மைதானத்தில் தேவதைகள் : (Angels in the outfield )


உங்கள் வாழ்வில் நீங்கள் விளக்கம் அளிக்க முடியாதவாறு சில சம்பவங்கள் நடந்து இருக்கின்றனவா?. நீங்கள் மிகவும் வேண்டிய ஒன்று நீங்கள் எதிர்பாராத வண்ணம் நிறைவேறுவதை கண்டு இருக்கின்றீர்களா? ஒரு சிறுவனின் வேண்டுதலால் ஏற்படும் அப்படிப்பட்ட சில சம்பவங்கள் ஒரு சிலரின் வாழ்வை எப்படி மாற்றுகின்றன என்பதே 1994ஆம் ஆண்டு வெளிவந்த இந்தத் திரைப்படத்தின் கதை.

குழந்தைகள் காப்பகத்தில் வளரும் இரண்டு சிறுவர்கள். அவர்கள் உயிருக்கு உயிராய் நேசிக்கும் அவர்கள் ஊரின் மட்டைப் பந்து (baseball) அணி. தோற்றுக் கொண்டே இருக்கும் அந்த அணியின் பயிற்சியாளராய் விளங்கும் காயத்தால் ஓய்வு பெற்ற முன்னாள் பிரபல மட்டைப்பந்து வீரர். சில ஆண்டுகளுக்கு முன்னால் வரை உலகின் சிறந்த அணிகளில் தலை சிறந்த பந்து வீச்சாளராக இருந்துவிட்டு காயம் காரணமாக பந்தை வீச முடியாமல் தனது விளையாட்டுக் காலத்தின் கடைசி நாட்களை அந்த அணியில் இருந்து விளையாட முடியாமலே எண்ணிக் கொண்டு இருக்கும் ஒரு வீரர். வெற்றியேப் பழக்கப்பட்டு இராத இதர வீரர்கள். அப்புறம் சில தேவதைகள். இவர்கள் தான் இந்தக் கதையின் மாந்தர்கள்.

சிறு வயதிலேயே தனது அன்னையை இழந்த ரோஜெருக்கு ஒரே ஒரு கனவு தான். அவன் அவனது தந்தையுடன் சேர்ந்து மகிழ்ச்சியாய் ஒரு குடும்பமாக வாழ வேண்டும். ஆனால் பொறுப்பு இல்லாது ஊர் சுற்றித் திரியும் அவனது தந்தையோ அவனை கவனிக்காது போகவே அரசாங்கம் நடத்தும் குழந்தைகள் காப்பகத்தில் அவன் சேர்க்கப் படுகின்றான். மிக விரைவில் அதே காப்பகத்தில் இருக்கும் மில்டன் என்றொரு சிறுவனுடைய நட்பினாலும் அந்த காப்பகத்தை நிர்வகிக்கும் மேகி (Megi) என்ற பெண் காட்டும் அன்பினாலும் ரோஜெர் அந்த காப்பகத்தில் மகிழ்ச்சியாக இருக்கின்றான். இருந்தும் மனதின் ஒரு ஓரத்திலே என்றாவது ஒரு நாள் அவனது தந்தை அவனைக் கூட்டிச் செல்ல வருவார் என்ற எண்ணத்தை மட்டும் வளர்த்துக் கொண்டே வருகின்றான். காப்பகத்தில் 'மேகி'க்கி உதவி புரியும் தருணங்கள் தவிர மற்ற நேரம் எல்லாம் ரோஜெரும் மில்டனும் அவர்கள் ஊரின் மைதானத்திலையே பொழுதைக் கழிக்கின்றனர்.
காரணம்...
 ஏன்ஜெல்ஸ் (Angels)!!! அவர்கள் ஊரின் மட்டைப் பந்து அணி. ரோஜெர் மற்றும் மில்டனின் ஒரே லட்சியம் அவர்கள் ஊரின் அணி சில போட்டிகளையாவது வெல்வதைக் காண வேண்டும். கோப்பையை வெல்லா விட்டாலும் பரவாயில்லை, இது எங்கள் அணி.. இதற்குத் தான் நாங்கள் எங்களது ஆதரவை அளிப்போம் என்று ஊர் முழுக்க கனவுகளோடு சுற்றிக் கொண்டு இருக்கின்றனர் அவர்கள் இருவரும்.

ஆனால் ஏன்ஜெல்ஸ் அணியின் நிலைமையோ மிகவும் பரிதாபத்துக்குரியதாக இருக்கின்றது. தொடர் தோல்விகள்... திறமை இருந்தும் அதை உணராத வீரர்கள்... இவை அனைத்தின் காரணமாக போட்டித் தொடரில் கடைசி இடம்...போட்டியில் இவர்கள் வெல்ல வேண்டுமானால் எதாவது அதிசயம் தான் நிகழ வேண்டும் என்ற நிலைமை. இயல்பிலையே கோபக்காரராக இருக்கும் அந்த அணியின் பயிற்சியாளர் ஜார்ஜ்க்கு இந்த சூழ்நிலை மிகவும் கோபத்தை உண்டாக்குகின்றது. அந்த கோபத்தை எல்லாம் அந்த அணி வீரர்களிடம் கொட்டித் தீர்க்கிறார்... அதுவும் குறிப்பாக மெல் கிளார்க் என்னும் காயத்தால் அவதிப்படும் ஒரு வீரரின் மேல். காரணம், ஜார்ஜும் காயத்தின் காரணத்தால் விளையாடுவதில் இருந்து ஓய்வுப் பெற்றவர். 'மெல்'லால் விளையாட முடியாது என்று தெரிந்த பின்னும் இன்னும் அவன் ஓய்வு பெறாமல் விளையாட முயற்சி செய்வது அவருக்கு வீணாகத் தெரிகின்றது. இதன் காரணமாகவே 'மெல்'லுக்கு விளையாட வாய்ப்புகளும் மறுக்கப்படுகின்றன. இருந்தும் மெல் காத்து இருக்கின்றான் வாய்ப்புகளுக்காக. ஜார்ஜும் காத்து இருக்கின்றார் வெற்றிகளுக்காக.

அந்த சமயத்தில் தான் ரோஜெரின் அப்பா அவனை சந்திக்க அவனது காப்பகத்திற்கு வருகின்றார். தன்னை கூட்டிச் செல்லத் தான் வந்து இருக்கின்றார் என்று நினைத்த ரோஜெருக்கு, அவர் தொலைதூரப் பயணத்திற்கு தனியாய் செல்ல இருப்பதாக சொல்லும் செய்தி அதிர்ச்சி அளிக்கின்றது. "பின்னர் எப்பொழுது என்னை வந்து கூட்டிச் செல்வீர்கள்" என்று அப்பாவியாய் கேட்கும் ரோஜெரிடம் "உனது அணி இந்த கோப்பையை வெல்லும் அன்று நான் உன்னை அழைத்துச் செல்வேன்" என்று விளையாட்டாய் கூறி விட்டு கிளம்புகின்றார் அவனது தந்தை. அவர் சொல்லியதை உண்மை என்று நம்பும் ரோஜெரும் இரவு உறங்கப் போவதற்கு முன் "இறைவா! எனக்கென ஒரு குடும்பம் வேண்டும். அதற்கு எனது அணி வெல்ல வேண்டும். அதற்காக தயவு செய்து உதவி செய்" என்று வேண்டி விட்டுப் படுக்கின்றான்.

அடுத்த நாள், வழக்கம் போல் மண்ணைக் கவ்விக் கொண்டு இருக்கும் தனது வீரர்கள் திடீர் என்று நன்றாக விளையாடுவதைக் கண்டு ஆச்சர்யப்படுகின்றார் ஜார்ஜ். ஏன்! ஒட்டு மொத்த மைதானமே ஆச்சர்யப்படுகின்ற்து. ரோஜெரும் ஆச்சர்யப் படுகின்றான்."ஏன் அந்த தேவதைகள் திடீர் என்று தோன்றி அவனது அணியின் வீரர்களுக்கு உதவுகின்றார்கள்?" என்று. அவன் ஆச்சர்யப்பட்டுக் கொண்டு இருக்கும் போதே ஒரு தேவதை அவனது அருகில் தோன்றி அவனின் வேண்டுதலைக் கேட்டு அவனுக்கு உதவி புரிய அவர்கள் வந்து இருப்பதாகவும் அவனின் கண்களைத் தவிர வேறு யார் கண்ணுக்கும் அவர்கள் புலப்பட மாட்டார்கள் என்றும் கூறிவிட்டு மறைகின்றது.

தேவதைகளின் உதவியால் அந்த அணியும் தனது முதல் வெற்றியைப் பெறுகின்றது. எப்படி தனது அணியின் வீரர்கள் திடீரென்று மிகவும் திறமையாக விளையாடினார்கள் என்று ஜார்ஜ் குழம்பிக் கொண்டு இருக்கும் பொழுது ரோஜெர் அவரிடம் தேவதைகளைப் பற்றி சொல்லுகின்றான். முதலில் அதை நம்ப மறுக்கும் ஜார்ஜ், அவரது அணி தொடர்ந்து ஆச்சர்யப் படும் வகையில் வெற்றிகளைக் குவிக்க ரோஜெரை நம்ப ஆரம்பிக்கின்றார். அவரின் அழைப்பின் பெயரிலே அந்த அணி விளையாடும் அனைத்து போட்டிகளுக்கும் ரோஜெரும் மில்டனும் செல்லும் வாய்ப்பு கிடைக்கின்றது. "அவர் கோபப்பட்டுக் கத்துவது தேவதைகளுக்கு பிடிக்கவில்லை" என்று ஒரு நாள் ரோஜெர் ஜார்ஜிடம் சொல்ல அவர் அன்றிலிருந்து தனது அணியிடம் கோபம் காட்டுவதை தவிர்த்துவிட்டு பயிற்சியாளராக அன்பைக் காட்ட ஆரம்பிக்கின்றார். அதேப் போல தேவைதைகளின் செயலால் மெல்லுக்கும் விளையாட ஒரு வாய்ப்பு வருகின்றது. அவனுக்கு துணையாய் தேவதைகள் நிற்க அவன் மிகவும் சிறப்பாக விளையாட ,பத்திரிகைகள் அவனை மீண்டும் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடுகின்றன. அந்த அணியின் வீரர்களுக்கு அவர்களுள் ஏதோ நிகழ்வது புரிகின்றது ஆனால் அது என்ன என்று தெரியாது இருக்கின்றனர். இருந்தும் முதல் முறையாக ஒரு அணியாக அவர்கள் உணருகின்றனர்.
தொடர் வெற்றிகளின் மூலமாக அந்த அணி போட்டியில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறுகின்றது.

எல்லாம் நல்ல படியாக போய்க் கொண்டு இருக்கும் பொழுது, அந்த அணியின் வெற்றிகளுக்கு தேவதைகள் காரணம் என்று ஜார்ஜ் நம்புகின்றார் என்ற செய்தி வெளியில் கசிய, "இப்படி முட்டாள் தனமாக இந்த ஆள் நம்பிக் கொண்டு இருகின்றாரே... தேவதைகள் இல்லை என்று சொல்லிவிடு இல்லையெனில் உன்னை வேலையை விட்டு தூக்குவதை தவிர எங்களுக்கு வேறு வழி இல்லை" என்று அந்த அணியின் நிர்வாகம் சொல்லி விடுகின்றது. அதே சமயத்தில் ரோஜெரின் தந்தை அவருக்கும் அவனுக்கும் ஒரு தொடர்பும் இல்லை என்று நீதி மன்றத்தில் அனுமதியை வாங்கி விட மனம் உடைந்து போகின்றான் ரோஜெர். அனைத்துக்கும் மேலாக இறுதிப் போட்டிகள் திறமையாலையே வெல்லப்பட வேண்டும், அந்த போட்டியில் தேவதைகள் உதவ மாட்டார்கள் என்று தேவதைகளும் சொல்லிவிடுகின்றார்கள்.

ஏன்ஜெல்ஸ் அணி இறுதிப் போட்டியை வென்றார்களா? ஜார்ஜின் வேலை என்ன ஆயிற்று? ரோஜெருக்கு அவன் விரும்பியவாறே ஒரு குடும்பம் அமைந்ததா? இறுதி போட்டியில் உலகத்தின் கண்கள் முழுவதும் மெல்லின் மீது இருக்க , தேவதைகளின் உதவி இன்றி அவன் சாதித்தானா? என்பதே மீதிக் கதை.

நகைச்சுவைக் கலந்த ஒரு நல்ல குடும்பப் படத்தை காண விரும்பும் அனைவரும் கண்டிப்பாகக் காண வேண்டிய ஒரு திரைப்படம்.

அனைத்து நடிகர்களும் அவர்களது பாத்திரங்களை உணர்ந்து நடித்து இருக்கின்றார்கள். அதுவும் குறிப்பாக அணியின் பயிற்சியாளராக வரும் டேணி க்ளோவர் மிகவும் சிறப்பாக நடித்து இருக்கின்றார். படத்தில் அவரது கதாபாத்திரத்தை மையமாக வைத்து "முதலில் என்னை வெறுத்த அனைவரையும் நானும் வெறுக்க ஆரம்பித்தேன். வெறுப்பு தான் வாழ்க்கை என்று ஆனது. இதோ நான் இப்பொழுது தனியாக நிற்கின்றேன். வெறுப்புக்கு வெறுப்பு தீர்வாகாது. நான் அவர்களிடம் அன்பினைக் காட்டி இருக்க வேண்டும்." போன்ற சில கருத்துகளும் படம் முழுக்கவே சொல்லப் பட்டு இருக்கின்றன.

என் கருத்து - இந்த படத்தில் தனிச் சிறப்பென எதுவும் இல்லை. ஆனால் மந்திரம் உள்ளது. நம்மை படத்தோடு கட்டிப் போடும் மந்திரம் உள்ளது.

நம்புவோம்.... அவர்கள் பார்த்துக் கொண்டு இருக்கின்றார்கள்!!! :) 

6 கருத்துகள்:

பகிர்வுக்கு நன்றி

டெம்ப்ளட் மாத்தவும்.

தங்கள் பின்னோட்டத்திற்கு நன்றி தோழரே!!!

ஏன் டெம்ப்ளட் இல் ஏதாவது பிரச்சனை வருகின்றதா?

குறித்து வைத்துக் கொளகின்றேன்.

சரி பார்ப்பு சொல் நீக்கி விடுங்க.

வழக்கம் போல் மிகச்சிறப்பாக ஒரு திரைப்படத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறீர்கள்! ஆனால் வழக்கத்திற்கு மாறாக உங்களுடைய எழுத்தில் சில பிழைகள் உள்ளன.. தெரிந்தோ தெரியாமலோ "நம்புவோம்.... அவர்கள் பார்த்துக் கொண்டு இருக்கின்றார்கள்!!!" என்று மாவீரர் நாள் அன்று குறிப்பிட்டிருக்கிறீர்கள்... நம்புவோம் நம்முடைய நம்பிக்கை வீண் போகாதென்று!

@ஜோதிஜி,
தங்கள் பின்னோட்டத்திற்கு நன்றி ஜோதிஜி.. சரி பார்ப்பு சொல்லை நீக்கியாயிற்று!

@பகுத்தறிவு,
தோழர் பகுத்தறிவு!!!
நேர்மையான நம்பிக்கைகள் வீணாவதில்லை! நிச்சயம் மாவீரர்கள் உயிர்த்து எழுவார்கள். அதே போல் பிழைகள் வராதவாறு இனிமேல் கவனமாய் பார்த்துக் கொள்ளுகின்றேன். பின்னோட்டத்திற்கு நன்றி.

Good. I have also seen this movie,.

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு