அடுத்தது என்ன?.
இன்றைய இளைஞர்களின் மனதில் நீங்காது இன்று நின்று கொண்டு இருப்பது இந்தக் கேள்வி தான்.
ஒரு சிலருக்கு இளநிலைப் பட்டம் வாங்கியாயிற்று, ஆனால் வேலை வாங்கியப்பாடில்லை.என்ற கவலை!
இன்னும் சிலருக்கு வேலை பிடிக்கவில்லையே என்ற கவலை!
மேலும் சிலருக்கு தங்கள் அறிவை வளர்த்துக் கொண்டு சாதிக்க சரியான இடம் அமையவில்லையே என்ற கவலை!
இவர்கள் அனைவரின் மனதிலும் இருப்பது ஒரு கேள்வி...ஒரே கேள்வி!!!
அடுத்தது என்ன... மேலே ஏதாவது படிக்கலாமா?.

எளிய கேள்வி தான். ஆனால் இந்த கேள்விக்குத் தான் இன்றைய இளைஞர்கள் முடிவெடுக்க திணறுகின்றார்கள். அல்லது பலக் காரணங்களால் திணரடிக்கப் படுகின்றார்கள். அதுவும் மதிப்பெண்களை மட்டுமே குறியாக வைத்து மாணவர்களைத் தயார் செய்யும் கல்லூரிகள் இந்த கேள்விகளுக்கான பதில்களை அறிய அவர்களுக்கு வழிகாட்ட மறந்து விட மாணவர்களும் சந்தையில் உலவும் மந்தைகளைப் போலவே தங்களின் தனித் தகுதியை மறந்து ஒவ்வொரு தலைநகரத்திலும் உலாவ ஆரம்பிக்கின்றனர்.

படிப்பதா... சரி நல்லது!!!
ஆனால் என்னப் படிப்பது?... எங்குப் படிப்பது?... படித்தால் வேலைக் கிடைக்குமா? போன்ற கேள்விகள் அவர்களை முடிவெடுக்க விடாது தடுக்கின்றன. 

அவை அனைத்திற்கும் மேலே பணம்!!!. 

ஐயோ, நாம் இது வரை படித்ததிற்க்கே இவளவு செலவாகி விட்டதே இதற்கு மேலும் நாம் படித்தால் அந்தப் பணத்தை நாம் எங்குச் சென்று சம்பாதிப்பது என்ற எண்ணம் அவர்களிடம் இருக்கும் கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் பிடுங்கிச் சென்று விடுகின்றது.

இலவசமாக தொலைக்காட்சியையும் மற்ற பொருட்களையும் தரும் அரசாங்கம் கல்விக் கட்டணத்தை மட்டும் குறைக்காது வருடத்திற்கு வருடம் உயர்த்திக் கொண்டே போகின்றது.

பணம்... படிப்பதற்கு வேண்டும்... சரி!
படிப்பு?... முதலாக போட்ட பணத்தை மீண்டும் பெற வேண்டும் என்ற ஒரு முடியா வட்டத்தினுள் மாட்டிக் கொண்டு மாணவர்கள் முழிக்கின்றார்கள். அதுவும் குறிப்பாக பொறியியல் மாணவர்கள்.

இளநிலை பட்டதை முடிப்பதற்கே கிட்டத்தட்ட 4இல் இருந்து 5 லட்சம் வரை பணம் செலவழிந்த நிலையில் மேலும் படிக்கச் செல்ல அவர்கள் மிகுந்த யோசனை செய்ய வேண்டி இருக்கின்றது.
தமிழகத்தில் அவர்கள் பொறியியல் துறையில் மேற்படிப்பு படிக்கலாம் என்று எண்ணினால், அரசுக் கல்லூரிகளைத் தவிர மற்றக் கல்லூரிகளில் அதற்காக மேலும் ஒரு 3 லட்சத்தை எடுத்து வைக்க வேண்டி இருக்கின்றது.

சரி மேலாண்மைத் துறைக்கு செல்லலாம் என்றால், அதிலும் சிலத் தரமான கல்லூரிகளில் வருடத்திற்கு கல்விக் கட்டணம் மட்டுமே 3 இல் இருந்து 5 லட்சம் வரை!!! 

இவ்வளவு பணம் செலவு செய்தும் தரமான கல்வி பொதுவாகக் கிடைப்பதில்லை என்பதே கசப்பான உண்மை. 
இந்த நிலையில் தான் நாம் வெளி நாடுகளில் சென்று படிப்பதைப் பற்றியும் அறிய வேண்டிய நிலையில் இருக்கின்றோம்.

"என்னடா இவன் நம்ம ஊர்ல படிச்சா 3 லட்சம் ஆகும் ,10 லட்சம் ஆகும் அத பசங்க கட்டுறதுக்கு யோசிக்கிறாங்க அப்படின்னு சொல்றான் ஆனா வெளிநாட்ல படிக்கிறத பத்தியும் சொல்லப் போறேன்னு சொல்றானே, அங்க படிச்சா மட்டும் என்ன கம்மியாவா செலவு ஆகும்" என்று நீங்கள் கேட்கலாம்.

செலவு நிச்சயம் கம்மி ஆகாது ஆனால் அந்தச் செலவை முழுதும் அவர்களே ஏற்றுக்கொள்ளும் பல்கலைகழகங்கள் உள்ளன.
ஏன், கல்வியை இலவசமாக வழங்கும் நாடுகளும் உலகத்தில் இருக்கின்றன. அவைகளைப் பற்றி நமது மாணவர்கள் அறிந்து கொள்ள வேண்டும். அறிந்து பயன் பெற வேண்டும் என்ற எண்ணத்திலேயே இந்தத் தொடர்ப் பதிவு.

வெளிநாடுகளில் உள்ள கல்வி முறை, பல்கலைக்கழகங்கள், அவற்றில் நுழைய நாம் எழுத வேண்டிய தேர்வுகள், கல்விக் கட்டணங்கள், கல்விக் கட்டணத் தள்ளுபடிகள், அந்தப் பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்கும் முறைகள் ஆகியவற்றைப் பற்றியும் அந்த பல்கலைக்கழகங்கள் நம்மிடம் என்ன எதிர்ப்பார்கின்றன என்பதினைப் பற்றியும் நாம் தெளிவாகப் பார்ப்போம்.

நம்முடைய நாட்டில் வருடத்திற்கு ஒரு முறை தான் மாணவர் சேர்க்கை கல்லூரிகளில் நடை பெறுகின்றது. ஆனால் பெரும்பாலான வெளி நாடுகளில் வருடத்திற்கு இரண்டு முறை மாணவர் சேர்கை நடைபெறும். ஒன்று வசந்த கால மாணவர் சேர்கை(Spring intake) மற்றொன்று இலையுதிர் கால மாணவர் சேர்கை (fall intake).

இலையுதிர் கால சேர்க்கையின் பொழுது கல்லூரிகள் ஆகத்து (August -September) மாதம் பொதுவாக பாடத்தினைத் தொடங்குவார்கள். இதற்குரிய விண்ணப்பங்கள் டிசம்பர் அல்லது சனவரி மாதம் முதல் கொடுக்கத்  தொடங்கப்பட்டு பொதுவாக மார்ச் மாதத்தில் விண்ணப்பங்களை நிரப்பி அனுப்ப இறுதி நாள் நிச்சயிக்கப்படும். இந்த தேதிகள் கல்லூரிக்கு கல்லூரி, நாட்டிற்க்கு நாடு வேறுபடும்.  
 
வசந்தக் கால சேர்க்கையிலோ சனவரி அல்லது பிப்புரவரி (February) மாதம் கல்லூரிகள் தொடங்கப்படும். அதற்குரிய விண்ணப்பங்களோ ஆகத்து மாதம் தொடங்கப்பட்டு செப்டம்பர் மாதத்திற்குள் விண்ணப்பங்களை அனுப்புவதற்கு இறுதி நாள் நிச்சயிக்கப்படும். இதிலும் இந்த தேதிகள் கல்லூரிக்கு கல்லூரி, நாட்டிற்க்கு நாடு வேறுபடும்.

இந்த இரண்டு சேர்க்கையிலும் முக்கியமான வித்தியாசம் என்ன என்றால், இலையுதிர் கால சேர்கையில் ஒரு கல்லூரியில் இருக்கும் அனைத்துப் படிப்பிற்கும் ஆள் சேர்கை நடைபெறும். அதாவது எந்த படிப்பிற்கு வேண்டும் என்றாலும் ஒரு மாணவன் விண்ணப்பிக்கலாம்.இது தான் அந்த வருடத்தின் முதன்மையான சேர்கை.

ஆனால் வசந்த கால சேர்க்கையிலோ சில படிப்புகளுக்கு ஆள் சேர்கை நடை பெறாது. ஒரு சில பாடங்களுக்கு மட்டுமே மாணவர்கள் விண்ணப்பிக்க முடியும்.

எனவே மாணவர்கள் தாங்கள் என்ன படிப்பிற்கு விண்ணப்பிக்கப் போவதாக இருந்தாலும், அந்த விண்ணப்பத்திற்கான தேதிகளையும் அது எந்த சேர்கை என்பதையும், ஒரு வேளை அது வசந்த கால சேர்கையாக இருந்தால் அவர் விண்ணப்பிக்கும் படிப்பிற்கு அந்த சேர்கையில் ஆள் சேர்கை நடைபெறுகின்றதா என்பதையும் தெளிவாக முதலில் அறிந்து கொள்ள வேண்டும்.

அந்த செய்திகள் அனைத்தும் அந்த கல்லூரிகளின் இணையத்தளையங்களிலேயே  தெளிவாக கொடுக்கப்பட்டு இருக்கும். சரி வெளிநாடுகளின் சேர்கை முறைகளைப் பற்றி அறிந்துக் கொண்டோம். இனி ஒவ்வொரு நாடுகளைப் பற்றியும், அந்த நாட்டிற்க்கு விண்ணப்பிப்பதைப் பற்றியும் தெளிவாக பார்ப்போம்.

இளைஞர்களே,
 உலகத்தின் பெரிய பல்கலைக்கழகங்கள் நமக்காக கதவைத் திறந்து வைத்துக் காத்துக் கொண்டு நிற்கின்றன....!!! 

0 கருத்துகள்:

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு