ஒரு கேள்வி?

உங்களுக்கு உங்களின் குழந்தைகள் முக்கியமானவர்களா அல்லது மற்றவர்களின் குழந்தைகள் முக்கியமானவர்களா? யாரை நீங்கள் அதிக அக்கறையுடன் பேணிக் காப்பீர்கள்?

"அட என்னங்க இது ஒரு கேள்வி? அவரவர்களுக்கு அவர் அவர் குழந்தைகள் தானே முக்கியம். அவர்களைத் தானே அவர்கள் பாசத்தோடும் நேசத்தோடும் அன்பாக வளர்ப்பர். இதில் என்ன சந்தேகம் உங்களுக்கு?" என்கின்றீர்களா....ம்ம்ம்...சரி தான் நீங்கள் சொல்வது...ஆனால் நம்முடைய அரசுகள் மட்டும் அவ்வாறு நடக்காமல் தன்னுடைய குழந்தைகளை பசியோடு வீதியில் விட்டுவிட்டு மற்ற வீட்டுக் குழந்தைகளை அனைத்து வித ஊடச்சத்துக்களுடன் ஊட்டி வளர்த்துக் கொண்டு இருக்கின்றதே... அந்த நிகழ்வினைப் பார்க்கும் பொழுது தான் எனக்கு அந்த சந்தேகம் வருகின்றது. ஏன் நம்முடைய அரசுகள் மட்டும் அவ்வாறு நடந்துக் கொண்டு இருக்கின்றன?. இப்பொழுது இதனைப் பற்றி விரிவாகப் பார்க்க சில உண்மைச் சம்பவங்களைப் பார்க்க வேண்டி இருக்கின்றது.

சம்பவம் 1:

நண்பர் ஒருவருக்கு முதுகில் திடீரென்று கரும் புள்ளிகள் தோன்ற ஆரம்பித்தன. ஏன் எதனால் அவை வந்தன என்றுத் தெரியவில்லை ஆனால் அவர் என்ன முயன்றும் அவை போன பாடில்லை. இறுதியில் ஒரு தோல் நிபுணரிடம் சென்றுக் காட்டலாம் என்றே முடிவு செய்து நிபுணர் ஒருவரிடம் சென்றுக் காட்டினார். அந்த நிபுணரும் அந்த கரும் புள்ளிகளை ஆராய்ந்து விட்டு 'இது ஒன்றும் இல்லை...சரியாகி விடும்...இந்த களிம்பினை மட்டும் போடுங்கள்' என்றுக் கூறி ஒரு களிம்பினையும் அவனிடம் கொடுத்து அனுப்பினார். அவனும் சிறிது நாட்கள் அந்தக் களிம்பினை பயன்படுத்திப் பார்த்தான்...களிம்பு தீர்ந்ததே தவிர அந்தக் கரும் புள்ளிகள் மட்டும் மறையவே இல்லை. மீண்டும் அவன் அந்த நிபுணரிடம் செல்ல இம்முறை வேறு ஒரு களிம்பினைக் கொடுத்து அனுப்பினார் அந்த நிபுணர். களிம்பு மாறியது...ஆனால் விளைவு மாறவே இல்லை. கரும் புள்ளிகள் தொடர்ந்து இருந்துக் கொண்டே தான் இருந்தன. என்னடா இது என்று எண்ணியவாறே அவன் வேறொரு மருத்துவரை அணுக, மருந்தாக மற்றுமொரு களிம்பு கிட்டியது. அவ்வளவே... ஆனால் கரும் புள்ளிகள் தொடர்ந்து இருந்துக் கொண்டேத் தான் இருந்தன. இந்நிலையில் என்ன செய்வதென்றே தெரியாது அவன் முழித்துக் கொண்டு இருந்த பொழுது தான் அவனுடைய பாட்டியிடம் பேசும் வாய்ப்பு அவனுக்கு ஒரு முறைக் கிட்டியது. அப்பொழுது அவனுடைய அந்தக் கரும் புள்ளிகளைப் பற்றி அவனுடைய பாட்டியிடம் அவன் கூற, உடனே அவனது பாட்டி "சில வேப்ப இலைகளை நன்றாக அரைத்து ஒரு பசை மாதிரி செய்து அதனை முதுகில் தேய்த்து வா...கரும் புள்ளிகள் சரியாகி விடும்...வேறு பிரச்சனைகள் எதுவும் இல்லை" என்றே அறிவுரை வழங்கி இருக்கின்றார். அவனும் அவ்வாறே செய்ய மூன்றே தினங்களில் கரும் புள்ளிகள் மறைந்து விட்டன.


சம்பவம் 2:

சமீபத்தில் ஈரோட்டில் நடந்த புத்தகக் கண்காட்சிக்கு செல்வதற்காக நண்பர்களைக் காணச் சென்று இருந்தேன். அப்பொழுது நண்பர் ஒருவர் நீண்ட நாட்களாக தனது வலது நெஞ்சுப் பகுதியில் வாயுத் தொல்லை இருந்துக் கொண்டே இருப்பதாகவும், மருத்துவர்கள் 'அது பலருக்கும் இருப்பது தான்...பிரச்சனை இல்லை' என்றே கூறி அனுப்பியதாகவும் மற்றொரு நண்பரிடம் கூறிக் கொண்டு இருந்தார். அதனைக் கேட்ட அந்த நண்பர் "அட.. இது தான் பிரச்சனையா...ஒரே நிமிசம் பொறு...எங்க அப்பா இத சரி செஞ்சிடுவாரு" என்றுக் கூறி விட்டு அவரின் தந்தையை அழைத்து வரச் சென்றார்.

"டேய்...என்னடா...!!! அவங்க அப்பா விவசாயி தானடா அப்புறம் எப்படிடா அவருக்கு மருத்துவம் தெரியும்?" என்றே நான் கேட்க..."தெரியும் மச்சி... விவசாயி தான் ஆனா வர்மக் கலையும் அவருக்குத் தெரியும்,,,ஏற்கனவே இப்படி பல பேருக்கு அவரு வைத்தியம் பார்த்து இருக்கார்" என்பதே விடையாக வந்தது. 'வர்மம்' என்றச் சொல் காதினில் விழவே ஆர்வமாக அடுத்து நடக்க இருந்த நிகழ்வுகளை கவனிக்க ஆரம்பித்தேன். சிறிது நேரத்தில் வந்த நண்பரின் தந்தையார் வீட்டுக்கு முன்னர் ஒரு இருக்கையை கிழக்கே பார்க்கும்படி வைத்து விட்டு அந்த உடல் சரி இல்லாத நண்பரை அதிலே அமர வைத்தார். அந்த நண்பரும் என்னதான் நடக்கும் நடக்கட்டுமே என்பது போல் அந்த இருக்கையிலே அமர்ந்து இருக்க மெதுவாக அந்த நண்பரின் கழுத்துப் பகுதியில் அழுத்த ஆரம்பித்தார் அவர். ஆரம்பத்தில் பெரிதாக ஒன்றும் தெரியவில்லை...'அட வர்மம்னா இவ்வளவு தானா' என்று நான் எண்ணிக் கொண்டு இருக்கும் பொழுதே திடீர் என்று நண்பரின் கழுத்துப் பகுதியில் ஓர் இடத்தில அவர் அழுத்தம் கொடுத்து அழுத்த அவ்வளவு தாங்க...'ஒரு நிமிசம் கண்ணு ரெண்டும் உள்ள போயி..கழுத்து தொங்கிடுச்சி....அப்படியே அவன் உடலும் ஒரு உலுக்கு உலுக்க...' பதறித் தான் போனேன் சற்று. ஆனால் அடுத்த நிமிசமே தலையை சற்று அசைத்தவாறு இயல்பான நிலைக்கு அந்த நண்பன் திரும்பி விட்டான்...ஆனால் அவன் கொடுத்த பாவனையை வைத்துப் பார்த்தால் ஏதோ மறு உலகைப் பார்த்து விட்டு வந்தவன் போலவே இருந்தது.

'இனிமே அந்த பிரச்சனை இருக்காது தம்பி...சரி பண்ணியாச்சி' என்றுக் கூறி விட்டு கிளம்ப ஆரம்பித்த அவரிடம் சற்று பேச்சிக் கொடுக்க ஆரம்பிக்க 'அவனின் இரத்தக் குழாயில் காற்று சிறிது இருந்தது என்றும், அதனால் மூளைக்குச் செல்லும் இரத்தக் குழாயினை சிறிது நேரம் அடைத்துவிட்டு காற்றினை வெளியே எடுத்ததாகவும்...மூளைக்கு சென்ற இரத்த ஓட்டத்தினை அடைத்ததினால் தான் மூளைக்கு இரத்தம் செல்லாமல் அவனின் உடல் சற்று உலுக்கியதாக்கவுமே' அவர் கூறினார்...மேலும் இது ஆபத்தான வழிமுறை இல்லையா என்றதுக்கு 'இம்முறையினை தெளிவின்றி யாரும் பயன்படுத்தக்கூடாது...நன்கு பயிற்சிப் பெற்றவர்களே இதனை செய்ய வேண்டும்... எனக்கு பயிற்சி இருப்பதினால் நான் செய்தேன்...நான் அழுத்திய நரம்பிற்கு பதிலாக வேறு நரம்பினை அழுத்தி இருந்தால் உயிர் போயிருக்கும்... எனவே இம்முறைக்கு பயிற்சியும் கவனமும் மிக முக்கியம்..." என்றுக் கூறிவிட்டு அவர் புகைப் பிடித்துக் கொண்டே சென்று விட்டார்.

சம்பவம் 3:

கைதராபாதினில் நான் பணிக்கு சேர்ந்த புதிதில் நடைபெற்ற ஒரு சிறு சம்பவம். முதல் முறையாக பணிக்கு சேர்ந்து இரு வாரங்களே ஆகி இருந்தன. புதிய ஊர்...புதிய வகை உணவுகள் என்பதினால் உடல் ஒத்துழைக்காமல் காய்ச்சல் வந்து விட்டது. இருந்தும் அப்பொழுது பணிக்குரிய பயிற்சிகள் ஓடிக்கொண்டு இருந்தமையால் விடுப்பு எடுக்க முடியாத ஒரு நிலையில் அலுவலகத்திற்கு சென்று இருந்தேன். காய்ச்சல் சற்று அதிகமாக, மதியவேளை உணவினையும் புறக்கணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. எனவே ஏற்கனவே குன்றி இருந்த உடல் நலம் மேலும் குன்றலாயிற்று. அந்நிலையில் நிச்சயம் மருத்துவரைப் போய் பார்த்து தான் ஆக வேண்டும் என்ற நிலை வர "புதிய ஊரில்...எவர் எப்படிப்பட்ட மருத்துவர் என்று யாருக்குத் தெரியும்...எனவே பிரச்சனை இல்லாமல் இருக்க பெரிய மருத்துவமனைக்கே செல்லலாம்" என்று 'இமேஜ்' மருத்துவமனை என்ற ஒரு மருத்துவமனைக்கு நண்பர்கள் அழைத்துச் சென்றனர்(அது என்னவோ தெரியலைங்க பெரிய மருத்துவமனைனா நல்ல மருத்துவமனை அப்படினும் சின்ன மருத்துவமனைனா ஏதோ சராசரியா மருத்துவம் பார்க்கும் இடங்கள் அப்படினும் எண்ணங்கள் எப்படியோ நம்மில் பதிந்து தான் விடுகின்றன...). அதுவரை பெரிய மருத்துவமனைகளில் மருத்துவம் பார்த்து பழக்கம் இல்லை ஆதலால் 'நம்ம ஊர்ல 30 ரூபா வாங்குவாங்க...இங்க மிஞ்சிப் போனா 100 ல இருந்து 150 ரூபாகுள்ளத் தான் வாங்குவாங்க என்று எண்ணியே சென்றேன். ஆனால் என்னுடைய அந்த எண்ணம் எவ்வளவு தவறான எண்ணம் என்று அடுத்த சில நொடிகளில் நான் உணர்ந்துக் கொண்டேன். உள்ள நுழைந்ததும் 'அங்கே மருத்துவம் பார்க்க வேண்டும் என்றால் அங்கே நமக்கு ஒரு கணக்கு இருக்க வேண்டும் என்றும் அதற்கு 400 ரூபாய் கட்டணம் என்றும் அவர்கள் கூற வாழ்க்கையிலேயே மருத்துவரைப் பார்க்காமலேயே மருத்துவத்திற்காக 400 ரூபாய் தண்டம் அழுதேன். சரி காச வாங்கிடானுங்க...மருத்துவமாவது ஒழுங்காப் பார்பானுங்க என்று எண்ணிக் கொண்டே மருத்துவரைக் காணச் சென்றேன்(நம்பிக்கைக்கு இன்னொரு காரணம் அந்த மருத்துவர் பெயர் என்னுடைய பெயராக இருந்ததே)...!!!

ஆனால் அந்த மருத்துவரும் சாதரணமாக அனைத்து மருத்துவரும் செய்யும் சோதனைகளைச் செய்து விட்டு 'உங்களுக்கு இரத்த அழுத்தம் மிகவும் கம்மியான நிலையில் இருக்கின்றது...இரண்டு நாட்கள் நீங்கள் இங்கேயே சேர்ந்து மருத்துவம் பார்த்துக் கொண்டால் தான் நல்லது..." என்றுக் கூற அந்த நம்பிக்கையும் பொய்த்துப் போனது (பேரக் கெடுக்குரானுங்க மை லார்ட்..)..."ஏன்டா...எவனா இருந்தாலும் உடம்பும் சரியில்லாம சாப்பாடும் சாப்பிடாம இருந்தானா அவனுக்கு இரத்த அழுத்தம் கம்மியாத் தான்டா இருக்கும்...அதுக்கு என்னவோ அடுத்த நாளே சாவப் போற மாதிரி ஏத்தி விடுறீங்களேடா" என்று மனதினுள் எண்ணிக் கொண்டு "இல்லைங்க இருக்கட்டும்...மாத்திரை மட்டும் கொடுங்க" என்றுக் கூறி மாத்திரை மட்டும் வாங்கிக் கொண்டு கிளம்பினேன்(மாத்திரைக்கு தண்டம் 100 ரூபாய் ...). அதாவது எந்த ஒரு உருப்படியான மருத்துவமும் பார்க்காமல் வெறும் 50 ரூபாய் செலவழித்து இருக்க வேண்டிய இடத்தில நான் செலவழித்த தொகை 500. ஆனால் நான் பரவாஇல்லை....நீண்ட நாட்களுக்கு பின்னர் என்னுடைய தோழி ஒருவர் காய்ச்சலுக்காக அதே மருத்துவமனைக்கு சென்று இருக்கின்றார்...அவரிடமும் இதேக் கதையினைக் கூறி மருத்துவமனையில் ஒரு நாள் சேரச் சொல்லி இருக்கின்றனர். அவரும் சேர்ந்து இருக்கின்றார். இறுதியில் அவர் கட்டியத் தொகை வெறும் 25000 ரூபாய் மட்டுமே!!! இதில் இருந்து நாம் அந்த மருத்துவமனை உண்மையில் எதன் மேல் அக்கறையோடு இருக்கின்றது என்பதனை நாம் அறிந்துக் கொள்ளலாம் தானே. சரி இருக்கட்டும். இப்பொழுது நம்முடைய கதைக்கு வருவோம்.

மேலே நாம் கண்ட மூன்று சம்பவங்களும் உண்மைச் சம்பவங்களே. வெவ்வேறு சம்பவங்களாக இருப்பீனும் அவைகள் கூறும் செய்திகளை நாம் உற்று நோக்கத்தான் வேண்டி இருக்கின்றது இன்றைய சூழலில்.

முதல் சம்பவத்தில், எளிமையான மருத்துவமுறை நம்மை சுற்றியும் பரவிக் கிடக்கின்றது என்ற விடயம் இருக்கின்றது. வேப்ப மரம் இல்லாத ஊரினை நாம் தனியொரு படை அமைத்துத் தான் தேட வேண்டும் தமிழகத்தில். அவ்வளவு எளிதாக ஒரு மாபெரும் மருத்துவக் களஞ்சியம்/கருவூலம் நம்மிடையே காலம் காலமாக நின்றுக் கொண்டுத் தான் இருக்கின்றது. ஆனால் அதன் பயனைப் பற்றிய அறிவினை மட்டும் நாம் மறைந்துக் கொண்டு இருக்கின்றோம்...அல்லது சிலரால் மறக்கடிக்கப்பட்டு கொண்டு இருக்கின்றோம். வேம்பு தான் என்றில்லை இன்னும் பல அறிய செல்வங்கள் நம்மால் புறக்கணிக்கப்பட்டே இன்று கிடக்கின்றன.
இரண்டாவது சம்பவத்தில், நாம் அழிந்தே விட்டது என்று என்னும் கலைகள் இன்னும் கிராமப் புறங்களில் இன்னும் உயிர் கொண்டு இருப்பதை நமக்கு நினைவூட்டுகின்றது. ஆனால் அவை அழிந்துக் கொண்டு வருகின்றன...வேகமாக!!! வர்மத்தின் சில கூறுகளை நண்பனின் தந்தை அவர்கள் அறிந்து வைத்து இருக்கின்றார். ஆனால் என்னுடைய நண்பனுக்கோ அதனைப் பற்றி எதுவுமே தெரியாது. அதனைக் கற்றுக் கொள்ள அவனுக்கு ஆவல் இருக்கின்றதா என்றும் தெரியவில்லை. மேலும் அத்தகைய கலைகளுக்கு மிக முக்கியம் முறையான பயிற்சியும் மேற்பார்வையும் கவனமுமே...அவை மூன்றும் இருந்தால் தான் அந்தக் கலை முறையாக வளரும்....காரணம் அவை நுண்ணியக் கலைகள்.

மூன்றாவது சம்பவத்தில் நாம் நம்முடைய நாட்டில் இன்று இருக்கும் மருத்துவர்களின் நிலையையும் மருத்துவமனைகளின் நிலையையுமே காணுகின்றோம். அனைத்தும் வியாபார நிறுவனங்களாக மாறி நீண்ட காலம் ஆகின்றன. அவற்றின் ஒரே குறி பணம்....பணம் மட்டுமே. உணர்ச்சிகளையும் நம்பிக்கைகளையும் காசாக்கும் ஒரு மனிதாபிமானம் இல்லாத இயந்தரங்களாகி விட்டனர் அங்கே அனைவரும். அட உண்மைதாங்க, நாம் நேசிக்கும் ஒருவர் ஆபத்தான நிலையில் இருக்கின்றார் அந்நிலையில் 'அவரைக் காப்பாற்ற முடியாது என்று நன்கு அறிந்த நிலையிலும்' மருத்துவர்கள் "ஒரு 10 சதவீத வாய்ப்பு இருக்குங்க ஆனால் ரொம்ப செலவாகும்" என்றுக் கூறி விட்டால் நம்முடைய மனம் "வாய்ப்பு இருக்குங்க" என்ற வார்த்தையை பிடித்துக் கொள்ளுமா அல்லது "ரொம்ப செலவாகும்" என்ற வார்த்தையை பிடித்துக் கொள்ளுமா?


மனம் உள்ளவர்களின் மனம் "வாய்ப்பு இருக்குங்க" என்ற ஒன்றையே பிடித்துக் கொண்டு எதிர்பார்க்க ஆரம்பித்து விடும்....அது எத்தனை சதவீதமாக இருந்தாலும் பரவாஇல்லை "வாய்ப்பு இருக்கின்றது என்றுக் கூறிவிட்டார்கள்" என்றே ஒருவர் காத்து இருக்க ஆரம்பித்து விடுவார் (10 சதவீத வாய்ப்பு இருக்கின்றது என்று கூறியதற்காக 20 லட்சம் கடன்பட்டு நிற்பவர்களின் கதையினை நான் அறிந்து இருக்கின்றேன்). அவரின் அத்தகைய உன்னதமான உணர்ச்சியையும் நம்பிக்கையையும் வெறும் காசுக்காக பயன்படுத்திக் கொள்ளும் கூட்டத்தினையே இன்றைய மருத்துவ உலகில் நாம் பார்க்க முடிகின்றது. ஒன்று உணர்ச்சிகளின் மூலம் பணம் பார்கின்றது...இல்லையெனில் பயத்தின் மூலம் பணம் பார்கின்றது....இதுவே இன்றைய ஆங்கில மருத்துவ உலகின் கொள்கை..வழி எவ்வழியாக இருந்தாலும் பரவாஇல்லை...பணம் வந்தாக வேண்டும். அவ்வளவே அவைகளின் நீதி...அவ்வளவே அவற்றின் எண்ணம்!!! நிற்க.


 
சில வைத்திய முறைகள் செலவே இன்றி மேலும் பக்க விளைவுகள் ஏதுமின்றி எளிதான வகையில் இருக்கின்றன...ஆனால் அவை எல்லாம் மக்களின் மத்தியில் பரவலாக அறியப்பெறாமல் இருக்கின்றன...இன்னும் விளக்கமாகக் கூற வேண்டும் என்றால் அவை அழிந்துக் கொண்டு இருக்கின்றன. அவற்றிக்கு பதிலாய் மிகுந்த செலவுகளும் எதிர்பாராத பக்க விளைவுகளும் கிட்டப்பெரும் மருத்தவ முறைகள் பரவலாகப் பரவி இருக்கின்றன...அம்முறைகளை பயிற்றுவிக்கும் நிறுவனங்களும் மழையில் தோன்றியக் காளான்கள் போல் அங்கங்கே முளைத்த வண்ணம் இருக்கின்றன. இன்று மருத்தவம் என்றாலே ஆங்கில மருத்துவம் தான் என்ற நிலை.

இங்கே தான் நாம் சிந்திக்க வேண்டி இருக்கின்றது....ஒரு வைத்திய முறை அழிந்துக் கொண்டு இருக்கின்றது. இன்னொரு வைத்திய முறையோ செழித்து வளர்ந்துக் கொண்டு இருக்கின்றது. ஏன் நிலைமை இவ்வாறு இருக்கின்றது என்பதனை அறிய நாம் இந்தக் கேள்விக்கு விடையினைக் காணத் தான் வேண்டி இருக்கின்றது...நம்முடைய வைத்திய முறை அழிந்துக் கொண்டு இருப்பதால் ஆங்கில வைத்திய முறை வளருகின்றதா...அல்லது நம்முடைய மருத்துவ முறையினை அழித்துக் கொண்டு வளருகின்றதா?..இக்கேள்விக்கு நம்முடைய மருத்துவ முறையினை அழித்துக் கொண்டு தான் ஆங்கில வைத்திய முறை வளருகின்றது என்பதே பதிலாக வரும்.

அது எவ்வாறு அழிக்கின்றது...அதனை தடுத்து நாம் என்ன செய்ய வேண்டும் என்பதனை அடுத்தப் பதிவில் காணலாம்...!!!

3 கருத்துகள்:

இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

அருமையான இந்திய மருத்துவம் ஆனால் நீங்கள் அடிக்கடி மேற்கோள் காட்டும் விவிலியத்தின் மருத்துவ குறிப்பு பற்றி தெரிந்து கொள்ள தயவு செய்து இந்த லிங்கை சொடுக்கவும் http://islamchristianityhinduism.blogspot.in/ நன்றி....

நண்பரே... எனக்கு சத்தியமாகப் புரியவில்லை...விவிலியம் என்றால் என்ன என்று நீங்கள் எண்ணிக் கொண்டு இருக்கின்றீர்கள் என்று நான் அறிந்துக் கொள்ளலாமா?
மேலும் அனைத்துப் பதிவுகளிலும் ஏன் விவிலியத்தினையே எடுத்துக் கொண்டு அனைத்துக்கும் என்னிடம் விளக்கம் கேட்க வேண்டும் என்றும் எனக்குப் புரியவில்லை. விவிளியத்தினைப் பற்றி பேசி இருந்த பதிவுகளில் அதனைப் பற்றிப் பேசினால் சரி...ஆனால் அனைத்துப் பதிவுகளிலும் பேச வேண்டியத் தேவை யாது என்றும் தெரியவில்லை.

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு