முதலில் இந்தப் பதிவுகளை முன்னரே படிக்கவில்லை என்றால் படித்து விடுங்கள்

வணிகமான மருத்துவமும் நமது கடமையும்
அழகுச் சாதனத்தில் அரசியல்
சரி இப்பொழுது தொடர்வோம்…!!!
இரு செய்திகள்…!!

ஒன்று….டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க அரசு மருத்துவமனைகளில் சித்த மருந்தான நிலவேம்பு மூலிகை குடிநீர் வழங்கப்படுகின்றது.
http://www.tamilmurasu.org/Inner_Tamil_News.asp?Nid=35520

இரண்டு…புதிதாக கட்டப்பட்டுள்ள வணிக வளாகமான ‘ஸ்கை வாக்’ கினால் ஏற்படும் நெரிசலைத் தவிர்ப்பதற்காக நீண்ட காலமாக இருந்து வரும் சித்த மருத்துவ ஆராய்ச்சி மையம் மற்றும் மருத்துவமனையினை இடிக்க அரசு திட்டமிட்டு வருகின்றது.
http://savukku.net/home1/1676-2012-10-19-16-49-32.html

இந்த இரண்டு செய்திகளைப் பற்றித் தான் நாம் இப்பொழுது பார்க்க வேண்டி இருக்கின்றது. அதாவது ஆங்கில மருத்துவ முறையில் இல்லாத மருந்துகள் சித்த மருத்துவத்தில் இருக்கின்றது. ஆனால் அப்படிப்பட்ட மருத்துவ முறையை வளர்த்து எடுக்க அரசு எவ்வித முயற்சியும் செய்யாது மாறாக அம்மருத்துவ முறையினை சிறிது சிறிதாக அழிக்கும் வண்ணமே செயல்களைப் புரிந்துக் கொண்டு வருகின்றது. அரசு ஏன் அவ்வாறான செயல்களைப் புரிகின்றது என்பதனை நாம் அறிய வேண்டும் என்றால் இன்றைக்கு நம் மத்தியில் இருக்கும் மருத்துவத் துறையினைப் பற்றி நாம் அறிந்துக் கொள்ள வேண்டும்.

மருத்துவம் என்பது மக்களின் வாழ்வில் நீண்ட காலமாகவே இன்றியமையாத ஒன்றாக இருந்து வந்துக் கொண்டு இருக்கின்றது. காரணம் எளிதான ஒன்று தான். நம்முடைய உடல் சில நேரங்களில் நோய் வாய்ப்பட்டு விடுகின்றது, சில நேரங்களில் உடலில் காயங்களும் ஏற்பட்டு விடுகின்றன…அந்நேரங்களில் அந்தக் காரணிகளால் நாம் இன்னலுக்கு ஆளாகின்றோம்…அந்த நேரத்தில் உடலில் ஏற்பட்டுள்ள அந்த இன்னலினை நீக்கி மீண்டும் உடலினை சீரான நிலைக்குக் கொண்டு வர மருத்துவத்தின் உதவித் தேவைப்படுகின்றது. அக்காரணத்தினாலேயே மருத்துவம் மனிதர்கள் சென்ற இடம் எல்லாம் அவர்களுடன் சென்று அவர்களுடனேயே வளர்ந்து உள்ளது.

நோயும் காயமும் எவ்வாறு மனிதர்கள் அனைவருக்கும் பொதுவான ஒன்றாக இருக்கின்றனவோ அவ்வாறே மருத்துவமும் மனிதர்கள் அனைவருக்கும் பொதுவான ஒன்றாக இருக்கின்றது. அதாவது பிறந்தக் குழந்தை முதல் இறக்கும் தருவாயில் உள்ள மனிதர் வரைக்கும் மருத்துவம் என்ற ஒன்று இன்றியமையாதுத் தேவைப்படுகின்றது. இந்த உண்மை அனைவருக்கும் தெரியும்…மக்களுக்குத் தெரியும், அரசுக்குத் தெரியும், மருத்துவ நிறுவனங்களுக்கும் தெரியும்.

மருத்துவம் அனைத்து மக்களும் ஏதாவது ஒரு வகையில் நிச்சயம் தேவைப்படுகின்றது…மேலும் மருத்துவம் என்றுக் கூறினாலே மக்கள் பலரும் கேள்விக் கேட்க மாட்டார்கள். இந்த உண்மையும் அனைவருக்கும் தெரியும். இந்த நிலையிலேயே நாம் நமது நாட்டினைக் காண வேண்டி இருக்கின்றது.
100 கோடி மக்கள் இங்கே வாழ்கின்றனர். அவர்களை சமூகமாகவும் பார்க்கலாம் அல்லது சந்தையாகவும் பார்க்கலாம்…ஆனால் எப்படிப் பார்த்தாலும் ஒரு மாபெரும் எண்ணிக்கையில் மக்கள் இங்கே வாழ்ந்துக் கொண்டு இருக்கின்றனர். அவர்கள் அனைவருக்கும் மருத்துவமும் தேவைப்படத் தான் செய்கின்றது.

இந்நிலையில் அப்படிப்பட்ட ஒரு சந்தையை நாம் பிடித்தோம் என்றால், அதாவது அவர்களுக்கு எந்த நோய் வந்தாலும் நம்முடைய மருந்துகள் மற்றும் மருத்துவ முறைகளையே நாடி வரும் வண்ணம் செய்தோம் என்றால், நாம் இலாபம் பெறுவோமா மாட்டோமா?…பணம் கொட்டுமா அல்லது கொட்டாதா?… கொட்டும் தானே. அந்த நிலையைத் தான் மருத்துவ நிறுவனங்கள் விரும்புகின்றன…அந்த நிலையைக் கொண்டு வருவதற்கே அவைகள் செயலும் புரிகின்றன. 100 கோடி மக்கள் உள்ள இந்தச் சந்தையைப் பிடிக்க அவைகள் அடித்துக் கொள்கின்றன…காரணம் பணம்!!! நம் கற்பனைக்கு எட்டாத பணம்…அவ்வளவே…!!! அந்த பணத்தினைப் பெறுவதற்கு அந்த மருத்துவ நிறுவனங்கள் விலையாய் காவுக் கொள்வது நம்முடைய ஆரோக்கியத்தையும் நல்வாழ்வினையுமே!!! அது எவ்வாறு…காண்போம்!!!

இன்று நம்முடைய சமூகத்தினுள் முக்கியமாக மூன்று மருத்துவ முறைகள் திகழ்கின்றன…ஆங்கில மருத்துவம், சித்த மருத்துவம், ஆயுர்வேத மருத்துவம். இதில் ஆங்கில மருத்துவ முறை ஆங்கிலேயர்களோடு நம் மண்ணில் நுழைந்த ஒன்று…மற்ற இரண்டு மருத்துவ முறைகளும் நம்முடைய மண்ணிலேயே விளைந்த மருத்துவ முறைகள். ஆங்கில மருத்துவ முறையில் செலவுகள் அதிகமாக இருக்கும்…மேலும் மருந்துக்களும் முக்கியமான இடத்தினைப் பிடித்து இருக்கும். ஆனால் நம்முடைய மருத்துவ முறைகள் பெரும்பாலும் உணவினையும், இயற்கை மூலிகைகளையுமே அடிப்படையாகக் கொண்டு இருக்கின்றன. செலவும் கம்மியான அளவே இருக்கின்றது. சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால், நம்முடையது ‘உணவே மருந்து’ என்ற நிலையில் இருக்கும் மருத்துவமாகத் திகழ்கின்றது…ஆங்கில மருத்துவமோ ‘மருந்தே உணவாகும்’ நிலையில் இருக்கின்றது. இங்கே தான் நாம் சிந்திக்க வேண்டி இருக்கின்றது.

‘உணவே மருந்து’ என்ற நிலையில் நாம் உண்ணும் உணவே நமது உடலுக்கு தேவையான வலுவினையும் மற்ற ஆற்றல்களையும் வழங்கி விடுகின்றது. உடல் நலத்திற்கென்று நாம் தனியாக வேறு எந்த மருத்துவப் பொருட்களையும் நாம் தேட வேண்டியதும் இல்லை அவற்றை நம்பி இருக்கவும் வேண்டியது இல்லை.

உடல் நலம் சரி இல்லை என்றால் வெறும் கஞ்சியினைக் குடித்து விட்டு படுத்துக் கொள்வது, உடலில் காயம் ஏற்பட்டால் மஞ்சளை எடுத்துப் பூசிக் கொள்வது, காய்ச்சல் என்றால் வெறும் இட்லியோடு கருப்பட்டி சாறினை வைத்து உண்ணுவது (இந்தக் கருப்பட்டி ஆனது உடலுக்கு மிகவும் நல்லது. ஆனால் ஆங்கிலேயர்கள் அவர்களின் பொருளான சீனியை வியாபாரம் செய்வதற்காக கருப்பட்டியினை பின்னுக்கு தள்ளி விட்டனர். அதாவது மற்ற பல பொருள்களைப் போல நல்லதான கருப்பட்டி பின்னுக்கு சென்று விட்டது, தீயதான சீனி முன்னுக்கு வந்து விட்டது வெறும் வணிக நோக்கிற்காக), மற்றும் ஆரோக்கியமான உணவு முறைகள், உணவு உண்ணும் காலங்களை சரியாகப் பின்பற்றுதல்…இன்னும் பல.

இவைகள் தாம் ‘உணவே மருந்து’ என்று நமது மண்ணில் இருந்த முறைகள் ஆகும். இந்த முறைகளில் செலவுகள் இல்லை…எவரையும் நாம் நம்பி இருக்க வேண்டியத் தேவையும் இல்லை. நமக்குத் தேவையான மருந்துகள், மருத்துவப் பொருட்கள் போன்றவைகளை நாமே எளிதாய் பெற்றும் கொள்ளலாம் வளர்த்தும் கொள்ளலாம். எனவே இந்நிலையில் மருத்துவத்தினை அறிவாக மட்டுமே காண முடியுமே அன்றி வணிகமாகக் காண முடியாது. இவ்வகையான மருத்துவம் வளர நாம் அதனைப் பற்றிய அறிவே போதுமானதொன்றாக இருக்கின்றது.

ஆனால் ஆங்கில மருத்துவ முறையோ முற்றிலும் மாறான ஒன்றாக இருக்கின்றது. அம்முறையில் நாம் மருந்துக்களை நம்பி இருக்க வேண்டிய நிலையே நிலவுகின்றது. அந்த மருந்துகள் ஏதாவது மருந்து நிறுவனத்தினைச் சார்ந்த ஒன்றாக இருக்கின்றன. அந்த மருந்துக்களை நாமே உருவாக்கிக் கொள்ளவோ அல்லது அம்மருந்துக்கள் எவ்வாறு உருவாக்கப்படுகின்றன என்பதனைப் பற்றியோ நமக்கு எதுவும் தெரியாது. மருத்துவர் பரிந்துரைப்பார்…நாம் வாங்குவோம்…அவ்வளவு தான். இந்நிலையில் நாம் மருந்துக்களுக்கு அந்த நிறுவனத்தினைச் சார்ந்தே இருக்க வேண்டிய நிலை வருகின்றது. அப்படிப்பட்ட ஒரு நிலையில் அங்கே அறிவு முக்கியத்துவத்தினை இழந்து வணிகம் முக்கியமடைய ஆரம்பிக்கின்றது.

நம்முடைய நாட்டினில் பல மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் உள்ளன. அவைகள் அனைத்தும் பல நோய்களுக்குரிய மருந்துக்களை தயார் செய்துக் கொண்டு இருக்கின்றன. ஆனால் நம்மால் அனைத்து நிறுவனங்களின் மருந்துக்களையும் வாங்கி உண்ண முடியாது. நாம் நம்முடைய மருத்துவர் என்ன மருந்தினைக் கூறுகின்றாரோ அந்த மருந்தினை மட்டுமே வாங்கி அருந்துவோம். இது அந்த மருந்து நிறுவனங்களுக்கும் தெரியும். இந்நிலையில் அம்மருந்து நிறுவனங்களின் மருந்துக்கள் விற்பனை ஆக வேண்டும் என்றால் மருத்துவர்கள் அந்நிறுவனங்களின் மருந்துக்களை பரிந்துரைக்க வேண்டும். அதற்கு அந்த நிறுவனங்கள் என்ன செய்ய வேண்டும்? குறிப்பிட்ட மருத்துவர்களிடம் கூட்டு வைக்க வைக்கலாம்….அம்மருத்துவர்கள் அந்த நிறுவனங்களின் மருந்துக்களை பரிந்துரைக்க வேண்டும் என்றும் அதற்காக அந்த நிறுவனங்கள் அவர்களுக்கு ஏதேனும் கைமாறு செய்யும் என்றும் மறைமுகமாக ஒப்பந்தங்கள் இட்டுக் கொள்ளலாம்…அவ்வாறு செய்வதன் மூலம் மருந்துச் சந்தையில் தங்களின் பிடியினை பலப்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு நிகழ வாய்ப்புகள் இருக்கின்றனவா இல்லையா என்பதனை உங்களின் அனுபவத்தில் இருந்து கிட்டப் பெற்று இருக்கும் சிந்தனைக்கே விட்டு விடுகின்றேன்.

இவ்விடத்தில் நண்பர் ஒருவரின் கதையினை இங்கே காண்பதும் நலமாக இருக்கும் என்றே எண்ணுகின்றேன். நண்பருக்கு நீண்ட நாட்களாக கால் வலி இருந்துக் கொண்டே இருக்க அவர் ஒரு மருத்துவரிடம் சென்று இருக்கின்றார். நண்பரின் காலினை பரிசோதித்த மருத்துவரும், நண்பருக்கு இரண்டு மருந்துக்களை பரிந்துரை செய்து உள்ளார். ஒரு மருந்து கால் வலியினை குணமாக்க…ஆனால் அந்த மருந்தினால் குடல் அரிப்பு (அல்சர்) ஏற்படுமாம், எனவே அல்சருக்காக இரண்டாம் மருந்தாம்(எப்படி இருக்கு இலவசமா ஒரு நோயையும் தந்து அதுக்கு மருந்தையும் தாரானுங்க).

இப்பொழுது நாம் கண்டு உள்ள ஆங்கில மருத்துவமுறையில் நம்முடைய அறிவிற்கு வேலை மிகவும் குறைவாகவே உள்ளது….மாறாக நமது பணத்திற்குத் தான் வேலை அதிகமாக இருக்கின்றது. நிற்க.

இப்பொழுது நாம் கண்டு உள்ள இரு மருத்துவமுறைகளில், ஒன்று அறிவினைச் சார்ந்தும் மக்கள் அனைவருக்கும் எளிதாய் இயல்பாகவே கிட்டும் வண்ணம் இருக்கின்றது. மற்றொன்றோ வணிகமயமாக்கப் படுவதற்கு மிகவும் உகந்ததாய் இருக்கின்றது. பணம் அதனில் அதிகமாகத் தேவைப் படுகின்றது. இதனில் எந்த முறையினைத் தாங்கள் தேர்வு செய்வீர்கள்?
பணமும் அதிகமாகச் செலவாகி அடுத்தவரை நம்பி இருக்க வேண்டிய மருத்துவ முறையினையா அல்லது பணச் செலவு அதிகம் இன்றி இயல்பாகவே கிட்டும் மருத்துவ முறையினையா?
பணச் செலவு அதிகமில்லாத முறையினைத் தானே தாங்கள் தேர்வு செய்வீர்கள். அது தானே மனிதரின் இயல்பான போக்காக இருக்கும். அவ்வாறு இருக்க இன்றைக்கு நம்முடைய நாட்டினில் பார்க்கும் பொழுது, அத்தகைய இயற்கை மருத்துவ முறைகள் மலிந்துப் போயும், ஆங்கில மருத்துவ முறைகள் பெருமளவு பரவி இருப்பதையுமே நாம் காணுகின்றோம். வித்தியாசமான நிலை தான் அல்லவா…இப்பொழுது ஏன் இந்த நிலை இருக்கின்றது என்றே நாம் காண வேண்டி இருக்கின்றது.

இந்த நிலை ஒன்று, இயற்கை மருத்துவத்தில் நோய்களுக்கு மருந்துக்கள் இல்லாத காரணத்தினால் உருவாக்கப்பட்டு இருக்க வேண்டும். அதாவது ஒரு மருத்துவ முறையில் நோய்களுக்கு மருந்துக்கள் இல்லாத நிலையில் மக்கள் வேறு முறைகளுக்கு செல்வது இயல்பு தானே. ஆனால் நாம் சில நிகழ்வுகளையும், ஆராய்ச்சிகளையும் காணும் பொழுது இயற்கை மருத்துவத்தினில் நோய்களுக்கு தீர்வுகள் இருப்பதாகவே அறியப்பெருகின்றோம். எனவே நோய்களுக்கு மருந்தில்லை அதனால் இயற்கை மருத்துவ முறைகள் மலிந்துப் போயின என்ற வாதத்தினை நாம் ஏற்றுக் கொள்ள முடியாது.

எனவே வேறு ஏதேனும் காரணிகள் இருக்கக் கூடுமா என்றே நாம் காண வேண்டி இருக்கின்றது. நாம் முன்னரே கண்டு இருக்கின்றோம் இயற்கை மருத்துவம் என்பது அறிவினைச் சார்ந்தது…பழக்க வழக்கங்களைச் சார்ந்தது…ஒருவேளை அந்தச் சிந்தனைகள், மருத்துவ முறைகள் குறித்த அறிவுகள் மறைந்துப் போயிருந்தால் இந்த மருத்துவ முறையும் மலிந்து போயிருக்கலாம் அல்லவா…? அதாவது என்ன செய்ய வேண்டும் என்பது தெரியாவிட்டால் எந்த முறையும் நிலைத்து நிற்காது அல்லவா…ஒருவேளை காலத்தில் மக்கள் இயற்கை மருத்துவத்தினை புறக்கணிக்க ஆரம்பித்து இருப்பர்…அல்லது புறக்கணிக்க வைக்கப்பட்டு இருப்பர்…அந்நிலையில் கவனிப்பார் எவரும் இன்றி காலப்போக்கில் அம்மருத்துவ முறையும் மலிந்துப் போய் இருக்கலாம் அல்லவா. இந்த வாதம் ஓரளவு சரி என்றே படுகின்றது. ஆனால் நோய்களுக்கு மருந்துகளும் இருக்கின்றது… செலவும் இல்லை என்று இருக்கும் மருத்துவ முறையினை மக்கள் ஏன் புறக்கணிக்க வேண்டும் என்றுக் கண்டோம் என்றால் அதற்கு விடையாய் நமக்கு கிட்டுவது ஒன்றே ஒன்று தான்.

அரசியல்…!!! இதனைப் பற்றி நாம் இந்தப் பதிவில் விரிவாக காண வேண்டாம்….சுருக்கமாகவே கண்டு விடலாம்.

மக்கள் என்றுமே மன்னன் எவ்வழியோ அவ்வழியே தான்…(அன்றும் சரி…இன்றும் சரி சமூகத்தில் பெருவாரியான மக்கள் அவ்வாறு தான் இருக்கின்றனர்). ஆங்கிலேயர் இங்கே வணிகத்திற்காகத் தான் வந்தனர். அவ்வாறு வந்த அவர்கள் இங்கே நீண்ட காலம் ஆட்சியையும் புரிகின்றனர். நிலைமை அப்படி இருக்கும் பொழுது ஆங்கிலேயர் எவ்வித மருத்துவத்தினை வளர்த்து இருப்பர்? எவ்வித மருத்துவத்தினை கற்றவர்களுக்கு முன்னிலை அளிக்கப்பட்டு இருக்கும்? ஆங்கிலேயரின் மருத்துவத்தினை பயின்றவருக்கா அல்லது மாற்று மருத்துவத்தினைப் பயின்றவருக்கா? அவர்களின் மருத்துவத்தினை கற்றவர்களுக்குத் தானே முன்னுரிமை வழங்கப்பட்டு இருக்கக் கூடும். அப்படி இருக்கும் பொழுது மாற்று மருத்துவங்கள் பின் தள்ளப்பட்டுத் தானே இருக்கும். அப்படிப் பார்க்கும் பொழுது எவ்வாறு இயற்கை மருத்துவ முறைகள் மலிந்துப் போய் இருக்கின்றன என்பதனை நாம் கணிக்க முடிகின்றது தானே. (ஆங்கிலேயரின் வருகைக்கு முன்னர் மருத்துவத் துறை எவ்வாறு இருந்தது…அது அப்பொழுதும் ஓடுக்கப்பட்டு இருந்ததா இல்லையா என்பது வேறு வரலாறு…அது இங்கேத் தேவை இல்லை).

சரி ஆங்கிலேயர்கள் ஆங்கில மருத்துவத்தினை வளர்த்தார்கள்…பிழையில்லை…அவர்கள் எதனை உருவாக்கினார்களோ அதனை அவர்கள் வளர்த்தனர்…அவர்களின் பார்வையில் அது சரிதான். விட்டு விடலாம். ஆனால் இப்பொழுது கேள்வி நம்முடைய ஆட்சியாளர்களை நோக்கித் திரும்புகின்றது.

சுதந்திரம் அடைந்து 65 ஆண்டுகள் ஆன பின்னரும் இன்னும் ஏன் நாமும் ஆங்கில மருத்துவ முறையையே வளர்த்துக் கொண்டு இருக்கின்றோம்? நம்முடைய பிள்ளைகள் கவனிப்பாரற்று இருக்கும் பொழுது எதற்காக நாம் அடுத்த வீட்டுப் பிள்ளைகளையே ஏந்திக் கொண்டும் கொஞ்சிக் கொண்டும் இருக்கின்றோம். கொஞ்ச வேண்டாம் என்று சொல்லவில்லை…ஆனால் சொந்தப் பிள்ளைகளை பட்டினி போட்டு விட்டா வேறு பிள்ளைகளுக்கு விருந்துப் படைக்க வேண்டும்?

நம்முடைய அரசு அவ்வாறு தான் செய்துக் கொண்டு இருக்கின்றது. ஆங்கில மருத்துவத்தினை வளர்க்க காட்டும் ஆர்வத்தில் பத்தில் ஒரு பங்கே அது நமது சொந்த மருத்துவ முறைகளில் காட்டுகின்றது. தவறு தான்…போய்த் தொலையட்டும்…ஏதோ ஒரு மருத்துவத்தினையாவது மக்களுக்காக வளர்க்கின்றதே என்று நாம் எண்ணலாம் என்றால் அதற்கும் வழி செய்ய மாட்டேன் என்கின்றது அரசு. காரணம் அரசு மக்களுக்காக ஆங்கில மருத்துவத்தினை வளர்ப்பதில்லை…மாறாக வணிகத்திற்காகவே வளர்க்கின்றது.

அதனால் தான் அரசு மருத்துவமனைகள், மருந்து நிறுவனங்கள், மருத்துவர்களின் சட்டங்கள் போன்றவைகள் புறக்கணிக்கப்பட்டு அவற்றுக்கு மாறாக தனியார் மருத்துவமனைகள், மருந்து நிறுவனங்கள், மருத்துவக் கல்லூரிகள், மருத்துவர்கள் போன்றவைகளை அரசு ஊக்குவிக்கின்றது. காரணம் அரசே மருத்துவ வசதிகளை தரமாக வழங்கினால் எவ்வாறுக் காசு பார்க்க முடியும்? அரசு மக்களுக்கு சேவைகள் வழங்கக் கடமைப்பட்டு இருக்கின்றது…ஆனால் தனியார்கள் அவ்வித கடமை ஏதும் அற்றவர்கள்…அவர்களைக் கேள்விக் கேட்க மக்களால் முடியாது…அரசாலே மட்டுமே முடியும். ஆனால் அரசில் இருப்பவர்களே தனியார்களாகச் செயல் பட்டால் யார் யாரைக் கேள்விக் கேட்பது? அது தான் இங்கே நடக்கின்றது.
வணிகமாக பயன்படுத்தப்பட முடியாத ஒரே காரணத்தினால் இயற்கை மருத்துவ முறைகள் இங்கே புறக்கணிக்கப்பட்டுக் கொண்டு இருக்கின்றன…அவ்வாறே அரசு சார் நிறுவனங்களும், மருத்துவமனைகளும் இலாபம் தரமாட்டாது என்றே ஒரேக் காரணியினாலே புறக்கணிக்கப்பட்டுக் கொண்டு இருக்கின்றன.

அனைத்திற்கும் காரணம் ஒன்றே ஒன்று தான்…பணம்…கனவிலும் கற்பனைப் செய்ய முடியாத அளவு பணம்.

அதற்காகத்தான் தனியார் மருத்துவக் கல்லூரிகள் இங்கே காளான்களைப் போல் முளைக்கின்றன…அதனால் தான் தனியார் மருத்துவமனைகள் பல இயங்குகின்றன…அதனால் தான் ஆங்கில மருத்துவம் தழைத்து விளங்குகின்றது. அதனால் தான் இன்றைக்கு மருத்துவத்திற்கு ஆகும் செலவுகள் எகிறிக் கொண்டே போகின்றன…ஆயினும் உடல் முற்றிலுமாக குணமாக மாட்டேன் என்கின்றது.

காரணம் இன்றைய சமூகத்தில் உள்ள மருத்துவ முறை நோயாளிகளை வாடிக்கையாளர்களாக மாற்றுகின்றதே அன்றி அவர்களை குணப்படுத்த மாட்டேன் என்கின்றது. நீங்கள் நோயாளியாக இருக்கும் வரை தான் அவர்கள் பிழைப்பினை நடத்த முடியும். இன்று மருத்துவம் என்பது சேவையாக இல்லாது ஒரு வணிகமாகவே மாறி விட்டது.

இதனைத் தடுக்க வேண்டிய அரசாங்கமோ, அந்த வணிகத்தில் இலாபத்தினைப் பார்க்கும் பங்குதாரராகவே தன்னை இன்று வைத்துள்ளது. அதனால் தான் புதியக் கல்லூரிகளை அது திறக்காமல் தனியார்களிடம் விடுகின்றது…அவ்வாறே மருத்துவமனைகளையும் தான். இன்று மருத்துவம் பயில வேண்டும் என்ற எண்ணம் இருக்கும் பலரும் ஆங்கில மருத்துவத்தினையே அவர்களின் சிந்தையில் கொண்டு இருக்கின்றனர். இதனையும் மாற்றாது பேணிப் பாதுகாத்துக் கொண்டு வருகின்றது நம்முடைய அரசு.

காரணமாக அது கூறுவது ஒரு வேடிக்கையான விடயம்…”அனைத்து துறைகளையும் எவ்வாறு அரசாங்கமே ஏற்று ஒழுங்காக நடத்த முடியும்…அது கடினமான ஒரு செயல்” என்று சாக்குபோக்கு சொல்கின்றனர். ஒழுங்காகச் செய்ய வேண்டும் என்று தான் அவர்களுக்கு வாக்களித்து ஆட்சியினை கையில் தந்து இருக்கின்றார்கள் மக்கள்…அவ்வாறு செய்ய முடியவில்லை என்றால் எதற்காக இவர்கள் முன்னே வந்தனர்…தாராளமாக பதவியினை விட்டு விலகி விட வேண்டியது தானே…ஏனெனில் அரசு செய்வதுக் கடினம் என்றுக் கூறும் விடயங்களை செம்மையாகச் செய்யும் மக்கள் இங்கே பலர் உள்ளனர். வாய்ப்புகள் தான் அவர்களுக்கு கிட்டப்பெற மாட்டேன் என்கின்றது. அதனை விடுத்து எங்களால் முடியவில்லை நாங்கள் தனியாரிடம் தந்தோம் என்றுக் கூறுவது எல்லாம் காசு பார்க்கும் செயலே அன்றி வேறு இல்லை.

அரசின் இந்த நிலையினால் தான் காலாவதியான மருந்துகள் கூட நாட்டினுள் சுற்றிக் கொண்டு இருக்கின்றன. மருந்துகள் விற்பனையாகவில்லை என்றால் இலாபம் போய் விடுமே என்ற ஒரே காரணத்திற்காக மட்டுமே காலாவதியான மருந்துக்களை அவை மக்களின் உயிர் பறிக்கும் என்று அறிந்தும் கூட சிலர் நாட்டினில் விற்பனை செய்து கொண்டு இருக்கின்றனர். அவர்களுக்கு எல்லாம் பண மயம். மேலும் அவர்களே அரசிலும் பங்கு வகித்தும் கொண்டு இருக்கலாம்…எனவே அவர்களின் மேல் அரசு நடவடிக்கை எடுக்கும் என்பதினை நாம் நம்பலாமா அல்லது கூடாதா என்பதனை நீங்களே முடிவு செய்துக் கொள்ளுங்கள்.

இந்நிலையில் தான் நம்முடைய பொறுப்புகள் அதிகமாகின்றது. நம்முடைய உடல் நலத்தினை மட்டும் அன்றி நம்முடைய சமூகம், நமக்கு பின் வரக் கூடிய தலைமுறை அவர்களின் உடல் நலத்தினையும் நாம் கருத்தில் கொண்டே செயல் ஆற்ற வேண்டி இருக்கின்றது.

நம்முடைய இயற்கை அறிவினை, மருத்துவ முறையினை பற்றிய தெளிவினை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டி இருக்கின்றது…அதற்காக முயற்சிகளாவது செய்ய வேண்டி இருக்கின்றது. அத்துறைகளில் ஈடுபட்டோரை அணுகி, அவர்கள் கூறும் முறைகள் சரியானவைகளாகத் தெரிந்தால் அவற்றை நாம் மக்களுக்குக் கொண்டு செல்ல வேண்டியக் கடமையும் இருக்கின்றது. மருத்துவம் வணிகம் என்ற நிலையில் இருந்து சேவை என்ற நிலைக்கு கொண்டு வருவது சரியான ஒன்று தானே…காசிருந்தால் மட்டுமே உயிர் காக்கும் மருத்துவம் மருத்துவமா? மருத்துவம் பணத்தின் அடிப்படையிலா கட்டப்பட்டு இருக்க வேண்டும்? மனிதத்தின் அடிப்படையில் அல்லவா அது கட்டப்பட்டு இருக்க வேண்டும். நாம் பெற்ற கல்வி, சிந்தனைத் திறன் ஆகியவை அந்த இலக்கிற்கும் சிறிது பயன்படலாமே…தவறில்லையே….!!!

நம் உடல்நலம்…நம் மருத்துவம்…நம் உரிமை அல்லவா!!!

பி.கு:

1) இக்கருத்துக்களில் தங்களுக்கு மாற்றுக் கருத்துக்கள் ஏதேனும் இருப்பின் தயைக் கூர்ந்து தெரிவிக்கவும். அது எனது சிந்தனையை செம்மையாக்க உதவும்.

2) அதனைப் போன்றே இயற்கை மருத்துவ முறையினை வளர்க்கவோ அல்லது அதனைப் பற்றி அறிந்துக் கொள்ளவோ ஏதேனும் வழிமுறைகள் தங்களுக்கு தோன்றியது என்றால் அதனையும் பகிர்ந்துக் கொள்ளலாம். நிச்சயமாக உதவும்.

3) இந்தப் பதிவில் ஆங்கில மருத்துவத்தினை முற்றிலுமாக மறுத்து பேசவில்லை. அதுவும் ஒரு மருத்துவ முறை தான். ஆனால் பெரும்பாலும் வணிகத்திற்கு அடிமையாய் கிடக்கின்றது. இருந்தும் அதனை நாம் எப்பொழுது பயன் படுத்த வேண்டி இருக்கின்றதோ அப்பொழுது பயன் படுத்தலாம். நம்மிடையே இருக்கும் முறைகளில் இல்லாத தீர்வு வேறொரு முறையில் இருந்தால் ஏற்றுக் கொள்வது முறைதானே. அனைத்துக் குழந்தைகளையும் நாம் கொஞ்சலாம்…ஆனால் அதற்கு அடிப்படையாக அவர்கள் அனைவரையும் நாம் நல்லவர்களாக சமமானவர்களாக வளர்க்க வேண்டும் அல்லவா.

4) இயற்கை மருத்துவக் குறிப்புகளைப் பற்றி தமிழக அரசு வெளி இட்ட ஒரு புத்தகத்தில் இருந்துச் சில குறிப்புகளை நண்பர்களுக்கு இயன்ற நாள்தோறும் அனுப்பி வருகின்றேன். ஒரு விழிப்புணர்வாக இருக்கட்டுமே என்றுக் கருதியே அனுப்புகின்றேன். அவை என் எண்ணப்படி குறிப்புகளுக்காக மட்டுமே இப்பொழுது பயன்படும். அவற்றினை எவ்வாறு செயல் படுத்துவது? எவ்வாறு நடைமுறைக்கு கொண்டு வருவது? அவை சரியானதொன்றாக இருக்குமா என்பதனைக் குறித்து சிந்தனைகள் போய்க் கொண்டு இருக்கின்றன…பல்வேறுக் கனவுகளோடு ஒருக் கணவாய் இதுவும் சுற்றிக் கொண்டு இருக்கின்றது…காண்போம்…என்ன செய்ய முடிகின்றது என்பதனைப் பற்றி!!!

0 கருத்துகள்:

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு