பைன் மரங்களின் வழியாக கதிரவன் நாங்கள் செல்லும் பாதையில் ஒளிப்பரப்பி கொண்டு இருந்தான். நாங்களும் மதி கெட்டான் சோலையை நோக்கி ஆர்வத்துடன் சென்று கொண்டு இருந்தோம்.
"இன்னும் சோலையை அடைய எவ்வளவு நேரம் ஆகும்?." என்றேன்.
"ஏன் கேட்கிறாய்" என்றார் பேராசிரியர் கந்தசாமி.
"இல்லை நாமும் வெகு நேரமாக நடந்து கொண்டு இருக்கின்றோம், ஆனால் இந்த பைன் மரக்காட்டைத்தவிர வேறு இடமே தெரியவில்லையே அதான் கேட்டேன்" என்றேன் தயக்கத்துடன்.
நின்றார் பேராசிரியர். அவரை தொடர்ந்து வந்த மாணவர் கூட்டமும் நின்றது. சில நொடிகளில் வனம் அமைதி ஆனது.
"தூரத்தில் தண்ணீர் ஓடும் சத்தம் கேட்கிறதா" என்றார்.
கூர்ந்து கவனித்ததில் சிறு தொலைவில் ஒரு நீரோடை ஓடுகின்ற சத்தம் கேட்டது.
"ஆம்" என்றோம்.
"அப்படி என்றால் சோலை நெருங்கி விட்டது என்று அர்த்தம். சோலை எங்கு இருக்கின்றதோ அங்கே நீரும் இருக்கும்." என்றார்.
பயணத்தின் இலக்கு நெருங்கி விட்டதை எண்ணி சற்று மகிழ்ச்சியோடு நடக்க ஆரம்பித்தோம்.
"நில்லுங்கள்! சோலைக்குள் செல்லும் முன் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் சில இருக்கின்றன. அமருங்கள்" என்று கூறி அவரும் ஒரு மரத்தடியில் அமர்ந்தார்.
நாங்களும் அவரைச் சுற்றி அமர்ந்தோம்.
"ஓங்கி வளர்ந்து இருக்கும் இந்த பைன் மரங்களை பார்த்தீர்களா? இவற்றை பார்க்கும் போது என்ன எண்ணம் வருகின்றது?" என்றார்.
"தமிழ் சினிமா படத்தில் சண்டை காட்சிகளிலும், பாடல் காட்சிகளிலும் வரும் காடுகள் போல இருக்கின்றன" என்றான் ஒருவன்.
"ஆம். இந்த காடுகளை நீங்கள் அடிக்கடி படங்களில் பார்த்து இருப்பீர்கள். காடுகளில் பல வகைகள் இருக்கும் போது என் இந்த காடுகளில் மட்டும் அதிகமாக படம் எடுக்கிறார்கள் என்று உங்களுக்கு தெரியுமா?"
"இவை அழகாய் இருக்கின்றன! அதனாலா?" என்றாள் ஒருத்தி.
"ஒவ்வொரு மரத்திற்கும் இடையில் இருக்கும் பெரிய இடைவெளிகள் அவர்கள் படம்பிடிக்க சிரமமாய் இருக்காது. அதனால் இருக்கும்" என்றான் இன்னொருவன்.
"ஆம்!! இந்த மரங்களுக்கு இடையில் இருக்கும் இந்த இடைவெளிகள் தான் காரணம். இந்த மரங்களை உற்று கவனியுங்கள். இந்த நிலப்பரப்பில் இந்த மரங்களை தவிர வேறு மரங்கள் எதையாவது நீங்கள் காணமுடிகின்றதா" என்றார் பேராசிரியர்.
"இல்லை!" என்றோம். அந்த நிலப்பரப்பு முழுவதும் பைன் மரங்கள் தவிர வேறு மரங்கள் தென்படவில்லை.
"இருக்கும் மரங்களும், தனித் தனியாக இருப்பதையும் பார்த்து கொள்ளுங்கள். இந்த இடத்தில், நீரோட்டம் இல்லை, அதிகமான மிருக நடமாட்டமும் இல்லை. இருப்பவை அனைத்தும் பைன் மரங்களும் அவை உதிர்த்த இலைகளுமே. இவற்றை ஞாபகம் வைத்து கொள்ளுங்கள். முக்கியமான உண்மையை அறிய இந்த விஷயங்கள் தேவையாக இருக்கும்" தொடர்ந்தார் பேராசிரியர்.
ஆம். அவர் கூறியதை போலவே அந்த பகுதியில் பைன் மரங்களையும் அதன் உதிர்ந்த இலைகளையும் தவிர வேற இயற்கையின் படைப்புகளை காண முடியவில்லை.

"சரி வாருங்கள்!!! இப்பொழுது சோலைக்குள் செல்லலாம்" என்று கூறி விட்டு எழுந்து தண்ணீரின் சத்தம் வந்த திசையை நோக்கி நடக்க ஆரம்பித்தார்.
நாங்களும் பின் தொடர்ந்தோம்.
இது வரையிலும் தனித் தனி மரமாக காட்சியளித்த வனம் இப்பொழுது சற்று இறுக்கமாய் காட்சியளிக்க ஆரம்பித்தது. மரங்கள் மிகவும் நெருக்கமாய் ஒன்றுடன் ஒன்று இணைந்து கொண்டு வெயில் உள்ளே வராதவாறு இருந்தன.
தண்ணீரின் சத்தம் சற்று பலமாக கேட்க ஆரம்பித்தது. கூடவே சில பறவைகளின் சங்கீத சத்தமும்தான்.
"இதோ....இது தான் மதி கெட்டான் சோலை. இனி அனைவரும் தங்கள் முன்னால் செல்பவரை பின் தொடர்ந்தே சீக்கிரம் வரப் பாருங்கள். ஏன் எனில், இந்த சோலையின் பெயருக்கு ஏற்ப ஒருவர் வழி தவறினால் அவரை கண்டு பிடிப்பதற்கு எவ்வளவு நாட்கள் ஆகும் என்று தெரியாது. எனவே இயற்கையை ரசியுங்கள் ஆனால் ஜாக்கிரதையாய் ரசியுங்கள். என்னை தொடர்ந்து பின் வாருங்கள்" என்று சொல்லி அந்த அடர்ந்த சோலைக்குள் பிரவேசித்தார்.

இது வரை நாங்கள் கடந்து வந்த அந்த பைன் மரக்காட்டை விடவும் மிகவும் வித்தியாசமான ஒரு சூழல் எங்களை எதிர் பார்த்து அங்கே காத்துக்கொண்டு இருந்தது. எங்கு பார்த்தாலும் பசுமை, வித விதமான மரங்கள்,நீரோடை, நீரோடும் வழியில் தடைகல்லாய் சில பாறைகள், வரையறுக்காத பாதை என முற்றிலும் மாறுபட்ட ஒரு இடமாய் காட்சியளித்தது அந்த சோலை.
பேராசிரியரின் எச்சரிக்கை எங்களுக்கு ஞாபகம் வந்தது. இங்கே தொலைந்தால் கண்டிப்பாய் திரும்பி சரியான வழி கண்டு பிடிப்பது என்பது எளிதான விஷயம் இல்லை என்பது மிகைப்படுத்தப்பட்ட ஒன்று அல்ல என்பது தெள்ளத்தெளிவாக புரிந்தது.
"இந்த சோலை முழுவதும் நீரோடைகள் ஓடிக் கொண்டே இருக்கும். சோலைகள் எங்கேயோ, அங்கே நீர் ஆதாரங்களும் இருக்கும் என்பது எழுதப்படாத விதி" என்றார் பேராசிரியர்.
"ஏன் அப்படி! இதுவும் ஒரு வகையான காடுதானே. ஏன் அந்த பைன் மரக்காட்டில் இல்லாத நீர் ஆதாரம் இந்த சோலைகளில் மட்டும் இருக்கின்றது." என்றேன்.
"அது தான் சோலைகள். விவரமாக சொல்கின்றேன் அமருங்கள்!" என்று கூறி ஒரு பாறையில் அமர்ந்தார். நாங்களும் கிடைத்த பாறைகளில் அமர்ந்து கேட்க ஆரம்பித்தோம்.
"அங்கு அந்த பைன் மரங்களை பார்த்தீர்கள் அல்லவா... அந்த இடத்திற்கும் இந்த இடத்திற்கும் ஏதாவது வித்தியாசத்தை உணருக்கின்றீர்களா?" என்றார்.
"ஆம். நிறைய வேறுபாடுகள் உள்ளன" என்றோம்.
"அந்த வேறுபாடுகள் என்ன என்னவென்று சொல்லுங்கள். நான் உங்கள் கேள்விக்கு பதில் சொல்லுகின்றேன்." என்றார்.
"ம்ம்ம்... இங்கே நிறைய மரங்கள் இருக்கின்றன. பெரிய மரங்கள், சின்ன செடிகள் ஆகியவையெல்லாம் ஒன்றாய் இருக்கின்றன. அங்கே அந்த பைன் மரங்கள் மட்டும் தனியாக இருந்தன." என்றான் ஒருவன்.
புன்னகைத்தார் பேராசிரியர். "சரியாக கவனித்து இருக்கின்றாயே. வாழ்த்துகள். ஆம்! இங்கே மரங்கள் ஒன்றாக இருக்கின்றன. ஒற்றுமையாய் இருக்கின்றன. அங்கே உள்ளது போல் ஒவ்வொரு மரமும் தனித் தனியாக இல்லை. அது தான் இந்த இடம் செழித்து இருப்பதற்கு காரணம்." என்றார்
"புரியவில்லையே" என்றேன்.
"இந்த மரங்கள் இங்கே ஒன்றை ஒன்று கவனித்து கொள்கின்றன. இந்த சிறிய செடிகள் அளவிற்கு அதிகமாய் வெயில் பட்டால் வளராது போய் விடும். எனவே இந்த பெரிய மரங்கள் அந்த செடிகளை வெயில் படாதவாறு காத்து தங்கள் பாதுகாப்பில் வளர செய்கின்றன. அதே போல் இந்த செடிகளும் மண்அரிப்பை தடுத்து மழைக்காலத்தில் நீரை சேமித்து, நிலத்தடி நீரை அதிகரிப்பதின் மூலம் பெரிய மரங்கள் செழித்து வளர உதவுகின்றன. இவ்வாறு ஒன்றுக்கொன்று உதவிக் கொள்வதின் மூலம் இந்த இடத்தை செழிப்பாக வைத்துக் கொள்கின்றன. இங்கே உதிர்ந்து விழும் இலை கூட உரம் ஆகுமே தவிர குப்பை ஆகாது. ஆனால் அந்த பைன் காட்டிலோ மரங்களுக்குள் இந்த ஒற்றுமை கிடையாது. எனவே அங்கே இந்த சோலைகளில் இருக்கும் உயிர் கிடையாது. சோலை இயற்கை.... அந்த பைன் காடுகள் செயற்கை!!!" என்று கூறி முடித்தார்.
"என்ன அந்த பைன் காடுகள் செயற்கையா?" என்றேன் ஆச்சரியத்துடன்.
"ஆம். அவை செயற்கை தான். நீங்கள் கொஞ்சம் எண்ணிப் பாருங்கள். சில அடிகளில் தண்ணீர் பாய்ந்து கொண்டு இருக்கின்றது. ஆனால் அந்த பைன் காடுகளில் நீர் இருந்த அறிகுறியையே காணோமே. இது இயற்கையா..... இல்லை.... மனிதன் பணம் வேண்டும் என்பதற்காக சோலைகளை அழித்து இந்த பைன் காடுகளை உருவாக்கி விட்டு சென்று விட்டான். சோலைகள் சேர்ந்து இருப்பது இந்த மண்ணிற்காக... இந்த பைன் மரங்கள் தனித்து நிற்பது பொன்னிற்காக. இது அவற்றின் பிழை அல்ல. மனிதனின் பேராசை. பணத்திற்கு ஆசைப்பட்டு இந்த மலைகளில் இருக்கும் சில முக்கியமான நீர் ஆதாரங்களை அவன் அழித்து விட்டான்" என்றார்.
"அந்த அழிந்து போன சோலைகளை நம்மால் திரும்பவும் கொண்டு வர முடியுமா?" என்றான் ஒருவன்
"ஏன் முடியாது. சோலைகள் நாம் மண்ணின் வனங்கள். அந்த பைன் மரக்காடுகளை அழித்து விட்டோம் என்றால்மீண்டும் சோலைகள் செழித்து வளரும். இது சோலைகளின் பூமி. ஆனால் அந்த பணி எளிதல்ல. அரசாங்கம் முயற்சியெடுக்க வேண்டும். இல்லை என்றால் இன்றைய சோலைகள் நாளைய பைன் மரக்காடுகளாவோ அல்லது தேயிலை தோட்டங்களாவோ மாறும் நாள் வெகு தொலைவில் இல்லை.சரி நான் இந்த சோலைகள் நம் மண்ணின் வனங்கள் என்று சொன்னேனே... அதற்கு ஒரு சான்று சொல்லமுடியுமா" என்றார்.
வழக்கம் போல் எங்கள் குழு மௌனம் சாதித்தது.
"என்ன தெரியவில்லையா?"
மீண்டும் மௌனம்.
"சரி. நானே சொல்கிறேன்." என்று கூறிவிட்டு அருகில் இருந்த ஒருவனை நோக்கி திரும்பினார்.
"உங்கள் வீட்டில் எத்தனை பேர்" என்றார்.
"மூன்று! நான், அப்பா அப்புறம் அம்மா" என்றான்.
"சரி. உங்களில் யாருடைய வீட்டில் கூட்டு குடும்பமாக வாழ்ந்து வருகின்றீர்கள்" என்றார் மீண்டும் கூட்டத்தை நோக்கி.
நான் எதிர்பார்த்தததை விட அதிக கைகள் மேலே எழூம்பின.
புன்னகைத்தார்.
"நன்று. எப்படி இந்த சோலைகள் நம்முடைய நாட்டினை கட்டி எழுப்பி இருக்கின்றனவோ அது போலவே தான் நம்முடைய கலாச்சாரம் கூட்டுக் குடும்பங்கள் வாயிலாகவே கட்டப்பட்டு உள்ளது." என்றார்.
அவர் எதை நோக்கி செல்கின்றார் என்பது எனக்கு புரிய ஆரம்பித்தது.
" இந்த சோலைகளில் மரங்கள் எவ்வாறு கூடி ஒற்றுமையாய் ஒன்றுக்கொன்று பயன் உள்ளதாய் உதவிக்கொண்டு இருக்கின்றனவோ அதே போல் தான் நம் நாட்டின் குடும்பங்களும் கூட்டு குடும்பமாய் ஒருத்தருக்கொருத்தர் உதவிக்கொண்டு வாழ்ந்து வந்தன. இந்த சோலைகளும் நம் குடும்பங்களும் ஒன்று தான். இரண்டும் நம் மண்ணின் அடையாளங்கள். வாழ்க்கை நெறியை உணர்த்துபவை. வாழ்வில் ஒற்றுமை இருக்கும் வரை வாழ்க்கை என்னும் நீரோடை மகிழ்ச்சியாய் அதன் வழியே ஓடிக்கொண்டே இருக்கும். ஆனால் இன்று இந்த சோலைகளை போலவே ஒற்றுமையான குடும்பங்களும் அழிந்து
கொண்டு இருக்கின்றன. சோலைகள் அழிந்து சில பைன் மரங்கள் பணம்  என்னும் காரணம் ஒன்றிர்க்காக புதிதாய் துளிர் விட்டு கொண்டு  இருக்கின்றன." என்றார்.
திடீர் என்று தொலைவில் இடி இடிக்கும் சத்தம் கேட்கவே நிமிர்ந்து வானத்தை உற்றுப் பார்த்து விட்டு மீண்டும் எங்களை நோக்கி திரும்பினார்.
 "அந்த தனி பைன் மரங்களால் இந்த மண்ணிற்கு எந்த பயனும் இல்லை. தீமை மட்டுமே உண்டு. இந்த பைன் மரங்களில் இருந்து மண்ணை காப்பாற்ற அரசாங்கத்தால் முடியாது. உங்களால் மட்டுமே முடியும். எப்படி இந்த சோலைகளை புதுப்பிக்க முடியுமோ அதே போல் குடும்பங்களையும் வளம் படுத்த முடியும். இரண்டுமே இயற்கை. நம் மண்ணின் சொத்துக்கள். நம் அடையாளங்கள். முயலுங்கள். இந்த மண் உங்களை நம்பியே. கிளம்புவோம் இன்னும் 5 நிமிடங்களில் மழை இங்கு வந்து விடும். அதற்குள் நாம் ஒரு  அருவியை கடக்க வேண்டும்" என்று கூறிக் கிளம்பினார்.
நாங்களும் புதிய சிந்தனையோடு நடக்க ஆரம்பித்தோம். 
பயணிப்போம்...

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு