இங்கே பாருங்கள்…அது ஒரு கனவாகவே கூட இருந்து விட்டு போகட்டும். ஆனால் பாவமேதும் அறிந்திராத அந்த மக்கள் என் மேல் காட்டிய அந்த அன்பு உணர்ச்சியானது என்னுள் அதன் பிறகு எப்பொழுதும் இருந்துக் கொண்டு தான் இருக்கின்றது. இப்பொழுதும் கூட அவர்கள் அங்கிருந்து என் மீது அன்பினைப் பொழிந்துக் கொண்டிருக்கின்றனர் என்றே நான் உணர்கின்றேன். அவர்களை என் கண்களால் நானே கண்டேன். நான் அவர்களை அறிந்து இருந்தேன். அவர்கள் இருக்கின்றார்கள் என்பதனை நான் தெளிவாக நம்பவும் செய்தேன். நான் அவர்களை நேசித்தேன், பின்பு அவர்களுக்காக நான் வருத்தப்படவும் செய்தேன். இருந்தும் அவர்களை என்னால் முழுமையாகப் புரிந்துக் கொள்ள முடியாது என்பதனை நான் அப்பொழுதே உடனடியாகப் புரிந்துக் கொண்டேன்.

நான் ரஷ்ய நாட்டினைச் சார்ந்த ஒரு முற்போக்கு சிந்தனையாளன்…அப்படிப்பட்ட என்னுடைய சிந்தனையினால், அவர்கள் அவ்வளவு அறிந்திருந்தும் அவர்களிடம் நம்மிடம் இருக்கின்ற அறிவியலானது இல்லை என்கின்ற ஒரு விடயத்தினை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. ஆனால் வெகுவிரைவில் நான் ஒன்றினைப் புரிந்துக் கொண்டேன். பூமியில் நாம் கொண்டிருக்கும் நோக்கங்களுக்கும் விருப்பங்களுக்கும் முற்றிலும் மாறுப்பட்டதாக இருந்தன அவர்களது நோக்கங்களும் விருப்பங்களும். அவர்கள் எதற்காகவும் ஆசைப்படவில்லை. எப்பொழுதும் அமைதியான நிலையிலேயே அவர்கள் வாழ்ந்தும் வந்தனர். நம்மைப் போல் வாழ்வினைக் குறித்த அறிவினை அறிந்துக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை. ஏனென்றால் அவர்களது வாழ்வானது முழுமையடைந்து இருந்தது. அவர்கள் அனைத்தையும் ஏற்கனவே அடைந்து இருந்தனர். ஆயினும் அவர்களது அறிவானது நம்முடைய அறிவியலைக் காட்டிலும் ஆழமானதாகவும் பரந்ததாகவும் இருந்தது.

நம்முடைய அறிவியலோ, எப்படி வாழ வேண்டும் என்று மற்றவர்களுக்கு எடுத்துக் கூறுவதற்காக வாழ்வினைக் குறித்து அறிந்துக் கொண்டு அதனை விளக்க முற்படுகின்றது. ஆனால் அவர்கள் அந்த அறிவியல் இல்லாமலேயே எப்படி வாழ வேண்டும் என்று அறிந்திருந்தனர். அது எனக்குப் புரிந்தது. ஆனால் அவர்களது அறிவினை என்னால் புரிந்துக் கொள்ள முடியவில்லை. அவர்கள் அங்கிருந்த மரங்களை எனக்கு சுட்டிக் காட்டினார்கள். அவர்கள் அந்த மரங்களை மிகுந்த அன்புடன், ஏதோ அம்மரங்களும் அவர்களது இனத்தினைச் சார்ந்தவை தான் என்பதனைப் போன்றே அவர்கள் கண்டார்கள். அந்த அன்பின் அளவினை என்னால் புரிந்துக் கொள்ள முடியவில்லை. ஒருவேளை அவர்கள் அம்மரங்களுடன் பேசிக் கொண்டும் இருக்க கூடும் என்றே நான் கூறலாம். என்னுடைய அந்த கூற்றானது நிச்சயம் தவறாக இருக்காது. ஆம்…அவர்கள் அம்மரங்களின் மொழியினை அறிந்துக் கொண்டார்கள்…அம்மரங்களும் அவர்களைப் புரிந்துக் கொண்டன என்றே நான் உறுதியாக நம்புகின்றேன்.

இயற்கை முழுமையையும் அவர்கள் ஒன்றாகவே கண்டார்கள். அவர்களுடன் அமைதியாக வாழ்ந்து வந்த மிருகங்கள் அவர்களைத் தாக்கவில்லை. மாறாக அவர்களது அன்பினால் வெல்லப்பட்டு அவைகளும் அவர்களை நேசித்தன. அவர்கள் நட்சத்திரங்களை என்னிடம் காண்பித்து ஏதோ ஒன்றினைப் பற்றிப் பேசினார்கள். அவர்கள் பேசியது எனக்கு புரியவில்லை, ஆனால் அவர்களுக்கும் அந்த விண்வெளி நட்சத்திரங்களுக்கும் ஏதோ ஒரு தொடர்பு, வெறும் சிந்தனையினால் மட்டுமல்ல அதையும் தாண்டி வாழ்வோடு பின்னிப் பிணைத்திருக்கும் ஒரு தொடர்பு இருக்கின்றது என்பதனை நான் தெளிவாக நம்பினேன்.

அவர்கள் எதனையும் எனக்குப் புரிய வைக்க வேண்டும் என்பதற்காக எவ்விதமான முயற்சியும் செய்யவில்லை. எதனையும் நான் புரிந்துக் கொள்ளாமல் இருந்தாலும் அவர்கள் என்னை நேசிக்கத் தான் செய்தனர். ஆனால் அவர்களாலும் என்னைப் புரிந்துக் கொள்ள முடியாது என்பதனை நான் அறிந்து தான் இருந்தேன். ஆகவே நம்முடைய பூமியினைக் குறித்து நான் அவர்களிடம் பேசாமலேயே இருந்தேன்.சில நேரங்களில் வியப்புடன் என்னை நானே கேட்டுக் கொள்வேன், எப்படி இவர்களால் இப்படி இருக்க முடிகின்றது? என்னைப் போன்றிருக்கும் ஒரு மனிதனை கேவலப்படுத்தாமலும், என்னுள் எவ்விதமான பொறாமையையும் பேராசையையும் தூண்டாமலும் இவர்களால் எப்படி இப்படி இருக்க முடிகின்றது?

அவர்கள் குழந்தைகளைப் போன்று துறுதுறுப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தனர். அழகான காடுகளிலும் தோட்டங்களிலும் அவர்கள் உலாவினார்கள். அழகான பாடல்களை அவர்கள் பாடினார்கள். மரங்களில் இருந்து கிடைத்த பழங்கள், காடுகளில் இருந்து சேகரித்த தேன், அவர்களை நேசித்த விலங்குகளிடம் இருந்து கிடைத்த பால் என்ற எளிமையான உணவினையே அவர்கள் அருந்தினார்கள். அவர்களது உணவிற்காகவும் உடைகளுக்காகவும் அவர்கள் சிறிதளவே உழைத்தார்கள்.

அவர்களுள் அன்பும் இருந்தது…குழந்தைகளும் பிறந்தன. இருந்தும் ஒருமுறை கூட நான் நம்முடைய பூமியில் கிட்டத்தட்ட ஒவ்வொரு மனிதனையும் ஆட்கொண்டிடும் அந்த பயங்கரமான உடற் சார்ந்த சிந்தனைகளை அவர்களிடம் கண்டதில்லை. அந்தச் சிந்தனைகளே மனிதகுலத்தின் அனைத்து விதமான பாவங்களுக்கும் கிட்டத்தட்ட மூல காரணமாக இருக்கின்றன. அவர்கள் குழந்தைகளைக் கண்டு களிகூர்ந்தனர். அவர்களது சொர்கத்தினை பங்கிட்டு கொள்ள வந்திருக்கும் புது நபர்களாக அவர்கள் அக்குழந்தைகளைக் கண்டனர். அவர்களுள் வாக்குவாதங்களோ அல்லது பொறாமையோ துளியும் கிடையாது. அவைகள் என்னவென்றே அவர்களுக்குத் தெரியாது. அவற்றின் அர்த்தங்களை அவர்கள் புரிந்துக் கொள்ளவே இல்லை. அவர்களது குழந்தைகள் அனைவருடைய குழந்தைகளாக இருந்தார்கள். ஏனென்றால் அவர்கள் அனைவரும் ஒரு மிகப் பெரிய குடும்பமாகவே இருந்தார்கள். மரணமானது அவர்களிடத்தில் இருந்தாலும், நோய் என்ற ஒன்று அவர்களிடம் கிடையாது. அவர்களது முதிய மக்கள், மற்றவர்கள் அனைவரும் அவர்களுக்கு விடைக்கொடுக்க சூழ்ந்திருக்கும் பொழுது, அவர்கள் அனைவரையும் வாழ்த்திக் கொண்டும் சிரித்துக் கொண்டும் ஏதோ உறங்கப் போவதனைப் போன்றே காலமானார்கள்.

அவ்வாறு அவர்கள் மரணமடைந்ததைக் கண்டு எவரும் துயரங் கொண்டோ அல்லது கண்ணீர் சிந்தியோ நான் கண்டதில்லை. மாறாக அந்த நொடியில் அன்பானது அதனது உச்ச கட்ட பேரானந்த நிலையினில் அங்கே நிலவிக் கொண்டிருந்தது. அந்த அன்பானது முழுமையானதும், அமைதியானதும் ஒரு தியான நிலையினைப் போன்றதுமாக இருந்தது. அம்மக்கள் ஒருவேளை இறந்துப் போனவர்களுடன் தொடர்ந்து தொடர்பினைக் கொண்டே தான் இருந்தனர் என்றே ஒருவர் எண்ணலாம். அவர்களுடன் இருந்த அந்த பந்தமானது மரணத்தினால் எந்தொரு பாதிப்பும் அடைந்திடவில்லை என்றும் எண்ணலாம். நித்தியமான வாழ்வினைக் குறித்து நான் அவர்களிடம் வினவிய பொழுது அவர்களால் எனது கேள்வியினைப் புரிந்துக் கொள்ள முடியவில்லை. மரணத்திற்கு பின்னர் இருக்கும் வாழ்வினைப் பற்றி அவர்கள் அவர்களது ஆழ்மனதில் தெளிவாக உணர்ந்து அறிந்திருந்தமையினால், அது ஒரு கேள்வியாகவே அவர்களுக்குத் தோன்றவில்லை.

அவர்கள் எந்தொரு கோவிலையும் அவர்களுக்கென்று கொண்டிருக்கவில்லை. இருந்தும் வாழ்விற்கு அத்தியாவசியமான வண்ணம் அவர்கள் ஒட்டுமொத்த அண்டத்தோடும் ஒன்றிணைந்து இருந்தனர். அவர்கள் அவர்களுக்கென்று எந்தொரு தனிப்பட்ட நம்பிக்கையினையும் கொண்டிருக்கவில்லை. ஆனால், எப்பொழுது இயற்கையின் எல்லைக்குட்பட்ட அளவில் அவர்களது மகிழ்ச்சிகரமான இந்த வாழ்வு முழுமை அடைகின்றதோ, அப்பொழுது அவர்கள் அனைவரும் அந்த முழுமையான அண்டத்தோடு இன்னும் சிறப்பான நிலையில் ஒன்றுப்படும் தருணம் ஒன்று வரும் என்பதனை தெளிவாக அறிந்திருந்தனர். அந்த தருணத்திற்காக அவர்கள் மகிழ்ச்சியுடன் காத்திருந்தனர். ஆனால் அதற்காக அவர்கள் அவசரப்படவும் இல்லை, அதனை எண்ணித் துயரப்படவும் இல்லை.

மாலை நேரங்களில், உறங்கச் செல்லுவதற்கு முன்பாக அனைவரும் ஒற்றுமையாக ஒன்றுக் கூடி பாடல்கள் பாடுவதை அவர்கள் விரும்பினர். கடந்துச் சென்ற அந்த தினமானது அவர்களுக்குத் தந்துச் சென்றிருந்த அனைத்தைப் பற்றியும் அவர்கள் அந்த பாடல்களில் கூறினார்கள். அன்றைய தினத்தினை அவர்கள் போற்றி அதற்கு பிரியாவிடையும் அளித்தனர். இயற்கையை, பூமியினை, கடல் மற்றும் அந்த கானகங்களை அவர்கள் அப்பாடல்களில் புகழ்ந்தனர். மேலும் குழந்தைகளைப் போன்று அவர்களுள் ஒருவரைப் பற்றி மற்றவர் பாராட்டிக் கொண்டும் புகழ்ந்துக் கொண்டும் இருப்பதனைப் போன்று பாடல்களை இயற்றினர். அவர்களது இதயத்தில் இருந்து எழுந்த அந்த பாடல்கள் மிகவும் எளிமையாக இருந்தன. இதயத்தினை ஊடுருவிச் செல்லும் வல்லமைப் பெற்றும் அவை இருந்தன. பாடல்கள் மட்டுமல்ல, மாறாக அவர்களுடைய ஒட்டு மொத்த வாழ்வுமே மற்றவர்களை நன்றாக கவனித்துக் கொள்ளுவதில் அடங்கி இருந்ததைப் போன்றே தான் இருந்தது. தன்னைப் போலவே மற்றவர்களையும் கருதும் ஒரு உயர்ந்த அன்பானது அவர்களுள் நிறைந்திருந்தது.

தொடரும்…!!!

முந்தைய பகுதிகள்: 1 | 2 | 3 | 4 | 5 | 6 |

பி.கு:
‘The Dreams of a Ridiculous man’ என்ற பியோதர் தஸ்தோவஸ்கியின் நூலின் மொழிபெயர்ப்பு முயற்சியே இது ஆகும்.

0 கருத்துகள்:

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு