கத்திக் கை எட்வர்ட் (Edwards Scissor hands) :

1990ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு வித்தியாசமான காதல் கதை.

ஒரு குன்றின் உச்சியில் ஒரு பாழடைந்த மாளிகை. அந்த மாளிகையினுள் அனாதையாய் கைகளுக்கு பதிலாய் கத்திகளையும் கத்திரிக்கோள்களையும் கொண்டவாறு வசிக்கும் ஒரு அப்பாவிச் செயற்கை மனிதன். அவன் மேல் பாவப்பட்டு அவனை ஊருக்குள் அழைத்து வந்து தங்கள் குடும்பத்தினுள் அவனையும் ஒருவனாகச் சேர்த்துக் கொள்ளும் ஒரு குடும்பம். அந்த குடும்பத்தில் உள்ள பெண்ணின் மேல் அவனுக்கு உண்டாகும் காதல். அந்த காதலுக்கு எதிர்ப்பாய் அந்த பெண்ணின் காதலன். இறுதியில் அந்த செயற்கை மனிதனின் காதல் கை கூடியதா என்பதே கதை.

சுருக்கமா சொல்ல வேண்டும் என்றால் இந்தப் படம் அதிரடி சண்டைகள், கிராபிக்ஸ் வித்தைகள் என்று எதுவும் இல்லாத அந்த கால எந்திரன் படம் என்றுக் கூட சொல்லலாம்.

ஆவான் என்றொரு இடத்தில உள்ள குன்றில் ஒரு மாளிகையில் ஒரு விஞ்ஞானி தனது படைப்புகளுக்கு எல்லாம் தலைமையான படைப்பாய், தனிமையாய் இருக்கும் அவருக்கு ஒரு மகனாய் ஒரு செயற்கை மனிதனை உருவாக்க முயன்றுக் கொண்டு இருகின்றார். அவரின் முயற்சியின் பயனாய் எட்வர்ட் என்னும் செயற்கை மனிதனும் உயிர் பெறுகின்றான். பார்ப்பதற்கு உண்மையான மனிதனைப் போலவே இருக்கும் எட்வர்டிடம் ஒரே ஒரு குறை. அவனுக்கு கைகள் கிடையாது. தனது மாளிகையின் தோட்டத்தில் உள்ள செடிகளை எல்லாம் அழகுப் படுத்தி சீர் அமைப்பதற்கு எட்வர்டிற்கு வசதியாக இருக்க வேண்டும் என்று அவனுக்கு கைகளுக்கு பதிலாய் கத்திகளையும் கத்திரிக்கோள்களையும் வைத்துப் படைத்தது இருந்தார் அந்த விஞ்ஞானி. எட்வர்ட் தோட்டக் கலைகளில் சிறந்தவனான உடனையே அவனுக்கு கத்திகளுக்கு பதிலாகஉண்மையானக் கைகளை மாற்றி விடுவோம் என்று காத்து இருந்த விஞ்ஞானி, அந்த நாள் வந்த பொழுது எட்வர்டிற்கு கைகளை மாட்டாமலேயே மாரடைப்பால் இறந்துப் போகிறார். அந்த பதட்டத்தில் எட்வர்ட் அவனுடைய கத்திக் கைகளால் அந்த உண்மையான கைகளை எடுக்க முயல, அந்த கைகள் கிழிந்துப் போகின்றன. எனவே தனது கத்திக் கைகளுடனேயே அந்த மாளிகையில் தோட்டத்தை பராமரித்துக் கொண்டே தனது காலத்தை கழிக்க ஆரம்பிகின்றான்.

பின் ஒரு நாள், பெக் என்னும் பொருட்களை விற்பனை செய்யும் பெண் ஒருத்தி, எட்வர்ட் தங்கி இருக்கும் மாளிகைக்கு பொருட்களை விற்பனை செய்ய போகும் போது தனியாய் இருக்கும் எட்வர்டின் மீது பாவம் கொண்டு அவனை அவளுடன் அவளின் வீட்டிற்க்கு வர அழைக்கின்றாள். எட்வர்டும் அவளுடன் அவளின் வீட்டிற்க்கு சென்று அவளின் குடும்பத்தில் ஒன்றாகி விடுகின்றான்.

பெக்கின் குடும்பத்தினர் அனைவருக்கும் பார்த்த முதலிலேயே எட்வர்டைப் பிடித்து விடுகின்றது. பெக்கின் மூத்த மகள் கிம்மைத் தவிர. கிம் முதலில் எட்வர்டை ஒரு மிருகமாகப் பார்க்க ஆரம்பிகின்றாள். பின் போகப் போகப் எட்வர்டின் உண்மையான குணம் அறிந்து அவளுக்கும் அவனைப் பிடிக்க ஆரம்பிக்கின்றது. அதற்குள் எட்வர்ட் பெக்கின் குடும்பம் வசிக்கும் ஆவான் பகுதியில் தனது தோட்டக் கலையின் மூலமாகவும் தனது சிகை அலங்காரத் திறமைகள் மூலமாகவும் நல்ல பெயர் பெற்று அந்த மக்களுள் இணைந்து விடுகின்றான். அவனின் கத்திக் கைகளும் கற்பனைத் திறனும் அவனுக்கு புகழை வாரிக் குவித்த வண்ணம் இருக்கின்றன. அனைத்தும் நன்றாகவே போய்க் கொண்டு இருக்கும் வேளையில் எட்வர்டிற்கு புதிதாய் பிரச்சனை ஜிம் என்றவனின் வடிவில் வருகின்றது. ஜிம் கிம்மின் காதலன். அவனுக்கு சுத்தமாகவே எட்வர்டை பிடிக்கவில்லை. ஒருநாள் தனது தந்தை தான் கார் வாங்குவதற்கு பணம் தரவில்லை என்றவுடன், தன் சொந்த வீட்டிலேயே திருடுவதற்கு திட்டமிட்டு அந்த திட்டத்தில் எட்வர்டையும் கிம்மின் உதவியால் சேர்த்துக் கொள்கின்றான் ஜிம். அந்த திருட்டு முயற்சி தோல்வி அடைய எட்வர்டைத் தவிர மற்ற அனைவரும் தப்பி விடுகின்றார்கள். எட்வர்டை போலீஸ் கைது செய்து கொண்டு போய் விடுகின்றது.

பின்னர் எட்வர்ட் தனிமையிலேயே வளர்ந்ததால் அவனுக்கு நல்லதுக் கெட்டது தெரியாது, அவனுக்கு அதை யாரவது சொல்லிக் கொடுக்க வேண்டும் அது வரை அவன் மேல் சட்டப்படி எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க முடியாது என்று நீதிபதி சொல்லி எட்வர்டை விடுதலை செய்கிறார். "இன்னொரு முறை இவனால் இந்த பகுதி மக்களுக்கு எதாவது பிரச்சனை வந்தது என்றால் இவனை நான் சிறையில் அடைக்க வேண்டி இருக்கும்" என்று ஒரு எச்சரிக்கை செய்துவிட்டு எட்வர்டை பெக்கின் குடும்பத்திடம் விட்டு விட்டு செல்கின்றார் எட்வர்டை கைது செய்த போலீஸ் அதிகாரி. அதன் படியே எட்வர்டிற்கு நல்லதையும் கெட்டதையும் சொல்லிக் கொடுக்க பெக்கின் குடும்பம் முயல்கிறது. அந்த சம்பவத்திற்கு பின் எட்வர்ட் என்ன தான் நல்லது செய்தாலும் அந்த பகுதி மக்கள் எட்வர்டை ஒரு திருடனாகப் பார்ப்பதை நிறுத்த மாட்டேன்கின்றார்கள். இந்த காலக் கட்டத்தில் கிம்மிற்கு ஜிம்மின் மேல் வெறுப்பும் எட்வர்டின் மேல் பற்றும் வர ஆரம்பிக்கின்றது. ஒரு நாள் இரவு ஜிம்மும் அவனது நண்பனும் குடித்துவிட்டு கிம்மின் வீட்டிற்க்கு வேகமாக காரில் வரும் பொழுது எதிர்பாராவிதமாக காருக்கு நடுவில் கிம்மின் தம்பி கெவின் வந்து விட, கெவினைக் காப்பற்றுகின்றான் எட்வர்ட். காப்பாற்றப்பட்ட கெவின் நலமாக இருக்கின்றானா என்று அறிய அவனின் முகத்தில் தன்னுடைய கத்திக் கையை வைத்துப் பார்க்கும் பொழுது எட்வர்டை அறியாமலேயே கெவினின் முகத்தில் கத்தி கீறி விட, சுற்றி இருந்தவர்கள் எட்வர்ட் தான் கெவினைத் தாக்குகின்றான் என்று தப்பாக புரிந்துக் கொண்டு அவனைத் துரத்துகின்றனர்.

எட்வர்ட் அவர்களிடம் இருந்து ஓடி மீண்டும் தனது மாளிகைக்கே செல்கின்றான். அவனைத் துரத்தியவாறே ஆவான் நகர மக்களும், அவனைக் கொள்வதற்காக ஜிம்மும், அவனைக் காப்பற்றுவதற்காக கிம்மும் அந்த மாளிகைக்குள் செல்கின்றனர்.

ஜிம் எட்வர்டைக் கொன்றானா?. எட்வர்டின் காதல் என்னவாயிற்று?. கிம் என்னவானாள்?. என்பது தான் படத்தின் கிளைமாக்ஸ்.

படம் முழுவதையும் தனது நடிப்பால் தூக்கி நிறுத்துகின்றார் ஜானி டெப்(johnny depp). அப்பாவியான செயற்கை மனிதனாய், வசனங்கள் அதிகம் இன்றி அவர் நடிப்புத் திறமையை வெளிப்படுத்த இந்த படத்தில் வாய்ப்புகள் அதிகம். அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொண்டு எட்வர்ட் என்ற அந்த கதாப்பாத்திரதிற்கு உயிர் கொடுத்து இருக்கின்றார். அவருடைய திரைப்பட வாழ்க்கை பயணத்தில் இந்த படம் ஒரு மிகப் பெரிய திருப்புமுனையாய் அமைந்தது என்றால் அது மிகையாகாது.

ஜானி டெப்பின் திறமைக்கு தீனி அளிக்கும் படி காட்சிகளை உருவாக்குவதில் இயக்குனர் டிம் பர்டன் (tim burton) வெற்றிப் பெற்று இருக்கின்றார் என்று தான் சொல்ல வேண்டும். ஆரம்பக் காட்சியில் இருந்தே தனது கற்பனை உலகைத் திரையில் அருமையாக விவரித்துக் காட்டி இருக்கின்றார்.

எளிமையான காதல் கதைகளையும், கற்பனைக் கதைகளையும் விரும்புபவர்கள் நிச்சயம் இந்த படத்தை ரசிப்பார்கள். அதுவும் குறிப்பாக ஜானி டெப்பின் ரசிகர்களுக்கு இந்த படம் நிச்சயமாக காண வேண்டிய ஒரு படம்.   

5 கருத்துகள்:

படம் பற்றிய அறிமுகம் நன்றாக இருக்கிறது! படம் வந்து இருபது ஆண்டுகள் ஆன பிறகாவது கதை முடிவைச் சொல்லக்கூடாதா?

தங்களின் பார்வை நல்லாயிருக்கிறது வாழ்த்துக்கள்....

நல்ல விமர்சனம்.. உங்கள் பதிவு படம் பார்க்கத் தூண்டுகிறது. வாழ்த்துக்கள்

நண்பர் பகுத்தறிவிற்கு,
முடிவினைச் சொல்லலாம் என்று தான் முதலில் நினைத்து இருந்தேன். ஆனால் அது அந்த படத்தின் சுவாரசியத்தை குறைத்து விடும் என்ற எண்ணம் தோன்றியதால் அதை தவிர்த்து விட்டேன். தங்கள் பதிவிற்கு நன்றி.

ம.தி.சுதா அவர்களுக்கும் மதுரை சரவணன் அண்ணன் அவர்களுக்கும்,
தங்கள் வாழ்த்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி.

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு