சில சம்பவங்கள் நிகழும் பொழுது, அவை ஏற்கனவே நிகழ்ந்து இருப்பதனைப் போன்ற உணர்வினை நாம் சில முறை பெற்று இருப்போம். அதனைப் பற்றியே தான் நாம் இப்பொழுது காண வேண்டி இருக்கின்றது. அதற்கு கிருத்துவத்தில் வரும் ஒரு நிகழ்வினை நாம் காண்பது நலமாக இருக்கும். அந்த நிகழ்வு இது தான் :

தன்னை யூதர்கள் கைது செய்வார்கள் என்றும் அவ்வாறு அவர்கள் அவரை கைது செய்யும் பொழுது அவருடைய சீடர்கள் அனைவரும் அவரை விட்டுவிட்டு ஓடி விடுவார்கள் என்றுமே இயேசு கூறுகின்றார். அதனை கேட்ட பேதுரு என்கின்ற சீடன் ஒருவன், மற்றவர்கள் இயேசுவை விட்டு விலகிச் சென்றாலும் அவன் அவரை விட்டு செல்ல மாட்டான் என்றே உறுதி கூறுகின்றான். ஆனால் அதற்கு இயேசுவோ, மறுநாள் விடியற்பொழுதினில் சேவல் கூவுவதற்கு முன்னர் மூன்று முறை அவன் அவரை மறுப்பான் என்றே கூறுகின்றார். அவர் கூறியதனைப் போன்றே 'இயேசுவை தனக்கு தெரியாதென்று' அவன் மூன்று முறை கூறியதாக கிருத்துவத்தில் வருகின்றது. இங்கே தான் நாம் ஒரு கேள்வியினைக் காண வேண்டி இருக்கின்றது.

1) ஒவ்வொரு மனிதனுக்கும் சுயமாக முடிவெடுக்கும் ஆற்றல் இருக்கின்றது. அதன்படி தான் பேதுரு 'உங்களை நான் மறுக்க மாட்டேன்' என்று இயேசுவிடம் கூறுகின்றான். அந்நிலையில் எதற்காக இயேசு அவனை நோக்கி 'நீ நாளை மூன்று முறை என்னை மறுப்பாய்' என்று கூற வேண்டும்? அல்லது எப்படி அவரால் அவ்வாறு கூற இயலும்?

அதாவது...நீ நாளை இதனைத் தான் செய்வாய் என்று தெளிவாக கூறி விட்டால், அங்கே அவனுடைய சிந்தனைக்கோ அல்லது சுயமாக முடிவெடுக்கும் திறனுக்கோ என்ன வேலை இருக்கின்றது?

கிருத்துவத்தின்படி இயேசு கடவுள். கடவுளே ஒருவனை நோக்கி நீ இதனைத் தான் செய்வாய் என்று கூறி விட்டால், அவனால் அதனை மாற்ற இயலுமா? இயேசுவை மறுக்க கூடாது என்ற எண்ணத்தினை பேதுரு உறுதியாக கொண்டிருந்தாலும், இயேசுவே 'நீ என்னை மறுப்பாய்' என்று கூறிய பின்னர், அவனால் அவரை மறுக்காது இருக்க முடியுமா? அவ்வாறு அவன் மறுக்காது இருந்திருத்தால் இயேசு கூறியது நடக்காது போய் இருக்குமே. அவர் பொய்/தவறாக கூறியதாக போய் இருக்குமே. ஆனால் இறைவன் எதனையும் தவறாக கூற முடியாதே. அந்நிலையில் பேதுருவினால் இயேசுவை மறுக்காமல் இருந்து இருக்க முடியுமா என்ன? அவனுக்கு சுயமாக முடிவெடுக்கும் ஆற்றல் பயன்பட்டு இருக்குமா என்ன? அப்படி இருக்க இயேசு எதற்காக அவ்வாறு அவன் தன்னை மறுப்பான் என்று கூறி இருக்க வேண்டும்?

ஒவ்வொரு மனிதனுக்கும் சுயமாக முடிவெடுக்கும் உரிமை இருக்கின்றது. ஆனால், நீ இதனைத் தான் எதிர்காலத்தில் செய்வாய் என்று உறுதியாக ஒருவர் கூறும் பொழுது அந்த சுயமாக முடிவெடுக்கும் உரிமை கேள்விக்குள்ளாகின்றது.

'இதனைத் தான் நான் செய்வேன் என்று சொல்லுகின்றீர்கள். ஆனால் நான் அதனை செய்ய விரும்பவில்லை என்றால் என்னால் என்னால் அதனை செய்யாது இருக்க முடியுமா அல்லது என் விருப்பத்திற்கு மாறாக அதனைத் தான் நான் செய்துக் கொண்டிருப்பேனா?...அவ்வாறு என் விருப்பத்திற்கு மாறாக நான் செய்வேன் என்றால் இங்கே என்னுடைய விருப்பத்திற்கும் சுயமாக முடிவெடுக்கும் திறனுக்கும் பயன் என்ன?' என்கின்ற கேள்வி இயல்பாகவே அந்த சூழலில் எழத் தான் செய்யும். இப்பொழுது இக்கேள்விக்குத் தான் நாம் பதிலினைக் காண வேண்டி இருக்கின்றது. அதற்கு கிருத்துவத்தில் நாம் கண்ட அந்த நிகழ்வினையே மீண்டும் காணலாம்...வேறு கோணத்தில்.

யூதர்கள் தன்னை கைது செய்வார்கள் என்று இயேசு கூறிய பொழுது அவருடைய சீடர்கள் யாரும் அதனை பெரிதாக கருதவில்லை. அத்தகைய ஒரு நிகழ்வானது உடனடியாக நிகழ்வும் என்று அவர்களில் ஒருவன் கூட கற்பனை செய்து இருக்கவில்லை. இயேசுவை கைது செய்ய முடியாது என்றும் அவ்வாறு ஏதேனும் நடந்தாலும் ஏதேனும் அதிசயம் பண்ணி அவர் தப்பி விடுவார் என்றுமே அவர்கள் நம்பிக்கை கொண்டிருந்தனர். அத்தகைய தெளிவினைத் தான் அவர்களது ஆன்மாவானது பெற்று இருந்தது. இயேசு அதனை அறிவார். தன்னுடைய சீடர்களின் புரிதலையும் அவர்களது ஆன்மாவினது நிலையினையும் அவர் நன்கறிந்து இருந்தார். ஆகையால் தான் அவர்கள் தன்னை விட்டு விலகி ஓடுவர் என்று அவரால் கூற முடிந்தது.

இயேசு கைது செய்யப்படுவார் என்பதனை அவரது சீடர்கள் எவரும் நம்பி இருக்கவில்லை. ஆனால் அவர்களது அந்த நம்பிக்கையினை உடைக்கும் வண்ணம் எப்பொழுது இயேசு கைது செய்யப்பட்டாரோ, அப்பொழுது என்ன செய்வது என்பதனை அறியாது அவர்கள் தப்பி ஓடினர். ஏனென்றால் அவர்களது ஆன்மாவின் தெளிவு அந்நிலையில் தான் இருந்தது. சுயமாக முடிவெடுக்கும் ஆற்றல் அவர்களிடம் அப்பொழுதும் இருக்கத் தான் செய்தது...அவர்களால் ஓடாமல் இருந்து இருக்க முடியும் தான்...ஆனால் அந்த ஆற்றலினை பயன்படுத்தும் தெளிவு அவர்களிடம் அங்கே இல்லாது இருந்தது. இயேசுவை அவர்கள் தெளிவாக புரிந்துக் கொள்ளாமல் தான் இருந்தனர். இயேசு அவர்களுக்கு இராஜ்யத்தினை மீட்டுக் கொடுப்பார் என்றே அவர்கள் நம்பி இருந்தனர். அவரை யாரும் கைது செய்ய முடியாது என்றும் அவர்கள் நம்பி இருந்தனர். ஆனால் அவர்களது நம்பிக்கைக்கு மாறாக எப்பொழுது இயேசு கைது செய்யப்பட்டாரோ அப்பொழுது 'என்னயா நடக்குது...கைது செய்ய முடியாது என்று எண்ணிக் கொண்டிருந்தோம்...ஆனால் இயேசுவை கைது செய்து விட்டார்களே...இனி நம்மையும் அல்லவா பிடித்துக் கொள்வார்கள்...என்ன செய்வது...' என்ற குழப்பத்தின் காரணமாகவும் பயத்தின் காரணமாகவும் அவரது சீடர்கள் அவரை விட்டு விலகி ஓடினர். அவர்களால் வேறொன்றும் செய்து இருக்க முடியாது...காரணம் அவர்களது புரிதல் அந்நிலையில் தான் இருந்தது.

அதே நிலை தான் பேதுருவுக்கும். இயேசுவை அவனாலும் முழுமையாக புரிந்துக் கொள்ள முடியாத ஒரு நிலை தான் இருந்தது. அதனால் தான் போர் வீரர்கள் இயேசுவை கைது செய்ய வரும் பொழுது, ஒரு வாளினை எடுத்து ஒரு வீரனின் காதினை வெட்ட அவன் முயன்றான். 'ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காட்டு' என்ற இயேசுவின் போதனையினை அவன் முழுவதுமாக புரிந்து இருக்கவில்லை. அதனை இயேசுவும் அறிவார். மேலும் மற்ற சீடர்களை விட பேதுரு தன்னிடம் அதிகம் நம்பிக்கையினை உடையவனாக இருந்தான் என்பதனையும் அவர் அறிந்து இருந்தார். அதனை மெய்ப்பிப்பது போன்றே தான் பேதுரு மட்டும், இயேசு கைது செய்யப்பட்டு விசாரணைக்கு அழைத்துக் கொண்டு செல்லும் பொழுது , அவரை பின்தொடர்ந்து செல்லுகின்றான். வேறு சீடர்கள் எவரும் அவ்வாறு செல்லவில்லை. ஏனென்றால் 'இயேசு எப்படியாவது தப்பி விடுவார்' என்ற நம்பிக்கை பேதுருவிடம் அதிகமாக இருந்தது. அவரை எவராலும் ஒன்றும் செய்ய முடியாது என்றே அவன் நம்பி இருந்தான். ஆனால் எப்பொழுது யூதர்கள் இயேசுவை குற்றவாளியாக முடிவு செய்து அவருக்கு தண்டனை வழங்க வேண்டும் என்று முடிவு செய்தார்களோ அப்பொழுது பேதுரு கொண்டிருந்த அந்த மிச்ச நம்பிக்கையும் கேள்விக்குள்ளானது. பயம் அவனை ஆட்கொண்டது. எனவே தான் எங்கே நம்மையும் பிடித்து தண்டனைக்கு உள்ளாக்கி விடுவரோ என்ற அச்சத்தினால் அவன் இயேசுவை மறுத்தான்.

இவை அனைத்தையும் இயேசு முன்னமே அறிந்து தான் இருந்தார். தன்னுடைய போதனைகளையும் தன்னையும் தன்னுடைய சீடர்கள் முழுமையாக புரிந்துக் கொள்ளவில்லை என்பதனை அவர் அறிந்து இருந்தார். அவர்களது ஆன்மாவானது அடைந்திருந்த புரிதலின் அளவினையும் அவர் அறிந்து இருந்தார். அதன் அடிப்படையிலேயே தான் அவர், அவரது சீடர்கள் அவரை விட்டு விலகி ஓடுவர் என்றும் பேதுரு தன்னை மறுத்தளிப்பான் என்றும் கூறினார்.

இயேசுவின் சீடர்களால் அவரை விட்டு ஓடாமலும், பேதுருவினால் இயேசுவை மறுக்காமலும் இருந்திருக்க முடியும் தான். அவர்களுக்கு அந்த உரிமை, சுயமாக முடிவெடுக்கும் உரிமை இருக்கத் தான் செய்தது. ஆனால் ஒவ்வொரு மனிதனும் அவனது புரிதலின் அடிப்படையிலேயே தான் முடிவெடுக்கின்றான். எனவே இயேசுவின் சீடர்களும் அவர்களது புரிதலின் அடிப்படையிலேயே தான் முடிவெடுத்தனர்.

'இயேசுவை யாரும் எதுவும் செய்து விட முடியாது...அவர் தேர்ந்து எடுக்கப்பட்டவர்...அவர் இசுரவேலரின் இராஜ்யத்தினை மீட்டுக் கொடுப்பார்' என்றே அவர்கள் நம்பி இருந்தனர். ஆனால் அவர்களுடைய நம்பிக்கைக்கு மாற்றாக அங்கே காரியங்கள் நிகழ்ந்த பொழுது, இயல்பாக ஒரு மனிதன் என்ன செய்வானோ அதனையே தான் அவர்கள் செய்து இருந்தனர்.அவர்களது புரிதலின் அளவினை அறிந்திருந்த இயேசுவும் அதன் அடிப்படையிலேயே தான் அவர்கள் எதனை செய்வார்கள் என்பதனை முன் கூட்டியே கூற முடிந்தது.

அதாவது நீ இதனைத் தான் செய்வாய் என்று இயேசு எவரையும் சபிக்கவில்லை...மாறாக அவர்களது ஆன்மாவானது இருந்த நிலையினை அடிப்படையாக கொண்டு அவர்கள் எதனை செய்வர் என்பதனை அவர் முன் கூட்டியே கூறினார். சரி இருக்கட்டும்...இப்பொழுது இந்த சம்பவத்தினை வைத்து எப்படி 'சில சம்பவங்கள் நிகழும் பொழுது, அவை ஏற்கனவே நிகழ்ந்து இருப்பதனைப் போன்ற உணர்வினை நாம் சில முறை பெற்று இருப்போம்' என்பதனை விளக்க முடியும் என்றே காணலாம்...!!!

தொடரும்....!!!

பி.கு:
மிகவும் மேலோட்டமாகவே நாம் இங்கே கருத்துக்களை கண்டு வந்து கொண்டிருக்கின்றோம். மேலும் குறிப்பாக அறிந்துக் கொள்வதற்கும் சிந்திப்பதற்குமே நாம் இவற்றைக் காணுகின்றோம்…எனவே மாற்றுக் கருத்துக்களும்…கூறியுள்ள விடயங்களில் எவையேனும் தவறென்று உங்களுக்கு தோணிற்று என்றால் அத்தவறினை சுட்டிக் காட்டுதலும் வரவேற்கப்படுகின்றன.

0 கருத்துகள்:

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு