ஒரு வழியாக முதல் புத்தகத்தினை எழுதி முடித்தாயிற்று...சரியாக சொல்ல வேண்டும் என்றால் மொழிப்பெயர்த்து முடித்தாயிற்று என்று தான் சொல்ல வேண்டும். ஏனென்றால் லியோ டால்ஸ்டாய் அவர்கள் எழுதிய 'Gospel in Brief ' என்ற நூலினைத் தான் தமிழினில் 'சுவிஷேசங்களின் சுருக்கம்' என்று நான் மொழிபெயர்த்து இருக்கின்றேன். இப்பொழுது அந்த நூலினைப் பற்றியும் அதனை எதற்காக நான் மொழிபெயர்த்திருக்கின்றேன் என்பதனைப் பற்றியும் உங்களிடம் சிறிது மேலோட்டமாக பகிர்ந்துக் கொள்ள விரும்புகின்றேன்.

டால்ஸ்டாய் என்றாலே சிறு கதைகளும், உலக பிரசித்திப் பெற்ற காவியங்களான 'போரும் அமைதியும்' 'அன்னா கரெநேனா' என்பன போன்ற நூல்களும் தான் பலரின் நினைவிற்கு வரும். ஆனால் டால்ஸ்டாய் அவர்களுக்கு பலரும் அறியாத வேறொரு முகமும் இருக்கத்தான் செய்கின்றது. வாழ்வென்றால் என்னவென்ற ஒரு தேடலினை மேற்கொண்ட ஒருவன், இறுதியில் மக்கள் அனைவரும் ஒன்றிணைத்து மகிழ்ச்சியுடன் வாழ்வதே வாழ்வின் நோக்கமாகும் என்பதனையும், அவ்வாறு மக்கள் அனைவரையும் ஒற்றுமையாக வாழ வழி செய்வதே இங்கே ஒவ்வொருவரின் கடமையாகும் என்பதனையும் கண்டு கொண்டு, ஒரு ஆன்மீகப் பொது உடைமைவாதியாக அதற்காக போராடிய ஒரு வரலாறே டால்ஸ்டாயின் மற்றொரு முகமாகும்....இந்த நூல் டால்ஸ்டாயின் அந்த ஆன்மீகப் பொதுவுடைமைவாத முகத்தினையே பிரதிபலிக்கின்றது.

நிச்சயமாக இந்த நூல் அனைவருக்குமான ஒரு நூல் அல்ல...இந்த நூல் குறிப்பாக நான்கு தரப்பினரை குறி வைத்து எழுதப்பட்டு இருக்கின்றது.
  • கிருத்துவர்கள்
  • சமயங்களில் ஆர்வம் கொண்டவர்கள்
  • நாத்திகர்கள்/பொதுவுடைமைவாதிகள்
  • வாழ்வென்றால் என்னவென்ற தேடலினை கொண்டவர்கள்
இந்த நான்கு தரப்பு மக்கள் அல்லாது, டால்ஸ்டாயின் மற்ற காவியங்களை மனதிற் வைத்துக் கொண்டு அதனைப் போன்றே இந்த நூலும் இருக்கும் என்ற எண்ணத்துடன் இந்நூலினை படிக்கும் நண்பர்களுக்கு இந்நூலானது ஏற்றதாக இருக்குமா என்பதனை என்னால் கூற முடியவில்லை. சரி இருக்கட்டும்...இப்பொழுது இந்த நூலின் சாரம் என்னவென்றே நாம் காண வேண்டி இருக்கின்றது.

வாழ்வினைக் குறித்து கிருத்துவம்...மன்னிக்கவும்...வாழ்வினைக் குறித்து இயேசு எதனைக் கூறி இருக்கின்றார் என்பதே இந்த நூலின் மையக் கருத்தாக இருக்கின்றது. ஏன் என்றால் இயேசுவின் கருத்துக்களை கிருத்துவ திருச்சபைகள் முற்றிலுமாக மக்களிடம் இருந்து மறைத்து வைத்து இருக்கின்றன என்றும், வாழ்வென்றால் என்னவென்று ஒருவன் அறியாத நிலையிலேயே ஆன்மீக நிறுவனங்கள் ஒருவனை வைத்து இருக்கின்றன என்றே டால்ஸ்டாய் அவர்கள் ஆன்மீக நிறுவனங்களை, கிருத்துவ திருச்சபைகளை சாடுகின்றார்.

"கிருத்துவம் என்ற பெயரிலேயே, இயேசுவின் கருத்திற்கு மாறாக இருக்கின்ற திருச்சபையின் கருத்தானது இயேசுவின் கருத்தாகப் போதிக்கப்பட்டு வந்து கொண்டிருக்கின்றது. இதுவே தவறான விளக்கங்களைப் பரப்புவதற்கு அதிகமாக பயன்படுத்தப்படுகின்ற ஒரு வழியாகும். நாம் அனைவரும் இந்தத் தவறான விளக்கத்தினைக் கொண்டே வளர்ந்தும் இருக்கின்றோம். திருச்சபையின் போதனைகளானவை இயேசுவின் போதனைகளுக்கு முற்றிலும் மாறுபட்ட போதனைகளாகவே இருக்கின்றன." என்ற தனது கூற்றுக்கு தகுந்த ஆதாரங்களையும் டால்ஸ்டாய் தந்தே தான் இருக்கின்றார். அதன் விளைவாக இந்த நூல், கிருத்துவ சபைகளின் ஆதிக்கத்தில் இருந்த ரஷ்யாவினில் அன்று தடைசெய்யப்பட்டதொரு நூலாக இருந்தது என்பதில் நமக்கு வியப்பொன்றும் இல்லை தான்.

நம்பிக்கையற்ற ஒருவனாக இருந்த நிலையில் இருந்து, வாழ்வென்றால் என்னவென்ற தேடலினை தன்னுடைய ஐம்பதாவது வயதினில் மேற்கொண்ட ஒருவனாக மாறி, இறுதியில் வாழ்வினுடைய அர்த்தத்தினை இயேசுவின் கருத்துகளில் இருந்து அறிந்துக் கொண்ட ஒருவனின் மனதினில் என்ன கேள்விகள் இயல்பாக வருமோ அதே கேள்விகள் தான் டால்ஸ்டாய் அவர்களுக்கும் வருகின்றது.

ஏன் இது நாள் வரை வாழ்வென்றால் என்னவென்று எனக்கு புலப்படாமல் இருந்தது? ஆன்மீக நிறுவனங்களும் திருச்சபைகளும் எதற்காக வாழ்வினைப் பற்றி எனக்கு போதிக்காமல் வெறும் சடங்குகளையும் அதிசயங்களையும் பற்றி மட்டுமே எனக்கு போதித்து வந்து கொண்டிருக்கின்றன? ஏன் அந்த திருச்சபைகளுக்குள் இத்தனை வேறுபாடு?

இந்த கேள்விக்கான விடைகளைத் தேடும் பொழுது, அனைத்து திருச்சபைகளும் தங்களது சுய ஆதாயத்திற்காகவே இயேசுவின் பெயரைக் கூறிக் கொண்டு, இயேசுவின் கருத்திற்கு முற்றிலும் மாறுபட்ட கருத்துக்களை போதித்து வந்து கொண்டிருக்கின்றன என்பதனை அவர் காணுகின்றார். வெறும் அதிசயங்களையும் சடங்குகளையும் முன்னிறுத்தி வைத்துவிட்டு இயேசுவின் கருத்துக்களை புறக்கணிக்கும் ஒரு செயலினையே அனைத்து திருச்சபைகளும் செய்து கொண்டிருக்கின்றன என்பதனையும் அவர் காணுகின்றார். திருச்சபைகளின் அந்த நடவடிக்கைகளினால் இயேசுவின் கருத்துக்கள் மக்களைச் சென்றடையாமல் இருப்பதனையும், மக்கள் இயேசுவின் கருத்துக்களை விட அவர் செய்த அதிசயங்களையையே பெரிதாக கருதிக் கொண்டு அர்த்தமற்ற வாழ்வினை வாழ்ந்துக் கொண்டிருப்பதனையும் அவர் காணுகின்றார்.

அந்நிலையில், இயேசுவின் வாழ்வில் இருந்து அனைத்து அதிசயங்களையும் எடுத்து விட்டு, இயேசு கூறிய விடயங்களின் மெய்யான அர்த்தத்தினை மட்டும் மக்களிடம் கொண்டு போய் சேர்க்க கூடிய ஒரு நூலாக இந்நூலினை டால்ஸ்டாய் அவர்கள் எழுதி இருக்கின்றார்.

"கிருத்துவத்தை ஒரு மாபெரும் வரலாற்று நிகழ்வாகவோ அல்லது தெய்வீகமான வெளிப்பாடாகவோ நான் கருதவில்லை. மாறாக வாழ்வுக்கு அர்த்தத்தினைத் தரும் ஒரு போதனையாகவே நான் அதனைக் காணுகின்றேன். வரலாற்று நிகழ்வுகளைக் குறித்த தேடல்களோ அல்லது இறைவனைக் குறித்த தேடல்களோ என்னை கிருத்துவத்தில் கொண்டு வந்து சேர்க்கவில்லை. மாறாக என்னுடைய ஐம்பதாவது வயதில் நான் கொண்ட ‘நான் யார்’ என்ற தேடலும் ‘என்னுடைய வாழ்வின் அர்த்தம் என்ன ’ என்ற தேடலுமே என்னை இங்கே கொண்டு வந்து சேர்த்தது." என்று கூறுகின்ற டால்ஸ்டாய் அவர்கள், இந்த நூலின் வாயிலாக வாழ்வினைக் குறித்து தான் அறிந்தவற்றை தன்னுடைய சகோதரர்களுடன் பகிர்ந்துக் கொள்ளுகின்றார்.

விவிலியத்தின் புனிதத்தன்மை, அதிசயங்கள் போன்ற அனைத்தையும் கேள்விக்கு உள்ளாக்கும் டால்ஸ்டாய் அவர்கள் வாசகர்கள் முன்னே முன்வைப்பது ஒன்றினைத் தான்...ஒன்றினை மட்டும் தான்...!!! அதிசயங்கள் இல்லாத இயேசுவின் வாழ்வினையும் அவரது கருத்துக்களையும் மட்டுமே தான் அவர் இந்த நூலின் வாயிலாக நம் முன்னே வைக்கின்றார். திருச்சபைகள் போதித்துக் கொண்டிருக்கும் தவறான விளக்கங்களில் இருந்து இயேசுவின் போதனைகள் எவ்வாறு மாறுபட்டு இருக்கின்றன என்பதனை சுவிஷேசங்களில் இருந்தே நமக்கு தெளிவாக அவர் விளக்குகின்றார்.

சமயங்களைப் பற்றியும் வாழ்வினைப் பற்றியும் நாம் கண்டு வந்து கொண்டிருக்கும் நமது பயணத்திலே இந்த புத்தகம் ஒரு முக்கியமான புத்தகமாகும்.

"இறைவன் மக்களுக்குப் போதிப்பதற்காகவே உலகிற்கு வந்திருந்தார் என்றால், தன்னுடைய போதனைகளை அவர் தெளிவாகக் கூறி இருப்பார். அவருடைய நோக்கே போதிப்பதாக இருக்கும் பட்சத்தில் அவர் போதித்த கருத்துக்கள் ஒரே அர்த்தத்தினைத் தான் கொண்டிருக்கக்கூடும். நிச்சயமாக பல்வேறு விதமான முரண்பட்ட விளக்கங்களை அவருடைய போதனையானது கொண்டிருக்காது. உண்மையினை வெளிப்படுத்துவதற்காக இறைவன் உலகிற்கு வந்தார் என்றால் அனைவரும் புரிந்து கொள்ளும் வண்ணமே அவர் அதனை வெளிப்படுத்தி இருப்பார். அவர் அவ்வாறு செய்யவில்லை என்றால் அவர் இறைவனாக இருக்க முடியாது. மேலும் இறைவனாலேயே மனிதர்களுக்குத் தெளிவாகப் புரிய வைக்க இயலாத வண்ணமே தெய்வீக உண்மைகள் இருந்தன என்றால் நிச்சயமாய் மனிதரால் அவற்றை மற்றவர்களுக்குப் புரிய வைக்க முடியாது." - லியோ டால்ஸ்டாய்

பி:கு:
  1. இந்த நூலில் இருக்கும் டால்ஸ்டாயின் முன்னுரையினை முதலில் படிக்கவும்.
  2. சுவிசேஷங்கள் என்பன இயேசுவின் வாழ்வினைப் பற்றியும் அவரது போதனைகளைப் பற்றியும் எழுதப்பட்ட புத்தகங்கள் ஆகும்.
புத்தகத்தினை வெளியிட்டோர் : பாரதி புத்தகாலயம்

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு