சென்ற பதிவினில் மனிதன் என்பவன் இயந்திரமாகப் படைக்கப்படவில்லை என்றும் அவனது முடிவுகளை அவனே எடுக்கும் வல்லமையை அவன் பெற்று உள்ளான் என்றுமே நாம் கண்டு இருக்கின்றோம்.


இப்பொழுது அதனைப் பற்றித் தான் நாம் விரிவாக காண வேண்டி இருக்கின்றது. அதற்கு நாம் சில கேள்விகளையும் காண வேண்டி இருக்கின்றது.

1) இறைவன் மனிதனைப் படைத்தான் சரி. இறைவன் உங்களின் கூற்றின் படி நன்மையே வடிவானவன். அவ்வாறு இருக்கையில் அவன் படைத்த மனிதனும் நல்லவனாகத் தானே இருக்க வேண்டும். அவ்வாறு இருக்கையில் தீமை எவ்வாறு வந்தது? தீமையைப் படைத்தது யார்?

இறைவனைப் பற்றிப் பேசுகையில் நிச்சயமாய் இக்கேள்வியினை நாம் கடந்து வராது இருக்க முடியாது. எனவே இக்கேள்விக்கு நாம் விடையினைக் காணுவது இங்கே முக்கியமானதொன்றாகின்றது. அதற்கு நாம் இருளையும் வெளிச்சத்தையும் காண வேண்டி இருக்கின்றது.

ஒரு இடத்தில் இருள் இருக்கின்றது. அங்கே நாம் ஒளியைக் கொண்டு வந்தால் இருள் மறைந்து விடுகின்றது. அதாவது ஒளி இருந்தால் அங்கே இருள் இருப்பதில்லை. ஒளி இல்லாத இடத்தில் தான் இருள் இருக்கின்றது. அதாவது ஒளி இல்லாத நிலையே இருள் ஆகும்.

எனவே ஒளி-இருள் ஆகியவை இரு வெவ்வேறு பொருட்கள் அல்ல. ஒளி இல்லாத இடத்தில் இருள் இருக்கும். அவ்வளவே.

அதனைப் போன்று தான் நன்மையையும் தீமையும்..எங்கே நன்மை இல்லையோ அங்கே தீமை இருக்கும். நன்மை இல்லாத நிலை அனைத்தும் தீமை ஆகும்.

சமயங்கள் இறைவனை அன்பின் வடிவமாகவே கூறுகின்றன.

சைவம் 'அன்பே சிவம்' என்கின்றது.

கிருத்துவம் 

"நான் உங்களுக்குச் சொல்கின்றேன்; உங்கள் எதிரிகளை நேசியுங்கள்...உங்களைச் சபிக்கின்றவர்களை ஆசிர்வதியுங்கள்; உங்களை வெறுப்பவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துபவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள். இப்படிச் செய்வதினால் நீங்கள் பரலோகத்தில் இருக்கின்ற உங்கள் பிதாவுக்குப் பிள்ளைகளாக இருப்பீர்கள்; அவர் நல்லோர் மேலும் தீயோர் மேலும் தமது சூரியனை உதிக்கப் பண்ணி, நீதி உள்ளவர்கள் மேலும் அநீதி உள்ளவர்கள் மேலும் ஒரு சேர மழையைப் பெய்யப் பண்ணுகின்றார்." - மத்தேயு 5:44,45

என்றுக் கூறுகின்றது.

எனவே இறைவன் அன்பின் வடிவாக இருக்கின்றார் என்றே நாம் அறியப் பெறுகின்றோம். இந்நிலையில் அன்பு எங்கே இருக்கின்றதோ அங்கே இறைவன் இருக்கின்றார். அன்பு எங்கே இல்லையோ அங்கே தீமை இருக்கின்றது. அதாவது தீமை என்று ஒன்று தனியாகக் கிடையாது...அன்பு இல்லாத நிலையே தீமையாகும்.

நாம் சென்றப் பதிவினில் கண்டவாறு மனிதனால் இவ்விரண்டு நிலைகளும் எந்த நிலையை வேண்டும் என்றாலும் தேர்வு செய்ய இயலும். அன்பின் பாதையையும் அவனால் தேர்வு செய்ய இயலும்...அன்பிலாத சுயநலப் பாதையையும் அவனால் தேர்வு செய்ய இயலும். அவனுடைய அத்தேர்வின் படியே உலகம் அமைகின்றது. அவன் எதனைத் தேர்வு செய்து இருக்கின்றான் என்பதனை இன்றைக்கு உலகம் இருக்கும் நிலையை வைத்தே அறிந்துக் கொள்ளலாம்.

சரி அதனைப் பற்றி மற்றக் கேள்விகளில் விரிவாகக் காணலாம் இப்போதைக்கு தீமையைப்/சாத்தானைப் படைத்தது யார் என்றக் கேள்விக்கு விடை, தீமை/சாத்தான் என்று ஒன்று தனியாகக் கிடையாது...நன்மை/அன்பு/கடவுள்தன்மை இல்லாத நிலையே அது ஆகும். அது ஆணவ நிலை. அன்பு வரும் பொழுது அந்த ஆணவ நிலை ஒடுங்கி விடும்.

2) சரி இறைவன் தீமையைப் படைக்கவில்லை என்றே வைத்துக் கொள்வோம்...பின்னர் ஏன் மனிதன் தீய நிலைக்கு சென்றதை இறைவன் கண்டிக்கவில்லை? அவன் தீமை செய்யாது ஏன் தடுக்கவில்லை? எல்லாம் வல்ல இறைவனால் தீமையைத் தடுக்க முடியாதா?

இந்தக் கேள்வியையும் நாம் இறைவனைப் பற்றிப் பேசுகையில் எதிர்கொண்டாகத் தான் வேண்டி இருக்கின்றது. சரி இப்பொழுது இதற்கும் விடையினைக் காண முயற்சிப்போம்.

சமயங்கள் இறைவனுக்கும் மனிதனுக்கும் உள்ள உறவை தந்தை-பிள்ளைஎன்ற நிலையிலேயே கூறுகின்றன. இந்நிலையில் இறைவன் மனிதனுக்கு அவன் ஆண்டுக் கொள்ள ஒரு உலகைப் படைத்து தந்து விட்டான். அந்த உலகத்தின் ஆட்சி மனிதனின் கைகளில் இருக்கின்றது.

அவ்வுலகத்தின் ஆட்சியோடு முடிவெடுக்கும் சுதந்திரத்தையும் மனிதனுக்கு இறைவன் வழங்கி உள்ளார். காரணம் மனிதனை வெறும் விலங்கினைப் போல் இல்லாது அவரது மகனினைப் போலவே படைத்து உள்ளார்.

அதாவது மனிதனுக்கு சுதந்திரமும் இருக்கின்றது அதே நேரம் ஆட்சிப் புரிய ஒரு உலகமும் இருக்கின்றது. ஆனால் இங்கே தான் மனிதன் தவறு செய்ததாக சமயங்கள் கூறுகின்றன.

முதல் மனிதன் 'இறைவனின் சொல்லினைக் கேட்காமல் அவரது கூற்றினை மீறியதால் இறைவனின் தொடர்பை இழந்து தீமையுள் மூழ்கினான்' என்று கிருத்துவம் கூறுகின்றது.

அதைப் போன்றே சைவ சித்தாந்தமும்

"முத்தி முதற்கொடிக்கே மோகக் கொடிபடர்ந்
அத்தி பழுத்தது என்று உந்தீ பற
அப்பழம் உண்ணாதே உந்தீ பற – திருஉந்தியார் – 41"

""அவன் அவள் அது எனும் அவை மூவினைமையின்
தோற்றிய திதியே ஒடுங்கி மலத்துளதாம்
அந்தம் ஆதி என்மனார் புலவர்" - சிவஞானபோதம் 1

என்று முதல் மனிதன் பாவத்தில் வீழ்ந்த நிலையைக் கூறுகின்றது. அதாவது சுதந்திரமாக முடிவினை எடுக்கும் வல்லமையை பெற்று இருந்த மனிதன் அன்பிற்கு மாறான முடிவினை எடுத்ததால் தீமையில் விழுந்து நன்மையை விட்டு விலகி விட்டான் என்பதே அவை கூறும் கருத்தாகும்.

இதனைப் பற்றி இன்னும் விரிவாக பார்க்க நாம் விவிலியத்தின் சில விடயங்களைக் காண வேண்டி இருக்கின்றது. விவிலியத்தின் படி இறைவன் உலகைப் படைத்து விட்டு அதன் ஆட்சியை மனிதனிடத்து கொடுத்தார் என்று இருக்கின்றது.

"தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார்.

பின்பு தேவன் அவர்களை நோக்கி: நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி, சமுத்திரத்தின் மச்சங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும், பூமியின்மேல் நடமாடுகிற சகல ஜீவஜந்துக்களையும் ஆண்டுகொள்ளுங்கள் என்று சொல்லி, தேவன் அவர்களை ஆசீர்வதித்தார்." - ஆதியாகமம் 1:27-28

ஆனால் இயேசு வருகையிலோ நிலைமை வேறாக இருக்கின்றது. இயேசுவிடம் சாத்தான், அவர் சாத்தானை வணங்கினால் உலகின் அனைத்து அரசுகளையும் அவருக்குத் தருவேன் என்றுக் கூறுவதனைப் போல் வருகின்றது.

"மறுபடியும் பிசாசு அவரை மிகவும் உயர்ந்த மலையின்மேல் கொண்டுபோய், உலகத்தின் சகல ராஜ்யங்களையும் அவைகளின் மகிமையையும் அவருக்குக் காண்பித்து:

நீர் சாஷ்டாங்கமாய் விழுந்து, என்னைப் பணிந்துகொண்டால், இவைகளையெல்லாம் உமக்குத் தருவேன் என்று சொன்னான்." - மத்தேயு 4:8-9

இங்கே தான் ஒரு கேள்வி...மனிதனுக்காக இறைவன் படைத்த உலகின் ஆட்சியை எப்படித் தீயது மற்றொருவருக்கு வழங்க முடியும்? ஒரு பொருள் என்னுடைய பொருளாக இருந்தால் தானே என்னால் அதனை மற்றவருக்கு வழங்க முடியும்?

எனவே உலகின் ஆட்சியை சாத்தான் வழங்க வல்லதாக இருக்கின்றது என்றால் உலகின் ஆட்சி யாரிடம் இருக்கின்றது என்றுப் பொருள்? தீமையிடம் அல்லவா இருக்கின்றது என்றுப் பொருள்!!! அது தான் நிலவரம்.

அன்பின் வழி ஆட்சி செய்ய வேண்டிய மனிதன் தீமைக்கு வீழ்ந்ததால் அவனது ஆட்சி இன்று தீமையின் வசம் இருக்கின்றது. மனிதன் அவனது ஆட்சியை தீமையிடம் இழந்து விட்டு நிற்கின்றான். இதனை நாம் இன்றைய உலகினைக் கண்டாலே அறிந்துக் கொள்ளலாம்.

இலட்சக்கணக்கான மனிதர்களைக் கொன்றவர்களும் பேராசை பொறாமை ஆகியத் தீய குணங்களை அடிப்படையாகக் கொண்ட மனிதர்களும் அரசுகளும் தான் இன்று ஆண்டுக் கொண்டு இருக்கின்றனர்.

அன்பிற்கு மாற்றாக பயமும் சுயநலமும் இன்று உலகத்தின் அடிப்படையாக இருக்கின்றன. தீமை உலகை ஆண்டுக் கொண்டு இருக்கின்றது.

இது தான் நிலவரம்.

மனிதன் அவனது ஆட்சியினை இழந்து விட்டான். அதனை மீட்டு எடுக்கத் தான் அவன் முயன்றுக் கொண்டு இருக்கின்றான். நிற்க.

இதுவரை மனிதன் அவனது ஆட்சியை இழந்தான் என்றும் இன்று தீமை தான் ஆண்டுக் கொண்டு இருக்கின்றது என்றும் கண்டோம்...இங்கே சில கேள்விகள் எழலாம், இவ்வளவு நடக்கும் பொழுது எல்லாம் உங்க எல்லாம் வல்ல இறைவன் எங்கே சென்றார் என்று....ஏன் இதனை எல்லாம் அவர் அனுமதித்தார் என்று?

அக்கேள்விகளுக்கு விடையினைக் காண நாம் நாம் ஒரு சூழலைக் காண வேண்டி இருக்கின்றது.

நமக்கு ஒரு மகன் இருக்கின்றான் என்று வைத்துக் கொள்வோம். ஒரு நல்ல பெற்றோராக நாம் அவனுக்கு நல்லவற்றை சொல்லிக் கொடுத்து அவனுக்குரிய சுதந்திரத்தையும் அவனிற்கு கொடுத்து வைப்போம். அது தான் கடமை. மேலும் ஒரு பெற்றோராக நமது பிள்ளை நல்லதே செய்வான் என்ற நம்பிக்கையுடனே இருப்போம். அவன் தவறு செய்தால் "தம்பி...நீ செய்வது தவறு" என்று அன்பின் அடிப்படையிலேயே கூறுவோமே தவிர அவனை வெறுக்க மாட்டோம். வேறு வழி இல்லை அவன் நமது பிள்ளை. அவனை நல்வழிக்கு கொண்டு வர நம்மால் இயன்ற அனைத்தையும் செய்வோம். ஆனால் நம்முடைய அன்பினை உணர்ந்துக் கொண்டு நல்வழிக்கு வருவதும் வராததும் முற்றிலும் அவனைப் பொறுத்தது. அந்த சுதந்திரம் நாம் அவனுக்கு வழங்கியது. எனவே அவனாக உணர்ந்து திருந்தினால் ஒழிய அம்மாற்றம் நிரந்திரமான உண்மையான மாற்றமாக இருக்காது. நல்ல குணங்கள் அவனுக்கு உள்ளே இருக்கின்றன...நிச்சயம் ஒரு நாள் அவன் திருந்தி வருவான் என்ற நம்பிக்கையுடனே தான் நாம் காத்து இருப்போம்.

அதே நிலைமை தான் இறைவனுக்கும். இறைவனால் நிச்சயம் மாற்ற முடியும்...ஆனால் அதற்காக சுய சிந்தனையையும் சுதந்திரத்தையும் மனிதர்களுக்கு அவன் வழங்கவில்லை...முடிவெடுக்கும் உரிமை நமக்கு இருக்கின்றது. அதனை வைத்து நாம் என்ன செய்யப் போகின்றோம் என்றே அவன் கவனித்துக் கொண்டு இருக்கின்றான்...வழி காட்டியவாறே. அவன் காட்டும் வழியினில் போவதும் போகாததும் நமது கைகளிலேயே இருக்கின்றன.

" இடுக்கமான வாசல் வழியாய் உட்பிரவேசியுங்கள்; கேட்டுக்குப் போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது; அதின் வழியாய்ப் பிரவேசிக்கிறவர்கள் அநேகர்." -மத்தேயு7:13

எனவே உலகை மாற்ற வேண்டும் என்றால் நாம் கேட்க வேண்டியக் கேள்வி இறைவன் என்ன செய்தான்/என்ன செய்வான் என்பதல்ல...மாறாக சகோதரர்களாக நாம் என்ன செய்யப் போகின்றோம் என்பதே ஆகும். காரணம் வழிகாட்ட அவன் தயாராக இருக்கின்றான் ஆனால் அன்பின் வழியாக பயணிக்க நாம் தயாராக இருக்கின்றோமா?

சரி இருக்கட்டும்...இன்னும் பல விடயங்களை நாம் காண வேண்டி இருக்கின்றது காண்போம்...!!!

தொடரும்...!!!

பி.கு:

1) வழக்கம் போல் உங்களின் கேள்விகளும் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

கடந்தப் பதிவுகளில் உயிரும் ஆன்மாவும் வேறானவை என்றும் ஆன்மா மாயையால் சூழப்பட்டு இருப்பதினால் இறைவன் உணர்த்தாமல் அதனால் இறைவனை உணர முடியாது என்றும் நாம் கண்டு இருக்கின்றோம். இங்கே தான் நண்பர்கள் சிலர் சில கேள்விகளை முன் வைக்கின்றனர்.

இறைவன் தான் மனிதனை மாயையினுள் வைத்து இருக்கின்றான் என்றால் மனிதன் தவறு புரிவதற்கு இறைவன் தான் காரணமா? இறைவன் உணர்த்தினால் மனிதன் உணர்ந்துக் கொள்வான் என்றால் ஏன் அனைத்து மனிதர்களுக்கும் உணர்த்தி உலகை இறைவன் நல்வழிப்படுத்தாது இருக்கின்றான்? இந்தக் கேள்விகளுக்குத் தான் நாம் இப்பொழுது விடையினைத் தேட வேண்டி இருக்கின்றது. அதற்கு நாம் மனிதனைப் பற்றி இங்கே அறிய வேண்டி இருக்கின்றது.

மனிதன் இந்த உலகம் முழுவதையும் அறிந்துக் கொள்ளவும் அதனைக் கட்டுப்படுத்தி ஆண்டுக் கொள்ளவும் ஆற்றல் பெற்று இருக்கின்றான். மற்ற உயிரினங்கள் ஆண்டாண்டுக் காலமாக மாறாமலே அதனதன் இயல்புகளுடனே வாழ்ந்துக் கொண்டு வர மனிதன் மட்டும் மாறிக் கொண்டே இருக்கின்றான். ஒருவனால் தனக்காக ஆயிரம் பேரை கொலை செய்யவும் முடிகின்றது அதே நேரம் ஒருவனால் பிறருக்காக தன் உயிரைத் தியாகம் செய்யவும் முடிகின்றது. அதனால் தான் மனிதனை யாராலும் வரையறை செய்ய முடிவதில்லை. ஒரு மனிதன் அவனது சிந்தனைகளின் படியே அமைகின்றான். நிற்க.

இப்பொழுது இந்த எண்ணங்களைப் பற்றியும் சுய சிந்தனையை (ஆங்கிலத்தில் free will) பற்றியுமே நாம் காண வேண்டி இருக்கின்றது.

இறைவன் மனிதனை இயந்திரமாகவோ அல்லது மற்ற உயிரினங்களைப் போலவோ படைக்கவில்லை...மாறாக அவனை சுதந்திரமான ஒருவனாய் படைத்து அவன் ஆண்டுக் கொள்ள ஒரு உலகையும் தந்துள்ளார். அதாவது மனிதனின் முடிவுகள் மனிதனின் கைகளிலேயே இருக்கின்றன. அவனால் நல்லது செய்யவும் முடியும் தீமை செய்யவும் முடியும். எவற்றை தான் செய்ய வேண்டும் என்கின்ற முடிவினை எடுக்கும் உரிமை மனிதனிடத்தே தரப்பட்டு உள்ளது.

உதாரணத்திற்கு, விவிலியக் கதைகளில் மனிதனைப் படைத்த இறைவன் அவனை ஒரு பழத்தினை உண்ணாதே என்று கூறினார் என்றக் கதை வருகின்றது. ஆனால் அக்கதையின் படி மனிதன் அப்பழத்தை உண்ணுகின்றான். அதாவது இறைவன் கூறியதை மீறுகின்றான். அதற்குரிய உரிமையை அதாவது சுய விருப்பத்தை அவன் பெற்று இருக்கின்றான். இறைவன் அவனுக்கு அந்த உரிமையை வழங்கி இருக்கின்றார்.

மனிதனை படைத்த இறைவன் அவன் முழு சுதந்திரத்தோடு இருக்கும் வண்ணமே படைத்து இருக்கின்றார். மனிதனின் செயல்களை மனிதனே முடிவு செய்யும் உரிமை மனிதனுக்கு வழங்கப்பட்டு உள்ளது. பிரச்சனை இங்கே தான் ஆரம்பிக்கின்றது. இதனை ஒரு சிறு கதை மூலம் காணலாம்...

ஒரு தந்தை ஒரு மாபெரும் தோட்டம் ஒன்றினை அமைத்து அதில் பல்வேறு கனி தரும் மரங்கள், விவசாய நிலங்கள் போன்றவைகளை அமைத்து அதனை

"மக்களே...இங்கே உங்கள் அனைவருக்கும் சரி...உங்களுக்கு பின்னர் வர போகும் அனைவருக்கும் சரி போதுமானவைகள் தாராளமாக இருக்கின்றன...அனைவரும் அங்கே சென்று நன்றாக வாழுங்கள்" என்றே தனது மக்களுக்கு தருகின்றார்.

ஆனால் அத்தோட்டத்திற்கு சென்ற மக்களோ, ஒவ்வொருவருடன் பொறாமையும் பேராசையும் கொண்டு சண்டை இட ஆரம்பித்தனர். இங்கே உள்ளது அனைவருக்கும் பத்தாது என்ற எண்ணம் அவர்களின் மனதினில் வளர ஆரம்பித்தது. அதனால் ஒவ்வொருவரை கொலை செய்துக் கொண்டும் ஏமாற்றிக் கொண்டும் அத்தோட்டத்தையே நாசமாக்கத் துவங்கினர்.

அவர்களின் இந்தச் செயல்களால் அவர்களுக்கும் சரி அவர்களுக்கு பின் வரக் கூடிய மக்கள் அனைவருக்கும் போதுமானவைகளை தர வல்லமைப் பெற்று இருந்த அந்த தோட்டம் நிலை குலைய ஆரம்பித்தது. பொருட்கள் வீணாகி கொண்டு இருந்தன. மக்கள் அச்சத்துடனும் பேராசையுடனும் நிம்மதி இன்றியே வாழ்ந்துக் கொண்டு இருந்தனர்.

அதனைக் கண்ட தந்தையோ "ஐயகோ...மக்கள் தவறு இழைக்கின்றனரே" என்றே மனம் வருந்தி"மக்களே இங்கே உங்கள் தேவைகளுக்கு அதிகமாகவே இருக்கின்றது...அன்புடன் ஒருவருக்கு ஒருவர் நேசம் கொண்டு வாழுங்கள்...பேராசை பொறாமை ஆகியவற்றைக் களைந்து ஒழியுங்கள்...அவைகள் இங்கே தேவை இல்லை" என்றே கூறியும் அவற்றைப் பெரிதாய் கேட்பார் யாரும் இல்லை.

ஒரு சில மக்களுக்கு தந்தையின் கூற்று புரிய ஆரம்பிக்க அவர்கள் மற்றவர்களுக்கு கூற ஆரம்பிக்கின்றனர். "அன்பு தான் தேவை சகோதரர்களே...இங்கே நமக்குத் தேவையான அனைத்தும் இருக்கின்றன...நாம் அச்சம் கொள்ளத் தேவை இல்லை...போதும் என்ற மனதுடன் நன்றாக வாழ்வோம்...நாம் அனைவரும் சகோதரர்கள்" என்றே அவர்கள் கூற ஆரம்பிக்கின்றனர். இருந்தாலும் பெருன்பான்மையான மக்கள் அவர்களின் கூற்றுகளில் உள்ள உண்மையினைப் புரிந்துக் கொள்ளாது தொடர்ந்து பேராசையுடனும் பயத்துடனுமே வாழத் தலைப்படுகின்றனர்.

அனைவரின் தேவைக்கும் அதிகமான பொருட்கள் இங்கே இருக்கின்றன என்ற உண்மையை அவர்களது சுயநலமும் பயமும் மறைத்து விடுகின்றது. அதனாலே அனைவரும் ஒன்றாக மகிழ்ச்சியாக வாழ முடியாது என்ற எண்ணம் அவர்களும் வேரூன்றி நிற்கின்றது. அதனாலே உலகம் அழிவுப் பாதையில் செல்லத் துவங்குகின்றது.

அனைவரும் சேர்ந்து மகிழ்ச்சியாக பகிர்ந்துக் கொண்டு அன்பால் இணைந்து வாழ முடியும் என்ற உண்மை அனைவரின் முன்னேயும் சரி அனைவரின் மனதிற்குள்ளேயும் சரி உலகில் நிற்கின்றது. ஆனால் அதனை ஏற்றுக் கொண்டு அன்பால் உலகை இயக்குவதும் அல்லது ஏற்றுக் கொள்ளாது பயத்தாலும் பேராசையாலும் உலகை அழிப்பது என்ற முடிவு மனிதனின் சுய சிந்தனைக்கே விடப்பட்டு இருக்கின்றது.

சரியானதை தேர்ந்தெடுத்து செய்யும் வல்லமையும் அவனுக்குள் இருக்கின்றது. தவறானதை தேர்ந்தெடுத்து அதனை மேற்கொள்ளும் வல்லமையும் அவனுக்கு இருக்கின்றது. இந்த முடிவுகள் முழுக்க முழுக்க மனிதனின் கைகளிலேயே கொடுக்கப்பட்ட முடிவுகள் ஆகும்.

மனிதனுள் நல்லதும் இருக்கின்றது...தீமையும் இருக்கின்றது...அவன் அதனுள் எதனைத் தேர்ந்து எடுக்கின்றான் என்பதைப் பொறுத்தே உலகம் அமைகின்றது. நிற்க.

சரி...ஒரு சிறு கதையைப் பார்த்தாயிற்று. ஆனால் வெறும் கதைகள் மட்டுமே இங்கே உதவுவதில்லை. ஏனெனில் பல்வேறுக் கருத்துக்கள் பல்வேறு வடிவங்களில் இங்கே உலவிக் கொண்டு இருக்கின்றன. எனவே நாம் வெறும் கதைகளை மட்டுமே கூறுவது பெரிய நன்மைகளுக்கு வழி வகுக்காது. இந்நிலையில் தான் நாம் நமது சமயங்களையும் அவைகள் கூறும் கருத்துக்களையும் காண வேண்டி இருக்கின்றது. ஏனெனில் அவைகளைக் காணாது பல்வேறுக் கேள்விகளுக்கு நம்மால் விடைகளைக் காண முடியாது.

காண்போம்...!!!

பி.கு:

இத்தலைப்பிற்கு தொடர்புடைய இடுகைகள்...

திருவள்ளுவர் திருக்குறளில் சிறந்தக் கருத்துக்களை மட்டும் விட்டுச் செல்லவில்லை. சிறந்தக் கருத்துக்களுடன் ஒரு சிறந்தக் கட்டமைப்பையும் திருக்குறளுக்கு விட்டுச் சென்று உள்ளார் அவர். அந்தக் கட்டமைப்புக்கு அவர் தேர்ந்து எடுத்து இருக்கும் எண் 7 ஆகும். அது என்ன கட்டமைப்பு? அது என்ன எண் 7? காண்போம்…

திருக்குறள் வெண்பா வகையைச் சார்ந்த ஒரு நூலாகும். அதுவும் குறிப்பாக குறள் வெண்பாக்களால் ஆன குறள்களைக் கொண்டு விளங்கும் ஒரு நூல். ‘குறள் வெண்பா’ என்பது இரு அடிகளையேக் கொண்ட ஒரு வகை வெண்பாவாகும்.

திருவள்ளுவர் அத்தகைய குறள் வெண்பாக்களைக் கொண்டு, ஒவ்வொரு வெண்பாவிலும் ஏழுச் சீர்கள் வந்து பொருள் தரும் வண்ணம் அமைத்தது தான் திருக்குறள் என்னும் நூலாகும். அதாவது ஒவ்வொருக் குரலிலும் அவர் ஏழுச் சொற்களைப் பயன்படுத்தி உள்ளார். அந்த ஏழுச் சொற்களிலேயே அவர் சொல்ல வந்தக் கருத்துக்களை வெளிப்படுத்தியும் உள்ளார்.

சரி இப்பொழுது திருக்குறளின் அமைப்பினைப் பார்ப்போம்.

திருக்குறள் அறம் பொருள் இன்பம் ஆகிய முப்பால்களைக் கொண்டு விளங்குகின்றது. இப்பொழுது அப்பிரிவுகள் ஒவ்வொன்றையும் பற்றித் தனித்தனியே காண்போம்.

முதலில் அறத்துப்பால்…!!!

இது இல்லறவியல், துறவறவியல் மற்றும் ஊழியல் ஆகியப் பிரிவுகளைக் கொண்டு விளங்குகின்றது.

இல்லறவியலில் மொத்தம் 20 அதிகாரங்கள்.

துறவறவியலில் மொத்தம் 13 அதிகாரங்கள்.

ஊழியலில் மொத்தம் ஒரு அதிகாரம்.

எனவே மொத்தமாக அறத்துப்பாலில் இருக்கும் அதிகாரங்களின் எண்ணிக்கை 34. அதன் கூட்டுத் தொகையாக வருவது 7.

20+13+1 = 34 = 3+4 = 7

மேலும் அதிகாரத்திற்கு 10 பாடல்கள் என அறத்துப்பாலில் மொத்தம் 340 குறள்கள் உள்ளன. அதன் கூட்டுத் தொகையும் 7 தான்.

சரி இப்பொழுது பொருட்பாலினைப் பார்ப்போம். பொருட்பாலில் மொத்தம் 70 அதிகாரங்கள் உள்ளன. இதன் கூட்டுத் தொகையாக வருவதும் 7 தான்.

7+0 = 7

மேலும் அதிகாரத்திற்கு 10 பாடல்கள் என அறத்துப்பாலில் மொத்தம் 700 குறள்கள் உள்ளன. அதன் கூட்டுத் தொகையும் 7 தான்.

இதனைப் போன்றே தான் இன்பத்துப்பாலிலும்…மொத்தம் 25 அதிகாரங்கள். அதிகாரத்துக்கு 10 பாடல்கள் என 250 குறள்கள் உள்ளன. இதன் கூட்டுத் தொகையும் 7 தான்.

2+5 = 7

எனவே…அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்றுப் பால்களில் உள்ள குறள்களின் எண்ணிக்கையும் சரி அவற்றின் அதிகாரங்களின் எண்ணிக்கையும் சரி கூட்டினால் 7 வருவதனைப் போன்றே வள்ளுவர் அமைத்து உள்ளார்.

சரி…இப்பொழுது அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்று பால்களின் அதிகாரங்களையும் கூட்டினால் 129 அதிகாரங்கள் வருகின்றன.

34+70+25 = 129

ஆனால் வள்ளுவர் இந்த அதிகாரங்களுடன் மட்டுமே நிறுத்தி விடவில்லை. பாயிரத்தில் கூடுதலாக 4 அதிகாரங்களையும் தந்துள்ளார்.

எனவே இப்பொழுது மொத்த அதிகாரங்களின் எண்ணிக்கை,

129+4 = 133.

அதன் கூட்டுத் தொகையும் 7 தான். மேலும் அதிகாரத்திற்கு 10 குறள்கள் என 1330 குறள்கள் 133 அதிகாரங்களில் இருக்கின்றன. அவைகளின் கூட்டுத் தொகையும் 7 தான்.

இது தான் வள்ளுவர் திருக்குறளை அமைத்து இருக்கும் கட்டுமான முறையாகும்.

ஒரு குறளுக்கு 7 சீர்கள்.

மொத்தம் 133 அதிகாரங்கள் (கூட்டுத் தொகை 7)

மொத்தம் 1330 குறள்கள் (கூட்டுத் தொகை 7)

அறத்துப்பால் – 34 அதிகாரங்கள் (கூட்டுத் தொகை 7)

பொருட்பால் – 70 அதிகாரங்கள் (கூட்டுத் தொகை 7)

இன்பத்துப்பால் – 25 அதிகாரங்கள் (கூட்டுத் தொகை 7)

இவ்வாறு 7 என்ற எண்ணினை வைத்து வள்ளுவர் தனது நூலினை பூட்டி உள்ளார். இதன் முக்கியத்துவம் என்னவென்றால் திருக்குறள் நூலில் யாராலும் எளிதில் இடைச்செருகல் செய்ய இயலாது என்பதே.

உதாரணத்திற்கு...யாராவது திருக்குறளின் இடையில் குறள்களை சேர்க்க வேண்டும் என்று முயல்கின்றனர் என்று வைத்துக் கொள்வோம்.

1) அவர்களால் பத்திற்கு குறைவான குறள்களை இடைச்செருகலாக சேர்க்க முடியாது. ஏனெனில் அதிகாரத்திற்கு பத்து குறள்கள் என்றே வள்ளுவர் அமைத்து உள்ளார். எனவே இடைச் செருகல் செய்ய முயல்வோர் பத்துப் பத்துக் குறள்களாக தான் சேர்க்க முடியும்.

2) அவ்வாறே அவர்கள் பத்து பத்துக் குறள்களாக சேர்க்க எண்ணினாலும் கூட்டுத் தொகையான எண் 7 ஐயும் கணக்கில் கொள்ள வேண்டும். அதாவது 50 குறள்களை சேர்க்க முயல்கின்றனர் என்றால் மொத்த குறள்களின் எண்ணிக்கை 1380 ஆகி விடும். இதன் கூட்டுத் தொகை எண் ஏழாக வாராது. எனவே இடைச் செருகல்கள் இருக்கின்றன என்பது புலனாகி விடும்.

எனவே கூட்டுத் தொகையை மீறி திருக்குறளில் இடைச்செருகல் செய்ய வேண்டும் என்றால் அவர் குறைந்தது 90 குரல்களை தயார் செய்ய வேண்டும். அப்படி என்றால் தான் 1330+90 = 1420 குறள்கள் = 1+4+2+0 = 7 என்று கூட்டுத் தொகை 7 ஆக வரும்.

3) மேலும் அவர் அப்படியே 90 குறள்களைத் தயார் செய்தாலும், அதனை எந்த அதிகாரங்களுடன் இணைப்பது என்ற கணக்கினையும் காண வேண்டும். ஏனெனில் ஒவ்வொரு அதிகாரமும் ஒவ்வொரு பாலின் கீழ் வகுக்கப்பட்டு உள்ளது. அப்பால்களும் கூட்டுத் தொகை 7 என்ற எண்ணினால் கட்டப்பட்டு உள்ளன.

எனவே இத் தடைகள் அனைத்தையும் கவனித்தப் பின்னரே ஒருவரால் திருக்குரளினுள் இடைச் செருகல் செய்ய இயலும். ஆனால் பொருள் வித்தியாசம் வாராது மாற்றுக் கருத்துக்களை திருக்குறளில் இடைச் செருகலாக இத்தனை தடைகளை மீறி சேர்ப்பது என்பது நடைமுறையில் சாத்தியப்படாத ஒன்று. அவ்வாறு செய்து இருந்தால் எளிதில் புலப்பட்டும் விடும்.

எனவே வள்ளுவரின் சாமர்த்தியம் அவரின் கருத்துக்களில் மட்டும் அல்ல அவர் அவரது நூலினை அமைத்த முறையிலும் உள்ளது என்பதனை நாம் அறிகின்றோம்.

தொடர்புடைய பதிவுகள்:

தொண்டை நாடு சான்றோர் உடைத்து…!!!
திருக்குறள் என்ற உலகப் பொதுமறை - ஐந்தவித்தான்

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு