இன்று இணையத்தளத்தில் பரவலாக ஒரு விவாதத்தைக் காண முடிகின்றது. தடுப்பூசிகளைக் கண்டிப்பாக போட வேண்டும் என்று ஒரு சிலர் கூறுகின்றனர். அவற்றால் தான் உயிர்கொல்லியான பல தொற்றுநோய்கள் தடுக்கப்பட்டு இருக்கின்றன என்று அவர்கள் தங்களது தரப்பு வாதத்தையும் வைக்கின்றனர். தடுப்பூசிகள் வேண்டாம் என்பதன் மூலமாக குழந்தையின் ஆரோக்கியத்தோடு விளையாடுகின்றோம் என்றே அவர்கள் கூறுகின்றனர்.

மற்றொரு புறமோ தடுப்பூசிகள் தேவையே இல்லை என்று ஒரு சிலர் கூறுகின்றனர். தடுப்பூசிகளின் பக்கவிளைவுகள் ஏராளமாக இருக்கின்றன என்றும் சில நேரங்களில் மரணங்களுக்கே அவை வழி வகுக்கின்றன என்றும் அவர்கள் கூறுகின்றனர். மேலும் தடுப்பூசிகள் என்பது குழந்தைகள் மீது நாம் செலுத்துகின்ற வன்முறையாகும் என்றே அவர்கள் கூறுகின்றனர்.

இந்த இரண்டு தரப்பு வாதங்களுக்கு நடுவில் தான் ஒரு சாமானியனாக அவர்கள் இருவரையும் பார்த்தவாறே நான் நின்று கொண்டிருக்கின்றேன். நான் மட்டும் அல்ல, மருத்துவத்தைப் பற்றி அறியாதிருக்கின்ற பல்வேறு மக்களும் என்னைப் போன்றே தான் நின்று கொண்டிருப்பார்கள் என்றே நான் நம்புகின்றேன். காரணம், இது குழந்தைகள் சம்பந்தப்பட்டது. யாரும் தங்களது குழந்தைகளின் ஆரோக்கியத்தோடு விளையாடுவதற்கு தயாராக இருப்பதில்லை தான். ஆனால் இங்கே நம் முன்னே இருக்கும் கேள்வி தான் நம்மை மிகவும் குழப்புகின்றது.

'தடுப்பூசிகள் போடாததால் நாம் குழந்தைகளின் ஆரோக்கியத்தோடு விளையாடுகின்றோமா அல்லது போடுவதால் அவர்களின் ஆரோக்கியத்தோடு விளையாடுகின்றோமா?' நாம் என்ன செய்ய வேண்டும்? என்பதே நமக்குள் இருக்கும் மாபெரும் கேள்வியாக இருக்கின்றது. அதுவும் மருத்துவத்தைப் பற்றிய அறிவு மிகவும் சிறிதே இருக்கக்கூடிய நிலையில் அந்த கேள்விக்கு தெளிவான விடையினைக் காண்பது என்பது கடினமான ஒரு செயலாகத் தான் இருக்கின்றது. அந்நிலையில் 'அரசாங்கம் சொல்லுகின்றது...மக்கள் பலரும் போடுகின்றனர்...எனவே நல்லதே நடக்கும் என்றும் நாமும் நம்புவோம்' என்று எண்ணிக் கொண்டு கூட்டத்தோடு கூட்டமாக பெருவாரியான மக்களின் முடிவோடு ஒன்றிணைந்து விடத் தான் ஒரு சராசரி மனிதனின் மனமானது விரும்பும்.

நானும் அத்தகைய ஒரு சராசரி மனிதன் தான். இருந்தும், மனம் ஏனோ சற்று நிம்மதியற்றே இருக்கின்றது. நம்மைச் சுற்றி நடக்கின்ற விடயங்களைக் காணும் பொழுது என்னுள் சில கேள்விகள் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

  • மருத்துவம் எங்கோ முன்னேறிக் கொண்டிருக்கின்றது என்றுக் கூறுகின்றோம். மிக்க மகிழ்ச்சி. ஆனால் அதன் விளைவு நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்திருக்கக் கூடிய ஒரு சமூகமாக அல்லவா இருக்க வேண்டும். ஆனால் இங்கே நாம் பார்த்தோம் என்றால், நிலைமை முற்றிலுமாக மாறியல்லவா இருக்கின்றது. மருத்துவமனைகளும் நோயாளிகளும் தொடர்ந்து எண்ணிக்கையில் கூடிய வண்ணம் அல்லவா நமது சமூகத்தில் இருக்கின்றனர். தரமான உணவினை அதிகமாக உற்பத்தி செய்து அனைவருக்கும் வழங்குகின்றோம் ஆனால் பசியுடன் வாடிக் கொண்டிருக்கும் மனிதர்கள் அதிகமாக கூடிக் கொண்டே இருக்கின்றனர் என்பது எப்படிப்பட்ட ஒரு முரணான வாக்கியமோ, அதனைப் போன்றே தானே மருத்துவம் முன்னேறி இருக்கின்றது ஆனால் அதன் கூடவே நோய்களும் நோயாளிகளும் கூடி இருக்கின்றனர் என்பதும் முரணாக இருக்கின்றது. இந்த முரண் எதனால் வந்திருக்கின்றது.
  • மருத்துவம் அந்தளவு முன்னேறி இருக்காத காலகட்டம் என்று உங்களால் கூறப்படுகின்ற காலத்தில் பிறந்து வளர்ந்த மனிதர்கள், வயதான போதிலும் கூட இன்றளவும் ஆரோக்கியமாக இருந்து கொண்டிருக்கின்றனர். ஆனால் நவீன மருத்துவமானது கோலோச்சிக் கொண்டிருக்கும் காலத்தில் பிறந்து வளர்ந்த குழந்தைகள் அந்த மனிதர்களை விட ஆரோக்கியம் குன்றியவர்களாகவே இருக்கின்றார்கள். இதனை நாம் நடைமுறை வாழ்வில் அன்றாடம் கண்டு கொண்டிருக்கின்றோம். 'முன்னாடி எல்லாம் வயசானவங்க கூட்டம் தான் மருத்துவமனைல அதிகமாக இருக்கும்..ஆனா இப்போ எல்லாம் அவங்கள விட அதிகமா சின்ன கொழந்தைங்க தான் வருதுங்க' என்ற கூற்று அரசு மருத்துவமனையின் அருகே நின்று கொண்டிருந்த பொழுது என்னுடைய காதில் விழுந்தது. அதில் உண்மை இருக்கின்றதா இல்லையா என்பதை ஒவ்வொருவருமே அறிவோம். எதனால் இந்த நிலை?
  • நான் சிறுவனாக இருந்த பொழுது எப்பொழுதாவது காய்ச்சல் வரும். மருத்துவரிடம் போனால், மூன்று நாட்களுக்கு மருந்து தருவார். அதுவும் பெரும்பாலும் அரை மாத்திரை அளவே தான் இருக்கும். 'மருந்தும் விருந்தும் மூன்று நாளைக்கு' என்ற ஒரு கூற்று என்னுடைய நினைவிற்கு இப்பொழுது வருகின்றது. ஆனால் இப்பொழுதோ, குறைந்தது பத்து நாட்களுக்காவது மாத்திரைகள் தரப்படுகின்றன. இதுவும் புரியவில்லை...மருத்துவம் முன்னேறி இருக்கின்றது என்றால் மருந்துகளின் வீரியம் கூடி இருக்க வேண்டுமல்லவா...அல்லது அதே அளவு வீரியமாகவாவது இருக்க வேண்டுமல்லவா? அதனை விடுத்து மாத்திரைகளின் எண்ணிக்கை தொடர்ந்து கூடிக் கொண்டு செல்வது ஏன்?
இன்னும் கேள்விகள் அநேகம் கேட்கலாம் தான்...ஆனால் அவை எதுவும் புதியதாய் இருக்காது. ஏனென்றால் நமது சமூகத்தில் நாம் அன்றாடம் காணுகின்ற நிகழ்வுகளாகவே தான் அவை நமக்கு பரிச்சியமாக இருக்கும். நம்மில் ஒவ்வொருக்குள்ளேயும் அந்த கேள்வியானது இருக்கும்.

எனக்குத் தடுப்பூசிகளைப் பற்றி அதிகம் தெரியாது. அவை எவ்வாறு தயாரிக்கப்படுகின்றன, அதன் பக்கவிளைவுகள்/பயன் என்ன என்பதைப் பற்றி ஒரு சாமானிய மனிதன் எந்தளவு அறிந்து இருப்பானோ, அந்தளவே தான் நானும் அறிந்திருக்கின்றேன். அனுபவ அறிவே தான் இங்கே பேசுகின்றது தவிர அறிவியல் அறிவல்ல.

எனக்குத் தடுப்பூசி போட்டார்கள்...எனக்கு சின்னம்மை வரவில்லை. எனது தம்பிக்கும் அதே தடுப்பூசி போட்டார்கள். அவனுக்கு சின்னம்மை வந்தது. சமீபத்தில் தடுப்பூசி போடப்பட்ட என்னுடைய சித்தி மகளுக்கும் சின்னம்மை வந்திருக்கின்றது.

போலியோ சொட்டு மருந்தினால் போலியோ நோயை ஒழித்தோம் என்கின்றீர்கள். நம்புகின்றேன். ஆனால் அதே நேரம், போலியோ சொட்டு மருந்தினை பெற்றிராத என்னுடைய நண்பனின் குழந்தைகளும் போலியோவின் தாக்குதலின்றி மிகுந்த ஆரோக்கியத்துடன் நலமாகவே தான் அதே சமூகத்தில் வாழ்ந்து வந்து கொண்டிருக்கின்றனர்.

இதனை நாம் எப்படி புரிந்து கொள்வது...தடுப்பூசி போட்டும் சிலர் நோய்களுக்கு ஆளாகின்றனர்...தடுப்பூசி போடாமலும் சிலர் ஆரோக்கியமாக இருக்கின்றனர். இந்நிலையில் தடுப்பூசியின் உண்மையான பயனை ஒரு சாதாரணமான மனிதன் எவ்வாறு புரிந்து கொள்வது?

உணவும் மருத்துவமும் செல்வம் கொழிக்கும் வியாபாரமாக மாறிவிட்டிருக்கும் இந்த காலத்தில் சிறிது சந்தேகங்கள் எழுவதனைத் தவிர்க்க முடியவில்லையே. உதாரணமாக உணவினையே எடுத்துக் கொள்ளுங்கள்,

உணவு உற்பத்தியை அதிகரிக்கின்றோம் என்றுக் கூறி இரசாயன உரம், பூச்சிக்கொல்லி மருந்துகள் போன்றவற்றைக் கணக்கில்லாமல் கொட்டி நஞ்சு கலந்த உணவினை இன்றைக்கு நாம் தயாரித்துக் கொண்டிருக்கின்றோம்.உணவு இருக்கின்றது...ஆனால் உணவில் சத்து இருக்கின்றதா? நிச்சயமாக இல்லை. மாறாக நம்முடைய ஆற்றலைக் குறைக்கின்ற நஞ்சே தான் இருக்கின்றது. பசி நோய் வருவதில்லை தான். ஆனால் ஆற்றல் இல்லாத உடலில் பல்வேறு விதமான வேறு நோய்கள் வரத் தான் செய்கின்றன. இந்த முறையைத் தான் நம்மாழ்வார் போன்றவர்கள் எதிர்த்தார்கள். ஆனால் அவர்களின் கூற்றினை 'இவர்கள் கூறுவது போல விவசாயம் செய்தால் உணவினை போதுமான அளவு தயாரிக்க முடியாது' என்ற ஒன்றினைக் கூறியே மழுங்கடித்து விட்டார்கள். 'இல்லை இயற்கை முறையில் அதிகளவு உணவினை உற்பத்தி செய்ய முடியும்' என்று அவர்கள் நிரூபித்தாலும் கூட அதனை ஏற்பதற்கு இங்கே யாரும் தயாராக இல்லை. காரணம் அதில் பெரிய நிறுவனங்களுக்கு பணம் ஏதும் கிட்டப்போவதில்லை.

தமிழக விவசாய கல்லூரிகளில் நான் அறிந்தவரை நம்மாழ்வாரின் சிந்தனைகள் மற்றும் கருத்துகள் பாடத் திட்டத்தில் கிடையாது. அங்கிருக்கும் ஆசிரியர்களும் இரசாயன உரம் மற்றும் பூச்சிக் கொல்லியைப் பற்றி மட்டுமே தான் மாணவர்களுக்கு பயிற்றுவிக்கின்றனர். அந்த மாணவர்களும் தாங்கள் எதனைக் கற்று கொண்டிருக்கின்றார்களோ அந்த அறிவுடனேயே தான் வெளியே வருகின்றனர். இந்நிலையில் நம்மாழ்வாரின் கருத்தினை நாம் அவர்களின் முன்னே வைத்தால், அவர்களின் போக்கானது 'அவர்களா அல்லது நம்மாழ்வாரா' 'நம்முடைய அறிவு பெரியதா அல்லது அவர்களுடைய அறிவு பெரியதா' என்ற ஒரு போட்டி மனப்பான்மையினுள்ளேயே போய் சிக்கிக் கொண்டு விடுகின்றது. அவனுக்கு ஆதரவாக பணம் கொழிக்கும் இரசாயன உர நிறுவனங்களும் சரி பூச்சிக் கொல்லி நிறுவனங்களும் சரி அடுக்கடுக்காக ஆராய்ச்சி கட்டுரைகள் என்பனவற்றை தந்து கொண்டே தான் இருக்கின்றன.

ஆனால் சமூகத்தை நாம் உற்றுப் பார்த்தோமே என்றால், அவர்கள் எந்தளவு ஆராய்ச்சி கட்டுரைகள் தந்தாலும் கூட, கடனில் வாடும் விவசாயி, பெரும் பணத்தினை கொட்டிக் குவிக்கின்ற பெரு நிறுவனங்கள்  மற்றும் இறுதியாக ஆரோக்கியமில்லாத சிறிது சிறிதாக நஞ்சு கலக்கப்பட்ட உணவு...இவை மட்டுமே தான் நம்முடைய சமூகத்தில் எஞ்சி இருக்கின்றன.

எனவே தான் நவீன மருத்துவம் வழங்குகின்ற தடுப்பூசிகளைப் பற்றியும் நான் சிறிது அஞ்ச வேண்டி இருக்கின்றது. அந்த பூச்சிக்கொல்லிகளைப் போன்றே தான் தடுப்பூசியும் இருக்குமோ என்ற சிந்தனையை என்னால் தவிர்க்க முடியவில்லை.

ஆம்...பூச்சிக்கொல்லி நிச்சயமாக ஒரு வெற்றிகரமான அறிவியல் கண்டுபிடிப்பு தான். ஆனால் அது அந்த பூச்சி எதனால் வருகின்றது என்பதனை கண்டறிந்துக் கூறுவதில்லை. அதன் பணி அந்த பூச்சியினைக் கொல்வது மட்டும் தான். அதனை அது செம்மையாகச் செய்கின்றது. ஆனால், அது அந்த மரத்திற்கும் சிறிது கேடு விளைவிக்கின்றதே...அந்த செடியானது தன்னுடைய முழுமையான ஆற்றலுடன் உணவினை தயார் செய்வதில்லையே. உணவின் ஆற்றல் குறைகின்றதே.

ஒருவேளை தடுப்பூசியும் அதனைப் போன்றே தான் இருக்குமா? சில நோய்களை அழித்து விட்டு வேறேதாவது பாதிப்பினை உண்டாக்குமா? என்பன போன்ற கேள்விகளை 'மருத்துவமனைகளும், நோய்களும், நோயாளிகளும், பெரு நிறுவனங்களின் ஆதிக்கமும் கூடிக் கொண்டே இருக்கின்ற நம்முடைய சமூகத்தினைக் காணும் பொழுது' கேட்காமல் இருக்க முடியவில்லை. இருந்தும் சாமானியர்களான நாங்கள் தடுப்பூசியினைப் பயத்தினால் போடத் தான் செய்வோம்.

ஆம்...அறிவினாலோ அல்லது தெளிவான நம்பிக்கையினாலோ அல்ல (அதனை நீங்கள் எங்களுக்குத் தந்திருக்கவில்லை), மாறாக எங்களது குழந்தைக்கு ஒன்றும் ஆகி விடக் கூடாதே என்கின்ற பயத்தினால் தான் நாங்கள் அவ்வாறு செய்வோம்.

ஆம்...உங்களுடைய மருத்துவமானது பெரும்பாலும் சாமானியர்களின் மனதினில் பயத்தினைத் தான் விதைத்து இருக்கின்றது.

பி.கு:

எனது மனதில் இருப்பதை இங்கே கூறி இருக்கின்றேன். மாற்றுக் கருத்துகள் இருப்பின், தயைக் கூர்ந்து தெரிவிக்கவும்.


தொடர்புடைய இடுகைகள்: 

வணிகமான மருத்துவமும் நமது கடமையும்-1!!!
வணிகமான மருத்துவமும் நமது கடமையும்-இறுதிப் பகுதி!!!
சிக்கோ (மருத்துவத் துறையைக் குறித்த ஒரு ஆவணப்படம்)
உணவு. INC (உணவுத் தொழிலைக் குறித்த ஒரு ஆவணப்படம்)
 

'ஒரு கிருத்துவன் தேசங்களுக்கு இடையில் வேறுபாடுகள் காணலாமா?' என்ற கேள்வியை கிருத்துவ மக்களிடம் முன் வைத்த பொழுது அவர்களின் பதில் பெரும்பாலும் 'ஆம். தேசங்கள் மத்தியில் வேறுபாடுகள் இருக்கலாம். ஒரு மனிதன் தன்னுடைய அரசாங்கத்திற்கு கட்டுப்பட்டு சட்டத்திட்டங்களை ஒழுங்காகப் பின்பற்றிக் கொண்டிருக்க வேண்டும்' என்றே தான் இருந்தது. அவர்களது அக்கூற்றுக்கு அவர்கள் விவிலியத்தில் இருந்து சான்றாகத் தருவது 'இராயனுக்கு உரியதை இராயனுக்குத் தாருங்கள்...இறைவனுக்கு உரியதை இறைவனுக்குத் தாருங்கள்' என்ற வசனத்தையே தான். அதாவது அரசன் உங்களிடம் இருந்து எதனைக் கேட்கின்றானோ அதனை அரசனிடம் தாருங்கள், இறைவன் உங்களிடம் இருந்து எதனைக் கேட்கின்றானோ அதனை இறைவனிடம் தாருங்கள் என்பதே அதன் அர்த்தம் ஆகும். இந்த வசனத்தை வைத்துக் கொண்டு தான், 'பாருங்கள் இயேசுவே அரசுக்குத் தர வேண்டிய வரிகளைத் தாருங்கள்...அரசு உங்களிடம் இருந்து எதனைக் கேட்கின்றதோ அதனைத் தாருங்கள் என்று கூறி இருக்கின்றார். எனவே ஒரு கிருத்துவன் அரசுக்கு கட்டுப்பட்டு இருக்க வேண்டும். அது பிழையில்லை. அதனைப் போலவே பல்வேறு அரசுகள் இங்கே இருப்பதும் பிழையில்லை' என்றே அவர்கள் கூறுகின்றனர். இதனைத் தான் நாம் இப்பொழுது பார்க்க வேண்டி இருக்கின்றது. அதற்கு முதலில் இயேசு எப்பொழுது அவ்வாறு கூறினார் என்பதை நாம் காண வேண்டி இருக்கின்றது.

தன்னுடைய சீடர்களுக்கு போதித்துக் கொண்டிருந்த பொழுது தன்னுடைய சீடர்களிடம் அவ்வாறு கூறினாரா?
இல்லை...!!!

பொது மக்கள் அனைவருக்கும் பொதுவாக இறைவனைப் பற்றியும் அவர்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்பதனைப் பற்றியும் போதித்துக் கொண்டிருக்கும் பொழுது அவர் அவ்வாறு கூறினாரா?
இல்லை...!!!

பின்னே அவர் எப்பொழுது அவ்வாறு கூறினார்?
தன்னைச் சிக்கலில் சிக்க வைப்பதற்காக யூத மதத்தைச் சார்ந்த மதகுருக்கள் எப்பொழுது திட்டம் போட்டு தன்னிடம் வந்தார்களோ...அப்பொழுது அவர்களிடம் இயேசு அவ்வாறு கூறி இருக்கின்றார். இதனைப் பற்றி சற்று விரிவாக காண்பது நலமாக இருக்கும் என்றே நம்புகின்றேன்.

அன்றைய சூழலில் இயேசுவை ஒரு சாதாரண மனிதனாக, யோசேப்பின் மகனாக மட்டுமே மக்கள் அறிந்திருந்தனர். இயேசுவின் சீடர்களுக்கு கூட அவர் யார் என்பதைப் பற்றி முழுமையாகத் தெரிந்திருக்குமா என்றால், இல்லை என்றே நம்மால் கூற முடியும் (அவர் யார் என்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள் என்றால் அவரை எப்பொழுது வீரர்கள் கைது செய்தார்களோ அப்பொழுது அவர்கள் அவரை விட்டு ஓடி இருக்க மாட்டார்களே). அப்படிபட்ட ஒரு சாதாரண மனிதனான இயேசு அங்கிருந்த யூத சமய மதகுருக்களின் கொள்கையை எதிர்த்துக் கொண்டிருந்ததை, சமூகத்தில் புகழும் அதிகாரமும் பெற்று விளங்கிக் கொண்டிருந்த அந்த மதகுருக்கள் விரும்பி இருக்கவில்லை. தங்களது அதிகாரத்தையும் நம்பிக்கையையும் ஒரு சாதாரண மனிதன், ஒரு சில நூல்களைப் படித்துக் கொண்டு கேள்வி கேட்கின்றானே என்றே தான் அவர்கள் எண்ணினர். தங்களின் செல்வாக்கு மக்களின் மத்தியில் குறைவதை உணர்ந்த அவர்கள் இயேசுவை எப்படியாவது கைது செய்து விட வேண்டும் என்றே எண்ணினர்.

அக்காலத்தில் யூதர்கள் ரோமப் பேரரசுக்கு அடிமையாக இருந்தனர். ரோமர்களுக்கு வரியும் செலுத்தி வந்தனர். இந்நிலையில் ரோமர்களுக்கு வரியினைச் செலுத்த வேண்டாம் என்று எவனாவது கூறினான் என்றால் அவனை புரட்சியாளன் என்று கூறி ரோமப் பேரரசு கைது செய்து விடும். எனவே எப்படியாவது இயேசுவை கைது செய்து விட வேண்டும் என்பதற்காக அவர்கள் திட்டம் போட்டு பின்வரும் கேள்வியை இயேசுவைப் பார்த்து கேட்கின்றனர்.

"ரோமர்களுக்கு யூதர்கள் வரி செலுத்த வேண்டுமா கூடாதா? இறைவன் என்ன கூறுகின்றார் என்று கூறுங்கள்."

இக்கேள்விக்கு இயேசு 'வரி செலுத்துங்கள்' என்று விடை கூறி இருந்தார் என்றால் அவர்களால் அவர்  மீது "இவன் நம்மை மீட்க வந்தவன் இல்லை...இவன் நம்மை ரோமர்களுக்கு வரி கட்ட வேண்டும் என்று கூறுகின்றான். இவன் யூத இனத் துரோகி...இவனா நம்மை ரோமர்களிடம் இருந்து காப்பாற்ற போகின்றான் என்று நீங்கள் நம்புகின்றீர்கள்" என்று குற்றம் சுமத்தி, யூத மக்களை அவரிடம் இருந்து பிரித்திருக்க முடியும்.

ஒருவேளை இயேசு 'வரி செலுத்தாதீர்கள்' என்று கூறி இருந்தால் அவர்கள் நேராக ரோம அதிகாரிகளிடம் சென்று "இவன் வரி செலுத்த வேண்டாம் என்று கூறி மக்களை புரட்சிக்குத் தூண்டுகின்றான்" என்று கூறி அவரை கைது செய்ய வைத்திருப்பார்கள். இது தான் அவர்களது திட்டம். 'என்ன சொன்னாலும் மாட்டுவான்' என்றே தான் அவர்கள் அக்கேள்வியை இயேசுவின் முன்னே வைத்தனர்.

அவர்களின் நோக்கத்தை இயேசு நன்றாக அறிவார். எனவே அவர் அவர்களைப் பார்த்து "நீங்கள் வரியினை எதன் மூலமாக கட்டுவீர்கள்" என்றே வினவினார். அதற்கு அவர்கள் ரோம நாணயத்தை எடுத்துக் காட்டினார்கள். அதில் சீசரின் படம் பொறிக்கப்பட்டு இருந்தது. யூதர்கள் அன்று ரோமர்களுக்கு அடிமையாக இருந்தார்கள் என்று நாம் மேலே கண்டோம். எனவே அனைத்துப் பணப் புழக்கமும் ரோமர்களின் நாணயங்களின் வாயிலாகவே இருந்தன. ஏனென்றால் யூத தேசம் அப்பொழுது ரோம பேரரசின் ஒரு அங்கமாகவே தான் இருந்தது.

அந்த நாணயத்தைப் பார்த்த இயேசு "இது யாருடைய படம்?" என்றார்.

"சீசரின் படம்" என்றே அவர்கள் கூறினர்.

அதனைக் கேட்ட இயேசு "அப்படி என்றால் சீசருக்கு உரியதை சீசருக்குத் தாருங்கள்...இறைவனுக்கு உரியதை இறைவனுக்குத் தாருங்கள்" என்றே அவர்களுக்கு விடை பகின்றார்.

இந்த ஒரு வசனத்தை வைத்துக் கொண்டு தான் கிருத்துவ மக்கள், அரசுக்கு கட்டுப்பட்டு இருப்பதையும், பல்வேறு தேசங்களாகப் பிரிந்து இருப்பதையும் இன்றைய கிருத்துவ சமயமானது அனுமதித்துக் கொண்டிருக்கின்றது. சரி இருக்கட்டும், இப்பொழுது இயேசு கூறிய அந்த பதிலின் அர்த்தத்தை சற்று பார்த்தாகத் தான் வேண்டி இருக்கின்றது.

'ரோம நாணயம்' ரோமர்களால் உருவாக்கப்பட்டது. அதனை வைத்துக் கொண்டே வணிகம் முதலான தங்களுடைய வாழ்க்கைத் தேவைகளை யூதர்கள் அமைத்துக் கொண்டிருந்த சூழல் அன்றிருந்தது. எனவே "அவனுடைய பொருளை நீ பயன் படுத்திக் கொண்டிருக்கிறாய்...எனவே அவனது பொருளை அவன் கேட்டான் என்றால் அவனிடம் தந்து விடு. ஆனால் நீயோ இறைவன் படைத்த பொருளாக இருக்கின்றாய். எனவே இறைவன் உன்னிடம் என்ன கேட்கின்றானோ அதற்கே நீ உன்னைத் தர வேண்டி இருக்கின்றது. ரோமனின் நாணயத்தை அவனிடம் தந்து விடு. மாறாக உன்னை அவனிடம் தந்து விடாதே...ஏனென்றால் நீ இறைவனுக்கு உரியவன்...ரோமனுக்கு உரியவன் அல்ல" என்று பொருள் படுமாறு இயேசு அவர்களிடம் கூறினார்.

இந்த பதிலின் மேல் எந்த குற்றச்சாட்டையும் வைக்க முடியாமல் அந்த மதகுருக்கள் கிளம்புகின்றனர். இது தான் அந்த வசனத்தின் முழு அர்த்தம். மாறாக ஒரு கிருத்துவன் அரசுக்கு கட்டுப்பட்டு இருக்க வேண்டும் என்பதோ பல்வேறு அரசுகள் இருக்க வேண்டும் என்பதோ அல்ல. உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் ஒரு மனிதன் இறைவனுக்கு மட்டுமே கட்டுப்பட்டு இருக்க வேண்டும் என்பதே இதன் பொருளாக வருகின்றது. நிற்க!!!

இப்பொழுது இந்த பதிலினைப் பற்றியே தான் நாம் இன்னும் சிறிது நுணுக்கமாக காண வேண்டி இருக்கின்றது...காண்போம்!!!

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு