இன்றைய தேதியில் இந்தியா ஒரு மாபெரும் சந்தை. கணக்கிடப்பட முடியாத அளவுக்கு பணம் கொழிக்கும் ஒரு மிகப் பெரிய சந்தை. அதனால் தான் இன்றைக்கு உலகின் பல்வேறு நிறுவனங்களும் இந்தச் சந்தையில் நுழைந்து பணம் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தோடு துடியாய் துடித்துக் கொண்டு இருக்கின்றன...அதற்காக அவை எந்தச் செயலை செய்வதற்கும் தயாராக இருக்கின்றன. ஆனால் இங்கேதான் சில பெரிய பிரச்சனைகள் அவர்களுக்குக் காத்து இருக்கின்றது.

௧) அவர்களின் பொருட்களுக்கு இங்கே உண்மையிலேயே தேவை கிடையாது.
௨) அவர்களின் பொருட்களை விட சிறந்த பொருட்கள் இங்கே ஏற்கனவே அனைவருக்கும் பொதுவாக கிடைத்துக் கொண்டு இருக்கின்றன.

இந்நிலையில் அவர்கள் என்ன தான் இந்தியச் சந்தையினுள் நுழைந்தாலும் அவர்களின் பொருட்களுக்கு இங்கே சந்தைக் கிடைக்குமா என்பது ஒரு மாபெரும் கேள்விக்குறியே? இந்நிலையில் தான் அந்த நிறுவனங்கள் மிகவும் கேவலமான வழிமுறையினை கையாள ஆரம்பிக்கின்றன...!!!

உதாரணத்துக்கு, கருப்பு என்பது ஒரு நிறம்...இந்தியர்களின் இயல்பான நிறமே கருப்பு தான்...நமது கடவுளர் அனைவரும் கருப்புத் தான். இந்த நிலையில் நமக்கு வெள்ளை நிறமாக வேண்டும் என்ற தேவையோ அல்லது எண்ணமோ எழ வாய்ப்புகளே இல்லை. ஆனால் அத்தைகைய எண்ணங்கள் நம்மிடம் இல்லை என்றால் பன்னாட்டு அழகுச் சாதனப் பொருட்களை விற்கும் நிறுவனங்கள் எவ்வாறு இங்கே வந்து அவற்றின் கடையை விரித்து பணம் பார்க்க முடியும் ?...அவைகளின் பொருளுக்குத் தான் இங்கேத் தேவையே இல்லையே. இந்நிலையில் தான் அவை மனரீதியான தாக்குதலைத் தொடங்குகின்றன...அமைதியாய்...தெளிவாய்!!!

"கருப்பு என்பது நிறம் அல்ல...அது அவமானம்...வெள்ளை என்றால் தான் அழகு...!!! வெள்ளை உயர்ந்தது...கருப்புத் தாழ்ந்தது... நீங்கள் வெள்ளையாக இருந்தால் தான் மற்றவர்கள் உங்களைக் காண்பார்கள்...விரும்புவார்கள்...மேலும் அப்பொழுது தான் உலகமே உங்களைப் பார்க்கும்" என்றச் செயய்தியினைக் கொண்ட விளம்பரங்கள் மூலமாக கருப்பான மக்களிடம் முதலில் தாழ்வு மனப்பான்மைக்கான விதையை மெதுவாய் அவர்கள் விதைக்கின்றனர். பின்னர் அணைத்து விதமான ஊடகங்களிலும் வெள்ளை நிறம் கொண்டவர்களையே முன்னிலைப் படுத்தி விதைத்த அந்த விதையை மெதுவாக வளர்க்கின்றனர். ஒரு நிலையில் "ஐயோ நாம் கருப்பாக இருக்கின்றோமே" என்ற ஒரு எண்ணத்தை மக்களுள் வர வைத்தப் பின் "நீங்கள் கருப்பாக இருக்கின்றீர்களா...பிரச்சனை இல்லை...இதோ எங்கள் நிறுவனத்தின் களிம்பினை வாங்கி பூசிநீர்கள் என்றால் நான்கே வாரங்களின் சிகப்பழகு மிளிரும்...இதோ இதை அமெரிக்காவில் மைகேல் ஜாக்சன் பூசுகின்றார்கள்...சப்பானில் சாக்கிசான் பூசுகின்றார்கள்" என்றுக் கூறி மக்களின் அந்த தாழ்வு மனப்பான்மையை அடிப்படையாகக் கொண்டே தங்களின் வணிகத்தை வளர்த்துக் கொள்கின்றனர். ஒருவனின் மனதினைப் பற்றிய எந்த ஒரு அக்கறையும் இல்லாது வெறும் பணத்தினை மட்டுமே குறியாகக் கொண்டே அவர்கள் இயங்குகின்றனர். இந்த ஈன செயலைச் செய்வதற்கு அவர்கள் தனியொரு அமைப்பையே வைத்துத் தான் செயல்லாற்றுகின்றனர். இன்றைய வியாபார நிர்வாகப் படிப்புகள் அனைத்தும் பெரும்பாலும் இத்தகைய செயல்களுக்கே பயன்படுத்தப்படுகின்றன.

1991 ஆண்டில் தான் அன்றைய நிதி அமைச்சராக இருந்த திரு.மண் மோகன் சிங் அவர்கள் இந்தியாவின் பொருளாதாரத்தை உயர்த்த அந்நிய நிறுவனங்கள் இந்தியாவில் நுழையலாம் என்ற ஒரு சட்டத்தைக் கொண்டு வருகின்றார். இப்பொழுது நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால் அதுவரை இந்தியாவில் இருந்து ஒரே ஒரு பெண் தான் உலக அழகிப் பட்டத்தினைப் பெற்று இருக்கின்றார். ஆனால் திரு.மண் மோகன் சிங் அவர்கள் எப்பொழுது அந்தச் சட்டத்தினை இயற்றினாரோ, அடுத்த எட்டு வருடங்களுக்குள் இந்தியாவுக்கு ஆறு விருதுகள் உலக அழகிப் போட்டிகளில் கிடைத்து இருக்கின்றது. அசாத்தியமான சாதனை தான் அல்லவா. இந்தியா பன்னாட்டு அழகுச் சாதன நிறுவனங்களை இந்தியாவினுள் நுழைய அனுமதித் தந்து இருக்கின்றது...அதனைத் தொடர்ந்து அழகிப் போட்டிகளில் இந்திய பெண்கள் வரிசையாக வெற்றிப் பெற்று இருக்கின்றனர். இவ்விரண்டு சம்பவங்களும் எதேச்சையாக நிகழ்ந்த சம்பவங்களா அல்லது இவ்விரண்டுக்கும் தொடர்புகள் இருக்கின்றனவா என்றே நாம் சிந்திக்க வேண்டி இருக்கின்றது.

இந்தியாவினுள் முதல் முறையாக அந்நிய அழகுச் சாதனப் பொருள்கள் நுழைகின்றன...அனால் அவற்றை வாங்க வேண்டியத் தேவை இங்கே யாருக்குமே கிடையாது. அந்நிலையில் அந்தப் பொருள்களை பயன்படுத்திய பெண்களை உலகமே கண்டு வியப்பது போலும் அவர்கள் அந்தப் பொருள்களை பயன்படுத்திய ஒரே காரணத்தினால் உலகப் புகழ் அடைந்து விட்டது போன்றும்...அவர்களையே ஆண்கள் அனைவரும் விரும்புவது போலும் தோற்றத்தினை உருவாக்கி, அக்கருத்தை 'உலகமே வியக்கும்' அந்தப் பெண்களின் வாயிலாகவே பரப்பினால், மற்றப் பெண்களின் மனம் சற்று அலைக்கழியுமா கழியாதா?...அலைபாயும் தானே... நம்மளும் அந்தப் 'உலகப் புகழ்' பெண்களைப் போல் ஆக மாட்டோமா என்றும் 'இப்படியே இருந்து விட்டோம் என்றால் ஆண்கள் யாரும் நம்மை விரும்ப மாட்டார்களோ?' என்ற எண்ணம் அவர்களுக்குள்ளும் வரும் தானே. அவ்வாறு வந்தால் அவர்களும் அந்த அழகுச் சாதனப் பொருட்களை வாங்க ஆரம்பிப்பர் தானே. அவ்வாறு அவர்கள் வாங்க ஆரம்பித்தால் யாருக்கு லாபம்...வாங்குபவர்களுக்கா அல்லது அந்த அழகுச் சாதன நிறுவனத்துக்கா? அழகுச் சாதன நிறுவனத்திற்குத் தானே.

 அவ்வாறே தான் நடந்தது. உலக அழகி பட்டம் பெற்றவர்கள் எல்லாம் குறிப்பிட்ட அழகுச் சாதனப் பொருட்களைச் சுமந்துக் கொண்டே இந்தியாவில் வலம் வரத் தொடங்கினர். அவர்களை மையமிட்டே அனைத்து ஊடகங்களும் நஞ்சை 'அதாவது வெள்ளை தான் அழகு என்றக் கருத்தை' மக்களிடம் பரப்ப ஆரம்பித்தன. இறுதியாக எந்த மக்கள் அழகுக்காக ஒரு நயா பைசாக் கூட செலவழிக்காது இருந்தனரோ அவர்களே செலவழித்தால் தான் அழகினைப் பெற முடியும் என்று எண்ணி அந்த அழகுப் பொருட்களை வாங்க ஆரம்பித்தனர். இன்றைக்கு எந்த ஒரு பெண்ணின் கைப்பையை எடுத்துப் பார்த்தாலும் அதில் உள்ள பொருட்களின் எண்ணிக்கையும் பொருட்களுமே சொல்லும் அந்த வணிக நிறுவனங்கள் பெற்ற வெற்றியை...அது தான் அவர்களுக்கு வேண்டும்...அது தான் அவர்களின் வணிகம். மனம் முக்கியமில்லை...பணமே முக்கியம். இந்தக் கேடுக் கேட்ட பிழைப்பிற்கு பெரிய பெரிய படிப்புகள் வேற!!!

மேலும் இவ்வாறு அந்த நிறுவனங்கள் இந்தியாவில் வேர் ஊன்ற ஆரம்பித்த காலத்தில் அவர்கள் சந்தடிச் சாக்கில் செய்த மற்றொரு முக்கியமானக் காரியம், அதுவரை இங்கே மக்கள் கொண்டு இருந்த அழகுப்படுத்திக் கொள்ளும் வழக்கங்களை மாற்றியது தான். அதையும் ஊடகங்களின் துணைக் கொண்டே செம்மையாக அந்த நிறுவனங்கள் சாதித்துக் கொண்டன. உதாரணத்துக்கு 20 வருடங்களுக்கு முன்னால் பெண்கள் மஞ்சள் பூசிக் கொள்வது வழக்கம். மஞ்சளில் பல்வேறு நலன்கள் இருக்கின்றன. ஆனால் மஞ்சள் பூசிக் கொள்ளும் பெண்கள் எல்லாம் நாகரீகமற்றவர்கள் என்றும் பட்டிக்காடுகள் என்றும் எண்ணம் தோன்றுவதுப் போல செய்திகளையும் விளம்பரங்களையும் பரப்பி இன்றைக்கு மஞ்சள் என்றாலே ஒருவித இளக்காரமான பார்வையோடு மக்கள் காணும் வண்ணம் செய்து விட்டார்கள். அவ்வாறு கருத்தினையும் பார்வையையும் அவர்கள் விதைத்து விட்டதினால் நம் முன்னோர்கள் கொண்டு இருந்து முறைகள் மற்றும் ஞானம் ஆகியவற்றில் இருந்து நம்மை நாமே துண்டித்துக் கொள்ளுமாறு ஒரு நிலை இங்கே உருவாக்கி விட்டது. இந்நிலை தொடர்ந்தால் இன்னும் சில வருடங்களுக்கு பின்னர் நம்முடைய முன்னோர்கள் இம்முறையை இயல்பாகவே இலவசமாக பின் பற்றி வந்தனரோ அந்நிலையையே நாம் பெரும் காசினைக் கொடுத்து அந்நிய நிறுவனத்திடம் இருந்து பெற்றுக் கொள்ளும் நிலை வந்து விடும்.

இதுவே அவர்களின் தந்திரம்....!!! அது வரை இருந்த பழக்கங்கள் அனைத்தும் தவறானவை என்றும் அந்த நிறுவனங்களின் பொருள்கள் தான் சிறந்தவை என்ற எண்ணத்தினை மனரீதியான தாக்குதல்கள் மூலம் மக்களின் மனதினில் பதித்துவிட்டு அதன் மூலம் காசினைப் பார்ப்பது தான் அந்த நிறுவனங்களின் திட்டம். அப்பாவி மக்கள் அந்த நிறுவனங்களின் சதியினை உணர மாட்டார்கள். எனவே அவர்களைச் சொல்லிக் குறை இல்லை. ஆனால் இந்த அரசாங்கங்கள், அதற்குமா தெரியாது மக்களின் உணர்ச்சிகளோடு விளையாடியே இந்த வணிக நிறுவனங்கள் காசு பார்கின்றன என்று? மக்களுக்காக இருக்கும் அரசாங்கங்கள் இப்படியா வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கும் தங்களின் மக்கள் தாழ்வு மனப்பான்மைக்கு அடுத்தவனின் லாப வெறிக்காக ஆட்படுவதை? மக்களுக்காக இருக்கும் அரசாங்கங்கள் நிச்சயம் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்காது. ஆனால் நம்முடைய அரசாங்கங்கள் வேடிக்கைத் தான் பார்த்துக் கொண்டு இருக்கின்றன...இல்லை இல்லை அவையும் அந்த வணிக நிறுவனங்களுடன் சேர்ந்து மக்களிடம் இருந்துக் கொள்ளை அடித்துக் கொண்டே இருக்கின்றன...காரணம் அவை தான் மக்களுக்கான அரசாங்கங்கள் இல்லையே...!!!

ஏற்கனவே நான் உயர்ந்தவன் நீ தாழ்த்தப்பட்டவன் என்று மக்களிடம் தாழ்வு மனப்பான்மையை ஊட்டி அதன் மூலம் அதிகாரத்தையும் செல்வதையும் பெற்று ஆண்டுக் கொண்டு இருக்கும் ஒரு அரசாங்கமான இந்திய அரசாங்கத்துக்கு, மற்றுமொரு நிறுவனம் வந்து ஏற்கனவே தாழ்வு மனப்பான்மையில் இருப்பவனை மேலும் தாழச் செய்வது என்பது லாபம் தானே...தாழ்ந்து இருக்கும் காரணங்கள் வேண்டும் என்றால் வேறாக இருக்கலாம்...ஆனால் முடிவு....தாழ்ந்தவன் தாழ்ந்தவனாகவே இருக்கின்றான். இதுவே அவர்களுக்கு வேண்டும். அவ்வாறு இருந்தால் தான் அவர்களை எப்பொழுதும் எவரும் கேள்விக் கேட்க முடியாது. இந்நிலையிலேயே நமது அரசாங்கமும் அந்நிய நிறுவனங்களின் இந்த மனிதத் தன்மை அற்ற செயலை ஊக்குவிக்கத் தான் செய்கின்றன.

இந்நிலையில் தங்களிடம் இருக்கும் வைரத்தினை அறியாமையினால் வெறும் கல்லுக்கு மாற்றாக விற்று விட்டு பிழைப்பைத் தேடி அலையும் வணிகரைப் போலவே நம்முடைய மக்களும் அவர்கள் கொண்டு இருந்த நல்ல பழக்கங்களை சதிக்கு இரையாக்கி விட்டு இன்று மன அமைதி இன்றி அலைந்துக் கொண்டு இருக்கின்றனர். மக்கள் விரோத அரசாங்கமும் அமைதியாக அவர்களின் திண்டாட்டத்தில் குளிர் காய்ந்துக் கொண்டு இருக்கின்றது.

1 கருத்துகள்:

மிகச்சரியாக தெளிவுபடுத்தி இருக்கின்றீர்கள்.

மிகவும் அருமைகயான கட்டுரை.

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு