கனவினையும் மரணத்தினையும் ஆன்மாவினையும் பற்றி நாம் கண்டு வந்துக் கொண்டிருக்கும் இத்தொடரினில் 'ஒரு நிகழ்வானது நிகழ்ந்துக் கொண்டிருக்கும் பொழுது...அது ஏற்கனவே நிகழ்ந்திருப்பதனைப் போன்ற ஒரு உணர்வினை நாம் உணர்வது எதனால்?' என்பதனையே நாம் இப்பொழுது காண வேண்டி இருக்கின்றது. அதற்கு நாம் மிக முக்கியமான கேள்வியினை காண வேண்டி இருக்கின்றது.

'ஆன்மாவினது ஆற்றலின் எல்லை என்ன?' என்கின்ற கேள்வி தான் அது.

சமயங்களின் கூற்றின்படி இறைவனின் ஒரு பகுதி தான் ஆன்மா. ஆகையால் தான் ஆன்மாவினை உடைய மனிதனால் இந்த உலகினை ஆள முடிகின்றது. அனைத்தையும் அவன் காண்கின்றான்...அனைத்தினைப் பற்றியும் அவன் அறிகின்றான்...அறிந்து அதனை மாற்றவும் செய்கின்றான். இந்த ஆற்றலினை ஒரு மனிதனுக்கு வழங்குவது அவனது ஆன்மா என்றே சமயங்கள் கூறுகின்றன.

அதனை மெய்ப்பிப்பதனைப் போன்றே பல நிகழ்வுகளையும் நாம் அறிய வருகின்றோம் தான். உதாரணமாக,
செவ்விந்தியப் பழங்குடி மக்களைப் பற்றிய கதை ஒன்று உண்டு. அவர்கள் வசிக்கும் இடத்தில் மழை பெய்ய வேண்டுமென்றால் அவர்கள் அனைவரும் ஒன்றாக ஒன்றிணைந்து மழை பெய்ய வேண்டும் என்று வேண்டிக் கொள்வார்கள். அவ்வாறு அவர்கள் அனைவரது சிந்தனையும் மெய்யாக ஒன்றுபட்டு இருக்கும் பொழுது அங்கே மழையும் பொழியுமாம்.

அதனைப் போன்றே தான் நாம் குறி சொல்லும் மக்களையும் காண வேண்டி இருக்கின்றது. போலியான நபர்கள் பலர் இருப்பீனும், மெய்யான நபர்களும் இங்கே இருக்கத் தான் செய்கின்றனர். அவர்கள் தங்களது மனதினை ஒருமுகப்படுத்துவதன் மூலமாக அதன் ஆற்றலினை பெருக்கிக் கொள்ளுகின்றனர். அவ்வாறு அவர்கள் பெற்ற அந்த ஆற்றலின் மூலமாக எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதனை அவர்கள் கூறுகின்றனர். (முதலில் நான் இவற்றை நம்பியதில்லை என்றாலும் அனுபவங்களின் மூலமாக இவற்றில் உண்மை இருப்பதனை அறிந்திருப்பதால் இதனைப் பற்றி இங்கே கூறி இருக்கின்றேன்)

இத்தகைய ஆற்றலினை வழங்கக் கூடியத் தன்மையினை ஆன்மாவானது பெற்று இருக்கின்றது. எப்பொழுது ஒரு மனிதனானவன் தனது ஆன்ம பலத்தினை பெருக்கிக் கொள்ளுகின்றானோ அப்பொழுது அவன் அந்த ஆற்றலினை அறிந்துக் கொள்ளுகின்றான். சரி இருக்கட்டும்...ஆன்மாவின் ஆற்றலினைப் பற்றி சிறிது கண்டாயிற்று...இப்பொழுது அது எவ்வகையில் நம்முடைய கேள்விக்கு பதிலளிக்கப் போகின்றது என்பதனையே நாம் காண வேண்டி இருக்கின்றது.

சென்ற பதிவினில் நாம் கிருத்துவத்தில் இருந்து ஒரு நிகழ்வினைக் கண்டு இருந்தோம். தன்னுடைய சீடன் ஒருவன் தன்னை மூன்று முறை மறுப்பான் என்று இயேசு கூறுகின்றார்...அதன்படியே அச்சீடனும் இயேசுவை மூன்று முறை மறுக்கின்றான். இதனையே நாம் விரிவாக சென்ற பதிவினில் கண்டு இருந்தோம். இப்பொழுது அந்நிகழ்வினையே நாம் மீண்டும் எடுத்துக்காட்டாக எடுத்துக் கொள்ள வேண்டி இருக்கின்றது.

இயேசுவின் நிலை:

இயேசுவை ஒரு மனிதனாகவே தான் நாம் இங்கே காண வேண்டி இருக்கின்றது. கிருத்துவத்தின்படி இயேசு சாத்தானின்(ஆசையின்) தூண்டுதல்களில் இருந்து விலகி தியானத்தின் மூலம் தன்னுடைய ஆவியின் ஆற்றலினை அறிந்து கொள்ளுகின்றார். எனவே அவரது ஆன்ம நிலை வேறு. தனது ஆன்மாவின் ஆற்றலினை இயேசு அறிந்து இருக்கின்றார். அத்தகைய ஆன்மாவானது தனக்கு கட்டுப்பட்டு இருக்கக் கூடிய உலகினைப் பார்க்கின்றது...அங்கே பல்வேறு ஆன்மாக்களும் உலாவிக் கொண்டிருக்கின்றன. அவை அனைத்தையும் அவரால், இயேசுவின் ஆன்மாவினால், காண முடிகின்றது. அந்த ஆன்மாக்கள் இருக்கின்ற நிலையினையும் அவரால் உணர முடிகின்றது. சில ஆன்மாக்கள் அவரை கைது செய்வதற்கு தயாராகிக் கொண்டிருக்கின்றன...சில ஆன்மாக்களோ அவரை விசாரிக்க ஆயுத்தமாகிக் கொண்டிருக்கின்றன...இவ்வாறு ஒவ்வொரு ஆன்மாவின் நிலையினையும் அவரால் அறிந்து உணர்ந்துக் கொள்ள முடிகின்றது. அதன் அடிப்படையிலேயே அவரால் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று கூற முடிகின்றது.

சீடர்கள் மற்றும் மற்ற மக்களின் நிலை:

இயேசுவின் சீடர்களோ அல்லது மற்ற மக்களோ தங்களது ஆன்ம பலத்தினைப் பற்றி அறியாதே இருந்தார்கள். அவர்களது ஆன்மாவானது எத்தகைய புரிதலினைக் கொண்டிருந்ததோ அதன் அடிப்படையிலேயே தான் அவர்களது செயல்களும் இருந்தன. அதாவது தன்னுடைய ஆற்றலினை அறியாத நிலையிலேயே தான் அவர்களது ஆன்மாவானது இருந்தது.

இவ்வாறு இரண்டு வெவ்வேறு நிலைகளில் ஆன்மாவானது இருப்பதனை நாம் காணுகின்றோம். ஒன்று தன்னுடைய ஆற்றலினை அறிந்துக் கொண்ட நிலை...மற்றொன்று தன்னுடைய ஆற்றலினை அறிந்துக் கொள்ளாத நிலை. தன்னுடைய ஆற்றலினை அறிந்துக் கொண்ட நிலையினில் ஒரு ஆன்மாவினால் மற்ற ஆன்மாக்களையும் அறிந்துக் கொண்டு, 'என்ன நடக்கும்' என்று கூற முடிகின்றது. ஆனால் ஆற்றலினை அறிந்துக் கொள்ளாத நிலையிலோ, தன்னுடைய புரிதலினை அடிப்படையாக கொண்டு மட்டுமே ஒரு ஆன்மாவானது இருக்கின்றது. நிற்க.

மேலே நாம் கண்டிருப்பது ஒரு எடுத்துக்காட்டு மட்டுமே...இதனை அனைவரும் நம்புவர் என்றோ அல்லது ஏற்றுக் கொள்ளுவர் என்றோ நாம் எண்ணுவது முட்டாள் தனமாகும். மேலும் அவ்வாறு அவர்கள் நம்ப வேண்டும் என்பதும் நமது குறிக்கோள் அல்ல. ஏனென்றால் சில மக்கள் சமயங்கள், இறைவன் என்று நாம் பெயர்களை பயன்படுத்தி இருப்பதினால் மட்டுமே நாம் மேலே கூறி இருப்பதனை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். சில மக்களோ நாம் அவ்வாறு பெயர்களைக் கூறி இருப்பதனால் மட்டுமே அவற்றை ஏற்றுக் கொள்வார்கள். இவ்விரண்டினையுமே நாம் இங்கே விரும்பவில்லை. நமது இலக்கானது இங்கே என்னவென்றால், இந்த விடையங்களைக் குறித்து மக்களை சிந்திக்க வைப்பது மட்டுமே தான். ஒரு நூலினில் கூறி இருக்கின்றது என்பதினால் மட்டுமே ஒன்றினை நம்புவது என்பது முட்டாள்தனமாகும். மாறாக நம்மால் எதனை உணர முடிகின்றதோ அதனை நம்புவதே தெளிவான ஒரு செயலாக அமையும்.

ஒரு நிகழ்வானது நிகழ்ந்துக் கொண்டிருக்கும் பொழுது...அது ஏற்கனவே நிகழ்ந்திருப்பதனைப் போன்ற ஒரு உணர்வினை நம்மில் பலரும் உணர்ந்து இருப்போம். இதனை நாம் நூல்களில் இருந்து அறிந்துக் கொள்ளவில்லை...உணர்வதினால் அறிந்து இருக்கின்றோம்...இப்பொழுது இத்தகைய ஒரு உணர்வினையே நாம் மேலே கண்டுள்ள எடுத்துக்காட்டின் மூலமாக விளக்க வேண்டி இருக்கின்றது.

நாம் கடந்த பதிவுகளில் கண்டிருக்கின்றோம்...நம்முடைய உடலானது உறங்கிக் கொண்டிருக்கின்ற பொழுது நம்முடைய ஆன்மாவானது உறங்குவதில்லை என்று...அது விழித்துக் கொண்டே தான் இருக்கின்றது. அவ்வாறு விழித்துக் கொண்டிருக்கும் ஆன்மாவின் செயலினை நம்மால் வரையறை செய்ய இயலாது...காரணம் ஆன்மாவின் ஆற்றல் அத்தகையது. நாம் உறங்கிக் கொண்டிருக்கும் பொழுது நம்முடைய காரண அறிவானது துடிப்பாக இருப்பதில்லை...மாறாக ஆன்மாவின் உணர்வுகளே மேலோங்கி இருக்கின்றது. அந்நிலையில் ஆன்மாவானது சுதந்திரமாக செயல்படுகின்றது...அவ்வாறே தன்னுடைய ஆற்றலினையும் சுதந்திரமாக செயல்படுத்துகின்றது.

அதாவது...உடலானது உறங்கிக் கொண்டிருக்கின்றது...இந்த உலகியல் அனுபவங்களின் மூலமாக நாம் பெற்று இருக்கும் காரண அறிவும் துடிப்பாக இல்லை...இந்நிலையில் ஆன்மாவானது சுதந்திரமாக செயல்படுகின்றது...சில நேரங்களில் அது தான் கண்டிருந்த காட்சிகளையும் அனுபவங்களையும் கொண்டு சிந்திக்கின்றது (ஊ.தா - பேய் கனவுகள்...மற்ற கனவுகள்), சில நேரங்களில் உறங்குவதற்கு முன்னர் நாம் எதனைக் குறித்து நம்முடைய அறிவினைக் கொண்டு சிந்தித்துக் கொண்டிருந்தோமோ அதனைக் குறித்து அது சிந்திக்கின்றது (உ.தா - ஊர் வரும் பொழுது சரியாக முழிப்பு வருவது...புதிய விடைகள்)...மேலும் சில நேரங்களில் ஆன்மாவானது இந்த உலகினையும் மற்ற ஆன்மாக்களின் நிலையையும் காணுகின்றது...இந்த நிலையினில் தான் நம்முடைய கேள்விக்கு பதில் இருக்கின்றது.

சுதந்திரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஆன்மாவானது, சில நேரங்களில் இந்த உலகினை முழுமையாக காணுகின்றது...நடந்த நிகழ்வுகள்...நடக்கின்ற நிகழ்வுகள்...மற்ற ஆன்மாவின் நிலைகள்...போன்றவற்றை கண்டு...அதன் அடிப்படையில் எந்த நிகழ்வு நிகழும் என்பதனை அது அறிந்துக் கொண்டு அந்த நிகழ்வை அது காணுகின்றது...!!!

அதாவது நம்முடைய/தன்னுடைய நிலையும் ஆன்மாவிற்கு தெரியும்...அதாவது நாம் கொண்டிருக்கும் ஆசைகள், சிந்தனைகள், அறிவு போன்றவற்றை ஆன்மாவானது அறிந்து இருக்கின்றது. அதன் அடிப்படையில் எதிர்காலத்தில் இவன்/நான் எங்கு செல்வேன் என்பதனையும் எதற்காக செல்வேன் என்பதனையும் அது அறிந்துக் கொள்ளுகின்றது. அதனைப் போன்றே தான் சுதந்திரமாக, காரண அறிவின் தாக்கம் இல்லாது, இருக்கின்ற பொழுது அது மற்ற ஆன்மாக்களையும் காணுகின்றது...தன்னுடைய ஆற்றலின் விளைவால் அந்த மற்றொரு ஆன்மாவின் சிந்தனை/தன்மை போன்றவற்றை அது அறிந்துக் கொள்ளுகின்றது. அதன் அடிப்படையில் அந்த ஆன்மாவானது எங்கு செல்லும் என்பதனையும் எதற்காக செல்லும் என்பதனையும் அது அறிந்துக் கொள்ளுகின்றது.

அதாவது...நான் இருக்கின்ற நிலையில் நான் ஒரு அலுவலகத்திற்கு செல்ல வேண்டி வரும் என்பதனை என்னுடைய ஆன்மாவானது அறிந்துக் கொள்ளுகின்றது...அதனைப் போன்றே அங்கே வந்து சேரக் கூடிய தன்மையினை உடைய மற்றொரு ஆன்மாவினையும் அது உணர்ந்துக் கொள்ளுகின்றது...இரண்டு ஆன்மாக்களும் சந்திக்கும் என்றும் அவை எதற்காக சந்திக்கும் என்றும் தன்னுடைய ஆற்றலின் மூலமாக அறிந்துக் கொள்ளுகின்ற ஆன்மாவானது...அந்த சந்திப்பினை ஒரு முறை காட்சியாக கண்டு கொள்ளுகின்றது...அது ஆன்மாவின் நினைவில் பதிந்துக் கொள்ளுகின்றது.

அந்த நினைவு தான், அந்த நிகழ்வானது உண்மையில் நிகழும் பொழுது 'இது ஏற்கனவே நடந்து இருக்கே' என்ற எண்ணத்தினை நம்முள் விளைவிக்கின்றது...அதாவது நம்முடைய ஆன்மாவானது அந்த நிகழ்வினை ஏற்கனவே கண்டு விட்டது...அந்த நினைவும் நம்முடைய மனதில் பதிந்து விட்டது...ஆனால் அந்த நிகழ்வு பிற்காலத்தில் தான் நிகழ்கின்றது...ஆகையால் தான் அந்த நிகழ்வினை நாம் முன்னரே கண்டு இருப்பது போன்றும்...அடுத்து நாம் இதனைத் தான் பேசுவோம் என்றோ அல்லது மற்றவர் இதனைத் தான் செய்வார் என்றோ நம்மால் யூகிக்க முடிகின்றது. அவ்வாறு யூகிப்பதும் பெரும்பாலும் சரியாகவே இருக்கவும் செய்கின்றது.

இதனால் தான் ஒரு நிகழ்வானது நிகழ்ந்துக் கொண்டிருக்கும் பொழுது...அது ஏற்கனவே நிகழ்ந்திருப்பதனைப் போன்ற ஒரு உணர்வினை நாம் பெறுகின்றோம்...சரி இருக்கட்டும்...!!!

கிட்டத்தட்ட இந்த தொடரின் முடிவிற்கு வந்து விட்டோம்...இது வரை நாம் கண்ட விடயங்களை சுருக்கமாக கண்டு விட்டு இத்தொடரினை முடிவு செய்வோம்...!!!

அடுத்த பதிவில் முடியும்...!!!

பி.கு:
 
மிகவும் மேலோட்டமாகவே நாம் இங்கே கருத்துக்களை கண்டு வந்து கொண்டிருக்கின்றோம். மேலும் குறிப்பாக அறிந்துக் கொள்வதற்கும் சிந்திப்பதற்குமே நாம் இவற்றைக் காணுகின்றோம்…எனவே மாற்றுக் கருத்துக்களும்…கூறியுள்ள விடயங்களில் எவையேனும் தவறென்று உங்களுக்கு தோணிற்று என்றால் அத்தவறினை சுட்டிக் காட்டுதலும் வரவேற்கப்படுகின்றன.

சில சம்பவங்கள் நிகழும் பொழுது, அவை ஏற்கனவே நிகழ்ந்து இருப்பதனைப் போன்ற உணர்வினை நாம் சில முறை பெற்று இருப்போம். அதனைப் பற்றியே தான் நாம் இப்பொழுது காண வேண்டி இருக்கின்றது. அதற்கு கிருத்துவத்தில் வரும் ஒரு நிகழ்வினை நாம் காண்பது நலமாக இருக்கும். அந்த நிகழ்வு இது தான் :

தன்னை யூதர்கள் கைது செய்வார்கள் என்றும் அவ்வாறு அவர்கள் அவரை கைது செய்யும் பொழுது அவருடைய சீடர்கள் அனைவரும் அவரை விட்டுவிட்டு ஓடி விடுவார்கள் என்றுமே இயேசு கூறுகின்றார். அதனை கேட்ட பேதுரு என்கின்ற சீடன் ஒருவன், மற்றவர்கள் இயேசுவை விட்டு விலகிச் சென்றாலும் அவன் அவரை விட்டு செல்ல மாட்டான் என்றே உறுதி கூறுகின்றான். ஆனால் அதற்கு இயேசுவோ, மறுநாள் விடியற்பொழுதினில் சேவல் கூவுவதற்கு முன்னர் மூன்று முறை அவன் அவரை மறுப்பான் என்றே கூறுகின்றார். அவர் கூறியதனைப் போன்றே 'இயேசுவை தனக்கு தெரியாதென்று' அவன் மூன்று முறை கூறியதாக கிருத்துவத்தில் வருகின்றது. இங்கே தான் நாம் ஒரு கேள்வியினைக் காண வேண்டி இருக்கின்றது.

1) ஒவ்வொரு மனிதனுக்கும் சுயமாக முடிவெடுக்கும் ஆற்றல் இருக்கின்றது. அதன்படி தான் பேதுரு 'உங்களை நான் மறுக்க மாட்டேன்' என்று இயேசுவிடம் கூறுகின்றான். அந்நிலையில் எதற்காக இயேசு அவனை நோக்கி 'நீ நாளை மூன்று முறை என்னை மறுப்பாய்' என்று கூற வேண்டும்? அல்லது எப்படி அவரால் அவ்வாறு கூற இயலும்?

அதாவது...நீ நாளை இதனைத் தான் செய்வாய் என்று தெளிவாக கூறி விட்டால், அங்கே அவனுடைய சிந்தனைக்கோ அல்லது சுயமாக முடிவெடுக்கும் திறனுக்கோ என்ன வேலை இருக்கின்றது?

கிருத்துவத்தின்படி இயேசு கடவுள். கடவுளே ஒருவனை நோக்கி நீ இதனைத் தான் செய்வாய் என்று கூறி விட்டால், அவனால் அதனை மாற்ற இயலுமா? இயேசுவை மறுக்க கூடாது என்ற எண்ணத்தினை பேதுரு உறுதியாக கொண்டிருந்தாலும், இயேசுவே 'நீ என்னை மறுப்பாய்' என்று கூறிய பின்னர், அவனால் அவரை மறுக்காது இருக்க முடியுமா? அவ்வாறு அவன் மறுக்காது இருந்திருத்தால் இயேசு கூறியது நடக்காது போய் இருக்குமே. அவர் பொய்/தவறாக கூறியதாக போய் இருக்குமே. ஆனால் இறைவன் எதனையும் தவறாக கூற முடியாதே. அந்நிலையில் பேதுருவினால் இயேசுவை மறுக்காமல் இருந்து இருக்க முடியுமா என்ன? அவனுக்கு சுயமாக முடிவெடுக்கும் ஆற்றல் பயன்பட்டு இருக்குமா என்ன? அப்படி இருக்க இயேசு எதற்காக அவ்வாறு அவன் தன்னை மறுப்பான் என்று கூறி இருக்க வேண்டும்?

ஒவ்வொரு மனிதனுக்கும் சுயமாக முடிவெடுக்கும் உரிமை இருக்கின்றது. ஆனால், நீ இதனைத் தான் எதிர்காலத்தில் செய்வாய் என்று உறுதியாக ஒருவர் கூறும் பொழுது அந்த சுயமாக முடிவெடுக்கும் உரிமை கேள்விக்குள்ளாகின்றது.

'இதனைத் தான் நான் செய்வேன் என்று சொல்லுகின்றீர்கள். ஆனால் நான் அதனை செய்ய விரும்பவில்லை என்றால் என்னால் என்னால் அதனை செய்யாது இருக்க முடியுமா அல்லது என் விருப்பத்திற்கு மாறாக அதனைத் தான் நான் செய்துக் கொண்டிருப்பேனா?...அவ்வாறு என் விருப்பத்திற்கு மாறாக நான் செய்வேன் என்றால் இங்கே என்னுடைய விருப்பத்திற்கும் சுயமாக முடிவெடுக்கும் திறனுக்கும் பயன் என்ன?' என்கின்ற கேள்வி இயல்பாகவே அந்த சூழலில் எழத் தான் செய்யும். இப்பொழுது இக்கேள்விக்குத் தான் நாம் பதிலினைக் காண வேண்டி இருக்கின்றது. அதற்கு கிருத்துவத்தில் நாம் கண்ட அந்த நிகழ்வினையே மீண்டும் காணலாம்...வேறு கோணத்தில்.

யூதர்கள் தன்னை கைது செய்வார்கள் என்று இயேசு கூறிய பொழுது அவருடைய சீடர்கள் யாரும் அதனை பெரிதாக கருதவில்லை. அத்தகைய ஒரு நிகழ்வானது உடனடியாக நிகழ்வும் என்று அவர்களில் ஒருவன் கூட கற்பனை செய்து இருக்கவில்லை. இயேசுவை கைது செய்ய முடியாது என்றும் அவ்வாறு ஏதேனும் நடந்தாலும் ஏதேனும் அதிசயம் பண்ணி அவர் தப்பி விடுவார் என்றுமே அவர்கள் நம்பிக்கை கொண்டிருந்தனர். அத்தகைய தெளிவினைத் தான் அவர்களது ஆன்மாவானது பெற்று இருந்தது. இயேசு அதனை அறிவார். தன்னுடைய சீடர்களின் புரிதலையும் அவர்களது ஆன்மாவினது நிலையினையும் அவர் நன்கறிந்து இருந்தார். ஆகையால் தான் அவர்கள் தன்னை விட்டு விலகி ஓடுவர் என்று அவரால் கூற முடிந்தது.

இயேசு கைது செய்யப்படுவார் என்பதனை அவரது சீடர்கள் எவரும் நம்பி இருக்கவில்லை. ஆனால் அவர்களது அந்த நம்பிக்கையினை உடைக்கும் வண்ணம் எப்பொழுது இயேசு கைது செய்யப்பட்டாரோ, அப்பொழுது என்ன செய்வது என்பதனை அறியாது அவர்கள் தப்பி ஓடினர். ஏனென்றால் அவர்களது ஆன்மாவின் தெளிவு அந்நிலையில் தான் இருந்தது. சுயமாக முடிவெடுக்கும் ஆற்றல் அவர்களிடம் அப்பொழுதும் இருக்கத் தான் செய்தது...அவர்களால் ஓடாமல் இருந்து இருக்க முடியும் தான்...ஆனால் அந்த ஆற்றலினை பயன்படுத்தும் தெளிவு அவர்களிடம் அங்கே இல்லாது இருந்தது. இயேசுவை அவர்கள் தெளிவாக புரிந்துக் கொள்ளாமல் தான் இருந்தனர். இயேசு அவர்களுக்கு இராஜ்யத்தினை மீட்டுக் கொடுப்பார் என்றே அவர்கள் நம்பி இருந்தனர். அவரை யாரும் கைது செய்ய முடியாது என்றும் அவர்கள் நம்பி இருந்தனர். ஆனால் அவர்களது நம்பிக்கைக்கு மாறாக எப்பொழுது இயேசு கைது செய்யப்பட்டாரோ அப்பொழுது 'என்னயா நடக்குது...கைது செய்ய முடியாது என்று எண்ணிக் கொண்டிருந்தோம்...ஆனால் இயேசுவை கைது செய்து விட்டார்களே...இனி நம்மையும் அல்லவா பிடித்துக் கொள்வார்கள்...என்ன செய்வது...' என்ற குழப்பத்தின் காரணமாகவும் பயத்தின் காரணமாகவும் அவரது சீடர்கள் அவரை விட்டு விலகி ஓடினர். அவர்களால் வேறொன்றும் செய்து இருக்க முடியாது...காரணம் அவர்களது புரிதல் அந்நிலையில் தான் இருந்தது.

அதே நிலை தான் பேதுருவுக்கும். இயேசுவை அவனாலும் முழுமையாக புரிந்துக் கொள்ள முடியாத ஒரு நிலை தான் இருந்தது. அதனால் தான் போர் வீரர்கள் இயேசுவை கைது செய்ய வரும் பொழுது, ஒரு வாளினை எடுத்து ஒரு வீரனின் காதினை வெட்ட அவன் முயன்றான். 'ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காட்டு' என்ற இயேசுவின் போதனையினை அவன் முழுவதுமாக புரிந்து இருக்கவில்லை. அதனை இயேசுவும் அறிவார். மேலும் மற்ற சீடர்களை விட பேதுரு தன்னிடம் அதிகம் நம்பிக்கையினை உடையவனாக இருந்தான் என்பதனையும் அவர் அறிந்து இருந்தார். அதனை மெய்ப்பிப்பது போன்றே தான் பேதுரு மட்டும், இயேசு கைது செய்யப்பட்டு விசாரணைக்கு அழைத்துக் கொண்டு செல்லும் பொழுது , அவரை பின்தொடர்ந்து செல்லுகின்றான். வேறு சீடர்கள் எவரும் அவ்வாறு செல்லவில்லை. ஏனென்றால் 'இயேசு எப்படியாவது தப்பி விடுவார்' என்ற நம்பிக்கை பேதுருவிடம் அதிகமாக இருந்தது. அவரை எவராலும் ஒன்றும் செய்ய முடியாது என்றே அவன் நம்பி இருந்தான். ஆனால் எப்பொழுது யூதர்கள் இயேசுவை குற்றவாளியாக முடிவு செய்து அவருக்கு தண்டனை வழங்க வேண்டும் என்று முடிவு செய்தார்களோ அப்பொழுது பேதுரு கொண்டிருந்த அந்த மிச்ச நம்பிக்கையும் கேள்விக்குள்ளானது. பயம் அவனை ஆட்கொண்டது. எனவே தான் எங்கே நம்மையும் பிடித்து தண்டனைக்கு உள்ளாக்கி விடுவரோ என்ற அச்சத்தினால் அவன் இயேசுவை மறுத்தான்.

இவை அனைத்தையும் இயேசு முன்னமே அறிந்து தான் இருந்தார். தன்னுடைய போதனைகளையும் தன்னையும் தன்னுடைய சீடர்கள் முழுமையாக புரிந்துக் கொள்ளவில்லை என்பதனை அவர் அறிந்து இருந்தார். அவர்களது ஆன்மாவானது அடைந்திருந்த புரிதலின் அளவினையும் அவர் அறிந்து இருந்தார். அதன் அடிப்படையிலேயே தான் அவர், அவரது சீடர்கள் அவரை விட்டு விலகி ஓடுவர் என்றும் பேதுரு தன்னை மறுத்தளிப்பான் என்றும் கூறினார்.

இயேசுவின் சீடர்களால் அவரை விட்டு ஓடாமலும், பேதுருவினால் இயேசுவை மறுக்காமலும் இருந்திருக்க முடியும் தான். அவர்களுக்கு அந்த உரிமை, சுயமாக முடிவெடுக்கும் உரிமை இருக்கத் தான் செய்தது. ஆனால் ஒவ்வொரு மனிதனும் அவனது புரிதலின் அடிப்படையிலேயே தான் முடிவெடுக்கின்றான். எனவே இயேசுவின் சீடர்களும் அவர்களது புரிதலின் அடிப்படையிலேயே தான் முடிவெடுத்தனர்.

'இயேசுவை யாரும் எதுவும் செய்து விட முடியாது...அவர் தேர்ந்து எடுக்கப்பட்டவர்...அவர் இசுரவேலரின் இராஜ்யத்தினை மீட்டுக் கொடுப்பார்' என்றே அவர்கள் நம்பி இருந்தனர். ஆனால் அவர்களுடைய நம்பிக்கைக்கு மாற்றாக அங்கே காரியங்கள் நிகழ்ந்த பொழுது, இயல்பாக ஒரு மனிதன் என்ன செய்வானோ அதனையே தான் அவர்கள் செய்து இருந்தனர்.அவர்களது புரிதலின் அளவினை அறிந்திருந்த இயேசுவும் அதன் அடிப்படையிலேயே தான் அவர்கள் எதனை செய்வார்கள் என்பதனை முன் கூட்டியே கூற முடிந்தது.

அதாவது நீ இதனைத் தான் செய்வாய் என்று இயேசு எவரையும் சபிக்கவில்லை...மாறாக அவர்களது ஆன்மாவானது இருந்த நிலையினை அடிப்படையாக கொண்டு அவர்கள் எதனை செய்வர் என்பதனை அவர் முன் கூட்டியே கூறினார். சரி இருக்கட்டும்...இப்பொழுது இந்த சம்பவத்தினை வைத்து எப்படி 'சில சம்பவங்கள் நிகழும் பொழுது, அவை ஏற்கனவே நிகழ்ந்து இருப்பதனைப் போன்ற உணர்வினை நாம் சில முறை பெற்று இருப்போம்' என்பதனை விளக்க முடியும் என்றே காணலாம்...!!!

தொடரும்....!!!

பி.கு:
மிகவும் மேலோட்டமாகவே நாம் இங்கே கருத்துக்களை கண்டு வந்து கொண்டிருக்கின்றோம். மேலும் குறிப்பாக அறிந்துக் கொள்வதற்கும் சிந்திப்பதற்குமே நாம் இவற்றைக் காணுகின்றோம்…எனவே மாற்றுக் கருத்துக்களும்…கூறியுள்ள விடயங்களில் எவையேனும் தவறென்று உங்களுக்கு தோணிற்று என்றால் அத்தவறினை சுட்டிக் காட்டுதலும் வரவேற்கப்படுகின்றன.

நம்முடைய கனவுகளில் சுதந்திரமாக சிந்தித்துக் கொண்டிருப்பது நம்முடைய ஆன்மா தான் என்றே நாம் சென்ற பதிவினில் கூறி இருக்கின்றோம். இப்பொழுது அதைப் பற்றியே தான் நாம் சற்று விரிவாக பார்க்க வேண்டி இருக்கின்றது...முதலில் இரண்டு நிகழ்வுகளைக் கண்டு விடலாம்...!!!

முதல் நிகழ்வு: நான் பத்தாவது படித்துக் கொண்டிருந்த தருணம் அது. என்னுடைய விலங்கியல் பாட ஆசிரியர் ஒருவர், பாடம் நடத்திக் கொண்டிருக்கும் பொழுது இடையிடையில் தன்னைப் பற்றிக் கூறிக் கொள்வதனை வழக்கமாக கொண்டிருப்பவர். அப்படி ஒருநாள் அவர் பாடம் நடத்திக் கொண்டிருக்கும் பொழுது கனவினைப் பற்றி பேச ஆரம்பித்தார்.

'கடினமான கணக்கு ஒன்றிற்கு விடையினை அறிய முடியாமல் நான் சிந்தித்துக் கொண்டிருந்த பொழுது உறங்கி விட்டேன்...ஆனால் என்னுடைய கனவினில் நான் அப்புத்தகத்தின் பக்கங்களை திருப்பிக் கொண்டும் சிந்தித்துக் கொண்டும் இருந்தேன்...இறுதியாக நான் விழித்து எழுந்த பொழுது அக்கணக்கிற்கான விடையினை நான் அறிந்து இருந்தேன்...கனவில் அவ்விடையினை நான் கண்டு பிடித்து இருந்தேன்' என்றே அவர் கூறினார்.

"டேய்...சார் கனவிலேயே படிக்கிறாரு டோய்...பெரிய ஆளு தான்" என்று நண்பர்களுடன் அவரை நம்பாது அமைதியாக கிண்டல் அடித்துக் கொண்டு சிரித்தது இன்றும் நினைவில் இருக்கத் தான் செய்கின்றது. ஏனெனில் இத்தகைய விடயங்கள் பொதுவாக நம்ப முடியாதவை தான்...அனுபவங்கள் கிட்டும் வரை!!! ஆனால் இன்று அந்நிகழ்வுகளை எல்லாம் நினைவுக்கூரும் பொழுது அவற்றை நிச்சயம் நம்பவோ/மறுபரிசீலனை பண்ணவோ தான் வேண்டி இருக்கின்றது. காரணம் அனுபவங்கள். பலரும் அத்தகைய அனுபவங்களைப் பெற்றுத் தான் இருக்கின்றனர். நீண்ட நாள் தேடிக் கொண்டிருந்த விடைகளை சிலர் கனவுகளில் கண்டு அறிந்து இருக்கின்றனர். இது எப்படி சாத்தியமாகின்றது?

இரண்டாம் நிகழ்வு: இதனை நம்மில் பலரும் கடந்து வந்து இருப்போம். இரவு நேரப் புகை வண்டிப் பயணங்களின் பொழுதோ அல்லது பேருந்துப் பயணங்களின் பொழுதோ, நாம் இறங்க வேண்டிய ஊர் வந்து சேரும் பொழுது அது வரை அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்த நாம் திடுக்கிட்டு எப்படியோ எழுந்து விடுவோம். அது வரை நன்கு உறங்கிக் கொண்டு இருந்திருப்போம். வழியில் வேறு எத்தனை ஊர்கள் வந்தன என்பதனை எல்லாம் நாம் அறிந்து இருக்க மாட்டோம். கனவுகளின் மத்தியில் உலாவிக் கொண்டே இருந்திருப்போம். ஆனால் எப்பொழுது நாம் இறங்க வேண்டிய ஊர் வருகின்றதோ அப்பொழுது சரியாக நமக்கு விழிப்பு வந்து விடுகின்றது. சில நேரங்களில் இவ்வாறு நமக்கு முழிப்பு வராவிடிலும், பல நேரங்களில் பலருக்கும் கிட்டி இருக்கும் ஒரு அனுபவம் தான் இது.

இப்பொழுது இவற்றுக்கு தான் நாம் விடையினைக் காண வேண்டி இருக்கின்றது. நாம் சென்ற பதிவினில் கண்டு இருக்கின்றோம்...உடலானது உறங்கும் பொழுது உடல் உறுப்புக்கள் இயங்கிக் கொண்டு தான் இருக்கின்றன என்று. அவற்றைப் போன்றே தான் ஆன்மாவானதும், என்ன செய்யலாம் என்று எண்ணியவாறே விழித்துக் கொண்டு தான் இருக்கின்றது. சமயங்களின் கூற்றின் படி 'ஐம்புலன்களை அமைச்சராக வைத்து கொண்டு, அவற்றின் கூற்றுகளை அடிப்படையாக கொண்டு அரசாளும் ஒரு அரசனைப் போன்றே தான் ஆன்மாவானது இருக்கின்றது. (சிவஞானபோதம்)' அதாவது ஐம்புலன்களின் மூலமாக பெற்ற அறிவினை வைத்து செயலாற்றும் தன்மையினை ஆன்மாவானது கொண்டிருக்கின்றது. உதாரணத்திற்கு பேய்படம் ஒன்றினை நாம் காணும் பொழுது கண்களின் வழியாக பேயின் உருவத்தினையும் செவியின் வழியாக பேயின் அலறலையும் ஆன்மாவானது அறிந்துக் கொள்ளுகின்றது. அவை பயம் தரும் வண்ணம் இருப்பதனால் ஆன்மாவானது பயப்படுகின்றது.

'பேயானது உண்மையில் என்னைத் துரத்தினால்' என்னவாகும் என்ற சிந்தனையின் விளைவாக, பேயினைப் பற்றியும் தான் இருக்கின்ற இடத்தினைப் பற்றியும் தன்னுடைய மூளையில் பதிந்து இருக்கும் விடயங்களை வைத்து தன்னை அப்பேய் துரத்துவதாக ஆன்மாவானது, உறங்கும் பொழுது ஒரு சிந்தனையை உருவாக்கி கொள்கின்றது. அதன் விளைவாகத் தான் நன்கு பழக்கப்பட்ட இடத்தில் பேய்கள் துரத்துவதனைப் போன்ற கனவுகள் எழுகின்றன.

அதனைப் போன்றே தான் மேலே நாம் கண்ட இரண்டு நிகழ்வுகளும் நிகழ்கின்றன...ஒரு விடயத்தினைக் குறித்து நாம் முழு மனதாக சிந்தித்துக் கொண்டிருக்கின்றோம்...அப்படியே நாம் உடல் அசதியினால் உறங்கிப் போய் விடுகின்றோம். ஆனால் நம்முடைய ஆன்மாவோ விழித்துக் கொண்டே தான் இருக்கின்றது...அப்படியே அந்த விடயத்தினைப் பற்றி தொடர்ந்து சிந்தித்துக் கொண்டே தான் இருக்கின்றது. அதனால் தான் நாம் உறங்கி எழுகின்ற பொழுது சில கேள்விகளுக்கு விடைகள் சட்டென்று புலனாகின்றன...சில புதிய விடயங்களும் புலனாகின்றன. ஏனென்றால் உடலானது அயர்ந்து உறங்கிக் கொண்டிருக்கும் பொழுது ஆன்மாவானது தொடர்ந்து இயங்கிக் கொண்டே தான் இருக்கின்றது.

ஆகையால் தான் பயணத்தின் பொழுது நாம் உறங்கிக் கொண்டிருந்தாலும், 'இந்த ஊரில் நாம் இறங்க வேண்டும்' என்கின்ற சிந்தனையை ஆன்மாவானது கொண்டிருப்பதினால், அந்த ஊரானது வந்து விடுகின்ற பொழுது நாம் நம்மை அறியாமலேயே விழித்து விடுகின்றோம்.

 சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால், நம்முடைய உடலானது உறங்கிக் கொண்டிருக்கும் பொழுது ஆன்மாவானது உறங்காது விழித்துக் கொண்டே தான் இருக்கின்றது. உறங்குவதற்கு முன்னால் நாம் எந்த வேலையையாவது முழு மனதுடன் செய்து வந்துக் கொண்டிருந்தோமேயானால், நாம் உறங்கியதற்குப் பின்னரும் கூட ஆன்மாவானது அந்த வேலையைக் குறித்து சிந்தித்துக் கொண்டே தான் இருக்கின்றது. இதற்கு எடுத்துக்காட்டாய் நாம் பயணம் செய்யும் பொழுது சரியான நேரத்தில் சரியான ஊரில் நாம் விழித்து எழும் நிகழ்வினையும், விடை அறியா கேள்விகளுக்கு உறங்கி எழுந்த உடன் விடை அறிந்து விடும் நிகழ்வினையும் எடுத்துக்காட்டாய் கொள்ளலாம்.

மேலும் நாம் உறங்குவதற்கு முன்னர் எந்தொரு குறிப்பான விடயத்தினைப் பற்றியும் நாம் சிந்தித்துக் கொண்டிருக்கவில்லை என்றால், ஆன்மாவானது, நம்முடைய மூலையினில் பதிவாகி இருந்த மற்ற விடயங்களை எடுத்துக் கொண்டு அதனைப் பற்றி சிந்திக்கத் துவங்குகின்றது. அதன் விளைவாகத் தான் சாதாரண கனவுகள் ஏற்படுகின்றன.

மேலும் ஆன்மீகவாதிகளின் கூற்றின்படி கனவுகளில் இறைவன் ஆன்மாவினை வழிநடத்துவதும் உண்டு. உதாரணத்திற்கு மகாயான பௌத்தத்தின் கூற்றின்படி

'சம்போக காயா நிலையில் புத்தர் ஒவ்வொரு போதிசத்துவரையும் தனது தர்மகாயா நிலையுடன் ஒன்றிணைக்கின்றார். கனவுகள் மூலமாகவோ அல்லது காட்சிகள் மூலமாகவோ சம்போக காயா நிலை புத்தர் ஒவ்வொரு போதிசத்துவரையும் வழிநடத்துகின்றார்.'

இதைப் போன்ற விடயங்கள் அனைத்து சமயங்களிலும் காணப்படுகின்றன. சரி இருக்கட்டும், ஆன்மாவின் சிந்தனைகளே கனவுகள் என்றே நாம் கண்டு இருக்கின்றோம். இப்பொழுது சில சம்பவங்கள் நிகழும் பொழுது, அவை ஏற்கனவே நிகழ்ந்து இருப்பதனைப் போன்ற உணர்வினை நாம் பெற்று இருக்கின்ற நிலையினைத் தான் நாம் காண வேண்டி இருக்கின்றது.

காணலாம்...!!!

பி.கு:
மிகவும் மேலோட்டமாகவே நாம் இங்கே கருத்துக்களை கண்டு வந்து கொண்டிருக்கின்றோம். மேலும் குறிப்பாக அறிந்துக் கொள்வதற்கும் சிந்திப்பதற்குமே நாம் இவற்றைக் காணுகின்றோம்…எனவே மாற்றுக் கருத்துக்களும்…கூறியுள்ள விடயங்களில் எவையேனும் தவறென்று உங்களுக்கு தோணிற்று என்றால் அத்தவறினை சுட்டிக் காட்டுதலும் வரவேற்கப்படுகின்றன.

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு