கடந்த பதிவுகளில் திருவள்ளுவர் கூறும் இறைவன் கிருத்துவம் மற்றும் சைவம் ஆகிய சமயங்கள் கூறுகின்ற இறைவனையே என்றும் அவர் பௌத்த சமயத்தையோ அல்லது சமண சமயத்தையோ சேர்ந்தவர் அல்லர் என்றுமே நாம் கண்டு இருக்கின்றோம்.

அவ்வாறு கண்டு வருகையில் இறைவனின் அருள் இன்றி இறைவனை அறிதல் அறிதல் இயலாது என்றும் அவன் அருள் இருந்தால் தான் ஆன்மீக அறிவினைப் பெற முடியும் என்றே சமயங்கள் கூறுகின்றன என்றே கண்டோம். இப்பொழுது இதனைப் பற்றித் தான் விரிவாகக் காண வேண்டி இருக்கின்றது.

"அவன் அருளாலே அவன் தாள் வணங்கி" என்று மாணிக்கவாசகர் கூறுகின்றார். இதனையே சைவ சித்தாந்த சாத்திரத்தின் மணிமுடியான சிவஞானபோதமும் தெளிவாக விளக்குகின்றது.

கிருத்துவும் என் மூலமாக அன்றி பிதாவினை வேறு ஒருவனும் அறியான் என்றே கூறி இருக்கின்றார்.

"அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்." யோவான் 14:6

இவற்றின் மூலமாக இறைவன் உணர்த்தாமல் இறைவனைப் பற்றி அறிந்துக் கொள்ளும் ஆன்மீகச் சிந்தனைகளை மனிதனால் அறிந்துக் கொள்ள முடியாது என்பதனை நாம் அறிந்துக் கொள்ள முடிகின்றது.

அதனால் தான் அதுவரை இறை நம்பிக்கை கொண்டு இருந்த மக்கள் அனைவரும் அவர்களது குலத்திற்கான வழிபாட்டுக் கடவுளரைக் கொண்டு அவற்றிக்கு பலிகளை இட்டுக் கொண்டு வந்தனர்...அவர்களுக்கு மக்கள் அனைவருக்கும் பொதுவாக இருக்கும் இறைவனைப் பற்றிய புரிதலோ அல்லது எண்ணமோ இருக்கவில்லை.

அதனால் தான் ஞானம் மிகுந்த இம்மண்ணில் எழுந்த சமயங்களான பௌத்தமும் சமணமும் இறைவனைப் பற்றி அறியாத சமயங்களாகவும் பலியினை எதிர்பதாகவும் இருக்கின்றன. நிற்க

இறைவன் உணர்த்தாமல் இறைவனை அறிய முடியாது சரி...அப்படி என்றால் இறைவன் எப்படி உணர்த்தினான் எவ்வாறு உணர்த்தினான் என்றக் கேள்வி இங்கே எழுக்கூடும்...இதற்கு விடையாய்

"சுத்த சிவன் குருவாய் வந்து தூய்மை செய்து" - திருமந்திரம்

"அகலமாய் யாரும் அறிவரி தப்பொருள்
சகலமாய் வந்ததென் றுந்தீபற
தானாகத் தந்ததென் றுந்தீபற" – திருஉந்தியார் 1

என்று இறைவன் மனிதனாக உலகிற்கு வந்து மனிதர்களுக்கு குருவாகி அவர்களை ஆட்கொண்டார் என்றே சைவம் கூறுகின்றது. இங்கே நாம் காண வேண்டியக் கேள்வி,

இறைவன் மனிதனாக வந்தான் சரி...ஆனால் எப்பொழுது வந்தான்? எங்கு வந்தான்? எப்படி வந்தான்? என்பதுதான்.

இறைவன் மனிதனாக வந்து மக்களைக் ஆட்கொண்டான் என்றக் கருத்து சைவ சமயத்தின் அடிப்படையாக இருந்தாலும் இறைவன் எப்பொழுது மனிதனாக வந்தான் என்றக் கேள்விக்கு விடைகள் கிடைப்பதில்லை. இந்நிலையில் இறைவன் மனிதனாக வந்தான் என்ற கருத்து வேறு எங்காவது இருக்கின்றதா என்றே நாம் கண்டோம் என்றால் அதே கருத்து கிருத்துவத்திலும் காணப்படுகின்றது.

அங்கே இறைவன் மனிதனாக எங்கே வந்தான், எப்பொழுது வந்தான், எப்படி வந்தான் என்ற கேள்விகளுக்கு விடைகள் கிடைக்கின்றன. இதைத் தான் நாம் இப்பொழுது சற்று உன்னிப்பாகக் காண வேண்டி இருக்கின்றது.

இறைவன் அருளில்லாமல் மனிதனால் இறைவனை அறியவோ உணரவோ முடியாது என்றே சைவமும் கிருத்துவமும் கூறுகின்றன (காரணம் மனிதன் மலத்தில்/பாவத்தில் உள்ளான்). அவனை மீட்டு எடுக்க இறைவன் மனிதனாக வருகின்றார். இக்கருத்தை, இக்காலத்தில் இந்த இடத்தில் இறைவன் மனிதனாக வந்தான் என்றே கிருத்துவம் கூறுகின்றது.

ஆச்சர்யவசமாக அக்காலத்திற்கு முன்பு வரை உலக மக்கள் அனைவருக்கும் பொதுவான இறைவன் என்ற ஆன்மீகச் சிந்தனையோ அல்லது மனிதன் மலத்தில் இருக்கின்றான் என்றச் சிந்தனையோ வேறு எங்கும் காணப்படவே இல்லை...(கி.மு (கிருத்து காலத்திற்கு முன்னர்) வில் சிவன்/பிள்ளையார்/சக்தி/ஈசன்/பெருமாள்/பிரமன் போன்ற பெயர்களோ அல்லது சைவ வைணவ சமயத் தத்துவங்களோ காணப்படாதது இங்கே குறிப்பிடத்தக்கது. முருகன் என்பவன் பலியினை ஏற்றுக் கொள்ளும் குறிஞ்சி நிலக் கடவுளாகவே அறியப்பெற்றான் என்பதும் குறிப்பிடத்தக்கது). நிற்க

எனவே இறைவன் மனிதனாக வந்த வரலாற்று நிகழ்வை கிருத்துவம் கூறிக் கொண்டு இருக்கும் பொழுது, இறைவன் மனிதனாக வந்து மனிதரை மீட்ட ஆன்மீகக் கருத்தினை ஆன்மீக ரீதியாக தெள்ளத் தெளிவாக தமிழரின் ஞானத்துடன் விளக்கிக் கொண்டு இருப்பது சைவ வைணவ சமயங்களாகும் என்றே நாம் அறியப் பெறுகின்றோம்.

இவை இரண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் தான் திருவள்ளுவர் நிற்கின்றார்...இறைவன் மனிதனாக உலகிற்கு வந்த வரலாற்று செய்திக்கும், அந்த வரலாற்று நிகழ்வு தமிழரின் ஞானத்துடன் ஆன்மீக ஞானமாக வளர்ந்த நிலைக்கும் இடைப்பட்ட காலத்தில் வள்ளுவர் நிற்கின்றார்.

இறைவன் மனிதனாக வந்து பலியான செய்தியை தமிழகத்திற்கு கொண்டு வந்தது ஈசனின் சீடரான தூய தோமா...இவர் கிருத்துவ சமயத்தைச் சார்ந்தவர் அல்லர்...இவரது காலத்தில் கிருத்துவ சமயம் தோற்றம் பெற்று இருக்கவே இல்லை. இவர் இறைத்தூதராக இறைவனின் கருத்தினைக் கொண்டு வந்தவர். எவ்வாறு திருநாவுக்கரசரும் மாணிக்கவாசகர் போன்றவர்களும் இறைத் தொண்டு ஆற்றினார்களோ அவ்வாறு இறைத் தொண்டாற்றிய ஒருவர்.

இவருடையக் கருத்தினைத் தமிழர்களின் ஞானம், இறை அருளால் தெளிவாக அறிந்துக் கொண்டு, அதனை மாபெரும் ஆன்மீகப் புதையலாக வளர்த்தது. அவ்வாறு வளர்த்ததில் முதல் இடத்தில் இருப்பவர் திருவள்ளுவர். இயற்கை நெறி காலத்தில் வாழ்ந்துக் கொண்டு வந்த மக்களை அறநெறிக் காலத்திற்கு இறைவனின் அருளால் கொண்டு வந்த நிகழ்வினை துவக்கி வைத்தது திருவள்ளுவர் தான்.


திருக்குறளின் அடிப்படையாகக் கொண்டு தான் அறநெறிக் காலம் இங்கே மலர்ந்தது. திருக்குறளின் அடிப்படைக் இறைக் கருத்தோ, உலக மக்கள் அனைவருக்கும் பொதுவான இறைவன் மக்களின் வினையினைப் போக்க மனிதனாக வந்து மக்களுக்காகப் பலியானான் என்பதே.

அந்த இறைவனைப் பற்றியே திருவள்ளுவர், கடவுள் வாழ்த்து, வான் சிறப்பு, நீத்தார் பெருமை ஆகிய அதிகாரங்களினால் விளக்குகின்றார்.

முற்றும்...!!!

பி.கு:

திருக்குறளினைப் பற்றிய முந்தையப் பதிவுகளைப் படிக்க
 

ஆய்வாளர்.தெய்வநாயகம் ஐயா என்பவரின் ஆய்வுகளில் இருந்து நான் அறிந்தவற்றையே இங்கே பதிவிட்டு இருக்கின்றேன்.

சமயங்களின் வரலாற்றைப் பற்றிய தொடரினைக் காண

சமயங்களின் வரலாறு
 
சிவஞானபோதத்தைப் பற்றி அறிந்துக் கொள்ள

கடந்த பதிவுகளில் எவ்வாறு வள்ளுவர் கடவுளாக சூரியனைக் கூறவில்லை என்றும் எவ்வாறு அவர் பௌத்த சமயத்தினையோ அல்லது சமணச் சமயத்தினையோ சார்ந்தவர் அல்லர் என்றும் கண்டு இருந்தோம். அப்படி என்றால் வள்ளுவர் கூறும் இறைவன் யார் என்ற கேள்வி இங்கே எழுகின்றது? இக்கேள்விக்கு விடையினை நாம் முன்னரே சில பதிவுகளில் கண்டு இருந்தாலும்


இங்கே மீண்டும் அவற்றை நாம் கண்டாகத் தான் வேண்டி இருக்கின்றது.

வள்ளுவர் கூறும் இறைவன் இரு வினைகளைத் தீர்பவராக இருக்கின்றார். பிறவிப் பெருங்கடலை அவர் அருள் இன்றி கடத்தல் இயலாது. மேலும் ஐம்புலன்களை அடக்கியவராகவும் அவர் குறிக்கப்பட்டு இருக்கின்றார். உலகம் முழுவதற்கும் பொதுவானவர். எனவே எந்தச் சமயம் இறைவனை இத்தன்மைகளோடு கூறுகின்றதோ அச்சமயத்தை சார்ந்தவராக வள்ளுவர் இருக்கலாம் என்றே நாம் கருதலாம் தானே. இதன் அடிப்படையில் நாம் கண்டோம் என்றால் நமக்கு விடையாய் இரண்டுச் சமயங்கள் கிட்டுகின்றன.

சைவம் (வைணவம் சைவத்தில் இருந்து பிரிந்த சமயம் என்பதனை கருத்தில் கொள்க)
கிருத்துவம்

இந்த இரண்டுச் சமயங்களிலும் இறைவன் வினைகளைத் தீர்பவராகவும்...அருளினால் மனித உயிர்களை பிறவிக் கடலில் இருந்து மீட்பவராகவும்...ஐம்புலன்களை உடைய மனிதனாக அவதாரம் எடுத்து உலகிற்கு வந்து மனிதர்களுக்கு வழியினைக் காட்டியவராகவும்...உலக மக்கள் அனைவருக்கும் உரியவராகவும் அறியப்படுகின்றார்.

இந்நிலையில் இந்த இரண்டு சமயங்கள் கூறும் இறைவனில் யாரை வள்ளுவர் கூறி உள்ளார் என்ற ஒரு கேள்வியும்...இரண்டு சமயங்களிலும் கூறப்பட்டு உள்ள இறைவனின் தன்மைஒன்றாகவே இருக்கின்றதே இந்நிலையில் இவ்விரண்டுச் சமயங்களும் ஒரே இறைவனைத் தான் கூறுகின்றனவா என்ற கேள்வியும் இங்கே எழ வாய்ப்பு இருக்கின்றது.

இதற்கு விடையாய் நமக்கு கிட்டுவது கிருத்துவமும் சைவமும் இரு வேறு சமயங்கள் அல்ல என்றும் உலகின் வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு காலக்கட்டத்தில் ஒரே கருத்தின் அடிப்படையில் எழுந்த இரு பிரிவுகள் என்பதே ஆகும். அதாவது கிருத்துவமும் சைவமும் இரு வேறு கருத்தினைக் கொண்ட இரண்டுச் சமயங்கள் அல்ல மாறாக, ஒரே கருத்தினைக் கொண்ட ஒரே சமயத்தின் இரண்டுப் பிரிவுகள்.

கிருத்துவத்தில் ஈசா
சைவத்தில் ஈசன்

கிருத்துவத்தில் தந்தை/பரிசுத்த ஆவி/மகன்
சைவத்தில் சிவன்/சக்தி/ குமரன்

இதையேத் தான் திருவள்ளுவர் தனது சிறப்பாயிரத்தில் (கடவுள் வாழ்த்து/ வான் சிறப்பு/ நீத்தார் பெருமை) என்றுக் கூறி உள்ளார்.

கிருத்துவத்தில் மகன் வினையினைத் தீர்பவராக அறியப்பெருகின்றார். இங்கே குமரன் 'வேலுண்டு வினையில்லை..' என்றும் 'விநாயகனே வினைத் தீர்பவனே' என்றும் வினையினைத் தீர்பவனாக அறியப்பெருகின்றார்.

கிருத்துவத்தில் மூஒருமைக் கோட்பாட்டில் ஒரே இறைவன் மூன்று நிலையில் இருக்கின்றார். சைவத்திலும் சிவன், சக்தி, குமரன் ஆகியோர் மூன்றாக கூறப்படினும் அடிப்படையில் அவர்கள் ஒன்றே என்ற மூஒருமைக் கோட்பாடு காணப்படுகின்றது. நிற்க

இந்தத் தலைப்பில் நாம் ஏற்கனவே பல பதிவுகளைக் கண்டாயிற்று...எனவே இதனை மேலும் விளக்காமல் திருவள்ளுவரைப் பற்றித் தொடருகின்றேன் (சமயங்களைப் பற்றி அறிவதற்கு இந்தச் சுட்டியினைச் சொடுக்கவும் - சமயங்கள்)

திருவள்ளுவர் சைவமும் கிருத்துவமும் கூறும் இறைவனைப் பற்றியே கூறி இருக்கின்றார் என்றே நாம் கண்டிருக்கின்றோம் ஆனால் திருவள்ளுவர் சைவரும் அல்லர்...கிருத்துவரும் அல்லர்...!!!

புதிரான கூற்றாக இருக்கின்றது தானே...ஆனால் உண்மையும் அதுதான். திருவள்ளுவர் சைவரும் அல்லர் கிருத்துவரும் அல்லர். காரணம் திருவள்ளுவர் காலத்தில் கிருத்துவம்/கிருத்துவர் என்றப் பெயரோ அல்லது சைவம்/ஈசன் என்றப் பெயரோ உருவாகி இருக்கவே இல்லை.

திருவள்ளுவரின் காலத்தில், கிருத்துவக் கருத்துக்கள் தோற்றம் பெற்ற மத்திய ஆசியாவில் கிருத்துவின் கருத்துக்களைக் கூறியவர்களை வேட்டையாடிக் கொண்டு இருந்தனர்...மேலும் கிருத்துவின் போதனைகளையும் கூற்றுகளையும் அவரது சீடரே முழுமையாக புரிந்துக் கொள்ள முடியாத நிலை தான் இருந்தது.

அவ்வாறே தமிழகத்தில் 'குறிஞ்சி/முல்லை/மருதம்/நெய்தல்/பாலை' ஆகிய நிலப்பிரிவுகளின் திணைக் கடவுளரான 'சேயோன்/மாயோன்/இந்திரன்/வருணன்/கொற்றவை' ஆகியோர் வழிபாடும் (இவைகள் சமயங்கள் அல்ல...இவைகள் பலி கொடுக்கும் வழிபாடே ஆகும்), அப்பலி கொடுக்கும் வழிபாடுகளை மறுக்கும் சமயங்களான சமணமும் பௌத்தமுமே பரவி இருந்தன.

அறிவிலும் பண்பிலும் சிறந்தவர்களாக தமிழர்கள் இருந்தனர். அவ்வாறே கிரேக்கர்களும் சரி ரோமர்களும் சரி அளப்பரிய முன்னேற்றங்களைக் கண்டு தான் இருந்தனர். இருந்தும் எவரிடத்தும் உலகம் முழுவதற்கும் உள்ள ஒரு இறைவன் என்றக் கருத்து பரவலாகக் காணப்படவில்லை.

ரோமர்களுக்கு அவர்களுக்கு உரிய கடவுளர் இருந்தனர், கிரேக்கர்களுக்கும் சரி எகிப்தியர்களும் சரி யூதர்களுக்கும் சரி அவர்களுடைய இனத்திற்குரிய கடவுளர் இருந்தனர். எவ்வாறு தமிழர்களுக்கு குறிஞ்சி நிலம், முல்லை நிலம் போன்ற நிலப்பிரிவுகளுக்கு என்று தனித் தனி வழிபாட்டுக் கடவுளர் இருந்தனரோ அதனைப் போன்று தான் உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கும் அவர்கள் இனத்திற்கென்று வழிப்பாட்டுக் கடவுளர் இருக்கத் தான் செய்கின்றனர்.

இவர்களது இனம், அவர்கள் எகிப்தியர்களாக இருக்கட்டும்...அல்லது கிரேக்கர்களாக இருக்கட்டும்...அல்லது ரோமர்களாக இருக்கட்டும்...பல்வேறு சாதனைகளையும் அறிவுச் செல்வங்களைப் பெற்று இருந்தாலும் ஆன்மீகச் சிந்தனை என்பது அவர்களுக்கு எட்டாத ஒன்றாகவே இருந்தது. இதே நிலை தான் உலகின் முதல் இனமும் ஞானத்தில் சிறந்த இனமுமான தமிழ் இனத்திலும் நிலவியது.

இந்த நிலை நிலவியதற்குக் காரணம் எளிது தான்...ஆன்மீகச் சிந்தனை என்பதனை இறைவன் அளிக்காமல் மனிதனால் தானாகத் தேடி அடைய முடியாது. இறைவனை உணர இறைவனின் அருள் வேண்டும்...அவன் அருள் இன்றி அவனை அறிதல் இயலாது...இதுவே தான் கிருத்துவமும் சரி சைவமும் சரி கூறும் அடிப்படைக் கருத்தாகும். இதைப் பற்றித் தான் நாம் இப்பொழுது காண வேண்டி இருக்கின்றது...!!!

தொடரும்...!!!

பி.கு:

திருக்குறளினைப் பற்றிய முந்தையப் பதிவுகளைப் படிக்க
 
ஆய்வாளர்.தெய்வநாயகம் ஐயா என்பவரின் ஆய்வுகளில் இருந்து நான் அறிந்தவற்றையே இங்கே பதிவிட்டு இருக்கின்றேன்.

சமயங்களின் வரலாற்றைப் பற்றிய தொடரினைக் காண

சமயங்களின் வரலாறு

சென்ற பதிவினில் வள்ளுவர் இறைவன் என்று கூறுவது சூரியனையே என்று சிலர் கருதுவதையும் அது எவ்வாறு பொருந்தாது என்பதையும் கண்டு இருக்கின்றோம். இப்பொழுது நாம் வள்ளுவர் பௌத்த சமயத்தை அல்லது சமண சமயத்தைச் சார்ந்தவராக இருக்கலாம் என்றக் கருத்தினைத் தான் காண வேண்டி இருக்கின்றது.

திருவள்ளுவர் பௌத்தம் அல்லது சமணச் சமயத்தைச் சார்ந்தவரா?

இப்பொழுது ஒரு கேள்வி, ஒருவர் ஒரு சமயத்தைச் சார்ந்தவர் என்றோ அச்சமயத்தைச் சார்ந்தவர் அல்லர் என்றோ கூற வேண்டும் என்றால் முதலில் என்ன தெரிந்து இருக்க வேண்டும்?

அந்த சமயத்தைப் பற்றித் தெரிந்து இருக்க வேண்டும் தானே. அதனைப் பற்றித் தெரிந்தால் தானே ஒருவர் அச்சமயத்தைச் சார்ந்தவர் என்றோ அல்லது சார்ந்தவர் அல்ல என்றுக் கூற முடியும். இந்நிலையில் வள்ளுவர் சமணம் அல்லது பௌத்தம் ஆகிய சமயங்களைச் சார்ந்தவர் என்றுக் கூற வேண்டும் என்றால் முதலில் அச்சமயங்களைப் பற்றி நாம் அறிந்து இருக்க வேண்டும் தானே. அது தானே சரியானதொன்றாக இருக்கும். எனவே நாம் முதலில் அந்த சமயங்களின் கருத்துக்களை சிறிது மேலோட்டமாகப் பார்த்து விடலாம்...!!!

பௌத்த சமயமாக இருக்கட்டும் அல்லது சமணச் சமயமாக இருக்கட்டும் இரண்டுமே இறை மறுப்புச் சமயங்கள்...அதாவது நாத்திக சமயங்கள்...அவைகளைப் பொறுத்த வரை இறைவன் என்ற ஒருவன் இல்லை. அச்சமயங்களுள் இறைக் கோட்பாடு கிடையாது. அதனால் பிறவிச் சுழற்சிக் கோட்பாடு உண்டு. அதாவது இந்த பிறவியில் நீ செய்த பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப அடுத்த பிறவி நிகழும்...உன்னுடைய ஒவ்வொரு பிறவியிலும் உன்னுடைய பழைய வினை உன்னை தொடர்ந்து வந்துக் கொண்டே இருக்கும்...அதை யாராலும் மாற்ற இயலாது.

இதையே தான் சிலப்பதிகாரத்தில் வரும் 'ஊழ் வினை உறுத்து வந்து ஊட்டும்' என்ற கூற்று வெளிப்படுத்துகிறது. இந்நூலினை இயற்றியவர் சமண சமயத்தைச் சார்ந்த இளங்கோவடிகள் என்பதை நாம் அறிவோம்...அதனால் சமணத் தத்துவமாகிய 'ஒருவனது வினை அவனை எப்பிறவி ஆயினும் அடைந்தேத் தீரும்' என்ற கருத்து அவரது படைப்பில் வெளிப்பட்டு உள்ளது.

பற்றுகளை அறுப்பதன் மூலமே உன்னால் அப்பிறவிச் சுழற்சியில் இருந்து விடுபட முடியும்...இதுவே அச்சமயங்களின் அடிப்படைக் கூற்றாகும்...உலகத் தோற்றம், உயிர், உடல், மாற்றம் என்பன போன்ற பல தத்துவங்கள் அவற்றுள் கூறப்பட்டு உள்ளனவாயினும் நம்முடைய தலைப்பிற்கு அவை தேவை இல்லாத காரணத்தினால் அவற்றை நாம் இங்கே காணப் போவதில்லை. நிற்க.

சுருக்கமாக, சமண பௌத்த சமயங்கள் இறைக் கொள்கை இல்லாத சமயங்கள்...பிறவிச் சுழற்சியில் நம்பிக்கை கொண்டுள்ள சமயங்கள்...ஒருவனது வினை அவனை எப்பிறவியிலும் அடைந்தேத் தீரும் என்ற நம்பிக்கைக் கொண்டுள்ள சமயங்கள்...அவ்வினைகளிடம் இருந்து அவனை யாராலும் காப்பாற்ற முடியாது...பற்றினை அறுத்து துறவு நிலைக்கு செல்வதன் மூலமாகவே அவனால் பிறவித் தளையில் இருந்து விடுப்பட்டு வீடுப் பேற்றினை அடைய முடியும் என்ற கொள்கையினை உடையச் சமயங்கள்.

இந்நிலையில் வள்ளுவர் சமண சமயத்தைச் சார்ந்தவராகவோ அல்லது பௌத்தச் சமயத்தைச் சார்ந்தவராகவோ இருந்து இருந்தால், அச்சமயக் கொள்கைகள் தான் அவருடைய குறள்களில் வெளிப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் வள்ளுவரின் குறள்களின் கருத்துக்கள் பௌத்த சமண கொள்கைகளுக்கு முற்றிலும் மாறாக இருக்கின்றன.

1. வள்ளுவர் இறை நம்பிக்கை உடையவர். இதனை சிறப்பாயிரத்தில் கடவுள் வாழ்த்துப் பகுதியினை வைத்துத் துவங்கி இருப்பதில் இருந்தே நாம் அறிய முடிகின்றது.

2.இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு - 5
 
இக்குறளில் வள்ளுவர் ஒருவனை இருளில் சேர்த்து விடும் இரு வினைகளும் அவன் இறைவனின் அடி சேர்ந்து விட்டால் அவனை ஒன்றும் செய்யாது என்றே கூறுகின்றார். இது பௌத்த சமண சமயங்களின் கொள்கைக்கு முற்றிலும் மாறுபட்ட கூற்றாகும்.

அச்சமயங்களின் கொள்கைகள் படிஒருவனது வினைகளைப் போக்கும் வல்லமை வேறு ஒருவனுக்கு கிடையாது...ஒருவனது வினை அவனைத் ஒவ்வொரு பிறவியாகத் தொடர்ந்துக் கொண்டே இருக்கும்...அதில் இருந்து விடுபட அவன் பற்றுகளை அறுத்து துறவியாக வேண்டும். பற்றுகளை எவ்வாறு ஒரு மனிதன் அறுக்க முடியும் என்பதற்கு சமண சமயமும் புத்த சமயமும் தனித்தனியே வழிகள் வைத்து இருக்கின்றன. அவைகளைப் பின்பற்றினால் ஒழிய ஒருவனால் அவனது வினைகளை விட்டு விலக முடியாது.

ஆனால் வள்ளுவர் அக்கருத்தினை முற்றிலுமாக இங்கே உடைத்து விடுகின்றார். இறைவனின் அடி சேர்ந்தவனுக்கு வினைகளால் யாதொரு ஊரும் நேராது என்றும் அவனை வினைகள் சேராது என்றுமே அவர் கூறிச் சென்று இருக்கின்றார். வள்ளுவரின் கூற்றின் மூலம் இறைவன் மனிதனின் வினையைத் தீர்க்கும் வல்லமைப் பெற்று இருக்கின்றான். மேலும்

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார். - 10
 
என்று இறைவனின் அடி சேர்ந்தவர்களால் மட்டுமே அவர்களது பிறவிக் கடலைக் கடக்க முடியும் சேராதவர்களால் முடியாது என்று வள்ளுவர் கூறுவதன் மூலம் பௌத்த சமண கொள்கையான 'ஒருவன் அவனது முயற்சியால் மட்டுமே பிறவிச் சுழற்சியில் இருந்து விடுபட முடியும்' என்ற கூற்றினை மறுக்கின்றார்.

வள்ளுவரின் கூற்றின் மூலம் ஒருவன் அவனாகவே அவனது வினையில் இருந்தோ அல்லது பிறப்பில் இருந்தோ தப்பி கரை சேர இயலாது...அதற்கு இறைவனின் துணை வேண்டும்.

இக்கருத்துக்கள் பௌத்தம் மற்றும் சமண சமயத்தின் அடிப்படைக் கோட்பாடுகளையே மறுப்பவை. இந்நிலையில் வள்ளுவர் பௌத்தம் அல்லது சமணச் சமயத்தைச் சார்ந்தவர் என்றுக் கூறுவது பொருந்தாது போய் விடுகின்றது. நிற்க

இதுவரை நாம் எவ்வாறு வள்ளுவர் பௌத்த சமயத்தையோ அல்லது சமண சமயத்தையோ சார்ந்தவர் அல்லர் என்பதையும், அவர் கூறிய இறைவன் சூரியன் அல்ல என்பதையும் கண்டு இருக்கின்றோம்.

இப்பொழுது வள்ளுவரின் கொள்கை யாது என்றும்...வள்ளுவர் கூறிய இறைவன் யார் என்றுமே நாம் காண வேண்டி இருக்கின்றது....!!!

காணலாம்...!!!

தொடரும்...!!!

பி.கு:

திருக்குறளினைப் பற்றிய முந்தையப் பதிவுகளைப் படிக்க

ஆய்வாளர்.தெய்வநாயகம் ஐயா என்பவரின் ஆய்வுகளில் இருந்து நான் அறிந்தவற்றையே இங்கே பதிவிட்டு இருக்கின்றேன்.

திருக்குறளினைப் பற்றி நாம் பல பதிவுகளை முன்னரே கண்டு இருக்கின்றோம்...இருந்தும் இன்னும் சில விடயங்களை நாம் கண்டாகத்தான் வேண்டி இருக்கின்றது. காரணம் இன்னும் தெளிவற்ற கருத்துக்கள் பல வெளியில் உலாவிக் கொண்டு தான் இருக்கின்றன.

உதாரணமாக திருவள்ளுவர் கூறும் கடவுள் யார் என்றக் கேள்விக்கும் திருவள்ளுவரின் சமயம் யாது என்ற கேள்விக்கும் பலவிதமான கருத்துக்கள் நம்முடைய சமூகத்தில் இருக்கத்தான் செய்கின்றன. சிலர் திருவள்ளுவரை பௌத்தர் என்றும் சமணர் என்றும் கூறுவர்...இன்னும் சிலர் அவர் கடவுள் என்றுக் கூறியது சூரியனைத் தான் என்றும் கூறுவர்...சிலர் அவர் சைவ வைணவ சமயத்தைச் சார்ந்தவர் என்றும் கூறுவர்.

ஆனால் இவை அனைத்துமே உண்மையாக இருக்க வாய்ப்பில்லை...இவைகளில் யாதேனும் ஒன்று தான் விடையாக இருக்க முடியும்...இல்லையேல் இவைகள் அல்லாத ஏதேனும் வேறு ஒன்று தான் விடையாக இருக்க முடியும். ஒரே நேரத்தில் திருவள்ளுவர் பௌத்த சமணத்தைச் சார்ந்தவராகவோ அதே நேரம் சமண சமயத்தைச் சார்ந்தவராகவும் இருத்தல் இயலாது. சரி இருக்கட்டும்...இப்பொழுது நமது கருத்தினைக் காண்போம்...!!!

திருவள்ளுவர் இறை நம்பிக்கை உடையவர். இதில் மாற்றுக் கருத்தே நமக்கு கிடையாது. அதனால் தான் அவர் அவரது நூலிற்கு எழுதிய சிறப்பாயிரத்தை கடவுள் வாழ்த்துப் பகுதியுடன் ஆரம்பித்து உள்ளார். ஆனால் அந்த கடவுள் வாழ்த்துப் பகுதியில் அவர் கடவுளாக கூறியுள்ளது யாரை என்றக் கேள்வி தான் பலரையும் பல கருத்துக்களைக் கொள்ள வைத்து உள்ளது. இப்பொழுது அக்கேள்விகளுக்கு விடையினைக் காண முயல்வோம்...

திருவள்ளுவர் கூறும் கடவுள் சூரியனா?

பண்டைய தமிழர்களாக இருக்கட்டும்...அல்லது இயற்கை வழிபாட்டினை உடைய பண்டைய நாகரீகங்களாக இருக்கட்டும் சூரிய வழிபாடு என்பது அவர்களது வாழ்வில் இருந்து உள்ளது. சூரியனுக்கு அவர்களது வாழ்வில் முக்கியத்துவம் தரும் தன்மையை நாம் காணுகின்றோம்.

மேலும் நமது வார நாட்களின் முதல் நாளான கிழமையை 'ஞாயிறு' என்றே அழைப்பதாலும் ஆங்கிலத்திலும் '' என்றே சூரியனைச் சிறப்பித்தே வழங்குவதாலும் சூரியனின் சிறப்பை நாம் உணருகின்றோம் என்றும் ...இந்தியிலும் கூட 'ஆதிவார்' என்றே முதல் கிழமை வழங்கப் பெறுவதாலும் வள்ளுவர்,

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு

என்ற தனது குறளின் மூலம் ஆதியான சூரியனையே கடவுளாக வழங்குகின்றார் என்றும் சிலர் கூறுகின்றனர்.

இவர்கள் 'ஆதி' என்ற ஒற்றை வார்த்தையை எடுத்துக் கொண்டே அவர்களது முடிவிற்கு வந்து விட்டது தான் வியப்பாக இருக்கின்றது. நாம் இந்தக் கூற்றினை மறுத்துத் தான் ஆக வேண்டி இருக்கின்றது.

காரணம் வள்ளுவர் அந்த ஒரு வார்த்தையினை மட்டுமே தனது குரளினில் பயன்படுத்தி இருக்கவில்லை (மேலும் ஆதி என்ற தமிழ்ச் சொல்லிற்கு தொடக்கம் என்ற பொருள் தான் பரவலாக அறியப்படும் பொருள்...வள்ளுவர் காலத்தில் தெலுங்கோ இந்தியோ அல்லது சமசுகிருதமோ தோற்றம் பெற்று இருக்கவில்லை). மேலும் ஒரே ஒரு குறளினை மட்டும் வள்ளுவர் கடவுள் வாழ்த்துப் பகுதியில் விட்டுச் செல்லவில்லை...வேறு ஒன்பது குறள்களையும் விட்டுச் சென்று இருக்கின்றார்.

எனவே ஒரே ஒரு குரளினில் வரும் ஒரே ஒரு வார்த்தையையும் அவ்வார்த்தைக்கு பொதுவாக யாரும் கொள்ளாத பொருளையும் வைத்துக் கொண்டு மட்டும் திருவள்ளுவர் கூறும் இறைவன் சூரியன் என்று கூறுவது சரியானதொன்றாக அமையாது. வள்ளுவர் சூரியனைத் தான் கடவுள் என்று கூறி இருந்தார் என்றால் மற்ற குறள்களிலும் அதற்குரிய சான்றுகளோ அல்லது குறிப்புகளோ நிச்சயம் காணப்பட வேண்டும்... அவ்வாறு காணப்படுகின்றதா என்பதனை நாம் இப்பொழுது காண்போம்...!!!

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு - 5

இக்குறளில் வள்ளுவர் ஒருவனை இருளில் சேர்த்து விடும் இரு வினைகளும் அவன் இறைவனின் அடி சேர்ந்து விட்டால் அவனை ஒன்றும் செய்யாது என்றே கூறுகின்றார். இங்கே வள்ளுவர் சூரியனைத் தான் கடவுளாக கூறினார் என்று கூறுபவர்கள், வள்ளுவர் கூறும் இரு வினைகள் யாது, அவை எவ்வாறு ஒரு மனிதனை இருளில் சேர்த்து விடுகின்றன என்பதையும் அவ்வினைகள் எவ்வாறு சூரியனின் அடியினை சேர்ந்தால் விலகி விடுகின்றன என்பதையும் கூறி ஆக வேண்டி இருக்கின்றது.

பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்நீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார். - 6

இங்கே வள்ளுவர் ஐந்தவித்தான் என்று இறைவனை ஐம்புலன்களை அடக்கியவன் என்றுக் கூறுகின்றார்...வள்ளுவர் சூரியனையே இறைவனாக கூறி இருந்தார் என்றால் சூரியன் ஐம்புலன்களை எப்பொழுது பெற்றது என்றும் ஐம்புலன்களை எப்பொழுது/எப்படி அது அடக்கியது என்றும் நமக்கு கூறித் தான் ஆக வேண்டி இருக்கின்றது.

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார். - 10

இங்கே வள்ளுவர் தெளிவாகக் கூறுகின்றார் இறைவனின் அடியினைச் சேராதவர்களால் பிறவிப் பெருங்கடலை கடக்கவே முடியாது என்று. இறைவனாக வள்ளுவர் சூரியனைக் கூறி இருந்தார் என்றுக் கூறுபவர்கள்  பிறவிப் பெருங்கடல் என்பது என்ன என்றும் அதனை மக்கள் சூரியனின் அடியினைச் சேர்வதன் மூலம் மட்டுமே கடக்க முடியும் என்று வள்ளுவர் கூறியிருப்பது எதனைக் குறிக்கும் என்பதனையும் நமக்குக் கூறி ஆகத் தான் வேண்டி இருக்கின்றது.

மேலும் வள்ளுவர் திருக்குறளின் சிறப்பாயிரத்தில் கடவுள் வாழ்த்துப் பகுதியினை மட்டும் வைக்கவில்லை...மாறாக வான் சிறப்பு, நீத்தார் பெருமை மற்றும் அறன் வலியுறுத்தல் என்று வேறு மூன்று அதிகாரங்களையும் வைத்துவிட்டுச் சென்று இருக்கின்றார்.

அவற்றில் வான் சிறப்பு என்பது மழையைக் குறிக்கின்றது என்று பலர் கூறினாலும் அக்கூற்றுகளில் இன்னும் விவாதங்கள் நிகழ்ந்துக் கொண்டு தான் இருக்கின்றன. மழையை சிறப்பித்து சிறப்பாயிரத்தில் வைப்பது என்பது தமிழ் இலக்கிய உலகம் காணாத ஒரு பழக்கம் ஆகும்.

மேலும்,

நீரின்றி அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வானின்று அமையாது ஒழுக்கு.

என்ற குறளில் வள்ளுவர் தெளிவாக நீரையும் 'வான்' என்று அவர் கூறுவதையும் வேறுபடுத்திக் கூறியுள்ளார். (வான் என்று கடவுளின் அருட் சக்தி வழங்கப்படுவதை நினைவிற் கொள்க)

அவ்வாறே நீத்தார் பெருமை என்ற அதிகாரத்தில், கடவுள் வாழ்த்தில் இறைவனை குறிக்க பயன்படுத்திய 'ஐந்தவித்தான்' என்றச் சொல்லை வள்ளுவர் மீண்டும் பயன்படுத்தி உள்ளார்.

ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலும் கரி.

கடவுள் வாழ்த்துப் பகுதி மட்டும் இருக்கும் சிறப்பாயிரத்தில் கடவுள் வாழ்த்துப் பகுதியுடன் வான் சிறப்பு, நீத்தார் பெருமை, அறன் வலியுறுத்தல் என்ற அதிகாரங்களையும் வைத்த வள்ளுவர், 'ஐந்தவித்தான்' என்ற சொல்லின் மூலம் கடவுளையும், நீத்தாரையும் இணைத்து உள்ளார்.

வள்ளுவர் சூரியனையே கடவுளாக கூறி இருந்தார் என்றால் ஏன் சூரியனை ஐந்தவித்தானாக கூற வேண்டும், ஏன் அவனை நீத்தாருடன் இணைக்க வேண்டும்...ஏன் கடவுள் வாழ்த்துப் பகுதியில் வான் சிறப்பு/நீத்தார் பெருமை/அறன் வலியுறுத்தல் போன்ற பகுதிகளைச் சேர்க்க வேண்டும்?

என்பன போன்ற கேள்விகளுக்கு வள்ளுவர் சூரியனைத் தான் இறைவனாக கூறினார் என்றுக் கூறுபவர்கள் விடையினைத் தந்தாகத் தான் வேண்டி இருக்கின்றது.

அவ்வாறு விடையினைத் தராமல் வெறும் யூகங்களின் அடிப்படையில் வள்ளுவர் கூறிய கடவுள் சூரியன் என்று ஒருவர் கூறினார் என்றால் ஒன்று அவர் அறியாமையில் கூறுகின்றார் என்றோ அல்லது கருத்தினை திரிக்க வேண்டும் என்ற உள்நோக்கத்தோடோ கூறுகின்றார் என்றே தான் நாம் கருத முடியும்...!!!

சரி இப்பொழுது வள்ளுவர் சமணம் அல்லது பௌத்த சமயத்தைச் சார்ந்தவரா என்றே காணலாம்...!!!

தொடரும்....!!!

பி.கு:

திருக்குறளினைப் பற்றிய முந்தையப் பதிவுகளைப் படிக்க

சோவியத் ஒன்றியம் என்ற ஒன்று இன்றில்லை...அது துண்டுத் துண்டாகப் போய் ஆண்டுகள் பல கடந்து விட்டன...இருந்தும் பலரின் நினைவுகளிலும் கனவுகளிலும் சோவியத் ஒன்றியம் இருந்தக் காலம் ஒரு பொற்காலமாகத் தான் இருந்து கொண்டு இருக்கின்றது. அனைத்து விடயங்களிலும் அக்கருத்து சரியா என்பதனைக் குறித்து என்னால் விடை பகிர முடியாது எனினும், நூல்களைக் குறித்து என்னால் நிச்சயம் கூற முடியும்...சோவியத் ஒன்றியத்தின் காலம் நிச்சயம் நூல்களின் பொற்காலம் தான்.

ஏன், எவ்வாறு என்று எதையும் சிந்தித்துப் பார்க்கத் துவங்கும் காலத்திற்கு முன்னரே என்னைச் சுற்றி சோவியத் நாட்டின் நூல்கள் ஒரு மாபெரும் கோட்டையை எழுப்பி விட்டுத் தான் இருந்தன. படக்கதைகள், சிறுவர் சாகசக் கதைகள், நாடோடிக் கதைகள் என்று பல்வேறு வகையான உலகங்களை என் முன்னே விரித்து அவற்றிலே பயணிக்கும் வாய்ப்பினையும் எனக்கு அளித்து காலம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தது.



பேராசைக் கொண்ட அன்னப்பறவை ஒவ்வொரு பறவையிடம் இருந்தும்அவற்றின் சிறப்புகளைப் பெற்றுக் கொண்டு இறுதியில் வாழ வழியின்றி மடியும் கதையாக இருக்கட்டும்....






















விவசாயின் மகன் இவான் பறவை நாகங்களைக் கொன்று மக்களைக் காப்பாற்றும் கதையாக இருக்கட்டும்...

 

















புரட்சியினை அடிப்படையாகக் கொண்ட மூன்று தடியர்கள் கதையினைப் போன்ற கதைகளாக ஆகட்டும்...






















அல்லது சிறுவர்களின் வாழ்வினையும் அவர்களுடனே அவர்களது கிராமத்து பண்ணை வீடுகளில் வளரும் விலங்குக் குட்டிகளின் வாழ்வினையும் ஒருங்கிணைத்து அருமையாக விவரிக்கும் 'குழந்தைகளும் குட்டிகளும்' போன்ற கதைகளாக இருக்கட்டும்...அல்லது பூனையார், கரடியார், நரியார் போன்று விலங்குகள் ஆட்சிப் புரியும் கானகக் கதைகளாக இருக்கட்டும்...


















அல்லது சபிக்கப்பட்ட இளவரசிகளைத் தேடி அலையும் வில்லாளர்களின் கதையாக இருக்கட்டும்...




அல்லது மாஷா, க்ரிஷ்காவின் விண்வெளிப் பயணம் போன்று சிறுவர்களின் கதைகளாக இருக்கட்டும்...ஒவ்வொன்றும் ஒரு வகையாக மனதினைக் கொள்ளைக் கொள்ளும் தன்மையினைப் பெற்றவைகள் தான்.


இன்று நான் நானாக இருப்பதற்கு முக்கியமான காரணங்களுள் அப்புத்தகங்களும் ஒன்று என்பதனை என்னால் மறுத்தல் இயலாது. ஏன் அப்புத்தகங்களைக் கடந்து வந்த எவராலும் அப்புத்தகங்களை மறத்தல் இயலாது...எங்கே செல்லுகின்றோம் என்பதனை அறியாது ஓடிக் கொண்டிருக்கும் இக்காலத்தில் மீண்டும் நம்மை நாம் கவலைகள் இன்றித் திரிந்த ஒரு காலத்திற்கு நம்மை அழைத்துச் செல்லும் வல்லமை இப்புத்தகங்களுக்கு உண்டு என்பதை இப்புத்தகங்களோடு வளர்ந்தவர்கள் நிச்சயம் உணரத்தான் செய்வர்.

அப்புத்தகங்களைப் பற்றி உங்களிடம் பகிர்ந்துக் கொள்ள வேண்டும் என்ற ஆவல் பலமுறை மேலெழுந்தது உண்டு...இருப்பீனும் ஏற்கனவே ஆரம்பித்த பல தொடர்கள் அந்தரத்தில் தொங்கிக் கொண்டு இருக்கின்ற காரணத்தால் இந்தப் புத்தகங்களைப் பற்றிய பதிவுகளை எழுத வேண்டும் என்ற எண்ணத்தினை தவிர்த்து விட்டேன். இருந்தும் இப்பொழுது எழுதுவதற்கு காரணம் ஒரு தேடல் தான்...!!!


சிறு வயதில் என்னைக் கவர்ந்த அந்த நூல்களும் பல காலத்தில் எங்கோ சென்று விட்டன...அந்த அற்புதமான புத்தகங்கள் (தமிழ் மொழியாக்கம் செய்யப்பட்ட புத்தகங்கள்) அடுத்த தலைமுறையையும் சென்றடைய வேண்டும் என்ற எண்ணத்தில் அப்பழைய புத்தகங்களைத் தேடிக் கொண்டு இருக்கின்றேன்.


பழைய புத்தகக் கடைகளில் அவற்றுள் சில புத்தகங்கள் கிடைக்கப் பெற்றன..இருந்தும் பல புத்தகங்கள் என்னவாயின என்றே தெரியாத நிலை இருக்கின்றது. இந்நிலையில், ஒருவர் தேடுவதற்கு பதிலாக ஒரே சிந்தனையுடைய பலர் தேடினால் மேலும் நன்றாக இருக்குமே என்ற எண்ணத்தினால் இந்த பதிவை இடுகின்றேன்.


நண்பர்களே, பழைய சோவியத் ஒன்றியத்தின் புத்தகங்கள் எங்கே கிடைக்கும் என்பதையோ அல்லது அவைகள் எங்காவது விற்பனைக்கு இருந்தாலோ தயைக் கூர்ந்து தெரிவிக்கவும். மேலும் நீங்களும் அப்புத்தகங்களைப் படித்து இருந்து அவற்றினை நீங்களும் ரசித்து இருந்தீர்கள் என்றாலும் உங்களின் அனுபவங்களையும் நீங்கள் படித்த புத்தகங்களைப் பற்றியும் பகிர்ந்துக் கொள்ளுங்கள்..அதுவும் நன்றாக இருக்கும்.


நன்றி...!!!

உவமை 3:

சில மனிதர்கள் நடந்துக் கொண்டிருந்தனர். அவர்கள் அவர்களது பாதையினைத் தொலைத்து விட்டு இருந்ததினால் அவர்கள் அது வரை நடந்து வந்துக் கொண்டிருந்த சமமான மிருதுவான பாதையில் இருந்து விலகி முட் செடிகளும் சதுப்பு நிலங்களும் நிறைந்து இருந்த வழியில் நடந்துக் கொண்டிருந்தனர். நேரம் செல்லச் செல்ல அவர்கள் முன்னேறிச் செல்வதும் கடினமானதொன்றாக மாறிக் கொண்டே வந்தது.

அந்நிலையில் அப்பயணிகள் இரண்டுக் குழுக்களாக பிரிந்தனர். ஒரு குழுவினரோ தாங்கள் சரியான பாதையில் இருந்து தொலையவில்லை என்றும் தொடர்ந்துப் பயணித்தால் அவர்களின் இலக்கினை அவர்கள் அடைந்து விடுவர் என்றும் அவர்களை அவர்களே உறுதிப்படுத்திக் கொண்டு தாங்கள் சென்றுக் கொண்டிருந்த வழியிலேயே தொடர்ந்துச் செல்ல முடிவு செய்தனர். மற்றொரு குழுவினரோ, தாங்கள் இப்பொழுது பயணித்துக் கொண்டிருக்கும் வழி நிச்சயம் தவறான வழியாக இருக்கும் காரணத்தினால் தான் இன்னும் அவர்கள் சென்றுச் சேர வேண்டிய இடம் வரவில்லை என்று கருதி சரியான வழியினைக் கண்டுபிடிப்பதற்கு அனைத்து திசைகளிலும் நிற்காமல் வேகமாகச் செல்ல வேண்டும் என்றே முடிவு செய்தனர். அவ்வாறு அனைத்து திசைகளிலும் சென்று பார்த்தால் அவர்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு கொண்டு சேர்க்கும் வழியினை நிச்சயம் அவர்கள் எதிர்கொள்வர் என்றே அவர்கள் கருதினர்.

அனைத்து பயணிகளும் இவ்விரு சிந்தனைகளால் இரு குழுக்களாக பிரிந்து இருந்தனர். சிலர் தொடர்ந்து அவர்கள் சென்றுக் கொண்டிருந்த பாதையிலேயே முன்னேற முடிவு செய்தனர். மற்றவர்களோ அனைத்து திசைகளிலும் பயணிக்க முடிவு செய்தனர்.

இவ்விரு குழுக்களோடும் சேராது தனித்து இருந்த ஒரு மனிதனும் அங்கே இருக்கத் தான் செய்தான். அவன் அவ்விரு குழுவினரின் முடிவினையும் ஏற்றுக் கொள்ளாது அவர்களிடம் தொடர்ந்து அதே வழியிலேயே பயணம் செய்வதற்கு முன்னும் அல்லது அனைத்து திசைகளிலும் சென்று சரியான வழி ஏதேனும் தென்படுகின்றதா என்று தேடுவதற்கு முன்னும் அவர்கள் அனைவரும் சற்று நின்று நிதானமாக அவர்கள் இருக்கும் சூழ்நிலையைப் பற்றிய அனைத்து விடயங்களையும் சிந்தித்து அந்த சிந்தனையின் மூலம் வரும் கருத்தின்படி என்ன செய்வது என்று முடிவு செய்வதே நலமாக இருக்கும் என்றான்.

ஆனால் அப்பயணிகள் அவர்களின் நிலையைக் குறித்து மிகுந்த அச்சத்தில் இருந்தனர். மேலும் ஒரு வழியாக தொடர்ந்து நகரப் போகின்றோம் என்ற உற்சாகத்திலும் இருந்தனர். கூடவே அவர்கள் வழியினை தொலைக்கவில்லை மாறாக எங்கோ ஒரு சிறு தொலைவு அளவில் மட்டுமே பாதை மாறி விட்டது மீண்டும் எளிதில் விரைவில் பாதையினை அடைந்து விடுவோம் என்றும் மனதளவில் கருதினர். அவர்களின் அச்சத்தை எங்காவது நகர்ந்துக் கொண்டே இருப்பதன் மூலம் மறந்து விடலாம் என்ற சிந்தனையிலும் அவர்கள் மூழ்கி இருந்தனர். அதனால் நாம் எங்கும் நகராது சிறிது நிதானமாக யோசித்து பின்னர் முடிவெடுக்க வேண்டும் என்ற அவனது கருத்து அவர்களின் மத்தியில் தீவிர எதிர்ப்பையும் கிண்டலையும் பழிச் சொற்களையும் பெற்றது.

"இது கோழைத்தனம் மற்றும் சோம்பல்தனம் ஆகியவற்றின் அறிவுரை..." என்றனர் சிலர்.

"எங்கும் செல்லாமல் இருக்கும் இடத்திலேயே இருக்க வேண்டுமா...ஆகா..நமது இலக்கினை அடைய மிகச் சிறந்த யோசனை இது" என்றே கிண்டல் செய்தனர் மற்றவர்கள்.

"போராடுவதற்கும் உழைப்பதற்கும் தடைகளை கடப்பதற்கும் தான் நம்மிடத்து வலிமை தரப்பட்டு உள்ளது...மக்களும் அதற்காகத் தான் இருக்கின்றோம்..மாறாக கோழையைப் போல் தடைகளை கண்டு ஒடுங்குவதற்கு அல்ல" என்றனர் சிலர்.

"தவறான திசையில் சென்றுக் கொண்டே நாம் திசையினை மாற்றாமல் பயணித்தோம் என்றால் நிச்சயம் நம்முடைய இலக்கினை நாம் அடைய மாட்டோம்...அவ்வாறே தான் ஒரு திசையில் இருந்து மற்றொரு திசைக்கு மாறி மாறி பயணித்தாலும் இலக்கினை அடையப் போவதில்லை. நாம் நம்முடைய இலக்கினை அடைய வேண்டும் என்றால் நாம் சூரியன் மற்றும் நட்சத்திரங்களை வைத்து நாம் பயணிக்க வேண்டிய திசையினை கணித்து அவ்வழியில் பயணிக்க வேண்டும். அதற்கு நாம் சற்று நிற்க வேண்டும். நிற்க வேண்டும் என்றால் ஒரு வேலையும் செய்யாமல் நிற்க வேண்டும் என்பதல்ல மாறாக நின்று நிதானமாக நாம் இருக்கும் சூழலை ஆராய்ந்து நாம் செல்ல வேண்டிய உண்மையான பாதையினை கண்டறிந்து பின்னர் தயக்கமின்றி அப்பாதையில் பயணிக்க வேண்டும்" என்றே பெருவாரியான மக்களிடம் இருந்து பிரிந்து இருந்த அம்மனிதன் எடுத்துக் கூறினாலும் அவனது பேச்சினை அங்கே எவரும் கேட்க வில்லை.

முதல் குழுவினர் தொடர்ந்து தாங்கள் பயணித்துக் கொண்டிருந்த வழியிலேயே பயணிக்க துவங்கினர். இரண்டாவது குழுவினரோ ஒவ்வொரு திசையாக பயணிக்க ஆரம்பித்தனர். ஆனால் இருவரும் இறுதி வரை அவர்களின் இலக்கினை அடையவில்லை...முட்களும் சதுப்பு நிலங்களும் மிக்க பகுதியில் இருந்து வெளியேறவும் இல்லை...அவர்கள் இன்னும் அலைந்துக் கொண்டு தான் இருக்கின்றனர்.

இதே நிலைமை தான் எனக்கும் நேர்ந்தது, நாம் பயணித்துக் கொண்டிருக்கும் பாதை உழைப்புச் சுரண்டல் என்ற அடர்ந்த கானகத்துள்ளும், நாடுகளின் முடிவில்லா ஆயுத வளர்ச்சி என்ற நம்மை முழுங்கி விடும் புதைக்குழியினுள்ளும் திசை மாறிச் சென்றுக் கொண்டிருப்பதைக் கண்டு நாம் சரியான பாதையில் தான் சென்றுக் கொண்டிருக்கின்றோமா என்ற சந்தேகத்தினை வெளிக்காட்ட நான் முயன்ற பொழுது அதே நிலைமை தான் எனக்கும் நேர்ந்தது.

"இது நாம் செல்ல வேண்டியப் பாதை அல்ல. அனேகமாக நாம் நமது பாதையைத் தொலைத்து விட்டோம். ஆகையால் தொடர்ந்து தவறான பாதையில் செல்வதற்கு மாறாக சற்று நின்று நமக்கு அருளப்பட்டுள்ள பொதுவானதாகவும் என்றும் நிலையானதாகவும் இருக்கின்றன உண்மையின் தத்துவங்களை அடிப்படையாகக் கொண்டு நம்முடைய நிலையை ஆராய்ந்துப் பார்த்து நாம் செல்ல வேண்டிய திசையில் தான் சென்றுக் கொண்டிருக்கின்றோமா என்று சிந்திப்பது நமக்கு நலமாக அமையும்." என்றே நான் கூறினேன்.

ஆனால் என்னுடைய கூற்றிற்கு யாரும் விடைப் பகிரவில்லை. "இந்த இந்த காரணத்தினால் நாங்கள் பாதை மாறவில்லை என்றும் தவறிழைக்க வில்லை என்றும் என்று எங்களால் உறுதியாக கூற முடியும்" என்று ஒருவரும் காரணங்களைக் கூற முன்வரவில்லை. மேலும், "நாங்கள் தவறிழைத்து விட்டோம், இருப்பினும் நாங்கள் எங்களது பயணத்தை நிறுத்தாமலேயே எங்களது தவறினைத் திருத்திக் கொள்ளும் கேள்விக்கு அப்பாற்பட்ட வல்லமை மிக்க கருவி இதோ எங்களிடத்து இருக்கின்றது" என்றும் எவரும் கூற முன்வரவில்லை. எவரும் எதையும் கூறவில்லை...இருந்தும் அவர்கள் என் மீது கோபம் கொண்டு என்னுடைய ஒற்றைக் குரலை மூழ்கடிக்கும் வண்ணம் அவர்கள் ஒன்று சேர்ந்து குரல் எழுப்பினர்.

"இன்று இருக்கும் நிலையிலேயே நாம் காலத்தை விட்டுப் பின்னாடி நிற்கின்றோம்...இந்நிலையில் இவன் நமக்கு சோம்பேறித்தனத்தையும்...சோம்பி இருப்பதையும் போதிக்கின்றான்" என்று அவர்களுள் சிலர் கூறினர். மேலும் சிலர் "வேலை செய்யாது இருப்பதா...மக்களே இவன் குரலுக்கு செவி சாய்க்காதீர்கள்...தொடர்ந்து முன்னேறுங்கள்" என்றுக் கூறினர். அவர்களைப் பொறுத்தவரை இரட்சிப்பு என்பது அவர்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட பாதையில், அது எந்த பாதையாக இருந்தாலும் சரி, தொடர்ந்து பயணிப்பதிலேயே அடங்கி இருக்கின்றது அல்லது ஒவ்வொரு திசையாக மாறி மாறி அலைவதினாலேயே இரட்சிப்பினை அவர்கள் கண்டடைந்து விடுகின்றனர்.

"நிற்பதனால் என்ன பயன்...ஏன் சிந்திக்க வேண்டும்...எவ்வளவு வேகமாக நகர முடியுமோ அவ்வளவு வேகமாக நகருங்கள்...எல்லாம் சரியாக வரும்" என்றே அவர்கள் கூறுகின்றனர்.

மக்கள் அவர்களது வழியினைத் தொலைத்து விட்டனர், அதனால் அவர்கள் துயரப்படவும் செய்கின்றனர். இந்நிலையில் நாம் இன்று இருக்கும் தவறான நிலைக்கு நம்மை உட்படுத்திய நமது வேகமான போக்கினை அதிகரிப்பதற்கு பதிலாக அந்த வேகமான போக்கினை நிறுத்துவதற்கே நமது வல்லமை மிக்க ஆற்றலை பெருவாரியாக நாம் பயன்படுத்த வேண்டி இருக்கின்றது என்றே தோணுகின்றது. அவ்வாறு நின்றால் மட்டும் தான் நம்மால் நாம் இருக்கும் நிலைமையின் தன்மையினை அறிந்துக் கொள்ளவும், அவ்வாறு அறிந்துக் கொண்டு ஒவ்வொரு மனிதனின் இதயமும் ஆவலுடன் எதிர்நோக்கும் உண்மையான நல்லதை நோக்கி எந்த திசையில் செல்ல வேண்டும் என்பதையும் அறிந்துக் கொள்ள முடியும். அந்த உண்மையான நல்லது என்பது தனி ஒரு மனிதனுக்குரியது அல்ல, ஒரு குழுவினைச் சேர்ந்த மனிதர்களுடையதும் அல்ல மாறாக ஒட்டு மொத்த மனித குலத்திற்கே உரியதாகும்.

ஆனால் மக்கள் அவர்களால் கற்பனை செய்ய முடிகின்ற அனைத்தையும் உருவாக்குகின்றார்கள், ஒன்றைத் தவிர. தவறான செய்கைகளால் அவர்களது வாழ்க்கையின் துயரத்தன்மையை கூட்டிக்கொண்டு இருக்கும் நிலையை சற்று நிருத்துவதனைத் தவிர அவர்கள் அனைத்தையும் செய்கின்றனர். அத்தவறான செய்கைகளை செய்யாமல் நிறுத்தி யோசிப்பதே அவர்களை அவர்களது நிலையில் இருந்து காப்பாற்றக் கூடிய ஒன்றாகும்.

மக்கள் அவர்களது வாழ்வின் துயரத்தன்மையை உணருகின்றனர், அதில் இருந்து விடுபடவும் அவர்களால் இயன்ற அனைத்தையும் செய்கின்றனர். ஆனால் எந்த ஒன்று அவர்களின் வாழ்வினை எளிதாக்குமோ அந்த ஒன்றினை அவர்கள் செய்வதற்கு மறுக்கின்றனர்...அந்த ஒன்றினைச் செய்யுங்கள் என்ற அறிவுரையும் வேறு எதனைக் காட்டிலும் அவர்களுக்கு எரிச்சலூட்டுகின்றது.

நாம் வழி தொலைந்து விட்டோம் என்பதில் சந்தேகம் இருக்குமானால், நாம் எந்தளவு பாதை மாறி இருக்கின்றோம் என்பதையும் எந்தளவு ஆழமாக நமது துயரம் இருக்கின்றது என்பதையும் நமக்கு சந்தேகமின்றி தெளிவாக நிருபித்துக் கொண்டு இருக்கின்றன, "முதலில் நம்மை நாம் நின்று சரி பார்ப்போம்" என்ற அறிவுரைக்கு கிட்டும் பதில்கள்.

இவையே நிரூபிக்கின்றன நாம் எந்தளவு பாதை தவறி இருக்கின்றோம் என்று.

முற்றும்...!!!

பி.கு:

இது இரசிய எழுத்தாளர் லியோ டால்ஸ்டாயின் கட்டுரையான 'Three Parables' என்பதன் ஒரு பகுதியின் எனது தமிழ் மொழிபெயர்ப்பே ஆகும்.

முந்தையப் பதிவுகள் : 1 | 2

இரண்டாம் உவமை:

சில மனிதர்கள் மாவு, பால் மற்றும் அனைத்து வகையான உணவுப்பண்டங்களை விற்கும் தொழிலில் ஈடுபட்டு வந்தனர். அவர்கள் ஒருவருடன் ஒருவர் பொறாமைக் கொண்டு, விரைவில் பணக்காரர் ஆக வேண்டும் என்ற எண்ணத்தினாலும் எவ்வளவு சம்பாதிக்க வேண்டுமோ அவ்வளவு சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையின் காரணமாகவும் அவர்களுடைய பொருள்களுடன் விலைக் குறைந்த ஆபத்தான கலப்படப் பொருட்களைக் கலக்கத் துவங்கினர். பாலுடன் தண்ணீரையும் சாக்கட்டியையும் கலந்தனர். நுகர்வோரை அப்பொருட்கள் சென்றடையாத வரையில் அனைத்தும் நன்றாகத் தான் சென்றுக் கொண்டிருந்தது. இவர்கள் இவர்களது பொருட்களை மொத்த விற்பனையாளர்களுக்கு விற்றனர். அந்த மொத்த விற்பனையாளர்களோ அப்பொருட்களை சில்லறை வியாபாரிகளுக்கு விற்றனர்.

மிகுந்த அளவில் சேமிப்புக் கிடங்குகளும் கடைகளும் அங்கே இருந்தன. வாணிகமும் சீராகச் சென்றுக் கொண்டிருப்பது போன்றே தோன்றியது. வணிகர்கள் திருப்தி அடைந்து இருந்தனர். ஆனால் அப்பொருட்களைத் தயாரிக்க இயலாத நிலையில் அவற்றை வெளியே வாங்கியே தீர வேண்டிய சூழலில் இருந்த அந்த நகரத்து நுகர்வோர்களான மக்களுக்கோ அப்பொருட்கள் ஆபத்தானதாகவும் தொந்தரவானதாகவும் இருந்தன.

மாவு மோசமானதாக இருந்தது. அவ்வாறே பாலும் சரி இதர பொருட்களும் மோசமானதாக இருந்தன. ஆனால் கலப்படம் பண்ணப்பட்ட பொருட்களைத் தவிர அந்த நகரத்தின் சந்தையில் வேறு பொருட்கள் கிடைக்காத காரணத்தினால் அந்த நகரத்து மக்களும் அப்பொருட்களையேத் தொடர்ந்து வாங்கிக் கொண்டிருந்தனர். அவ்வாறு வாங்கப்பட்ட தரமற்ற பொருட்களால் வீட்டில் செய்த உணவு சுவையற்றதாகவும் நோயினைத் தருவதாகவும் இருந்தாலும் மக்கள் அக்கலப்பட பொருட்களை குறை கூறுவதற்கு பதிலாக அவர்களின் தயாரிப்பு முறைகளையே உணவு சுவை அற்றதாகவும் நோய்களை உருவாக்குவதாகவும் இருப்பதற்கு காரணமாய் கூறிக் கொண்டு இருந்தனர். மக்கள் அவ்வாறு இருக்கையில் அந்த வணிகர்களோ தொடர்ந்து தரமற்ற விலைக் கம்மியான அந்நிய பொருட்களை உணவுப் பொருட்களுடன் அதிக அளவு கலந்த வண்ணமே இருந்தனர். இவ்வாறே சில காலமும் நகர்ந்தது. அந்த நகரத்து மக்கள் துயர் உற்றனர் இருந்தும் அவர்களது திருப்தியின்மையை வெளிக்காட்டிக் கொள்ள யாரும் எண்ணவே இல்லை.

இந்நிலையில் தனது குடும்பத்திற்கான உணவை முழுக்க முழுக்க வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட பொருட்களைக் கொண்டே செய்து பழகி இருந்த ஒரு கிராமத்துப் பெண்மணி அந்த நகரத்திற்கு வர நேர்ந்தது. தனது வாழ்நாள் முழுவதும் அப்பெண் உணவினைத் தயாரித்து இருந்தாள். பேர் பெற்ற சமையல்காரியாக அவள் இல்லாது இருந்தப் போதிலும் ரொட்டியினைச் சுடுவதற்கும் உணவினை சமைப்பதற்கும் அவள் நன்கு அறிந்து இருந்தாள்.

நகரத்தில் இருந்த கடைகளில் அவள் பொருட்களை வாங்கி சமைக்கத் துவங்கினாள். அவள் சுட்ட ரொட்டிகள் நன்றாக வரவில்லை...அவற்றின் சுவையும் நன்றாக இல்லை. இதே நிலை தான் மற்ற பொருட்களிலும் இருப்பதனை அவள் கண்டாள். உடனடியாக அவள் அவளிடம் இருந்த பொருட்கள் தரமானவை அல்ல என்பதை யூகித்துக் கொண்டாள். உடனே அவள் அப்பொருட்களை ஆராயத் துவங்கினாள். ஆராய்ந்துப் பார்க்கையில் அவளது யூகம் சரியானதொன்றாக இருப்பதை அவள் கண்டுப்பிடித்தாள். மாவில் அவள் எலுமிச்சை கலந்திருப்பதைக் கண்டாள், பாலில் சாக்கட்டித் தூள் கலந்திருப்பதைக் கண்டாள். அவ்வாறே அனைத்துப் பொருட்களிலும்  பல்வேறு கலப்படங்கள் இருப்பதையும் கண்ட அவள் உடனடியாக சந்தைக்குச் சென்று சத்தமாக அந்த வணிகர்களை குற்றம் சாட்டவும், ஒன்று கலப்படமற்ற நல்ல ஆரோக்கியமான பொருட்களை கடைகளில் வைத்து இருங்கள் இல்லையேல் வணிகம் செய்வதனை நிறுத்தி விட்டு கடையை மூடி விடுங்கள் என்று நிர்பந்திக்கவும் ஆரம்பித்தாள். ஆனால் அந்த வணிகர்கள் அவளுடைய பேச்சிற்கு எவ்வித கவனமும் செலுத்தாது, அவர்களின் பொருட்கள் மிகவும் சிறந்தத் தரமான பொருட்கள் தாம் என்றும் அந்த நகரத்தில் பல வருடங்களாக அப்பொருட்களைத் தான் மக்கள் வாங்கிக் கொண்டு இருக்கின்றனர் என்றும், அதற்காக அவர்கள் பல பதக்கங்களையும் வாங்கி இருக்கின்றனர் என்றும் கூறி அவர்கள் கடையினில் இருந்த பதக்கங்களை அவளிடம் காட்டினர். ஆனால் அவைகளால் அப்பெண்ணை அமைதி படுத்தமுடியவில்லை.

"பதக்கங்கள் எனக்குத் தேவை இல்லை...மாறாக எனது குழந்தைகளுக்கு வயிற்றுவலியினை உருவாக்காத ஆரோக்கியமான உணவே எனக்கு வேண்டும்" என்றே அவள் கூறினாள்.

"அருமைப் பெண்ணே...ஒருக்கால் நீ உண்மையான மாவினையோ அல்லது வெண்ணையினையோ கண்டு இருக்க மாட்டாய் என்றே தெரிகின்றது." என்றே அந்த வணிகர்கள் கூறி அவர்கள் கடையில் இருந்த சுத்தமான மாவினை வைத்து இருந்த மாவுப் பெட்டிகளையும், அழகான கிண்ணங்களில் இருந்த வெண்ணையைப் போன்ற பொருளையும், மின்னும் பாத்திரங்களில் இருந்த வெண்ணிற திராவகத்தையும் நோக்கி அவளுக்கு சுட்டிக் காட்டினர்.

"என் வாழ்நாள் முழுவதும் எனது குழந்தைகளுக்கு உணவினைச் சமைத்தும் அவர்களுடன் அமர்ந்து அதனை உண்டுமே நான் காலத்தைக் கழித்து வந்து இருக்கின்றேன்..இந்நிலையில் உண்மையான பொருட்களைப் பற்றி நான் அறியாது இருப்பது எங்கனம்?...உங்களது பொருட்கள் கலப்படம் செய்யப்பட்ட பொருட்கள்..இதோ சாட்சி" என்றுக் கூறியவாறே பாழான ரொட்டியையும், பாலையும் அவர்களுக்கு அவள் காட்டினாள். "உங்களது பொருட்கள் அனைத்தும் ஆற்றில் கொட்டிவிடவோ அல்லது எரித்து விடவோ உகந்தவை...அதற்கு மாறாக வேறு நல்ல பொருட்களை நீங்கள் வாங்க வேண்டும்" என்றே அவள் கூறினாள்.

அந்த பெண் அக்கடைகளின் முன்னர் தொடர்ந்து நின்றுக் கொண்டு அங்கே பொருட்களை வாங்க வரும் மக்களை நோக்கி அழைக்கத் துவங்கினாள்...அதனால் அம்மக்கள் சற்று குழம்பத் துவங்கினர்.

அந்த தைரியமான பெண்ணினால் தங்களது வணிகத்திற்கு ஆபத்து வரும் என்பதனைக் கண்ட அக்கடை முதலாளிகள் பொருட்களை வாங்க வந்து இருந்த மக்களைப் பார்த்து "இனிய மக்களே...பார்த்தீர்களா எவ்வளவு முட்டாளாக இப்பெண் இருக்கின்றாள் என்று..இவள் மக்களை பட்டினியால் சாக அடிக்க விரும்புகின்றாள். இவள் நம்மிடம் இருக்கும் அனைத்துப் பொருட்களையும் தண்ணீரில் கொட்டிவிடவோ அல்லது எரித்து விடவோ வேண்டும் என்கின்றாள். இவளது பேச்சினைக் கேட்டு பொருட்களை விற்பதை நிறுத்தி விட்டால் நீங்கள் எதனை உண்பீர்கள்?...ஆதலால் அவளுக்கு யாதொரு கவனத்தையும் செலுத்தாதீர்கள். அவள் பொருட்கள் என்றால் என்னவென்றே அறியாத ஒரு அகம் பிடித்த கிராமத்துப் பெண்...நம் மீது உள்ள பொறாமையால் அவள் நம்மைத் தாக்குகின்றாள். அவள் ஏழையாக இருப்பதனால் நாமும் ஏழையாக வேண்டும் என்றே அவள் விரும்புகின்றாள்." என்றே, அப்பெண் உண்மையில் பொருட்களை அழிக்க வேண்டும் என்றுக் விரும்பவில்லை மாறாக மக்களுக்கு தீய பொருட்களுக்கு பதிலாக நல்ல பொருட்களைத் தாருங்கள் என்றே விரும்பினாள், என்ற கருத்தினை நயவஞ்சகமாய் மறைத்து அவ்வணிகர்கள் அங்கே கூடி இருந்த மக்களிடத்துக் கூறினர்.

அதனைக் கெட்ட மக்கள் அப்பெண்ணைத் தாக்கவும் அவரை பல பேரிட்டு அழைக்கவும் துவங்கினர். அந்த பெண் எவ்வளவு தான், அவள் பொருட்களை அழிக்க விரும்பவில்லை மாறாக அனைவருக்கும் ஆரோக்கியமான உணவுப் பொருட்கள் கிடைக்க வேண்டும் என்றே விரும்புவதாகவும் தனது வாழ்க்கை முழுவதும் பிறருக்கும் தனக்கும் உணவிட்டே கழித்த அவள் எவ்வாறு உணவுப் பொருட்களை அழிக்க வேண்டும் என்று கூறுவாள் என்றும் எடுத்துக் கூறியும் அதனை அம்மக்கள் கூட்டம் கேட்க தயாராக இல்லை. அவள் எவ்வளவு நேரம் எடுத்து அவளது பக்க விடயங்களைக் கூறினாலும் அவற்றை மக்கள் பொருட்படுத்தவில்லை. ஏனெனில் அவர்களுக்கு இன்றியமையாத உணவை அவர்களிடம் இருந்து பறிப்பதற்கு அவள் விரும்பினாள் என்ற எண்ணம் அம்மக்களால் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டு விட்டு இருந்தது.

இதே நிலை தான் இன்றைய அறிவியலையும் கலையையும் ஒட்டி எனக்கு நேர்ந்தது. அறிவியல் மற்றும் கலையாகிய உணவினைத் தான் என் வாழ்நாள் முழுவதும் நான் உட்கொண்டு இருந்தேன், நலமாக இருந்தாலும் சரி அல்லது நோய் வாய்ப்பட்டு இருந்தாலும் சரி என்னால் எட்ட முடிந்த மக்களுக்கு அந்த உணவினை நான் வழங்கிக் கொண்டே இருந்து இருக்கின்றேன். இவைகள் ஆடம்பரமான பொருளாகவோ அல்லது வணிகப் பொருளாகவோ அல்லாது எனது உணவாக இருந்த காரணத்தினால் எவ்வித சந்தேகமுமின்றி உணவு எப்பொழுது உணவாக இருக்கின்றது என்றும் எப்பொழுது உணவினைப் போன்ற ஒரு பொருளாக இருக்கின்றது என்பதனையும் என்னால் அறிய முடியும். இன்றைய தினத்தில் சந்தையில் அறிவியல் மற்றும் கலை என்ற போர்வையில் விற்கப்பட்டுக் கொண்டிருந்த உணவினை நான் உண்டுப் பார்த்தப் பொழுதும், அதனை நான் அன்புக் கொண்டிருந்த பிறர்க்கு வழங்க முயற்சிச் செய்த பொழுதும் உணவு என்று அவர்கள் அளித்த பொருளில் பெரும் பகுதி உண்மையானதாக இல்லை என்பதை அறிந்துக் கொண்டேன். இவ்வாறு சந்தையில் கலை, அறிவியல் என்றப் பெயரில் இன்று விற்கப்படும் பொருட்கள் எனக்கும் எனக்கு நெருங்கியவர்களுக்கும் சேராமல் போனது மட்டுமல்லாமல் பெரும் தீங்காகவும் அமைந்ததை கண்டதன் மூலம், இன்று சந்தையில் விற்கப்படும் கலை மற்றும் அறிவியல் ஆகியவற்றில் பல தீமையான அந்நிய பொருட்கள் கலந்து இருந்து அவற்றை உண்மையான கலை மற்றும் அறிவியலிடம் இருந்து பிரிப்பதை என்னால் உறுதியாக அறிந்துக் கொண்டு கூற முடிந்தது.

இதனை நான் அப்பொருட்களை விற்பவர்களிடம் கூறிய பொழுது அவர்கள் கோபம் கொண்டு என்னை நோக்கி கத்தத் துவங்கினர். அவ்வாறே அவர்களின் பொருட்களை நான் அறிந்துக் கொள்ள முடியாது இருப்பதன் காரணம் நான் கல்லாதவனாக இருந்ததும் மேலும் அத்தகைய நுண்ணியமான பிரிவுகளை கையாளும் தன்மையினை பெற்று இல்லாது இருந்ததுமே ஆகும் என்ற எண்ணத்தினையும் என்மேல் அவர்கள் சுமத்த முயன்றனர்.

ஆனால், அத்தொழிலில் இருக்கும் வணிகர்கள் பலரும் தங்களுக்குள்ளேயே பிறரது பொருட்கள் ஏமாற்றுப் பொருட்கள் என்று கூறிக் கொள்வதனை நான் எப்பொழுது நிரூபிக்க ஆரம்பித்தேனோ, அனைத்து காலத்திலும் கலை மற்றும் அறிவியல் என்ற பெயரில் பெருவாரியாக எவை கெட்டதாகவும் தீமை பயப்பதாகவும் இருந்ததோ அதுவே மக்களுக்கு தரப்பட்டு வந்து இருக்கின்றது, அச்செயலே இன்று நமது காலத்திலேயும் தொடர்கின்றது என்ற விடயத்தை நியாபகப்படுத்தினேனோ, இப்பிரச்சனை சாதாரண பிரச்சனை அல்ல மாறாக உடலினை நஞ்சாக்குவதனை விட மிகக் கொடியதான ஆன்மீக சிந்தனைகளை நஞ்சாக்கும் தன்மைப் பெற்றது எனவே மிகப் பெரிய அக்கறையுடன் இப்பொருட்களை நாம் ஆராய்ந்து அவற்றின் விளைவுகளை கருத்தில் கொண்டு தீமை பயக்கும் அனைத்து விடயங்களையும் அவற்றில் இருந்து நீக்க வேண்டும் என்று கூறினேனோ, எப்பொழுது ஒரு மனிதனோ அல்லது ஒரு கட்டுரையோ அல்லது ஒரு புத்தகமோ என்னுடைய வாதத்தை தவறென்று நிருபிக்கவில்லை என்றுக் கூறினேனோ, அப்பொழுது அவர்கள் அனைவரும் எப்படி கடைகளில் இருந்த அனைவரும் அப்பெண்ணினைப் பார்த்து கத்தினார்களோ அவ்வாறு கத்தத் துவங்கினர்.

"இவன் கிறுக்கன்...இவன் நாம் எதன் வழி வாழுகின்றோமோ அவைகளான கலையையும் அறிவியலையும் அழிக்க வேண்டும் என்று எண்ணுகின்றான்..இவனைக் குறித்து எச்சரிக்கையாக இருங்கள்...அவனை கண்டுக் கொள்ளாதீர்கள்...!!!" என்று கூறி "இந்த வழியாக வாருங்கள் மேன்மக்களே...எங்களிடம் புத்தம் புதிதான இறக்குமதிப் பொருட்கள் இருக்கின்றன" என்றவாறே அவர்களது வணிகத்தை தொடர ஆரம்பித்தனர்.

தொடரும்...!!!

பி.கு:

இது இரசிய எழுத்தாளர் லியோ டால்ஸ்டாயின் கட்டுரையான 'Three Parables' என்பதன் ஒரு பகுதியின் எனது தமிழ் மொழிபெயர்ப்பே ஆகும்.

முந்தையப் பகுதி

முதல் உவமை:

நல்லதொரு மேய்ச்சல் நிலத்தில் களைகள் முளைத்து இருந்தன. அவற்றை நீக்குவதற்காக அந்த நிலத்தின் உரிமையாளர்கள் அந்த நிலத்தினை நன்கு உழுதனர். இருந்தும் களைகள் எண்ணிக்கையில் அதிகமாக வளரத் தான் செய்தன. ஒரு நாள் ஞானமுள்ள நல்ல மேய்ப்பவன் ஒருவன் அந்த நிலத்தின் உரிமையாளர்களைச் சந்தித்து, களைகளை அழிப்பதற்கு அதனை உழுவது பயன் தராது, அவ்வாறு செய்வது களைகளை மேன்மேலும் வளரத்தான் வழி வகுக்கும், மாறாக களைகள் வேரோடு பிடுங்கி எடுக்கப்பட வேண்டும் என்று அவர்களுக்கு தான் தந்த பல்வேறு அறிவுரைகளுடன் களைகளைப் பற்றியும் கூறிச் சென்றான்.

ஆனால் அந்த வயல்களின் சொந்தக்காரர்கள் அந்த நல்ல மேய்ப்பன் கூறிய பல கூற்றுக்களுள் களைகளைப் பற்றியக் கூற்றினை கவனிக்காது விட்டதினாலோ, அல்லது அவரது கூற்றினை அவர்களால் புரிந்துக் கொள்ள முடியாத காரணத்தினாலோ, அல்லது அவர்களது சொந்த காரணத்தினால் களைகளைப் பற்றிய கூற்றினை பின்பற்ற விரும்பாததினாலோ, களைகளைக் களைவதனைப் பற்றிய அந்த மேய்ப்பனின் கூற்று, அது கூறப்பட்டே இருக்காததனைப் போலவே நிறைவேற்றப்படாது போயிற்று. மக்களும் தொடர்ந்து களைகளை உழுத வண்ணமாய் அதனைப் பரப்பிக் கொண்டு இருந்தனர்.

தொடர்ந்த சில வருடங்களில் சில மனிதர்கள் வயல்களைப் பற்றியும் அந்த நல்ல மேய்ப்பனின் கூற்றினைப் பற்றியும் அந்த வயல்களின் சொந்தக்காரர்களுக்கு நினைவுப்படுத்தினாலும், அவர்களின் கூற்றிற்கும் யாதொரு கவனமும் தரப்படவில்லை.

அந்த வயல்களின் சொந்தக்காரர்கள் தாங்கள் முன்னர் செய்துக் கொண்டிருந்ததைப் போலவே தொடர்ந்து செய்யத் துவங்கினர். அதனால் களைகளைக் கண்ட உடன் அதனை உழுது விடுவது என்பது அவர்களுக்கு ஒரு பழக்கமாக மட்டும் ஆனதோடு நில்லாமல் ஒரு புனித சடங்காகவே மாறிவிட்டது. அச்செயல்களால் அந்த வயலும் களைகளால் நிரப்பப்பட்டுக் கொண்டு இருந்தது. விரைவில் களைகளைத் தவிர வேறொன்றும் இல்லாத நிலைக்கு அந்த வயல் சென்று விட்டு இருந்தது.

மக்கள் குறைக் கூறிக் கொண்டே இப்பிரச்சனைக்கு தீர்வினைக் காண பல முறைகளை சிந்திக்க ஆரம்பித்தனர், ஆனால் நீண்ட நாட்களுக்கு முன்னர் அவர்களுக்கு அந்த நல்ல மேய்ப்பனால் கூறப்பட்டு இருந்த தீர்வினை அவர்கள் பயன் படுத்தவில்லை.

இந்நிலையில் தான் ஒரு மனிதன், வயலின் அந்த இழிவான தீய நிலையினைக் கண்டு, அதற்குத் தீர்வாய் களைகளை உழக் கூடாது மாறாக அவற்றை வேரோடு புடுங்க வேண்டும் என்ற விதியினை நீண்டகாலமாய் மறக்கப்பட்டு இருந்த அந்த மேய்ப்பனின் கூற்றுகளில் இருந்து அறிந்துக் கொண்டு, அந்த வயலின் சொந்தக்காரர்களிடம் அவர்கள் முட்டாள்தனமாக நடந்துக் கொண்டார்கள் என்றும் அவர்களின் ஞானமின்மை நீண்ட காலத்திற்கு முன்னரே விவேகமும் நற்குணமும் மிக்க அந்த மேய்ப்பனால் சுட்டிக்காட்டப் பட்டு இருந்தது என்றும் கூறி அவர்களுக்கு அந்த மேய்ப்பன் கூறிய தீர்வினை நினைவுப்படுத்தினார்.

ஆனால், அந்த மனிதன் அவர்களுக்கு நினைவுப்படுத்திய தீர்வு சரியா என்பதனை ஆராயாமலும், அது சரியானதொன்றாக இருப்பின், களைகளை உழுவதை நிறுத்தியும், அல்லாது அத்தீர்வு தவரானதொன்றாக இருப்பின், அவர்களுக்கு நினைவூட்டிய அவனுக்கு அவனது கூற்றில் இருக்கும் பிழையினை நிரூபிக்கவோ அல்லது அந்த நற்குணமிக்க விவேகம் மிகுந்த மேய்ப்பனின் கூற்றுகள் அடிப்படை அற்றவை என்றும் அக்கூற்றுகள் அவர்களுக்கு ஒவ்வாதவை என்றும் கூற முயலாமலும், அந்த வயலின் உரிமையாளர்கள், மேலே கூறிய எவற்றையும் செய்யாது, அந்த மனிதன் அவர்களுக்கு நினைவூட்டியதற்காக அவன் மீது கோபம் கொண்டு அவனைத் திட்ட ஆரம்பித்தனர். சிலர் அவனை, அவன் மட்டுமே அந்த நல்ல மேய்ப்பனின் கூற்றினை அறிந்தவன் என்று கற்பனை செய்துக் கொண்ட அறிவில்லாத தற்பெருமைகாரன் என்றனர். சிலர் அவனை வன்மம் மிகுந்த தவறான கருத்தினைப் பரப்புபவன் என்றனர். சிலர், அவன் அவனது கருத்தினைக் கூறவில்லை மாறாக உலகம் முழுவதும் மதிக்கப்படும் அந்த மேய்ப்பனின் கூற்றினைத் தான் அவர்களுக்கு அவன் நினைவுப்படுத்தி இருக்கின்றான் என்பதனை மறந்து அவனை ஆபத்தானவன் என்றும், அவன் உலகம் முழுவதும் களைகளைப் பரப்பி மக்களின் நிலத்தை அவர்களிடம் இருந்து பறிப்பவன் என்றும் கூறினர்.

"இவன் நாம் நமது வயல்களில் விளைந்த களைகளை உழக் கூடாது என்றுக் கூறுகின்றான். ஆனால் நாம் களைகளை அழிக்காது விட்டோம் என்றால் அந்த களைகள் எண்ணிக்கையில் வளர்ந்து நமது முழு வயலையுமே பாழாக்கி விடும். நமக்கு எதற்காக வயல் தரப்பட்டு இருக்கின்றது...களைகளை வளர்க்கவா?" என்று வேண்டுமென்றே 'அவன் களைகளை அழிக்க வேண்டாம் என்கின்றான்' என்று அவனது கூற்றினைத் திரித்துக் கூறுகின்றனர்.(அவன் களைகளை உழாதீர்கள் மாறாக அவற்றை வேரோடு புடுங்குங்கள் என்றே கூறி இருந்தான்)

அந்த மனிதன் பையித்தியக்காரன் என்ற எண்ணமோ அல்லது கருத்தினைத் திரிப்பவன் என்ற எண்ணமோ அல்லது மக்களின் வீழ்ச்சியை கருத்தில் கொண்டிருப்பவன் என்ற எண்ணமோ அனைவராலும் அவர்களின் எண்ணப்படி உறுதிசெய்யப்பட்டு விட்டதனால் அனைவரும் அவனை திட்டவோ அல்லது கேலி செய்யவோ துவங்கினர்.

அந்த மனிதன் அவர்களுக்கு எவ்வளவு தான் 'களைகளை பரப்புவது அவனது எண்ணம் அல்ல மாறாக ஒரு விவசாயியின் முக்கியக் கடமை களைகளை அழிப்பதே ஆகும் என்ற கொள்கையே அவன் எண்ணமாகும் என்றும் இதுவே அவன் அவர்களுக்கு நியாபகப்படுத்திய கூற்றினைக் கூறிய மேய்ப்பனின் புரிதலுமாகும்' என்று எடுத்துக் கூறி அவர்களுக்கு புரிய வைக்க முயற்சி செய்தாலும் அவர்கள் அவனைக் கண்டுக் கொள்ள வில்லை.

அவர்கள் உறுதியாக முடிவு செய்து விட்டு இருந்தனர் ஒன்று அவன் பையித்தியக்காரனாகவோ அல்லது தலைக்கனம் மிக்கவனாகவோ இருந்து வேண்டுமென்றே அந்த நற்குணமிக்க விவேகமான மேய்ப்பனின் கூற்றினை திரித்துக் கூறிக்கொண்டு இருக்கின்றான் என்றோ, அல்லது மக்களை களைகளை அழிக்க அழைக்காது களைகளை வைத்துக் கொண்டு அவற்றை வளர்க்க முயலும் ஒரு அயோக்கியன் என்றோ அவர்கள் முடிவு செய்து விட்டு இருந்தனர்.

அதே நிலைமை தான் நான் எப்பொழுது தீமையை எதிர்க்காது இருப்பதனைப் பற்றிய சுவிசேசத்தின் கூற்றினைப் பற்றிக் கூறிய பொழுது எனக்கும் நிகழ்ந்தது. தீமையை வன்முறையால் எதிர்க்காது இருப்பது என்ற விதியானது கிருத்துவால் கூறப்பட்டு, அவருக்கு பின்னர் அவருடைய உண்மையான சீடர்களால் எக்காலமும் கூறப்பட்டும் கடைபிடிக்கப்பட்டும் வந்துள்ளது. ஆனால் இவ்விதியினை அவர்கள் கவனிக்காததினாலையோ அல்லது இவ்விதியினை அவர்களால் புரிந்துக் கொள்ள இயலாததினாலையோ, அல்லது இந்த விதியினை பின்பற்றுவது என்பது அவர்களுக்கு கடினமான ஒன்றாக இருந்ததினாலையோ காலப்போக்கில் இவ்விதி மறக்கப்பட்டு விட்டது. இது இன்று எந்த நிலைமைக்கு வந்து விட்டது என்றால், இந்த விதியானது மக்களால் ஏதோ கேள்விப்படாத புதிய ஒன்றினைப் போலவும், விசித்திரமானதைப் போலவும் ஏன் பையித்தியக்காரத்தனமாகவும் கருதப்படும் நிலைக்கு வந்து விட்டது.

களைகளை உழக் கூடாது மாறாக அவற்றை வேரோடு புடுங்க வேண்டும் என்ற அந்த நற்குணமுள்ள விவேகமான மேய்ப்பனின் பழைய கூற்றினை மக்களுக்கு நினைவூட்டிய மனிதனுக்கு என்ன நேர்ந்ததோ அதுவே தான் எனக்கும் நேர்ந்தது.

அந்த வயல்களின் உரிமையாளர்கள் எவ்வாறு 'களைகளை அழிக்க வேண்டாம் என்றுக் கூறவில்லை மாறாக தெளிவான முறையில் அவற்றை அழிக்க வேண்டும்' என்ற அவனது அறிவுரையை கள்ள மௌனத்தினால் மறைத்து "இவன் பையித்தியக்காரன்...களைகளை அழிக்காது அவற்றை பெருக்க வேண்டும் என்று நம்மிடம் கூறுகின்றான்" என்று கூறினரோ, அதே வகையில் 'கிருத்துவின் கூற்றின்படி தீமையை அழிக்க அதனை வன்முறையால் எதிர்கொள்ளாது இருப்பது தேவையாகும்...அன்பின் வேர்களாளையே தீமையை அழிப்பது தேவையாகும்' என்ற எனது கூற்றிற்கு பதிலாக "இவன் கூறுவதை நாம் கேட்க மாட்டோம்...இவன் பையித்தியக்காரன்...தீமை நம்மை அழிப்பதற்கு ஏதுவாக நாம் தீமையை எதிர்க்கக் கூடாது என்று அறிவுரை செய்கின்றான்" என்று கூறுகின்றனர்.

நான் என்ன கூறினேன் என்றால், கிருத்துவின் கூற்றுகளின்படி, தீமையை தீமையால் அழிக்க முடியாது...தீமையை வன்முறையால் எதிர்க்கும் ஒவ்வொரு தருணமும் தீமையை வளர்க்கவே செய்கின்றது...தீமை நன்மையினாலையே அழிக்கப்படுகின்றது. "உங்களை சபிப்பவர்களை ஆசீர்வதியுங்கள்...உங்களுக்கு தீமை செய்பவர்களுக்கு நன்மை செய்யுங்கள்...உங்களது எதிரிகளை நேசியுங்கள்..." - உங்களுக்கு எதிரிகளே இருக்க மாட்டார்கள்.

கிருத்துவின் போதனைகளின்படி மனிதனின் வாழ்க்கை முழுவதுமே தீமையோடு நிகழும் ஒரு போராட்டம் தான் என்றும் அன்பையும் அறிவையும் துணையாய் கொண்டு தீமையை எதிர்க்கும் ஒரு போராட்டமே அது என்றும் தீமையை தீமையால் எதிர்க்கும் வழியை கண்டித்து அதனை தீமையை எதிர்க்கும் மற்ற வழிகளில் இருந்து கிருத்து விலக்கி வைத்து இருக்கின்றார் என்றே நான் கூறி இருந்தேன்.

எனது இந்த வார்த்தைகள் தீமையை எதிர்க்கவே கூடாது என்றே அர்த்தம் கொள்ளும் வண்ணம் புரிந்துக்கொள்ள பட்டு இருக்கின்றன. யாருடைய வாழ்க்கை வன்முறையை அடிப்படையாக கொண்டு அமைந்து இருக்கின்றதோ, அதனால் யாருக்கு வன்முறை நெருக்கமானதொன்றாக இருக்கின்றதோ அவர்கள் எனது வார்த்தையினையும் கிருத்துவின் வார்த்தையினையும் அந்த வடிவத்திலையே ஏற்றுக் கொண்டு, தீமையை வன்முறையால் எதிர்க்கக் கூடாது என்ற கூற்று பொய் என்றும், முட்டாள்தனமானது என்றும் ஆபத்தானது என்றும் அறிவிக்கின்றனர்.

இதனால் மக்களும் அமைதியாக தீமையை ஒழிக்கின்றோம் என்ற தோற்றத்தில் பெருமளவு தீமையை வளர்த்துக் கொண்டே இருக்கின்றனர்.

தொடரும்...!!!

பி.கு:

இது இரசிய எழுத்தாளர் லியோ டால்ஸ்டாயின் கட்டுரையான 'Three Parables' என்பதன் ஒரு பகுதியின் எனது தமிழ் மொழிபெயர்ப்பே ஆகும்.

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு