அவர்களுடைய சில பாடல்களை என்னால் புரிந்துக் கொள்ளவே முடியவில்லை. அவர்கள் பயன்படுத்திய வார்த்தைகளை நான் புரிந்துக் கொண்டாலும், அவர்களது பாடலின் முழுமையான அர்த்தத்தினை என்னால் அறிந்துக் கொள்ள முடியவில்லை. என்னுடைய மூளைக்கு எட்டாத வண்ணமே அவை இருந்தன ஆயினும் எனது இதயத்தினுள், நான் அறியாமலேயே அவை ஆழமாக ஊடுருவிக் கொண்டிருந்தன.

அங்கிருந்த அதே மகிழ்ச்சியும் மகிமையும் நான் பூமியிலிருந்த பொழுதே என்னுடன் வேதனையான ஒரு குரலில் பேசி இருக்கின்றன. சில நேரங்களில் அக்குரலானது தாங்கவொண்ணா துயரடைந்த நிலையிலும் இருந்திருக்கின்றது. என்னுடைய இதயத்தின் கனவுகளிலும், தீவிரமான ஒரு சிந்தனையில் மூழ்கி என்னையே நான் மறந்திருக்கும் நிலையினிலும் அந்த மகிழ்ச்சியினையும் மகிமையினையும் குறித்து நான் அறிந்திருந்தேன். அவற்றின் விளைவாக சில நேரங்களில் சூரியன் மறைவதை காணும் பொழுது கண்ணீர் சிந்துவதை நிறுத்த முடியாமலும் நான் இருந்திருக்கின்றேன். நமது பூமியிலிருந்த மக்களின் மேல் நான் கொண்டிருந்த வெறுப்பானது எப்பொழுதும் அதனுள்ளே ஒரு வகையான வேதனையினை கொண்டே தான் இருந்து இருக்கின்றது….ஏன் என்னால் அவர்களை நேசிக்காமல் அவர்களை வெறுக்க முடியவில்லை? அவர்களை மன்னிக்காது இருக்க ஏன் என்னால் முடியவில்லை? அவர்கள் மேல் நான் கொண்டிருக்கும் அன்பினில் ஏன் ஒரு வகையான வேதனை இருந்துக் கொண்டே இருக்கின்றது? ஏன் அவர்களை வெறுக்காமல் என்னால் அவர்களை நேசிக்க முடியவில்லை?

இவ்வாறு அங்கிருந்த அனைத்தைக் குறித்தும் வெகுகாலத்திற்கு முன்னரே நான் எண்ணி இருக்கின்றேன் என்று நான் அவர்களிடம் பல முறை கூறி இருக்கின்றேன். நான் கூறிய அனைத்தையும் அவர்கள் மிகவும் கவனமாக கேட்டார்கள் ஆயினும் நான் எதனைப் பற்றிக் கூறுகின்றேன் என்பதனை அவர்களால் கற்பனைக் கூட செய்ய முடியவில்லை. இருந்தாலும் அவர்களிடம் என் மனதில் இருந்ததைக் கூறியதற்காக நான் வருத்தப்படவில்லை. நான் நமது பூமியில் கைவிட்டு வந்தவர்களுக்காக பட்டுக் கொண்டிருந்த வேதனையின் ஆழத்தை அவர்கள் உணர்ந்துக் கொண்டார்கள் என்பது எனக்குத் தெரியும். ஆம்…எப்பொழுதும் அன்பினால் நிறைந்திருக்கும் அவர்களது கண்களினால் அவர்கள் என்னைக் கண்ட பொழுதும், அவர்கள் என்னுடன் இருந்த பொழுது என்னுடைய இதயமும் அவர்களுடையதைப் போன்றே பரிசுத்தமானதாகவும் உண்மையானதாகவும் மாறியதை உணர்ந்தப் பொழுதும், அவர்களை முழுமையாகப் புரிந்துக் கொள்ள என்னால் முடியாதிருந்ததைக் கண்டு நான் வருத்தமடையவில்லை. மாறாக வாழ்வினை முழுமையாக நான் அந்நொடியில் மெய்மறந்த வண்ணம் உணர்ந்தேன். அவர்களை நான் அமைதியாக வணங்கிக் கொண்டிருந்தேன்.

ஆ…இப்பொழுது அனைவரும் என்னைக் கண்டு சிரிக்கின்றனர். கனவினில் கூட ஒருவனால் நான் கூறுகின்ற விடயங்களைப் போன்று பார்க்க முடியாது என்றே அவர்கள் கூறுகின்றனர். ஒருவித மனக்குழப்பமான நேரத்தில் என்னுடைய இதயமானது ஒரு சில உணர்வுகளைத் தோற்றுவித்து இருக்கும் என்றும் அதன் தொடர்பாக மற்ற விடயங்கள் அனைத்தையும் விழித்து எழுந்தவுடன் நானாக கற்பனையில் உருவாக்கிக் கொண்டு இருப்பேன் என்றுமே அவர்கள் உறுதியாக கூறுகின்றனர். ஒருவேளை அவர்கள் கூறுவதனைப் போன்று தான் நடந்தும் இருக்கும் என்று நான் அவர்களிடம் கூறிய பொழுது, ஆ…அவர்கள் எப்படி சிரித்தார்கள்.

ஆம்…அந்த கனவினைப் பற்றிய உணர்வினால் தான் நிறைந்திருந்தேன். அந்த கனவு மட்டுமே தான் என்னுடைய காயம்பட்ட இதயத்தில் எஞ்சி இருந்தது . அந்த கனவினில் நான் கண்ட அந்த உண்மையான வடிவங்கள் மற்றும் அனைத்தும் மிகவும் அழகாக, மிகவும் உண்மையாக, முழுமை அடைந்து இருந்தவைகளாக இருந்தன. ஆகவே தான் என்னால் நான் விழிப்படைந்ததற்குப் பின்னால் வெறும் வார்த்தைகளில் அவற்றை சரியாக விவரிக்க முடியவில்லை. இருந்தும் அவற்றைப் பற்றி விரைவாக எப்படியாவது மற்றவர்களுக்கு கூற வேண்டும் என்ற ஆவலினால், எனது மனதில் பதிந்திருந்த அவற்றைப் பற்றி, என்னை அறியாமலேயே சில விடயங்களை நானே உருவாக்கி சொல்லி இருக்கலாம். வார்த்தைகளால் என்னால் விவரிக்க முடியாத அவற்றைப் பற்றி அப்படி கூறி இருக்கும் பொழுது உண்மையான அந்த விடயங்களை சில நேரம் திரித்தும் இருக்கலாம்.

இருந்தும் அவை அனைத்தும் உண்மையானவை அல்ல என்று எப்படி என்னால் நம்ப முடியும்? நான் கூறுவதனை விட ஆயிரம் மடங்கு அவை சிறந்தவைகளாகவும், ஒளி நிறைந்தவைகளாகவும், மகிழ்ச்சி நிறைந்தவைகளாகவும் இருந்தன என்பதனை எப்படி என்னால் மறுக்க முடியும்? அது ஒரு கனவாகவே இருந்து விட்டு போகட்டும். இருந்தும் அவை முழுமையும் நிச்சயமாக ஒரு கனவாக இருக்க முடியாது. நான் உங்களுக்கு இப்பொழுது ஒரு இரகசியத்தினைச் சொல்லுகின்றேன்: ஒரு வேளை அது ஒரு கனவாகவே இருந்திருக்காது. ஏனென்றால் என்னால் கனவினால் கூட சிந்தித்திருக்க முடியாத வண்ணம் ஒரு பயங்கர செயலானது உண்மையில் அங்கே நடந்தது. அந்த கனவானது என்னுடைய இதயத்தினால் உருவாக்கப்பட்ட ஒன்றாகவே இருந்து இருக்கட்டும்…பிரச்சனை இல்லை…ஆனால் அதன் பின்னர் நிகழ்ந்த அந்த பயங்கரமான உண்மையினை எனது இதயத்தினால் மட்டுமேவா உருவாக்கி இருக்க முடியும்? அந்த விடயத்தினை எப்படி நானே என்னுடைய இதயத்தினில் சிந்தித்திருக்கவோ அல்லது உருவாக்கி இருக்கவோ முடியும்?

ஆ…நீங்களே முடிவு செய்துக் கொள்ளுங்கள்…நான் இதுவரை நான் செய்ததை உங்களிடம் இருந்து மறைத்து இருந்து இருக்கின்றேன். ஆனால் இப்பொழுது இந்த உண்மையினையும் நான் உங்களிடம் கூறியே முடிக்கின்றேன். அந்த உண்மையானது என்னவென்றால்….நான் அந்த மனிதர்களை கெடுத்து விட்டேன்!!!

தொடரும்…!!!

முந்தைய பகுதிகள்: 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |

பி.கு:
‘The Dreams of a Ridiculous man’ என்ற பியோதர் தஸ்தோவஸ்கியின் நூலின் மொழிபெயர்ப்பு முயற்சியே இது ஆகும்.

0 கருத்துகள்:

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு