நம்முடைய கனவுகளில் சுதந்திரமாக சிந்தித்துக் கொண்டிருப்பது நம்முடைய ஆன்மா தான் என்றே நாம் சென்ற பதிவினில் கூறி இருக்கின்றோம். இப்பொழுது அதைப் பற்றியே தான் நாம் சற்று விரிவாக பார்க்க வேண்டி இருக்கின்றது...முதலில் இரண்டு நிகழ்வுகளைக் கண்டு விடலாம்...!!!

முதல் நிகழ்வு: நான் பத்தாவது படித்துக் கொண்டிருந்த தருணம் அது. என்னுடைய விலங்கியல் பாட ஆசிரியர் ஒருவர், பாடம் நடத்திக் கொண்டிருக்கும் பொழுது இடையிடையில் தன்னைப் பற்றிக் கூறிக் கொள்வதனை வழக்கமாக கொண்டிருப்பவர். அப்படி ஒருநாள் அவர் பாடம் நடத்திக் கொண்டிருக்கும் பொழுது கனவினைப் பற்றி பேச ஆரம்பித்தார்.

'கடினமான கணக்கு ஒன்றிற்கு விடையினை அறிய முடியாமல் நான் சிந்தித்துக் கொண்டிருந்த பொழுது உறங்கி விட்டேன்...ஆனால் என்னுடைய கனவினில் நான் அப்புத்தகத்தின் பக்கங்களை திருப்பிக் கொண்டும் சிந்தித்துக் கொண்டும் இருந்தேன்...இறுதியாக நான் விழித்து எழுந்த பொழுது அக்கணக்கிற்கான விடையினை நான் அறிந்து இருந்தேன்...கனவில் அவ்விடையினை நான் கண்டு பிடித்து இருந்தேன்' என்றே அவர் கூறினார்.

"டேய்...சார் கனவிலேயே படிக்கிறாரு டோய்...பெரிய ஆளு தான்" என்று நண்பர்களுடன் அவரை நம்பாது அமைதியாக கிண்டல் அடித்துக் கொண்டு சிரித்தது இன்றும் நினைவில் இருக்கத் தான் செய்கின்றது. ஏனெனில் இத்தகைய விடயங்கள் பொதுவாக நம்ப முடியாதவை தான்...அனுபவங்கள் கிட்டும் வரை!!! ஆனால் இன்று அந்நிகழ்வுகளை எல்லாம் நினைவுக்கூரும் பொழுது அவற்றை நிச்சயம் நம்பவோ/மறுபரிசீலனை பண்ணவோ தான் வேண்டி இருக்கின்றது. காரணம் அனுபவங்கள். பலரும் அத்தகைய அனுபவங்களைப் பெற்றுத் தான் இருக்கின்றனர். நீண்ட நாள் தேடிக் கொண்டிருந்த விடைகளை சிலர் கனவுகளில் கண்டு அறிந்து இருக்கின்றனர். இது எப்படி சாத்தியமாகின்றது?

இரண்டாம் நிகழ்வு: இதனை நம்மில் பலரும் கடந்து வந்து இருப்போம். இரவு நேரப் புகை வண்டிப் பயணங்களின் பொழுதோ அல்லது பேருந்துப் பயணங்களின் பொழுதோ, நாம் இறங்க வேண்டிய ஊர் வந்து சேரும் பொழுது அது வரை அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்த நாம் திடுக்கிட்டு எப்படியோ எழுந்து விடுவோம். அது வரை நன்கு உறங்கிக் கொண்டு இருந்திருப்போம். வழியில் வேறு எத்தனை ஊர்கள் வந்தன என்பதனை எல்லாம் நாம் அறிந்து இருக்க மாட்டோம். கனவுகளின் மத்தியில் உலாவிக் கொண்டே இருந்திருப்போம். ஆனால் எப்பொழுது நாம் இறங்க வேண்டிய ஊர் வருகின்றதோ அப்பொழுது சரியாக நமக்கு விழிப்பு வந்து விடுகின்றது. சில நேரங்களில் இவ்வாறு நமக்கு முழிப்பு வராவிடிலும், பல நேரங்களில் பலருக்கும் கிட்டி இருக்கும் ஒரு அனுபவம் தான் இது.

இப்பொழுது இவற்றுக்கு தான் நாம் விடையினைக் காண வேண்டி இருக்கின்றது. நாம் சென்ற பதிவினில் கண்டு இருக்கின்றோம்...உடலானது உறங்கும் பொழுது உடல் உறுப்புக்கள் இயங்கிக் கொண்டு தான் இருக்கின்றன என்று. அவற்றைப் போன்றே தான் ஆன்மாவானதும், என்ன செய்யலாம் என்று எண்ணியவாறே விழித்துக் கொண்டு தான் இருக்கின்றது. சமயங்களின் கூற்றின் படி 'ஐம்புலன்களை அமைச்சராக வைத்து கொண்டு, அவற்றின் கூற்றுகளை அடிப்படையாக கொண்டு அரசாளும் ஒரு அரசனைப் போன்றே தான் ஆன்மாவானது இருக்கின்றது. (சிவஞானபோதம்)' அதாவது ஐம்புலன்களின் மூலமாக பெற்ற அறிவினை வைத்து செயலாற்றும் தன்மையினை ஆன்மாவானது கொண்டிருக்கின்றது. உதாரணத்திற்கு பேய்படம் ஒன்றினை நாம் காணும் பொழுது கண்களின் வழியாக பேயின் உருவத்தினையும் செவியின் வழியாக பேயின் அலறலையும் ஆன்மாவானது அறிந்துக் கொள்ளுகின்றது. அவை பயம் தரும் வண்ணம் இருப்பதனால் ஆன்மாவானது பயப்படுகின்றது.

'பேயானது உண்மையில் என்னைத் துரத்தினால்' என்னவாகும் என்ற சிந்தனையின் விளைவாக, பேயினைப் பற்றியும் தான் இருக்கின்ற இடத்தினைப் பற்றியும் தன்னுடைய மூளையில் பதிந்து இருக்கும் விடயங்களை வைத்து தன்னை அப்பேய் துரத்துவதாக ஆன்மாவானது, உறங்கும் பொழுது ஒரு சிந்தனையை உருவாக்கி கொள்கின்றது. அதன் விளைவாகத் தான் நன்கு பழக்கப்பட்ட இடத்தில் பேய்கள் துரத்துவதனைப் போன்ற கனவுகள் எழுகின்றன.

அதனைப் போன்றே தான் மேலே நாம் கண்ட இரண்டு நிகழ்வுகளும் நிகழ்கின்றன...ஒரு விடயத்தினைக் குறித்து நாம் முழு மனதாக சிந்தித்துக் கொண்டிருக்கின்றோம்...அப்படியே நாம் உடல் அசதியினால் உறங்கிப் போய் விடுகின்றோம். ஆனால் நம்முடைய ஆன்மாவோ விழித்துக் கொண்டே தான் இருக்கின்றது...அப்படியே அந்த விடயத்தினைப் பற்றி தொடர்ந்து சிந்தித்துக் கொண்டே தான் இருக்கின்றது. அதனால் தான் நாம் உறங்கி எழுகின்ற பொழுது சில கேள்விகளுக்கு விடைகள் சட்டென்று புலனாகின்றன...சில புதிய விடயங்களும் புலனாகின்றன. ஏனென்றால் உடலானது அயர்ந்து உறங்கிக் கொண்டிருக்கும் பொழுது ஆன்மாவானது தொடர்ந்து இயங்கிக் கொண்டே தான் இருக்கின்றது.

ஆகையால் தான் பயணத்தின் பொழுது நாம் உறங்கிக் கொண்டிருந்தாலும், 'இந்த ஊரில் நாம் இறங்க வேண்டும்' என்கின்ற சிந்தனையை ஆன்மாவானது கொண்டிருப்பதினால், அந்த ஊரானது வந்து விடுகின்ற பொழுது நாம் நம்மை அறியாமலேயே விழித்து விடுகின்றோம்.

 சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால், நம்முடைய உடலானது உறங்கிக் கொண்டிருக்கும் பொழுது ஆன்மாவானது உறங்காது விழித்துக் கொண்டே தான் இருக்கின்றது. உறங்குவதற்கு முன்னால் நாம் எந்த வேலையையாவது முழு மனதுடன் செய்து வந்துக் கொண்டிருந்தோமேயானால், நாம் உறங்கியதற்குப் பின்னரும் கூட ஆன்மாவானது அந்த வேலையைக் குறித்து சிந்தித்துக் கொண்டே தான் இருக்கின்றது. இதற்கு எடுத்துக்காட்டாய் நாம் பயணம் செய்யும் பொழுது சரியான நேரத்தில் சரியான ஊரில் நாம் விழித்து எழும் நிகழ்வினையும், விடை அறியா கேள்விகளுக்கு உறங்கி எழுந்த உடன் விடை அறிந்து விடும் நிகழ்வினையும் எடுத்துக்காட்டாய் கொள்ளலாம்.

மேலும் நாம் உறங்குவதற்கு முன்னர் எந்தொரு குறிப்பான விடயத்தினைப் பற்றியும் நாம் சிந்தித்துக் கொண்டிருக்கவில்லை என்றால், ஆன்மாவானது, நம்முடைய மூலையினில் பதிவாகி இருந்த மற்ற விடயங்களை எடுத்துக் கொண்டு அதனைப் பற்றி சிந்திக்கத் துவங்குகின்றது. அதன் விளைவாகத் தான் சாதாரண கனவுகள் ஏற்படுகின்றன.

மேலும் ஆன்மீகவாதிகளின் கூற்றின்படி கனவுகளில் இறைவன் ஆன்மாவினை வழிநடத்துவதும் உண்டு. உதாரணத்திற்கு மகாயான பௌத்தத்தின் கூற்றின்படி

'சம்போக காயா நிலையில் புத்தர் ஒவ்வொரு போதிசத்துவரையும் தனது தர்மகாயா நிலையுடன் ஒன்றிணைக்கின்றார். கனவுகள் மூலமாகவோ அல்லது காட்சிகள் மூலமாகவோ சம்போக காயா நிலை புத்தர் ஒவ்வொரு போதிசத்துவரையும் வழிநடத்துகின்றார்.'

இதைப் போன்ற விடயங்கள் அனைத்து சமயங்களிலும் காணப்படுகின்றன. சரி இருக்கட்டும், ஆன்மாவின் சிந்தனைகளே கனவுகள் என்றே நாம் கண்டு இருக்கின்றோம். இப்பொழுது சில சம்பவங்கள் நிகழும் பொழுது, அவை ஏற்கனவே நிகழ்ந்து இருப்பதனைப் போன்ற உணர்வினை நாம் பெற்று இருக்கின்ற நிலையினைத் தான் நாம் காண வேண்டி இருக்கின்றது.

காணலாம்...!!!

பி.கு:
மிகவும் மேலோட்டமாகவே நாம் இங்கே கருத்துக்களை கண்டு வந்து கொண்டிருக்கின்றோம். மேலும் குறிப்பாக அறிந்துக் கொள்வதற்கும் சிந்திப்பதற்குமே நாம் இவற்றைக் காணுகின்றோம்…எனவே மாற்றுக் கருத்துக்களும்…கூறியுள்ள விடயங்களில் எவையேனும் தவறென்று உங்களுக்கு தோணிற்று என்றால் அத்தவறினை சுட்டிக் காட்டுதலும் வரவேற்கப்படுகின்றன.

0 கருத்துகள்:

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு