சமீபமாக சார்லி சாப்ளின் அவர்களின் திரைப்படங்களைக் காணும் வாய்ப்பு கிட்டியது. மிகவும் அருமையானத் திரைப்படங்கள். விவரங்கள் ஏதும் அறியாத சிறு வயதினில் சார்லி சாப்ளின் அவர்களின் படங்களைக் கண்டதற்கும் இப்பொழுது காண்பதற்கும் மாபெரும் வித்தியாசங்கள் இருப்பதை உணர்கின்றேன். சிறு வயதில் எனது கண்களுக்கு வெறும் நகைச்சுவைக் கதாநாயகனாக மட்டுமே தெரிந்த அவர், இன்றோ ஒரு மாபெரும் திறமையினைக் கொண்ட உன்னதக் கலைஞனாகவே புலப்படுகின்றார். அப்படிப்பட்ட ஒரு கலைஞன் நம்மிடம் விட்டுச் சென்ற படைப்புகளில் என்னைக் கவர்ந்த விடயங்களை உங்களிடம் பகிர்ந்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தினாலேயே இப்பதிவு.
 
 தி கிரேட் டிக்டேடர் : (The Great Dictator)
முதலாம் உலக யுத்தத்தின் இறுதிக் காலத்திற்கும் இரண்டாம் உலக யுத்தம் துவங்கப் பெறும் காலத்திற்கு சற்று முந்தைய காலத்திற்கும் இடையே உள்ள கால இடைவெளியில் நிகழ்வதாக அமைந்துள்ள இக்கதையில் இரண்டு முக்கியமான வேடங்களில் சார்லி சாப்ளின் நடித்து உள்ளார்.

ஒன்று செர்மானிய சர்வாதிகாரி - ஹிட்லர்
மற்றொன்று ஹிட்லரின் காலத்தில் செர்மானியில் வாழும் சவரத் தொழில் செய்யும் யூதர்.

இவ்விரண்டு கதாபாத்திரங்களையும் அக்காலத்தில் நிகழ்ந்த நிகழ்வுகளையுமே வைத்தே கதை நகர்கின்றது.

ஹிட்லரின் யூத எதிர்ப்புச் சிந்தனை, நாடு பிடிக்கும் ஆசை, சந்தர்ப்பவாத அரசியல் ஆகியன ஒரு புறமும், யூதர்கள் செர்மானியர்களால் பட்ட கடினங்கள், இழப்புகள் ஆகியன மற்றொரு புறமும் நேர்த்தியாகவும் நகைச்சுவையாகவும் உணர்வுப்பூர்வமாகவும் அவ்விரண்டு கதாபாத்திரங்களின் வாயிலாக விளக்கப்படுகின்றன.

இந்நிலையில் சந்தர்ப்ப சூழ்நிலையால் செர்மனி ஆஸ்திரியா நாட்டின் மீது படை எடுக்கத் துவங்கும் முன் தவறுதலாக யூத சவரக்காரர் என்று எண்ணப்பட்டு ஹிட்லர் கைது செய்யப்படும் நிகழ்வும், ஹிட்லர் என தவறுதலாக அந்த யூத சவரக்காரரும் எண்ணப்படும் நிகழ்வும் நிகழ (இருவரும் உரு அமைப்பில் ஒருவரைப் போலவே இருப்பர்) ஒரு மாபெரும் ஆள் மாறாட்டம் நிகழ்கின்றது. உண்மையான ஹிட்லர் சிறையில் அடைக்கப்படுகின்றார். யூதரான சவரக்காரரோ செர்மானியப் படைக்கு தலைமை தாங்கும் பணியில் அமர்த்தப்படுகின்றார்.

இந்நிலையில் செர்மனி ஆஸ்திரியா மீது படை எடுத்து மாபெரும் வெற்றியும் பெறுகின்றது. அவ்வெற்றி விழாவில் ஹிட்லரின் பேச்சினைக் கேட்க அனைவரும் ஆவலாக இருக்கின்றனர். மிக முக்கியமான அந்த காட்சியினையும் அக்காட்சியில் ஹிட்லராக இருந்த அந்த யூத சவரக்காரர் ஆற்றிய உரையையுமே நாம் காண வேண்டி இருக்கின்றது.

முதலில் வெற்றியினைப் பற்றி பேச செர்மனியின் செய்தித் தொடர்பு/பிரச்சாரத் துறை அமைச்சர் வருகின்றார்.

பிரச்சாரத் துறை அமைச்சர் : "தகுதி உடையவர்களுக்கே வெற்றி வந்துச் சேரும். இன்றைக்கு சனநாயகம், சமத்துவம், சுதந்திரம் என்பன மக்களை ஏமாற்றுவதற்கு பயன்படும் வார்த்தைகள். அத்தகைய சிந்தனைகளைக் கொண்டு எந்தொரு தேசமும் முன்னேற முடியாது. நம்முடைய முன்னேற்ற நடவடிக்கைகளின் வழியிலே தடையாய் அவை இருக்கின்றன. எனவே அவைகள் நீக்கப்படவேண்டும்.

எதிர்காலத்தில் ஒவ்வொரு மனிதனும் நாட்டின் தேவைக்கே பூரணப் பணிவுடன் சேவை செய்ய வேண்டும். யூதர்கள் மற்றும் ஏனைய ஆரியர் அல்லாதவர்களிடம் இருந்து குடி உரிமை பறிக்கப் படும். அவர்கள் தாழ்ந்தவர்கள். நாட்டின் எதிரிகளும் ஆவர். எனவே அவர்களை வெறுப்பது அனைத்து உண்மையான ஆரியர்களுக்கும் கடமை ஆகின்றது.

இதோ இன்று இந்த ஆஸ்திரிய நாடு செர்மானியப் பேரரசுடன் இணைக்கப்பட்டு விட்டது. இந்த தேசத்தின் மக்கள் நம் மீது நம்முடைய மாபெரும் தலைவரால் சுமத்தப்படும் விதிகளுக்கு கட்டுப்படவேண்டும். இதோ செர்மானியாவின் சர்வாதிகாரி...ஆஸ்திரியாவினை வெற்றிக் கொண்ட வீரர்...உலகத்தின் எதிர்காலச் சக்கரவர்த்தி..!!!

(என்று ஹிட்லர்ஐ பேச அழைக்கின்றார். யூத சவரக்காரரோ (ஹிட்லர் வேடத்தில் உள்ள சாப்ளின் முழிக்கிறார். அப்பொழுது அவருடைய உண்மையான முகத்தினை அறிந்த தளபதி ஒருவர் அவரை பேசச் சொல்கின்றார்.)

தளபதி (சவரக்காரரின் காதில்) : போய் பேசு...!!!
ஹிட்லர் (சவரக்காரர்) : என்னால் முடியாது...!!!
தளபதி : நீ பேசித்தான் ஆக வேண்டும்...அது தான் நமக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை.

நம்பிக்கை என்ற சொல்லினைக் கேட்ட உடன் மெதுவாக அதனைத் தனக்குள் சொல்லியவாறே கூடி இருக்கும் கூட்டத்தினை நேர்கொண்டு பேச தயாராகிறார் ஹிட்லர்.

ஹிட்லர் (சவரக்காரர்) : என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்...ஆனால் நான் பேரரசனாக ஆக வேண்டும் என்று விரும்பவில்லை. அது என்னுடைய பணியும் அல்ல. நான் யாரையும் ஆள வேண்டும் என்றோ அல்லது வெற்றிக் கொள்ள வேண்டும் என்றோ விரும்பவில்லை. முடியுமானால் நான் பிறருக்கு உதவி செய்யவே விரும்புகின்றேன்...அது யூதனாக இருக்கட்டும்..கருப்பராக இருக்கட்டும்...அல்லது வெள்ளையராக இருக்கட்டும். நாம் அனைவரும் ஒருத்தருக்கு ஒருத்தர் உதவி செய்யவே விரும்புகின்றோம். மனிதர்கள் இயல்பிலேயே அப்படித்தான். ஒவ்வொருவரது மகிழ்ச்சியினாலேயே நாம் வாழ விரும்புகின்றோமே அல்லாது மற்றவர்களின் துன்பத்தினால் அல்ல. நாம் ஒருத்தரை ஒருத்தர் வெறுக்கவோ அல்லது கடிந்துக் கொள்ளவோ விரும்புவதில்லை.

இந்த உலகில் அனைவருக்கும் இடம் இருக்கின்றது. இந்த நல்ல உலகு வளம் வாய்ந்தது...நம்முடைய அனைவரின் தேவையையும் அதனால் பூர்த்திச் செய்ய முடியும். சுதந்திரமானதாகவும் அழகானதாகவும் நமது வாழ்க்கையின் வழியினால் இருக்க முடியும்...ஆனால் நாம் நமது வழியினைத் தொலைத்து விட்டோம்.

பேராசை, மனிதனின் ஆன்மாவை நஞ்சாக்கி விட்டது, வெறுப்பினால் இவ்வுலகை அடைத்து விட்டது, நம்மை துயரத்திற்கும் இரத்தம் சிந்துதலுக்கும் ஆளாக்கி விட்டது.

நாம் வேகத்தை உருவாக்கி விட்டோம்...ஆனால் நம்மை நாமே உள்ளே வைத்துப் பூட்டிக் கொண்டோம். அதிகமான உற்பத்தியினைச் செய்யும் செய்யும் இயந்திரங்கள் நம்மை இல்லாமையிலேயே விட்டு விட்டன. நமது அறிவு நம்மை சுயநலவாதியாக மாற்றி விட்டது. நமது புத்திக்கூர்மை, அன்பில்லாதவனாகவும் கல்நெஞ்சக்காரனுமாகவே நம்மை மாற்றி விட்டது. நாம் நிறைய சிந்திக்கின்றோம்...ஆனால் மிகக் குறைவாகவே உணருகின்றோம்.

இயந்திரங்களை விட மனிதத்தன்மையே நமக்கு தேவை. புத்திக்கூர்மையை விட அன்பும் எளிமையுமே நமக்குத் தேவை. இக்குணங்கள் இல்லாமல் வாழ்க்கை என்பது வன்முறையான ஒன்றாக மாறி விடும்...அனைத்தும் தொலைந்து விடும்...

வானூர்தியும், வானொலியும் நம்மை மிக அருகில் கொண்டு வந்துள்ளன...இத்தகைய கண்டுபிடிப்புகளின் இயல்புகளே மனிதனுள் இருக்கும் நன்மையினை நோக்கி குரல் எழுப்புகின்றன...உலகளாவிய சகோதரத்துவத்தினை நோக்கி குரல் எழுப்புகின்றன...நம் அனைவருடைய ஒற்றுமைக்காகவும் அவை குரல்கள் எழுப்புகின்றன.

இப்பொழுதும் கூட என்னுடைய குரல் இலட்சக்கணக்கான மக்களைச் சென்றடைந்துக் கொண்டிருக்கின்றது, துயரத்திலும் துன்பத்திலும் உழன்றுக் கொண்டிருக்கும் இலட்சக்கணக்கான ஆண்கள், பெண்கள், சிறு குழந்தைகள் என்று, அப்பாவிகளை தண்டிக்கவும் சிறையில் அடைக்கவும் மனிதர்களை அனுமதிக்கும் ஒரு இயக்கத்தினால் பாதிக்கப்பட்டவர்களை சென்றடைந்துக் கொண்டிருக்கின்றது.

என்னுடைய பேச்சினைக் கேட்டுக் கொண்டிருக்கும் அனைவருக்கும் நான் சொல்லுகின்றேன்...கவலைக் கொள்ளாதீர்கள். நம் மீது இப்பொழுது இருக்கும் துயரம் நம்மைக் கடந்துச் செல்லும் பிறரின் பேராசையே அன்றி வேறல்ல...மனித குலம் முன்னேறிக் கொண்டிருக்கும் பாதையினைக் கண்டு அஞ்சும் சில மனிதர்களின் கடினத்தன்மையே அன்றி வேறல்ல. மனிதர்களின் வெறுப்பு கடந்து சென்று விடும்...சர்வாதிகாரிகள் மரணமடைவர்...எந்த மக்களிடம் இருந்து அவர்களால் உரிமைகள் பறிக்கப்பட்டனவோ அவ்வுரிமைகள் மீண்டும் மக்களிடத்தே சென்று சேரும். மனிதர்கள் மரணித்துக் கொண்டு இருக்கும் வரை சுதந்திரம் அழிவதில்லை.

வீரர்களே...!!! உங்களை நீங்களே அயோக்கியர்களிடம் ஒப்புக் கொடுக்காதீர்கள்...எவன் உங்களை வெறுக்கின்றானோ...எவன் உங்களை அடிமைப்படுத்துகின்றானோ...உங்களின் வாழ்வையே படைப் பிரிவுகளில் அடைக்கின்றானோ...நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்றும் எதனை சிந்திக்க வேண்டும் என்றும் எதனை உணர வேண்டும் என்றும் முடிவு செய்கின்றானோ...உங்களை பயிற்றுவித்து, உணவினைக் கட்டுப்படுத்தி...மாடுகளைப் போல் நடத்தி...உங்களை ஆயுதங்களுக்கு தீனியாக எவன் எண்ணுகின்றானோ அவனிடம் உங்களை நீங்களே ஒப்புக் கொடுக்காதீர்கள்.

இயந்திர மனம் மற்றும் இயந்திர இதயத்தினைக் கொண்டு இயந்திர மனிதனாகவே இருக்கும் அத்தகைய செயற்கை மனிதர்களுக்கு உங்களை நீங்களே ஒப்புக் கொடுக்காதீர்கள். நீங்கள் இயந்திரங்கள் அல்ல...நீங்கள் ஆட்டு மந்தைகளும் அல்ல...நீங்கள் மனிதர்கள்...உங்களுடைய இதயத்தில் மனிதத்தில் மேல் ஒரு காதலை நீங்கள் கொண்டு இருக்கின்றீர்கள். நீங்கள் எவரையும் வெறுப்பதில்லை...அன்பில்லாதவர்களே வெறுக்கின்றார்கள்...அன்பில்லாதவர்களும் செயற்கையான மனிதர்களுமே வெறுக்கின்றனர். வீரர்களே...!!! அடிமைத்தனத்திற்காக போராடாதீர்கள்...சுதந்திரதிற்காகப் போராடுங்கள்.

தூய லூக்காவின் 17 வது அத்தியாயத்தில் எழுதப்பட்டு உள்ளது..."கடவுளுடைய இராஜ்யம் மனிதனுள் உள்ளது" என்று. ஒரு மனிதனுக்குள் மட்டும் அல்ல...ஒரு குழுவினைச் சார்ந்த மனிதர்களுக்கும் மட்டும் அல்ல...ஆனால் அனைத்து மனிதர்களுக்குள்ளும் 'கடவுளுடைய இராஜ்யம்' உள்ளது. உங்களிடமும் உள்ளது. நீங்கள், மக்களாகிய உங்களிடம் ஆற்றல் இருக்கின்றது...இயந்திரங்களை உருவாக்கும் ஆற்றல். மகிழ்ச்சியினை உருவாக்கும் ஆற்றல். நீங்கள், மக்களாகிய நீங்கள், இந்த வாழ்வினை சுதந்திரமானதாகவும் அழகானதாகவும், இந்த வாழ்க்கையை ஒரு அற்புதமான சாகசமாக ஆக்கும் ஆற்றலைப் பெற்று இருக்கின்றீர்கள்.

எனவே, சனநாயகத்தின் பெயரால்...அந்த ஆற்றலை நாம் பயன்படுத்துவோம்...நாம் அனைவரும் ஒன்றுபடுவோம். ஒரு புதிய உலகிற்காக, மனிதர்களுக்கு வேலைகளையும், இளைய தலைமுறையினருக்கு நல்ல எதிர்காலத்தையும், முதியோர்களுக்கு பாதுகாப்பும் தரக்கூடிய ஒரு நல்ல உலகிற்காக நாம் போராடுவோம். இவற்றை தருவோம் என்று உறுதிமொழிகளைத் தந்துவிட்டே அயோக்கியர்கள் அதிகாரத்தினைக் கைப்பற்றி இருக்கின்றனர். ஆனால் அவர்கள் பொய் கூறுகின்றனர். அவர்களது உறுதிமொழிகளை அவர்கள் நிறைவேற்றுவது இல்லை...நிறைவேற்றவும் மாட்டார்கள்.

சர்வாதிகாரிகள் தங்களை சுதந்திரமாக்கிக் கொள்கின்றனர் ஆனால் மக்களை அடிமைப்படுத்துகின்றனர். இப்பொழுது அந்த உறுதிமொழிகளை நிறைவேற்றுவதற்காக நாம் போராடுவோம். இந்த உலகத்தை விடுவிப்பதற்காக நாம் போராடுவோம்...தேசிய எல்லைக்கோடுகளை நீக்குவதற்காக, பேராசை, வெறுப்பு, பொறுமை இல்லாதத்தன்மை ஆகியவற்றை நீக்குவதற்காக நாம் போராடுவோம். அர்த்தமுள்ள ஒரு உலகிற்காக, எந்த உலகில் அறிவியலும் முன்னேற்றமும் மனிதனின் மகிழ்ச்சிக்கு வழிவகுக்குமா அந்த உலகிற்காக நாம் போராடுவோம். வீரர்களே..!!! சனநாயகத்தின் பெயரால் நாம் ஒன்றுபடுவோம்...!!!

(வீரர்களின் பலத்த கைதட்டலின் நடுவே தனது உரையினை முடித்துக் கொள்கின்றார்). நிற்க!!!

சார்லி சாப்ளினின் மிகவும் பிரசித்திப் பெற்றப் பேச்சினையே மேலே தந்துள்ளேன். மனித குலத்திற்கு அதனில் முக்கியமான பல விடயங்கள் அடங்கி உள்ளன. அவற்றை அறிவதும்...சிந்திப்பதும்...செயல்படுவதும் ஆகிய செயல்களே மனித குலத்தினை அன்பின் அடிப்படையிலான சமூகமாக அமையச் செய்யும்.

அன்பின் அடிப்படையிலானதொரு சமூகத்தினை அமைத்துச் செல்ல வேண்டிய கடமை நம் ஒவ்வொருவரிடமும் இருக்கின்றது. நன்றி

பி.கு:

இந்த உரையின் ஆங்கில மூலத்தினைக் காண இந்த இணைப்பினை சொடுக்கவும்

சாப்ளின் உரை

இந்தக் காட்சியினைக் காண இந்த இணைப்பினைச் சொடுக்கவும்

காட்சி

இது வரை நாம் கண்ட விடயங்களின் படி இன்றைக்கு சமூகத்தில், பிரச்சனைகளின் காரணிகளைத் தீர்ப்பதனை விட தற்காலிக தீர்வினை தருவதனையே உதவியாக பல மக்கள் செய்துக் கொண்டு இருக்கின்றனர் என்றே நாம் கண்டு இருக்கின்றோம்.

மக்கள் அவ்வாறு நிரந்திரத் தீர்வினை நாடாது தற்காலிகமான தீர்வினை நாடுவதன் காரணம், அவர்கள் உதவுவதற்கு தயாராக இருந்த போதிலும்...அந்த உதவியினால் அவர்களுக்கோ அல்லது அவர்களது இயல்பான வாழ்க்கைக்கோ அல்லது குடும்பத்திற்கோ எவ்வித பிரச்சனைகளும் வரக் கூடாது என்ற எண்ணம் அவர்களுக்குள் பலமாக இருக்கின்றது.

உண்மையில், பிரச்சனைகள் ஏதுமின்றி நிரந்தரமானத் தீர்வுகள் கிட்டப்பெறும் என்றால் மேலே நாம் கண்ட மக்கள் நிச்சயம் மனமார அதனையே தீர்வாக விரும்புவர் என்பதில் நமக்கு மாற்றுக் கருத்துக்கள் இல்லை. இவர்கள் நிரந்திரத் தீர்வினை நாடாது இருப்பதன் காரணம் இன்றைய உலகநடப்பில் நிரந்தரத் தீர்வுகள் என்பது மிகுந்த பிரச்சனைகளுடன் இருப்பதனால்தான்.

உதவ வேண்டும் என்று அவர்கள் அன்பின் உந்துதலால் முன்வந்தாலும்...பிரச்சனைகள் எழக் கூடும் என்ற பயத்தின் காரணத்தினால் அவர்களது உதவியினை பிரச்சனைகள் எழா வண்ணம் சுருக்கிக் கொள்கின்றனர்.

அன்பு என்னும் உணர்ச்சியினை பயம் என்ற உணர்ச்சி கட்டுப்படுத்தி விடுகின்றது. இது தான் பிரச்சனை.

ஒரு சராசரி மனிதனின் சிந்தனை இன்றைக்கு "நான் உதவி செய்யணும்னு தாங்க நெனைக்கிறேன்...ஆனா அடுத்தவங்களுக்கு உதவி பண்ண போயி பிரச்சனை அது இதுன்னு எல்லாம் உட்கார நமக்கு நேரம் இல்லைங்க...ஏற்கனவே வேலை, குடும்பம் அப்படின்னு நம்மள பாக்குறதுக்கே நேரம் இல்லை...இதுல பெரிய மாற்றம் போராட்டம் அப்படின்னு எல்லாம் போனா நம்ம பாடே திண்டாட்டம் ஆகிடும்...ஏதோ நம்மளால மனசுக்கு சரி அப்படின்னு தோணுற உதவியப் பண்ணோமா சரி அப்படின்னு இருக்குறது தாங்க சரி.." என்றவாறு தான் இருக்கின்றது.

அதாவது அவனது சிந்தனை அவனையும் அவனைச் சார்ந்தவர்களையுமே முன்னிலையில் வைத்து இருப்பதாக இருக்கின்றது. இது ஒரு சராசரி மனிதனின் இயல்பு தான்...இதனை நாம் குறை கூற முடியாது.

ஆனால் மனிதன் சராசரி அல்லவே...!!!

இவ்வுலகத்தை மாற்றும் வல்லமையையும் அழிக்கும் வல்லமையையும் அவன் பெற்று இருக்கின்றான்...அவனது செயல்களே இன்று சமூகங்களையும் பெரிய மாற்றங்களையும் உருவாக்கி இருக்கின்றன. உண்மையைக் கூற வேண்டும் என்றால் இந்த உலகமே அவனது கட்டுக்குள் இருக்கின்றது.

இந்நிலையில் அத்தகைய வல்லமையைப் பெற்ற ஒருவன் "நான் என்னை மட்டுமே கண்டு கொண்டு இருப்பேன்...மற்ற வேலைகளுக்கு நேரம் இல்லை" என்ற எண்ணத்துடன் இருப்பானாயின் அது அவனுக்குரிய கடமைகளை அவன் செய்யாது பயத்தாலும் சுயநலத்தாலும் கட்டுப்படுத்தப்பட்டு இருக்கின்றான் என்றே புலனாகின்றது.  இது அவனுக்கும் சரி சமூகத்திற்கும் சரி தீங்கு விளைவிக்கும் ஒரு நிலை ஆகும்.

"உன்னுடைய உரிமை செய்யும் காரியம் மட்டுமே...காரியத்தின் முடிவும் பயனும் உன் உரிமையல்ல...பயனில் ஆசை செலுத்தி எதையும் செய்யாதே. இதைச் நான் சொன்னேன் என்று செய்ய வேண்டியன செய்யாமல் சும்மா இருந்து விடுவதில் மனம் செலுத்தாதே. பற்று வைத்துக் கொள்ளாமல், பகையை அகற்றிச் செய்வதைச் செய்...நிறைவேறுவதும் நிறைவேறாமல் போவதும் இரண்டையும் ஒன்றாகக் கருதிச் செய்" - பகவத் கீதை

நம்மில் பலர் உதவிகள் செய்வதற்கு நேரம் இல்லை என்றே கூறுகின்றனர்...ஆனால் உண்மையில் இந்த உலகத்தில் நேரம் மட்டுமே நம்மிடம் இருக்கின்றது. பிறந்து விட்டோம் என்பது நமக்குத் தெரியும்...இறந்து விடுவோம் என்பதும் நமக்குத் தெரியும்...இந்த இரண்டு சம்பவங்களுக்கு இடையே உள்ள காலம் தான் நம்மிடம் இந்த உலகில் இருக்கின்றது. அந்த காலம் மட்டுமே நம்மிடம் இருக்கின்றது...அல்லது அக்காலத்தின் வசம் நாம் இருக்கின்றோம் என்றும் கூறலாம்.

இந்நிலையில் நமக்கு கொடுக்கப்பட்டு உள்ள அக்காலத்தில் சில பல செயல்களைச் செய்வதற்கு மட்டுமே நமக்கு உரிமைகள் வழங்கப்பட்டு உள்ளன.

காலம் கொடுக்கப்பட்டு இருக்கின்றது...உலகமும் இருக்கின்றது...அக்காலத்தில் அவ்வுலகத்தில் நாம் என்ன காரியங்களைச் செய்கின்றோம் என்பதில் தான் நாம் அடங்கி இருக்கின்றோம்...மாறாக அழியப் போகும் ஒன்று அதனை மட்டுமே கண்டு கொண்டு செல்வது என்பது அர்த்தமற்ற ஒரு செயலாகும்...மனிதன் அர்த்தமற்றவன் அல்ல. அவனின் வசம் இவ்வுலகம் கொடுக்கப்பட்டு உள்ளது...கூடவே அவ்வுலகை நல்ல உலகாக வைத்திருக்கும் கடமையும் தான்.
 
ஒரு அலுவலகத்தில் இத்தனை வருடங்கள்/ நாளுக்கு எட்டு மணி நேரம் என்ற கணக்கின் படி எவ்வாறு நம்மிடம் பொறுப்பினைத் தந்து வேலை/கடமை எதிர்பார்க்கப் படுகின்றதோ, அதனைப் போன்றே நம்முடைய வாழ்க்கையும்/நாளுக்கு 24 மணி நேரங்கள் என்ற கணக்கும் தரப்பட்டு நம்மிடம் கடமைகள் தரப்பட்டு உள்ளன...நம் ஒவ்வொருவருக்கும் தரப்பட்டு உள்ளது.

எவ்வாறு அலுவலகத்தில் கடமையை விட நான் என்பது பெரிதான ஒன்று இல்லையோ, அதனைப் போன்று தான் வாழ்க்கையிலும் கடமையைத் தவிர நான் என்ற ஒன்று பெரிது கிடையாது.

இந்நிலையில் நாமிருக்கும் சமூகத்தை மேன்மைப்படுத்துவதும், அதனை அனைவருக்கும் ஏற்ற ஒன்றாக நல்லதொரு சமூகமாக அமைத்து, பயமின்றி மக்கள் அனைவரும் அன்புடன் வாழ வழி செய்து அதனை அடுத்த தலைமுறையினரிடம் தந்து செல்வதே நம்முடைய கடமையாகும்...அதற்கே நமக்கு நேரம் தரப்பட்டு உள்ளது...கொடுக்கப்பட்ட நேரத்தில் எப்படி பணி செய்து நம்முடைய கடமையை செய்வது என்று சிந்திப்பதற்கே நமக்கு அறிவும் கொடுக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் பயத்தின் காரணமாகவோ அல்லது சுயநலத்தின் காரணமாகவோ "நான்" என்ற எண்ணம் மேல் எழுந்து, நிரந்தரத் தீர்வினை அடைய முயலாது தற்காலிக தீர்வினை மட்டுமே நாடினால் அது நாம் நம்முடைய கடமையை தவறியதற்கே சமமானமான ஒன்றாகும்.

அதனை விடுத்து, பயத்தினை ஒழித்து, நாமும் சரி நம்முடைய சமூகமும் நிரந்தரமான தீர்வினைப் பெற்று நலமாக வாழ வழி செய்ய முயல்வதே நம்முடைய கடமையாகும்...அதுனை இலக்காகக் கொண்டே நம்முடைய உதவிகளும் சேவைகளும் இருக்க வேண்டும். இல்லையேல் எதிலும் அர்த்தம் என்ற ஒன்று இல்லவே இல்லை.

"சுயநலக் கருத்தும் சுயநலப் பற்றும் அறவே துறந்து கடமைகளைச் செய்துக் கொண்டு போவது அவசியம். அறிஞன் சமுதாய நன்மைக்காகப் பற்றை ஒழித்து எல்லாக் காரியங்களையும் செய்துக் கொண்டு போவான்..." - பகவத் கீதை. நிற்க

நம்முடைய உலகம் இன்றைக்கு இருக்கும் நிலைக்கு மனிதர்களாகிய நாம் தான் காரணம். எனவே அந்த நிலையினை மாற்றும் மாற்றத்திற்கும் நாமே தான் காரணமாக இருக்க வேண்டும்...வேறு வழியில்லை...அதற்காகத் தான் நமக்கு ஆற்றலும் சிந்திக்கும் திறனும் அதனுடன் காலமும் தரப்பட்டு உள்ளது. நமது ஆற்றல்களை வைத்து நாம் நமக்கு தரப்பட்டு உள்ள இக்கால அவகாசத்தில் சமூகத்தில் என்ன செய்யப் போகின்றோம் என்பதில் தான் நாம் அடங்கி இருக்கின்றோம்.

எளிதான காரியம் அல்ல தான்...!!! இதனை அனைவரும் அறிவர்...!!! காரணம் மனிதனின் மனம் நன்மையை விட தீமையையே எளிதாக நாடுகின்றது...அன்பினை விட பயத்தினையே பெரிதாக உருவகித்துக் கொள்கின்றது.

"நன்மை செய்ய வேண்டும் என்கின்ற விருப்பம் என்னிடத்தில் இருக்கின்றது...நன்மை செய்வதோ என்னிடத்தில் இல்லை...எனவே நான் விரும்புகிற நன்மையைச் செய்யாமல் விரும்பாத தீமையையே தொடர்ந்து செய்கின்றேன். அந்தப்படி நான் விரும்பாததைச் செய்வது நான் அல்ல...எனக்குள்ளே வாழ்கிற பாவமே அப்படிச் செய்கிறது. ஆனபடியினால் நான் நன்மை செய்ய விரும்புகிற வேளையில், என்னிடத்தில் தீமையுண்டென்கிற ஒரு விதி செயல்படுவதைக் காண்கின்றேன். உள்ளான மனிதனுக்கேற்றபடி தேவனுடைய நியாயவிதிகளின் மேல் விருப்பமாயிருக்கிறேன். என்றாலும் என் மனதின் விதிகளுக்கு எதிராக போராடுகிற வேறொரு விதி எனது அவயங்களில் செயல்படுவதைக் காணுகின்றேன்; அது என் அவயங்களில் உண்டாயிருக்கிற பாவ விதிக்குள் என்னைச் சிறைப் படுத்திக் கொள்கின்றது. எவ்வளவு மோசமான மனிதன் நான்! இந்த மரண சரீரத்தில் இருந்து என்னை விடுவிப்பது யார்?" - பவுல் (ரோமர் 7: 18 - 24)

"நான்" என்ற ஒன்றைத் துறந்து செயலாற்றுவது என்பது கடினமான ஒன்று என்பதனை அனைவரும் அறிவர்...காரணம் நமக்குள்ளேயே அப்போராட்டம் மிகப் பெரிய போராட்டமாக ஓடிக் கொண்டே இருக்கின்றது. நம்மை எதிர்த்தே நாம் போராடிக் கொண்டு இருக்கின்றோம். அந்த போராட்டத்தின் காரணமாகத் தான்,

தனி ஒருவனை மட்டுமே கண்டு கொண்டிருந்த காட்டுமிராண்டி நிலையில் இருந்து குடும்பமாக இருந்த நிலைக்கும்,
தன்னையும் தன்னுடைய குடும்பத்தையுமே மட்டுமே கண்டுக் கொண்டிருந்த நிலையில் இருந்து குழுக்களாக மாறிய நிலைக்கும்,
இனக்குழுக்களாக இருந்த நிலையில் இருந்து தேசங்களாக மாறிய நிலைக்கும்,
மன்னராட்சி மாறி மக்களாட்சி வந்த நிலைக்கும் நாம் முன்னேறி இருக்கின்றோம்.
 
இத்தகைய மாற்றங்கள் எளிதாக வந்தவைகள் அல்ல...!!!

இனியும் பல தேசங்கள் என்ற நிலையில் இருந்து மாறி ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற 'உலகம் முழுவதும் ஒரே தேசம் ஒரே மக்கள்' என்ற நிலைக்கும் நாம் முன்னேறத் தான் போகின்றோம்...அன்பினை மட்டுமே கொண்டிருக்கும் ஒரு அருமையான சமூகத்தினை நாம் உருவாக்கத் தான் போகின்றோம்.

அந்த மாற்றமும் எளிதாக மலரப் போவதில்லை...!!! இருந்தும் அதற்காகத் தான் நாம் உதவியும் சேவையும் செய்ய வேண்டி இருக்கின்றது.

நம்மிடையேஅன்பும் இருக்கின்றது திறமையும் இருக்கின்றது...அன்பின் அடிப்படையில் நமது திறமைகளை பயன்படுத்தி நாம் இருக்கும் சமூகத்தில் மாற்றத்தைக் கொண்டு வருவது தான் நமது கடமை.

ஆடை இல்லாது கல்வி கற்க முடியாமல் தவிக்கும் மாணவிக்கு ஆடை வாங்கி தருவது என்பது அன்பின் அடிப்படையில் ஒரு செயல். அதே போல் நண்பர்கள் பலரும் ஒன்று சேர்ந்து பல மாணவர்களை படிக்க வைப்பதும் அன்பின் அடிப்படையில் ஒரு செயல்.

இச்செயல்களை குறைகளே கூறவில்லை...!!!

ஆனால் இச்செயல்களோடு கடமையை முடித்து விட்டோம் என்ற மனதிருப்தியினைக் கொண்டு நின்று விடாமல், சமூகத்தை நல்ல சமூகமாக உருவாக்கும் கடமையையும் மேற்கொள்ள முயலுங்கள் என்றே கூறுகின்றோம். நாமும் முயன்று, நம்மால் உதவி பெற்றவரையும் அவரது கடமையை உணரச் செய்து, மாற்றத்திற்காக முயல வைப்பதே கடமை என்கின்றோம்.

நேரம் இல்லை என்று கூறுவதனை விடுத்து, 'நேரம் மட்டுமே நம்மிடம் உள்ளது' என்பதனை உணர்ந்து நமக்கு தரப்பட்டுள்ள திறமைகள் மற்றும் சிந்திக்கும் திறன் ஆகியவற்றின் துணைக் கொண்டு மகிழ்ச்சியுடன் எவ்வாறு நாம் வாழும் சமூகத்தை பயமற்ற நல்லதொரு அன்புச் சமூதாயமாக மாற்ற முடியும் என்றே நாம் காண வேண்டி இருக்கின்றது.

நண்பர்கள் பலர் ஒன்று கூடி பிறருக்கு உதவுவது என்பது ஒரு உன்னதமான செயல்...அச்செயலையே நண்பர்கள் அனைவரின் சிந்திக்கும் திறனை பயன்படுத்தி மேலும் சமூகத்திற்கு மாற்றத்தை வர வைக்கும் ஒரு செயலாக மாற்ற முடியாதா?...அத்தகைய ஒரு மாற்றமே இங்கு தேவையாக இருக்கின்றது.

பிறருக்கு உதவ வேண்டும் என்று அன்பு உந்துகின்றது...ஆனால் பயம் அன்பினை கட்டுப்படுத்துகின்றது....இவ்விரண்டு உணர்சிகளின் விகிதங்களில் தான் இன்றைக்கு நம்முடைய உதவிகள் அடங்கி இருக்கின்றன.

பயத்தினை அன்பு வென்ற நிலையில் நிரந்திரத் தீர்வினைக் காணு முயலும் நபர்கள் இருக்கின்றனர்.
அன்பினை பயம் வென்ற நிலையில் இயன்ற உதவியினை மட்டும் செய்துக் கொண்டு இருக்கும் நபர்கள் இருக்கின்றனர்.

நம்முடைய சமூகத்தை மாற்ற நாம் முதலில் வெல்ல வேண்டியது இந்த பயத்தைத் தான்.

எண்ணிப்பாருங்கள், எந்த மாதிரியான சமூகத்தை நாம் அடுத்த தலைமுறைக்கு விட்டுச் செல்லப் போகின்றோம்?

அநாதை இல்லங்களுக்கும் முதியோர் இல்லங்களுக்கும் அதிகமாக விடுமுறை தினங்களில் சென்று அங்கே இருப்போருக்கு அன்பினைத் தரும் நபர்கள் அதிகம் இருக்கும் சமூகத்தையா?
 
அல்லது

அநாதை இல்லங்கள்/முதியோர் இல்லங்களே இல்லாது அன்பே குடும்பங்களில் நிலைத்து இருக்கும் சமூகத்தையா?

எதனை நாம் விட்டுச் செல்ல போகின்றோம்...?

ஆம்..கடினம் தான்..அநாதை இல்லங்களுக்கு சென்று உடனடியாக அன்பினை நாடுபவர்களுக்கு அன்பினை தருவது என்பதனை போல் அநாதை இல்லங்களே தேவைப்படாது அனைவரும் அவரவர் குடும்பங்களை அன்பின் வழியே நடத்துவதற்கு வழி வகுப்பது என்பது எளிதான ஒன்று அல்ல தான். நிச்சயம் கடினம் தான்.
 
காரணம் அது மேலோட்டமாக நமது கட்டுப்பாட்டில் இல்லை...பிறரது வாழ்க்கையும் அதில் அடங்கி இருக்கின்றது...இருந்தும் அது தான் நமது இலக்கு. நமது கடமை. (மீண்டும் ஒருமுறை மேலே குறிப்பிட்டுள்ள பகவத் கீதையின் வரிகளை வாசிப்பது நலமாக இருக்கும்)

அக்கடமையைச் செய்யத் தான் அன்பு மிக்கவர்களும் சிந்திக்கும் திறனைப் பெற்றவர்களும் ஒன்று சேர வேண்டி இருக்கின்றது...அவ்வாறு ஒன்று சேர்ந்து நல்லதொரு சமூகத்தை உருவாக்குவதே உண்மையான உதவியாகும்...அதுவே கடமையுமாகும்...!!!

"அவர் (இயேசு) திரளான மக்களைக் கண்ட பொழுது, அவர்கள் மேய்ப்பனில்லாத ஆடுகளைப் போலத் தோய்ந்து போனவர்களும் உதவியற்றவர்களுமாய் இருந்தபடியால், அவர்கள்மேல் மனதுருகி, தம்முடைய சீடர்களை நோக்கி : அறுப்பு மிகுதி, தொழிலாளிகளோ கொஞ்சம்; ஆதலால், அறுப்புக்கு எசமான் தமது வேலையாட்களை அனுப்பும்படி அவரை நோக்கி மன்றாடுங்கள் என்றார்." - மத்தேயு ( 9 : 36 - 38)

உண்மையிலேயே செய்ய வேண்டிய வேலைகள் அதிகமாக இருக்கின்றது...ஆனால் வேலைகளை செய்யத் தான் ஆட்கள் இல்லாத நிலை நிலவுகின்றது.

அந்த வேலைகள் தான் நம்முடைய கடமைகள்...என்ன செய்ய போகின்றோம் நாம்?

வெறும் உதவிகளா? அல்லது கடமைகளா?

நம்புங்கள்...நாம் சராசரிகள் அல்ல...நமது கடமையும் சராசரியல்ல...!!! நாம் என்ன செய்ய போகின்றோம் என்பதில் அடங்கி இருக்கின்றது இவ்வுலகம்.

முற்றும்...!!!

பி.கு:

இக்கருத்துக்களில் தங்களுக்கு மாற்றுக் கருத்துக்கள் ஏதேனும் இருப்பின் தயைக் கூர்ந்து தெரிவிக்கவும். அது எனது சிந்தனையை செம்மையாக்க உதவும். வழக்கம் போல் உங்களின் கேள்விகளும் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

சென்ற பதிவினில் உதவியினைப் பற்றியும் 'அனைத்து நேரங்களிலும் உதவ முடியாது' என்ற நிலையினைப் பற்றியும் கண்டோம். இப்பொழுது நாம் 'அனைத்து நேரங்களிலும் எங்களால் உதவி செய்ய இயலும்' என்ற நிலையைப் பற்றியும் அத்தகைய மக்களைப் பற்றியும் தான் சிறிது காண வேண்டி இருக்கின்றது.

உதவி செய்ய முடியும்:

இவர்கள் சற்று சிறப்பானவர்கள். நாம் முதல் பதிவில் கண்ட கதையில் வரும் அலுவலக நண்பர்களை இந்த வகையில் சேர்க்கலாம். சமூகத்திற்கு உதவி தேவைப்படுகின்றது, ஆனால் அதனை தனி மனிதனால் செய்ய இயலாத நிலையும் இருக்கின்றது அந்நிலையில் உதவ வேண்டும் என்ற எண்ணத்தினை அடிப்படையாகக் கொண்ட மக்கள் ஒன்று சேர்ந்து சமூகத்திற்கு உதவி செய்ய முன் வருகின்றனர். இவர்கள் சிறு குழுக்களாகவோ அல்லது ஒரு இயக்கமாகவோ உருப்பெற்று சமூகத்திற்கான உதவியினை செய்ய துவங்குகின்றனர்.

இன்றைய காலத்தில் நிச்சயம் இவர்களைப் போன்றவர்களை நாம் கடந்து வராது இருந்திருக்க முடியாது. ஏன் நாமும் அத்தகைய ஒரு நண்பர்கள் குழுவிலோ அல்லது இயக்கத்திலோ இருக்கக் கூடிய வாய்ப்புகள் அதிகமாகத் தான் இருக்கின்றன. இப்பொழுது அவர்களைப் பற்றித் தான் நாம் சற்று காண வேண்டி இருக்கின்றது.

இன்றைய காலத்தில் கல்விக் கட்டணங்கள் விண்ணளவு எகிறி விட்ட காரணத்தினால் நன்றாக படிக்கக் கூடிய திறமை இருந்தும் படிக்க இயலாத நிலையில் பல மாணவர்கள் இருக்கின்றனர். வங்கிகளின் உதவிகளும் பெரும்பாலானோருக்கு கிடைப்பதில்லை. நிச்சயம் கவலைப்பட வேண்டிய ஒரு சூழல் தான். "ஆனால் கவலைப்பட்டால் மட்டும் வழி கிடைத்து விடுமா? அந்த மாணாக்கர்கள் படித்து விடுவார்களா? மாட்டார்கள் தானே..அப்படி இருக்கையில் நாம் நிச்சயம் ஏதாவது செய்தாக வேண்டும்" என்ற எண்ணத்துடன் படிக்க வழியில்லாத மாணவர்களுக்கு உதவியினைப் புரிய பல குழுக்களும் இயக்கங்களும் இருக்கின்றனர் என்பதனை நாம் அறிவோம்.

இவர்கள் பொதுவாகச் செய்வது,

1) உதவியினை புரிய வேண்டும் என்ற சிந்தனையை உடைய நண்பர்களை ஒன்றிணைப்பது

2) அந்த நண்பர்களால் தர இயலும் ஒரு தொகையை மாதந்தோருமோ அல்லது ஒரு குறிப்பிட்ட இடைவெளிக் காலத்திலோ பெற்றுக் கொண்டு மாணவர்களுக்கு வழங்குவதற்காக நிதியினை வளர்த்துக் கொள்வது

3) பின்னர் வருடந்தோறும் அவர்களிடம் இருக்கும் நிதிக்கேற்ப தங்களால் இயன்ற மாணவர்களுக்கு கல்விக் கட்டணங்களையோ அல்லது சீருடை போன்ற மற்ற அத்தியாவசியப் பொருட்களையோ தந்து அவர்களுக்கு உதவியினைப் புரிவது.

இதன் மூலம் சில மாணவர்கள் தங்களது கல்வியினைத் தொடர இவர்கள் உதவியினைத் தொடர்ந்து புரிகின்றனர். நிச்சயம் பாராட்டக்கூடிய ஒரு செயல் தான். அதில் சந்தேகமேயில்லை.

அதுவும் குறிப்பாக இத்தகைய உதவியினைப் புரிபவர்கள் தங்களது இச்செயல்களால் தங்களுக்கு ஏதும் கைம்மாறு அல்லது வேறு பலன்கள் கிட்டுமே என்ற வியாபார நோக்கினில் செய்வது கிடையாது.

"மாசம் பத்தாயிரம் சம்பளம் வாங்குறேங்க...ஒரு 200 ரூவா பசங்க படிக்கிறதுக்காக மாசம் மாசம் தரது ஒண்ணும் பெரிய வேலை கெடையாதுங்க...ஏதோ நம்மளால முடிஞ்சது...பசங்க படிச்சி நல்லா இருந்தா நல்லது தானே" என்பன போன்ற நல்ல எண்ணத்தினில் தான் அவர்களுள் பலர் உதவியினைப் புரிகின்றனர்.

சுய பயனைக் கருதாது உதவி என்ற நல்ல விதையை அவர்கள் விதைக்கின்றனர். அதன் பயனாக

"படிக்க இயலாத சூழலில் யாரோ ஒருத்தங்க நமக்கு படிக்க உதவி இருக்காங்க...அதனால நாமளும் படிச்சி நல்லா சம்பாதிச்சி...இதே மாதிரிமற்றவங்களுக்கு உதவனும்" என்ற எண்ணத்தினைக் கொண்ட மாணவர்களும் பலர் உருவாகின்றனர்.

அவர்களும் பிற்காலத்தில் இன்று இவர்கள் உதவியினைப் புரிந்ததைப் போலவே தங்களால் இயன்ற அளவு உதவியினை மற்ற மாணவர்களுக்குச் செய்யக் கூடும். நிச்சயம் அதுவும் ஒரு நல்ல செயல் தான். இதில் நாம் குறை காண்பதற்கு எதுவுமே இருக்கப்போவதில்லை தான்...மேலோட்டமாகப் பார்த்தால்.

இருந்தும் மேலோட்டமாகப் பார்ப்பது யாருக்கும் நல்ல முடிவையோ அல்லது தெளிவான சிந்தனையையோ தராது என்பதனால் நாம் மேலே கண்ட விடயங்களை சற்று வேறு வகையாகவும் காண வேண்டித் தான் இருக்கின்றது.

மேலே நாம் கண்ட விடயத்தில் ஒரு மாணவனுக்கு சிலர் சுயநலம் கருதாது உதவுகின்றனர்.

ஏன் அவர்கள் உதவுகின்றனர்?
அவனால் கல்வியினைக் கற்க முடியவில்லை அதனால் உதவுகின்றனர்.

ஏன் அவனால் கல்வியினைக் கற்க முடியவில்லை?
ஏனென்றால் கல்விக் கட்டணங்கள் அதிகமாக உள்ளன.

ஏன் கல்விக் கட்டணங்கள் அதிகமாக உள்ளன?
...........!!!!

இந்த கேள்விக்கு சரியான விடையினை தர இயலாத காரணத்தினால் பெரும்பாலும் இக்கேள்விக்கு மௌனமோ அல்லது "எல்லா பொருளோட விலையும் ஏறுது...உன்னோட சம்பளமும் வருஷம் வருஷம் ஏறுது...அப்புறம் ஏன் கல்வி கட்டணம் மட்டும் கூடுச்சினா கேள்வி கேட்குறீங்க...அதெல்லாம் அப்படித்தான் இருக்கும்" என்பன போன்ற ஒவ்வாத பதில்கள் தான் கிட்டப்பெருகின்றன பெரும்பாலும்.

ஆனால் இது தான் முக்கியமான கேள்வி.

நான் தனியார் கல்லூரியில் பொறியியல் படிக்கும் பொழுது,

கல்விக் கட்டணம் :36,000 ரூபாய்
ஆசிரியரின் சம்பளம்: 6,௦௦௦ ரூபாய்/மாதம்

எனக்கு ஒரு வருடம் முந்தைய மாணவர்களது கல்விக்கட்டணமோ

கல்விக் கட்டணம் : 18,000 ரூபாய்
ஆசிரியரின் சம்பளம் : 6,௦௦௦ ரூபாய்/மாதம்

அதாவது வேறு எந்த மாற்றமும் நிகழப்பெறவில்லை இருந்தும் கல்விக்கட்டணம் இரண்டு மடங்காக ஆகி உள்ளது. இன்றைக்கு கல்விக்கட்டணங்கள் எழுபத்தி ஐந்தாயிரங்களில் உலா வந்துக் கொண்டு இருக்கும் என்றே எண்ணுகின்றேன். சரி இருக்கட்டும்...இப்பொழுது நாம் மீண்டும் மேலே கண்ட கேள்விக்குத் தான் செல்ல வேண்டி இருக்கின்றது.

ஏன் கல்விக் கட்டணங்கள் அதிகமாக உள்ளன?

வருந்தத்தக்க விடயமாக இந்த கேள்விக்கு விடையினை பெரும்பாலானோர்அறிய முற்படுவதே இல்லை. ஏன்...அக்கேள்வியினைப் பற்றி சிந்திக்கக் கூட அவர்களால் முடிவதில்லை..."சிந்திச்சி என்ன ஆக போகுதுங்க...நம்மளால அதை எல்லாம் மாத்த முடியுமா...ஏதோ நம்மளால முடிஞ்ச உதவிய பண்ணிட்டு போறோம்...எத பண்ண முடியுமோ அத பண்ணுவோங்க...முடியாதத நெனச்சி ஏன் தேவ இல்லாம நேரத்தை வீணடிக்கனும்..." என்றே அவர்கள் அக்கேள்வியினைப் பற்றிய சிந்தனையை தவிர்த்து விடுகின்றனர்.

காரணம் எளிது தான்...

பிறருக்கு இயன்ற அளவு உதவியினைப் புரிவது என்பது வில்லங்கமில்லாத ஒரு செயல்...யாரையும் நாம் கேள்வி கேட்க வேண்டியதில்லை...நம்மையும் அச்செயல் பெரிதாக பாதிக்கப் போவதில்லை.

ஆனால் ஏன் அவர்களுக்கு நாம் உதவி செய்ய வேண்டும்?...கடமையை அரசாங்கம் ஏன் ஒழுங்காகச் செய்யவில்லை? என்ற கேள்விகளை எழுப்புவது...சொல்ல வேண்டியதில்லை...பலரைப் பொருத்தவரைக்கும் அது ஒரு வில்லங்கமான விடயம் தான். பிறரையும் நாம் இங்கே கேள்வி கேட்க வேண்டி இருக்கின்றது...சில நேரம் நம்மையும் அச்செயல் பாதிக்கலாம்.

உண்மையில் பிரச்சனை இல்லாத வாழ்வினைத் தான் மனிதன் இயல்பாக விரும்புகின்றான்...அந்நிலையில் பிரச்சனைகளை உண்டு பண்ணும் என்று அறிந்தே அவன் செயல்களைச் செய்ய முயல்வானா...? நிச்சயம் மாட்டான்.

அதன் விளைவாகத் தான்,

ஏன் இந்த நிலை இருக்கின்றது என்று பிரச்சனைக்குரிய காரணியை கண்டுப்பிடித்து அதனைக் களைய முயலாமல்/ சிந்திக்காமல், தன்னைப் பாதிக்காது இருக்கும் தன்னால் இயன்ற உதவியினை செய்ய மட்டுமே முயலுகின்றான்.

இதன் விளைவாக சமூகத்தில்,

1. சுய நலம் கருதாது இவன் ஒருவனுக்கு செய்கின்ற உதவி - "நமக்கு பிறர் உதவியினைப் புரிந்து இருக்கின்றனர்...எனவே நானும் வளர்ந்து பிறருக்கு உதவி செய்வேன்" என்ற எண்ணத்தோடு வளர்கின்ற தலைமுறையை உருவாக்குகிறது. இது ஒரு அருமையான செயல்.

ஆனால்,

2) அடுத்த தலைமுறையும் பிரச்சனைக்குரிய காரணியை ஆராயாமல் தங்களால் தங்களை பாதிக்காது பிறருக்கு உதவும் உதவிகளை மட்டும் செய்து விட்டு செல்லும் நிலையும்

3) அடிப்படை பிரச்சனை தீர்க்கப்படாமலேயே சமூகத்தினில் தொடர்ந்து வளர்ந்து வரும் நிலையும்

பக்க விளைவுகளாக சமூகத்தில் நிலைபெற்று விடுகின்றன.

காரணம் நம்முடைய உதவிகள் வெறும் உதவிகளாகவே அவனைச் சென்றடைகின்றன...மாறாக எதற்காக அவன் உதவி பெறும் சூழலில் இருக்கின்றான் என்றோ...அத்தகையதொரு சூழல் சரியானதொன்றா என்றோ அவனைச் சிந்திக்க வைக்கும் உதவிகளாக அவனைச் சென்றடையவில்லை.

அதாவது அவனுக்கு அவனுடைய பிரச்சனை தெரிய வருகின்றது...
படிப்பதற்கு பணம் இல்லை...!!!

அதனை சரி செய்யும் வழிமுறைகள் அவனுக்கு தெரிய வருகின்றது...
நம்முடைய உதவிகள்..வங்கிக் கடன்கள்...!!!

ஆனால் இறுதி வரை அந்த பிரச்சனைக்குரிய காரணியைப் பற்றியோ அல்லது அது சரியான ஒரு காரணி தானா என்பதனைப் பற்றிய ஒரு சிந்தனையோ...அப்பிரச்சனையைத் தீர்க்க அவன் ஏதாவது செய்ய வேண்டுமா என்ற சிந்தனையோ அவனுள் எழாமலே போய் விடுகின்றது.

சுற்றி இருக்கும் சமூகத்தைப் பார்த்து "இப்படித் தான் இருக்கும் போல இருக்கு...நம்மளும் சம்பாதிச்சி...ஏதோ நம்மளால முடிஞ்ச அளவு உதவுவோம்..." என்றவாறே அடுத்த தலைமுறையும் அவர்களைச் சுற்றி இருக்கும் சமூகம் சென்றுக் கொண்டிருக்கும் தவறான வழியினை அறியாமலேயே பயணிக்க ஆரம்பிக்கின்றனர்.

காரணம் வழிகாட்டிகளாக வழித்துணைகளாக இருக்க வேண்டிய கல்விக் கற்று சிந்திக்கும் திறனை உடையவர்களின் உதவிகள், அவ்வாறு இருப்பதற்கு மாறாக வெறும் ஆறுதல்களாகவும் உதவிகளாகவுமே நின்று விடுகின்றன.

இதனால்,

"நோய் நாடி நோய் முதல் நாடி" என்ற தத்துவத்திற்கு மாறாக நோயின் காரணத்தையே ஆராயாமல் "ஏதோ நம்மளால் ஆனதைச் செய்வோம்...நோயினை வேறு எவராவது தீர்க்க வழி காணுவர்" என்ற எண்ணத்துடன் செயல்படும் நபர்களின் எண்ணிக்கை சமூகத்தில் அதிகமாகத் துவங்குகின்றது.

இவர்கள் பெரும்பாலும் நல்லவர்களாகவே இருந்தாலும், சமூகம் நல்லதொரு சமூகமாக இல்லாது மேன்மேலும் சீரழிந்துக் கொண்டு இருக்கும் ஒரு சமூகமாகவே இந்நிலையில் மாறத் துவங்குகின்றது.

அங்கே பிரச்சனைகளும் கூடிக் கொண்டே இருக்கும்...உதவிகளின் தேவைகளும் கூடிக் கொண்டே இருக்கும்...!!!

இந்த நிலையில் தான் மேலும் சில விடயங்களை நாம் காண வேண்டி இருக்கின்றது...!!!

காணலாம்...!!!

பி.கு:

இக்கருத்துக்களில் தங்களுக்கு மாற்றுக் கருத்துக்கள் ஏதேனும் இருப்பின் தயைக் கூர்ந்து தெரிவிக்கவும். அது எனது சிந்தனையை செம்மையாக்க உதவும். வழக்கம் போல் உங்களின் கேள்விகளும் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

முந்தையப் பதிவு

"தமிழ்நாட்டைத் தமிழரே ஆள வேண்டும்" - தந்தை பெரியார்(1938)

தமிழ் மொழியும், தமிழ் இனமும் அழிக்கப்பட்டு வரும் சூழலில் தமிழ் நாட்டிலுள்ள திராவிட இயக்கங்களுக்கும், திராவிட அரசியல் கட்சிகளுக்கும், தமிழ் தேசிய சிந்தனையாளர்களுக்கும் 2016 தேர்தலை நோக்கிய ஒரு பொது அறிவிப்பு

"தமிழர்" என்னும் தமிழ் பெயரே "திராவிடர்" என்று சமசுகிருதத்தில் குறிக்கப்படுகின்றது என்பது எவராலும் மறுக்க இயலாத வரலாற்று உண்மை.

திராவிடர் கழகத்தின் நோக்கம்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார், 1944 இல் தமிழர், தெலுங்கர், மலையாளி, கன்னடர் அடங்கியிருந்த சென்னை மாகாணத்தில் ஆரியப் பிராமணர்களின் சாதி ஏற்றத்தாழ்வுக் கொள்கையை எதிர்த்து, ஆரியரல்லாத மக்களை ஒன்றிணைக்க திராவிடர் கழகத்தைத் தோற்றுவித்தமை காலத்தின் கட்டாயமாக இருந்தது.

திராவிட அரசியல் கட்சியின் துரோகம்

பெரியாரின் திராவிடர் கழகத்தின் பிராமண எதிர்ப்புக்கு எதிராக, பிராமணர்களை உறுப்பினர்களாகச் சேர்த்துக் கொண்டு பிராமணர்களின் ஆதரவுடன், திராவிடர் என்னும் பெயரைப் பயன்படுத்தி திராவிட அரசியல் கட்சி 1949 இல் தமிழ் நாட்டில் உருவாக்கப்பட்டது. ஐந்து வகை நாத்திகப் பிரிவுகளில், "நானே கடவுள்" எனக் கூறும் பிராமணர்கள் நயவஞ்சக நாத்திகப் பிரிவைச் சேர்ந்தவர்கள். பிராமணர்களுடன் இணைந்த திராவிட அரசியல் கட்சி, பெரியாரின் சாதி ஒழிப்புக் கொள்கையைக் கைவிட்டு, பெரியாரை நாத்திகராகக் காட்டுவதில் மட்டும் கவனம் செலுத்தியது.

இதன் பயன் பெரியார் என்றால் நாத்திகர் என்று மட்டுமே பொது மக்கள் நம்புகின்றனர். இது பெரியாருக்கு எதிரான துரோகச் செயல் ஆகும்.

எந்த பிராமணர்களுக்கு எதிராகப் பெரியார் இயக்கத்தை உருவாக்கினாரோ அந்த பிராமணர்களே, பெரியார் இயக்கத்தின் பெயரால் தமிழ் நாட்டை ஆளும் கொடிய நிலை திராவிட அரசியல் கட்சியால் உருவாக்கப்பட்டு உள்ளது. இது கொடிய துரோக நிலையாகும்.

ஆதிக்க வெறி

இந்தியா 1947 இல் விடுதலையடைந்து, 1956 க்குப் பின்னர் மொழி வழி மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டது. தமிழர், தெலுங்கர், கன்னடர், மலையாளிகளுக்கு தனித்தனி நாடுகள் தோன்றின. தெலுங்கர் தெலுங்கு நாட்டையும், மலையாளி மலையாள நாட்டையும், கன்னடர் கன்னட நாட்டையும் ஆண்டு வருகின்றனர். ஆனால், தமிழ்நாட்டை மட்டும் தெலுங்கரும், மலையாளியும், கன்னடரும் மாறி மாறி ஆள வேண்டும் என்னும் ஆதிக்க மனப்பான்மையுடன், தமிழ்நாட்டில் "தமிழர்" என்னும் தமிழ் பெயருக்குப் பதில், "திராவிடர்" என்னும் சமசுகிருதப் பெயரைப் பயன்படுத்தி திராவிட அரசியல் கட்சிகள் தமிழ் மக்களை ஏமாற்றி ஆண்டு வருவது ஆதிக்க வெறியைக் காட்டுவதாகும்.

தமிழரல்லாதார் ஏன் இணைவதில்லை?

தமிழரல்லாத, தெலுங்கரும், மலையாளியும், கன்னடரும், சமசுகிருத மொழியின் செல்வாக்கில் இருக்கின்ற காரணத்தால், "திராவிடர்" என்று குறிப்பிடும் பொழுது "தமிழர்" என்றே நன்கு தெளிவாகப் புரிந்து கொள்ளுகின்றார்கள். இதனால் அவர்கள் தமிழ் நாட்டுத் திராவிட கட்சிகளுடன் இணைவது இல்லை.

இதனால் தமிழ்நாட்டைத் தாண்டி தெலுங்கு நாட்டிலோ, மலையாள நாட்டிலோ, கன்னட நாட்டிலோ, திராவிட இயக்கக் கிளைகளோ, திராவிட அரசியல் கட்சிகளின் கிளைகளோ இல்லை. தப்பித்தவறி அவ்விடங்களில் இருந்தாலும் தமிழர்கள் மட்டுமே உறுப்பினர்களாக உள்ளனர். மலேசியா, சிங்கப்பூர் முதலிய வெளிநாடுகளிலும் இதுவே நிலை.

நயவஞ்சகம்

இதனால், தமிழர்களைத் தமிழ்நாட்டில் அடிமைப்படுத்துவதற்காக மட்டுமே தெலுங்கர், மலையாளி, கன்னடர்களால் நயவஞ்சகமாகப் பயன்படுத்தப்படும் "திராவிடர்" என்னும் சமசுகிருதப் பெயரிலிருந்து தமிழ்நாட்டிலுள்ள திராவிட இயக்கங்களும், திராவிட அரசியல் கட்சிகளும் விடுதலை அடைய வேண்டும். தாங்களே தமிழ் இனத் தலைவர் என்று ஏமாற்றி தமிழ் மொழியை அழிப்பதைக் கைவிட வேண்டும்.

நம்பிக்கைத் துரோகம்

ஆரியப் பிராமணர்களின் இயக்கமான RSS இன் இந்துத்துவா இயக்கங்களுடனும், அதன் அரசியல் கட்சியுடனும் கூட்டு வைத்து, தமிழ் இனத்தையும், தமிழ் மொழியையும் அழிக்கும் கூட்டுச் சதியும் நம்பிக்கைத் துரோகமும், இவர்களால் செய்யப்பட்டு வந்ததையும், செயல்படுவதையும் இவர்களால் மறுக்க முடியாது. ஏனெனில் இவர்கள் தங்கள் தாய் மொழிப் பற்றினால் தமிழ் மொழியை அழிக்கின்றார்கள்.

தமிழ்த்தேசியச் சிந்தனையாளர்களின் இகழ்ச்சி

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் அடிப்படைக் கொள்கையைக் கைவிட்டு, தமிழ் இனத்தை அடிமைப்படுத்தும் திராவிடக் கட்சிகளின் சதிச் செயலால் தமிழ் தேசியச் சிந்தனையாளர்கள் தந்தைப் பெரியாரை இகழும் நிலையை உருவாக்கி இருப்பதை மறுக்க இயலாது.

வெட்கப்படத்தக்க சாதிப் பெருமையும், நிலவுடைமையும்

தமிழ் இனத்தை அந்நியர்களுக்குக் காட்டிக் கொடுத்தமையால், அந்நியர்களிடம் பெற்ற சாதிப்பட்டமாகிய சற்சூத்திரர் (சிறந்த அடிமை), சூத்திரர் (அடிமை) என்னும் இரு பிரிவினரின் ஆரிய அடிமைத்தனத்தையே தந்தை பெரியார் வன்மையாகக் கண்டித்து, சாதி ஒழிப்பில் ஈடுபட்டார் என்பது வரலாறு. இந்த நோக்கில் இலங்கையில் தமிழ் இனத்தைக் காட்டிக் கொடுத்த கருணாவும், டக்லஸ் தேவானந்தாவும் இன்று அமைச்சர் பதவியில் இருப்பதும், அந்நியர்களை எதிர்த்தவர்கள் நிலங்கள் பிடுங்கப்பட்டும் வேட்டையாடப்படுவதும் எண்ணிப் பார்கத்தக்கவை.

இந்த நோக்கில் தமிழ் ஞானப் பரம்பரையில் பிறந்து தமிழர் சமயக் கோவில்களில் பூசாரிகளாயிருந்து அந்நியர்களை எதிர்த்தமையால் கொலை செய்யப்பட்ட நந்தனார் பரம்பரையும், திருப்பாணாழ்வார் பரம்பரையும் கோவில்களில் இருந்து விரட்டப்பட்டு அவர்களுடைய நிலங்கள் அனைத்தும் பறிக்கப்பட்டு தீண்டத்தகாத கீழ் சாதி என இழிவு படுத்தப்படுவதும், அந்நியர்களுக்கு தமிழ் இனத்தைக் காட்டிக் கொடுத்த சற்சூத்திரர்களே தமிழர்களில் மேல் சாதி என சைவ மடாதிபதிகளாக இருப்பதும், இவர்கள் அனைவரும் நில உடைமையாளர்களாக இருப்பதும், ஏன் என்பது நமக்கு விளங்கும். இந்த நோக்கில் தம் சொந்த இனத்தைக் காட்டிக் கொடுத்து மனித நேயத்திற்கு எதிராக அந்நியர்களிடம் பெற்ற சாதிப் பெருமையும், நிலவுடைமையும் மிகவும் வெட்கப்படத்தக்கது ஆகும். நியாயமான சிந்தனையுடைய அனைவரும் வெட்கப்படுவார்கள், திருந்துவார்கள் என்பதில் சிறிதும் ஐயம் இல்லை.

புதைகுழியில் சாதி ஒழிப்புக் கொள்கை

இன்று சற்சூத்திரரிலும், சூத்திரரிலும் ஒரு பகுதியினர் திராவிடர் என்னும் பெயரிலுள்ள இயக்கங்கள் மற்றும் கட்சிகளிலும், மறுபகுதியினர் தமிழ் தேசியச் சிந்தனையாளர் என்னும் பெயரிலும் நுழைந்துக் கொண்டு, தந்தைப் பெரியாரின் சாதி ஒழிப்புக் கொள்கையைக் குழி தோண்டி புதைத்து உள்ளனர். இவர்களைப் பின் இருந்து ஆரியப் பிராமணர்கள் இயக்கிக் கொண்டு இருக்கின்றார்கள் என்பது வெளிப்படை. இதனால் தந்தை பெரியாரைப் பின்பற்றுவதாகக் கூறிக் கொள்ளும் இயக்கங்கள், கட்சிகளின் வழியாகவும், தமிழ் தேசியச் சிந்தனையாளர் வழியாகவும் தந்தை பெரியாருடைய சாதி ஒழிப்புக் கொள்கை பிராமணர்களின் சூழ்ச்சியால் புதை குழியில் இருக்கின்றது. கடவுள் பெயரால் சாதிப் பெருமையை நம்புகின்றவர்களை எதிர்த்த பெரியார் வெறும் கடவுள் மறுப்பாளராக மட்டுமே காட்டப்படுகின்றார். அவருடைய சாதி ஒழிப்புக் கொள்கை பொதுமக்களுக்கு மறைக்கப்பட்டு, மறைந்து கிடக்கிறது.

வெட்கப்பட வேண்டிய சாதிப் பெருமையிலிருந்து விடுதலையடைந்த தமிழ்த்தேசிய சிந்தனையாளர்களும், திராவிட இயக்கம் மற்றும் கட்சியினரும் சாதி ஒழிப்பு மாநாடு நடத்த முன்வரவேண்டியது காலத்தின் கட்டாயம் ஆகும்.

சாதி ஒழிப்பும், பொருளாதார சமத்துவமும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தவையாகும். மன்னர் ஆட்சிக்கால வன்முறை இல்லாமல், மக்கள் ஆட்சிக்கால மனம் திருந்துதலால் வரும் ஆன்மீகப் பொது உடைமை இதற்கு ஏற்ற தீர்வு ஆகும். இதற்கு இப்பொழுது இருக்கும் ஐ.நா சபை பயன்படாது. இதில் பொதுமக்களுக்கு இடமில்லை, நாடுகளுக்கு மட்டுமே இடம் உண்டு. இதனால், உலக மக்களாட்சியும், உலக மக்கள் நீதிமன்றமும் அமைக்கப்பட வேண்டும். இது "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்னும் தமிழர் சிந்தனையால் உருவாக்கக்கூடியது ஆகும். இதற்கு அடிப்படையாக வேண்டுவது கடவுள் அனுபவம்.

இந்துத்துவாவும் இந்து மதமும்

தந்தை பெரியார் காலத்தில் நயவஞ்சக நாத்திகப் பிராமணர்களின் மனுநூல் கொள்கையாகிய இந்துத்துவாவிற்கும், தமிழ் ஞானிகளால் வளர்க்கப்பட்ட இந்து மதத்திற்கும் உள்ள வேறுபாடு வெளிப்படவில்லை. அப்படியிருந்தும், பெரியாருடன் நெருக்கமாக இருந்த குன்றக்குடி அடிகளார், பெரியாரின் நெற்றியில் திருநீற்றைப் பூசிய பொழுது, அதைப் பெரியார் அழிக்கவில்லை என்னும் வரலாற்றில் ஆழமான கருத்து பொதிந்து கிடக்கிறது. பெரியார் பிராமணர்களின் மனுநூல் கொள்கையாகிய இந்துத்துவாவிற்கு எதிரானவரே தவிர, 'ஒன்றே குலம், ஒருவனே தேவன்' எனக் கூறும் தமிழ் ஞானிகளின் இந்து மதத்திற்கு எதிரானவர் அல்லர் என்பதுவே அது ஆகும்.

மறைக்கப்பட்டு, மறைந்து கிடக்கும் இந்து மத வரலாறு

கடவுள் இப்பேரண்டத்தை ஆளுகின்றார் என்பதை தமிழ் ஞானிகள் மட்டுமே உலகின் மற்ற எந்த மொழியிலும் இல்லாமல் தமிழ் மொழியில் மட்டுமே இருக்கும் ஆறாவது அறிவுக்குக் காரணமான ஆன்மாவைப் பற்றிய கல்வியாகிய ஆன்மவியலின் வழி நிலை நாட்டி இருக்கின்றார்கள். ஆன்மவியலில், அறிவியல், மெய்யியல், இறையியல் ஆகிய மற்ற மூன்றும் அடங்கி இருக்கின்றன. இதற்குரிய ஒப்பற்ற தமிழ் நூல் சிவஞான போதம் ஆகும். இதிலே ஆன்மீகப் பொதுஉடைமை அடங்கி இருக்கின்றது(சூத்திரம் 12).

தமிழ் ஞானிகளில் சிறந்தவராக திருவள்ளுவர் விளங்குகின்றார். அவர் வாழ்ந்த மயிலாப்பூரில் வேதாந்தக் கொள்கையின் விளக்கமாக முதன் முதலில் அமைந்த ஆதிக் கபாலீசுவரர் கோவிலே இந்து மதத்தின் முதல் கோவில்.

1. இந்தவரலாற்று உண்மை மறைக்கப்பட்டுமறைந்து கிடக்கின்ற காரணத்தால், இந்தியாவின் உச்ச நீதிமன்றம், இந்துத்துவாவிற்கும் இந்து மதத்திற்கும் உள்ள வேறுபாட்டை அறிய 7 நீதிபதிகளை அரசியல் சட்ட பெஞ்சிக்கு நியமிக்கும் அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

2. ஆரியப் பிராமணர்களின் இந்துத்துவாக் கொள்கை தமிழர்களின் இந்து மதத்தை அடிமைப்படுத்தி உள்ளது. இதனால் உண்மை இந்திய மக்கள் ஆரியர்களின் சாதி ஏற்றத் தாழ்விற்கு அடிமைப்பட்டு பயங்கரத் துன்பங்களில் இன்றளவும் இருக்கின்றனர். இந்திய மக்களின் இந்தத் துன்பங்களை நீக்கப் போவதாக உலகளாவிய கிருத்துவ, இசுலாமியத் தலைவர்கள் அறிவித்து உள்ளனர்.

இந்தியாவின் உள்விவகாரத்தில் அந்நிய நாட்டிலிருக்கும் மதத் தலைவர்கள் தலையிட உரிமை இல்லை. இந்த உரிமை தந்தை பெரியாரின் உண்மைத் தொண்டர்களுக்கும் சாதிப் பெருமையிலிருந்து விடுதலை அடைந்த தமிழ் தேசியச் சிந்தனையாளர்களுக்கும் மட்டுமே இருக்கிறது. இதற்குப் புதை குழியிலிருந்து தந்தை பெரியாரின் சாதி ஒழிப்புக் கொள்கை தூக்கி எடுக்கப்படல் வேண்டும். இந்தியா முழுவதும் சாதி ஒழிப்பு செயல்படுத்தப் பட வேண்டும்.

தந்தை பெரியாரின்உண்மைத் தொண்டர்களுக்கு

இந்தியாவின் உச்ச நீதி மன்றமும், உலகளாவிய கிருத்துவ, இசுலாமிய அமைப்புகளும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களை நோக்குவனவாக இருக்கின்றன.

உச்ச நீதிமன்றம் மறைந்து கிடக்கும் இந்து மதத்தை அறிய முற்படுகின்றது. உலகளாவிய கிருத்துவ இசுலாமிய அமைப்புகள் இந்தியாவின் சாதி ஏற்றத்தாழ்வை நிலை நாட்டும் மனுநூல் கொள்கையான இந்துத்துவாவினால் துன்புறுத்தப்படும் இந்திய மக்களைப் பற்றிக் கவலை கொள்ளுகிறது. இது நியாயமான தன்னலமற்ற கவலையா? என்பது போகப் போக தெரியும்.

இந்துத்துவா சமசுகிருதத்தினில் இருக்கின்றது. இந்து மதம் தமிழ் மொழியில் இருக்கின்றது. இந்துத்துவாவின் பிடியில் இருந்து இந்து மதத்தை விடுவிக்க தமிழ் மொழியாலும், தமிழ் இனத்தாலும் மட்டுமே முடியும்.

தமிழ் மொழியும், தமிழ் மொழியும் அழிக்கப்பட்டு முற்றிலுமாக அழியும் நிலையில் இருக்கின்றது. காரணம் அந்நியர்களின் நயவஞ்சகத்தாலும் நம்பிக்கைத் துரோகத்தாலும் தமிழர்கள் தங்கள் சொந்த நாட்டினை ஆள முடியவில்லை. 2016 இல் நடைபெற இருக்கும் சட்டமன்றத் தேர்தலில் தந்தை பெரியாரின் 1938 கூற்றுப்படி "தமிழ்நாட்டைத் தமிழரே ஆள வேண்டும்". அதற்குத் தமிழர்களின் ஒற்றுமைக்கு எதிராக இருக்கும் சாதிக் கொள்கை ஒழிக்கப்பட வேண்டும். சாதி ஒழிப்பும் இந்து மத விடுதலையும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை. இதனால் இந்து மத விடுதலைக்கு பெரியாரின் சாதி ஒழிப்புக் கொள்கை புதைக் குழியில் இருந்து தூக்கி எடுக்கப்பட வேண்டும். இந்தியா முழுவதும் செயல்படுத்தப்பட வேண்டும். 2016 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னர் தமிழ் நாட்டிலுள்ள 234 தொகுதிகளிலும் இதற்கான முயற்சிகள் எடுக்கப்படும். பெரியாரின் உண்மைத் தொண்டர்களும் விடுதலை அடைந்த தமிழ் சிந்தனையாளர்களும் இந்து மத விடுதலையில் ஒன்றிணைந்து சாதி ஒழிப்பு மாநாடு நடத்த முன்வர வேண்டிய கடமை அவர்களுக்கு இருக்கிறது. போலிகள் அகற்றப்பட வேண்டும்.

2016 சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளையும் பக்குவப்படுத்தும் ஆர்வமுள்ள தன்மானத் தமிழர்கள் ஒன்றிணைய வேண்டும். தமிழ் மொழியையும் தமிழ் இனத்தையும் அந்நியர்களின் அழிவில் இருந்து காக்க நியாயமான எந்தத் தியாகத்திற்கும் ஆயுத்தமாய் இருக்க வேண்டும். அப்படிப்பட்ட தியாகச் சிந்தனையுடைவர்களை வரவேற்கின்றோம் - மு.தெய்வநாயகம்

தொடர்பு:

பேராசிரியர் முனைவர் மு. தெய்வநாயகம்
நிறுவனர் : இந்துமத விடுதலை முன்னணி
ஒருங்கிணைப்பாளர்: அனைத்துத் தன்மான தமிழர்களின் கூட்டமைப்பு
எண் 278, கொன்னூர் நெடுஞ்சாலை, அயன்புரம் சென்னை - 600 023
044-26743842

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு