முந்தையப் பதிவு

சென்ற பதிவினில் ஆறாவது அறிவிற்கு காரணமாக ஆன்மா விளங்கலாம் என்றே கண்டு இருந்தோம். இப்பொழுது அக்கூற்று சரியான ஒன்றா என்றே நாம் காண வேண்டி இருக்கின்றது. அதற்கு ஆன்மா என்றால் என்ன என்றே நாம் காண வேண்டி இருக்கின்றது. அதற்கு நமக்கு துணையாய் மெய்கண்டாரின் சிவஞானபோதம் என்ற நூல் நிற்கின்றது. அதன் வழியே கண்டோம் என்றால்,

1) ஆன்மாவானது உடலினுள் இருக்கின்றது
  • "மாயா இயந்திர தனுவினுள் ஆன்மா"  - சிவஞானபோதம் 3
2) ஐம்புலன்களை கட்டுப்படுத்தி வைத்துக் கொண்டு இருக்கின்றது
  • "ஐம்புலன் ஒடுக்கம் அறிதலின்" - சிவஞானபோதம் 3
  • "ஐம்புல வேடரின் அயர்ந்தனை வளர்ந்து எனத்" - சிவஞானபோதம் 8
3) தன்னை அறியாத நிலையில் அது இருக்கின்றது
  •  "....ஆன்மா சகசமலத் துணராது" - சிவஞானபோதம் 4
4) இறைவன் உணர்த்தினால் இறைவனை உணரும் தன்மைக் கொண்டு இருக்கின்றது
  • "....உணர்த்த உணர்தலின்" -சிவஞானபோதம் 3
என்றே நாம் ஆன்மாவைப் பற்றி அறிய முடிகின்றது. இப்பொழுது இதை நாம் சிறிது விரிவாகப் பார்க்கலாம்.

ஆன்மா என்பது ஐம்புலன்களை கட்டுப்படுத்தும் வல்லமைப் பெற்றது என்றே நாம் அறியப்பெறுகின்றோம். ஐம்புலன்களைக் கட்டுப் படுத்த வேண்டும் என்றால் முதலில் ஐம்புலன்கள் இருக்க வேண்டும். சரி தானே. அப்படிப்பார்த்தால்,

ஓரறிவு முதல் நான்கறிவு படைத்த உயிரினங்கள் அனைத்தும் அடிப்பட்டு போய்விடுகின்றன. அவற்றிற்கு ஆன்மா கிடையாது. சரி இப்பொழுது மீதம் இருப்பது ஐந்தறிவு உயிரினங்களும் மனிதர்களும் தான். இவைகளுள் நாம் கண்டோம் என்றால் ஐந்தறிவினைக் கட்டுப்படுத்தும் தன்மை மனிதர்களுக்கு மட்டுமே இருக்கின்றது என்பது தெள்ளத்தெளிவான ஒரு விடயம். மேலும் மனிதன் விலங்குகளை விட சிறந்தவனாகவும், ஆறாவது அறிவினை உடையவனாகவும் அறியப்பட்டு இருக்கின்றான். அனைத்து உயிரினங்களையும் கண்டு அவற்றை ஆளும் வல்லமையையும் அவன் பெற்று இருக்கின்றான். அவன் மாறிக் கொண்டே இருக்கின்றான். ஆனால் வெறும் ஐந்தறிவுப் படைத்த மிருகங்களோ அவை தொடக்கத்தில் எவ்வாறு இருந்தனவோ அவ்வாறு தான் இன்றும் தொடர்ந்து இருந்துக் கொண்டு வந்து இருக்கின்றன.

இதனை நாம் காணும் பொழுது ஐந்தறிவினைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் மனிதன் ஒருவனுக்கே உள்ளது என்றே அறிந்துக் கொள்ளுகின்றோம். அதாவது ஆன்மா என்பது மனிதர்களுக்கு மட்டுமே இருக்கும் ஒரு விடயம். மற்ற உயிரினங்களுக்கு ஆன்மா கிடையாது.

அனைத்து உயிரினங்களுக்கும் உயிர் இருக்கின்றது...ஆனால் ஆன்மா மனிதனுக்கு மட்டுமே இருக்கின்றது என்றும் அதுவே மனிதனின் மேலாண்மைக்கு வழி வகுக்கின்றது என்றுமே நாம் அறிந்துக் கொள்கின்றோம்.

சரி ஆன்மா உடலினுள் இருக்கின்றது சரி...ஆனால் ஆன்மா செய்யும் செயல் என்ன என்றே நாம் இப்பொழுது காண வேண்டி இருக்கின்றது.

ஐம்புலன்களைப் பற்றி நாம் விவரிக்கத் தேவை இல்லை. ஒவ்வொருப் புலனும் ஒவ்வொரு வேலையைச் செய்கின்றது. கண் காட்ட உதவுகின்றது. மூக்கு நுகர உதவுகின்றது...இதனைப் போல ஒவ்வொரு புலன்களுக்கும் ஒவ்வொரு செயல்கள் இருக்கின்றன. அவ்வொவ்வொரு செயல்களும் ஒரு அறிவிற்கு காரணமாக இருக்கின்றன.

அவ்வாறு பார்த்தோம் என்றால் ஆறாம் அறிவு என்று ஒன்று இருந்தால் அந்த அறிவிற்கான உறுப்பும் நிச்சயமாக இருக்க வேண்டும் அல்லவா. அந்த உறுப்பினைத் தான் ஆன்மா என்கின்றனர் ஆன்மீகவாதிகள். சரி ஆறாவது அறிவிற்கான உறுப்பு ஆன்மா என்றே இருக்கட்டும், ஆனால் அந்த உறுப்பினால் பெறப்படும் ஆறாவது அறிவு என்பது என்ன என்ற கேள்விக்கு அவர்கள் விடையாய் தருவது,

ஆறாவது அறிவு என்பது இறைவனை உணரும் அறிவு என்பதே ஆகும். அவ்வாறு இறைவனை உணர உதவும் கருவியே ஆன்மா ஆகும் என்பதே அவர்களின் கூற்று.

அதாவது மனிதனின் ஆறாவது அறிவுக்கு காரணமான ஆன்மாவினால் மட்டுமே இறைவனை அறிந்துக் கொள்ளும் ஞானத்தை ஒருவன் பெற்றுக் கொள்ள முடியும்.

சரி...மனிதர்களுக்கு மட்டுமே ஆன்மா இருக்கின்றது, அதனால் தான் அவர்கள் உயர்திணை என்று தமிழால் உயர்த்தப்பட்டு இருக்கின்றனர் என்றும் ஆன்மாவின் வாயிலாக இறைவனை அறிந்துக் கொள்ளலாம் என்றுமே வைத்துக் கொள்வோம்...அப்படி இருக்கையில் மனிதர்களை ஐந்தறிவுப் படைத்த விலங்குகளோடும் தமிழ் அறிவியலில் வைத்து இருக்கின்றனரே...அது ஏன் என்றே கேள்வியை நாம் இப்பொழுது காண வேண்டி இருக்கின்றது.

ஒருவருக்கு கண் இருக்கின்றது. ஆனால் கண் செயல்படாமல் இருக்கின்றது. இந்நிலையில் அவர் ஐந்தாவது அறிவிற்கான உறுப்பினைப் பெற்று இருந்தும் அதன் வழியாகப் பெறக் கூடிய அறிவினைப் பெற இயலாத நிலையில் இருக்கின்றார்.

அதனைப் போன்று தான் மனிதர்களும் ஆன்மாவினைப் பெற்று இருந்தும் அதனை அறியாத நிலையில் ஆறாவது அறிவான இறைவனை உணரும் ஞானத்தை அடையாது விலங்குகளைப் போல் ஐந்தறிவினை வைத்துக் கொண்டு வாழ்ந்துக் கொண்டு இருக்கின்றனர். அதனால் தான் அம்மக்களை மாக்கள் என்று தமிழ் அறிவியல் அழைக்கின்றது.

அதாவது அம்மக்களுக்கு ஆறாம் அறிவுக்குரிய ஆன்மா இருக்கின்றது, இருந்தும் அந்த ஆன்மாவானது தன்னை அறிந்துக் கொள்ளாமல் ஐம்புலன்களின் வழியே செயல் ஆற்றிக் கொண்டே இருக்கின்றது. அதனால் இறைவனை அறிந்துக் கொள்ள இயலாத அந்நிலையில் அம்மக்களை மாக்கள் என்ற நிலையில் தமிழ் வைத்து இருக்கின்றது.

ஆறாவது அறிவான இறைவனை உணரும் ஞானத்தை பெற்றவர்களையே மக்கள் என்று தமிழ் வழங்குகின்றது.

கண் இருந்ததும் கண் தெரியவில்லை என்றால் அது ஏதாவது நோயாக இருக்கலாம்...இல்லை கண் குறைபாடு உடையதாக இருக்கலாம். ஆனால் ஆன்மா சரியாக வேலை செய்ய வில்லை அதனால் இறைவனை அறிய இயலவில்லை என்றுக் கூறுவது எங்கனம்? ஆன்மா குறை உடையதாக இருக்குமா என்ற கேள்வி இங்கே எழலாம்.

அதற்கு விடையாக ஆன்மீகவாதிகள் கூறுவது என்னவென்றால் ஆன்மாவானது மாயையினால் சூழப் பட்டு இருக்கின்றது (சகசமலம்), அதனாலேயே தான் அது தன்னையும் சரி இறைவனையும் சரி அறியாத நிலையில் இருக்கின்றது.

ஆனால் எப்பொழுது இறைவன் ஆன்மாவிற்கு தன்னை உணர்த்துகின்றானோ அப்பொழுது ஆன்மாவானது இறைவனை உணர்ந்து அவனின் அடிப்பற்றி செல்ல ஆரம்பிக்கும் என்பதே ஆகும். அந்நிலையில் ஆன்மா என்பது மனிதர்களுள் இறைவன் குடி கொண்டு இருக்கும் கோவிலாக மாறும் என்றுமே ஆன்மிகம் பேசுவோர் கூறி இருக்கின்றனர்.

//உங்கள் சரீரமானது நீங்கள் தேவனாலே பெற்றும் உங்களில் தங்கியும் இருக்கிற பரிசுத்த ஆவியினுடைய ஆலயமாயிருக்கிறதென்றும், நீங்கள் உங்களுடையவர்களல்லவென்றும் அறியீர்களா? – I கொரிந்தியர் 6:19- இது பவுலின் கூற்று.

உடம்பினை முன்னம் இழுக்கு என்று இருந்தேன்
உடம்பினுக்கு உள்ளே உறுபொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோயில்கொண்டான் என்று
உடம்பினை யான் இருந்து ஓம்புகின்றேனே. – திருமந்திரம் - இது திருமூலரின் கூற்று.


இதனைப் பற்றி விரிவாக காண நாம் சிவஞானபோதத்தைக் காண வேண்டி இருக்கின்றது. அதனைப் பின்னர் காணலாம்.

இப்பொழுது,

ஆன்மாவானது மனிதர்களிடம் மட்டுமே இருக்கின்றது என்றும் அதுவே அவர்களின் ஆளுமைக்கும் ஆறாம் அறிவிற்கும் காரணம் என்றும் ஆன்மாவின் வாயிலாகவே இறைவனை உணர முடியும் என்றுமே அறிந்து இருக்கின்றோம்.

ஆனால் ஆன்மாவானது தன்னையும் இறைவனையும் அறியாத நிலையில் இயல்பாகவே ஆன்மா இல்லை என்றும் இறைவன் இல்லை என்றும் கருத்துக்கள் உலகில் எழுந்துக் கொண்டு தான் இருக்கின்றன. ஆனால் எப்பொழுது ஆன்மாவினை சூழ்ந்து இருக்கும் மாயையினை இறைவன் அகற்றுகின்றாரோ அப்பொழுது ஆன்மாவானது இறைவனை உணர்ந்துக் கொண்டு மெய்யுணர்வுப் பெறும் என்பதே தமிழ் கூறும் ஆன்மவியலின் கருத்து.

இதையேத் தான் மெய்கண்டார்

"ஊனக்கண் பாசம் உணராப் பதியை
ஞானக் கண்ணினில் சிந்தை நாடி" - சிவஞானபோதம் 9


ஐம்புலன்களில் ஒன்றான கண்ணினைக் கொண்டு காண இயலாத இறைவனை ஞானக் கண் கொண்டு காணலாம் என்றும்,

திருவள்ளுவர்,

"ஐயுணர்வு எய்திய கண்ணும் பயமின்றே

மெய்யுணர்வு இல்லா தவர்க்கு" - குறள் 354

என்றும்

"இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி
மாசறு காட்சி யவர்க்கு" குறள் 352

கூறிச் சென்று உள்ளனர்.

மேலும் சிலர் உயிரும் ஆன்மாவும் ஒன்று என்று கருதிக் கொண்டு இருக்கின்றனர். ஆனால் அக்கூற்று தவறென்று தமிழ் அறிவியல் தெளிவாக விளக்கிக் கொண்டு இருக்கின்றது.

உயிர் என்பது வேறு ஆன்மா என்பது வேறு.

இந்த விடயத்தைத் தான் தமிழ் அறிவியல் மிகவும் தெளிவாகக் கூறிக் கொண்டு இருக்கின்றது. அதனை அறிந்துக் கொள்ளாது உயிரினையும் சரி உடலினையும் சரி ஆன்மாவினையும் சரி தெளிவாக நம்மால் அறிந்துக் கொள்ள இயலாது.

உயிர்கள் அனைத்து உயிரினங்களுக்கும் பொதுவாக இருக்கின்றது. ஆனால் ஆன்மா என்பது மனிதனுக்கு மட்டுமே உரிய ஒன்றாக இருக்கின்றது. ஆன்மா இருக்கும் காரணத்தினால் தான் மனிதனால் மற்ற உயிரினங்களை ஆட்சிப் புரிய முடிகின்றது. ஆன்மா இருப்பதினால் தான் அவனால் மாற்றங்களைப் புரிய முடிகின்றது. ஆன்மா அவனுக்கு சுயமாக முடிவு செய்யும் தன்மையை வழங்குகின்றது. ஆனால் ஆன்மாவையும் இறைவனையும் உணராத நிலையில் மனிதன் தவறுகளை செய்ய எத்தனிக்கின்றான்...எப்பொழுது இறைவன் அவனுக்கு உணர்த்துகின்றாரோ அப்பொழுது அவனது ஆன்மா விழிப்படைந்து அவன் ஞானம் பெறுகின்றான். இறைவனை அடைகின்றான்.

இது தான் தமிழக ஆன்மீகமும் அறிவியலும் கூறும் விடயமாகும்.

ஆனால் இதனை அறியாது வெறும் உடலினை வைத்து மட்டுமே ஆராய்ந்துக் கொண்டு இருக்கும் ஐரோப்பிய அறிவியல் மனிதன் ஒரு மிருகம் என்றும் அவன் மிருகத்தில் இருந்து பரிணாம மாற்றத்தால் உருவானான் என்றும் கூறிக் கொண்டு இருக்கின்றது.

உயிரையும் சரி ஆன்மாவையும் சரி ஐரோப்பிய அறிவியல் இன்னும் ஆராயத் துவங்கவே இல்லை. ஆனால் தமிழிலோ, உயிரைப் பற்றிய ஆராய்ச்சிகள் முற்றுப் பெற்று ஆன்மீகத்தைப் பற்றிய ஆராய்ச்சிகளும் வளர்ந்துக் கிடக்கின்றன. ஆனால் தமிழும் தமிழனும் அடிமைப்பட்டுக் கிடப்பதால் இந்த விடயங்கள் வெளிவராமலே இருக்கின்றன.

ஆன்மாவினைப் பற்றிய அறிவியலான ஆன்மவியல் தமிழிலே மட்டுமே வளர்ந்து இருக்கின்றது. இதனை அறியாது தான் ஐரோப்பிய அறிவியல் இன்னும் உடலினை வைத்துக் கொண்டு குரங்கில் இருந்து மனிதன் வந்தான் என்றுக் கூறிக் கொண்டு இருக்கின்றது.

தமிழ் அறிவியல் வெளிவரும் வரை அந்நிலையும் சரி அக்கூற்றும் சரி தொடர்ந்து இருந்துக் கொண்டே தான் இருக்கும்.

அதனை வெளிக்கொணர வேண்டியக் கடமை நமக்கு இருக்கின்றது. முயல்வோம்...!!!

இத்துடன் இத்தொடர் முடிவு பெறுகின்றது. தொடர்ந்து படித்தமைக்கு நன்றி நண்பர்களே...!!!உங்களின் கேள்விகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன.

முற்றும்.

பி.கு:

1) ஆய்வாளர்.தெய்வநாயகம் என்பவரின் ஆய்வுகளில் இருந்து நான் அறிந்தவற்றையே இங்கே பதிவிட்டு இருக்கின்றேன்.

2) விவாதங்களும் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

3) சிவஞானபோதத்தின் கருத்துக்களை அறிந்துக் கொள்ள,

முந்தையப் பகுதி

தமிழ் அறிவியலில் உயிரை புலன்களின் அடிப்படையில் பிரித்து வைத்து இருக்கின்றனர் சரி. தொடு உணர்வு மட்டுமே இருக்கும் உயிர்களை ஓரறிவு உயிர்கள் என்றும் ஐம்புலன்களும் இருக்கும் உயிர்களை ஐந்தறிவு உயிர்கள் என்றும் கூறி உள்ளனர் சரி. ஆனால் மனிதனை மட்டும் ஆறறிவு படைத்த உயிரினமாக கூறி இருக்கின்றனரே...அது ஏன்? அவன் ஆறாவது அறிவினை உடையவன் என்றால் அந்த அறிவிற்கு உரிய உறுப்பு ஏது? ஆறாவது அறிவு என்றால் என்ன?

இப்பொழுது இக்கேள்விகள் தான் நம் முன்னே நின்றுக் கொண்டு இருக்கின்றன.நியாயமான கேள்விகள் தான். புலன்களின் வழியாக உயிர்களைப் பிரித்து இருக்கின்றார்கள் என்று கூறும் பொழுது ஆறாவது அறிவு என்று ஒன்று உள்ளது என்று நாம் கூறினால் ஆறாவது அறிவிற்குரிய உறுப்பு எது என்றும் நாம் நிச்சயமாகக் கூறித் தானே ஆக வேண்டி இருக்கின்றது.

சரி இப்பொழுது அக்கேள்விக்கான விடையினைக்காண முயலலாம்.

ஐந்தறிவு படைத்த உயிரினங்கள் இருக்கின்றன. மனிதனும் ஐம்புலன்கள் கொண்டவனாக இருக்கின்றான். ஆனால் அவன் மற்ற உயிரினங்களில் இருந்து வேறுபட்டு நிற்கின்றான். மற்ற உயிரினங்கள் மாறாது இருக்கும் பொழுது இவன் மட்டும் மாறிக் கொண்டே இருக்கின்றான். இதற்கு என்ன காரணம் என்று கண்டால் மனிதனுக்கு பகுத்தறியும் தன்மை இருக்கின்றது என்பதே சிலர் கொடுக்கும் விடையாகும்.

அதாவது மனிதனால் நன்மை தீமை என்று பகுத்தறிய முடியும் ஆனால் மிருகங்களால் அவ்வாறு பகுத்தறிய முடியாது, எனவே தான் மனிதன் மிருகங்களில் இருந்து மாறுபட்டு இருக்கின்றான் என்றும் அந்த பகுத்தறியும் தன்மையே ஆறாவது அறிவு என்பதுமே இன்று பரவலாகப் பரவி இருக்கும் விடயமாகும்.

ஆனால் உண்மை என்னவென்றால் விலங்குகளாலும் பகுத்தறிய முடியும். ஒரு நாயின் முன்னே மெழுகினால் செய்த ரொட்டியினை நாம் வைத்தோம் என்றால் அது அதனுடைய புலன்களைப் பயன்படுத்தி (முதலில் முகர்ந்து பார்க்கும் பின்னர் நாவினால் சோதித்துப் பார்க்கும்) அந்த ரொட்டி சாப்பிட தகுந்தது அல்ல என்று அறிந்துக் கொண்டு அந்த ரொட்டியினை உண்ணாது நகர்ந்துச் சென்று விடும். அதாவது அதனுடைய புலன்களை பயன்படுத்தி ஒரு பொருளானது தனக்கு நல்லதா இல்லை கெட்டதா என்று பகுத்தறிந்துக் கொண்டு நாயானது சென்று விடுகின்றது.

எனவே பகுத்தறிவு என்பதுமனிதர்களுக்கு மட்டுமே சொந்தம் என்பதும் அதுவே தான் ஆறாவது அறிவு என்பதும் சரியான ஒரு விடயமாக அமையாது.

இந்நிலையிலேயே தான் உண்மையிலேயே ஆறாவது அறிவு என்ற ஒன்று இருக்கின்றதா என்ற கேள்வி எழுகின்றது. ஆறாவது அறிவு என்ற ஒன்று இல்லை என்றுக் கூறும் நாத்திக நண்பர்களும் இருக்கின்றனர். அவர்கள் இக்கால அறிவியலை வைத்துக் கொண்டு ஆறாவது அறிவு இல்லை என்று கூறுகின்றனர்.

மனிதனும் ஒரு விலங்கு தான். ஆறாவது அறிவு என்பது எல்லாம் வெறும் கதை என்பதே அவர்களின் வாதமாக இருக்கின்றது.

ஆனால் ஆச்சர்யவசமாக இதே கருத்தைத் தான் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்திருந்த பவணந்தி முனிவரும் கூறிச் சென்றுள்ளார்... அவரது தமிழ் நூலான நன்னூலில்!!!

"மெய்ந் நா மூக்கு நாட்டம் செவிகளின்
ஒன்று முதலாக் கீழ்க் கொண்டுமேல் உணர்தலின்
ஓர் அறிவாதியா உயிர் ஐந்தாம்" - நன்னூல் 444

என்று உயிர் ஐந்து வகைப் படும் என்று நன்னூலில் கூறி இருக்கும் அவர்,

"வானவர் மக்கள் நரகர் விலங்கு புள்
ஆதிசெவி அறிவோ டையறி வுயிரே" - நன்னூல் 449

என்று விலங்குகளும் மனிதர்களும் ஐந்தறிவுப் படைத்தவர்கள் என்றே கூறிச் சென்று உள்ளார். அதாவது இவர் ஆறாவது அறிவு என்ற ஒன்று இருப்பதை மறுத்து உள்ளார்.

ஆச்சர்யவசமாக இவரும் ஒரு நாத்திகரே!!! நாத்திக சமயமான சமண சமயத்தைச் சார்ந்தவர் இவர்.

சிந்திக்கத்தக்க விடயம் தானே இது.

"மக்கள் தாமே ஆறறிவுயிரே" (தொல்காப்பியம் - 1532)

என்று தொல்காப்பியரால்ஆறறிவு படைத்தவனாகக் கூறப் பெறும் மனிதனை, அவனது ஆறாவது அறிவு என்ற விடயத்தை மறுத்து அவனை ஐந்தறிவு விலங்குகளோடு பவணந்தி முனிவர் கூறி இருக்கின்றார்.

மேலும் தொல்காப்பியரும் "மாவும் மாக்களும் ஐயறிவினவே" என்பதன் வாயிலாக மக்கள் சிலரை விலங்குகளுடனே வைத்து ஒப்பிட்டு இருக்கின்றார்.

இந்நிலையில் நாம் எவருடையக் கூற்றினை ஏற்றுக் கொள்வது? தொல்காப்பியரின் கூற்றையா அல்லது பவணந்தி முனிவரின் கூற்றையா என்றே நாம் எண்ணிக் குழம்பிக் கொள்ள மனம் இல்லாத தமிழ் அக்கேள்விக்கும் விடையினை சுமந்துக் கொண்டே இருக்கின்றாள்.

ஆம்...தமிழ் உயிரினை புலன்களின் அடிப்படையில் மட்டுமே பிரித்து இருக்கவில்லை. மாறாக திணைகளின் அடிப்படையிலும் பிரித்து தான் வைத்து இருக்கின்றாள்.

தமிழர்களின் திணை இலக்கணம் உயிர்களை இரண்டாகப் பிரிக்கின்றது.

1) உயர்திணை (மனிதர்கள்)
2) அஃறிணை (மனிதர்கள் அல்லாத மற்ற உயிரினங்கள்)

இப்பிரிவுகள் தமிழில் மட்டுமே இருக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். தமிழர்களின் திணை இலக்கணம் மனிதர்களை மற்ற உயிரினங்களிடம் இருந்து சிறப்பாகப் பிரித்துக் கூறுகின்றது.

இந்நிலையில் தான் நாம் மீண்டும் பவணந்தி முனிவரைச் சந்திக்க வேண்டி இருக்கின்றது. காரணம் மனிதர்களை ஐந்து அறிவு உடையவர்கள் என்று கூறிய அவர் தமிழ் திணை இலக்கணத்தை விளக்க வேண்டிய தருணத்தில்

"மக்கள் தேவர் நரகர் உயர்திணை
மற்றுயிர் உள்ளவும் இல்லவும் அஃறிணை" நன்னூல் 261

என்று மக்களை மற்ற உயிரினங்களிடம் இருந்து வேறுபடுத்தி உயர்த்திக் கூறி இருக்கின்றார்.

அதாவது மனிதனுக்கு ஆறறிவு என்ற ஒன்றுக் கிடையாது என்று அவனை ஐந்தறிவு படைத்தவன் என்று விலங்குகளுடன் ஒப்பிட்டுக் கூறிய பவணந்தி முனிவர், தமிழின் திணை இலக்கணத்தைக் கூறும் பொழுது மனிதன் விலங்குகளிடம் இருந்து மேலானவன் என்றே கூறிச் சென்றுள்ளார். இந்நிலையில் தான் நாம் சில விடயங்களைக் காண வேண்டி இருக்கின்றது.

கடவுள் நம்பிக்கையுள்ள தொல்காப்பியர் ஆறாவது அறிவு இருக்கின்றது என்றும் அதனை உடையவர்கள் மனிதர்கள் என்றும் கூறிச் சென்று உள்ளார். மேலும் அவரும் சில மனிதர்களை ஐந்தறிவு படைத்த மிருகங்களோடு வைத்தே கூறி உள்ளார்.

நாத்திகரான பவணந்தி முனிவரோ ஆறாம் அறிவை மறுத்து மனிதனும் விலங்கும் ஐந்தறிவு உடையவரே என்றே கூறி இருப்பினும் தமிழர்களின் திணை இலக்கணத்தைக் கூற விழையும் பொழுது மனிதர்களை விலங்குகளிடம் இருந்து பிரித்து உயர்த்திக் கூறி உள்ளார்.

இந்நிலையில் சில விடயங்களை நாம் கவனிக்க வேண்டி இருக்கின்றது.

1) மனிதன் விலங்குகளை விட உயர்ந்தவன் என்பதனை இருவருமே ஏற்றுக் கொள்கின்றனர்.
2) தொல்காப்பியர் ஆறாம் அறிவைப் பற்றிக் கூறும் பொழுது அதனை பவணந்தி முனிவர் மறுக்கின்றார்.
3) தொல்காப்பியரும் அனைத்து மனிதர்களும் ஆறாம் அறிவை உடையவர்களாகக் கூறிச் செல்ல வில்லை.

இதனடிப்படையில் நாம் சிந்தித்தோம் என்றால் மனிதன் மற்ற உயிர்களை விட உயர்ந்தவன் என்ற எண்ணம் ஒன்றாக இருந்தாலும் ஆறாம் அறிவைக் குறித்த நிலையில் கருத்து வேறுபாடுகள் இருப்பது தெரிகின்றது. ஏன் இந்த வேறுபாடு என்று நாம் கண்டோம் என்றால் ஆறாவது அறிவினை அனைத்து மக்களும் அறிவதில்லை என்றே தொல்காப்பியர் கூறிச் சென்று உள்ளார்.

அதாவது ஆறாவது அறிவு என்ற ஒன்று இருக்கின்றது என்று கூறிய அவர் அனைத்து மக்களும் ஆறறிவோடு இருக்கின்றனர் என்றுக் கூறவில்லை. சிலரை ஐந்தறிவு நிலையில் தான் வைத்து உள்ளார்.

"அட என்னடா இது...ஆறாவது அறிவு இருக்கு அப்படினு சொல்றாங்க ஆனா எல்லாராலும் உணர முடியாது அப்படின்னு சொல்றாங்க...இவங்க என்னதான் சொல்ல வராங்க" என்று நாம் குழம்புவதை விரும்பாது விடையினை தந்து தான் சென்றுள்ளார் மெய்கண்டார் அவர்கள், அவரது நூலான சிவஞானபோதத்தில்.

"மாயா இயந்திர தனுவினுள் ஆன்மா" சிவஞானபோதம் 3 (விளக்கம்)

என்று உடலினுள் ஆன்மா இருக்கின்றது என்றுக் கூறும் அவர்,

"ஐம்புல வேடரின் அயர்ந்தனை வளர்ந்து எனத்" சிவஞானபோதம் 8 (விளக்கம்)

என்பதன் வாயிலாக ஆன்மா ஐம்புலன்களோடு வளர்ந்து இருக்கின்றது என்றும்,

"...ஆன்மா சகசமலத் துணராது" சிவஞானபோதம் 4 (விளக்கம்)
"...உணர்த்த உணர்தலின்" சிவஞானபோதம் 3 (விளக்கம்)

அந்த ஆன்மாவானது தன்னை அறியாது இருக்கின்றது என்றும் கூறுகின்றார்.

அதாவது உடலினுள் இருக்கும் ஆன்மாவானது, ஐம்புலன்களுடன் இணைந்து தன்னை அறியா நிலையில் இருக்கின்றது என்பதே அவர் கூறும் கருத்தாகும்.

ஐம்புலன்களுடன் இருக்கின்றது என்றால் நிச்சயம் அந்த உயிரினம் ஐந்தறிவு பெற்றதாக இருக்க வேண்டும். அவ்வாறுப் பார்த்தோம் என்றால் விலங்குகளும் மனிதர்களுமே தான் வருகின்றனர். ஆனால் விலங்குகள் வெறும் ஐந்தறிவுப் படைத்தவையாகவே அறியப்பட்டு இருக்கின்றன. ஆனால் மனிதனோ விலங்குகளை விட உயர்ந்தவனாகவும், ஆறாவது அறிவினை உடையவனாகவும் அறியப்பட்டு இருக்கின்றான்.

இந்நிலையில் மனிதனை மற்ற உயிரினங்களிடம் இருந்து பிரித்து அவனைச் சிறப்பிக்கும் ஆறாவது அறிவு என்பது ஆன்மா தான் என்றே நாம் கருத வாய்ப்பு இருக்கின்றது தானே.

அந்த வாய்ப்பைத் தான் நாம் சிறிது ஆராய வேண்டி இருக்கின்றது.

ஆறாவது அறிவு ஆன்மாவா?

காண்போம்....!!!

பி.கு:

1) ஆய்வாளர்.தெய்வநாயகம் என்பவரின் ஆய்வுகளில் இருந்து நான் அறிந்தவற்றையே இங்கே பதிவிட்டு இருக்கின்றேன்.

2) விவாதங்களும் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

இத்தொடரினில் உயிரினையும் உடலினையும் பற்றியே நாம் கண்டு வந்துக் கொண்டு இருக்கின்றோம். மேலும் தொடர்வதுக்கு முன்னர் முந்தையப் பகுதியினை படித்து இருத்தல் நலமாக இருக்கும் என்றே எண்ணுகின்றேன். இணைப்பு இதோ (முதல் பகுதி)

சரி இப்பொழுது பதிவினைத் தொடர்வோம்...!!!


உடல் ஒரு அற்புதமான இயந்திரம் என்றே நாம் கண்டு இருக்கின்றோம். பல்வேறுப் பணிகளை செம்மையாக செய்வதற்கு ஏற்றக் கருவிகளை கொண்டே அது அமைந்து இருக்கின்றது. உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பிற்கும் அதற்கென்று தனிப்பட்ட செயல்கள் இருக்கின்றன. அனைத்து உறுப்புகளும் சரியாகச் செயல்படும் பொழுது உடலின் செயலும் சீராக இருக்கின்றது. மாறாக ஏதேனும் ஒரு உறுப்பு பழுதடைந்து விட்டால் உடலில் அவ்வுறுப்பு செய்ய வேண்டிய பணிகளில் குறை நேர்கின்றது. உடல் தனது முழு திறனுடன் இயங்க முடியாத நிலை வருகின்றது.

உதாரணத்திற்கு, கண்கள் செம்மையாக இயங்கும் பொழுது உடலால் பிற பொருட்களைக் காண முடியும். மாறாக கண்கள் பழுதடைந்து இருந்தால் உடலால் பிற பொருட்களைக் காண முடியாது. நிற்க.

இப்பொழுது ஒரு கேள்வி...

உயிருள்ள உடலுக்கும் உயிரற்ற உடலுக்கும் என்ன வித்தியாசம்?

"அட என்னங்க...உயிர் உள்ள உடல் இயங்கிக் கொண்டு இருக்கும். உயிர் அற்ற உடல் இயங்காது...சில தினங்களுக்குள் மக்கிப் போய் விடும்...இந்த வித்தியாசத்தைக் கூடவா தெரியாமல் இருப்பார்கள்" என்கின்றீர்களா...சரி தான்!!!

உயிர் உள்ள உடல் இயங்கிக் கொண்டே இருக்கின்றது. உயிரற்றதோ வெறும் சடலமாக இயக்கமின்றி கிடக்கின்றது. இரண்டிலும் உறுப்புகள் இருக்கின்றன...ஆனால் உயிருள்ள உடல் இயங்கிக் கொண்டு இருக்கின்றது....உயிரற்ற உடலோ இயங்காமல் அழிந்துக் கொண்டு இருக்கின்றது.

இந்நிலையில் ஏன் இந்த வேறுபாடு என்றே நாம் கண்டோம் என்றால் விடை உயிர் என்றே நமக்கு கிட்டுகின்றது.

உயிர் இருக்கும் வரை ஒரு உடல் அழியாது இயங்கிக் கொண்டு இருக்கின்றது. உயிர் இல்லாத உடலோ அதன் இயக்கம் நிற்கப் பெற்று அழியத் துவங்குகின்றது. இதன் மூலம் நாம் அறியக் கூடிய விடயங்கள் என்னவென்றால்,

1) உயிர் உடலினை இயக்கிக் கொண்டும் அழியாது பாதுகாத்துக் கொண்டும் இருக்கின்றது.
2) உயிர் இன்றி உடல் இயங்குவது இல்லை.
3) உயிரும் உடலும் சேர்ந்தால் தான் உயிரினங்கள் உருவாகப் பெறுகின்றன.

(இதனைப் பற்றி தமிழ் எழுத்துக்கள் அழகாக விளக்கிக் கொண்டு இருக்கின்றன...அவற்றைப் பற்றி அறிய இந்த இணைப்பினைப் பார்க்கவும் (எழுத்துக்களில் அறிவியல்)

உடல் எனும் அற்புதமான இயந்திரத்தை உயிர் இயக்கிக் கொண்டு இருக்கின்றது. அவ்வாறு உடலின் உறுப்புக்களை இயக்குவதன் வாயிலாக உடல் அழியாது இருக்க உயிர் வழி செய்கின்றது.

உணவு செரிக்கப்படல், செரிக்கப்பட்ட உணவு இரத்தத்தோடு கலக்கப்படல், இரத்தம் சுத்தமாக்கப்படல், சுத்தமாக்கப்பட்ட இரத்தம் உடல் முழுவதும் அனுப்பப்படல், தேவையற்ற பொருள்கள் கழிவுகளாக வெளியேற்றப்படல், உடலுக்கு தீங்கு வராமல் அனிச்சைச் செயல்கள் நிகழ்த்தப்படல் ஆகிய இயல்பூக்கச் செயல்களை, உடலின் உறுப்புக்களை இயக்குவதன் மூலம் உயிர் செய்து கொண்டு இருக்கின்றது.

உயிர் இருக்கும் வரை அந்த செயல்கள் நடந்துக் கொண்டே இருக்கின்றன...உடலும் அழியாது இயங்கிக் கொண்டு இருக்கின்றது. ஆனால் உயிர் எப்பொழுது உடலினைப் பிரிகின்றதோ அப்பொழுது அந்த செயல்கள் எல்லாம் நிற்கப் பெற்று உடலும் அழியத் துவங்குகின்றது.

இது உயிருள்ள அனைத்து உயிரினங்களுக்கும் பொருந்தும்.

நாம் ஏற்கனவே சென்றப் பதிவினில் கண்டு இருக்கின்றோம், தமிழ் அறிவியல் உயிர்களை ஆறு விதமாக (ஓரறிவு உயிரினம் முதல் ஆறறிவு உயிரினம் வரை) பிரித்து உள்ளது என்று. இப்பிரிவுகள் அவ்வுயிரினங்கள் கொண்டுள்ள புலன்களின் அடிப்படையிலேயே அமைக்கப்பட்டு உள்ளன.இந்த உயிரினங்கள் அனைத்திற்கும் உயிர் உண்டு.

அந்த உயிர் அவ்வுயிரினங்களின் உடலினை இயக்கியும் பாதுகாத்தும் கொண்டு இருக்கின்றது. மேலும் உயிரின் இயக்கம் ஒவ்வொரு வகையான உயிரினங்களுக்கும் வேறும் படுகின்றது.

அதாவது ஓரறிவு உயிரினங்களின் உயிர் செயல்படும் முறை வேறு...ஈரறிவு உயிரினங்களின் உயிர் செயல்படும் முறை வேறு. காரணம் அந்த உயிரினங்கள் வெவ்வேறு தன்மையை உடையவை. ஈரறிவு உயிரினம் கூடுதலாக சுவை உணர்வினை தரும் வாயினைப் பெற்று இருக்கின்றது...எனவே அவ்வுயிரினத்தின் உயிர் அந்த புலனையும் இயக்கும் தன்மைப் பெற்றதாக விளங்க வேண்டி இருக்கின்றது. இந்த வேறுபாடு அனைத்து வகையான உயிரினங்களுக்கும் பொருந்தும்.

எனவே அனைத்து உயிரினங்களுக்கும் உயிர் இருந்தாலும் உயிரின் செயல்பாடுகள் ஒவ்வொரு உயிரினத்திற்கும் ஏற்ப மாறுபடுகின்றது.

உதாரணத்திற்கு கடலில் வாழும் உயிரினங்களின் உடல் நீரில் வாழ்வதற்கு ஏற்பவே அமைந்து இருக்கின்றது. உயிர் அந்த உடலினை இயக்குகின்றது. நீரில் இருக்கும் வரை உடலின் துணைக் கொண்டு உடலினை இயக்குவதற்குரிய ஆற்றலை உயிர் பெற்றுக் கொண்டு உடலினை அழியாது பாதுகாக்கின்றது.

ஆனால் அதே உயிரினம் எப்பொழுது நீரில் இருந்து வெளியேறி தரைக்கு வருகின்றதோ, அப்பொழுது அந்த உயிரினால் உடலை இயக்க முடிவதில்லை. காரணம் தரையில் இருந்து இயங்க அந்த உடலுக்கு ஆற்றல் இல்லை...அந்த உடலின் உறுப்புகளும் தரையில் இயங்குவதற்கு பயன்படுவதில்லை. இந்நிலையில் உயிர், அந்த உடலின் உறுப்புகளை தன்னால் இயன்ற அளவு பயன்படுத்த முயன்றும் பயன் இல்லாததால் இறக்கின்றது. காரணம் உயிர் அதன் சேவைக்கு கொண்டிருந்த கருவிகள் நிலத்தில் பயனற்றுப் போய் விடுகின்றன. நிற்க.

எனவே ஒவ்வொரு உயிரினத்தின் உடலிற்கேற்ப உயிர் இயங்குகின்றது என்றே நாம் அறிகின்றோம். இந்நிலையில் ஒரு உயிர் மற்றொரு உயிராக மாறுவது என்பது இயலாத காரியம். ஏனென்றால் உடலின் தன்மைகேற்பவே உயிரால் உடலை இயக்க முடியும். ஈரறிவு உயிரினத்தின் உடலில் மூன்றாம் அறிவிற்கான புலனாகிய நாசியினை பயன்படுத்தவோ/உருவாக்கவோ உயிரால் முடியாது. நிற்க.

உடலிற்கேற்ப உயிரின் செயல்பாடுகள் அமைந்து இருக்கின்றது என்றும், ஒரு உயிர் மற்றொரு உயிராக மாறுவது இயலாத காரியம் என்றும் நாம் கண்டு இருக்கின்றோம். சரி...இப்பொழுது அனைத்து உயிரினங்களுக்கும் உயிர் இருக்கின்றது என்று நாம் கண்டு இருக்கின்றோம். அவை புலன்களுக்கு ஏற்ப ஓரறிவு முதல் ஆறறிவு வரை பிரிக்கப்பட்டும் இருக்கின்றன என்றும் நாம் கண்டு இருக்கின்றோம். இந்நிலையில் தான் நாம் மனிதனைப் பற்றி பார்க்க வேண்டி இருக்கின்றது.

காரணம் அவனை ஐந்து அறிவுடையவனாகவும் வைத்து இருக்கின்றனர், ஆறறிவு உடையவனாகவும் வைத்து இருக்கின்றனர். மேலும் மனிதனும் ஒரு வகை மிருகம் என்றும் சிலர் கூறுகின்றனர். அது ஏன் என்றே நாம் காண வேண்டி இருக்கின்றது.

அதற்கு ஆறாம் அறிவைப் பற்றி நாம் காண வேண்டி இருக்கின்றது...!!!

காணலாம்...!!!

தொடரும்...!!!

முந்தையப் பதிவு

சூத்திரம் 12 : ஆன்மாவே கோயில்

செம்மலர் நோன்தாள் சேரல் ஒட்டா
அம்மலம் கழீஇ அன்பரோடு மரீஇ
மாலற நேயம் மலிந்தவர் வேடமும்
ஆலயந் தானும் அரன் எனத் தொழுமே.

பதவுரை:

செம்மலர் - சிவப்பு மலர் போன்ற

நோன்தாள் - மன்னுயிர்க்காகத் தன்னுயிர் கொடுக்கும் தவமாகிய நோன்பினில் நிலை நின்ற இறைவனின் திருவடிகளை

சேரல் ஒட்டா - சேர விடாமல் ஆன்மாவைத் தடுத்து நின்ற

அம்மலம் கழீஇ - அக்கொடிய பாவம் கழுவப்பட்டு

அன்பரொடு மரீஇ - என்பையும் பிறர்க்கீயும் அன்பராகிய இறைவனுடைய திருவடிகளில் இணைக்கப்பட்டு

மால் அற - ஆன்மாவைப் பற்றி நின்ற மயக்கம் முற்றிலுமாக நீக்கப்பட்டு

நேயம் மலிந்து - ஆன்மீக நேயத்தால் நிரப்பப்பட்டு

அவர் வேடமும் - ஆன்மாவின் பழைய சாயல் நீங்கி இறைவனின் புதிய சாயலைப் பெற்ற நிலையில் அது

அரன் - பாவத்தை அரித்து எடுப்பவனாகிய இறைவன்

ஆலயம் தானும் என - மகிழ்ந்து உறையும் திருக்கோயிலாகத் தான் அமைந்து உள்ளதை உணர்ந்து

தொழுமே - இறைவனை வாழ்த்தி வணங்குமே

பொருள்:

மன்னுயிர்க்காகத் தன்னுயிர் கொடுக்கும் தவத்தில் நிலை நின்று சிகப்பு மலர் போன்று விளங்குகின்ற இறைவனின் திருவடிகளைச் சேர விடாமல் ஆன்மாவைத் தடுத்து நிற்கும் கொடிய பாவம் கழுவப்பட்டு, என்பையும் பிறர்க்கீயும் அன்பராகிய இறைவனுடைய திருவடிகளில் இணைக்கப்பட்டு ஆன்மாவைப் பற்றி நின்ற மயக்கம் முற்றிலுமாக நீக்கப்பட்டு, ஆன்மீக நேயத்தால் நிரப்பப்பட்டு, இறைவனின் புதிய சாயலைப் பெற்று, பாவத்தை அரித்து எடுப்பவனாகிய இறைவன் மகிழ்ந்து உறையும் திருக்கோயிலாகத் தான் அமைந்து உள்ளதை உணர்ந்து தன்னை மீட்டு ஆட்கொண்ட இறைவனை வாழ்த்தி வணங்கி இன்புறும்.

இறைவனின் திருவடிகளில் இணைந்த ஆன்மா, மயக்கம் முற்றிலுமாக நீங்கப் பெற்று ஆன்மீக நேயத்தால் நிரப்பப் பெறுகின்றது. அவ்வாறு நிரப்பப்பட்ட ஆன்மா எவ்வாறு இறைவனை வழிபட வேண்டும் என்பதற்குச் சித்தாந்த சாத்திரத்தின் திருக்களிற்றுப்படியார் பின்வருமாறு கூறுகின்றது.

அன்பேயென் அன்பேயென் றன்பால் அழுதரற்றி
அன்பேஅன் பாக அறிவழியும் – அன்பன்றித்
தீர்த்தந் தியானஞ் சிவார்ச்சனைகள் செய்யுமவை
சாற்றும் பழமன்றே தான். - திருக்களிற்றுப்படியார் 55


இவ்வாறு அன்பால் அழுது அரற்றி அன்பே அன்பாக அறிவழியும் ஆன்மாவாக, இறைவன் வாழும் திருக்கோயிலாக மாறுகின்றது. அதன் பழைய சாயல் நீங்கி இறைவனின் புதிய சாயலாகிய இறை வேடத்தை தாங்கிக் கொள்கின்றது. என்பையும் பிறர்க்கீயும் அன்பனாக மாறுகின்றது. இப்படிப்பட்டவர்களே இறைவன் மகிழ்ந்து உறையும் திருக்கோயில்கள் ஆகின்றனர். இறைவனை இடைவிடாது தொழும் பெரும்பேற்றை அடைந்து இறைவனில் இன்புறுகின்றனர். இதனையே இறைவனை உணர்ந்தவர்கள் கூறிச் சென்று உள்ளனர்

//உங்கள் சரீரமானது நீங்கள் தேவனாலே பெற்றும் உங்களில் தங்கியும் இருக்கிற பரிசுத்த ஆவியினுடைய ஆலயமாயிருக்கிறதென்றும், நீங்கள் உங்களுடையவர்களல்லவென்றும் அறியீர்களா? – I கொரிந்தியர் 6:19- இது பவுலின் கூற்று.

உடம்பினை முன்னம் இழுக்கு என்று இருந்தேன்
உடம்பினுக்கு உள்ளே உறுபொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோயில்கொண்டான் என்று
உடம்பினை யான் இருந்து ஓம்புகின்றேனே. – திருமந்திரம் - இது திருமூலரின் கூற்று.


இந்த நிலையே அவர்கள் இடைவிடா இன்பத்தை, இரவா இன்பத்தை அடையும் அதி உயர் நிலையாகும். இவ்வகையில் அடையும் இன்பம் என்றுமே அழிவதில்லை. அந்த இன்பம் இவ்வுலகிலேயே தொடங்குகின்றது.

முற்றும்.

பி.கு:

1) ஆய்வாளர்.தெய்வநாயகம் என்பவரின் ஆய்வுகளில் இருந்து நான் அறிந்தவற்றையே இங்கே பதிவிட்டு இருக்கின்றேன்.

2) விவாதங்களும் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

முந்தையப் பதிவு

சூத்திரம் 11 : அன்பர் திருவடியில் ஆன்மா

காணும் கண்ணுக்குக் காட்டும் உளம் போல்
காண உள்ளத்தைக் கண்டு காட்டலின்
அயரா அன்பின் அரன்கழல் செலுமே.

பதவுரை:

காணும் - உலகப் பொருளைக் கண்டு அறியக்கூடிய

கண்ணுக்கு - கண்ணாகிய உறுப்பிற்கு

காட்டும் - உள்ளிருந்து காட்டுகின்ற

உளம்போல் - ஆன்மாவைப் போன்று

காண - பாசத்தால் மறைபுண்டிருந்த ஆன்மாவிற்கு அதன் மறைப்பை நீக்கி, அது யாவற்றையும் அதனதன் இயல்பின்படி தெளிவாய் அறிந்து கொள்ளுமாறு

உள்ளத்தைக் கண்டு காட்டலின் - இறைவன் ஆன்மாவைத் தேடி வந்து அதைக் கண்டு பிடித்து, அது நடக்க வேண்டிய வழியைத் தாமே முன்னின்று காட்டுகின்ற காரணத்தால்

அயரா அன்பின் அரன் - மயக்கம் சிறிதும் இல்லாத, என்பையும் பிறர்க்கீயும் அன்பனாகிய, பாவத்தை அரித்தெடுக்கும் இறைவனுடைய

கழல்செலுமே - திருவடியைச் சார்ந்து திடமாகப் பற்றிக் கொள்ளும்

பொருள்:

உலகப் பொருளைக் கண்டு அறியக் கூடிய கண்ணாகிய உறுப்பிற்கு அது காணுமாறு உள்ளிருந்து காட்டுகின்ற ஆன்மாவைப் போன்று, பாசத்தால் மறைப்புண்டு இருந்த ஆன்மாவிற்கு அதன் மறைப்பை நீக்கி, அது யாவற்றையும் தெளிவாக அறிந்துக் கொள்ளுமாறு அதைத் தேடி வந்து, அதைக் கண்டு பிடித்து, அது நடக்க வேண்டிய வழியைத் தாமே முன்னின்று காட்டுகின்ற காரணத்தால், மயக்கம் சிறிதும் இல்லாதவனும், என்பையும் பிறர்க்கீயும் அன்பையுடையவனும், பாவத்தை அரித்தெடுப்பவனும் ஆகிய இறைவனுடைய திருவடியை ஆன்மா சார்ந்து திடமாகப் பற்றிக் கொள்ளும்.

இறைபணியில் ஆன்மா நிற்கும் பொழுது மலம், மாயை, வல்வினை ஆகிய மூன்றும் நீங்குகின்றன என்றால் கடவுள் தன்னுடைய வழியை ஆன்மாவிற்குத் தெளிவாக காட்டுகின்றானா? அனுதினமும் அவன் வழியில் நடத்துகின்றானா? என்னும் கேள்விகள் எழுகின்றன. இக்கேள்விகளுக்கு விடைகள் ஆம் என்பதே.

கண் காட்டுகின்றது. காணுகின்ற கண்ணிற்குப் பொருளைக் காட்டுவது உள்ளமாகிய ஆன்மாவே ஆகும். ஆன்மாவின் துணையின்றி, கண் பொருளைக் காண இயலாது. அதே போன்று உள்ளம் நடக்க வேண்டிய வழியை அதைத் தேடி வந்து அதைக் கண்டு பிடித்து அதற்குக் காட்டுபவனாக இருப்பவன், அதன் மீது அயரா அன்பினைக் கொண்ட கடவுளே ஆகும். கடவுளின் அன்பிற்கு ஓர் எல்லை உண்டோ! ஆகவே அன்பின் உறைவிடமாக விளங்குபவனும், பாவத்தை அரித்தெடுக்கும் அரனுமாகிய கடவுளுடைய திருவடிகளை ஆன்மா சேரும்.

தொடரும்....!!!

பி.கு:

1) ஆய்வாளர்.தெய்வநாயகம் என்பவரின் ஆய்வுகளில் இருந்து நான் அறிந்தவற்றையே இங்கே பதிவிட்டு இருக்கின்றேன்.

2) விவாதங்களும் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

முந்தையப் பதிவு

சூத்திரம் 10 : ஆன்ம ஈடேற்றம்

அவனே தானே ஆகிய அந்நெறி
ஏகனாகிய இறைபணி நிற்க
மலமாயை தன்னொடு வல்வினை இன்றே

பதவுரை:

அவனே - ஞானக்கண்ணால் உணரப்பட்ட கடவுளே

தானே ஆகிய - தன்னை முழுமையாக ஆட்கொண்டவனாகிய நிலையில்

அந்நெறி - அவன் காட்டும் வழியில்

ஏகனாகி - தன்னை ஒப்படைத்து, அவன் வழியில் ஒன்றாகி

இறைபணி நிற்க - இறைவன் ஏவும் பணியில் ஒன்றித்து நிற்க

மலம் - ஜென்ம பாவமாகிய சகசமலமும்

மாயை - சகசமலத்தின் காரணமாகத் தீமை செய்ய விழையும் உடல் இறைவனுக்கு அடிமையாகி இறைபணி செய்வதால் மாயையாகிய உடலின் போராட்டங்களும்

தன்னொடு - ஆகிய இவற்றுடன்

வல்வினை - (சகசமலம், உடல் போராட்டம் ஆகிய இரண்டின் காரணமாகச் செயல்படக் கூடிய) கொடிய பாவ வினைகளும்

இன்றே - இல்லாமல் போயிற்றே.

பொருள்:

ஞானக் கண்ணினால் உணரப்பட்ட கடவுளே தன்னை முழுமையாக ஆட்கொண்ட நிலையில், அவன் காட்டும் வழியில் தன்னை ஒப்படைத்து அவன் வழியில் ஒன்றாகி கடவுள் ஏவும் பணியில் ஒன்றித்து நிற்க, ஜென்ம பாவமாகிய சகசமலமும், சகசமலத்தினின்று விடுபட்டு இறைபணி செய்வதால் மாயையாகிய உடலின் போராட்டங்களும், சகசமலம், போராட்டம் ஆகியவற்றின் காரணமாக செயல்படக்கூடிய கொடிய பாவ வினைகளும் இல்லாமல், இவற்றினின்று முற்றிலும் விடுதலை அடைந்ததாய்ப் பரிசுத்த நிலையை ஆன்மா அடைகின்றது.

இவ்வாறு இடைவிடாமல் கடவுளை ஞானக்கண் கொண்டு நோக்கித் தியானிக்க, தியானிக்க, தனது சித்தத்தை முழுமையாக விட்டு கடவுளுடைய சித்தத்தையே செயல்படுத்தும் நிலைக்கு ஆன்மா வளர்கின்றது. 'இனி நான் அல்ல...என்னுள் வாழும் கடவுளே என்னைச் செயல்படுத்துகின்றான்' என்ற நிலைக்கு ஆன்மா வரும் பொழுது கடவுள் ஏவும் பணியில் தன்னை மறந்து ஒன்றித்து விடுகின்றது. அந்நிலையில் ஆன்மா செய்யும் செயல்கள் யாவும் கடவுளின் கட்டளையை நிறைவேற்றும் செயல்களாக மாறி விடுகின்றன. பிறவியிலேயே இவனைத் தொடர்ந்து வரும் சகசமலம் அழிந்து விடுகின்றது.

சகசமலத்திற்கு அடிமையாய் இருந்து அதன் காரணமாகத் தீமை செய்ய விழையும் உடல், சகசமலத்தில் இருந்து விடுதலைப் பெற்று, கடவுளுக்கு அடிமையாகி இறை பணி செய்வதால், மாயையாகிய உடலின் போராட்டங்கள் நீங்குகின்றன. சகசமலம், உடல் போராட்டம் ஆகிய இரண்டில் இருந்து விடுதலைப் பெற்ற காரணத்தால், இவை இரண்டன் காரணமாகச் செயல்படக் கூடிய பாவ வினைகளும் இல்லாமல் அழிகின்றன.

அக்கிரமத்தில் ஆழ்த்தும் அசுத்தத்திற்கும், ஒழுக்கக் கேட்டிற்கும் தன் உறுப்புகளை முன்பு அது அடிமை ஆக்கி இருந்தது. அதுபோல இப்பொழுது தூய்மையில் (பரிசுத்தத்தில்) மலரும் ஏற்புடைய வாழ்விற்கு அது தன் உறுப்புகளை உட்படுத்திக் கொள்கின்றது.

முன்னே பாவத்திற்கு அடிமையாயிருந்த ஆன்மா, பாவத்தில் இருந்து விடுதலைப் பெற்று கடவுளுக்கு ஏற்புடைய நிலைக்கு அடிமையாகின்றது. இதனால் அதற்குக் கிடைத்துள்ள பலன் தூய்மையடைவதே, பரிசுத்தம் ஆவதே ஆகும்.

தொடரும்....!!!

பி.கு:

1) ஆய்வாளர்.தெய்வநாயகம் என்பவரின் ஆய்வுகளில் இருந்து நான் அறிந்தவற்றையே இங்கே பதிவிட்டு இருக்கின்றேன்.

2) விவாதங்களும் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

முந்தையப் பதிவு

சூத்திரம் 9 : ஆன்ம முயற்சி

ஊனக்கண் பாசம் உணராப் பதியை
ஞானக் கண்ணினில் சிந்தை நாடி
உராத்துனைத் தேர்த்து எனப் பாசம் ஒருவத்
தண்ணிழலாம் பதி விதி எண்ணும் அஞ்செழுத்தே.

பதவுரை:

ஊனக்கண் பாசம் உணராப் பதியை - ஐம்புல வேடர்களில் ஒன்றாகிய புறக் கண் கொண்டு அறியும் பாச ஞானத்தால் உணர இயலா பதியாகிய இறைவனை

ஞானக் கண்ணினில் - இறைவன் கொடுத்த அருளாகிய ஞானக் கண்ணினால்

சிந்தை நாடி - ஆராய்ந்து அறிந்து உணர்ந்த அளவில்

உரா - யாராலும் ஏறிச் செலுத்த (ஊர்ந்து செல்ல) இயலாத

துனை - மிக வேகமுடைய

தேர்த்து என - பேய்த் தேரைப் (கானல் நீர்) போல

பாசம் ஒருவ - பாசம் விரைந்து நீங்க

தண்ணிழலாம் பதி - ஆன்மாக்களின் பாவம் ஆகிய வெப்பம் தணியக் குளிர்ந்த நிழலாக கடவுள் விளங்குகின்றான்

விதி எண்ணும் - அவனை முறைப்படி இடை விடாது தியானிப்பது

அஞ்செழுத்தே - ஐந்து எழுத்தின் உட் பொருளின் வழி ஆகும்.

பொருள்:

ஐந்து வேடர்களில் ஒன்றாகிய புறக்கண் கொண்டு அறியும் பாச ஞானத்தால் உணர இயலா கடவுளை, அவன் கொடுத்த அருளாகிய ஞானக் கண்ணினால் ஆராய்ந்து அறிந்து உணர்ந்த அளவில், யாராலும் ஏறிச் செலுத்த இயலாத மிக வேகமுடைய பேய்த் தேராகிய கானல் நீரைப் போலப் பாவம் விரைந்து நீங்க, அவ்வான்மாக்களின் பாவமாகிய வெப்பம் தணிய, குளிர்ந்த நிழலாக கடவுள் விளங்குகின்றான். முறைப்படி இடைவிடாது ஐந்து எழுத்தின் உட்பொருளின் வழி அவனைத் தியானிக்க வேண்டும்.

இறைவன் தவத்தினில் உணர்த்த அதை உணர்ந்த ஆன்மா மலத்தை விட்டு, பாவத்தை அரித்தெடுக்கும் அரனடியைச் சேர்கின்றது என்பதைப் பார்த்தோம். உணர்ந்தவுடன் மலம் நீங்கிற்று என்றால் மலம் நீங்கிய முறை எவ்வாறு? என்ற கேள்வி எழலாம். புறக்கண் கொண்டு கடவுளைக் காண முயன்றால் அவனைக் காண இயலாது. ஆன்மாவிற்கு, கடவுள் அருளால் திறந்துள்ள அகக் கண்ணால் ஆராய்ந்து உணர்ந்த அளவில், பாசமாகிய மலமானது மிக விரைந்து நீங்கிற்று. அது எவ்வாறு நீங்கிற்று என்றால் கானல் நீராகிய பேய்த் தேரைப் போல மிக விரைந்து நீங்கிற்று.

கோடைக் காலத்தில் நண்பகல் வெயிலில் காடு வழிச் செல்லும் பொழுது கானல் நீராகிய பேய்த் தேரை நாம் காணஇயலும். அதனுடைய விரைவு, அதை நேரில் கண்டோர்க்கே புலப்படும். பாவம் நீங்கியதற்குப் பேய்த் தேரின் விரைவு ஒப்பிட்டுக் காட்டப்படுகின்றது.

கோடைக் காலத்தில் நண்பகல் வெயிலில் நடந்து துன்புறும்மனிதனுக்குக் குளிர்ந்த நிழல் எவ்வளவு ஆறுதலைக் கொடுக்குமோ அவ்வளவு ஆறுதலைப் பாவமாகிய கானலினின்று விடுபட்ட ஆன்மா, இறைவன் திருவடியாகிய குளிர் நிழலில் பெற்று மகிழ்ச்சி அடைகின்றது. அந்த மகிழ்ச்சியில் நிலை நிற்க ஆன்மாவானது முறைப்படி ஐந்தெழுத்தின் உட் பொருளைத் தன்னகத்தே இடை விடாது தியானித்து நிற்கும்.

தொடரும்....!!!

பி.கு:

1) ஆய்வாளர்.தெய்வநாயகம் என்பவரின் ஆய்வுகளில் இருந்து நான் அறிந்தவற்றையே இங்கே பதிவிட்டு இருக்கின்றேன்.

2) விவாதங்களும் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

முந்தையப் பதிவு

சூத்திரம் 8 : ஆன்ம மீட்பு

ஐம்புல வேடரின் அயர்ந்தனை வளர்ந்து எனத்
தம்முதல் குருவுமாய்த் தவத்தினில் உணர்த்தவிட்டு
அன்னியம் இன்மையின் அரன்கழல் செலுமே.

பதவுரை:

தம்முதல் - தமக்கு முதல்வனாகிய இறைவன்

ஐம்புல வேடரின் வளர்ந்து - மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐம்புல இச்சைகளாகிய வேடருடன் வளர்ந்து

அயர்ந்தனை என - உன்னையும் உன்னைப் படைத்த இறைவனையும் அறியாது மயங்கி உள்ளனை என்று

குருவுமாய் - குருவாக உலகத்தில் வந்து

தவத்தினில் - ஆன்மாவிற்காகத் தான் துன்பத்தை ஏற்றுத் தன்னுயிர் தானறப் பெறுதலாகிய தவத்தினில்

உணர்த்த - ஆன்மாவிற்கு உணர்த்திக் காட்ட

விட்டு - ஆன்மாவானது தனது பாவத்தை விட்டுப் பிரிந்து

அன்னியம் இன்மையின் - ஆன்மாவிற்கு இறைவனோடிருந்த பிளவு நீக்கப்பட்டமையால்

அரன் - பாவத்தை அரித்தெடுப்பவனாகிய இறைவனின்

கழல் - திருவடியைச்

செலுமே - சென்று அடையும்.

விளக்கம்:

தமக்கு முதல்வனாகிய கடவுள் ஆன்மாவை நோக்கி 'நீ மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐம்புல இச்சைகளாகிய வேடருடன் வளர்ந்து, இப்பொழுது இருக்கும் இழி நிலையை அடைந்தாய். நீ யார் என்பதையும், எங்கிருந்து வந்தாய் என்பதையும் அறியாது மயங்கி விட்டாய்' என்று குருவாக உலகில் வந்து, ஆன்மாவை மீட்பதற்காகத் தான் ஏற்றுக் கொள்ளும் துன்பமாகிய தவத்தினால், ஆன்மாவிற்கு உண்மையை உணர்த்திக் காட்ட, ஆன்மாவானது தன் பாவ நிலையை விட்டுத் தனக்கும் இறைவனுக்கும் இடையேயுள்ள பாவமாகிய பிரிவினை நீக்கப்பட்டு மீட்கப் பட்டமையால் பாவத்தை அரித்து எடுப்பவனாகிய இறைவனின் திருவடியைச் சென்று அடையும்.

ஆன்மாவினால் மட்டுமே கடவுளையும், உலகப் பொருளையும் அறிந்து உணர்ந்து கொள்ள இயலும். உலகப் பொருளை அறிந்துக் கொள்வதில் ஆன்மாவிற்கு இடையூறு ஒன்றும் இல்லை. ஆனால் கடவுளையும் தன்னையும் அறிந்துக் கொள்ள இயலாமல் சகச மலத்தினால் அது மறைப்புண்டு இருக்கின்றது. சகசமலம் ஆன்மாவை அதனுடைய பிறப்பில் இருந்தே தொடர்ந்து வருகின்றது. ஆகவே, ஆன்மா தன்னைத்தானே விடுவித்துக் கொள்ள இயலாத நிலையில் இருக்கின்றது. இறைவன் வந்து சகசமல மறைப்பை நீக்கி ஆன்மாவை விடுவிக்க இயலும்.

இதை ஒரு எடுத்துக்காட்டின் வாயிலாக விளக்கலாம். செம்பில் களிம்பு சேர்வது இயல்பு. செம்பில் சேரும் களிம்பை நிலையாக நீக்குவது எவ்வாறு?

களிம்பே சேராத பசும்பொன் கட்டி ஒன்றை எடுத்து, அக்னிக் குகையிலே (உலோகம் உருக்கும் பாத்திரத்திலே) அதை உருக்கி, உருகி நிற்கும் அதனுடன் செம்பையும் சேர்த்தால், செம்பு அதனோடு சேர்ந்து உருகி இரண்டும் ஒன்றாகி, ஒரு புதிய உலோகம் கிடைக்கின்றது. இந்தப் புதிய உலோகம் களிம்பு சேரக் கூடிய செம்பும், களிம்பு சேராத பொன்னும் சேர்ந்து உருவானதாயிருந்தாலும், இவ்வுலோகத்தில் உள்ள செம்பில் களிம்பு சேர்வதில்லை. ஏனென்றால் அச்செம்பு பசும்பொன்னுடன் சேர்ந்து நிற்கிறது.

இதைப் போலவே மலத்துளதாம் ஆன்மாவை மீட்க, மலம் சிறிதுமற்ற இறைவன் தவமாகிய அக்னிக் குகையிலே இறங்குகின்றான். இறங்கி, ஆன்மாவிற்காக உருகி நிற்கின்றான். அவனோடு இணைக்கப்பட்ட ஆன்மாவும் தன்னுடைய மலங்களுக்காக உருகிக் கண்ணீர் வடித்து இறைவனுடன் இணைகின்றது. அப்பொழுது மலமறைப்பு ஆன்மாவை விட்டு நீங்கி ஆன்மா இறைவனின் சாயலைப் பெற்றுத் தன்னை மீட்டுக் கொண்ட இறைவனை அடைகின்றது.

 இறைவனாகிய பசும்பொன்னுடன் இணைந்திருக்கும் செம்பாகிய ஆன்மாவை விட்டு, களிம்பாகிய மலம் நீங்குகின்றது.

மன்னனின் மகன் காணாமற் போய்க் காட்டிலே வேடர்களோடு வாழ்கின்றான், வேடர்களோடு வாழும் மன்னர் மகன் தன்னையும், தான் அரச குமாரன் என்பதையும், தனது தந்தை ஆட்சி செய்யும் மன்னர் என்பதையும் மறந்து தன்னை ஒரு வேடர் குடியில் தோன்றிய வேடனாக நினைத்து வாழ்கின்றான்.

வேடர் குடியில் வாழும் தன் மகனுக்கு அவன் யார் என்பதை உணர்த்தி, அரண்மனைக்கு அழைத்து வர அரசருக்கு வாய்ப்பு நேரிடுகிறது. அரச கோலத்தில் தான் சென்றால் தன்னைப் பார்த்து அவன் பயந்து ஓடிவிடக் கூடும் என்று எண்ணிய அரசன், தன் மகன் வாழும் நிலையிலுள்ள ஒரு வேடனைப் போல் உருவங்கொண்டு, மகனைத் தேடி காட்டிற்கு வருகின்றான். காட்டிலே வேடர் குடியில் தன மகனைச் சந்தித்து, " நீ வேடர் குடியைச் சார்ந்தவன் அல்லன்; ஆட்சிக்குரியவன். ஆகவே இந்த வேடர் தொடர்பை விட்டு அரண்மனைக்குத் திரும்பு" என்று அவனுக்கு உண்மை நிலையை அறிவுறுத்துகின்றான். வேடர் குடியிலிருந்த மன்னர் மகன் தன்னையும் தன் தலைவனையும் உணர்ந்து அரண்மனைக்குத் திரும்பும்படியாக அரசனைப் பின்பற்றுகின்றான்.

இறைவன் ஆன்மாவை மீட்டுக் கொண்ட தன்மையும் இவ்வாறே விளக்கப்படுகிறது.

முதல் மனிதனானவன் பாவத்தில் வீழ்ந்ததை சைவ சித்தாந்த சாத்திரங்களில் முதல் சாத்திரமான திரு உந்தியார் பின் வருமாறுக் கூறுகின்றது.

முத்தி முதற்கொடிக்கே மோகக் கொடி படர்ந்து
அத்தி பழுத்தது என்று உந்தீ பற
அப்பழம் உண்ணாதே உந்தீ பற - 41


அவ்வாறு பாவத்தில் வீழ்ந்து ஐம்பொறிகளான வேடர்களுடன் வாழ்ந்து வரும் மனிதனை மீட்க இறைவன் மனித உருக் கொண்டு மண்ணில் வந்தான் என்றே போற்றிப் பஃறொடை கூறுகின்றது

இறவா இன்பத்தெமை இருத்த வேண்டிப்
பிறவா முதல்வன் பிறந்தான் - போற்றிப் பஃறொடை 69

அகலமாய் யாரும் அறிவரி தப்பொருள்
சகலமாய் வந்ததென் றுந்தீபற
தானாகத் தந்ததென் றுந்தீபற – திருஉந்தியார் 1


சிலர் இறைவன் மனிதனாகப் பிறக்கவில்லை; அருளே உருவாக ஒரு தோற்றம் மட்டுமே கொண்டான் என எண்ணுகின்றனர். அதற்கு விடையாய், இறைவன் நம்மைப் போன்ற மனித உருவம் கொண்டு பிறந்தான் என்பதை சைவ சித்தாந்த சாத்திரங்களில் ஒன்றாகிய சங்கற்ப நிராகரணம் கூறுகின்றது.

அருளுரு என்ற பொருளினை ஆயின்
மாயா உருவினன் மாயா உருவினை
ஏயான், எய்ந்தவர் எம்மனோரே - சங்கற்ப நிராகரணம் (சைவவாதி நிராகரணம் 25-27)


அவ்வாறு மனித உரு எடுத்து வந்த இறைவன் மனிதன் வீழ்ந்திருந்த பாவத்தை அறுக்க வந்தான் என்பதனை,

முத்தி முதற்கொடிக்கே மோகக் கொடிபடர்ந்
அத்தி பழுத்த தருளென்னுங் – கத்தியினால்
மோகக் கொடியறுக்க முத்திப் பழம் பழுக்கும்
ஏகக் கொடி எழுங்காண் இன்று’ – திருக்களிற்றுப்படியார் – 93



என்றே திருக்களிற்றுப்படியார் கூறுகின்றது.


சகசமலத்திலிருந்து ஆன்மாவை விடுவிக்கும் முயற்சியில் துன்பத்தை ஏற்றுக் கொள்ளும் தவத்தை இறைவனோடு இணைத்துக் கூறுகின்றது சைவ சித்தாந்தம். உலக மக்கள் எல்லோரும் செய்த தவத்தை விட உலக மக்களுக்காக இறைவன் செய்த தவமே மிகவும் உயர்ந்தது என்பதை,


மூலையிருந்தாரை முற்றத்தே விட்டவர்
சாலப் பெரியரென்று உந்திப்பற
தவத்தில் தலைவரென்று உந்திப்பற - திரு உந்தியார் 12


என்று எவ்வித ஐயத்திற்கும் இடமின்றிச் சித்தாந்த சாத்திரத்தின் முதல் நூலாகிய திருஉந்தியார் கூறுகின்றது.

சகசமலமாகிய மூலையிருந்தாரை விடுவித்து அம்பலமாகிய முற்றத்தே கொண்டு நிறுத்தியவராகிய இறைவன் மிகவும் பெரியவர். எல்லாத் தவங்களிலும் அவர் தவமே தலைமை பெற்றது. அதுவே ஆன்ம மீட்பை மக்களுக்கு எல்லாம் அருளுவது என்பன விளக்கப்படுகின்றன.

தொடரும்...!!!

பின்குறிப்பு:

1) 'தவத்தினில் உணர்த்த விட்டு' என்பன இங்கு சற்று ஆழ்ந்து நோக்கத்தக்கது. விட்டது ஆன்மா, உணர்த்தியது இறைவன்.

தவம் இறைவனுடைய தவமா? என்ற ஐயம் சிலருக்கு ஏற்படலாம். விட்டது ஆன்மா என்பதில் அவர்களுக்கு ஐயமில்லை.

விட்டது எதை? மலத்தை.

விடுவதற்கு முன் ஆன்மா மலத்தைப் பற்றி இருந்ததா? ஆம்.

அந்நிலையில் சகசமலத்தில் உள்ள ஆன்மா தன்னையும் இறைவனையும் உணர இயலுமா? இயலாது என்பது முன்னரே 'சகசமலத்து உணராது' என்பதின் மூலம் விளக்கப்பட்டு உள்ளது.

தன்னையும் இறைவனையும் உணராத ஆன்மா எவ்வாறு தவம் செய்யப் புறப்படும். ஆகவே தவம் ஆன்மாவின் தவமன்று. தவத்தில் தலைவராகிய இறைவனுடைய தவமேயாகும்.

2) ஆய்வாளர்.தெய்வநாயகம் என்பவரின் ஆய்வுகளில் இருந்து நான் அறிந்தவற்றையே இங்கே பதிவிட்டு இருக்கின்றேன்.

3) விவாதங்களும் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

முந்தையப் பதிவு

 சூத்திரம் 7: அறியும் தன்மை ஆன்மாவிற்கே

யாவையும் சூனியம் சத்து எதிர் ஆகலின்
சத்தே அறியாது அசத்து இலது அறியாது
இருதிறன் அறிவுளது இரண்டலா வான்மா.

பதவுரை:

சத்து எதிர் : என்றும் நிலைத்திருக்கும் ஒன்றாகிய கடவுளின் முன்னர்

யாவையும் சூனியம் ஆகலின் : எல்லாப் பொருள்களும் அழிந்து ஒழியக் கூடியவைகளே ஆதலால்

சத்தே அறியாது : நிலைத்திருக்கும் ஒன்றாகிய கடவுளே முற்றறிவு உடையவனாதலின் இன்னொன்றை அறிய வேண்டிய அவசியமற்றவன்

அசத்து இலது அறியாது : அழியக்கூடிய பொருளுக்கு அறியுந் திறன் இல்லை. ஆகவே இது எதையும் அறியாது.

இரண்டலா : என்றும் நிலைத்திருக்கும் முற்றறிவுடைய சத்தாகிய கடவுளும் முழுவதும் அழியக்கூடிய அறிவற்ற அசத்தாகிய உலகப் பொருளும், ஆகிய இரண்டும் அல்லாமல்

ஆன்மா : குறை அறிவும் அழியாமையையும் உடைய சதசத்தாகிய ஆன்மா

இருதிறன் அறிவுளது : சத்தாகிய கடவுளையும், அசத்தாகிய உலகப் பொருளையும் அறியக் கூடிய தன்மையைக் கொண்டுள்ளது.

பொருள்:

என்றும் நிலைத்திருக்கும் ஒன்றாகிய கடவுளின் முன்னர் எல்லாப் பொருட்களும் அழிந்து ஒழியக் கூடியவைகளே. ஆதலால் நிலைத்திருக்கும் ஒன்றாகிய கடவுளே முற்றறிவு உடையவனாகையால் இன்னொன்றை அறிய வேண்டிய அவசியமற்றவன். அழியக் கூடிய பொருளுக்கு அறியுந் திறன் இல்லை. ஆகவே அது எதையும் அறியாது. என்றும் நிலைத்து இருக்கும் முற்றறிவுடைய சத்தாகிய இறைவனும், முழுவதும் அழியக்கூடிய அறிவற்ற அசத்தாகிய உலகப் பொருளும் அல்லாமல், குறை அறிவும் அழியாமையும் உடைய சதசத்தாகிய ஆன்மா, சத்தாகிய கடவுளையும் அசத்தாகிய உலகப் பொருளையும் அறியக் கூடிய தன்மையைக் கொண்டு உள்ளது.

கடவுளுடைய அருள் இல்லாவிட்டால் கடவுளை உணரவோ, உணர்ந்து தொழவோ ஆன்மாவிற்கு இயலாது என்று கூறும் பொழுது, ஆன்மா எப்படிப்பட்டது? என்ற கேள்வி எழுகின்றது. அதே நேரத்தில், தன்னுடைய அருளால் ஆன்மாவிற்கு உணர்த்தும் கடவுள் எப்படிப்பட்டவன்? என்ற கேள்வியும் எழுகின்றது. கடவுள் என்றும் அழியாது நிலை நிற்கும் சத்துப் பொருள் ஆவான். அவன் இன்றி எப்பொருளும் நிலை பெறுவதில்லை. என்றும் நின்று நிலைக்கும் கடவுள் பிறிதொன்றை அறிய வேண்டிய அவசியமற்ற, முழுவதும் அறியும் முற்றறிவு உடையவன் ஆவான்.

சத்தாகிய கடவுள் அல்லாத மற்ற உலகப் பொருள்கள் அழியக்கூடியவை. பிறிதொன்றை அறியும் திறனும் அற்றவை. ஆகவே, அவை அசத்துப் பொருள்களாகும். சத்தாம் கடவுளும், அசத்தாம் உலகப் பொருளும் ஆகிய இரண்டும் அல்லாத மூன்றாவது பொருள் ஒன்று உண்டு. அது கடவுளைப் போல் முழு அறிவுடையதாக அல்லாமல் குறை அறிவு உடையதாகவும், உலகப் பொருளைப் போல் அழியக் கூடியதாக அல்லாமல் அழியாமையை உடையதாகவும், சத்தும் அசத்தும் அல்லாமல் இரண்டன் தன்மைகளையும் கொண்டது சதசத்தாகிய ஆன்மா ஆகும். இந்த ஆன்மாவே சத்தாகிய கடவுளையும், அசத்தாகிய உலகப் பொருளையும் அறியக்கூடிய தன்மையைக் கொண்டது. எனவே கடவுள் வந்து உணர்த்தினால் உணர்வுப் பெறக் கூடிய தன்மை ஆன்மாவிற்கு உண்டு.

தொடரும்....!!!

பி.கு:

1) ஆய்வாளர்.தெய்வநாயகம் என்பவரின் ஆய்வுகளில் இருந்து நான் அறிந்தவற்றையே இங்கே பதிவிட்டு இருக்கின்றேன்.

2) விவாதங்களும் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு