கனவினையும் மரணத்தினையும் ஆன்மாவினையும் பற்றி நாம் கண்டு வந்துக் கொண்டிருக்கும் இத்தொடரினில் 'ஒரு நிகழ்வானது நிகழ்ந்துக் கொண்டிருக்கும் பொழுது...அது ஏற்கனவே நிகழ்ந்திருப்பதனைப் போன்ற ஒரு உணர்வினை நாம் உணர்வது எதனால்?' என்பதனையே நாம் இப்பொழுது காண வேண்டி இருக்கின்றது. அதற்கு நாம் மிக முக்கியமான கேள்வியினை காண வேண்டி இருக்கின்றது.

'ஆன்மாவினது ஆற்றலின் எல்லை என்ன?' என்கின்ற கேள்வி தான் அது.

சமயங்களின் கூற்றின்படி இறைவனின் ஒரு பகுதி தான் ஆன்மா. ஆகையால் தான் ஆன்மாவினை உடைய மனிதனால் இந்த உலகினை ஆள முடிகின்றது. அனைத்தையும் அவன் காண்கின்றான்...அனைத்தினைப் பற்றியும் அவன் அறிகின்றான்...அறிந்து அதனை மாற்றவும் செய்கின்றான். இந்த ஆற்றலினை ஒரு மனிதனுக்கு வழங்குவது அவனது ஆன்மா என்றே சமயங்கள் கூறுகின்றன.

அதனை மெய்ப்பிப்பதனைப் போன்றே பல நிகழ்வுகளையும் நாம் அறிய வருகின்றோம் தான். உதாரணமாக,
செவ்விந்தியப் பழங்குடி மக்களைப் பற்றிய கதை ஒன்று உண்டு. அவர்கள் வசிக்கும் இடத்தில் மழை பெய்ய வேண்டுமென்றால் அவர்கள் அனைவரும் ஒன்றாக ஒன்றிணைந்து மழை பெய்ய வேண்டும் என்று வேண்டிக் கொள்வார்கள். அவ்வாறு அவர்கள் அனைவரது சிந்தனையும் மெய்யாக ஒன்றுபட்டு இருக்கும் பொழுது அங்கே மழையும் பொழியுமாம்.

அதனைப் போன்றே தான் நாம் குறி சொல்லும் மக்களையும் காண வேண்டி இருக்கின்றது. போலியான நபர்கள் பலர் இருப்பீனும், மெய்யான நபர்களும் இங்கே இருக்கத் தான் செய்கின்றனர். அவர்கள் தங்களது மனதினை ஒருமுகப்படுத்துவதன் மூலமாக அதன் ஆற்றலினை பெருக்கிக் கொள்ளுகின்றனர். அவ்வாறு அவர்கள் பெற்ற அந்த ஆற்றலின் மூலமாக எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதனை அவர்கள் கூறுகின்றனர். (முதலில் நான் இவற்றை நம்பியதில்லை என்றாலும் அனுபவங்களின் மூலமாக இவற்றில் உண்மை இருப்பதனை அறிந்திருப்பதால் இதனைப் பற்றி இங்கே கூறி இருக்கின்றேன்)

இத்தகைய ஆற்றலினை வழங்கக் கூடியத் தன்மையினை ஆன்மாவானது பெற்று இருக்கின்றது. எப்பொழுது ஒரு மனிதனானவன் தனது ஆன்ம பலத்தினை பெருக்கிக் கொள்ளுகின்றானோ அப்பொழுது அவன் அந்த ஆற்றலினை அறிந்துக் கொள்ளுகின்றான். சரி இருக்கட்டும்...ஆன்மாவின் ஆற்றலினைப் பற்றி சிறிது கண்டாயிற்று...இப்பொழுது அது எவ்வகையில் நம்முடைய கேள்விக்கு பதிலளிக்கப் போகின்றது என்பதனையே நாம் காண வேண்டி இருக்கின்றது.

சென்ற பதிவினில் நாம் கிருத்துவத்தில் இருந்து ஒரு நிகழ்வினைக் கண்டு இருந்தோம். தன்னுடைய சீடன் ஒருவன் தன்னை மூன்று முறை மறுப்பான் என்று இயேசு கூறுகின்றார்...அதன்படியே அச்சீடனும் இயேசுவை மூன்று முறை மறுக்கின்றான். இதனையே நாம் விரிவாக சென்ற பதிவினில் கண்டு இருந்தோம். இப்பொழுது அந்நிகழ்வினையே நாம் மீண்டும் எடுத்துக்காட்டாக எடுத்துக் கொள்ள வேண்டி இருக்கின்றது.

இயேசுவின் நிலை:

இயேசுவை ஒரு மனிதனாகவே தான் நாம் இங்கே காண வேண்டி இருக்கின்றது. கிருத்துவத்தின்படி இயேசு சாத்தானின்(ஆசையின்) தூண்டுதல்களில் இருந்து விலகி தியானத்தின் மூலம் தன்னுடைய ஆவியின் ஆற்றலினை அறிந்து கொள்ளுகின்றார். எனவே அவரது ஆன்ம நிலை வேறு. தனது ஆன்மாவின் ஆற்றலினை இயேசு அறிந்து இருக்கின்றார். அத்தகைய ஆன்மாவானது தனக்கு கட்டுப்பட்டு இருக்கக் கூடிய உலகினைப் பார்க்கின்றது...அங்கே பல்வேறு ஆன்மாக்களும் உலாவிக் கொண்டிருக்கின்றன. அவை அனைத்தையும் அவரால், இயேசுவின் ஆன்மாவினால், காண முடிகின்றது. அந்த ஆன்மாக்கள் இருக்கின்ற நிலையினையும் அவரால் உணர முடிகின்றது. சில ஆன்மாக்கள் அவரை கைது செய்வதற்கு தயாராகிக் கொண்டிருக்கின்றன...சில ஆன்மாக்களோ அவரை விசாரிக்க ஆயுத்தமாகிக் கொண்டிருக்கின்றன...இவ்வாறு ஒவ்வொரு ஆன்மாவின் நிலையினையும் அவரால் அறிந்து உணர்ந்துக் கொள்ள முடிகின்றது. அதன் அடிப்படையிலேயே அவரால் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று கூற முடிகின்றது.

சீடர்கள் மற்றும் மற்ற மக்களின் நிலை:

இயேசுவின் சீடர்களோ அல்லது மற்ற மக்களோ தங்களது ஆன்ம பலத்தினைப் பற்றி அறியாதே இருந்தார்கள். அவர்களது ஆன்மாவானது எத்தகைய புரிதலினைக் கொண்டிருந்ததோ அதன் அடிப்படையிலேயே தான் அவர்களது செயல்களும் இருந்தன. அதாவது தன்னுடைய ஆற்றலினை அறியாத நிலையிலேயே தான் அவர்களது ஆன்மாவானது இருந்தது.

இவ்வாறு இரண்டு வெவ்வேறு நிலைகளில் ஆன்மாவானது இருப்பதனை நாம் காணுகின்றோம். ஒன்று தன்னுடைய ஆற்றலினை அறிந்துக் கொண்ட நிலை...மற்றொன்று தன்னுடைய ஆற்றலினை அறிந்துக் கொள்ளாத நிலை. தன்னுடைய ஆற்றலினை அறிந்துக் கொண்ட நிலையினில் ஒரு ஆன்மாவினால் மற்ற ஆன்மாக்களையும் அறிந்துக் கொண்டு, 'என்ன நடக்கும்' என்று கூற முடிகின்றது. ஆனால் ஆற்றலினை அறிந்துக் கொள்ளாத நிலையிலோ, தன்னுடைய புரிதலினை அடிப்படையாக கொண்டு மட்டுமே ஒரு ஆன்மாவானது இருக்கின்றது. நிற்க.

மேலே நாம் கண்டிருப்பது ஒரு எடுத்துக்காட்டு மட்டுமே...இதனை அனைவரும் நம்புவர் என்றோ அல்லது ஏற்றுக் கொள்ளுவர் என்றோ நாம் எண்ணுவது முட்டாள் தனமாகும். மேலும் அவ்வாறு அவர்கள் நம்ப வேண்டும் என்பதும் நமது குறிக்கோள் அல்ல. ஏனென்றால் சில மக்கள் சமயங்கள், இறைவன் என்று நாம் பெயர்களை பயன்படுத்தி இருப்பதினால் மட்டுமே நாம் மேலே கூறி இருப்பதனை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். சில மக்களோ நாம் அவ்வாறு பெயர்களைக் கூறி இருப்பதனால் மட்டுமே அவற்றை ஏற்றுக் கொள்வார்கள். இவ்விரண்டினையுமே நாம் இங்கே விரும்பவில்லை. நமது இலக்கானது இங்கே என்னவென்றால், இந்த விடையங்களைக் குறித்து மக்களை சிந்திக்க வைப்பது மட்டுமே தான். ஒரு நூலினில் கூறி இருக்கின்றது என்பதினால் மட்டுமே ஒன்றினை நம்புவது என்பது முட்டாள்தனமாகும். மாறாக நம்மால் எதனை உணர முடிகின்றதோ அதனை நம்புவதே தெளிவான ஒரு செயலாக அமையும்.

ஒரு நிகழ்வானது நிகழ்ந்துக் கொண்டிருக்கும் பொழுது...அது ஏற்கனவே நிகழ்ந்திருப்பதனைப் போன்ற ஒரு உணர்வினை நம்மில் பலரும் உணர்ந்து இருப்போம். இதனை நாம் நூல்களில் இருந்து அறிந்துக் கொள்ளவில்லை...உணர்வதினால் அறிந்து இருக்கின்றோம்...இப்பொழுது இத்தகைய ஒரு உணர்வினையே நாம் மேலே கண்டுள்ள எடுத்துக்காட்டின் மூலமாக விளக்க வேண்டி இருக்கின்றது.

நாம் கடந்த பதிவுகளில் கண்டிருக்கின்றோம்...நம்முடைய உடலானது உறங்கிக் கொண்டிருக்கின்ற பொழுது நம்முடைய ஆன்மாவானது உறங்குவதில்லை என்று...அது விழித்துக் கொண்டே தான் இருக்கின்றது. அவ்வாறு விழித்துக் கொண்டிருக்கும் ஆன்மாவின் செயலினை நம்மால் வரையறை செய்ய இயலாது...காரணம் ஆன்மாவின் ஆற்றல் அத்தகையது. நாம் உறங்கிக் கொண்டிருக்கும் பொழுது நம்முடைய காரண அறிவானது துடிப்பாக இருப்பதில்லை...மாறாக ஆன்மாவின் உணர்வுகளே மேலோங்கி இருக்கின்றது. அந்நிலையில் ஆன்மாவானது சுதந்திரமாக செயல்படுகின்றது...அவ்வாறே தன்னுடைய ஆற்றலினையும் சுதந்திரமாக செயல்படுத்துகின்றது.

அதாவது...உடலானது உறங்கிக் கொண்டிருக்கின்றது...இந்த உலகியல் அனுபவங்களின் மூலமாக நாம் பெற்று இருக்கும் காரண அறிவும் துடிப்பாக இல்லை...இந்நிலையில் ஆன்மாவானது சுதந்திரமாக செயல்படுகின்றது...சில நேரங்களில் அது தான் கண்டிருந்த காட்சிகளையும் அனுபவங்களையும் கொண்டு சிந்திக்கின்றது (ஊ.தா - பேய் கனவுகள்...மற்ற கனவுகள்), சில நேரங்களில் உறங்குவதற்கு முன்னர் நாம் எதனைக் குறித்து நம்முடைய அறிவினைக் கொண்டு சிந்தித்துக் கொண்டிருந்தோமோ அதனைக் குறித்து அது சிந்திக்கின்றது (உ.தா - ஊர் வரும் பொழுது சரியாக முழிப்பு வருவது...புதிய விடைகள்)...மேலும் சில நேரங்களில் ஆன்மாவானது இந்த உலகினையும் மற்ற ஆன்மாக்களின் நிலையையும் காணுகின்றது...இந்த நிலையினில் தான் நம்முடைய கேள்விக்கு பதில் இருக்கின்றது.

சுதந்திரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஆன்மாவானது, சில நேரங்களில் இந்த உலகினை முழுமையாக காணுகின்றது...நடந்த நிகழ்வுகள்...நடக்கின்ற நிகழ்வுகள்...மற்ற ஆன்மாவின் நிலைகள்...போன்றவற்றை கண்டு...அதன் அடிப்படையில் எந்த நிகழ்வு நிகழும் என்பதனை அது அறிந்துக் கொண்டு அந்த நிகழ்வை அது காணுகின்றது...!!!

அதாவது நம்முடைய/தன்னுடைய நிலையும் ஆன்மாவிற்கு தெரியும்...அதாவது நாம் கொண்டிருக்கும் ஆசைகள், சிந்தனைகள், அறிவு போன்றவற்றை ஆன்மாவானது அறிந்து இருக்கின்றது. அதன் அடிப்படையில் எதிர்காலத்தில் இவன்/நான் எங்கு செல்வேன் என்பதனையும் எதற்காக செல்வேன் என்பதனையும் அது அறிந்துக் கொள்ளுகின்றது. அதனைப் போன்றே தான் சுதந்திரமாக, காரண அறிவின் தாக்கம் இல்லாது, இருக்கின்ற பொழுது அது மற்ற ஆன்மாக்களையும் காணுகின்றது...தன்னுடைய ஆற்றலின் விளைவால் அந்த மற்றொரு ஆன்மாவின் சிந்தனை/தன்மை போன்றவற்றை அது அறிந்துக் கொள்ளுகின்றது. அதன் அடிப்படையில் அந்த ஆன்மாவானது எங்கு செல்லும் என்பதனையும் எதற்காக செல்லும் என்பதனையும் அது அறிந்துக் கொள்ளுகின்றது.

அதாவது...நான் இருக்கின்ற நிலையில் நான் ஒரு அலுவலகத்திற்கு செல்ல வேண்டி வரும் என்பதனை என்னுடைய ஆன்மாவானது அறிந்துக் கொள்ளுகின்றது...அதனைப் போன்றே அங்கே வந்து சேரக் கூடிய தன்மையினை உடைய மற்றொரு ஆன்மாவினையும் அது உணர்ந்துக் கொள்ளுகின்றது...இரண்டு ஆன்மாக்களும் சந்திக்கும் என்றும் அவை எதற்காக சந்திக்கும் என்றும் தன்னுடைய ஆற்றலின் மூலமாக அறிந்துக் கொள்ளுகின்ற ஆன்மாவானது...அந்த சந்திப்பினை ஒரு முறை காட்சியாக கண்டு கொள்ளுகின்றது...அது ஆன்மாவின் நினைவில் பதிந்துக் கொள்ளுகின்றது.

அந்த நினைவு தான், அந்த நிகழ்வானது உண்மையில் நிகழும் பொழுது 'இது ஏற்கனவே நடந்து இருக்கே' என்ற எண்ணத்தினை நம்முள் விளைவிக்கின்றது...அதாவது நம்முடைய ஆன்மாவானது அந்த நிகழ்வினை ஏற்கனவே கண்டு விட்டது...அந்த நினைவும் நம்முடைய மனதில் பதிந்து விட்டது...ஆனால் அந்த நிகழ்வு பிற்காலத்தில் தான் நிகழ்கின்றது...ஆகையால் தான் அந்த நிகழ்வினை நாம் முன்னரே கண்டு இருப்பது போன்றும்...அடுத்து நாம் இதனைத் தான் பேசுவோம் என்றோ அல்லது மற்றவர் இதனைத் தான் செய்வார் என்றோ நம்மால் யூகிக்க முடிகின்றது. அவ்வாறு யூகிப்பதும் பெரும்பாலும் சரியாகவே இருக்கவும் செய்கின்றது.

இதனால் தான் ஒரு நிகழ்வானது நிகழ்ந்துக் கொண்டிருக்கும் பொழுது...அது ஏற்கனவே நிகழ்ந்திருப்பதனைப் போன்ற ஒரு உணர்வினை நாம் பெறுகின்றோம்...சரி இருக்கட்டும்...!!!

கிட்டத்தட்ட இந்த தொடரின் முடிவிற்கு வந்து விட்டோம்...இது வரை நாம் கண்ட விடயங்களை சுருக்கமாக கண்டு விட்டு இத்தொடரினை முடிவு செய்வோம்...!!!

அடுத்த பதிவில் முடியும்...!!!

பி.கு:
 
மிகவும் மேலோட்டமாகவே நாம் இங்கே கருத்துக்களை கண்டு வந்து கொண்டிருக்கின்றோம். மேலும் குறிப்பாக அறிந்துக் கொள்வதற்கும் சிந்திப்பதற்குமே நாம் இவற்றைக் காணுகின்றோம்…எனவே மாற்றுக் கருத்துக்களும்…கூறியுள்ள விடயங்களில் எவையேனும் தவறென்று உங்களுக்கு தோணிற்று என்றால் அத்தவறினை சுட்டிக் காட்டுதலும் வரவேற்கப்படுகின்றன.

0 கருத்துகள்:

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு