோம். இருந்தும் இங்கே நாம் அவற்றுக்கு இடையில் இருக்கும் சில வேறுபாடுகளை கண்டாகத்தான் வேண்டி இருக்கின்றது.


மனிதன் தனது வினைப்பயன்களால் துயறுற்று மீண்டும் மீண்டும் பிறந்து இறந்து உழன்றுக் கொண்டு இருக்கின்றான். அவன் இந்த பிறவியில் செய்த வினைகளுக்கு ஏற்ப அவனது அடுத்த பிறவி அமைகின்றது. வாழ்வு துன்பகரமானது. எனவே ஒவ்வொரு முறையும் மனிதன் பிறக்கும் போதும் துன்பத்திற்கே ஆளாகின்றான். ஆகையால் அவனது முழு கடமையும் அவனது வினைப் பயன்களைத் துறந்து முக்தி அடைவதே ஆகும். எப்பொழுது ஒரு மனிதன் தன்னுடைய புலன்களை அடக்கி பற்றற்று தன்னுடைய வினைகளைக் களைந்து விடுகின்றானோ அப்பொழுது அவன் முக்தி நிலையை அடைகின்றான். அவன் மறு பிறவி எடுப்பதில்லை. எனவே ஒவ்வொரு மனிதனின் கடமையும் அவன் முக்தி அடைவதே ஆகும். இது தான் ஹீனயான பௌத்தத்தின் அடிப்படைக் கொள்கையாகும். இந்த கொள்கையின்படி புத்தர் இரண்டு நிலைகளில் இருக்கின்றார்.

  • வினைகளில் சிக்கி இருக்கும் மனித நிலை
  • வினைகள் நீங்கப் பெற்ற முக்தி நிலை

ஹீனயான பௌத்தம் புத்தரை இந்த இரு நிலைகளிலேயே காணுகின்றது. ஆனால் மகாயான பௌத்தம் இந்த நிலையில் இருந்து மாறுபடுகின்றது. மகாயான பௌத்தம் புத்தரை மூன்று நிலையில் காணுகின்றது.

மகாயான பௌத்ததில் புத்தருக்கு மூன்று உடம்புகள் இருப்பதாக அறியப் படுகின்றது. மூன்று உடம்புகளாக அறியப்பட்டாலும் அவை ஒன்று தான் என்பதே மகாயான பௌத்ததின் கருத்து. இதனை 'திரி காயா' என அவர்கள் வழங்குவர். புத்தரின் மூன்று உடல்களானவை யாதெனின்

  • நிர்மாண காயா (Nirmana Kaya : படைக்கப்பட்ட திருமேனி) - இந்த நிலை மனித வடிவில் வந்த புத்தரைக் குறிக்கும். 
  • தர்ம காயா (Dharma kaya : அறத் திருமேனி) - இந்த நிலை புத்தரின் பரிசுத்த நிலையைக் குறிக்கும்.
  • சம்போக காயா (Sambhoga kaya : இன்பத் திருமேனி) - இந்த நிலை புத்தர் தன்னுடைய போதிசத்துவர்களை வழிநடத்துவதற்காக இருக்கும் நிலையைக் குறிப்பதாகும். இந்த நிலையில் சுயநலமற்று அனைவரும் ஒன்றே என்ற ஆன்மீக உணர்வினால் புத்தர் தன்னுடைய போதிசத்துவர்களை மற்ற மக்களுக்கு நன்மையைச் செய்து அவர்களையும் மீட்கும் வண்ணம் வழிநடத்துவார். இந்த நிலை ஒரு உணர்ச்சி நிலை. நிற்க.

இங்கே நாம் முக்கியமாக காண வேண்டியது என்னவென்றால் ஒரே புத்தர் தான் மூன்று நிலைகளில் இங்கே அறியப்படுகின்றார். அதாவது மனிதனாக வந்த புத்தர் (நிர்மாண காயா) மக்களுக்கு மீட்படையும் வழியைக் காட்டிவிட்டு என்றும் இருக்கும் பரிசுத்த நிலையுடன் (தர்ம காயா) இணைகின்றார். தர்மகாயா நிலையே என்றும் இருக்கும் மெய்யான நிலையாக இருக்கின்றது. பின்னர் தன்னை ஏற்றுக் கொண்ட போதிசத்துவர்களுக்கு வழிகாட்ட சம்போக காயா என்ற உணர்ச்சி வடிவினைக் கொண்டே புத்தர் வழிநடத்துகின்றார்.

மகாயான பௌத்தக் கொள்கையின்படி ஒருவன் தன்னுடைய வினைகளில் இருந்து நீங்கி போதிசத்துவ நிலையை (முக்திக்கு தயாரான நிலை) அடைந்து விட்டான் என்றால் அவனுடைய கடமை மற்றவர்களையும் அந்நிலைக்கு கொண்டு வருவதாகவே ஆகின்றது. ஒருவன் அவனது முக்தி நிலைக்கு மட்டுமே முக்கியத்துவம் தரக் கூடாது. மாறாக மனித குலத்தின் ஒட்டு மொத்த முன்னேற்றத்திற்கும் விடுதலைக்கும் அவன் கடமையாற்ற வேண்டி இருக்கின்றது. இதுவே ஒவ்வொரு போதிசத்துவரின் கடமை.

வினைகளில் இருந்து விடுதலை அடைவதோடு ஹீனயான பௌத்ததில் ஒரு மனிதனின் கடமை முடிந்து விடுகின்றது. ஆனால் மகாயான பௌத்தமோ மக்கள் அனைவரும் ஒருவரே...எனவே ஒருவனின் முக்தி மற்றவர்களுக்கு பயன்படவில்லை என்றால் அம்முக்தியினால் யாதொரு பயனும் இல்லை என்றே கூறுகின்றது.

எனவே புத்தரை ஏற்றுக் கொண்ட போதிசத்துவர்களின் கடமை மற்ற மக்களை வழிநடத்துவதாகவே இருக்கின்றது. அவர்களின் அந்த கடமையில் அவர்களை புத்தர் தனது சம்போக காயா என்ற வடிவில் இருந்து வழிநடத்துகின்றார் என்பதே மகாயான பௌத்ததின் கருத்தாகும். சம்போக காயா நிலையில் புத்தர் ஒவ்வொரு போதிசத்துவரையும் தனது தர்மகாயா நிலையுடன் ஒன்றிணைக்கின்றார். கனவுகள் மூலமாகவோ அல்லது காட்சிகள் மூலமாகவோ சம்போக காயா நிலை புத்தர் ஒவ்வொரு போதிசத்துவரையும் வழிநடத்துகின்றார். எனவே தான் அந்த நிலையை ஓர் உணர்ச்சி நிலை என்றுக் கூறுகின்றனர். அதனை உணரத் தான் முடியும். சரி இருக்கட்டும். இங்கே நாம் கண்டது என்னவென்றால்,

பௌத்தத்திலும் ஓர் இறைவன் (புத்தர்) மூன்று நிலைகளில் இருக்கின்றார் என்ற கோட்பாடே இருக்கின்றது. இதுவும் கிருத்துவக் கோட்பாட்டினைப் போன்றே இருக்கின்றது.




மேலும் இக்கருத்துக்கள் கி.பி ஒன்றாம் நூற்றாண்டுகளுக்குப் பின்னரே காணப்படுகின்றன எனபதும், பௌத்தரின் இயற்கைக்கு மீறிய பிறப்புக் கதையும் இன்னும் பல விடயங்களும் நிச்சயம் சிந்திக்கத் தக்கவைகளாகத் தான் இருக்கின்றன. இருந்தும் அவைகளை இந்த பதிவினில் காண்பது சரியானதொன்றாக இருக்காது. இந்தத் பதிவின் நோக்கம் ஒரு இறைவன் மூன்று நிலைகளில் இருப்பதனைப் போன்ற கோட்பாடுகள் எந்தெந்த சமயங்களில் இருக்கின்றன என்பதனைப் பற்றிக் காண்பதே ஆகும். எனவே இப்பொழுது மகாயான பௌத்தத்திலும் ஒரே இறைவன் மூன்று நிலைகளில் இருக்கின்றான் என்ற கருத்து காணப்படுகின்றது என்பதனைக் கண்டாயிற்று. இனி நாம் இக்கோட்பாடு சைவ வைணவ சமயங்களில் இருக்கின்றதா என்றே காணலாம்...

தொடரும்...!!!

பி.கு:

தொடர்புடைய பதிவுகள் :

கடவுள் ஒருவரா மூவரா - மூஒருமைக் கோட்பாடு ஒரு சிறு பார்வை - 1
புத்தன் எத்தனை புத்தனடா…!!!

செவ்வாய், 2 செப்டம்பர், 2014

கடவுள் ஒருவரா மூவரா - மூஒருமைக் கோட்பாடு ஒரு சிறு பார்வை - 1

'மூவொருக் கோட்பாடு' என்பது ஒரு இறைவன் மூன்று நிலைகளில் இருக்கின்றார் என்பதைக் குறிக்கும் ஒரு சொற்தொடர் ஆகும். இன்றைக்கு இச்சொல் பயன்பாடு என்பது கிருத்துவ சமயத்துடன் மட்டுமே தொடர்புடையதாக அறியப்பட்டு இருக்கின்றது.

தந்தை - பரிசுத்த ஆவி - மகன் என்ற மூன்று நிலைகளில் இறைவன் இருக்கின்றார் என்றே கிருத்துவ சமயம் விளக்கமும் அளிக்கின்றது. இக்கூற்றினை இறைவன் ஒருவனே என்றுக் கூறும் இசுலாமியர்கள் மறுப்பர். அவர்களின் கூற்றின் படி இறைவன் மூன்று நிலைகளில் இருக்கின்றான் என்பது கட்டுக் கதை. எல்லாம் வல்ல இறைவன் எதற்காக மூன்று நிலைகளில் இருக்க வேண்டும் என்பது அவர்களின் வாதம். இந்நிலையில் தான் மூவொருமைக் கோட்பாட்டினைப் பற்றி நாம் காண வேண்டி இருக்கின்றது.

பனிக்கட்டியை எடுத்துக் கொள்ளுங்கள். அது உறைந்த நிலையில் இருக்கின்றது. கொஞ்சம் சூடேற்றுங்கள்.
நீராக மாறுகின்றது. அதனை நன்றாக கொதிக்க வையுங்கள்.
ஆவியாக மாறுகின்றது. அதனை குளிரடையச் செய்யுங்கள்.
மீண்டும் பனியாக மாறுகின்றது.


இங்கே நம்மிடம் மூன்று பொருட்கள் இருக்கின்றன. பனிக்கட்டி, தண்ணீர், நீராவி.

இவை மூன்றுமே மூன்று வெவ்வேறுப் பொருட்களா அல்லது ஒரே பொருளின் மூன்று தனிப்பட்ட தன்மைகளா. ஒரே பொருளின் மூன்று தன்மைகள் தானே. குளிர்ந்து இருக்கும் பொழுது பனிக்கட்டியாக இருப்பது சிறிது வெப்பத்தினால் தண்ணீராக மாறுகின்றது. அதுவே வெப்ப அளவுக் கூடினால் நீராவியாக மாறுகின்றது. மாற்றங்கள் காணினும் அது அடிப்படையில் ஒரே பொருள் தான். அதாவது ஒரே பொருள் தான் மூன்று காலநிலைகளில் மூன்று வேறுப் பொருள்களாக இருக்கின்றது.

இந்த அடிப்படையில் தான் நாம் இப்பொழுது ஓர் இறைவன் மூன்று நிலைகளில் இருக்கின்றான் என்ற கூற்றினைக் காண வேண்டி இருக்கின்றது. இக்கூற்று இன்று கிருத்துவ சமயத்தில் தான் மிகுதியாக அறியப்பட்டு இருப்பதனால் அச்சமயத்தையே எடுத்துக் கொள்வோம்.

கிருத்துவ சமயத்தின் கூற்றின் படி ஒரு இறைவன் தந்தை-பரிசுத்த ஆவி-மகன் என்ற மூன்று நிலைகளில் இருக்கின்றார். அது ஏன் அவ்வாறு இருக்கின்றார் என்று கிருத்துவம் கூறுகின்றது என்றே நாம் இப்பொழுதுக் காண வேண்டி இருக்கின்றது.

விவிலியக் கூற்றின் படி இறைவன் உலகைப் படைக்கின்றார். இது முதல் நிலை - தந்தை நிலை

பின்னர் மனிதன் தவறு செய்து பாவத்தில் விழுகின்றான். அவ்வாறு பாவத்தில் விழுந்த மனிதனை மீட்க இறைவனே மனிதனாக வந்து அவனுக்கு குருவாக இருந்து எவ்வாறு வாழ வேண்டும் என்றுக் காட்டிவிட்டு மீட்பினை வழங்கிய நிலை இரண்டாம் நிலை - மகன் நிலை.

எவ்வாறு வாழ வேண்டும் என்றும் காட்டியாயிற்று, மீட்பையும் வழங்கியாயிற்று அந்நிலையில் மனிதனை நல்வழியில் நடத்தி அந்த மீட்பினை அவன் பெற்றுக் கொண்டு மற்றவர்களையும் வழிநடத்தும் வண்ணம் ஒழுக்கமாக அவன் இருக்கும் வண்ணம் அவனை வழிநடத்துவது மூன்றாவது நிலையாகும் - இது தான் பரிசுத்த ஆவி நிலை.

இறைவன் உலகைப் படைத்த காலகட்டம் வேறு...மனிதனாக வந்து மீட்டுக் கொண்ட காலக் கட்டம் வேறு...மனிதனை மீட்பினைப் பெற்றுக் கொள்ள வழிநடத்தும் காலகட்டம் வேறு. ஒரே இறைவன் மூன்று காலகட்டங்களில் இவ்வாறு மூன்று வேறு செயல்களைச் செய்ததால் தான் ஓர் இறைவன் மூன்று நிலைகளில் இருக்கின்றான் என்ற கருத்து இங்கே நிலைப் பெற்று இருக்கின்றது. ஒரு வேளை இறைவன் மனிதனாக உலகிற்கு வராமல் இருந்திருந்தாலோ, மனிதனை வழிநடத்த பரிசுத்த ஆவியாக இயங்காமல் இருந்தாலோ மூவொருமைக் கோட்பாடு என்பது தோன்றி இருக்காது.

எனவே ஒரே இறைவன் மூன்று வெவ்வேறு காலக்கட்டங்களில் மூன்று நிலைகளில் செயல்பட்டதால் மூஒருமைக் கோட்பாடு என்ற கருத்து தோன்றி இருக்கின்றது. அதாவது

தந்தை நிலை - உலகைப் படைத்த நிலை
மகன் நிலை - பாவத்தில் இருந்த மனிதனுக்கு மீட்பினை அளித்த நிலை
பரிசுத்த ஆவி நிலை - மீட்பினை பெரும் வண்ணம் மனிதனை வழிநடத்தும் நிலை


ஒரே இறைவன் மூன்று நிலைகளில் மூன்று வெவ்வேறு தருணங்களில் செயல் பட்டதால் ஓர் இறைவன் மூன்று நிலைகளில் இருக்கின்றான், ஆனால் மூன்று நிலைகளில் இருந்தாலும் அவன் ஒருவனே என்ற கருத்து மூவொருமைக் கோட்பாடாக விளங்குகின்றது.

சரி இருக்கட்டும்...கிருத்துவ சமயம் ஓர் இறைவன் மூன்று நிலைகளில் இருக்கின்றான் என்றுக் கூறுகின்றது. இசுலாமோ இறைவன் ஒருவனே என்கின்றது. இதில் எது உண்மை? ஆயிரம் விளக்கங்கள் ஒவ்வொரு சமயத்தினைச் சார்ந்தவர்களாலும் தர இயலும். அவ்வாறு இருக்க எதனை மெய் என்று அறிவது. உண்மையிலேயே இறைவன் என்று ஒருவன் இருந்தான் என்றால் அவனைப் பற்றிக் கூறும் சமயங்கள் ஒரே கருத்தினை அல்லவா கூற வேண்டும்.

மூவொருமைக் கோட்பாடு என்பது உண்மை என்றால் இறைவன் மனிதனாக உலகிற்கு வந்து மனிதர்களை மீட்டுக் கொண்டது, மனிதர்களை வழிநடத்துவது போன்ற விடயங்கள் மற்ற சமயங்களிலும் இருக்க வேண்டுமே. அதனை விடுத்து ஒவ்வொரு சமயமும் ஒவ்வொன்றைக் கூறினால், கூட்டிக் கழித்துப் பார்த்து இறைவன் இல்லை என்ற நிலைக்கு தானே வர இயலும். இந்நிலையில் தான் நாம் மற்ற சமயங்கள் கூறும் கருத்தினைக் காண வேண்டி இருக்கின்றது.

சைவ வைணவ சமயங்களும் மகாயான பௌத்தமும் நமக்காக காத்துக் கொண்டு இருக்கின்றன.

காண்போம்...!!!

தொடரும்...!!!

பி.கு:

இது ஆய்வாளர் தெய்வநாயகம் ஐயா அவர்களது ஆராய்ச்சியில் இருந்து நான் அறிந்தவனவற்றை நான் அறிந்த வண்ணமே மக்களுக்கு தர முயற்சிக்கும் ஓர் முயற்சியே ஆகும். சிந்திப்போம்..கேள்விகள் கேட்போம்..விழிப்படைவோம்.

திங்கள், 1 செப்டம்பர், 2014

எளிதானதொரு செயல் தான்…!!!

ஆயிரம் முறை கண்ட திரைக்கதையொன்று
மீண்டும் வெற்றிநடைப் போட்டுக் கொண்டு தான் இருந்தது…!!!

முடிவினை அறிந்திருந்தும்
அறியாததைப் போல் நடிப்பதொன்றும் கடினமல்ல தான்…!!!

ஆச்சர்யக்குறிகளும் வரிஅமைப்புகளும்
கவிதைகளுக்கு போதுமானதாய் இருப்பதைப் போல்
போலிப் புன்னகைகளும் மௌனகண்ணீர்த்துளிகளும்
நடிப்பிற்கான முகமூடிக்கு போதுமானதாய் அமைந்து விடுகின்றன…!!!

மேலும்
முடிந்து விடும் என்று அறிந்ததொன்றை
கடந்து விடுவது என்பது எளிதானதொரு செயல் தான்…!!!

மரணிக்கும் ஓர் கனவாக இருக்கட்டும்
அறிந்த திரைக்கதையாக இருக்கட்டும்
இந்த கவிதையாக (???) இருக்கட்டும்
ஏன் வாழ்க்கையாகவும் இருக்கட்டும்….

முடிந்து விடும் என்றறிந்த ஒன்றை
கடந்து விடுவது என்பது
எளிதானதொரு செயல் தான்…!!!

ஆம்...!!!
அதனை சிரித்துக் கொண்டும்
முகமூடியினை மாட்டிக் கொண்டும் கடந்து விடலாம்…
நாட்களைக் கடத்துவது போலவே…!!!

இரு தேசங்களின் கதை : ஆரியவர்த்தமும் பிற தேசங்களும்...!!!

தேசியம்...வந்தேறிகள்...குடியுரிமை என்று இன்று பல குரல்கள் எழும்பிக் கொண்டிருக்கின்றன. "யார் வந்தேறிகள்? யார் பூர்வகுடி மக்கள்? எவ...