செரோக்கே (cherokee) இன முதியவர் சுற்றியும் பார்த்தார்.


இருள் மெதுவாய் படரத் தொடங்கி இருந்தது. அதுவரை காற்றில் விளையாடிக்கொண்டிருந்த புல்வெளிகள் இருளெனும் போர்வையால் மூடப்பெற மெதுவாய் தலை நீட்டிப் பார்க்க ஆரம்பித்து இருந்தன சில நட்சத்திரங்கள்.

“ம்ம்ம்…நேரம் கனிந்து விட்டது” என்று தனக்குள் எண்ணிக்கொண்டே தனது குடிலின் அருகே மூட்டப்பட்டு இருந்த நெருப்புக் கோளத்தின் அருகே சென்று அமர்ந்து அவருடைய பேரனை அழைத்தார்.

“செரோக்கே இன இளைஞனே… வாழ்வினைப் பற்றி நீ அறிந்துக் கொள்ள வேண்டிய தருணம் இதோ வந்து விட்டது. வாராய்” என்றார்.

அவரின் அழைப்பினை எதிர்பார்த்துக் கொண்டிருந்தவாறே ஒரு இளைஞனும் அவரருகே வந்து அந்த நெருப்புக் கோளத்தின் அருகே அமர்ந்தான். இருவருக்கும் போதுமான வெப்பத்தை வழங்கியவாறு நெருப்பு எரிந்துக் கொண்டு இருக்க மௌனமாய் சில நொடிகள் கழிந்தன. மௌனம் அவனுக்கு புதிதல்ல…வார்த்தைகள் அவனுக்கு கற்றுத் தந்ததை விட மௌனமே அவனுக்கு அதிகமாக கற்றுத் தந்து இருக்கின்றது….இதோ இந்த மௌனத்திலும் நெருப்பில் உடையும் சருகுகளும், ஊளையிட்டுக் கொண்டே அவனைக் கடந்துச் செல்லும் தென்றலும் அவனுக்குப் புதிய பாடங்களைக் கற்றுத் தந்துக் கொண்டு தான் இருந்தன. ஆனால் இன்று அவை அவனுக்கு முக்கியமில்லை. இன்று அவனுக்கு முன்னர் வாழ்க்கை அனுபவத்தின் பாடம் காத்துக் கொண்டு இருந்தது. அதற்காக எவ்வளவு நாட்கள் வேண்டுமானாலும் அவன் காத்திருக்க தயாராக இருந்தான். அனுபவங்களின் பாடங்கள் அவ்வளவு முக்கியமானவை அவர்களின் இனத்தில்.

“என்னுள் ஒரு யுத்தம் நிகழ்ந்துக் கொண்டே இருக்கின்றது….” செரோக்கே இன முதியவர் பேச ஆரம்பித்து இருந்தார்.

“அது ஒரு பயங்கரமான யுத்தம். என்னுள் இரு ஓநாய்கள் பயங்கரமாக சண்டையிட்டுக் கொண்டு இருக்கின்றன. ஒன்று தீமையானது – கோபம், பொறாமை, பேராசை, துக்கம், வருத்தம், பொய், தாழ்வுமனப்பான்மை, உயர்வு மனப்பான்மை, போலிப் பெருமை போன்ற குணங்களின் வடிவாக அந்த ஓநாய் இருக்கின்றது. மற்றொன்று நன்மையானது – அன்பு, நன்றி, கருணை, மகிழ்ச்சி, அமைதி, கொடைத்தன்மை, இறக்கம், உண்மை, நம்பிக்கை, எளிமை போன்ற தன்மைகளின் வடிவாக இந்த ஓநாய் இருக்கின்றது.” முதியவர் மெதுவாக நிமிர்ந்து அவரது பேரனைப் பார்த்தார்.

“அந்த ஓநாய்களின் சண்டை உன்னுள்ளும் நிகழ்ந்துக் கொண்டே இருக்கின்றது இளைஞனே…உன்னுள் மட்டும் அல்ல மக்கள் அனைவருள்ளும் அவை சண்டையிட்டுக் கொண்டே தான் இருக்கின்றன.” என்றுக் கூறி விட்டு தனது பார்வையினை தனது பேரனிடம் இருந்து விலக்கி நெருப்பினை பார்க்க ஆரம்பித்தார்.

தனது தாத்தா தன்னிடம் கூறிய விடயத்தினை பற்றி சிந்திக்கலானான் அந்த இளைஞன். அவரின் கூற்றில் இருந்த உண்மையை அவன் அறிந்து
இருந்தான்… காரணம், அவனுடைய மனதினுள் பல நேரங்களில் சில கருத்துக்கள் மோதிக்கொள்வதை அவன் உணர்ந்து இருந்தான்.


“ஆம்…என்னுள் ஓநாய்கள் சண்டை இட்டுக் கொண்டு இருக்கின்றன…” அவ்வாறு எண்ணிக் கொண்டு மெதுவாய் புன்னகைத்துக் கொண்டு தனது தாத்தாவை நோக்கினான்… ஒரு கேள்வி அன்றுக் கேட்பதற்கு மீதம் இருந்தது.

“எந்த ஓநாய் வெல்லும் தாத்தா…?”

நெருப்பில் நிலைத்து நின்று இருந்த தனது பார்வையை நிமிர்த்தி தனது பேரனை நோக்கித் திருப்பினார்.


“எந்த ஓநாய்க்கு நீ உணவிடுகின்றாயோ…அந்த ஓநாயே வெல்லும் இளைஞனே…அந்த ஓநாயே வெல்லும்!!!” என்றுக் கூறி அன்றைய பாடம் முடிந்தது என்று சைகையால் தனது பேரனுக்கு அறிவித்து விட்டு தனது குடிலினுள் சென்றார்.

பி.கு:

இது ஒரு செரோக்கே இன செவ்விந்தியர்களின் கதையாகும்.

செவ்விந்தியர்கள் என்பவர்கள் இன்றைக்கு வட அமெரிக்கா என்று வழங்கப்படும் தேசத்தின் பூர்வீகக் குடியினர் ஆவர். இந்தியாவைத் தேடி பயணித்த ஐரோப்பியர்கள் தெரியாது அமெரிக்க கண்டத்திலே கால் வைத்தப் பொழுது அந்த தேசத்தையே இந்தியா என்று எண்ணலாயினர். அவ்வாறே அங்கு இருந்த சிவந்த நிற மனிதர்களை இந்தியர்கள் என்று எண்ணி செவ்விந்தியர்கள் என்று பெயரும் இட்டு விட்டனர். (செவ்விந்தியர் – சிகப்பு + இந்தியர்). ஆனால் தாங்கள் வந்த தேசம் இந்தியா அல்ல என்று அவர்கள் அறிய நேர்ந்ததும் வழக்கம் போல் அந்த இடத்தில் இருந்த மக்கள் அனைவரையும் அடிமைப்படுத்தி அவர்கள் இடங்களை கைப்பற்ற ஆரம்பித்தனர் ஐரோப்பியர்கள்.

அவ்வாறு ஐரோப்பியர்கள் அமெரிக்காவை கைப்பற்றியதும் அங்கிருந்த பூர்வீகக் குடியினரைக் கொத்துக்கொத்தாக கொன்று போட்டதும் பலரும் அறியாத சோக வரலாற்றுப் பக்கங்களாகும். அந்த வரலாறு இப்பொழுது நமக்கு முக்கியமில்லை. ஆனால் அவ்வாறு அழிக்கப்பட்ட ஒரு இனம் தான் இந்த செரோக்கே செவ்விந்திய இனம் (முற்றிலுமாக அவர்கள் அழியவில்லை…இன்னும் சில மக்கள் அமெரிக்காவில் வாழ்ந்துக்  கொண்டு தான் இருக்கின்றனர்). அவர்களை அழித்த ஆங்கிலேயர்கள் தான் இன்று அமெரிக்கர்கள் என்று பெயரினைக் கொண்டு முன்னர் செவ்விந்தியர்கள் சுற்றிக் கொண்டு இருந்த இடங்களில் ஆண்டுக் கொண்டு இருக்கின்றனர்.

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு