பணமதிப்பிழக்கத்தின் மூலமாக அனைவரது பணத்தையும் வங்கிகளுக்கு கொண்டு வந்த நடவடிக்கையினைப் பற்றியே நாம் கண்டு கொண்டு இருக்கின்றோம். கருப்பு பணத்தை ஒழிப்பதற்கான நடவடிக்கை என்று கூறப்பட்ட பணமதிப்பிழக்கத்தின் முடிவுகள் வேறு விதமாக அமைந்திருக்கின்றன...எனவே தான் நாம் அதைப் பற்றி காண வேண்டியிருக்கின்றது. சரி இருக்கட்டும், இப்பொழுது நாம் சென்ற பதிவின் முடிவில் நாம் கண்ட விடயத்திலிருந்தே தொடரலாம்.

என்னிடம் இருக்கின்ற 1000 ரூபாயை வங்கியில் போடுகின்றேன்...அந்நிலையில் அந்த வங்கிக்காரன் கடையைச் சாத்தி விட்டு கிளம்பி விட்டான் என்றால் என்ன செய்வது என்ற கேள்வியினைத் தான் நாம் சென்ற பதிவில் கண்டிருந்தோம். இந்த கேள்வி சிலருக்கு அபத்தமாகத் தெரியலாம்...ஆனால் நம்மைச் சுற்றி நிகழ்கின்ற நிகழ்வுகளை வைத்து பார்க்கும் போது இந்தக் கேள்வியின் முக்கியத்துவம் தெரியும்.

உதாரணமாக விஜய் மல்லையாவின் கதையையே எடுத்துக் கொள்ளலாமே...9600 கோடி கடனினை மல்லையாவிற்கு தந்து விட்டு நமது ஊரிலேயே ஒரு வங்கி முழி பிதுங்கி நின்று கொண்டிருக்கிறதே. அந்த 9600 கோடி ரூபாய் யாருடைய பணம்? அந்த வங்கியில் சேமித்து வைத்தவர்களின் பணம் தானே...அதைத் தானே எடுத்து மல்லையாவிற்கு தந்திருக்கிறது அந்த வங்கி...இப்பொழுது அந்த பணம் திரும்பி வரவில்லை என்றால், அந்த வங்கியினால் எவ்வாறு அந்த பணத்தின் உரிமையாளர்களுக்கு மீண்டும் பணத்தினைத் தர இயலும்? முடியாது தானே. வங்கியில் பணத்தினை போட்டு வைப்பதுடன் எனது வேலை முடிந்து விடுகின்றது, அந்த பணத்தினை அவர்கள் எங்கே வைத்திருக்கின்றார்கள், அதற்கு வட்டியினை அவர்கள் எவ்வாறு தருகின்றார்கள், அந்த பணத்தினைக் கொண்டு அவர்கள் என்ன செய்கின்றார்கள், அதனை யாருக்குத் தருகின்றார்கள் என்பதெல்லாம் நமக்குத் தெரிவதில்லை...பணம் போட்டு இருக்கின்றோம், அது பத்திரமாக இருக்கும், கூடுதலாக அவர்கள் அதற்கு வட்டியும் தருகின்றார்கள் என்பதுடன் நாம் மன நிறைவடைந்து நின்று விடுகின்றோம்.

அட என்னங்க...எல்லாத்தையுமா நம்ம கவனிச்சிக்கிட்டு இருக்க முடியும், அதுக்குதான் வங்கி அதிகாரிகள் இருக்கின்றார்கள், அரசாங்கம் இருக்கிறது, அதன் சட்டங்கள் இருக்கின்றது...எல்லாம் முறைப்படி நடக்கிறதா என்று அவர்கள் கவனித்துக் கொள்ள மாட்டார்களா? ஒரு முறை தவறு நிகழ்ந்து விட்டது என்பதால் அதனையே பிடித்துக் கொண்டு குறை கூறுவது சரிதானா? என்ற ஒரு வாதம் இங்கே இயல்பாக எழக்கூடும். இந்தக் கேள்விக்காகத்தான் நாம் அமெரிக்காவின் பொருளாதார வீழ்ச்சியினைப் பார்க்க வேண்டியிருக்கின்றது.

நாம் சென்ற பதிவில் கண்டிருந்தோம், 1930களில் அமெரிக்கப் பொருளாதாரம் கிட்டத்தட்ட முற்றிலுமாக அழிந்து விட்டது என்று. அதன் காரணம் பங்குச் சந்தையும் வங்கிகளும் ஒன்றன்பின் ஒன்றாக தொடர்ந்து வீழ்ந்தது தான். அந்த வீழ்ச்சியினைப் பற்றி நாம் சிறிது மேலோட்டமாக கண்டு விடலாம்.

முதலாம் உலக யுத்தத்தில் மாபெரும் வெற்றியையும் அதன் விளைவாக மாபெரும் செல்வத்தையும் அடைந்த அமெரிக்காவின் பொருளாதாரம் தொடர்ந்து ஏறுமுகமாகத்தான் இருந்தது. போரில் அமெரிக்காவிற்கு இழப்பென்று பெரிதாய் ஒன்றும் கிடையாது, ஆனால் அனைத்து ஐரோப்பிய தேசங்களும் மாபெரும் இழப்பை அடைந்து இருந்தன, ஏனெனில் யுத்தம் நிகழ்ந்ததே ஐரோப்பிய நிலப்பரப்பில்தான்...ஆகவே அவர்கள் தங்களை மறு சீரமைப்பு செய்து கொள்ளவும், தங்களது தொழில்களை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வரவும் நீண்ட காலம் தேவைப்பட்டது. ஆனால் அமெரிக்காவிற்கு அத்தகைய தேவை என்று எதுவும் கிடையாது...அதன் தொழில்கள் முன்னைவிட சிறப்பாக இயங்கிக் கொண்டிருந்தன. ஐரோப்பாவிலும் ஆசியாவிலும் தேவைகள் இருந்தன, அமெரிக்காவில் தேவைக்கு மீறிய உற்பத்தி இருந்தது. போதாதா, புதிய நிறுவனங்கள் ஏற்றுமதி செய்கின்றோம், உற்பத்தி செய்கின்றோம் என்று தொடர்ந்து அமெரிக்காவில் தொடங்கிய வண்ணம் இருந்தன...இலாபம் கணக்கில்லாமல் வந்து கொண்டிருந்தது...பங்கு சந்தையும் கட்டுப்பாடின்றி வளர்ந்து கொண்டிருந்தது.

ஆனால், எப்பொழுது ஐரோப்பிய நாடுகள் மீண்டும் தமது உற்பத்தியை தொடங்கினவோ, அப்பொழுது அவற்றுக்கு பொருள்களை இறக்குமதி செய்ய வேண்டிய தேவை இல்லாது போய் விடும்தானே. அசுரத்தனமான இலாபங்களைக் கண்டு வந்து கொண்டிருந்த அமெரிக்க நிறுவனங்களின் இலாபம் குறைய ஆரம்பிக்கும்தானே...ஆனால், தங்களது இலாபங்கள் உண்மையிலேயே குறைந்தாலும், அவற்றை மறைத்து வைத்துவிட்டு, தொடர்ந்து தாங்கள் இலாபம் அதிகமாக கண்டு வந்து கொண்டிருக்கின்றோம்...எங்களது வணிகம் அருமையாகப் போய் கொண்டு இருக்கின்றது என்று அந்த அமெரிக்க நிறுவனங்கள் போலிக் கணக்குகளைக் காட்டி மக்களைத் தொடர்ந்து தங்களது பங்குகளில் முதலீடு செய்ய வைத்தால் என்னவாகும்?

மக்கள் தொடர்ந்து முதலீடு செய்து கொண்டே இருப்பார்கள்...அந்த பணத்தினைக் கொண்டு அந்த நிறுவனம் தனது வணிகத்தை வளர்த்துக் கொள்ள முயற்சி செய்யும், ஆனால் விழுந்து கொண்டிருக்கும் ஒரு கட்டிடத்தை எத்தனை காலம் தான் வண்ணம் பூசி மறைத்து வைக்க முடியும்? ஒருநாள் விழுந்துத் தானே ஆகும். அதுதான் அமெரிக்காவிலும் நிகழ்ந்தது...பெரிய நிறுவனங்கள் என்று கருதப்பட்ட நிறுவனங்களின் பெருந்தலைகள் கிடைத்த இலாபம் போதுமென்று மக்களின் பணத்தினை எடுத்துக் கொண்டு இராவோடு இராவாக நிறுவனத்தை இழுத்து மூடிக் கொண்டு ஓடினர். அவர்களைச் சார்ந்திருந்த ஏனைய நிறுவனங்கள் அவர்களைத் தொடர்ந்து கையை விரிக்க ஆரம்பித்தன. பங்குச் சந்தைகளில் பணம் போட்டிருந்த மக்கள் அதே இரவில் ஆண்டியாகிப் போயினர்.

சரி, பங்குச் சந்தையில் போட்ட பணத்தின் நிலைதான் இப்படி ஆயிற்று, நல்லவேளை வங்கிகளில் நமது பணம் பத்திரமாக இருக்கும் என்று எண்ணியவர்களின் நிலையும் அப்படியேத்தான் ஆயிற்று. வங்கிகளும் தங்கள் வசமிருந்த பணத்தினை பங்குச் சந்தையில் தான் போட்டு வைத்திருந்தன...எனவே அந்த வங்கிகளும் திவாலாகத் துவங்கின. இப்படித்தான் ஒரு மாபெரும் விஞ்ஞான ஊழல் ஆரம்பமாயிற்று...அதன் விளைவு, அமெரிக்காவின் பொருளாதார நெருக்கடி, இலட்சக்கணக்கான மக்கள் ஒன்றுமில்லாதவர்களாக மாறிப் போனது. அந்த நெருக்கடியிலிருந்து அமெரிக்கா வெளிவருவதற்கு நீண்ட காலம் ஆனது. அது வேற கதை...ஆனால் நாம் இங்கே அறிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், அந்த பொருளாதார வீழ்ச்சிக்கு காரணமாக இருந்தது கட்டுப்படுத்தப்படாத பங்குச் சந்தைதான் என்பதனை அமெரிக்கா அறிந்து கொண்டு, பங்குச் சந்தையையும் ஏனைய நிறுவனங்களையும் வலுவான சட்டதிட்டங்கள் மூலம் கட்டுப்படுத்த ஆரம்பித்தது. எவரும் ஏமாற்ற முடியாத வண்ணம் அந்த கட்டுப்பாடுகள் இருந்தன...வங்கிகள், தங்களது முதலீட்டார்களின் பணத்தினைக் கொண்டு ஊக வணிகம் செய்வதற்கோ அல்லது ஆபத்தான முதலீட்டினை செய்வதற்கோ அனுமதிக்கப்படவில்லை...பங்கு சந்தையிலும் அதிகாரம் பரவலாக இருக்கும்படியும், ஊக வணிகம் செய்யாமல் அந்த நிறுவனங்கள் இருக்கும்படியும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன் விளைவாக 1930 களுக்குப் பின் 1980கள் வரை அமெரிக்காவில் எந்த விதமான பொருளாதார நெருக்கடியும் எழவில்லை.

ஆனால் 1980களில் கதை மீண்டும் மாற ஆரம்பித்தது. அமெரிக்க நிதி நிறுவனங்களின் (Wall Street) பலம் அதிகரிக்கத் துவங்குகின்றது.

1980களில் இருந்து, அமெரிக்க நிதி நிறுவனங்களில் இருந்தவர்களுக்கும் மற்ற துறையில் இருந்தவர்களுக்கும் இடையில் இருக்கும் சம்பள வேறுபாட்டினைக் காட்டும் படம்.

பலம் பொருந்தியதாக இருக்கின்ற அமெரிக்க தனியார் நிதி நிறுவனங்கள், தங்களது கொள்கைகளுக்கு ஏற்பாக இருக்கும் ஒரு அதிபரை பதவிக்கு கொண்டு வருகின்றனர்...அவர் தான் ரொனால்டு ரீகன். இவரின் காலகட்டத்தில் தான் அமெரிக்க நிதி நிறுவனங்களின் மீதிருந்த கட்டுப்பாடுகள் நீக்கப்படுகின்றன (Deregulate). பொருளாதார வளர்ச்சிக்காக எந்த முதலீட்டை வேண்டுமென்றாலும் செய்யலாம், அது எவ்வளவு ஆபத்தான முதலீடாக இருந்தாலும் சரி, அரசாங்கம் இனி கட்டுப்பாடுகள் விதிக்காது என்று அந்த நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்படுகின்றது. மேலும் ஊக வணிகத்திற்கும் அனுமதி அளிக்கப்படுகின்றது. அதன் விளைவு தான் அடுத்த 30 ஆண்டுகளுக்குள் அமெரிக்கா 5 பொருளாதார நெருக்கடிகளைச் சந்தித்து விட்டது.

அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையின் காரணமாக பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாகிக் கொண்டே சென்றனர்.

அமெரிக்க மக்களின் மத்தியில் நிலவும் வருமான ஏற்றத்தாழ்வினை காட்டும் படம். 1 சதவீதம் இருக்கின்ற மக்கள் ஏனைய அனைத்து மனிதர்களைக் காட்டிலும் எந்தளவு அதிகம் சம்பாதிக்கின்றார்கள்.


அந்த பணத்தை வைத்துக் கொண்டு அவர்கள் தங்களுக்கு ஏற்ற சட்டங்களை நடைமுறைப் படுத்திக் கொண்டனர். நிதி நிறுவனங்களை அரசாங்கம் கட்டுப்படுத்தும் நிலை போய், நிதி நிறுவனங்கள் மறைமுகமாக அரசை கட்டுப்படுத்தும் நிலை ஆரம்பமாயிற்று. அந்த நிலைதான் 2008 ஆம் ஆண்டு அமெரிக்கா சந்தித்த மாபெரும் பொருளாதார நெருக்கடிக்கு காரணமாகும். இந்த நெருக்கடியைப் பற்றி நாம் இந்த பதிவில் முழுதாக காண வேண்டியத் தேவையில்லை, ஆயினும் மேலோட்டமாக நாம் அதனைப் பற்றி சிறிது கண்டாகத்தான் வேண்டி இருக்கின்றது.

காணலாம்...!!!


தொடர்புடைய இடுகைகள்:

வாழ்வும் கடனும்
முதலாளித்துவம் ஒரு காதல் கதை
ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்.

0 கருத்துகள்:

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு