"இயேசு வருகின்றார்" என்ற சுவரொட்டிகளையும் முழக்கங்களையும் நாம் இன்று நிச்சயம் கண்டோ அல்லது கேட்டோ இருப்போம். ஒரு நூறு ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த மக்களும் அதனைக் கேட்டு இருப்பர்...ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த மக்களும் அதனைக் கேட்டு இருக்கக் கூடும். காரணம் எளிது...இன்று இயேசுவை பின் பற்றும் மக்கள் விவிலியத்தில் குறிப்பிடப்பட்டு உள்ள படியே இயேசு இரண்டாம் முறையாக உலகிற்கு வருவார்...அப்படி அவர் வரும் பொழுது அவரை உண்மையிலேயே நேசிக்கும் மக்களை அவர் இரட்சிப்பார் என்றே நம்புகின்றனர். அந்த நம்பிக்கையின் படியே அவர்கள் காலம் காலமாக காத்துக் கொண்டு இருக்கின்றனர். அதனால் தான் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கேட்ட குரல்கள் இன்றும் கேட்டுக் கொண்டு இருக்கின்றன.

ஆனால் இங்கே நம்முடைய கேள்வி என்னவென்றால் இன்னும் எத்தனை வருடங்கள் அவர்கள் காத்துக் கொண்டே இருக்கப் போகின்றனர்? ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரும் 'இயேசு வருகின்றார்' என்றுக் கூறினர்...நூறு வருடங்களுக்கு முன்னரும் கூறினர்...இன்றும் கூறுகின்றனர்...நாளையும் கூறக் கூடும்...ஆயிரம் ஆண்டுகள் கழித்தும் கூறக் கூடும். அவ்வாறு இருக்கையில் இயேசு வருவார் என்பதனை நாம் எங்கனம் நம்ப இயலும்? மேலும் நம்முடைய கேள்விக்கு வலு சேர்ப்பதாக விவிலியத்தில் இயேசு கூறிய வசனங்களும் இருக்கின்றன.

" இங்கே நிற்கிறவர்களில் சிலர் மனுஷகுமாரன் தம்முடைய ராஜ்யத்தில் வருவதைக் காணுமுன், மரணத்தை ருசிபார்ப்பதில்லை என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்." - மத்தேயு 16:28

"இவையெல்லாம் சம்பவிக்கும் முன் இந்தச் சந்ததி ஒழிந்துபோகாதென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்." - லூக்கா 21:32

என்றே இயேசு கூறி இருக்கின்றார். அவரின் இக்கூற்றுகள் படி ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்த மக்கள் பலர் இறப்பதற்குள் அவர் இரண்டாம் முறையாக உலகிற்கு வந்து விட்டு இருப்பார் என்றே நாம் அறிய முடிகின்றது. ஆனால் இன்றோ அம்மக்களுள் எவரும் உயிரோடு இலர்...ஆனால் இன்னும் இயேசு வரவில்லை என்ற கருத்தின் படி 'இயேசு வருகின்றார்' என்று கிருத்துவர்கள் கூறிக் கொண்டு இருக்கின்றனர்.

இந்நிலையில் ஒன்று இயேசுவின் கூற்று பொய்யான ஒன்றாக இருக்க வேண்டும்...இல்லையேல் இன்றைய கிருத்துவர்களின் எதிர்பார்ப்பு பொய்யானதொன்றாக இருக்க வேண்டும். இவ்விரண்டு விடைகளைத் தவிர வேறு பதில்கள் இருக்க வாய்ப்பே இல்லை. இந்நிலையில் தான் இயேசுவின் இரண்டாம் வருகையினைக் குறித்து நாம் காண வேண்டி இருக்கின்றது.

இயேசு இறைவனின் மைந்தனாக அறியப்படுகின்றார். அவர் பொய் கூறி இருப்பாரா என்றால் இல்லை என்றே அனைத்து கிருத்துவர்களும் கூறுவர். எனவே அதன் அடிப்படையிலேயே இயேசுவின் இரண்டாம் வருகையினைக் குறித்து இன்றையக் கிருத்துவர்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையிலிலேயே குழப்பம் இருக்கலாம் என்று நாம் கருத முடிகின்றது. இக்கருத்துகளுக்கு வலுச் சேர்ப்பதைப் போன்றே சில கிருத்துவர்கள் 'இயேசுவின் இரண்டாம் வருகை' முடிந்து விட்டது...அதனை அறியாமலேயே இன்றைக்கு பல கிருத்துவர்கள் 'இயேசு இனிமேல் தான் வரப் போகின்றார்' என்றுக் கருதிக் கொண்டு இருக்கின்றனர் என்றே கூறுகின்றனர். இவர்களின் கூற்றினைத் தான் நாம் இப்பொழுது பார்க்க வேண்டி இருக்கின்றது. அதற்கு முன்னர் நாம் யூதர்களைப் பற்றி சிறிது பார்த்து விடுவது நலமாக இருக்கும்.

பழைய ஏற்பாடு கிட்டத்தட்ட முழுக்க முழுக்க யூதர்களின் நம்பிக்கையினையும் வரலாற்றினையும் கொண்டு திகழ்ந்துக் கொண்டிருக்கும் ஒரு நூல். யூதர்களின் நம்பிக்கைப்படி அவர்களுக்கான தேசத்தினை இறைவன் உலகினில் வந்து அவர்களுக்காக ஏற்படுத்தித் தருவார்...அதற்காகவே அவர்கள் காத்துக் கொண்டும் இருந்தனர். இந்நிலையில் தான் இயேசு அங்கே தோன்றுகின்றார். ஆனால் அவர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த இறைவனாக இயேசுவை யூதர்கள் ஏற்றுக் கொள்ளாதது தான் இயேசுவின் மரணத்திற்கு வழிவகுத்தது. அவர்களின் பார்வைக்கு இயேசு ஒரு ஏமாற்றுப் பேர்வழி. ஆனால் இயேசுவின் உயிர்த்தெழுதலுக்குப் பின்னால் பல யூதர்கள் இயேசு தான் தாங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த இறைவன் என்று நம்பத் தொடங்கி இயேசுவின் கருத்துக்களைப் பின் பற்ற ஆரம்பித்து கிருத்துவர்களாக ஆக ஆரம்பிக்கின்றனர்.

ஆனால் இயேசுவினை நம்பாத யூதர்களோ தொடர்ந்து யூத நம்பிக்கையினையையே வைத்துக் கொண்டு இறைவனின் முதல் வருகைக்காக காத்துக் கொண்டு இருக்கின்றனர். கிருத்துவ கருத்துக்களை ஏற்றுக் கொண்ட யூதர்களோ, இயேசுவின் வழியாக முதல் முறையாக இறைவன் உலகிற்கு வந்தாயிற்று என்று நம்பினாலும் அவர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த தேசத்தினை அவர் உருவாக்கித் தராத ஒரு காரணத்தினால், இறைவன் மீண்டும் உலகிற்கு வருவார் என்றும் அப்பொழுது இறைவனின் தேசத்தினை அவரினை நம்பியவர்களுக்கு அவர் அமைத்துத் தருவார் என்றும் நம்பிக் கொண்டு இரண்டாம் வருகைக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் தான் நாம் இயேசுவின் இரண்டாம் வருகை ஏற்கனவே நடந்தாயிற்று என்றுக் கூறுபவர்களின் கருத்தினைக் காண வேண்டி இருக்கின்றது.

அவர்களின் கருத்தின் படி,

இயேசுவின் முதல் வருகை மக்களின் பாவத்தினைப் போக்கும் பலியாக இறைவனின் மகனாக மனிதனாக வந்தது.

"அதெப்படியெனில், மாம்சத்தினாலே பலவீனமாயிருந்த நியாயப்பிரமாணம் செய்யக்கூடாததை தேவனே செய்யும்படிக்கு, தம்முடைய குமாரனைப் பாவமாம்சத்தின் சாயலாகவும், பாவத்தைப் போக்கும் பலியாகவும் அனுப்பி, மாம்சத்திலே பாவத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்தார்." - ரோமர் 8:3

இரண்டாம் வருகையானதோ அவர் இறந்து உயிர்த்தெழுந்தப் பின் பரிசுத்த ஆவியானவராய் வந்தது.

"அவர்கள்மேல் ஊதி: பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள்;" - யோவான் 20:22

புதிதான கருத்தாக இருக்கின்றது அல்லவா...இப்பொழுது இக்கருத்தினைப் பற்றித் தான் நாம் விரிவாக காண வேண்டி இருக்கின்றது...அதற்கு நாம் விவிலியத்தில் உள்ள சில குறிப்புகளைக் காண வேண்டி இருக்கின்றது.

விவிலியத்தின்படி உலகில் முதல் மனிதன் செய்த பாவத்தின் காரணமாக பாவம் உலகினுள் நுழைகின்றது...அப்பாவத்தினால் இறைவனை அறிய முடியாது இருக்கின்றான் அவன். அப்படிப்பட்ட மனிதனின் பாவத்தினைப் போக்க இறைவனே உலகினில் மனிதனாக வந்து மனிதனின் பாவத்தினைப் போக்க பலியானார்.

"அதெப்படியெனில், மாம்சத்தினாலே பலவீனமாயிருந்த நியாயப்பிரமாணம் செய்யக்கூடாததை தேவனே செய்யும்படிக்கு, தம்முடைய குமாரனைப் பாவமாம்சத்தின் சாயலாகவும், பாவத்தைப் போக்கும் பலியாகவும் அனுப்பி, மாம்சத்திலே பாவத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்தார்."  ரோமர் 8:3

"இப்படியாக, ஒரே மனுஷனாலே பாவமும் பாவத்தினாலே மரணமும் உலகத்திலே பிரவேசித்ததுபோலவும், எல்லா மனுஷரும் பாவஞ்செய்தபடியால், மரணம் எல்லாருக்கும் வந்ததுபோலவும் இதுவுமாயிற்று."   ரோமர் 5: 12

"அன்றியும் ஒரே மனுஷனுடைய கீழ்ப்படியாமையினாலே அநேகர் பாவிகளாக்கப்பட்டதுபோல, ஒருவருடைய கீழ்ப்படிதலினாலே அநேகர் நீதிமான்களாக்கப்படுவார்கள்."  ரோமர் 5:19

அவ்வாறு இறைவன் பலியானதன் வாயிலாக மனிதன் செய்த பாவங்கள் தீர்க்கப்பட்டன. இதுவே தான் விவிலியம் கூறும் கருத்து.

மேலும் மனிதனாக வந்த இயேசு பலியான போது அவருடைய சீடர்களே கலக்கம் அடைந்து தான் இருந்தனர். இயேசுவின் மேல் அவர்கள் முழுமையாக நம்பிக்கை கொண்டு இருக்கவில்லை என்றும் அவர்களுக்குக் குழப்பங்களும் சரி கேள்விகளும் சரி இருந்துக் கொண்டே தான் இருந்தன என்பதையும் நாம் விவிலியத்தில் இருந்தே அறிந்துக் கொள்ளலாம். மேலும் இயேசு சிலுவையில் அறையப்படும் தருணம் அவருடைய சீடர்களுள் யோவான் மட்டுமே அங்கே இருந்தான் என்பதும் அதுவும் அவன் இயேசுவின் உறவினனாக இருந்த காரணத்தினாலேயே அங்கே இருந்தான் என்றும் நாம் அறிய முடிகின்றது.

இயேசு உயிர்த்தெழுந்து அவரின் மூலம் பரிசுத்த ஆவியினை அவர்கள் பெறும் வரை அவர்களின் நிலை அவ்வாறே தான் இருந்தது. ஆனால் பரிசுத்த ஆவியினை அவர்கள் பெற்றப் பின் அவர்களின் நிலை மாறுகின்றது. அதாவது அவர்கள் பரிசுத்த ஆவியினால் மாறுகின்றனர்.

இந்த இடத்தில் தான் நாம் பரிசுத்த ஆவியினைப் பற்றிப் பார்க்க வேண்டி இருக்கின்றது.

காண்போம்...!!!


பின்குறிப்பு:

1) இத் தொடர் ஒரு தேடல் முயற்சியே...மாற்றுக் கருத்துகளும் விவாதங்களும் வரவேற்கப்படுகின்றன.

2) (இதற்கு முந்தைய பகுதிகளைக் காண இச் சுட்டியினை சொடுக்கவும் - சமயங்கள்-முகப்பு

4 கருத்துகள்:

if you want answer ask me . watever u hav written is wrong

@Ma Les Ca

Can you please let me know what is wrong my friend... and also then can u let me know what is right?

Thank you!!!

no where in the bible he said about his exact time of 2nd coming. he says be prepared at all the time. but bible also gives the list of signs.one of the prominent is, the temple shall be rebuilt in Jerusalem soon. another thing is Christianity would accepted by atleast 50% of the muslims even in the middle east(?)then his secret coming would take place

@ Priya Rajkumar,

Can u give me the verses which say abt the temple of jerusalem and the conversion of muslims and i can give you my views on that my friend.

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு