சிறிது விசித்திரமானதொரு தலைப்புதான். வில்லங்கமானதாகவும் இருக்கலாம். ஆனால் வேறு வழியில்லை, இன்று இல்லுமினாட்டிகள் என்ற ஒரு சொல்லாடல் நம் மத்தியிலே பரவலாக பரவி வருகின்ற பொழுது, இராஜ இராஜ சோழனையும் நாம் இழுத்தாகத்தான் வேண்டியிருக்கின்றது. சரி இருக்கட்டும், முதலில் இல்லுமினாட்டி என்று இன்றைக்கு கூறப்படும் அந்த கூற்றினைப் பற்றி நாம் சிறிது கண்டு விடலாம்.

இல்லுமினாட்டி - இன்றைக்கு உலக முழுவதையும் தங்களின் கைகளுக்குள் வைத்திருக்கும் வண்ணம் அதிகாரம் படைத்த 13 குடும்பங்களைக் கொண்ட ஒரு குழு இது. மக்களை அறியாமையில் ஆழ்த்தி வைத்து அனைத்து வணிகங்களையும் சரி உலகில் நடக்கின்ற அனைத்து நிகழ்வுகளையும் சரி கட்டுப்படுத்துகின்ற ஒரு சக்தியாக இருக்கின்றது. பல்வேறு நாட்டின் தலைவர்களை கொலை செய்வது, வங்கிகளை வைத்துக் கொண்டு மக்களையும் நாடுகளையும் அடிமைகளாக ஆக்குவது என்று அதன் நடவடிக்கைகள் அநேகம். கிட்டத்தட்ட நமது நகரத்தின் உள்ளாட்சி செயலாளராக யார் வெற்றி பெற வேண்டும் என்பதை முதற்கொண்டு தீர்மானிக்கும் ஒரு மாபெரும் சக்தியாக அது இருக்கின்றது. சுதந்திரமாக இருப்பதாக மனிதர்கள் எண்ணினாலும், உண்மையில் அவர்களின் கட்டுப்பாட்டில் தான் நாம் இருந்து கொண்டிருக்கின்றோம். அமெரிக்கா, சீனா மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளைச் சேர்ந்த பெரிய குடும்பங்கள் தான் அவர்கள்.

இவ்வாறு தான் இன்றைக்கு இல்லுமினாட்டிகளைப் பற்றிய செய்திகள் நம்மிடையே பரவலாக பரவிக் கொண்டிருக்கின்றன. இவற்றை நாம் முற்றிலுமாக மறுக்கப் போவதில்லை. ஏனென்றால் அந்த கூற்றில் பெருமளவு உண்மையும் இருக்கத்தான் செய்கின்றது. ஒரு சில நபர்கள் இன்றைக்கு ஒட்டுமொத்த உலகையுமே கட்டுப்படுத்தும் ஆற்றலுடன் இருந்து கொண்டு தான் இருக்கின்றார்கள். இதனை மறுப்பதற்கில்லை. ஆனால் இங்கே பிரச்சனை என்னவென்றால், இல்லுமினாட்டிகளைப் பற்றிக் கூறுவோர், அவர்களின் ஆற்றலைப் பற்றிக் கூறுகிறார்களேத் தவிர, அவர்கள் அந்த ஆற்றலை எப்படி அடைகின்றார்கள் என்பதனைப் பற்றி கூறுவதில்லை. இதனால், இல்லுமினாட்டிகளை வீழ்த்த முடியாது, ஒரு சாதாரண மனிதனால் அவர்களை ஒன்றுமே செய்ய முடியாது என்றொரு பிம்பமும், வரலாற்றில் அவர்களைப் போல் எவருமே இருந்ததில்லை, இது இதுவரை மனிதகுலம் சந்தித்திராத மாபெரும் தீயசக்தி என்பன போன்ற பிம்பமுமே தான் தோற்றுவிக்கப்படுகின்றது.

ஆனால் உண்மையோ முற்றிலும் வேறாக இருக்கின்றது. மனிதர்கள் இல்லுமினாட்டிகளை காலந்தோறும் சந்தித்து வந்து கொண்டுதான் இருக்கின்றனர். பல சமயங்களில் தோற்று இருக்கின்றனர், சில நேரங்களில் வென்றும் இருக்கின்றனர். இது நீண்டகாலமாக தொடர்ந்து நடந்து வந்து கொண்டிருக்கும் ஒரு யுத்தம். இது புதியதொரு பிரச்சனை அல்ல. இதை மக்களை உணரச் செய்வதற்கு இல்லுமினாட்டிகளைப் பற்றி பேசுவோர் தவறி விடுகின்றனர்.

பிரச்சனையில்லை...நாம் முயல்வோம்!!! முதலில் இல்லுமினாட்டிகளைப் பற்றிய முக்கிய விடயங்களாக கூறப்படுவதை நாம் காணலாம்.

  1. உலக முழுவதும் தாங்கள் ஆள வேண்டும் என்று அவர்கள் எண்ணுகின்றார்கள்.
  2. அவர்களுக்கு உடன்படும் மனிதர்களை பல்வேறு தேசங்களை ஆள செய்கின்றார்கள்.
  3. எதிர்க்கும் தலைவர்களை கொலை செய்கின்றார்கள்.
  4. மக்களை பொழுதுபோக்கு என்ற மாயையில் சிக்க வைத்து அவர்களை சிந்திக்க விடாமல் செய்கின்றார்கள்.
  5. எதற்கும் பயன்படாத கல்வியை பரப்பி மக்களை விலங்குகளைப் போல் மாற்றுகின்றார்கள்.
  6. வங்கிகளை கையில் வைத்து கொண்டு உலகின் நிதியினை கட்டுப்படுத்துகின்றார்கள்.
இவைதான் இல்லுமினாட்டிகளைப் பற்றி கூறப்படும் முக்கியமான விடயங்கள். இப்பொழுது இந்த விடயங்களை நாம் வரலாற்றின் அடிப்படையில் காண வேண்டியிருக்கின்றது. அப்படி கண்டோமே என்றால்,

தங்களது ஆளுமைக்குள் வராத மற்ற தேசங்களின் மீது போர் தொடுத்துச் சென்று அவற்றை வென்ற அரசர்கள் யாவரும் இல்லுமினாட்டிகள் தான். அது அசோகனாகட்டும், சீசராகட்டும், இராஜ இராஜ சோழனாகட்டும், பாபராகட்டும், ஆங்கிலேய பேரரசாகட்டும் - இவர்கள் அனைவரும் இல்லுமினாட்டிகள் தான். ஏன், வேறொரு மனிதனை அடிமைப்படுத்த வேண்டும் என்று எண்ணிய ஒவ்வொரு மனிதனுமே இல்லுமினாட்டி தான்.

அதிகாரம் என்பது அந்தளவு போதையூட்டக்கூட ஒன்றுதான். மனித வரலாறு முழுவதும் அதிகாரத்திற்கான மோதல்களைத்தான் நாம் கண்டு வந்திருக்கின்றோம்.

கிழக்கு கடல் முழுவதும் பயணம் செய்து போர் பல புரிந்து வெற்றி பெற்ற இராஜ இராஜ சோழன், தான் வெற்றி புரிந்த நாடுகளை ஆட்சிப் புரிய அந்த தேசத்து நபர்களைத் தேர்வு செய்தானா அல்லது அவனது நம்பிக்கைக்கு பாத்திரமான சோழ மனிதர்களை தேர்வு செய்தானா?

ஐரோப்பிய கண்டம் மற்றும் ஆப்பிரிக்க கண்டம் ஆகிய கண்டங்களில் பல இடங்களைப் போர் புரிந்து வெற்றி கண்ட சீசர், ரோம பேரரசினைச் சார்ந்தவர்களையோ அல்லது தனது நம்பிக்கைக்குரியவர்களாக இருக்கின்ற அந்தந்த தேசத்து மனிதர்களையோ தானே அந்த தேசங்களுக்கு பொறுப்பாளியாக நியமித்தான்.

மற்ற தேசத்து அரசர்களை போரில் வெற்றி கண்டு, அவர்களது குடும்பங்களை கொன்ற பின்பு, தனக்கு வேண்டியவர்களை அந்த பதவிகளில் வீற்றிருக்க செய்வது என்பது அன்றிலிருந்தே வழக்கத்தில் இருக்கிறதே.

மேலும், சூழ்ச்சியால் அதிகாரங்களை கைப்பற்றுவதும் வரலாறு முழுவதிலும் நிகழத்தானே செய்திருக்கிறது. அசோகனின் பேரனான பிரகரதத்தனை, பெர்சிய வம்சாவளியைச் சார்ந்த புஷ்யமித்தர சுங்கன் என்ற படைத்தளபதி சூழ்ச்சியால் கொன்று, அரசைப் பிடித்ததை வரலாறு நமக்கு கூறத் தானே செய்கின்றது. ராஜராஜ சோழனின் அண்ணன் ஆதித்த கரிகாலனின் மரணமும் சூழ்ச்சியினால் நிறைவேறியது என்ற கூற்றும் நிலவத்தானே செய்கின்றது. எனவே சூழ்ச்சியால் அதிகாரங்களைப் பிடிப்பது என்பதும் புதுமையானதொன்று அல்ல.

அவ்வாறு சூழ்ச்சியால் அதிகாரங்களைப் பிடித்தவர்கள் இல்லுமினாட்டிகள் என்றால், புஷ்யமித்திர சுங்கனும் அவனைப் போன்றவர்களும் இல்லுமினாட்டிகள் தான்.

மேலும், பொழுது போக்கினால் மக்களை அறியாமையில் வைத்திருப்பது என்பதும் புதுமையானதொன்று அல்லதான், ரோமர்கள் காலத்து அடிமை சண்டைகளும், குதிரைப் பந்தயங்களும், ரோமர்களின் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட கிருத்துமஸ் கொண்டாட்டங்களும், மன்னர் காலங்களில் போற்றி வளர்க்கப்பட்ட கோவில் திருவிழாக்களும் மக்களை மயக்குவதற்கான பொழுதுபோக்கு அம்சங்கள் தானே. மக்கள் சிந்திக்காமல் இருக்க வேண்டும் என்பதே அதிகாரத்தின் அடிப்படை குறிக்கோள் ஆகும். அறியாமையும் சிந்திக்காத தன்மையும் அதிகாரத்திற்கு அந்தளவு முக்கியமானவை. எனவே காலத்தில் நாம் எந்தளவு பின் நோக்கி சென்றாலும், அப்பொழுதெல்லாம் மக்களை பொழுது போக்கினால் அரசுகள் மயக்கி வைத்திருப்பதை நம்மால் காண முடியும். எனவே இதிலும் புதுமை இல்லை.

சிந்திக்க வைக்காத கல்வி முறையை இல்லுமினாட்டிகள் பரப்புகின்றார்கள் என்று கூறினால், சூத்திரன் எவனும் படிக்கவே கூடாது, கோவிலுக்குள் வேறு யாரும் நுழைய கூடாது என்று கூறி அதிகாரத்தினால் மக்களை அறியாமையில் கல்லாமல் இருக்க வைத்த பிராமணர்களும் அவர்களுக்குத் துணை போன அரசர்களும் இல்லுமினாட்டிகளின் முன்னோர்கள் ஆவார்கள். அவ்வாறே விவிலியத்தை வேறு எவரும் படிக்கக் கூடாது, இலத்தினைத் தவிர வேறு மொழியில் மொழிபெயர்க்க கூடாது என்று கூறி அவ்வாறு செய்தவர்களை தீயிட்டுக் கொளுத்திய ரோம கத்தோலிக்கத் திருச்சபையும் இல்லுமினாட்டியின் முன்னோர் தான்.

மேலும் வங்கிகளைக் கொண்டு இல்லுமினாட்டிகள் மக்களின் நிதி நிலைமைகளை கட்டுப்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள் என்ற கூற்றும் நிலவுகின்றது. இந்த கூற்று உண்மையானது தான்...ஆனால் புதிதானது அல்ல. ஏனென்றால் 'பணம்' அல்லது 'நாணயம்' என்ற ஒன்றினை இவர்கள் கூறுகின்ற இல்லுமினாட்டிகள் கண்டுபிடிக்கவில்லை. அவை என்றோ புழக்கத்தில் இருக்கின்றன. உதாரணமாக, ரோம பேரரசின் கீழ் இருந்த யூதர்கள், ரோம சாம்ராஜ்யத்திற்கு ரோம நாணயங்களின் மூலமாகவேதான் வரியினைக் கட்ட வேண்டியிருந்தது. ரோம நாணயங்களை அச்சிடும் உரிமை ரோம மன்னனுக்கே இருந்தது. எனவே அந்த நாணயத்தின் மூலமும் ரோமர்கள் மற்ற இனத்தவரை அடிமைப்படுத்தி இருந்தனர். சோழர்களும் தங்களுக்கென்று தனி நாணயங்களை வைத்துத் தான் இருந்தனர். ஒவ்வொரு பேரரசும் சிற்றரசை கப்பம் கட்ட சொல்லுவது என்பது இன்றிருக்கும் கடன்களுக்கு வட்டியினை கட்டுவது போன்றதொரு செயலாகத் தான் இருக்கின்றது. உண்மையைக் கூற வேண்டுமென்றால், எவனொருவன் நாணயத்தினைக் கண்டு பிடித்தானோ அவன் தான் வரலாற்றிலேயே மிகப் பெரிய இல்லுமினாட்டியாக இருந்திருப்பான்.

மேலும், இல்லுமினாட்டிகள் அனைத்து வணிகங்களையும் தங்களின் கட்டுக்குள் கொண்டு வர முயல்கின்றனர் என்ற ஒரு வாதமும் இங்கே இருக்கின்றது. அதனடிப்படையில் பார்த்தோமே என்றால், இங்கிருக்கும் சரவணா ஸ்டோர்ஸ், போத்திஸ், கண்ணன் டிபார்ட்மென்டல் ஸ்டோர்ஸ், கோவை பழமுதிர் நிலையம், ரிலையன்ஸ் என்பன போன்ற அனைத்து நிறுவனங்களையும் இல்லுமினாட்டிகளாக கருதலாம் தான்.

எனவே இல்லுமினாட்டிகள் என்பது, ஏதோ இதுவரை இருந்திராத புதியதொரு தீய இயக்கம் அல்ல. முற்காலங்களில் இருந்த அதே தீய வழிமுறைகள் தான் இன்றைய காலத்திற்கேற்ப புதிய வடிவங்களில் மாறி வந்திருக்கின்றன. அவ்வளவு தான். எவ்வாறு அழியவே அழியாது என்று கருதப்பட்ட ரோம பேரரசும், ஆங்கிலேய சாம்ராஜ்ஜியமும் வீழ்ந்தனவோ, அவ்வாறே ஒரு காலத்தில் இந்த இல்லுமினாட்டிகள் என்ற ஒன்றும் நிச்சயம் வீழ்ச்சி அடையும். ஆனால் அன்று, அவர்களுக்கு பதிலாக அந்த இடத்திற்கு வேறொருவர் வந்திருப்பார்.

ஏனென்றால் இல்லுமினாட்டிகள் போன்ற நபர்கள், அவர்களது பலத்தினால் அதிகாரங்களை பெற்று இருப்பதில்லை. மாறாக மக்களின் பலவீனங்களின் மூலமாகவே தான் அவர்கள் அவர்களது அதிகாரங்களை அடைந்து இருக்கின்றார்கள்.

டால்ஸ்டாய் அவர்கள் இந்தியாவின் விடுதலையைப் பற்றி கூறும் பொழுது ஒன்றைக் கூறுவார் :

ஆங்கிலேயர்கள் தங்களை அடிமைப்படுத்தி இருப்பதாக இந்தியர்கள் குறை கூறும் பொழுது, தங்களுக்கு மத்தியில் வந்து குடியேறிய மது வியாபாரிகள் தங்களை அடிமைப்படுத்தி விட்டதாக குடிகாரர்கள் குறைக் கூறுவதைப் போன்றே தான் இருக்கின்றது. அவர்களிடம் நீங்கள் குடிப்பதை நிறுத்துங்கள் என்றுக் கூறினால், அந்தப் பழக்கத்திற்கு தாங்கள் மிகவும் பழகிவிட்டக் காரணத்தினால் அதில் இருந்து தாங்கள் விலக முடியாது என்றும் தங்களது பலத்தினை தாங்கள் தக்க வைத்துக் கொள்வதற்கு அந்த மதுவானது மிகவும் அவசியம் என்றுமே அவர்கள் கூறுவர்.'

அதே நிலை தானே இன்றும் தொடர்கின்றது. வெறும் 13 குடும்பங்கள் உலக மக்கள் அனைவரையும் ஆட்சி புரிகின்றனர் என்றால், தவறு யார் மீது இருக்கின்றது? அதுவும் மன்னராட்சி காலம் முடிந்து மக்களால் தேர்வு செய்யப்படும் மனிதர்கள் ஆட்சி புரியக்கூடிய மக்களாட்சிக் காலத்தில் இத்தகைய நிலை இருந்தால், மக்களைக் குறை கூறாமல் வேறு எவரையோ குறை கூறி என்ன பயன்?

மனிதர்கள் ஒற்றுமையாய் சகோதரத்துவத்துடன் அன்புடன் பொதுநலத்துடன் வாழ்ந்து வரக்கூடிய ஒரு தேசத்தில், அந்த மக்களை மீறி யாரால் என்ன செய்து விட முடியும்? அதே சமயம், சுய நலத்துடன் இருக்கின்ற இரு சகோதரர்களுக்குள் ஒரு சின்ன வதந்தி கூட பெரிய விரிசலை ஏற்படுத்தி மாபெரும் சேதத்தை அந்த வீட்டிற்கே உண்டாக்கி விட முடியும்.

இதில்தான் அனைத்தும் அடங்கியிருக்கின்றது. மக்களை ஏமாற்றுபவர்கள் ஒற்றுமையாக இருக்கின்றார்கள். மக்களோ பிரிந்து இருக்கின்றார்கள், அல்லது ஆசைகள், பயம், சுயநலம் போன்றவற்றின் காரணமாக பிரிக்கப்பட்டு இருக்கின்றார்கள். அவ்வாறு அவர்கள் பிரிந்து இருப்பதினால், அவர்களை மற்றைய ஒரு சில நபர்கள் தங்களின் வசதிக்கு ஏற்ப அடக்கி ஆண்டு கொள்கின்றனர். இதனை  வரலாறு நெடுகிலும் நம்மால் காண முடிகின்றது. இனிமேலும் காண முடியும்.

எனவே, நம்முடைய இன்றைய மோசமான சூழல்களுக்கு இல்லுமினாட்டிகள் தான் காரணம் என்று மூன்றாம் நபரை காரணம் காட்டுவதை விட, 'நாம் ஒழுக்கமானவர்களாக, சுயநலமற்றவர்களாக அன்புடையவர்களாக இல்லை...அதனால் தான் நாம் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கின்றோம்...நம்முடைய சமூகமும் சீரழிந்துக் கொண்டிருக்கின்றது' என்று நம்மை நாமே திருத்திக் கொள்ள செய்வதே உண்மையான மாற்றத்திற்கு வழி வகுக்கும்.

எல்லோரும் சமமாக வாழ வேண்டும்...அதற்கான உரிமை எல்லாருக்கும் இருக்கின்றது. அவ்வாறு ஒற்றுமையுடன் வாழ்வதற்காகத் தான் நாம் இங்கே வந்திருக்கின்றோம் என்ற எண்ணம் பரவ வேண்டும். அனைத்துப் பிரச்சனைகளுக்கும் அதுவே தான் ஒரே வழி.

ஒற்றுமையே என்றும் பலமாம்...!!!

'கடனின்றி அமையாது உலகு' என்று இன்றைய காலக்கட்டத்தில் கூறுவது நிச்சயம் தவறானதொரு கூற்றாக அமையாது என்பதனைப் போன்றே தான் இன்றைய உலகம் முற்றிலும் கடனினால் சூழப்பட்டு இருக்கிறது. படிப்பதற்கு கடன், பொருட்கள் வாங்குவதற்கு கடன், வீடு கட்டுவதற்கு கடன், மருத்துவத்திற்காக கடன் என்று இன்றைக்கு ஒரு தனி மனிதனின் ஒட்டுமொத்த வாழ்வுமே கடனினால் நிறைந்திருக்கிறது. கடனில்லாமல் ஒரு மனிதனால் வாழ முடியாது என்ற நிலைக்கே இன்றைய சமூக சூழல்கள் இருக்கின்றன. கடன், ஒரு மனிதனின் சுதந்திரத்தை பறிக்கின்றது என்பதனைத் தெரிந்தும், வேறு வழியில்லாமல் கடன் வாங்குகின்ற மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது. கடனை விரைவாக அடைக்க வேண்டுமே இல்லாவிடில் வட்டி கூடிக் கொண்டே போகுமே என்ற ஒரே சிந்தனை அவர்களை முழுவதுமாக ஆக்கிரமித்துக் கொள்ள, 'அடிமகள் என்று பெயரிடப்படாத அடிமைகளாக அவர்கள் வாழ்ந்து வந்து கொண்டிருக்கின்றார்கள்.

இந்தப் படம் அவர்களைப் பற்றிய ஒரு படமல்ல. ஆம், தனி நபர் கடனினைப் பற்றி இந்தப் படம் பேசுவதில்லை. மாறாக, ஒரு கடனினால் தனி நபர் ஒருவனின் வாழ்வே பெரிதளவு மாறிப் போகின்ற பொழுது, மாபெரும் கடன்களை வாங்குகின்ற தேசங்களின் நிலை என்னவாகின்றது என்பதனைக் குறித்தேதான் இந்த படம் பேசுகின்றது. அதுவும் குறிப்பாக மூன்றாம் உலக நாடுகளைப் பற்றியும், உலக வங்கியிடமிருந்தும் சர்வதேச நிதி நிறுவனத்திடமிருந்தும் அவை பெற்ற கடன்களைப் பற்றியும் அவற்றால் அவை அடைந்த இன்னல்களைப் பற்றியும் இந்த படம் பேசுகின்றது. 'ஜமைக்கா' என்றொரு மூன்றாம் உலக நாட்டினை நம் கண் முன்னே கொண்டு வந்து, அதன் வரலாற்றை விரிவாக விரித்து, எப்படி அந்த நாடு கடன் என்ற பொறிக்குள் சிக்க வைக்கப்பட்டது...அதனால் அதன் நிலை என்னவானது என்று தெளிவாக நமக்கு விளக்க முற்படுகின்றது. அதனைப் பற்றியே தான் நாம் இப்பொழுது சிறிது காண வேண்டி இருக்கின்றது.

ஜமைக்கா - அழகான ஒரு தீவு. மற்ற மூன்றாம் உலக நாடுகளைப் போன்றே அந்நிய ஆதிக்க சக்தியிடமிருந்து (இங்கேயும் ஆட்சி புரிந்தது ஆங்கிலேயர்கள் தான்) இரண்டாம் உலக போருக்குப் பின்னர் விடுதலை அடைந்து, சுதந்திர காற்றினை சுவாசித்ததொரு நாடு அது. ஆனால் சுதந்திரம் என்ற சொல், கேட்பதற்கு இனிமையாக இருப்பதனைப் போன்றே செயல்முறையில் இருப்பதில்லை என்பதனை அது விரைவில் கண்டு கொண்டது.

சுதந்திரம் இருக்கின்றது...ஆனால் பணம் இல்லை...வேண்டிய மருந்துகளை வாங்க முடியவில்லை, தொழிற் கருவிகளை வாங்க முடியவில்லை, சம்பளம் தர முடியவில்லை...புதிய ஆக்கப்பூர்வமானத் திட்டங்களை மேற்கொள்ள முடியவில்லை...இந்நிலையில் வெறும் சுதந்திரத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்றே அந்த நாட்டின் பிரதமர் மைக்கேல் மான்லி திணறிக் கொண்டிருக்கும் பொழுதுதான், வேறு வழியில்லாமல் அவர் உலக வங்கியிடமும் IMFயிடமும் உதவிக் கோரி செல்லுகின்றார்.

"ஓ...நிதி நெருக்கடியில் இருக்கின்றீர்களா...நல்லது. கவலைப் படாதீர்கள், உங்களுக்கு உதவுவதற்குத் தானே நாங்கள் இருக்கின்றோம். நிச்சயமாக உதவி செய்கின்றோம். என்ன கொஞ்சம் வட்டி விகிதங்கள் அதிகமாக இருக்கும். அது உங்களுக்கு பிரச்சனையாக இருக்காது தானே. அப்புறம் கூற மறந்து விட்டோம், உங்களுக்கு நாங்கள் தருகின்ற பணத்தினை நீங்கள் எங்களுக்கு திருப்பித் தருவீர்கள் என்று நாங்கள் எப்படி நம்புவது? நீங்கள் அந்த பணத்தினை மோசமான வழிகளில் செலவழித்து விட்டீர்கள் என்றால் எப்படி அதனைத் திரும்பத் தருவீர்கள்? உங்களை நாங்கள் எப்படி நம்புவது? எனவே உங்களுக்கு நாங்கள் பணத்தினைத் தருகின்றோம்...ஆனால் அதனை நாங்கள் கூறுகின்றபடிதான் நீங்கள் செலவு செய்ய வேண்டும். உங்களுக்கென்று நாங்கள் முன் வைத்திருக்கும் திட்டம் இதோ..." என்றே அந்த நிறுவனங்கள் அவரை எதிர் கொள்ளுகின்றன (கிட்டத்தட்ட அனைத்து மூன்றாம் உலக நாடுகளையும் அவை இவ்வாறே தான் எதிர் கொள்ளுகின்றன).

அந்த நிறுவனங்கள் போட்ட கட்டுப்பாடுகளில் முக்கியமான சில விடயங்கள் என்னவென்றால்,

  • சுதந்திர வணிகத்தை அனுமதிக்க வேண்டும். அதாவது மற்ற உலக நாடுகளுக்கு (அமெரிக்கா, இங்கிலாந்து...) எவ்வித கட்டுப்பாடுகளுமின்றி தனது சந்தையை திறந்து வைக்க வேண்டும்.
  • மக்களுக்கு வழங்குகின்ற மானியங்களை நிறுத்த வேண்டும்.
  • கல்வி, சுகாதாரம் போன்ற துறைகளில் மிகவும் குறைவாகவே செலவழிக்க வேண்டும்.
  • அனைத்து துறைகளையும் தனியார்மயமாக்க வேண்டும்.
இந்த கட்டுப்பாடுகளின் விளைவாக ஜமைக்காவின் பல்வேறு தொழில்கள் என்னவாயின என்பதனை தக்க எடுத்துக்காட்டுடன் இந்த ஆவணப்படமானது விளக்குகின்றது. அதனைச் சுருக்கமாக நாம் கண்டு விடலாம்.

விவசாயம்:

சுதந்திர வணிகம் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் ஜமைக்கா தனது சந்தையை உலக நாடுகளுக்குத் திறந்து வைத்தது. அதன் விளைவாக, பல்வேறு நாடுகளிலிருந்தும்...குறிப்பாக அமெரிக்காவிலிருந்து காய்கறிகள் ஜமைக்கன் சந்தைகளில் வந்து குவிய ஆரம்பித்தன. வெளிநாடுகளிலிருந்து வந்த காய்கறிகள் விலை மலிவாக இருந்த காரணத்தினால் உள்ளூர் விவசாயிகளின் பொருட்களை வாங்குவோர் குறைந்தனர். விவசாயம் அழிந்தது.

கடன்:

உலக வங்கி மற்றும் IMF போன்ற நிறுவனங்களின் மோசமான திட்டங்கள் காரணமாக, ஜமைக்காவின் கடன் மேலும் வளர்ந்து கொண்டேதான் சென்றது. 1970களில் 800 மில்லியன் டாலராக இருந்த கடன், 1980களின் முடிவில் நான்கு பில்லியன் டாலர்களாக இருந்தது. அதுவே 21ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் 7 பில்லியன் டாலராக இருந்தது. அதாவது அந்த நாட்டின் கடன் கூடிக் கொண்டேதான் சென்று இருக்கின்றது.

பால் வணிகம்:

விவசாயத்தைப் போன்றே பால் வணிகத்திலும் அந்நிய நிறுவனங்கள் நுழைந்ததால், ஜமைக்கன் பால் பண்ணையாளர்கள் தங்களது தொழிலை விட்டு விட நேருகின்றது. இதனைப் பற்றி இந்த படம் என்ன கூறுகின்றது என்பதனை சற்று விரிவாக காணலாம்.

பால் பண்ணையாளர் ஒருவர் - வருடத்திற்கு 18 மில்லியன் லிட்டர் முதல் 30 மில்லியன் லிட்டர் வரை பாலினை உற்பத்தி செய்யும் அளவு நாங்கள் முன்னேறி இருந்தோம். 1991ஆம் ஆண்டில் அதிகபட்சமாக 34 மில்லியன் லிட்டர் உற்பத்தி செய்தோம். ஆனால் 1992 ஆம் ஆண்டில் அமெரிக்க உள்நாட்டு வளர்ச்சி வங்கியிடமிருந்து, விவசாயம் மற்றும் உற்பத்தியை பெருக்குவதற்கென்று 50 மில்லியன் டாலர்கள் கடன் வாங்குவதற்கென்று அரசாங்கம் ஒரு ஒப்பந்தமிட்டுக் கொண்டது. அதன்படி, அரசாங்கமானது எவ்விதமான மானியத்தையும் உள்நாட்டுப் பொருட்களுக்கு வழங்கக் கூடாது, மேலும் பால் பவுடர் மற்றும் மாமிசம் போன்ற பொருட்களின் இறக்குமதியின் மீதிருக்கும் கட்டுப்பாடுகளையும் அரசாங்கமானது நீக்கிக் கொள்ள வேண்டும். இந்த ஒப்பந்தத்தின் காரணமாக பாலிற்கான போட்டி கடினமானதொன்றாக மாற ஆரம்பித்தது. பெருமளவு பால் பவுடர் இங்கே வந்து குவியத் துவங்கியதால் பால் தொழில் அழிந்து போயிற்று. அனைவரும் பால் பவுடரை பயன்படுத்தத் துவங்கியதால், பால் துறை தவிக்கலாயிற்று. இதில் கொடுமை என்னவென்றால், உள்நாட்டு பாலுக்கு அரசாங்கம் எவ்விதமான மானியமும் அளிக்கக் கூடாது, ஆனால் இறக்குமதி செய்யப்படுகின்ற பால் பவுடருக்கு அமெரிக்க அரசானது கிட்டத்தட்ட 137 சதவீத மானியத்தை வழங்குகின்றனர். யாரால் அதனை எதிர்த்து வணிகம் செய்ய முடியும்? தேசிய உணவு பாதுகாப்பு இல்லாமல் போவதே இதன் முடிவாக இருக்கும். எப்பொழுது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பால் பவுடருக்கான மானியம் நிறுத்தப்படுகின்றதோ, அப்பொழுது அந்த பொருட்களின் விலைகள் நமது உள்நாட்டு பொருட்களின் விலையைக் காட்டிலும் அதிகமாக இருக்கும். ஆனால் அப்பொழுது நாம் இந்த வணிகத் துறையை விட்டே விலகிச் சென்றிருப்போம்.

நிற்க.

இவ்வாறு இன்னும் பல புள்ளி விவரங்களுடன் வரலாற்றுத் தரவுகளுடன் இந்த படமானது, உலக வங்கி மற்றும் IMF போன்ற நிறுவனங்கள் கடன்களின் மூலமாக எவ்வாறு பல்வேறு நாடுகளின் பொருளாதாரங்களை சீர்குலைக்கின்றன என்பதனைத் தெளிவாக விளக்குகின்றது. அதுவும் அந்த நிறுவனங்கள் எவ்வாறு தோற்றம் பெற்றன என்பதனையும் எதனால் அவை உருவாக்கப்பட்டன என்பதனைப் பற்றியும் சுருக்கமாக இது விளக்குகின்றது. எனவே இந்த படத்திற்கு நாம் சிறிது கவனத்தைத் தந்தாகத்தான் வேண்டியிருக்கின்றது.

ஏனென்றால், நாமும் ஒரு மூன்றாம் உலக நாடுதான். நம்முடைய அரசும் இன்று,

  • மானியங்களை குறைத்து வந்து கொண்டிருக்கின்றது.
  • அனைத்தையும் தனியார் மயமாக்கிக் கொண்டிருக்கின்றது.
  • 100 சதவீத அந்நிய முதலீட்டிற்கு அனுமதி அளித்திருக்கிறது.
  • சுதந்திர வணிகம் என்ற கோட்பாட்டினை ஏற்று இருக்கின்றது.
  • விவசாயத்தினை முன்னுரிமை படுத்த மறுக்கின்றது.
  • வங்கிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகின்றது.
  • அனைத்திற்கும் மேலாக நம்முடைய நாடும் கடன் வாங்கிக் கொண்டு, அதற்கான வட்டியினைக் கட்டிக் கொண்டிருக்கின்றது.
ஆட்சியில் காங்கிரஸ் கட்சி இருக்கும் பொழுது கொண்டு வருகின்ற திட்டங்களை எதிர்கட்சியானது எதிர்க்கின்றது. எதிர்கட்சியானது ஆட்சியில் இருக்கின்ற பொழுது தான் எதிர்த்த அதே திட்டங்களை செயல்படுத்துகின்றது. எதிர்க்கட்சியாக இருக்கும் பொழுது, வரிவிலக்கு வரம்பை 1.5 லட்சத்திலிருந்து  4.5 லட்சமாக உயர்த்த வேண்டும் என்று கூறிய அருண் ஜெட்லீ, ஆட்சிக்கு வந்து நான்கு வருடங்கள் ஆகின்ற போதிலும் 1.5 லட்ச வரம்பிலிருந்து ஒரு பைசா கூட கூட்டியிருக்கவில்லை. இதையேதான் காங்கிரசும் செய்தது...செய்திருக்கும்...இனியும் செய்யும். இந்த நடவடிக்கைகள் கேலிகரமாக தெரிந்தாலும், அதனுள் ஒளிந்திருக்கும் அந்த முக்கியமான விடயத்தை நாம் ஆராய்ந்து பார்க்கத்தான் வேண்டியிருக்கின்றது.

கடன் ஒரு சாதாரண மனிதனின் வாழ்வையே புரட்டிப் போட்டுவிடும் பொழுது, ஒரு நாட்டினை என்ன செய்யும் என்ற கேள்வியை நாம் இங்கே எழுப்ப வேண்டியிருக்கின்றது.

கடன்...ஒவ்வொரு மனிதனும் இதனைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும். அதற்கு இந்தப் படம் சிறிது உதவும் என்றே நம்புகின்றேன்.

கடனின்றியே அமைய வேண்டும் உலகு. அதற்கே நாம் முயல வேண்டும்.

முற்றும்.

பி:கு:

IMFஐ பற்றி அறிந்து கொள்ள 'ஒரு ட்ரில்லியனுக்கு எத்தனை சைபர்' என்ற நூலும் உதவும்.

தொடர்புடைய இடுகைகள்:

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு