அம்மழையானது நின்ற பிறகு பயங்கர ஈரப்பதமிக்க ஒரு சூழல் அங்கே சூழ்ந்துக் கொண்டது. மழை பெய்துக் கொண்டிருந்த பொழுதினை விட இப்பொழுது மிகவும் அதிகமாகக் குளிர்ந்து. அங்கிருந்த அனைத்து பொருட்களில் இருந்தும் ஒரு வகையான நீராவி எழும்பிக் கொண்டிருந்தது. அப்பொருட்கள் அனைத்தின் மீதும் தங்களது ஒளியினைப் பாய்ச்சியவாறே எரிந்துக் கொண்டிருந்தன அங்கிருந்த வளிம விளக்குகள். அவ்வாறு அவ்விளக்குகள் ஒளியினைப் பாய்ச்சிக் கொண்டிருந்தது என்னுடைய இதயத்தினை சோகமாக்கியது. அந்த விளக்குகள் அனைத்தும் அணைந்து விட்டால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்குமே என்றே நான் எண்ணிக் கொண்டேன்.

அவ்வாறு நான் தெருவினில் நின்று கொண்டு அவ்விளக்குகளைப் பற்றி எண்ணிக் கொண்டிருந்த பொழுது, சற்று நிமிர்ந்து வானத்தினைப் பார்த்தேன். வானத்தினை பயங்கர இருளானது சூழ்ந்து இருந்தது. இருந்தும், அதனில் வீற்றிருந்த உடைந்த மேகங்களையும் அம்மேகங்களின் இடைவெளியில் வீற்றிருந்த முடிவில்லாத கரும் வெளிகளையும் ஒருவரால் நிச்சயம் அப்பொழுது கண்டுக் கொள்ள முடியும் தான். அப்படிப்பட்ட கரும் வெளி ஒன்றினில் திடீரென்று ஒரு நட்சத்திரத்தினை நான் கவனித்தேன். அதனை மிகவும் உன்னிப்பாக நான் உற்றுப் பார்க்கத் தொடங்கினேன். ஏன் என்றால் அந்த நட்சத்திரமானது எனக்கு ஒரு சிந்தனையினைத் தந்து இருந்தது. ஆம்..அன்றிரவு என்னை நானே கொலை செய்துக் கொள்ள நான் முடிவெடுத்து விட்டிருந்தேன்.

அம்முடிவினை நான் இரண்டு மாதங்களுக்கு முன்னரே தீர்க்கமாக எடுத்து இருந்தேன். அதன் விளைவாக, நான் ஏழையாக இருந்த போதிலும், நல்ல துப்பாக்கி ஒன்றினை வாங்கி அதனை குண்டுகளால் நிரப்பியும் வைத்து இருந்தேன். ஆனால் அச்சம்பவம் நிகழ்ந்து இரண்டு மாதங்கள் ஆகியும் அத்துப்பாக்கியானது என்னுடைய மேசையின் உள்ளேயே இருந்துக் கொண்டிருக்கின்றது. ஆனால் என்னை நானே கொலை செய்துக் கொள்வது என்பது அப்பொழுது எனக்கு எந்தொரு பெரிய மாற்றத்தினையும் ஏற்படுத்தப்போவதில்லை என்றே எனக்கு அப்பொழுது தோன்றியதனால் தக்கதொரு தருணத்திற்காக நான் காத்திருக்கத் துவங்கினேன். ஏன் அவ்வாறு எனக்கு தோன்றியது? எனக்குத் தெரியாது. ஆனால் இப்பொழுது இந்த நட்சத்திரனமானது எனக்கு அந்த சிந்தனையினைத் தந்து இருக்கின்றது. அச்செயலினை பிழையின்றி நிறைவேற்ற வேண்டியது இன்றிரவே என்றே நான் உறுதியாக முடிவெடுத்துக் கொண்டேன். ஏன் அந்த நட்சத்திரம் எனக்கு அந்த சிந்தனையினைத் தந்திருக்க வேண்டும்? அதுவும் எனக்குத் தெரியாது.

அவ்வாறே நான் வானத்தினைப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தேன். அப்பொழுது திடீரென்று அச்சிறுமியானவள் என்னுடைய முழங்கையினைப் பற்றிக் கொண்டு என்னை இழுக்க முயன்றாள். அத்தெருவானது ஆள் நடமாட்டமின்றி வெறிச்சோடிப் போய் இருந்தது. சற்று தூரத்தில் வண்டிக்காரன் ஒருவன் அவனது வண்டியினில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தான். அச்சிறுமிக்கு எட்டு வயது இருக்கலாம். சின்ன ஆடையினையும் கைக்குட்டையும் மட்டுமே அவள் கொண்டிருந்தாள். அத்துணிகளும் நனைந்து இருந்தன. ஆனால் அவைகளை விட கிழிந்தும் நனைந்தும் இருந்த அவளது காலணிகளையே என்னால் மிகவும் நன்றாக நினைவுக்கூர முடிகின்றது. இப்பொழுதும் கூட அவை என் நினைவில் இருக்கின்றன. அச்சிறுமி திடீரென்று எனது முழங்கையினைப் பற்றிக் கொண்டு என்னை இழுக்க ஆரம்பித்தாள். அவள் அழுகவில்லை. அவள் எதனைக் கண்டோ பயந்திருந்தாள். அவள் மிகுந்த குளிரினால் நடுங்கிக் கொண்டிருந்ததால் அவளால் தெளிவாக வார்த்தைகளை உச்சரிக்க முடியவில்லை. இருந்தும் அவள் ‘அம்மா…!அம்மா…!’ என்றே நடுங்கிக் கொண்டு என்னை நோக்கி பதட்டத்துடன் அழைக்க ஆரம்பித்தாள். நான் அவளை நோக்கி எனது முகத்தினைத் திருப்பினேன். ஆனால் அவளிடம் ஒரு வார்த்தையினையும் கூறாமல் எனது வழியிலே மீண்டும் நடக்கத் துவங்கினேன். ஆனால் அவள் விடாமல் என்னைப் பின்தொடர்ந்து ஓடி வந்து என்னை அழைக்க முயன்றுக் கொண்டிருந்தாள்.

மிகவும் பயந்து போய் இருக்கின்ற குழந்தைகளின் குரலில் வெளிப்படுகின்ற விரக்தியானது அவளது குரலில் ஒலித்துக் கொண்டிருந்தது. அவ்வொலியினை நான் நன்கறிவேன். அவள் கூற வந்த அனைத்தையும் முழுமையாக கூற அவளால் இயலாவிட்டாலும், அவள் கூற வந்ததை நான் அறிந்துக் கொண்டேன். ஒன்று அவளது அன்னையார் எங்கேயோ மரணித்துக் கொண்டிருக்க வேண்டும், அல்லது அவர்களுக்கு ஏதோ ஒன்று அங்கே நேர்ந்து இருக்க வேண்டும். எனவே இவள் அவளது அன்னைக்கு உதவி செய்வதற்கு யாரையாவது அழைத்துக் கொண்டு செல்ல இங்கே வந்திருக்கின்றாள்.

ஆனால் நான் அவளுடன் செல்லவில்லை. மாறாக அவளை விரட்டி விட வேண்டும் என்ற எண்ணமும் என்னுள் திடீரென்று தோன்றியது. எனவே முதலில் நான் அவளிடம் ஒரு காவல்காரரை சென்று அனுகுமாறே கூறினேன். ஆனால் அவள் அவளது கைகளை ஒன்று கூப்பி என்னை வேண்டியவாறே என்னை விடாது பின்தொடர்ந்து, மூச்சிரைத்தவாறும் தேம்பியவாறும் ஓடி வந்து கொண்டிருந்தாள். அக்கணம் நான் எனது கால்களை தரையில் கோபமாக மிதித்தவாறு அவளை நோக்கி கத்த ஆரம்பித்தேன். இருந்தும் அவள் ‘ஐயா…ஐயா…!!!’ என்று மட்டுமே கூறிக் கொண்டிருந்தாள். பின்னர் திடீரென்று அவள் என்னை விட்டுவிட்டு அச்சாலையின் மறுபுறம் நோக்கி ஓட ஆரம்பித்தாள். அங்கே மற்றுமொரு மனிதன் தோன்றி இருந்தான். எனவே அவள் என்னை விட்டுவிட்டு அவனிடம் உதவி கோருவதற்காக அவனிடம் விரைந்தாள்.

தொடரும்…!!!

முந்தைய பகுதிகள்: 1


பி.கு:
‘The Dreams of a Ridiculous man’ என்ற பியோதர் தஸ்தோவஸ்கியின் நூலின் மொழிபெயர்ப்பு முயற்சியே இது ஆகும்.

0 கருத்துகள்:

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு